பவித்ரா, பலராமன் திருமண வரவேற்பு நல்ல முறையில் நடந்து முடிந்திருக்க, மீண்டும் பவித்ரா, தன் கணவன் வீடு செல்ல நேரம் வந்துவிட்டது. ஏற்கனவே காலையில் மனோகர் உடன்வந்து விட்டுவிட்டு வர, இப்போ இரவு சாந்தி முஹூர்த்த நேரம் வேறு குறித்திருக்க,
பலராமனோடு அதிகம் பேசியது கூட இல்லை தானே. இதில் யாரின் துணையும் கூட இல்லாமல் அங்கே செல்வதும், இரவு நிகழ்ச்சி வேறு அவளை கொஞ்சம் பதற்றமடைய செய்துவிட்டது.
அதை அவளின் முகமே காட்டிக்கொடுக்க, பலராமன் “என்ன செய்யுது உனக்கு?” என்று வேனில் செல்லும் போது கேட்டான்.
“ஒண்ணுமில்லை…” என்று சொன்னவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.
கையில் இருந்த, கைக்குட்டையை இறுகப் பற்றிக்கொண்டு அமர்ந்திருக்க, ஒருவழியாய் பலராமன் வீடு வந்து அனைவரும் இறங்க, இப்போது சொந்தங்களில் சில பெண்கள் மட்டும் வந்திருந்தனர்.
அவர்கள் எல்லாம் மறுநாள் கிளம்புவதாய் இருந்தது. அதுபோக, அந்த ஏரியா வாசிகள் சிலர் இருந்தனர்.
“எப்படியோ கோமதியக்கா, நல்லாபடியா எல்லாம் செஞ்சுட்ட மகனுக்கு…” என்று எதிர்வீட்டு பெண் சொல்ல,
“நான் என்ன செஞ்சேன்.. எல்லாம் அவனோட உழைப்பு தான்..” என்று மகனை பெருமை பேசினார்.
“பொண்ணு வீட்ல இருந்து யாரும் வரலையா?!” என்று இரண்டொருவர் ரகசியம் பேச,
கோமதி பேசாதே என்பது போல் சைகை செய்ய, அதெல்லாம் பவித்ரா பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். வீட்டிற்குள் வந்ததும் பலராமன் அவனின் அறைக்குள் சென்றுவிட, பவித்ரா என்ன செய்வது என்று அறியாமல் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.
கோமதியோ “போ ம்மா.. போய் குளிச்சிட்டு ரெடியாகு…” என்றவர் அவரின் அறையை காட்டினார்.
அவரின் அறையும் குளியலறையோடு தான் இருந்தது.
‘ரெடியாகு…’ என்று அவர் சொன்ன வார்த்தையே அவளுள் ஓட, அவளுக்கு இன்னமும் சொப்னா திருமணம் எப்படி நடந்தது என்று கண் முன்னே வந்துபோனது.
அவளின் சாந்திமுஹூர்தம், இங்கே மனோகர் வீட்டினில் தான் நடந்தது. ஜனகன் குடும்பத்தில் பெண் வீட்டினில் தான் சாந்திமுஹூர்தம் நடத்தவேண்டும் என்று சொல்லிவிட, இங்கேதான் ஏற்பாடு. சொப்னாவை தயார் செய்ய எத்தனை பேர் இருந்தார்கள் என்று இப்போதும் அவளுக்கு மனதில் வந்துபோக, அவர்கள் செய்த கேலியும் கிண்டலும், அப்போது சொப்னாவின் முகத்தில் இருந்த ஜொலிப்பும் எல்லாம் சேர்ந்து அவளுக்கு ஒரு ஏக்கப் பேரு மூச்சினைக் கொடுக்க, அடிக்கடி நினைப்பது போல்
‘ம்மா அப்பா.. ஏன் என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிட்டீங்க… என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் தானே…’ என்று எண்ணாமல் இருக்கவும் முடியவில்லை.
கண்ணில் வழியும் நீரை தடுக்கவும் வழியில்லை.
சில நிமிடங்கள் பவித்ரா இப்படி அமைதியாய் அமர்ந்து இருக்க, “என்னம்மா இன்னும் குளிச்சிட்டு வரலையா நீ..? சீக்கிரம்.. இப்போவே நேரமாச்சு..” என்று ஒரு பெண்மணி வந்து மல்லிகை பூவை அங்கிருந்த மேஜை மீது வைத்தவர்,
“சீக்கிரம்மா.. குளிச்சிட்டு வந்து ரெடியாகு.. எல்லா பூவையும் வச்சுக்கோ…” என்றுவிட்டு போனார்.
இன்னும் தாமதம் செய்தால், யாரேனும் வந்து வைவார்களோ என்று வேக வேகமாய், அலங்காரம் கலைத்து, கொண்டு வந்திருந்த சூட்கேஸில் இருக்கும் சேலைகளில், என்ன மாதிரி சேலை கட்டுவது என்று குழம்பி, பின் கைக்கு கிடைத்த ஒரு சேலையை எடுத்து வைத்தவள், குளிக்கச் சென்றுவிட்டு வந்து தன்னை தயார் செய்து கொண்டு இருக்க, கோமதி வந்தார்.
“ரெடியா பவித்ரா?!” என்று.
“ம்ம் அத்தை…” என, அவளின் முகத்தைப் பார்த்தவர் “பயமா இருக்கா என்ன?!” என்று கொஞ்சம் ஆதுரமாய் கேட்க, மளுக்கென்று அவள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
“ஏ!.. என்னாச்சும்மா..? எதுக்கு அழற?” என்று கோமதி பதற,
“அ.. அது அத்தை.. கொஞ்சம் அம்மா அப்பா நியாபகம் அதுதான்…” என்றாள் வேகமாய் முகம் துடைத்து.
“அது.. எல்லாருக்கும் இந்த நேரத்துல இருக்கத்தான் செய்யும்..” என்றவர் “எதையும் நினைக்காத.. இது உனக்கான நேரம்.. சந்தோசமா இருக்கவேண்டிய நேரம். வாழ்க்கைல சிலது எல்லாம் முக்கியமான தருணம். அதுபோலத்தான் இந்த நாளும்.. சந்தோசமா இருக்கணும். சரியா..” என்று அன்பாய் பேச,
“சரி…” என்று தன்னைப்போல் பவித்ராவின் தலை ஆட,
அடுத்த சிறிது நேரத்திலேயே, பலராமனின் அறைக்கு பவித்ரா அனுப்பிவைக்கப் பட, பலராமனும் ஒருவித பதற்றத்தில் தான் இருந்தான்.
“டென்சன் எல்லாம் ஆகாத சரியா…” என்றவன் “இப்படி உக்கார்…” என்று அவனருகே இடம் விட, பவித்ரா மெதுவாய் தான் அமர்ந்தாள்.
பலராமனுக்கு இன்றைய தினமே எதையும் தொடங்கும் எண்ணமில்லை. முதலில் அவளோடு இயல்பாய், இலகுவாய் பேசி பழகிட வேண்டும் என்பதுதான் எண்ணமாய் இருந்தது.
பேச்சுக்கள் கூட இலகுவாய் இல்லாமல் இருக்கையில், உடல் சார்ந்த உறவு என்பது அவனுக்கு அபத்தமாய் பட, அதனை வெளிப்படையாகவே சொல்லவும் செய்தான்.
“நம்ம இன்னும் ஒருத்தருக்கு ஒருத்தர் சரியா பேசக் கூட இல்லை.. அதனால..” என்று அவன் சொல்ல வரும்போதே, அவளுக்குப் புரிந்தது என்ன சொல்கிறான் என்று.
அத்தனை நேரம் தன் கை விரல்களையே பார்த்து அமர்ந்து இருந்தவள், பட்டென்று நிமிர்ந்து, அவனை ஏறிட்டுப் பார்க்க, “உனக்கு எதுவும் சொல்லனுமா?” என்றான் அவள் பார்வை புரிந்து.
“இல்ல.. உங்களுக்கு எதுவும் கோவமா?!” என்றாள்.
“அப்படில்லாம் எதுவுமில்லையே.. ஏன்…” என்றவன், அவள் பக்கம் நன்றாய் திரும்பி அமர்ந்துகொண்டு, அவள் கொண்டு வந்து கொடுத்த பாலினை குடிக்க,
“இல்ல, வெளிய பெரியவங்க எல்லாம் நிறைய நிறைய சொல்லி அனுப்புனாங்க. நீங்க வேறமாதிரி சொல்லவும், கோவமோன்னு நினைச்சேன்..” என்றாள்.
அவள் இத்தனை கோர்வையாய் பேசுவதே அவனுக்கு பெரிய விசயமாய் பட,
“கோவமெல்லாம் இல்லை.. நம்ம இதுவரைக்கும் சரியா பேசினது கூட இல்லை.. அப்படி இருக்கும்போது எப்படின்னுதான்.. கொஞ்சமாவது உனக்கும் எனக்கும் ஒரு அட்டாச்மென்ட் வரணும்னு ஆசை…” என, அவள் முகம் மேலும் தெளிவடைய, பேச்சுவாக்கில் அவன் பருகி முடித்த பால் மீதமிருந்ததை அவளிடம் கொடுக்க,
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா, எனக்கு பால் வாடையே பிடிக்காது..” என்றாள்.
‘அடப்பாவி…’ என்று பலராமன் பார்க்க,
“ஆமா… காபி டீல கூட பால் எனக்கு கம்மியா தான் கலந்துப்பேன்…” என்றவள், வேறு வழியில்லாமல் அவன் குடித்துக் கொடுத்ததை குடிக்கப் போக,
“இரு பவித்ரா…” என்றவன்,
“சாஸ்திரத்துக்கு, ஒருவாய் குடி..” என்றான்.
“இத்தனை இருக்கே…”
“நீ குடிச்சிட்டு குடு.. நான் குடிச்சுக்கிறேன்..” என,
“ஹா..!” என்று பார்த்தாள்.
“என்னம்மா.. நான் குடுத்ததை நீ குடிக்கிறப்போ, நீ குடுத்ததை நான் குடிச்சா தப்பா…” என, அவனுக்கே ஆச்சர்யம், தானா இப்படியெல்லாம் பேசுகிறோம் என்று.
அதைவிட பவித்ராவின் மனதில் ஒருவித இதம்.
இதுநாள் வரைக்கும் யாரிடமும் கிடைக்காத ஒருவித அனுசரணை, பலராமனிடம் கிடைப்பது போலிருக்க, இதைத்தான் அந்த பக்கத்துவீட்டு பாட்டி சொன்னார்களோ என்று நினைத்தாள்.
உனக்கென்று ஒரு வாழ்வு..
உனக்கென்று ஒரு உறவு..
நினைக்க நினைக்க சந்தோசமாய் இருப்பது போலிருந்தது.
பேச பேச, அவள் முகம் தெளிவாகவும், கொஞ்சம் இல்லை நிறையவே பிரகாசமாய் இருப்பது போலவும் தெரிய, பலராமன் தன் கூட்டைவிட்டு நிறையவே பேசினான்.
அவன் அப்பா இறந்தது, அவர்களின் வாழ்வு அதன்பின் மாறிப்போனது, இவன் படிப்பு, வேலை என்று எல்லாம் பேச, பேச, பவித்ராவிற்கு ஒருநிலைக்கு மேலே அவன் பேசுவதை மட்டுமே கேட்கும் நிலை ஆனது.
பலராமனுக்கோ, தன் மனதில் இருக்கும் எண்ணங்களை எல்லாம் கேட்பதற்கு ஒரு ஆள் கிடைத்தது என்று, நேரம் போனது தெரியாமல் பேச, உட்கார்ந்து பேசியவர்கள், தங்களை மீறி அப்படியே படுத்தும் பேச, பவித்ரா எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.
‘அட தூங்கிட்டா…’ என்று பலராமன் அவள் முகத்தினைப் பார்க்க, பவித்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.
‘இப்படி பேசி பேசியே தூங்க வச்சிட்டியே பலராமா…’ என்று நொந்தவன்,
‘ரொம்ப பேசிட்டோமோ..’ என்று எண்ணிக்கொண்டவன், அப்படியே அவளது உறக்கம் கலையாதவாறு, தானும் மெல்ல படுக்க, அவனுக்கு என்னவோ உறக்கமே வரவில்லை.
நல்லுறக்கத்தில் இருக்கும் பவித்ராவையே பார்த்து படுத்திருந்தான்.
அவர்களது வாழ்வு என்பது மிக அழகாய் அமையப்போகிறது என்று அவன் மனதிற்குள் ஒரு குரல் சொல்ல, மெல்ல புன்னகையும் செய்துகொண்டவன், அவளது உறக்கம் கலையாதவாறு, மெதுவாய் அவள் கன்னம் வருடிப் பார்க்க,
‘டேய் பலராமா…’ என்று மனசாட்சி எட்டிப் பார்த்தது.
“அடுங்குடா…” என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டவன், அவள் முகம் பார்த்தே படுத்திருக்க, அடுத்து சில நிமிடங்களில் அவனுக்கும் உறக்கம் வந்திருந்தது.
அடுத்து வந்த நாட்களும் கூட இவர்களுக்கு இனிமையாய் இருந்தது.. வெளியே சென்று வந்தார்கள். சினிமாவிற்குப் போனார்கள். மறுவீடு என்று சென்றவர்கள், காலையில் சென்று இரவு வீடு திரும்பினார்கள். தங்கவெல்லாம் இல்லை.
மனோகர் தங்கிவிட்டு போங்கள் என்றார் தான்.
ஆனால் எதற்கு சிரமம் என்று பலராமன் வேண்டாம் என்றுவிட்டான்.
பவித்ராவிற்கும் அது புரிய “கொஞ்ச நாள் போகட்டும் சித்தப்பா…” என,
“சரிதான்..” என்றுவிட்டார் அவரும்.
என்னவோ பெரிய கடமையை செய்து முடித்த மகிழ்ச்சி அவருக்கு.
கோமதி மகனிடம் தனியே கேட்டார் “எல்லாம் சரிதானே டா…” என்று.
அவர் எதனை அர்த்தத்தில் வைத்துக்கொண்டு கேட்கிறார் என்பது அவனுக்குப் புரிந்து “ம்மா.. இப்போதான் ரெண்டுபேரும் பேசிக்கவே ஆரம்பிச்சு இருக்கோம்.. கொஞ்ச நாள் எடுக்கும்மா..” என்றிட,
“ம்ம்.. சரிதான்.. வெளியூர் எங்கனாவது போறதுனா போயிட்டு வாங்களேன்…” என்றார்.
“போகணும் தான்.. ஆனா இப்போ முடியாது.. இந்த மாசம் பட்ஜெட் எல்லாம் ஓவர்.. வீட்டு செலவுக்கு மட்டும் தான் பணம் எடுத்து வச்சிருக்கேன்.. லீவ்வும் இல்லை.. அடுத்த மாசமும் லீவ் சொல்ல முடியாது. ப்ரொடக்ஷன் நிறைய இருக்குற நேரம். அதுக்கு அடுத்த மாசம் தான் போக முடியும்..” என்று பேசிக்கொண்டு இருக்க,
இதெல்லாம் பவித்ராவின் செவியிலும் விழுந்தது. அவள் சமையல் செய்துகொண்டு இருந்தாள். அம்மாவும், மகனும் பேசுவது நன்கு கேட்டது. கேட்கக் கூடாது என்றெல்லாம் அவர்கள் ரகசியம் பேசவில்லை.
“அடுத்த மாசமோ இந்த மாசமோ ரெண்டு பேரும் பேசி சேர்ந்து முடிவு பண்ணுங்க எங்க போறதுன்னு…” என்று கோமதி சொல்லிவிட, அடுத்து சில நிமிடத்தில் பலராமன் வேலைக்குக் கிளம்பிவிட்டான்.
அதன் பின்னர் என்ன, மாமியாரும் மருமகளும் தான்.
ஆரம்பத்தில் சில தயக்கங்கள் பவித்ராவிற்கு இருந்தது தான். ஆனால் கோமதி அவளின் தயக்கங்களை எல்லாம் தன் பேச்சாலும், செயலாலும் தகர்த்துத் தான் வீசினார்.
வாழ்வு ஒரு இயல்பாய் சென்றுகொண்டு இருந்தது.
கணவன் மனைவி இருவருக்கும் பேச்சிலும் சரி சிறு சிறு ஸ்பரிசங்களிலும் சரி நெருக்கம் கூடியிருக்க, பலராமனுக்கு மேலும் மேலும் அவளை பிடிக்க ஆரம்பிங்க, என்றடா நாம் இருவரும் ஒன்றாவோம் என்று அவன் ஏங்காத நாள் இல்லை.
பவித்ராவின் நிலையையோ கேட்கவே வேண்டாம்.
கொஞ்சம் பறக்காத குறைதான்.
எப்படி இருக்குமோ இவ்வாழ்வு என்று எண்ணி அஞ்சி, சித்தப்பாவின் வார்த்தைகளுக்கும் முடிவுக்கும் கட்டுப்பட்டே, திருமணம் செய்தவளுக்கு, இந்த வாழ்வும், இந்த சூழலும் இனிக்கத்தான் செய்தது.
கணவனோடு நெருங்க அவளுக்கும் மனதில் சிறு சிறு ஏக்கங்கள் எட்டிப்பார்க்க, அவளது எதிர்பார்ப்பை இன்னும் பலராமன் அதிகமாக்கவே செய்தான்.
அதற்கு சந்தர்ப்பங்களும் சூழலும் கை கொடுத்தது.
அன்றும் அப்படித்தான் கோமதி சொந்தத்தில் ஒரு திருமணம் என்று மகனையும் மருமகளையும் சென்றுவரச் சொல்ல,
“ம்மா நாங்க போகனுமா?” என்றான் பலராமன்.
“ஆமா டா… புதுசா கல்யாணம் ஆனவங்க, இப்படி போய் வந்தா தானே நல்லாருக்கும்..” என, பலராமன் மனதில் வேறொரு எண்ணம் தோன்ற,
“ம்மா ரெண்டு லீவ் வருது.. பவித்ராவை கூட்டிட்டு வெளியூர் போலாம்னு இருந்தேன்…” என்றவன் அடிக்கண்ணில் அவளைப் பார்க்க, சட்டென்று அவளது பார்வையும் கணவனைத் தொட்டு மீள, இருவரின் பார்வை பரிமாற்றத்தையும் கண்டவர்,
“அதுசரி.. நீங்க போறீங்களோ, இல்லையோ நான் விசேசத்துக்கு போயிட்டு வர்றேன்… வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும்…” என்றுவிட்டு கிளம்பிவிட்டார்.
கோமதி கிளம்பவுமே, பவித்ராவிற்கு ஒரு இனம்புரியாத படபடப்பு.
கொஞ்சம் தயக்கத்துடனே கணவன் முகம் பார்க்க “என்ன பவி..?” என்று கேட்டபடி அருகில் வந்தான்.
“அ.. அது… நைட்டுக்கு தோசை ஊத்தவா?” என்று தட்டுத்தடுமாறி கேட்க,
“ம்ம் செய்யலாமே… நான் சட்னி போடவா?” என்று கேட்டபடி அவளையும் அழைத்துக்கொண்டே அடுப்படிக்குள் நுழைய, பவித்ராவிற்கோ கைகள் நடுக்கம் கொண்டது.
சமையல் அவளுக்கு அத்துபடி. ஆனால் இப்போதோ சகலமும் மறந்துபோனது போல் இருந்தது.
“என்ன பவி, இப்படி நிக்கிற? என்னாச்சு உனக்கு உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று பலராமன் அவளில் கழுத்தில் கை வைத்துப் பார்க்க, பவித்ரா கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
பலராமனுக்கு அவளின் பதற்றும், தவிப்பும், இந்த தனிமை கொடுக்கும் எண்ணங்களும் புரியாமல் இல்லை.
இருந்தும் “என்னம்மா என்ன பண்ணுது?” என்று மீண்டும் அவள் கன்னம் பிடித்துக் கேட்க,
‘அம்மாடி.. இது ஆகாது…’ என்று எண்ணியவள்,
“நீ.. நீங்க சட்னி செய்றேன் சொன்னீங்க தானே.. செஞ்சுட்டு சொல்லுங்க.. நான் தோசை வந்து சுடுறேன்…” என்று தப்பித்து ஓடப் பார்க்க,
அதை கணித்தவன், வேகமாய் அவளை தடுத்து, தன்மீதே இழுத்தணைத்து நிறுத்தி இருந்தான்.