இதோ ஒரு மாதம், கண்கள் மூடித் திறப்பதற்குள் கடந்துவிட்டது.
பலராமன், பவித்ரா திருமணம் எளிய முறையில் நடந்தேறியும் விட்டது. காலையில் கோவிலில் திருமணம். மாலை, மண்டபத்தில் வரவேற்பு. அவ்வளவுதான்.
திருமணத்திற்கு, மொத்தமே ஒரு இருபது பேர் இருப்பார்கள்.
மனோகரின் மகன் நேத்ரனும் அவன் மனைவி நிகிதாவும் வந்திருந்தனர். அதுபோலவே, அவரின் மகள் சொப்னாவும் அவளின் கணவன் ஜனகனும் வந்திருந்தனர்.
மனோகரின் மகள், மற்றும் மகன் இருவருமே குடும்பத்தோடு வெளிநாட்டில் தான் இருந்தனர். அப்பாவின் கட்டாயத்திற்காக வந்திருந்தனர். அது அவர்களின் முகத்திலேயே நன்கு தெரிந்தது. எந்த ஒரு விசயத்திற்கும் தானாய் முன் வந்து நிற்கவில்லை. சொல்லப்போனால் இந்தத் திருமணத்திற்கு வந்ததே மனோகரின் கடுமையான வார்த்தைகளால் தான்.
ஆம் கடுமையாய்த் தான் பேசி இருந்தார் மக்களிடம்.
“அப்பா… ஒரு மாசத்துல கல்யாணம்னு சொன்னா, எப்படி நாங்க வர முடியும்? உடனே எல்லாம் லீவும் கிடைக்காது… அதுவுமில்லாம, நாங்க வந்தே தான் ஆகணுமா என்ன?” என்று மகன் கேட்க,
“ஏன்பா… நான் மட்டும் வந்தா போதும் தானே… அவரும் வேணுமா?” என்று மகள் கேட்க, மனதளவில் நொந்து தான் போனார் மனிதர்.
இவர்களின் திருமணத்திற்கு எல்லாம், பவித்ரா எப்படி வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாள் என்று அவருக்கு மறக்குமா என்ன?!
சொப்னா எல்லாம் சிறிதும் தயக்கமின்றி பவித்ராவிடம் எல்லாவித வேலைகளும் ஏசுவாள். பவித்ராவும் சிறிதும் முக சுளிப்பு இன்றி அனைத்தையும் செய்வாள். அவளைப் பொருத்தமட்டில் நேத்ரனும் சொப்னாவும் அவளின் அண்ணனும் அக்காவும்.
ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் எண்ணவில்லை என்று இப்போது நன்கு தெரிந்தது.
அப்பா வளர்க்கும் பிள்ளை அவள். அவ்வளவே.
“இன்னிக்கு பவித்ரா மட்டும் இல்லைன்னா, நான் கஞ்சிக்கு செத்துட்டு இருக்கணும்.. பணம் இருந்து பிரயோசனம் இல்லை.. ஆனா வீடுன்னு ஒன்னு இருக்கும், வெறும் வீடா இருக்கும்.. பவித்ரா இருக்கிறதுனால தான், இன்னிக்கு நம்ம வீடு வீடா இருக்கு.. நானும் நல்லாருக்கேன். உங்க கல்யாணத்துக்கு அவ இழுத்து போட்டு அப்படி வேலை செஞ்சா. அதெல்லாம் மறந்து போச்சா?” என்று மனிதர் கடிந்து பேச, பிள்ளைகால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
அத்தனை ஏன், திருமணம் உறுதியான பின்னர் கூட பவித்ரா முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டவர்
“இங்க பார் பவி, நீ என்ன யோசிக்கிறன்னு எனக்குத் தெரியுது. எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியும். நீ என்னை நினைச்சு எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. சந்தோசமா உன்னோட வாழ்கையை வாழப் பாரு. இந்த மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு கூட கேட்காம நான் முடிவு பண்ணது உனக்கு வருத்தம்னு எனக்குத் தெரியும்.
ஆனா என் உள் மனசு சொல்லுது, அவங்க உன்னை நல்லா பார்த்துப்பாங்கன்னு. வெளிப்படையா பேசுறாங்க. மனசுல கள்ளம் இல்லை. அதுனால உன்னையும் நல்லாவே பார்த்துப்பாங்க. அனுசரிச்சு போகவேண்டியது உன்னோட பொறுப்பும் கூட…” என்று பேச,
இதை இவர் கொஞ்சம் தன்மையாய் பேசியிருக்கக் கூடாதா என்று அவளால் நினையாமல் இருக்க முடியவில்லை.
எப்போதுமே இப்படித்தான்.
ஒன்று கட்டளை.. இல்லையென்றால் கண்டிப்பு..
இது இரண்டு மட்டுமே மனோகரிடம் காண முடியும்.
ஆதரவான பேச்சு, கனிவான பார்வை, இதெல்லாம் எப்போதுமே அவரிடம் இல்லை. தன் பிள்ளைகளிடமும் அப்படித்தான் இருந்தார். பவித்ராவிடமும் அப்படித்தான் இருந்தார்.
சில நேரங்களில் அவரிடம் பேசவே பவித்ராவிற்கு பயமாய் இருக்கும்.
ஆனால் வீட்டினில் அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தார். அதுகூட பிள்ளைகளின் பிரிவிற்கு பிறகுதான். அவள் சமைப்பது தான். ஆனால் அவளுக்கு நன்கு தெரியும், அவருக்கு என்ன செய்தால் பிடிக்கும் என்பது. அதுபோலவே வீட்டினில் என்ன எப்போது எப்படி செய்துகொள்ளவேண்டும் என்பதும் அவளது முடிவாய் விட்டிருந்தார்.
இப்போது திருமணத்திற்கு வீடு சுத்தம் செய்ய வேண்டும் என்று பவித்ரா, கொஞ்சம் கொஞ்சமாய் வேலையை ஆரம்பிக்க “இருக்கட்டும் பவித்ரா.. கல்யாணத்துக்கு ஒருவாரம் இருக்கும் போது ஆள் விட்டு பண்ணிக்கலாம்.. நீ வேலையை இழுத்துக்காத…” என்று சொல்லும்போது, அவரின் குரல் லேசாய் பிசிறு தட்டியதோ என்னவோ.
அதை உணர்ந்து, அவள் ஏறிட்டு பார்க்கையில், மனிதர் செய்தித் தாளில் மூழ்கி இருந்தார்.
அதுபோலவே தான், பவித்ராவின் அம்மாவின் நகைகளை, வங்கியில் இருந்து எடுத்து வந்து கொடுத்து “இந்த டிசைன்ஸ் எல்லாம் போதுமா? இல்லை குடுத்துட்டு மாத்தலாமா?” என்று கேட்டார்.
அப்போதும் கூட லேசாய், அவரையும் மீறி, கொஞ்சம் கனிவு எட்டிப் பார்த்ததுவோ என்னவோ.
“இருக்கட்டும் சித்தப்பா.. இதுவே போதும்…” என்றாள்.
“எனக்காக சொல்லவேண்டாம்.. இதெல்லாம் பழைய டிசைன்ஸ்.. உனக்கு பிடிக்கலன்னா மாத்திக்கலாம்..” என்று அழுத்தி சொல்ல, அதில் இருந்த ஓரிரண்டு நகைகளை மட்டும் மாற்றவேண்டும் என்று தோன்றியது பவித்ராவிற்கு.
வளையல்.. மற்றும் இரண்டு தோடுகள்.. அது அவளின் கை அளவும் இல்லை.. அவளின் முகத்திற்கு அந்த தோடு டிசைன் நன்றாகவும் இருக்காது.
பழைய நகையை போட்டுவிட்டு வேறு வாங்கவேண்டும் என்றால், மேற்கொண்டு கையில் இருக்கும் பணம் செலவாகும் தானே. ஏற்கனவே திருமண செலவு வேறு. இதற்கெல்லாம் அண்ணனும் அக்காவும் சம்மதிக்கவேண்டுமே என்று அவளின் மனம் போக,
“யார் என்ன சொல்வாங்கன்னு எல்லாம் யோசிக்கவேண்டாம். நான் உனக்கு செய்றது எல்லாம் என்னோட பணத்துல…” என்று பேசி முடித்துவிட்டார்.
பலராமன் திருமண வேலைகள் பற்றி, மனோகரிடம் தான் பேசினான். திருமண செலவு எங்களது என்று அவன் பேச, திருமணம் என்பது இருவீட்டார் செலவு என்று மனோகர் கண்டிப்பாய் சொல்லிவிட்டார்.
கோமதியும் “சரி நேரில் உக்கார்ந்து பேசுவோம்…” என்றுவிட, பலராமனும், கோமதியும் அந்த வார இறுதியில் பவித்ராவின் இல்லம் செல்வதாய் இருந்தது.
இந்த ஒருமாத காலத்தில், பலராமன் பலமுறை பவித்ராவிடம் தனிமையில் பேச முயன்றான். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். முதல் காரணம், அவனின் திருமணம் அவனே முன் நின்று செய்யவேண்டிய நிலை.
அவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதுமே, பவித்ராவிற்கு ஆரம்பத்தில் ஒருவித பதற்றம் இருந்தது நிஜமே. பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் அடிக்கடி வந்து பவித்ராவோடு பேசிவிட்டு செல்வார். அவர்தான் ஒருமுறை அறிவுரை கூட சொன்னார்.
“இங்க பாரு பாப்பா.. இது உனக்கான வாழ்க்கை… உங்க சித்தப்பன் நல்ல மனுஷன் தான். ஆனா அவன்கிட்ட அன்பு பாசமெல்லாம் எதிர்பார்க்க முடியாது.. அவன் பொண்டாட்டி பிள்ளைங்கக்கிட்டயே அப்படித்தான் இருப்பான். அவன் குணம் அப்படி.. நீயும் இந்த சூழல்ல வளர்ந்து இறுகித்தான் போயிருக்க.. ஆனா பாரு, உனக்கே உனக்குன்னு ஒரு வாழ்க்கை.. ஒரு வீடு.. உனக்கே உனக்குன்னு ஒருத்தன்.. உனக்குக் கிடைக்காத பாசம் அன்பு எல்லாத்தையும் அவனுக்கு கொடு.. அது பல மடங்கா திரும்ப வரும் உனக்கு…” என்று சொல்ல, பவித்ராவிற்கு அவர் சொல்வதும் சரி என்றுதான் தோன்றியது.
அதன்பிறகு தான் மனதில் ஒரு சிறு சந்தோசம்.. சிறு எதிர்பார்ப்பு.. எல்லாமே. ஆனால் அந்த சிறிய மாற்றமே அவளுக்கு முதலில் தனி ஒரு அழகினைக் கொடுக்க, மனோகர் கூட பவித்ராவை கூர்ந்து பார்த்தவர்,
“புத்திசாலியா வாழ பழகனும்.. உன்னோட வாழ்க்கை… உனக்கான வாழ்க்கை.. சரியா..” என்றார்.
“சரிங்க சித்தப்பா…” என்று தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.
“இங்க ஒரு மெஸ்ல சொல்லிருக்கேன்… கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்ன இருந்து அவங்களே சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திடுவாங்க.. கல்யாணத்துக்கு அப்புறமும் எனக்கு அவங்களையே கொடுக்க சொல்லிருக்கேன்.. அதுபோல, வாரத்துக்கு ஒருதடவ வந்து வீடு சுத்தம் பண்ணி போக ஆள் ஏற்பாடு பண்ணியாச்சு.. தினமும் கூட்டுறது நானே பண்ணிப்பேன்.. மெசின்ல என் துணி மட்டும் தானே நானே பார்த்துப்பேன்.. நீ இதெல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை..” என்று அவர் பேச, அவர் பேசிய தொனியோ,
“நீ ஒன்றும் என்னைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை..” என்பதுபோல் இருந்தது.
அதற்கும் “சரி சித்தப்பா…” என்று சொல்லிக்கொண்டாள்.
“ம்ம்.. நாளைக்கு மாப்பிள்ளையும், அவங்க அம்மாவும் வர்றாங்க…” என்றுவிட்டு அவர் நகர, என்னவோ பவித்ரா கொஞ்சம் உற்சாகமாய் இருப்பது போல் இருந்தது.
மறுநாள் அவர்கள் வந்ததும் “வாங்க…” என்று பலராமனை நேருக்கு நேர் பார்த்து கூட பேசினாள்.
“என்னம்மா எப்படி இருக்க?” என்று கோமதி கேட்க,
“நல்லாருக்கேன் அத்தை.. நீங்க?!” என்று கோர்வையாக கூட பேச்சு வர,
‘அட..!’ என்றுதான் பலராமன் பார்த்தான்.
பவித்ராவும் அவனை ஒருமுறை ஏறிட்டு பார்த்தவள், வந்த புன்னகையை அடக்கி, பார்வையை திருப்பிக்கொள்ள, அவனுக்கோ அப்படியொரு உற்சாகமாய் இருந்தது.
“சும்மா சொல்லக் கூடாதும்மா.. அன்னிக்கு அத்தனை அவசரமா நீ போட்டுக் கொடுத்த காப்பியும், செஞ்சு தந்த பஜ்ஜியும் சூப்பரா இருந்தது..” என்று கோமதி பாராட்ட, பலராமன் வேகமாய் அவனின் அம்மாவை திரும்பிப் பார்த்தான்.
ஏனெனில் அன்று அவர் வீட்டிற்கு சென்றதுமே சொன்ன முதல் வார்த்தை “யப்பா அந்த காபிய குடிச்சிட்டு எனக்கு வயத்த கலக்கிடுச்சுடா…” என்பதுதான்.
அத்தனை மோசமாக எல்லாம் இல்லை.. பவித்ராவிற்கு சமையலும் நன்கு வரும்தான். அன்றைய பதற்றத்தில் கொஞ்சம் சொதப்பி இருந்தாள்.
பஜ்ஜியில் கூட கொஞ்சம் உப்பு தூக்கலாய் போனது.
பவித்ரா விழிகள் விரித்து ‘அப்படியா?!’ என்பதுபோல் கோமதியைப் பார்க்க “ஆமா பவித்ரா.. நானும் வீட்லயே பஜ்ஜி போண்டா எல்லாம் சுடுவேன் தான்.. ஆனா அன்னிக்கு மாதிரி வந்தது இல்லை.. நீ வந்ததும் சேர்ந்து செய்வோம்…” என, அதுவே அவளுக்கு அவர்களிடத்தில் ஒரு இலகு சூழலை கொடுக்க,
“சரிங்கத்தை..” என்றாள் மலர்ந்து.
மனோகர் இதனை எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
பவித்ராவின் முக மலர்ச்சியைக் கண்டபிறகு தான், பலராமனுக்கும் புரிந்தது அம்மா ஏன் எப்படி எடுத்துவிட்டார் என்பது. அவளை இலகுவாக்க என்பது புரிய,
“மாமா… பத்திரிக்கைல யார் யார் பேர் போடணும்னு சொல்லிட்டீங்கன்னா அந்த வேலை முடிச்சிடலாம்…” என்று பேச, மனோகரும் விபரம் சொல்ல, பவித்ரா அப்போது உளுந்த வடையும், டீயும் கொண்டு வந்து டேபிளில் வைக்க,
‘இவ என்னடா இவ.. போன பிறவியில, போண்டா மாஸ்டரா இருந்திருப்பாளோ…’ என்று பார்த்தான்.
அவனுக்கு எங்கே தெரியும், இதெல்லாம் மனோகரின் கட்டளைகள் என்று.
இரண்டு வடை என்றாலும் வீட்டினில் தான் சுட வேண்டும்.. தேவையில்லாமல் பணம் காசை கொண்டு போய் கடையில் கொட்டக் கூடாது என்பார்.
“இன்னிக்கு டீயும், வடையுமாம்மா…” என்று கோமதி மகனைப் பார்க்க, அவனோ மிக சிரமப்பட்டு சிரிப்பினை அடக்கினான்.
திருமணம் பற்றிய பேச்சுக்கள் எல்லாம் மனோகரும், பலராமனும் தான். கோமதி மருமகளோடு “கடைக்கு போற வேலை எல்லாம் முடிஞ்சதா பவித்ரா?” என, அவளுக்கு புரியவில்லை சரியாய்.
“ஹா..!” என்று பார்க்க,
“துணியெல்லாம் எடுத்தாச்சா? தைக்கக் குடுக்கணும்ல.. ஒருமாசம்ங்கறது கம்மி நாள் தானே..” என, என்ன சொல்வது என்று தெரியாமல், அவளோ சித்தப்பாவைப் பார்க்க,
“புதுசு கொஞ்சம் வாங்கணும்.. நீங்க கல்யாண புடவை எடுக்க போறப்போ, நாங்களும் வருவோம் தானே, அப்போ வாங்கிக்கலாம்னு இருக்கோம்..” என்றார்.
“ஓ..!” என்ற கோமதி,
“வர்ற புதன் போயிட்டு வந்துடலாம்.. அவனுக்கு லீவ் இருக்காது.. நானும் பக்கத்து வீட்டம்மாவும் தான் வரணும்…” என்றார்.
அலைபேசியில் தான் அவளோட தினமும் பேச சந்தர்ப்பம் அமையவில்லை. அவளிடம் தனியாய் அலைபேசியும் இல்லை. சரி நேரில் சந்திக்கும் வாய்ப்புகளிலாவது பேசலாம் என்று தான் பலராமன்,
“மாமா தப்பா நினைக்காதீங்க.. பவித்ராவோட நான் கொஞ்சம் பேசணும்…” என,
பலராமன், பவித்ராவைக் காண, பவித்ராவும் சம்மதம் என்பதுபோல், எழுந்துச் செல்ல, வீட்டின் பின்னே இருந்த சிறிய இடத்தினில் தான் போய் நின்று பேசினர்.
“பவித்ரா.. எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை.. இன்னிக்கு எப்படின்னாலும் உன்னோட பேசிடனும்னு தான் வந்தேன். உன்னோட போட்டோ பார்த்தே எனக்கு ரொம்ப பிடிச்சது.. உனக்கு எப்படின்னு தெரியலை.. ஆனா ஒன்னு, கல்யாணத்துக்குப் பிறகு, அங்க நம்ம வீட்ல நீ வந்து, சந்தோசமா வாழலாம்…” என்று சொல்ல, பவித்ராவிற்கு மனது ஒருவித இதத்தை உணர,
“ம்ம்…” என்று தலையை தலையை ஆட்டினாள்.
“நீ எதுவும் பேச மாட்டியா? உனக்கு செல் போன் வாங்கனும்னு நினைச்சேன்…” என,
“அ.. அது.. கல்யாணத்துக்கு முன்னாடியே மணிக்கணக்கா பேசுறது எல்லாம் இருக்கக் கூடாதுன்னு…” என்று அவள் இழுக்கும்போதே,
“உங்க சித்தப்பா சொன்னாரா?!” என்றான்.
ஆம்.. என்று சொல்லி அவரை காட்டிக்கொடுக்கவும் அவளால் முடியவில்லை. இல்லை என்று சொல்லி அவன்முன்னே பொய்யாகவும் எதுவும் பேச முடியவில்லை. திணறி நிற்க,
“பரவாயில்லை.. இன்னும் கொஞ்ச நாள் தானே.. கல்யாணத்துக்கு பிறகு வாங்கலாம்…” என்று சட்டென்று அவன் அவள் நிலை புரிந்து பேச,
அதற்கும் “ம்ம்…” என்று தலையை ஆட்டினாள்.
“எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டு…” என்று சொல்லி புன்னகை செய்தவன்,
“கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியே இருந்துட்டா, எனக்கு ரொம்ப நிம்மதி…” என்று கேலி பேச, நொடியில் பவித்ராவின் முகம் இருண்டுவிட்டது.
“என்னாச்சு?!” என்று அவனும் உடனே கேட்க,
“இல்லை ஒண்ணுமில்லை…” என்றாள் மறுப்பாய்.
ஆனால் பலராமனுக்கோ ஒருவித எரிச்சல். கேட்டால் பதில் சொன்னால், என்ன என்று.
“இங்க பார் பவித்ரா.. எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசினா தான் நல்லது..” என்று முகத்தை உர்ரென்று வைத்து பேச, பவித்ரா ஒருவித பயந்த பார்வையைத் தான் பதிலாய் கொடுத்தாள்.