மனோகர், வீட்டில் சமையல் வேலை செய்ய வரும் அம்மா தான், பவித்ராவிற்கு அழைத்து, விசயத்தைச் சொல்லியிருந்தார்.
“நல்லாத்தான் ம்மா இருந்தாரு.. பேப்பர் படிச்சிட்டு எழுந்தாரு, திடீர்னு அப்படியே விழுந்துட்டாரு…“ என, முதலில் இவளுக்கு எதுவுமே விளங்கவில்லை.
“தோ வர்றோம்…” என்று சொல்ல,
“சீக்கிரம் வாங்க..” என்று வைக்க, வேகமாய் தான் இவர்கள் மூவருமே அங்கே சென்று இருந்தனர்.
அதற்குள் அங்கே அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து இருக்க, நல்லவேளை இவர்கள் செல்லவும், ஆம்புலன்ஸ் கிளம்பவும் சரியாய் இருந்தது.
பவித்ராவிற்கு ஒரே பதற்றம்.
பலராமனோ “ஒண்ணுமில்ல.. ப்ரெஷர் எதுவும் கூடியிருக்கும்…” என்று சொல்ல,
கோமதியோ “டாக்டர் கிட்ட போனா தெரிஞ்சிட போகுது…” என்று ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து ஆட்டோவில் செல்ல, மருத்துவமனையிலோ மருத்துவர் அனைத்து பரிசோதனைகள், வைத்தியங்கள் எல்லாம் முடித்து
“உயர் ரத்த அழுத்தத்துடன் கூடிய பக்கவாதம்.. இன்னும் சுய நினைவும் வரவில்லை…” என்றுவிட்டார்.
கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான்.
இனி அவரால் தனித்து செயல்படவும் முடியாது. தனித்து இருக்கவும் முடியாது. முறையான மருத்துவமும், கவனிப்பும் இருந்தால் குணமடையலாம். இல்லை இல்லாதும் போகலாம்.
மிகுந்த மன அழுத்தத்தால் வந்தது என்று மருத்துவர் கூற பவித்ராவிற்கு அப்படியொரு அழுகை வந்தது.
என்ன செய்வது என்று தெரியவில்லை.
மீண்டும் நேத்ரனுக்கு அழைத்து பேசினாள்.
“என்ன சொல்ற நீ? நல்லாத்தானே இருந்தார்…” என்று பதறித்தான் கேட்டான்.
பவித்ராவிற்கோ அப்படியொரு கோபம் வந்துவிட்டது.
“அவருக்கு என்னவோ சரியில்லைன்னு சொன்னேன் தானே.. யாராவது கொஞ்சமாவது கேட்டீங்களா.. இப்போ இப்படி ஆகிருச்சு அண்ணா…” என்று கடிந்தே பேச,
“நாங்க என்ன பண்ணோம்..?” என்றான் பட்டென்று.
“என்ன பண்ணல? இல்லை என்ன பண்ணல.. வயசாகிடுச்சு.. எப்படி தனியா இருப்பார்னு நினைச்சீங்களா? என் கல்யாணம் முடியவும் அவரையும் கூட கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் வச்சாவது அனுப்பிருக்கலாம் தானே.. எல்லாம் மொத்தமா கிளம்பிட்டோம்.. தனியா அவர் ரொம்ப மனக் கஷ்டப்பட்டு இருப்பார் போல…” எனும்போதே,
நேத்ரனின் மனைவி நிகிதா அலைபேசியை வாங்கி “நீ பேசுறது நல்லா இருக்கா பவித்ரா?” என்று கேட்டாள்.
“என்ன அண்ணி சொல்றீங்க?” என,
“பின்ன… உன்னோட கல்யாணத்துக்கு ஓடி ஓடி எல்லாம் செஞ்சார். அதிலேயே அவருக்கு முடியாம போயிருக்கும். அதான் இப்படி ஆகிருச்சு…” என்று அலட்டாமல் பவித்ராவின் தலையில் ஒரு இடியை இறக்க, பவித்ராவிற்கு பேரதிர்ச்சி.
“அண்ணி..!”
“ஆமா… நாங்க அங்க வந்திருக்கும்போதே கவனிச்சேன்… மாமா பழைய மாதிரி இல்லைன்னு…” என,
“அப்போ நீங்க அப்போவே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் ஒரு செக்கப் பண்ணிருக்கலாம் தானே…” என்றாள் ஆற்றாமையாய்.
“அவர் எங்கே எங்களை எல்லாம் கண்டுக்கிட்டார். எல்லாம் உன்னோட கல்யாண சிந்தனை மட்டும் தான் இருந்தது…” என,
“கூப்பிட்டதும் வந்துட்டு தான் மறுவேலை பார்த்திருப்பார்…” என்று நொடித்தவள்,
“இதோ சொப்னா அண்ணி பேசுறாங்க…” என,
‘ஓ! எல்லாம் ஒண்ணாத்தான் கொட்டம் போட்டுட்டு இருக்கீங்களா?’ என்று பவித்ராவால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
மருமகளின் பேச்சுத்தான் இப்படியெனில், மகளாவது ஆறுதலாய் பேசுவாள் என்று எண்ண,
அவளோ “பவி.. நாங்க உடனே வர முடியாது.. அப்படியே வந்தாலும் நானும் நேத்ரனும் தான் வரணும்.. பார்த்துக்கோ.. நான் மறுபடியும் சொல்றேன்.. கடமையும் பொறுப்பும் எங்களுக்கு மட்டுமில்லை. உனக்கும் தான் இருக்கு.. நாங்க வர்ற வரைக்கும் கூட இருந்து பார்த்துக்கோ.. வந்து பேசிக்கலாம்…” என்று ரத்தின சுறுக்கமாய் முடித்துவிட்டாள்.
பொத்தென்று அப்படியே அமர்ந்துவிட்டாள் பவித்ரா.
பலராமனும், கோமதியும் அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, பவித்ரா மௌனமாய் அமர்ந்திருந்தாள். என்ன செய்வது என்று எதுவும் விளங்கவில்லை. கடைசியில் என் திருமணத்திற்கு அலைந்ததில் தான் இப்படி ஆனது என்று சொல்கிறார்களே என்று சங்கடமாய் போனது.
ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்றும் மனது எண்ணியது.
அவளது சிந்தனையை கலைக்கும் விதமாய்,
“மேடம் இந்த மருந்தெல்லாம் வாங்கணும்.. பணம் ரிசப்ஷன்ல கட்டனும்…” என்று செவிலியர் வந்து சொல்ல,
“ஹா..!” என்றாள் அதிர்ந்து.
‘பணம்…’ அவசரத்தில் அவர்கள் எடுத்து வரவில்லை.
மனோகர் வீட்டினில் எங்கே பணம் வைத்திருப்பார் என்று தெரியும். வீடு சென்றுதான் எடுத்துவர வேண்டும். ஆனாலும் சிகிச்சை செய்யும் அளவிற்கு பணம் வீட்டினில் வைத்திருக்கிறாரா என்பது சந்தேகமே. பவித்ரா இதனைச் சொல்ல வாய் திறக்க, பலராமனோ “இங்க கொடுங்க…” என்று அவர் கொண்டுவந்த பில்லை வாங்கிக்கொள்ள,
“ஏங்க?” என்றாள் கேள்வியாய்.
“பார்த்துக்கலாம்…” என்றவன், மருந்தை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பணத்தையும் கட்டிவிட, அடுத்து கிட்டத்தட்ட பத்து நாட்களும் மருத்துவமனை வாசம்.
கோமதி ஒருவார்த்தை எதுவும் பேசவில்லை. வீட்டினில் இருந்து அவர்தான் சமைத்துக் கொடுத்து அனுப்பினார் பவித்ராவிற்கு. பலராமன் இரவு வந்து மருத்துவமனையில் தங்கிக்கொள்வான். காலையில் திரும்ப வீடு சென்று குளித்து, அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவினைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்வான், பவித்ரா மருத்துவமனையில் இருந்துகொள்வாள்.
அவளுக்கு நெருப்பில் நிற்பது போலிருந்தது. கோமதி ஒற்றை ஆளாய் எல்லாம் செய்கிறார் என்பதும், கணவன் இப்படி அலைகிறான் என்பதும் மனதை உறுத்தத்தான் செய்தது.
பத்து நாட்களும் இப்படித்தான் கடந்தது. எட்டாவது நாள் தான் சுய நினைவிற்கு வந்திருந்தார் மனோகர். ஆனாலும் பேச்சு வரவில்லை. பவித்ராவையும், பலராமனையும் அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்தார்.
பவித்ரா மௌனமாய் கண்ணீர் சிந்த, பலராமனோ “ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா.. எல்லாம் சரியாகிடும்…” என்று சமாதானம் சொல்ல, எதுவும் முகத்தில் காட்டாமல் கண்களை மூடிக்கொண்டார்.
வந்தார்கள், நேத்ரனும், சொப்னாவும் பதினோராவது நாள். சொப்னாவிற்கு அப்பாவைக் கண்டதும் எங்கிருந்து அப்படியொரு அழுகை வந்ததோ தெரியவில்லை.
நேத்ரனோ “ப்பா ஏன் ப்பா இப்படி…” என்று வருந்தி பேச, பவித்ரா வெறும் பார்வையாளராய் மட்டுமே அங்கிருந்தாள்.
மகனும் மகளும் வந்ததும் மனோகர் முகத்தில் ஒரு தனி தெளிவு தெரிந்தது தான். அதனைக் கண்டுகொண்ட பலராமன் “பவி… உங்க அண்ணன் அக்கா வந்திருக்காங்க தானே.. இனிமே அவங்க பார்த்துப்பாங்க.. நீ வீட்டுக்குக் கிளம்பு…” என்று சொல்ல, பவித்ராவிற்கு திடுக்கென்று ஆனது.
தயங்கி அவனைப்பார்க்க “என்ன பாக்குற… அவங்க பிள்ளைங்க வந்துட்டாங்க தானே.. நீயும் இத்தனை நாள் இங்க இருந்த.. உனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். அம்மாவும் ஒரு ஆளா இத்தனை நாள் எல்லாம் பண்ணாங்க தானே.. நீ வீட்டுக்கு வந்து முதல்ல நல்லா தூங்கி எந்திரி..” என்று அழைக்க, அவளுக்கோ மனதே இல்லை கிளம்ப,
இது வேலைக்கு ஆகாது என்று எண்ணியவன் நேத்ரனிடம் “நாங்க கிளம்புறோம்.. பார்த்துக்கோங்க.. பவித்ராவை கூட்டிட்டு போறேன்..” என்று சொல்லி, மற்ற விபரங்களையும் சொல்ல,
சொப்னாவோ “என்னது கிளம்புறீங்களா? என்ன பவி?” என்றாள் அதிர்ந்து.
“அக்கா.. அது…” என்று பவித்ரா தயங்க,
“எங்களுக்கு என்னத் தெரியும்? டாக்டர் வந்து எதுவும் கேட்டா கூட ஒன்னும் புரியாது.. அதுவுமில்லாம எங்களுக்கு ஜெட்லாக் வேற.. நல்ல தூக்கமும் இல்லை..” என்று ஆரம்பிக்க,
பலராமன் “பவித்ரா கூட இத்தனை நாளா நல்லாத் தூங்கல..” என்றான் பட்டென்று.
நேத்ரனோ “இருக்கட்டும் பலராமன்.. இன்னிக்கு ஒருநாள் இங்க இருங்க.. வீட்ல போய் எல்லாம் சரி பண்ணனும்.. ஒருசில பார்மாலிடீஸ் வேற இருக்கு..” என்று பேச, பலராமன் வேண்டா வெறுப்பாய் சரி என்றான்.
“நம்ம செய்யணும் தான் இல்லைன்னு சொல்லலை.. அவளுக்கு அப்பா ஸ்தானத்துல அவர்தான் இருக்கார். ஆனாலும் சொந்த பிள்ளைகளுக்கும் பொறுப்பு இருக்கனுமா இல்லையா… இப்படியே போச்சுன்னா உங்க வாழ்க்கை தான் சிக்கல் ஆகும்…” என்று வருந்தியவர்,
“நீயும் கொஞ்சம் பொறுமையா போ…” என,
“இதுக்கு மேல என்ன பொறுமையா போறதும்மா..” என்றான்.
“பவித்ராவுக்காக பார்க்கணும் இல்லையா..”
“ஆமாம்மா…” என்றான் சலிப்பாய்.
“உன்னோட கஷ்டம் எனக்குப் புரியுது பலராமா.. அவளும் என்ன செய்வா?”
“ம்மா… புருஷன், வீடுன்னு அவளுக்கும் கொஞ்சமாவது எண்ணம் இருக்கணும். அது இருக்கிறது போல தெரியலை.. வீட்டுக்கு வா அப்படின்னு சொன்னா, முழிக்கிறா..” என்று பேசியவனுக்கு எரிச்சல் மறையவே இல்லை.
இருந்திருந்து திருமணம் நடந்து, மனைவியோடு மகிழ்ச்சியாய் வாழ்கையை தொடங்கிய தருணத்திலா இப்படி நடந்திட வேண்டும் என்று வருத்தம் இருந்தது. பவித்ராவிற்கு தன்னைப் பற்றிய சிந்தனை சிறிதாவது இருக்கிறதா என்றே அவனுக்குத் தெரியவில்லை.
ஏனெனில் இத்தனை நாள் மருத்துவமனை வாசத்தில், ஒருநாள் கூட அவனோடு அவள் சகஜமாய் பேசவே இல்லை. இரவு உணவு எடுத்து வருபவன், அவளோடு உண்டு அங்கே தானே உறங்குகிறான். அப்போதும் கூட அவள் ஒருவார்த்தை பேசுவது இல்லை.
எப்போது பார்த்தாலும் ஒரே சிந்தனை மயம் தான்.
அங்கே பவித்ராவை சொப்னா நன்கு பிடித்துக்கொண்டாள்.
“நீ இல்லைன்னா நினைக்கவே முடியலை பவி.. நல்லவேளை நீ இத்தனை நாள் பார்த்துக்கிட்டே.. இங்க பார் பவி, நான் சொல்றதைக் கேளு.. டிஸ்சார்ஜ் பண்ணவும் நீயும் அப்பாவோட நம்ம வீட்டுக்கே போ.. எப்படியாவது பேசி உன் வீட்டுக்காரரை கூட வர வச்சிடு…” என்று மூளை சலவை செய்துகொண்டு இருந்தாள்.
பவித்ராவிற்கு அத்தனை நாள் இருந்த குழப்பத்திற்கு சட்டென்று ஒரு தீர்வு கிடைத்தது போல் இருந்தது.
ஆம்..! இத்தனை நாளும், டிஸ்சார்ஜ் செய்தால் என்ன செய்வது என்பதிலேயே தான் உழன்று கொண்டு இருந்தாள்.
தனியே மனோகரை விடவும் முடியாது. தங்களோடு அழைத்தால் வரவும் மாட்டார். அதுவும் அந்த வீட்டினில் சௌகர்யம் போதாது. இப்போது சொப்னா இப்படி சொல்லவும், சடுதியாய் ஒரு நிம்மதியும் அமைதியும் அவளுக்கு.
அப்படித்தான் செய்யலாமே..
தான் போய் கூட இருப்போம்.. பலராமன் வேண்டுமானால் உடன் வந்து இருக்கட்டும் சிறிது நாட்களுக்கு.. இல்லை கோமதியும் தான் வரட்டுமே.. என்ன மூழ்கி விடப் போகிறது என்று எண்ணினாள்.
அதற்கு சொப்னாவும் நன்கு தூபம் போட்டாள்.
“நீயே நினைச்சு பாரு பவி.. அப்பா நம்ம வீட்லனா நிம்மதியா இருப்பார். இந்த நிலைமைல எங்களோட கூட்டிட்டும் போக முடியாது. கூட இருந்து பார்த்துக்கிற மாதிரி யாரையும் போடலாம் அப்படின்னாலும், கூட வீட்டு ஆளுங்கன்னு யாராவது இருக்கணும். நீ கூட இருந்து பார்த்துக்கிறது போல வருமா? நாங்களும் எத்தனை நாள் இங்க இருக்க முடியும் சொல்லு.. உனக்கும் அவர்க்கு செய்ற கடமையும் பொறுப்பும் இருக்கு தானே..
அப்பா இல்லைன்னா, இந்நேரம் உன்னோட நிலைமையை நினைச்சு பாரேன்.. உன் புருசனும் நல்ல டைப்பா தான் தெரியுறார்.. இங்க வந்து உன்னோட இருக்கச் சொல்லு. நம்ம வீட்ல என்ன வசதி இல்லை.. பணம் போதாதுன்னாலும், நானும் அண்ணாவும் அனுப்புறோம்.. உனக்கும் தனியா வேணும்னாலும் அனுப்பறோம்..” என்று பேச பேச, பலராமன் பவித்ரா வாழ்வில் விதி தன் காலடியை எடுத்து வைக்கத் தொடங்கியது.