அனைத்தும் முன் நின்று செய்தது பலராமனே.. வந்து மறுநாள் கொல்லி வைத்தது மட்டும் தான் நேத்ரன்.
பலராமன் வந்து நிற்பான் என்று யாரும் எண்ணவில்லை. பவித்ராவும் அவனும் பேச்சுவார்த்தை கூட இல்லாது இருப்பது நேத்ரனும் சரி, சொப்னாவும் சரி அறிந்தே இருந்தனர்.
சங்கடமாய் தான் இருந்தது.
ஒருநாள் அலைபேசியில் பேசும்போது, சொப்னா கூட “உன்னை அப்பாவை பார்த்துக்கோன்னு தானே சொன்னேன்.. உன் புருஷனை விட்டுட்டு வந்து பார்க்கனும்னு சொன்னேனா? இப்படி பண்ணுவியா நீ… உன் புருஷனை உன் பக்கம் வர வைக்க உனக்குத் தெரியாதா…” என்று சத்தம் போட்டாள்.
நேத்ரனோ “எத்தனை தடவை நான் சொன்னேன் பவித்ரா.. இப்போ நாங்க எல்லாம் இங்க இருக்கோம்.. அப்பாவுக்கு அடுத்து உன்னோட நிலை என்ன யோசிச்சியா நீ?” என்று கேள்வி கேட்க,
அதே கேள்வி அவள் மனதினில் எழாமல் இருக்குமா என்ன?
அந்த கேள்வி கொடுக்கும் பயம் அவளுள் இராமல் போகுமா என்ன?
மிடறு விழுங்கினாள் பவித்ரா..
பதில் இல்லா கேள்வி ஆகிற்றே..
தான் அப்படி சொல்லிய பிறகு, கோமதியும் சரி, பலராமனும் சரி எதுவும் பேசவில்லையே.. திட்டுவதற்குக் கூட கணவனாய் வந்து அவன் நிற்கக் காணோமே..
அதில் ஒரு சிறு ஏமாற்றமும் கோபமும் இருக்கவே செய்தது அவளுக்கு.
அவர்களின் பக்கத்து வீட்டு பாட்டி கூட, “முட்டாள் பெண்ணே.. இப்படித்தான் எல்லாத்தையும் போட்டுட்டு வந்து நிப்பியா? அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா? உங்க சித்தப்பனுக்கு என்ன செய்ய ஆள் இல்லையா என்ன? ஏன் மகன் தான் வேலைன்னு முடியாது.. மருமக சும்மாதானே இருக்க வரலாமில்ல..
அதைவிடு, சொப்னா என்ன செய்றா.. நாலு மாசம் இருந்து அவங்கப்பாவை கவனிச்சுட்டு போக வேண்டியது தானே.. எல்லாத்தையும் தூக்கி உன் மேல போட்டுட்டு இப்படி போயாச்சு.. நீ இதெல்லாம் யோசிக்கவே மாட்டியா? இந்தா கோமா வந்து விழுந்துட்டான்.. இனி என்ன செய்வ நீ சொல்லு?” என்று திட்டியிருக்க, அனைத்துமே இப்போது பூதாகரமாய் இருக்க, மனோகரின் மரணம் என்பது அவளுக்கு மேலும் பேரிடியாய் இருந்தது.
அடுத்தது என்னவென்று அவளுக்கு எதுவுமே தெரியவில்லை.
முதலில் என்ன செய்திடவேண்டும் என்பது கூட அவளுக்கு புரியவில்லை.
வீட்டில் சமையல் வேலைக்கு வரும் அம்மா தான் பலராமனுக்கு அழைத்து பேசினார் “பவித்ராக்கு என்ன செய்றதுன்னு கூட தெரியலை தம்பி.. அப்படியே இடிஞ்சு போய் உக்காந்து இருக்கு.. இந்த நேரத்துல கூட நீங்க வரலைன்னா எப்படி?” என,
“சரி…” என்று மட்டும் சொல்லி வைத்தவன், அம்மாவை அழைத்துக்கொண்டு அடுத்த இருபதாவது நிமிடம் அங்கிருந்தான்.
வரும்போதே சில ஏற்பாடுகளை செய்துவிட்டே வந்திருக்க, உள்ளே வந்ததும் கோமதி தான் அவளின் அருகே வந்து “பவித்ரா…” என்று அழைக்க, அவரைக் கண்டதுமே, அப்படியொரு பவித்ராவிற்கு.
என்னவோ தெரியவில்லை.. அப்படி அழுதாள்.
எதற்காக இப்படியொரு அழுகை என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று கண்டிப்பாய் மனோகரின் மறைவுக்கு மட்டுமாய் இந்த அழுகை இல்லை என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்தது.
அவள் கேவி கேவி அழுவதை, ஒரு நொடி நின்று பார்த்தான் பலராமன். அவ்வளவுதான். அதன்பிறகு தான் வந்த வேலை என்னவோ அதை செய்யத் தொடங்கிவிட்டான்.
மறுநாள் நேத்ரன் வரும்வரைக்கும் எல்லாம் செய்தவன், அவன் வந்ததும் பொறுப்பை அவனிடம் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நின்றுகொண்டான்.
இதோ அனைத்தும் முடிந்துவிட்டது.
மூன்றாவது நாள் படையல் கூட முடிந்துவிட்டது.
பலராமனும், கோமதியும் அவர்கள் வீட்டினில் இருக்க, நேத்ரன் அலைபேசியில் பேசி, வருமாறு சொல்லியிருந்தான்.
அதன்பொருட்டே இருவரும் அங்கு வந்திருக்க, வீட்டினில் சொப்னா, நேத்ரன் குடும்பத்தோடு, மேலும் ஒருசிலரும் இருந்தனர்.
“அப்பா உயில் எழுதி இருக்கார்.. இன்னிக்கு வக்கீல் வந்து அதை வாசிக்கிறார்.. நீங்களும் கண்டிப்பா வரணும்…” என்று சொல்லி நேத்ரன் அழைக்க, பலராமன் மறுத்துவிட்டான் முதலில்.
“இல்லை அதுக்கு மட்டுமில்லை.. நீங்களும் பவித்ராவும் இப்படியே எத்தனை நாள் இருக்கிறது.. அதை பேசவும் தான்…” என,
“அதுக்கு இப்போதான் நேரமே கிடைச்சதா?” என்ற குத்தல் கேள்வியோடு தான் வந்திருந்தான்.
மனோகரின் உயில் வாசிக்கப்பட்டது..
பவித்ராவின் திருமணம் முடிந்து, அவர் தனிமையில் இருக்கையில் இதை தயார் செய்து இருக்கிறார் என்பது புரிந்தது.
இந்த வீடு, பவித்ராவின் பெயருக்கு என்று சொல்ல, பவித்ராவிற்கு பெரிய ஆச்சர்யம். அவளால் நம்பவும் முடியவில்லை. அவள் இதனை எல்லாம் எதிர்பார்க்கவும் இல்லைதானே.
சொப்னாவிற்கு இதில் உடன்பாடு இல்லை போல..
“அது எப்படி.. சொந்த பிள்ளைங்க நாங்க ரெண்டு பேரு இருக்கோம்.. வீடு எங்கல்ல யாருக்கும் தானே கொடுக்கணும்… பவித்ராக்கு கொடுக்கட்டும் வேணான்னு சொல்லலை.. ஆனா…” என்று இழுக்க,
வக்கீலோ “சொந்த பிள்ளைங்க ரெண்டு பேர் இருந்து என்ன செய்ய, இந்த பொண்ணு தானே கூட இருந்து பார்த்தது.. அதுக்கு இந்த சொத்து முழுசா கொடுத்தா கூட தகும்..” என்று பதில் சொல்ல, பலராமன், பவித்ராவை நக்கலாய் ஒரு பார்வை பார்த்தான்.
பார்த்தாயா, உன் உடன்பிறவா சகோதரியின் லட்சனத்தை என்று.
பவித்ராவிற்கோ இதெல்லாம் எதுவுமே மனதில் நிற்கவில்லை.. அடுத்து தங்கள் விஷயம் பேசுவார்களே என்று பயம்.. மனதினில் சஷ்டி கவசத்தை உருப்போட்டுக்கொண்டு இருந்தாள்.
சில பல லட்சங்களும் அவள் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு இருப்பதாய் சொன்னார் வக்கீல். அதுபோக, இருபது சவரன் நகை அவளிடம் கொடுக்கப்பட்டது. இதெல்லாம் தாண்டி, மீதமுள்ள அனைத்தும் இரு பாகம்.. அண்ணன் தங்கை இருவருக்கும் யாருக்கு என்ன தேவையோ பேசி முடிவு செய்து அவரவர் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது.
அதாவது, பவித்ராவிற்கு சேரவேண்டியதில் எந்தவித சிக்கலும் இருக்கக் கூடாது என்று மனோகர் தெளிவாய் அதனை எழுதிவிட்டு, நேத்ரன், சொப்னா விஷயத்தை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டார்.
நேத்ரனுக்குமே, வீடு பவித்ராவிற்கு என்று சொல்லவும் சிறு ஏமாற்றமே..
என்ன இருந்தாலும் இது நம் வீடு… என் வீடு என்ற எண்ணம் யாருக்கும் இருக்கும் தானே.. நிகிதா கூட கணவனை அதிர்ந்து பார்த்தாள். எத்தனை சொத்துக்கள் இருந்தாலும், வீடு என்பதும், அதன் மீது நாம் வைக்கும் பற்றும் வேறுதானே..
இன்றும் கூட, அதிகபட்சமாய் அனைவரும் நினைப்பது, சொந்தமாய் ஒரு வீடு வேண்டும் என்பதுதானே.
நேத்ரன், மனதினில் சின்னதாய் ஓர் வலி இருக்க, ஆனால் பவித்ராவின் செயலோ அவனுக்கு பெரிதாய் தோன்றியது. தன் வாழ்வை விட்டுவிட்டு வந்து மனோகரை கவனித்துக்கொண்டது பெரியது தானே.
அதனால் வாயை மூடிக்கொண்டான்.
ஆனால் நிகிதா சும்மா இருக்கவில்லை.
“இதெல்லாம் நான் சம்மதிக்க முடியாது.. மாமா இப்படி ஒரு உயில் எழுதுறதுக்கு முன்ன, அவர் பிள்ளைங்க ரெண்டு பேர்கிட்டவும் கலந்து பேசியிருக்கனும்.. பவித்ராவுக்கு அவளுக்கு என்ன வேணுமோ வேற கொடுக்கலாம்.. ஆனா இந்த வீடு எல்லாம் கொடுக்க முடியாது..” என்று அங்கேயே சத்தம் போட,
சப்போர்டிற்கு ஆள் வந்தது என்று சொப்னாவும் “என்ன பவி, உனக்கு இந்த வீடு வேணுமா? நியாயமா பார்த்தா இது நேத்ரனுக்கு தானே போகணும்.. உனக்கு வேணும்னா வேற ஏதாவது மாத்தி எழுதலாம் தானே..” என, பவித்ரா விழித்தாள்.
பலராமன், பட்டென்று எழுந்தவன் “ம்மா வாங்க கிளம்பலாம்…” என்றவன் நேத்ரனிடம் “ நாங்க கிளம்புறோம்.. நீங்க உங்க பிரச்சனையை முடிச்சிட்டு சொல்லுங்க..” என, பவித்ராவிற்கு படபடவென வந்தது.
உடன் வா என்று அழைப்பானோ என்றும்..
அழைக்கமாட்டானா என்றும்..
பக்கத்து வீட்டு பாட்டி சொல்லியே வைத்திருந்தார்.
“இங்கபாரு இத்தனைக்கு அப்புறமும், உன் புருஷன் வந்திருக்கான். உன் மேல பாசமில்லாம எல்லாம் வரலை.. கூப்பிட்டா பேசாம போய் வாழற வழியைப் பாரு..” என்று சொல்லியே வைத்திருந்தார்.
இந்த சொத்துப் பிரச்சனை வேறு வரும் என்று பவித்ரா எண்ணவில்லை.
கணவன் முகத்தையும், மாமியார் முகத்தையும் மாறி மாறி பார்க்க, அவளின் தவிப்பு நன்றாய் தெரிந்தது.
நேத்ரனோ “பவித்ரா நீ இவங்களோட போ.. நான் இங்க பார்த்துக்கிறேன்..” என்று சொல்ல,
கோமதியோ “அவளுக்கு விருப்பம் இருந்தா வரட்டும்..” என்றார்.
அப்போதும் கூட பலராமன் “வா…” என்றோ, “வருகிறாயா…” என்றோ சொல்லவும் இல்லை, அழைக்கவும் இல்லை.
அமைதியாய் கை கட்டி, அவள் முகம் பார்த்து நின்று இருக்க, “பவித்ரா நான் சொல்றேன்ல.. நீ கிளம்பு…” என்றன் நேத்ரன்.
“அண்ணா… அது…” என்று பவித்ரா இழுக்க, பலராமனுக்கு அப்படியே ஓங்கி ஒன்று வைக்கவேண்டும் போலிருந்தது.
இத்தனை நடந்தபிறகும் கூட அவளுக்கு கிளம்பி வருவதற்கு அப்படியென்ன கஷ்டம் என்று..
கோமதியை முறைத்தவன், எழுந்து சென்று வாசலில் நின்றுவிட்டான்.
பவித்ரா, அவன் செல்லவும் திகைத்துப் பார்க்க “பேசிட்டு வா பவித்ரா…” என்று கோமதியும் வெளியே சென்று நிற்க,
நேத்ரன் மட்டுமே அவளை கிளம்பு என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.
சொப்னாவும், நிகிதாவும் “இத்தனை நாள் இருந்துட்டா.. பேசி முடிச்சிட்டு போனா என்ன, இந்த வீட்டுக்கு பதில் அவளுக்கு என்ன வேணுமோ கொடுக்கலாம்…” என,
அத்தனை நேரம் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சொப்னாவின் கணவன், ஜனகன் “சொப்னா…” என்று ஒரு அதட்டல் போட, என்னவென்று பார்த்தாள்.
“உனக்கு என்ன வேணுமோ அதை முடிவு பண்ணி உங்க அண்ணன்கிட்ட வாங்கிக்கோ.. அதைவிட்டு, பவித்ராவை குழப்பிவிடாத.. அந்த பொண்ணு இத்தன நாளா புருஷனை விட்டு வந்து இருக்கு.. இப்போ அங்க போறதுக்கும், அவங்க வாழ்கையை ஆரம்பிக்கிறதுக்கும் ஒரு வாய்ப்பு வந்திருக்குன்னா, அதை செய்ய விடுங்க..” என, சொப்னாவிற்கு கணவனின் பேச்சு அதிர்ச்சியே.
பொதுவாய் ஜனகன் எதிலும் தலையிட மாட்டான். தேவையில்லாமல் எதுவும் பேசவும் மாட்டான்.. இங்கே மனோகரை கூட, பவித்ரா வந்து பார்த்துக்கொள்கிறாள் என்பது தான் அவனுக்கு சொல்லியிருந்தது. அவள் கணவனை விட்டு வந்து இருக்கிறாள் என்பதை எல்லாம் யாரும் சொல்லவில்லை.
இப்போதுதான் அவனுக்கே அது தெரியும்.
தெரியவும் மனைவியின் மீது கோபமும், நேத்ரன் மீது எரிச்சலும் தான் வந்தது. என்ன பிள்ளைகள் இவர்கள் என்று.
பவித்ரா, போவதா நிற்பதா என்று முழித்துக்கொண்டு இருக்க, கோமதி திரும்ப உள்ளே வந்தவர் “பவித்ரா, அவன் உன்னோட பேசணுமாம்.. ஒரு ரெண்டு நிமிசம் வந்துட்டு போ…” என, டக்கென்று நெஞ்சடைத்த உணர்வு.
“எ.. என்ன அத்தை…” என்றாள்.
“போ பவித்ரா..” என்று சற்றே அழுத்தமாய் சொன்னது ஜனகன்.
“ம்ம்…” என்று தலையை ஆட்டியவள், வெளியே சென்று நிற்க,
“இங்க பாரு, உனக்கு என்னோட வர விருப்பமா இல்லையான்னு விஷயம் இல்லை.. என்னோட வாழ விருப்பமா இல்லையான்னு விசயமில்லை.. ஆனா உனக்குன்னு ஒரு இடம் வேணும்.. அதுவும் நம்பிக்கையான இடமா இருக்கணும்.. இந்த ஏரியா நீ வளர்ந்த இடம்.. உனக்கு இங்க எல்லாரையும் தெரியும். உன்னையும் தெரியும்.. என்னோட வர்றதும், வராததும் வாழ்றதும் போறதும் உன்னோட இஷ்டம் தான்.. ஆனா இந்த ஒருவிசயத்துல நான் சொல்றதைக் கேளு..
உன் சித்தப்பாவே இதை உனக்குத்தான் கொடுக்கணும்னு நினைச்சு இருக்கார். அதனால நீ இதை விட்டுக்கொடுக்காத.. இது உனக்கானது.. உன்னோடது.. இப்போவாது கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணு.. முடிவு பண்ணிட்டு வர்றதுன்னா அம்மாவோட வா… இல்லைன்னா உன் விருப்பம்..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவளுக்கோ “ஆ..!” என்று இருந்தது.
“என்னோடு வா…” என்பான் என்று பார்த்தால், “உன் விருப்பம்.. வீட்டை மட்டும் விட்டுவிடாதே…” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்… என்று பார்க்க,
“நான் ஒரு பத்து நிமிஷம் இங்க உக்காந்து இருக்கேன் பவித்ரா…” என்றார் கோமதி.
அதாவது உனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடங்களே என்று சொல்லாமல் சொல்ல, பவித்ராவோ தவித்துத் தான் போனாள்.
கணவன் வந்தது அவளுக்கு ஒரு புது தைரியம் கொடுத்திருக்க, இத்தனை சுயநலமா உனக்கு என்றுகூட அவளுக்கே தோன்றியது.