பலராமனுக்கோ கோபம் அப்படி இருந்தது. நேற்று ஒருநாள் சென்று வந்ததற்கே பவித்ரா முகத்தில் அப்படியொரு சோர்வு, குழப்பம் எல்லாம்.
இன்றுவேறு சென்றுவந்தால் அவ்வளவு தான் என்று தோன்ற, அங்கே மனோகர் வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டவன், உள்ளே கூட வராது அப்படியே பைக்கை கிளப்பிக்குகொண்டு கிளம்பிவிட்டான்.
பவித்ராவோ அதெல்லாம் உணரும் நிலையில் எல்லாம் இல்லை.
வேகமாய் வீட்டினுள் நுழைய, மனோகர் அங்கிருந்த திவானில் படுத்து இருந்தார்.
நெற்றி சுருங்கி, கண்களை மூடி இருக்க, அவர் உறங்கவில்லை என்று புரிந்தது. அதுவும் இந்த காலை பொழுதில் எல்லாம் அவர் இப்படி படுத்து அவள் பார்த்ததே இல்லை.
“இங்க பார் பவித்ரா, உனக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டேன்.. இனி அதுதான் உன்னோட வீடு, குடும்பம் எல்லாம்.. சும்மா சும்மா இங்க வந்து நிக்கக் கூடாது.. வரணும்னு தோணிச்சுன்னா, உன் புருசனோட வா போ.. அவ்வளோதான்.. அதுவும் என்னை கேட்டுட்டு, நான் சரின்னு சொன்னா மட்டும் தான்..” என்றான் பேச, பவித்ராவின் கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்து விட்டது.
“சித்தப்பா…” என்று பேச வாய் எடுத்தவளுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
“ம்ம்…” என்று கைகளை உயர்த்தி அவளை வாயை மூடச் செய்தவர்,
“கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பு. என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும்..” என, அவளுக்கோ விசும்பல் அதிகம் ஆனது.
எப்படி இருந்தவர், இப்போது சில நாட்களிலேயே உடல் மெலிந்து, முகம் வாடி இருப்பது மட்டுமே அவளுக்கு கருத்தில் பட, அவர் வைவது எல்லாம் பெரிதாகவே படவில்லை.
நன்றிகொண்ட மனம் அல்லவா..
ஏதேனும் கைம்மாறு செய்யவே எண்ணியது.
“என்ன பவித்ரா?!” என்றார் அதட்டி.
“எனக்கு மனசு கேட்கல சித்தப்பா…” என,
“ஏன்? அங்க உன்னை நல்லாத்தானே வச்சிருக்காங்க..?” என்றார்.
“அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை…” என்றவள் “உங்களை நினைச்சு தான்…” என, மனோகருக்கும் உள்ளம் கனிந்தது தான்.
இருந்தும் என்ன செய்ய?!
பெற்ற பிள்ளைகள், நாள் ஒன்றுக்கு ஒருமுறை கூட அழைத்து பேசுவது இல்லை. வளர்த்தவள், வளர்த்த பாசத்திற்கு வந்து நின்று கண்ணீர் வடிக்கிறாள்.
“ம்ம்…” என்று நெற்றி சுருக்கியவர்
“அதுக்கென்ன செய்ய முடியும் சொல்லு?” என,
“அது.. அதுவந்து சித்தப்பா.. தினமும் வந்து சமைச்சு வச்சிட்டு போகட்டுமா..” என்றாள் மீண்டும்.
அவரோ கடுங்கோபம் கொண்டு முறைக்க,
“இல்லை… சமையல் செய்றவங்க இப்படி லீவ் போட்டா எப்படி? ஹோட்டல் சாப்பாடும் உங்களுக்கு ஒத்துக்காது…”
“அதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும் பவித்ரா.. உனக்குத்தான் எல்லாம் தெரியுங்கிறது மாதிரி நடந்துக்காத…” என்று மனோகர் கத்த, பவித்ரா வாயடைத்துப் போனாள்.
“இங்க பார் இப்பவும் சொல்றேன்.. நீ இங்க வளர்ந்த அவ்வளோதான்.. இது உன்னோட சொந்த வீடில்லை. இனி உன் புருஷன் வீடுதான் உனக்கு.. கிளம்பு முதல்ல…” என்று சொல்ல, பவித்ராவோ மனதளவில் வெகுவாய் அடிவாங்கினாள்.
ஆனால் மனோகர் எதற்கு எப்படி பேசுவார் என்று அறியாதவளா அவள்?!
அதனால் “சித்தப்பா நீங்க என்னோட வாழ்க்கைல எதுவும் பிரச்னை வருமோன்னு நினைக்கிறீங்க.. அப்படில்லாம் எதுவும் ஆகாது.. போகணும்னு சொல்லவுமே அத்தை நல்லவிதமா தான் அனுப்பிவிட்டாங்க. அவங்களும் சொன்னா புரிஞ்சுக்கிற டைப் தான்…” என,
“ஓ..! கல்யாணம் ஆகிப்போன இந்த கொஞ்ச நாள்ல எல்லாமே உனக்கு புரிஞ்சு போச்சா..” என்று நக்கலாய் பேசியவர்,
பவித்ராவின் தலை தன்னப்போல் சரி என்று ஆட, மனோகர் அமைதியாகிவிட்டார்.
ஆனால் பவித்ரா சும்மா இருக்கவில்லை. வந்ததற்கு சமைத்துவிடலாம் என்று சமையல் செய்து வைத்துவிட்டுத் தான் கிளம்பினாள்.
அங்கே பலராமனோ, கோமதியிடம் அலைபேசியில் கோபமாய் பேசிக்கொண்டு இருந்தான்.
“டேய்… போகணும்னு கேக்குறா.. வேணாம்னு சொன்னா, நம்மளை மீறி போவா.. தேவையா இது.. நல்லபொண்ணு தான் டா… கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்…” என்று மகனுக்கு சொல்லிக்கொண்டு இருக்க,
பலராமனோ “ஆமா… அந்த வீட்ல யாருமே சரியில்லைம்மா.. எல்லாருமே சுயநலம்.. பவித்ரா சித்தப்பா மகனும் மகளும் பாரு, இதுநாள் வரைக்கும் ஒரு போன் போட்டு கூட இவளை எப்படி இருக்கன்னு விசாரிக்கலை.. பெத்தவரை கண்டுக்கிறதே இல்லை.. எனக்கென்னவோ பெரிய பிரச்னை வருமோன்னு தோணுது..”என,
“எது வந்தாலும் பார்த்துக்கலாம்.. இதுக்காக எல்லாம் நீ அவக்கிட்ட கோவிக்காத.. அன்பால தான் அரவணைச்சுப் போகணும்…” என்று கோமதி முடித்துக்கொள்ள, பவித்ரா சொன்ன நேரத்திற்கு முன்னரே வீடு வந்துவிட்டாள்.
“என்னம்மா வந்துட்ட?” என்று கோமதி கேட்க,
பவித்ரா, நடந்ததை மறைக்காது அப்படியே சொல்ல, “பெரியவர் நல்லதுக்குன்னு நினைச்சு உன்னை கோவிக்கிறார்…” என்று சமாதானம் செய்தார் மருமகளை.
“இல்ல அத்தை.. எனக்கு மனசே ஆரலை.. எப்படி இருந்த மனுஷன் தெரியுமா?” என்றவளுக்கு விசும்பல் வர,
“அடடா.. இதுக்கெல்லாம் அழலாம… சரி சொல்லு என்ன பண்ணலாம்…” என்றார் கோமதியும்..
“ஒன்னும் பண்ண முடியாது.. சமையல் காரம்மா நாளைக்கு வந்துடுவாங்களாம்.. போன் பண்ணாங்க.. அவங்க போன் நம்பர் நான் வாங்கிட்டு வந்திருக்கேன்… வாரத்துல ரெண்டு நாலாவது போய் பார்த்துட்டு மட்டும் வரட்டுமா?” என்றாள் பாவமாய்.
இப்படி இளகிய மனதுடன் பேசும் மருமகளின் வார்த்தைகளை மறுத்து பேச கோமதியால் முடியவில்லை.
“சரிம்மா.. அடுத்து போறப்போ நானும் வர்றேன்…” என்று முடித்துவிட்டார்.
ஆனாலும் பவித்ராவின் மனம் அமைதியடையவே இல்லை.
சித்தப்பாவின் அந்த ஓய்ந்து போன தோற்றமே அவள் கண் முன் வந்தது.
இப்படியே விட்டால், நிச்சயம் உடல் நலம் கெட்டுவிடும் என்று வருந்தினாள்.
அந்த வருத்தத்தை அப்படியே கணவனிடமும் சொல்ல, அவனும் அவனுக்குத் தெரிந்த வகையில் ஆறுதல் சொல்ல, எந்த பலனும் இல்லை.
பவித்ரா எதோ யோசனையிலேயே இருப்பது போல் தோன்ற,
“பவி…” என்றான் கேள்வியாய்.
“ம்ம்…” என்று அவனைப் பார்க்க,
“என்ன யோசனை?”
“இல்லை அக்காக்கிட்டயும், அண்ணன் கிட்டயும் பேசலாம்னு…” எனும்போதே பலராமனுக்கு கோபம் வந்துவிட்டது.
அவன் முகம் மாறியது புரிந்தாலும், “ஒருதடவை…” என்றாள் பாவமாய்.
“ஒருதடவை உன்னோட அவங்க பேசினாங்களா? எப்படி இருக்கன்னு கூட கேட்கலை…” என்றான்.
“அவங்க எப்பவுமே கேட்டது இல்லை…”
“எப்பவுமேங்கிறது வேற, இப்போ கல்யாணம் ஆகி புது இடத்துல இருக்க, ஒருவார்த்தை பேசக் கூட முடியாதா? அப்படியா நேரமில்லை…” என்று கடிந்தான்.
“நான் அவங்களோட ஆசைப்பட்டு பேசணும்னு சொல்லலை.. சித்தப்பா நிலைமையை எடுத்துச் சொல்லத்தான்..” என்றாள்.
“ஏன் அவங்க எல்லாம் அவரோடவும் பேசுறது இல்லையா? பெத்தவர் தானே.. ஒண்டியா இருக்கார் தானே.. எப்படி இருக்கார்னு கூட கேட்க மாட்டாங்களா…” என்று அவன்பாட்டில் பொரிய, பவித்ராவிற்கோ அச்சமாய் போனது.
சின்ன விஷயம்.. இதற்கு போய் இப்படி கோபிப்பதா என்று.
அவள் மௌனமாய் இருக்க,
“சொல்லு பவித்ரா… கல்யணம் பண்ணி அங்க போனோமே, நம்மளை எப்படி நடத்துனாங்க… என்னோட ஒருவார்த்தை கூட பேசலை.. அந்த இடத்துல எனக்கு எப்படி இருக்கும்..” என்று சத்தம் போட, பவித்ராவோ எதுவும் சொல்லாமல் கண்ணீர் உகுக்க,
“ஆமா இதொண்ணு எப்போ பாரு… ச்சே…” என்று தலையணையை தூக்கி எறிந்தவன்
“பேசு.. பேசித் தொலை…” என்று அவனின் அலைபேசியை எடுத்து அவள் பக்கம் வீசினான்.
பவித்ராவிற்கும் பட்டென்று கோபம் வந்துவிட்டது.
“என்ன பண்றீங்க நீங்க?” என்று அவளும் குரலை உயர்த்த,
“என்ன பண்ணிட்டேன்?” என்றான் அவனும் வேகமாய்.
“நான் என்ன சொல்றேன்னு புரியாம இப்படி தூக்கி வீசுறீங்க… எங்க சித்தப்பா இல்லைன்னா, இந்நேரம் நான் இல்லை.. அந்த நன்றி எனக்கு எப்பவும் இருக்கும்.. அவருக்கு முடியலைன்னு தோணுது. அதை அவர் பிள்ளைங்கக் கிட்ட முறையா சொல்ற கடமை எனக்கு இருக்கு.” என,
“ஓ..! செய் ம்மா… நல்லா செய்.. உன் கடமையை நல்லா செய்…” என்றவன் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.