“இங்க பாரேன்..” என்று அவள் கன்னம் நிமிர்த்த, அவளோ கன்னம், என்ன கண்களை கூட நிமிர்த்தவில்லை.
‘என்னடா இவ ரொம்ப வெக்கமா படுறாளே…’ என்று எண்ணியவன்,
“சரி உனக்கு படபடப்பு ஜாஸ்தி இருக்கு. மயங்கி விழுந்துட போற.. நீ போய் உக்கார் பவி.. நான் டிபன் செய்றேன்…” என்று பாவமாய் மொழிவது போல் பேச, பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் பவித்ரா.
‘அப்படி வா வழிக்கு…’ என்று எண்ணியவன், நமட்டு சிரிப்பு சிரித்து நிற்க,
“அச்சோ…” என்று வெட்கம் கொண்டவள், முகத்தை அவன் மார்பிலேயே புதைக்க, இதற்குமேலும் அவளது சம்மதம் அவனுக்கு வேண்டுமா என்ன?
அப்படியே அவளை அலேக்காக தூக்கிக்கொண்டவன், படுக்கையறை போக, பவித்ராவிற்கோ ஒருவித இனம் புரியா பரவசம்..
கூடவே கொஞ்சம் படபடப்பு..
அவளின் உணர்வுகள் எல்லாம் கலந்தடித்து, அவள் முகத்தில் பிரதிபலிக்க, மேலும் அவளை அழகாய் காட்டியது.
கணவனின் அருகாமை கொடுத்த இதம், இதுவரை தனக்கென்று யாருமில்லை என்றிருந்த பயத்தை காணாது போகச் செய்ய, வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு போகவே அவளது மனது ஆசைகொண்டது.
பலராமனுக்கோ சொல்லவே வேண்டாம்..
இதற்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தான்.
தன் மனைவி எவ்வித தயக்கமும், கட்டாயமும் இல்லாமல் தன்னிடம் ஒன்றிட வேண்டும் என்பதுதானே அவனின் ஆசையாகவும் இருந்தது.
இன்று அந்த ஆசை நிறைவேறும் தருவாயில் இருக்க, பலராமனின் உவகையை சொல்லவும் வேண்டுமா என்ன?
ஆவலான அணைப்பு, ஆசையான அணைப்பாக மாறிட, அதன்பின் இருவரின் நிலை, இருவருக்குமே ஆச்சர்யம் தான்.
தயங்கித் தயங்கி ஒரு முத்தம்..
தாபமாய் பல முத்தம்..
தட்டுத்தடுமாறி, தங்களின் தடைகளை தாங்களே களைந்து, இருவரும் ஒரு கூடல் கலை அரங்கேற்றம் செய்ய, அடுத்து வந்த நொடிகள் எல்லாம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தான்.
வயிற்று பசி என்பது பலமணி நேரத்திற்கு பிறகே உணரச் செய்ய, அப்போதும் கூட விலகிட மனமில்லாது தான் இருந்தனர் இருவரும்.
தனக்கு பசிப்பது போல்தானே அவளுக்கும் பசிக்கும் என்று எண்ணிய பலராமனோ “பவி…” என்றழைக்க,
“ம்ம்…” என்றாள் வழக்கம் போலவே.
“பசிக்குதுதானே…” என,
“ம்ம்…” என்று அப்போதும் சொல்ல,
“இந்த ம்ம்க்கு என்ன அர்த்தம்?” என்றான்.
“ம்ம்க்கு என்ன அர்த்தம்?” என்று பவித்ரா பதிலுக்கு கேட்க,
“உன்னோட ம்ம்க்கு பல அர்த்தம் இருக்கே…” என்றான் உல்லாச புன்னகையோடு..
“அப்படியா?” என்று அவள் பொதுவாய் கேட்டுவைக்க,
“ஆமாம் சொல்லவா?” என்றான் விஷமமாய்.
“இதுல என்ன இருக்கு?” என்றவள் “உங்களுக்கும் பசிக்குதா?” என,
“அது இருக்குத்தான்.. ஆனாலும் சொல்றதை கேளேன்…” என்று அவளது வெற்று முதுகில், தன் ஒருவிரல் கொண்டு கோலம் போட, மீண்டும் ஒருமுறை அவளது உடல் கூச்சத்தை உணர்ந்தான் பலராமன்.
‘என்ன சொல்லப் போகிறானோ?’ என்று பவித்ரா அமைதியாகவே இருக்க,
“முதல்ல ம்ம், நான் கூப்பிட்டதுக்கு என்னன்னு கேட்கிற ம்ம், அடுத்து பசிக்குதான்னு கேட்டதுக்கு ஆமாம்னு சொல்ற ம்ம்.. ஆனா கொஞ்ச நேரம் முன்னாடி நீ பலவித ம்ம் போட்ட…” என்று சொல்லும்போதே,
“அச்சோ…” என்றபடி அவனது வாயை தன் கரத்தால் மூடியிருந்தாள் பவித்ரா.
பலம்கொண்ட மட்டும் அழுத்தி மூடியிருக்க, அவள் முகம் காட்டிய செம்மையை ரசித்தவன், வந்த சிரிப்பை அடக்க,
“ச்சே என்ன நீங்க இப்படில்லாம்…” என்றாள் லஜ்ஜையாய்.
“ச்சே என்ன நீங்க இப்படில்லாம்…” என்று வேண்டுமென்றே அவளை போலவே அவனும் சொல்லிக்காட்ட,
“ஐயோ..!” என்று முகத்தை மூடிக்கொண்டாள்.
ஆனாலும் அவனது சிரிப்பு விடுவேனா, என்று அவளாது செவியை தீண்ட, இருவருக்கும் அந்த பொழுது மட்டும் இல்லை, அடுத்து வந்த நாட்களும் இனிமையோ இனிமைதான்.
திருமணத்திற்கு சென்றிருந்த கோமதி, வீட்டிற்கு வந்ததும் சில நிமிடத்திலேயே புரிந்துகொண்டார் சரி மகனும் மருமகளும் ஒரு முழுமையான திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்துவிட்டனர் என்று.
மனதிற்குள் ஒரு பெரும் திருப்தி.
ஆனாலும் எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“நான் தான் வந்துட்டேன்ல பவித்ரா.. நீ போய் உங்க சித்தப்பாவை பார்த்துட்டு வரலாம் தானே.. ஏன் பலராமா நீயாவாது கூட்டிட்டு போயிருக்கலாம் இல்லையா?” என்று கேட்க,
பவித்ராவிற்கு தன் மீதே கோபம் அப்படி வந்தது.
காரணம் இந்த இரு நாட்களில் சித்தப்பா என்ற ஒருவர் இருக்கிறார் என்பது கூட அவளுக்கு மறந்து இருந்தது.
‘ச்சே என்ன புத்தி எனக்கு..’ என்று தன்னை தானே கடிந்தவள்,
‘போகலாமா?!’ என்பதுபோல் கணவனைப் பார்க்க,
‘இந்தம்மாக்கு ஏன் இந்த வேலை..?’ என்று எண்ணினான் சாதாரணமாய் பலராமன்.
“என்னடா பாக்குற.. அவருக்கும் யார் இருக்கா? போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திருக்கலாம் தானே…” என,
“நா.. நாங்க எங்கயும் போகவே இல்லை அத்தை…” என்றாள் பவித்ரா.
“ஏன் போகலை… இவன் லீவ் நாள் வந்தா வீட்டை விட்டு எங்கயும் போக மாட்டான். கேட்டா இன்னிக்குத்தான் எனக்கு ரெஸ்ட் அப்படின்னு டிவி முன்னாடி படுத்திருவான். நீதான் இனிமே அதெல்லாம் பார்த்து, எங்க போகணுமோ சொல்லி கூட்டிட்டு போகணும்…” என, இப்போது பவித்ராவிற்குள் சித்தப்பாவை சென்று பார்த்துவிட்டே வரவேண்டும் என்று முடிவே தோன்றிவிட,
பலராமனும் ”சரிம்மா… வேலைக்கு போறப்போ கொண்டு போய் விட்டுட்டு போறேன்.. சாயந்திரம் வரும்போது கூட்டிட்டு வர்றேன் போதுமா…” என, அதன்பிறகு தான் பவித்ராவின் முகம் மலர்ந்தது.
சந்தோசமாகவே சித்தப்பாவைக் காணச் செல்ல, அங்கேயே வீடு அவள் நினைத்தது போல் இல்லாமல் கன்றாவியாக இருந்தது.
மனோகரோ, இந்த சில நாட்களில் ஆளே பாதியாகி இருந்தார்.
பவித்ராவையும், பலராமனையும் கண்டதும் கண்ணில் ஒரு மகிழ்ச்சி மின்னல்.
ஆனாலும் அந்த பழைய மிடுக்கு குறையாது வரவேற்க, பலராமனுக்கு பார்த்ததுமே புரிந்துபோனது எல்லாம்.
பவித்ராவின் பார்வையோ வீட்டையே சுற்றி அலச “அது ஒண்ணுமில்ல பவித்ரா, வேலை செய்றம்மா மூணு நாளா வரல.. உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்க…” என்று மழுப்ப,
“அப்படியா சித்தப்பா..” என்று கேட்டவள், தன்னைப்போல் எழுந்து சென்று எல்லாம் சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டாள்.
அவள் இருக்கும்போது வீடு எப்படி இருக்கும்.
மனோகருக்கு ஒரு தூசி துரும்பு இருக்கக் கூடாது. கண்ணாடி போல் இருந்திட வேண்டும். எந்தெந்த பொருள் எங்கெங்கே இருக்கவேண்டுமோ அங்கங்கே இருந்திட வேண்டும்.
ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாய் இருந்தது.
பலராமன் அடுத்து ஓரிரு நிமிடத்திலேயே கிளம்பிவிட்டான்.
பவித்ராவிற்கோ அடுத்த ஒருமணி நேரம் வேலை சரியாய் இருக்க, மனோகருக்கு பாவமாய் இருந்தது. இந்த பெண் இங்கிருந்த வரைக்கும் கூட வேலை வேலை தான். இப்போது கணவனோடு ஆசையாய் பார்க்க வந்தவளுக்கும் இப்படி வேலை வைக்கிறோமே என்று.
ஆனால் மனதில் தோன்றிய வார்த்தைகள், வெளி வரவேயில்லை.
அனைத்தையும் முடித்து வந்து, தான் எப்போதும் அமரும் இடம் பவித்ரா அமர, “எப்படி இருக்க பவித்ரா?” என்றான் மனோகர்.
“நல்லா இருக்கேன் சித்தப்பா.. அத்தையும் சரி, அவரும் சரி என்னை நல்லா பார்த்துக்கிறாங்க…” என்றிட,
“ரொம்ப சந்தோசம்…” என்றவருக்கு பெரும் திருப்தி.
“நீங்க சரியா சாப்பிடுறது இல்லையா?” என்று பவித்ரா நேரடியாகவே கேட்க,
“இல்லையே அப்படி எல்லாம் இல்லையே…” என்றார்.
“இல்லை மெலிஞ்சது போல இருக்கீங்களே…”
“அது வாக்கிங் போறேன்..” என்று மனோகர் இழுக்க, என்னவோ சரியில்லை என்பது அவளுக்குப் புரிய,
“உடம்பு எதுவும் முடியலையா சித்தப்பா..?” என்றாள்.
“இல்லையே…” என்றார் வேகமாய்.
அவர் சொல்லும் பதில் எதிலுமே உண்மை இருப்பதுவாய் தெரியவில்லை. மனதும் சமாதானம் ஆகிடவில்லை.
சிறிது நேரம் அமைதியாகவே இருந்தவள் “ஏன் சித்தப்பா, நான் வேணும்னா தினமும் இங்க வந்து சமைச்சு வச்சிட்டு போகட்டுமா.. இதோ இன்னிக்கு வந்தது போல..”என, அத்தனை நேரம் இருந்த அமைதி போய், இப்போது மனோகர் அவளை கோபமாய் பார்க்க,
“இல்ல.. அதுவந்து…” என்று பவித்ரா இழுக்க,
“என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும்.. நீ உன்னோட வாழ்க்கையை மட்டும் பாரு. புரிஞ்சுதா?” என்று பழைய கண்டிப்பான குரலில் பேச, வழக்கம் போல பவித்ராவின் தலை சரி என்றே ஆடியது.
பலராமன் சொன்னதுபோலவே மாலை வந்து அழைத்துச் சென்றிட, காலையில் கிளம்பி வருகையில் இருந்த செழிப்பு இப்போது மனைவியிடம் இல்லை என்பதனை கண்டுகொண்டான்.
இரவு உறங்கப்போகும் போது, தானாகவே அது இதென்று பேசி பார்த்தான், ம்ம்ஹூம் பவித்ராவின் முகமும், மனதும் எதற்கும் தெளியவில்லை. ஒருவித குழப்பம் அவளை சூழ்ந்துகொண்டது.
சித்தப்பா நன்றாகவே இல்லை என்பது அப்பட்டமாய் விளங்க, இந்த வாழ்வு அவர் கொடுத்த ஒன்றுதானே, அப்போது அவரை எப்படியோ போ என்று விட்டுவிட்டு, நான் மட்டுமே எப்படி நிம்மதியாய் வாழ்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தாள்.
கணவன் தன்னை ஏக்கமாகவும், ஆசையாகவும் பார்ப்பது எல்லாம் கருத்தில் என்ன கண்ணில் கூட படவில்லை.