பவித்ர(ரா)ம் – 7
பவித்ராவிற்கு தன்னை ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்ற கோபம். சித்தப்பாவும் சரி, இப்போது பலராமனும் சரி.
சிறு வயதில் இருந்து வளர்த்தவர் தானே..
இப்போது கூட கொஞ்சமேனும் தன்னிடம் அனுசரணையாய் நடந்துகொள்ள கூடாதா என்ற ஆதங்கம் இருக்கவே செய்தது.
அவரே அப்படியெனில், இதோ திருமணம் ஆகி சில தினங்கள் தான் ஆகியிருக்கிறது, கணவனிடம் எப்படி புரிதலையும் அனுசரணையையும் எதிர்பார்ப்பது?!
கோபம், எரிச்சல், ஆற்றாமை எல்லாம் ஒருசேர வந்து அவளைப் போட்டு அழுத்த, கண்ணில் நீரோ தன்னைப்பாட்டில் சுரக்க, சித்தப்பாவின் நிலையை எப்படியேனும் அவர் பிள்ளைகளிடம் சொல்லித்தான் ஆகிடவேண்டும் என்ற உறுதியோடு, நேத்ரனுக்கு அழைத்தாள்.
பலராமனின் எண்ணெல்லாம் அவனிடம் இருந்தால் தானே.
வாட்ஸ் அப் கால் தான் செய்தாள்.
முதலில் இருமுறை எடுக்கவே இல்லை. பின் எடுத்து “ஹெலோ…” என்று கோபமாய் பேச,
“அண்ணா நான் தான் பவித்ரா…” என்றாள் வேகமாய்.
இதுநாள் வரைக்கும் இப்படி அழைத்தது இல்லை அல்லவா?! அதனால், “நீயா? என்ன பவித்ரா?” என்றான் கடமைக்கு.
“அண்ணா… சாரி.. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என,
“ம்ம்ச்.. என்ன விஷயம் பவித்ரா?” என்றான்.
ஒருவார்த்தை கூட எப்படி இருக்கிறாய் என்று கேட்கவில்லை.
“அது அண்ணா சித்தப்பாக்கு முடியலை போல..” என,
“என்ன? என்ன சொல்ற? அப்பாக்கு முடியலையா? இப்போதானே பத்து நிமிஷம் முன்ன பேசினேன்.. நல்லாத்தானே பேசினார்…” என்று படபடக்க,
பவித்ரா சுறுக்கமாய் நடந்ததைச் சொல்ல,
“ப்பூ… இவ்வளோதானா… லூசு.. நான் என்னவோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.. இதெல்லாம் சகஜம் தான்.. ஆரம்பத்துல இப்படித்தான் இருக்கும் போக போக சரியாகிடும்..”என, பவித்ராவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“அதுக்கில்ல ண்ணா…” என்று தயங்க,
“இங்க பாரு பவித்ரா.. இப்போ அவருக்கு முடியலைன்னே வை, என்னால என்ன செய்ய முடியும். இப்போதான் உன் கல்யாணத்துக்கு வந்துட்டு வந்தோம்.. உடனே வர முடியுமா என்ன? சொல்லு.. முடிஞ்சா நீயே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வா.. அவரைப் பார்த்துக்கிற பொறுப்பு எங்களுக்கு மட்டுமா இருக்கு? உனக்கும் தானே இருக்கு…” என, பவித்ராவிற்கு கண்ணில் நீர் நிற்காமல் சுரந்தது.
“ஹலோ…”
“சொல்லுங்கண்ணா…”
“என்ன அழுகையா? எதுக்கு அழற? உனக்கும் பொறுப்பு இருக்குன்னு சொன்னதுனாலயா?” என்றான் கோவமாய்.
“நான் செய்யமாட்டேன்னா சொல்றேன்.. அங்க போனாலே சித்தப்பா திட்டுறார்..” என்றாள் பாவமாய்.
“சரிவிடு நான் பேசிக்கிறேன்…” என்றவன் வைத்துவிட்டான்.
மனது ஆறவே இல்லை பவித்ராவிற்கு..
என்ன பிள்ளை இவன்?!
எனக்கு பதறுவது கூடவா இவனுக்கு பதறவில்லை..
“ச்சே…” என்று இருக்க, சொப்னாவிடம் பேசினால் கூட இதற்கு ஒரு வழி பிறக்கும் என்று அடுத்து அவளுக்கு அழைக்க, எல்லாம் ஒன்றாகத்தான் இருந்திருப்பார்கள் போல,
சொப்னா, அழைத்ததுமே எடுத்தவள் “நான் இங்க அண்ணன் வீட்ல தான் இருக்கேன்.. எல்லாம் தெரியும்..” என்று முடித்தவள்,
“நாங்க பேசிக்கிறோம்.. நீ அடிக்கடி போய் பார்த்துக்கோ. எங்களுக்கு செஞ்சதை விட எங்கப்பா உனக்குத்தான் அதிகம் பண்ணிருக்கார். நன்றி இருக்கணும் உனக்கு மனசுல. ஏதாவது தேவைன்னா சொல்லு பணம் போட்டு விடுறோம்…” என்று சொப்னா பேச, அப்படியே கன்னம் கன்னமாய் அறைவிட வேண்டும் போல் இருந்தது பவித்ராவிற்கு.
“என்ன அமைதியா இருக்க?” என,
“இல்லைக்கா நான் பார்த்துக்கிறேன்…” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அப்படியொரு அழுகை பவித்ராவிற்கு வந்தது.
ச்சே என்ன மனிதர்கள் இவர்கள். பணம் போட்டு விடுகிறார்களாம் பணம்.. யாருக்கு வேண்டும் இவர்களது பணம்.. நன்றியோடு இருக்கவேண்டுமாம். அந்த நன்றியும் பாசமும் இவர்களுக்கு இருக்கிறதா முதலில் என்று கத்தவேண்டும் போல் இருக்க, கேவல் வெடித்தது.
பலராமனோ முயன்று தன் மனதினை சமன் செய்து, பவித்ராவிடம் தான் நடந்துகொண்ட விதம் சரியில்லை என்பதை உணர்ந்து, அவளிடம் சமாதானமாய் போகவேண்டும் என்று எண்ணி அறைக்குள் வர, அவன் கண்டது என்னவோ, முகத்தை மூடிக்கொண்டு, சுவரில் சாய்ந்து அமர்ந்து அழுதுகொண்டு இருந்த பவித்ராவைத் தான்.
“ஏய் பவித்ரா…” என்று அருகே வர, அவளுக்கோ மேலும் அழுகை பிறந்தது.
“என்னாச்சும்மா?!” என்று அவளின் தோளைத் தொட, மேலும் மேலும் விசும்பினாள்.
“பவித்ரா.. பவி…” என்று அவளை உலுக்க, மெதுவாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னாச்சு?” என்றவனின் முகத்தில் நிஜமான கனிவும் பதற்றமும்.
மனோகரின் மக்கள் பேசியதை அழுகையினூடே சொல்ல, “இப்படித்தான் சொல்லுவாங்கன்னு எனக்கு முன்னமே தெரியும்.. அதனாலத்தான் உன்னை பேசவேணாம் சொன்னேன்..” என்றவன்,
“அழாத…” என்று அவளது கன்னம் துடைத்தவனுக்கு, அவள் அப்படி அமர்ந்து அழுத விதம் மனதை என்னவோ செய்தது.
“என்னால முடியலை..” என்றாள்.
“என்ன பண்றது.. அவங்க அப்படி பேசினா நீ அழனுமா என்ன?” என்று சமாதானம் செய்ய,
“நான் நன்றியோட நடந்துக்கனுமாம்…” என்று மேலும் விசும்பினாள்.
“நீ சரியா தான் நடந்துக்கிற பவித்ரா…” என்றவன்,
“சரி.. ஒன்னு பண்ணலாம். நாளைக்கு நானும் வர்றேன்.. போய் உங்க சித்தப்பாக்கிட்ட பேசலாம்.. கொஞ்ச நாள் இங்க வந்து இருக்க சொல்லலாமா…” என்று கேட்க, அப்படியே அவளின் அழுகை நின்று,
‘நிஜமா?!’ என்பது போல் பார்த்தாள்.
“ஆமா…” என்று உறுதியாய் பலராமன் பேச,
“அத்தை எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்றாள் தயக்கமாய்.
“அம்மாக்கிட்ட எடுத்து சொன்னா புரிஞ்சு நடந்துப்பாங்க…” என்றவன் “ஆனா உன் சித்தப்பா வருவாரா?” என்றான்.
மீண்டும் அவளின் முகம் சுணக்கம் கொண்டது.
“கஷ்டம் தான் இல்லையா?” என, பவித்ராவின் தலை ஆம் என்று ஆட,
“பேசி பார்க்கலாம் பவி.. உன்னோட சைட் என்ன பண்ண முடியுமோ அதை நம்ம பண்ணலாம். அதுக்காக நீ இப்படி அழுதுட்டு, குழப்பமா முகம் வச்சிட்டு இதெல்லாம் நல்ல இல்லை..” என, கணவனின் வார்த்தைகள் அவளுக்கு அப்படியொரு தெம்பினை கொடுக்க,
“சாரி…” என்றாள் வேகமாய் முகம் துடைத்து.
“சாரி எல்லாம் வேண்டாம்.. நமக்கு இப்போதான் புதுசா கல்யாணம் ஆகிருக்கு. அதுக்கான சின்ன செழிப்பு கூட உன் முகத்துல தெரியலை அப்படின்னா எனக்கு எத்தனை கஷ்டமா இருக்கும் சொல்லு.. நம்ம வாழ்க்கை இது.. சில தருணங்களும், நிகழ்வுகளும் காலத்துக்கும் நம்ம மனசுல நிக்கணும்.. அப்படியான சூழ்நிலைல நீ இப்படி இருந்தா பாக்குற எல்லாரும் என்னைத்தான் தப்பா நினைப்பாங்க…” என்று பொறுமையாகவே பேச,
‘ஆமால்ல…’ என்று அவளே எண்ணிக்கொண்டாள்.
“ம்ம்ச்.. நான் வேற யோசிக்கவே இல்லையா.. அதான்…” என்றவள்,
“இனி சரியா நடந்துக்கிறேன்…” என்றாள் பாவமாய்.
“நீ தப்பா எல்லாம் நடந்துக்கல…” என்று அவள் கேசம் வருடியவன்,
“பசிக்குது.. என்ன டிபன்…” என்று பேச்சினை மாற்ற,
“அச்சோ அதையும் மறந்து போனேன்…” என்று வேகமாய் எழ, அவனுக்கோ மனதினில் ‘அப்பாடி…’ என்ற உணர்வு.
பவித்ரா வேகமாய் அடுப்படிக்குள் நுழைய, அங்கே கோமதி சமைத்துக்கொண்டு இருந்தார்.
“என்ன அத்தை என்னை கூப்பிட்டு இருக்கலாம் தானே…” என்றாள் பதறி.
“எனக்கு முடியலைன்னா உன்னைக் கூப்பிடலாம்.. நல்லா இருக்கும்போது நானே செய்றதுல தப்பில்லை…” என்றவர்
“அவனுக்கு ராத்திரி சுடு சோறும் கருவாடு குழம்பும்னா ரொம்ப பிடிக்கும்.. அதான் நானே செய்யலாம்னு செஞ்சேன்..” என, மனதிற்குள் குறித்துக்கொண்டாள்.
அன்றைய இரவு உணவும் சரி, அவர்களின் உறவும் சரி இருவர் மனதிற்குமே இனிமையை கொடுக்க, பவித்ராவிற்கு பலராமனை மேலும் மேலும் பிடிக்கத் தொடங்கியது.
மறுநாள் சொன்னதுபோலவே, பலராமன் பவித்ராவை மனோகர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான். மனோகர் பவித்ராவை ஒரு கண்டனப் பார்வை பார்த்தவர், மருமகனிடம் நல்லமுறையில் தான் பேசினார்.
வீட்டில் சமையல் ஆள் வந்து சமைத்துக்கொண்டு இருக்க, பவித்ராவிற்கு ஒருவித நிம்மதி.
“அதுங்க மாமா.. பவித்ரா ரொம்ப வருத்தப்படுது…” என்று பேசிக்கொண்டு இருந்தான்.
“வருத்தப்பட என்ன இருக்கு மாப்ள… நான் நல்லாத்தான் இருக்கேன்.. எனக்கே முடியலைன்னா நானே சொல்லப் போறேன்…” என்று மழுப்பினார்.
“நீங்க சொல்றீங்க மாமா.. அவ மனசு கேட்கணும் இல்லையா…”
“அதுக்கொண்ணும் பண்ண முடியாதுங்க…” என,
“கொஞ்ச நாள் வந்து எங்க வீட்ல தங்கலாம் இல்லையா மாமா.. அவளுக்கும் மனசு லேசாகிடும்…” என்று பலராமன் அழைப்பு விடுக்க, அவர் முகம் பட்டென்று பவித்ராவின் முகத்தை தொட்டு மீள,
“இல்லை இல்லை.. பவித்ரா ஏதும் சொல்லலை.. நான் தான் சொல்றேன்…” என்று பலராமன் சொல்ல,
“நான் நல்லாத்தான் இருக்கேன்..” என்று உறுதியாய் சொன்னார்.
‘இதற்கு மேல் நான் என்ன செய்ய…’ என்பதுபோல் மனைவியைப் பார்த்தான் பலராமன்.
பவித்ராவும் கையை பிசைய “மாப்ள.. இவளுக்கு சொன்னாலும் புரியாது.. ஆனா உங்களுக்கு அப்படியில்லை.. புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நல்லாத்தான் இருக்கேன். என்ன தனியா இருக்கிறது ஒருமாதிரி இருக்கு அவ்வளோதான். அதுகூட இதோ இப்போ டூர் க்ளப்… வாக்கிங் க்ளப் அது இதுன்னு நிறைய இருக்கே.. என் பழைய பிரண்ட்ஸ் கூட எல்லாம் பேசிட்டு இருக்கேன்…” என்று சொல்ல, பலராமனுக்கும் அவர் சொல்வது புரிய, பவித்ரா பாவமாய் இருவரையும் பார்த்து வைத்தாள்.
“ஓ..! அப்போன்னா சரிதாங்க மாமா…” என்றவன் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு எழுந்துகொள்ள, பவித்ராவும் அவனோடு கிளம்பவேண்டி இருந்தது.
மனோகர் பவித்ராவிடம் “புத்தியோட வாழப் பார்…” என்றுமட்டும் சொல்லி அனுப்ப, மீண்டும் அவள் விழிகளில் கண்ணீர் திரை.
வீட்டிற்கு வந்ததுமே கோமதி கேட்டார் “என்னப்பா அவர் வரலையா?” என்று.
“எதிர்பார்த்தது தானே மா.. அவர் சொல்றதைப் பார்த்தா நல்லாத்தான் இருக்கார். இவதான் தேவையில்லாம மனசை போட்டு அலட்டிக்கிறா…” என்று சொல்ல, பவித்ரா தலையை குனிந்து அமைதியாய் நின்று இருந்தாள்.
“பவித்ரா நீதான் உன்னை சரி செஞ்சுக்கணும்.. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குதானே.. உங்களுக்கு பிள்ளைன்னு வந்தா, அதை பார்த்து அவரும் சரியாகிடுவார்…” என்று கோமதி பேச்சு வாக்கில் அடுத்த கட்டத்திற்கு அவர்களை நகர்த்த எண்ணி பேச,
பவித்ராவிற்கு பக்கென்று இருந்தது.
பிரசவம், குழந்தை வளர்ப்பு இதெல்லாம் சாதாரணம் இல்லையே..
அம்மா வீடு.. அம்மாவின் சமையல்.. அம்மாவின் கவனிப்பு என்று எத்தனை இருக்கும் பெண்களுக்கு.
ஆனால் அவளுக்கு அம்மாவே இல்லையே…
கண்களை இறுக மூடித் திறந்தாள்.
கோமதி என்ன கண்டாரோ “எனக்கென்ன பொம்பள பிள்ளையா இருக்கு.. நீதானே இருக்க.. நானே எல்லாம் செய்வேன்..” என்றுவிட்டு போக, ஒருவிதமான மன அழுத்தம் அவளுக்கு கூடத்தான் செய்தது.
சில நாட்கள் தானே ஆகி இருக்கிறது. உடனே குழந்தையை எதிர்பார்க்கிறார்களா என்ற எண்ணம்.
அதை கணவனிடம் தனிமையில் சொல்லவும் செய்தாள்.
“இப்போவே குழந்தை வேணுமா?” என்று.
“வேணும்னு சொன்னா, இப்போ உடனே வந்திடுமா என்ன?” என்று அவன் ஹாஸ்யம் போலக் கேட்க ,
“அச்சோ அப்படியில்லைங்க.. அத்தை சொன்னாங்க இல்லையா.. அதான்…” என்று இழுக்க,
“கல்யாணம்னு ஒன்னு ஆனா, அடுத்து எல்லாம் சொல்றது குழந்தை தானே. அதைத்தான் அம்மாவும் சொன்னாங்க.. நீ ப்ரீயா விடு. முதல்ல இப்படி சின்ன சின்ன சங்கதிகளை எல்லாம் மண்டைக்குள்ள எத்தி குழப்பிக்கிறத்தை விடு…” என்றவனுக்கும் சிறு எரிச்சல்.
இப்படி அனைத்திற்குமே இவளை சமாதானம் செய்தே காலம் நகர்த்த வேண்டுமா என்று.
‘கடவுளே எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடு…’ என்று எண்ணியபடி உறங்கினான்..
ஆனால் கடவுளுக்கு எங்கள் நிம்மதியை கெடு என்று கேட்டிருக்கிறதோ என்னவோ, மறுநாள் காலையில் அழைப்பு வந்தது, மனோகர் வீட்டினில் விழுந்து கிடக்கிறார் என்று.