பலராமன் என்ன சொல்லியும் பவித்ரா கேட்பதாய் இல்லை. கோமதியும் முடிந்தமட்டும் பொறுமையாகவே சொல்லிப் பார்த்தார்.
எந்தவித பயனும் இல்லை.
இதோ மனோகரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அவரை கவனித்துக்கொள்ள ஒரு நர்ஸ் வேறு. சொப்னாவும், நேத்ரனும் அங்கேதான் இருந்தார்கள்.
பவித்ராவை வற்புறுத்தித் தான் பலராமன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். வந்ததில் இருந்தே அங்கே செல்ல வேண்டும் என்பது மட்டும் தான் அவள் பேச்சாய் இருந்தது.
“என்ன இந்த பெண்…” என்று கோமதிக்குக் கூட எரிச்சல் வந்தது.
அதனை தன் ஒதுக்கத்தில் காட்டிக்கொண்டார்.
மகனிடம் “நீயே பேசிக்கோ…” என்று சொல்லிவிட்டார்.
அறையில் நுழைந்ததுமே பலராமன் கேட்ட முதல் கேள்வி “நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு நியாபகம் இருக்கா பவி..” என்பதுதான்.
மலங்க மலங்க விழித்தாள் பவித்ரா.
“வீட்டுக்குக் கூப்பிட்டா அப்படி யோசிக்கிற நீ?” என,
“இல்ல.. அது.. சித்தப்பா…” என்று தயங்க,
“அவரை இப்போ பார்த்துக்க அவர் பிள்ளைங்க இருக்காங்க.. கூடவே ஒரு நர்ஸ் வேற.. நம்ம வீட்டுக்கு நீ வந்து எத்தனை நாள் ஆச்சு.. அக்கம் பக்கம் இருக்கவங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க…” என்று பேச,
“நடந்ததைச் சொல்ல வேண்டியது தானே…” என்றாள் பட்டென்று.
அவனோ, ஒருநொடி அமைதியாய் அவள் முகம் பார்க்க, பவித்ராவோ “என்னங்க…” என்றாள் புரியாமல்.
“என்னை கொஞ்சமாவது யோசிச்சியா?” என்று அவன் கேட்ட தொனியில் அத்தனை ஏக்கம்.
இவள் ஏன் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறாள் என்று.
பவித்ராவோ எச்சில் விழுங்கினாள்.
“சொல்லு பவி… என்னை யோசிச்சியா நீ?” என,
“இப்போ ஏன் இப்படி பேசுறீங்க..?” என்றாள் இமைகளை படபடவென அடித்து.
“இப்போ பேச்சாம? வேற எப்போ பேச? நீ வந்திருக்கிறதே இப்போதான். அதுவும் அவ்வளோ கம்பல் பண்ணி..” என்று எரிந்து விழ,
“இங்க பாருங்க… நீங்க பேசுறது சரியா.. இத்தனை நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தோம்.. வீட்டுக்கு அனுப்பும்போது, விட்டுட்டு கூட வரலைன்னா எப்படி.. என்னை இழுத்துட்டு வந்துட்டீங்க…” என்று அவளும் கொஞ்சம் காட்டமாகவே பேச,
“என்னது இழுத்துட்டு வந்துட்டேனா?” என்று கண்களை இடுக்கிக் கேட்டவன்,
“என்ன பாக்குற நீ…? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? இல்லை எங்கம்மாவைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்றான்.
பவித்ராவிடம் பதிலே இல்லை.
“சொல்லு பவித்ரா.. இத்தனை நாளும் நானோ, எங்கம்மாவோ எதுவும் சொன்னோமா இல்லைதானே.. இன்னிக்கு அவர் பிள்ளைங்க வந்திருக்காங்க.. அவங்களுக்குத்தான் முதல் பொறுப்பும் கடமையும்..” என்று பேசி முடிக்கவில்லை.
“அவங்களுக்கு மட்டும் இல்லை. எனக்கும் தான் இருக்கு…” என்றாள் பட்டென்று.
எங்கிருந்து தான் அவளுக்கு அத்தனை தைரியம் வந்ததோ தெரியவில்லை.
“உனக்கும் இருக்குதான். ஆனா பெத்த பிள்ளைங்க அவங்க பொறுப்பை தட்டிக்கழிச்சு உன் தலையில கட்டப்பாக்குறாங்க.. அது உனக்குப் புரியலையா.. அதுக்கும் மேல உனக்கு என்னோடவும் கடமையும் பொறுப்பும் இருக்கு..” என்று அவளுக்கு மேலே பலராமன் சப்தமிட, பவித்ரா விக்கித்துப் பார்த்தாள்.
மகனின் பேச்சு சத்தம் கேட்டு கோமதியும் உள்ளே வந்துவிட்டார்.
“ஆமா.. நான் தான் பார்த்துக்கணும்…” அழுத்தம் திருத்தமாய் ஒலித்தது பவித்ராவின் குரல்.
“என்னம்மா சொல்ற? நீ எப்படி அங்க போய் இருந்து பார்த்துப்ப.. இல்ல அன்னிக்கு போல தினமும் போயிட்டு வருவியா?” என்று கோமதி அப்படியும் இருக்குமோ என்று கேட்க,
“இல்லை.. அங்க இருந்து தான் பார்த்துக்கணும்.. இன்னும் கொஞ்ச நாள்ல, பிசியோதெரபி செய்யலாம்னு சொல்லிருக்காங்க டாக்டர்.. அவர் முழுசா குணமாகி எழுந்து நடமாடுற வரைக்கும் நான் அங்கதான் இருப்பேன்..” என,
“பவித்ரா…” என்று கத்திவிட்டான் பலராமன்.
அவனுக்கு விரக்தியாய் போனது.
இந்த பெண்ணுக்கு கணவன் என்று தன்னைப் பற்றிய நினைப்பே இல்லையா என்று.
அடி உதட்டைக் கடித்து, எதிரில் இருக்கும் சுவற்றில் பார்வையை பதித்து அவள் அப்படியே நின்று இருக்க,
“அப்.. அப்போ பலராமன்…” என்றார் கோமதி தயங்கி.
“அ.. அவர்.. அவர் வந்து அங்க இருக்கட்டும்.. இல்லை வந்து வந்து போகட்டும்…” என,
“ஏய் நிறுத்து டி…” என்றான் பலராமன்.
“வந்து வந்து போறதா? என்ன பேச்சு பேசுற நீ.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியுமா உனக்கு.. அப்புறமென்ன சொன்ன நீ அங்க வந்து இருக்கனுமா? நானா? ஏன் எனக்கு வீடில்லையா என்ன? வளர்த்தவருக்கே நீ இத்தனை பார்த்தா, என்னை பெத்து வளர்த்த எங்கம்மாவை விட்டு நான் அங்க வரணுமா?” என்றான் ஆங்காரமாய்.
சுத்தமாய் மானது விட்டுப் போனது அவனுக்கு.
“நான் அத்தையை வாரவேணாம்னு சொல்லவே இல்லையே.. நம்மளோட அவங்களும் வரட்டும்..” என்று போனால் போகிறது என்பதுபோல் தான் பவித்ரா பேசினாள்.
அவளுக்கு புரியாமல் எல்லாம் இல்லை. மனது அடித்துக்கொண்டது தான். தன் கணவன் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் இல்லை. ஆனாலும் இந்த விசயத்தில் தான் சற்று மனது இளகி நின்றாலும், பின் ஊரார் பேச்சுக்கு ஆளாக நேரிடும் என்று எண்ணியிருந்தாள்.
அப்படி மனதினில் எண்ணத்தை விதைத்திருந்தாள் சொப்னா.
அதனால் பலராமன் என்ன பேசினாலும், மசியக் கூடாது என்று முடிவோடு தான் வீட்டிற்கே பவித்ரா வந்தது. அது தெரியாமல், அவனும் பேசி பார்க்கலாம் என்று பேச, அதுவோ இப்படியொரு கோபதாபத்தில் வந்து முடிந்து போனது.
“என்ன சொன்ன நீ?” என்று பலராமன் எகிறிக்கொண்டு போக, கோமதி தான் மகனைத் தடுத்து நிறுத்தினார்.
பவித்ரா பயந்து பின்னோக்கிப் போக,
“என்னடா செய்ற நீ?” என்றார் மகனிடம்.
“என்ன பேச்சு பேசுறான்னு பாக்குறீங்க தானே ம்மா…” என,
“பவித்ரா… என்னம்மா நீ பேசுறது சரியான்னு சொல்லு…” என்றார்.
“நான் வேற என்ன செய்யட்டும்… நீங்களே சொல்லுங்க.. என்னோட சூழ்நிலை அப்படி..” என,
“என்ன பெரிய சூழ்நிலை.. இதைவிட கடினமான சூழல் எல்லாம் நான் பார்த்து வந்திருக்கேன் பவித்ரா.. முதல்ல உன்னோட வாழ்கையை யோசி. உன் சித்தப்பாவை யாரும் கவனிக்கக் கூடாதுன்னு சொல்லலை. தினமும் கூட போய் பார்த்துட்டு வா.. காலையில போய் நைட்டு வா வேணாம்னு சொல்லலை.. ஆனா அங்கேயே தங்குறது சரியில்லை..” என்று பேச,
“இல்ல அத்தை.. அப்படி நர்ஸ் மட்டுமே நம்பி அவரை விட முடியாது…” என்றாள் தீர்க்கமாய்.
“அவர் பசங்க அப்படித்தானே விட்டுட்டு போறாங்க…”
“அவங்க நான் இருக்கேன்னு தைரியத்துல போறாங்க…”
“நீ இருக்கன்னு தைரியத்துல போகல, உன் தலையில கட்டிட்டு போறாங்க. அவங்க வாழ்கை முக்கியம்னு போறாங்க.. ஆனா உனக்கு அது தெரியலை.. உன்னை சுத்தமா போய் பார்க்கக் கூடாதுன்னு சொல்லவே இல்லை. ஆனா அதுக்காக இங்க இருந்து விட்டு போய்த்தான் செய்யனுமா? யோசி முதல்ல..” என்று பலராமன் பேச, பவித்ரா வாயே திறக்கவில்லை.
“பேசு பவித்ரா…” என்றான்.
“எனக்கு இதுல பேச ஒண்ணுமில்லை… என்னோட முடிவு இதுதான்.. அவரை அப்படி தனியா விட்டுட்டு எல்லாம் என்னால இங்க இருக்க முடியாது.. தினம் தினம் போய் பார்த்துட்டு மட்டும் வர்றது எல்லாம் எப்பவும் ஒரே மாதிரியும் இருக்காது.. நான் போறேன்.. நீங்க வர்றதுன்னா வாங்க…” என்றாள் பிடிவாதமாய்.
“எது? என்னது? வர்றதுன்னா வாங்களா? ஏய் என்ன பேசுற நீ? வரலைன்னாலும் பரவாயில்லையா உனக்கு?” என்று பலராமன் அவள் முகம் நிமிர்த்திக் கேட்க,
பிடிவாதமாய் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள் பவித்ரா.
“சொல்லு டி…” என்று அவளைப் போட்டு உலுக்க, கோமதிக்கு அப்படியே மனது இடிந்துபோனது.
மகனது வாழ்வு நல்லபடியா இருக்கவேண்டும் என்பது ஒன்று மட்டும் தான் அவரின் வாழ்நாள் குறிக்கோளாய் இருக்க, கண் முன்னே இப்படி நடப்பது எல்லாம் கண்டு, அவரால் தாங்கவே முடியவில்லை.
இந்த பெண் அவள் சூழலை எல்லாம் சொல்வது சரிதான். ஆனால் கணவன் வந்தாலும் சரி வரவில்லை என்றாலும் சரி என்பது போல் அல்லவா பேசுகிறாள்.
எங்கே முழுதாய் முடிந்துபோய் விடுமோ என்று பயமாய் போனது அவருக்கு.
“பலராமா…” என்று சற்றே குரலை உயர்த்தியவர், மகன் அவரைக் காணவும்,
“விடு அவ போகட்டும்..” என்றார் நிதானமாய்.
“ம்மா…!” என்று அவன் அதிர,
“விடு டா.. போகட்டும்.. இங்க வரணும்னு தோணும் போதெல்லாம் வந்து போகட்டும்.. இல்லை உனக்கு அங்க போய் பார்க்கனும்னு தோணும் போதெல்லாம் போய் பார்த்துட்டு வா.. நா.. நானும்.. நானும் அப்பப்போ போய் பார்த்துட்டு வர்றேன். விடு போகட்டும்…” என்றார்.
“ம்மா என்னம்மா பேசுற நீ…” என்று மீண்டும் அவன் கேட்க,