யமுனாவிற்கு சூர்யா இப்படி பேசுவான், அவன் மனதில் இப்படியான எண்ணமிருக்கும், அதில் எண்ணற்ற காதல் தன் மீது இருக்குமென்ற அனுமானம் கொஞ்சமும் இல்லை. பதற்றம்தான் தோன்றியது அவன் பேச்சில். இது சரியா? தவறா? என்ன சொல்ல என்றெல்லாம் நினைக்கவே முடியாத அளவு ஸ்தம்பித்து நின்றாள்.
என்னவோ பயத்தில் அழுகை கூட வந்தது. ஈரவிழிகளுடன் அவள் நிற்க, கண்ணீர் வெளியேற நின்றவளை கண்டு சூர்யாவுக்கு மனம் பிசைய,
“யமுனா! ஏன்ட்டிம்மா?” என்று அருகே போக, யமுனாவிற்கு அந்த நெருக்கமே நடுக்கம் தந்தது. அதில் பின்னால் நகர்ந்தாள்.
“யமுனா?” என்று அதிர்ந்து பார்த்த சூர்யா
“எதுக்கு என்னை பார்த்து பயப்படுற நீ? என்ன செஞ்சிடுவேனு நான் உன்னை?” என்று அதட்டினான். இத்தனை நாள் என்னுடன் பழகி பேசி என்னைப் பற்றிய இவளின் பார்வை இவ்வளவுதானா? என்று கேள்வி எழ கோபம் கிளர்ந்தது.
அந்த அதட்டல் கூட இன்னும் அழுகையைத் தர, ஸ்டாலின் அவர்கள் பக்கம் வந்தவன்
“யமுனா, என்னம்மா? ஏன் அழற நீ? ஒன்னுமில்லைம்மா. இங்க பாரு கண்ணைத் தொடைம்மா. எல்லாரும் பார்ப்பாங்க” என்று சொல்லவும் கன்னத்தைத் துடைத்தாலும் கண்களில் நீர் தளும்பியது.
“அழாத யமுனா” என்று சூர்யா அடிக்குரலில் மீண்டும் அதட்ட
“ஏன் டா கத்துற?” என்று ஸ்டாலின் நண்பனைத் திட்ட
“நான் என்ன சொல்லிட்டேன், இவ அழறா ஸ்டாலின்?” என்றான் கோபத்துடன்.
“அடே! இரேண்டா! கொஞ்சம் பொறுமையா பேசுடா. யமுனா பயப்படாதம்மா” என்று அவளிடம் சொல்ல, சூர்யாவினால் யமுனாவின் ஈரவிழிகளைக் காண முடியவில்லை.
“டேய்! தங்கச்சியை நான் பார்த்துக்கிறேன். நீ என் சைக்கிள் எடுத்துட்டு வீட்டுக்குப் போ, நான் யமுனாவை ஹாஸ்டல்ல விட்டு வரேன்” என்றான் ஸ்டாலின்.
ஸ்டாலின் ஆட்டோ பிடித்து யமுனாவை அவள் கல்லூரி விடுதிக்கு அழைத்து வந்தான். வரும்வழியெல்லாம் சூர்யாவைப் பற்றியே அவனின் பேச்சு.
“இங்க பாரும்மா, உன்னை என் தங்கச்சியா நினைச்சு சொல்றேன். சூர்யா வேறு ஊர்க்காரன்தான். ஆனா மூணு வருஷமா அவனைப் பார்க்கிறேன், நீயே பேசி பழகியிருக்க தானே? நீன்னா அவனுக்கு ரொம்ப இஷ்டம்மா, ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மான்னு உன்னைப் பத்தியே பேசிட்டு இருப்பான்” என்றதும் யமுனா ஸ்டாலினை கேள்விகள் சுமந்த விழிகளுடன் பார்த்தாள்.
“ஆமா ம்மா, நீ கேம்ப்ல திணறித்திக்கிப் பேசின அப்புறம் அழுத இல்லை. அதை நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டவன், அப்புறம்தான் நீ கோகி ப்ரண்ட்னு தெரியவும் உன்னைப் பார்க்க ஆசைப்பட்டான். அவன் இந்தளவு தீவிரமா இருப்பான்னு நாங்களே நினைக்கலம்மா. முன்னாடியெல்லாம் தமிழ்ல கேள்வி கேட்டா கூட எனக்குத் தெலுங்குல பதில் சொல்வான். இப்போ உனக்காக தமிழ்லதான் பேசுறான்.”
“உனக்குப் பிடிக்கும்னு இப்போ கேஸட் வாங்கிட்டு வந்து இளையராஜா பாட்டுதான் கேட்குறான். ஒலியும் ஒளியும் போடற நேரம் தண்ணிப் பிடிச்சு வைக்கிறவன் நீயும் அதைப் பார்ப்ப, அதே நேரம் நானும் அவ கேட்கிற பாட்டு கேட்கனும்னு சொல்றான். நீ ஒரு நாள் காரம் சாப்பிடாதன்னு சொன்னதால சாப்பாட்டுல ரொம்ப காரம் சேர்க்கிறதில்லை அவன். இப்படி உன்னால அவன் பைத்தியமாகிட்டு இருக்கான்மா. உன்னோட நினைப்புலதான் அவன் வாழ்றான்”
“அவன் வேற மொழி, ஊர்னு எல்லாம் யோசிக்காதம்மா காதலுக்கு அதெல்லாம் கிடையாது. எப்படியும் நாங்க ஐபிஎஸ் ஆகிடுவோம், உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பான், உன்னை உங்க வீட்ல மேல படிக்க வைக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சு எங்க கிட்ட புலம்பித் தள்ளிட்டான். நான் என் ப்ரியத்தம்மாவை அவ ஆசைப்பட்டபடி டீச்சருக்குப் படிக்க வைக்கனும்னு நிறைய கனவு அவனுக்கு” என்று ஸ்டாலின் பேச பேச யமுனாவின் செவிகள் எல்லாவற்றையும் கேட்டனவே ஒழிய பதிலுக்கு ஒரு பார்வை, பேச்சில்லை.
அவள் அகத்தில் பெருகி வழிந்தன பெரும் பேராச்சர்யங்கள்!! இத்தனை ஆழமாய் என்னை நேசிக்கிறானா என்றுதான் தோன்றியது. ஆனால் இதெல்லாம் தனக்கு சரிவராது என்ற முடிவு மட்டும் அவன் காதல் சொன்ன கணத்தில் இருந்து இப்போது வரை மாறவே இல்லை. அந்த காதல், கனம் தந்தது யமுனாவிற்கு.
தனக்கு அவனைப் பிடிக்குமா பிடிக்காதா என்ற எண்ணமெல்லாம் கொஞ்சமும் இல்லை யமுனாவிடம்.
“அவனுக்காக மட்டும் பேசுறேன் நினைக்காதம்மா, உனக்குப் பிடிச்சிருந்தா உன் அண்ணனா இருந்து உன்னையும் அவனையும் சேர்த்து வைக்கிறது என்னோட கடமை. வீட்டைப் பத்தியெல்லாம் யோசிக்காத, நாங்க பேசுறோம். எங்கப்பாவே ஜாதிமறுப்பு கல்யாணமெல்லாம் பண்ணி வைப்பார். ஆனா ஒருவேளை உனக்கு அவனைப் பிடிக்கலைன்னாலும் பயப்படாத சூர்யா நல்லவன், உன்னை எப்பவும் தொல்லை செய்ய மாட்டான். அதுக்கும் நான் பொறுப்பு. ஒரு நல்ல முடிவா யோசிச்சு எடும்மா” என்று சொல்லியிருந்தான் ஸ்டாலின்.
விடுதிக்கு வந்த யமுனாவின் மனதில் ஆயிரம் ஆயிரம் யோசனைகள். இதுவரைக்கும் இவளிடம் இப்படியான பேச்சு யாரும் பேசியதில்லை, வீட்டில் பேசவிட்டதுமில்லை. தேவையில்லாமல் பிரச்சனையை இழுத்து விட்டுகொண்டுமோ என்று பயமாய் இருந்தது.
அவன் எத்தனை முறை காதல் பற்றி தன்னிடம் பேசியிருக்கிறான், சென்ற முறை கூட ஏதோ படம் பற்றியெல்லாம் சொன்னானே, அத்தனை அறிவிலியாய் அவன் சொன்னதை உணராது போனோமே என்று நொந்து கொண்டாள்.
சூர்யாவின் கண்களும், மொழி கடந்து அவன் மொழிந்த காதலும் நினைத்துப் பார்த்தாலே கண்கள் தானாய்க் கலங்கியது. என்னவோ இனம்புரியா உணர்வு இதயம் பிசைந்தது. அப்பாவிற்குத் தெரிந்தால் கொன்றே விடுவார் என்ற பயம். சூர்யா விடாமல் தன்னைத் துரத்தினால் படிப்பும் பாழாகிவிடுமே என்ற எண்ணம் பதட்டம் தந்தது.
இதுவரை எதையுமே வீட்டில் கேட்டதில்லை. உடை, நகை, உணவு என்று எல்லாம் கேட்காமலே கிடைக்கும், படிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட பள்ளியில் ஆசிரியர்கள் அவளைப் பாராட்டி
இவளுக்குமே அது தூண்டுதலாய் அமைய, அவள் பள்ளியில் நன்றாய்ப் படிக்கும் மாணவியாக இருந்தாள். தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் போல, தானும் ஆக வேண்டும் என்ற எண்ணம். அதனையும் விட பெண்கள் என்றால் அவ்வளவாய் மதிக்காத தன் தந்தை கூட, அவளின் ஆசிரியைப் பார்த்தால்
“டீச்சரம்மா எப்படி இருக்கீங்க?” என்று மரியாதையாகப் பேசுவார். அது எல்லாம் ஆழப்பதிந்து படித்தால் மட்டுமே எல்லாரும் மதிப்பார்கள் என்ற எண்ணம் வேரூன்றி இருக்க, அதனால் விளைந்த பிடிவாதம் தான் இன்றைய கல்லூரி படிப்பு.
இப்போது இப்படி காதல் என்று ஒருவன் பின்னால் சுற்றுவது தெரிந்தால், முறையில் இருக்கும் எவனோ ஒருவனுக்குப் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துவிடுவார்கள் என்ற நினைப்பே திக்கென்றது. இதே படித்து ஒரு டிகிரி வாங்கினாலாவது படித்த மாப்பிள்ளையாகப் பார்ப்பார்கள் என்று தோன்ற சூர்யாவைப் பார்க்கவே இல்லை என்று நினைத்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள்.
சூர்யா தொந்தரவு செய்ய மாட்டான், அப்படியே செய்தாலும் ஸ்டாலின் அண்ணாவிடம் சொல்லிவிடலாம் என்று முயன்று தன்னுள்ளத்தை திடப்படுத்தியவள் கொஞ்சமும் ஒருவன் தனக்காக உருகிறானே என்று அவனைப் பற்றியோ, அவனைப் பற்றியெரிக்கும் காதல் பற்றியோ சிந்திக்கவே இல்லை.
இரவு உணவு முடிந்து அறையில் அவளுடன் தங்கும் மேகலா, டேப் ரெகார்டரில் புதிதாய் அங்கிருந்த கேஸட் ஒன்றைப் போட்டு விட்டு அவளது கட்டிலில் படுத்துக் கொண்டாள். அந்த இரவு வேளையில் ஊர் தூங்கும் நேரத்தில் இதமாய் இசைத்துக்கொண்டிருந்தது ராஜாவின் இசை.
‘உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது’ என்று சித்ராவின் குரலில் பாடல் ஒலிக்க படுத்திருந்த யமுனா பட்டென்று எழுந்து கொண்டாள்.
ஸ்டாலின் சொன்ன உனக்காக அவன் இளையராஜாவின் பாடல்களாய்க் கேட்கிறான், என்று சொன்னது நினைவில் வர நித்திரைத் தொலைந்து போனது.
“இது, யாரோட கேஸட்?” என்று யமுனா மேகலாவைப் பார்க்க
“நீதானே டி கொடுத்த, உன்னோடதுதானே?” என்று கலா கேட்டாள். அவள் கேள்வியில் அது கொடுத்த பதிலில் பாவை மனதில் பெரும் பரிதவிப்பு. இந்த கேஸட் சூர்யா கொடுத்தது.
“ஹாஸ்டல்ல போர் அடிச்சா கேளு யமுனா. நாங்க இன்னொன்னு வைச்சிருக்கோம். நல்லா இருக்கு, உனக்குப் பிடிக்கும்” என்று சொல்லி அவன் கொடுத்திருக்க என்னைப் பிடித்ததால் அவன் கொடுத்திருக்கிறான் என்று புரிந்தது யமுனாவிற்கு.
“தூங்குற நேரம் இப்ப எதுக்கு கலா பாட்டுப் போடுற?” என்று யமுனா திட்டவும் சுமதி உடனே
“ஏன் டி யமுனா நீயா டி இப்படி கேட்கிற? எப்பவும் ரூம்ல பாட்டு போட்டுட்டுதானே டி இருப்ப. தூங்குறதுக்கு முன்னாடியும் காலையில் எழுந்திருக்கும்போதும் ராஜா பாட்டுக் கேட்டு எழுந்திருக்க சுகமே தனின்னு சொன்னவ டி நீ? என்னாச்சு திடுதிடுப்புன்னு உனக்கு? நீ காலையில இருந்து ஒரு மாதிரி இருக்க, சரியில்லையே? உடம்பு முடியலையா?” என்று அருகே வந்து நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.
“இல்லடி, நான் நல்லாதான் இருக்கேன். லேசா தலைவலி அதான்” என்று சொல்லி போர்வையை நன்றாய் முகம் தெரியாதவாறு இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.
“அவளுக்குத் தலைவலிக்குதாம், உனக்கு வேணும்னா சவுண்ட் கம்மியா வைச்சுக் கேளு கலா” என்று சுமதி சொல்ல, மெல்லமாய் இருந்தாலும் மென்மையாய் இசை வஞ்சியை வன்மையாய்த் தாக்கியது.
இத்தனை நாள் கேட்ட இசைதான், ஆனால் இன்று இசையோடு சூர்யாவின் நினைவும் தன்னுள் எழுதவதைத் தடுக்க முடியவில்லை. நான் பாடல் கேட்கும்போது அவனும் கேட்பானாமே என்ற நினைப்பு வர, கண்கள் கசிந்தன. மீண்டும் ஒரு பயம், பதட்டம் தன்னுள் எழ, காதுகளை இறுக முடி இசையில் இருந்து தப்பித்தாள்.
இங்கு சூர்யாவோ அவன் பாட்டிற்கு செமெஸ்டர் தேர்வுகளுக்குக் கணக்குகள் போட்டுக்கொண்டிருந்தான். இரவு பத்து மணிக்கு மூவரும் படித்துக் கொண்டிருக்க, உறங்காமல் இருக்க வேண்டி இஞ்சி கலந்து பாலில்லாத டீ போட்டுக் கொடுத்தான் ராமச்சந்திரன்.
“என்னடா? வந்ததுல இருந்து புக் எடுத்து வைச்சிருக்க? ஒன்னும் சொல்லக் காணும் சூர்யா” என்று ராமு பேச்சுக் கொடுக்க
“அது எங்களுக்கும் தெரியும்டா. காலையில இவன் எவ்வளவு கோவப்பட்டான் தெரியுமா ராமு? அந்த பொண்ணுக்கிட்ட கடுப்படிக்கிறான் இவன்” என்றான் ஸ்டாலின் கோபமாக.
“பின்ன என்ன டா? என்னைப் பத்தி தெரியும்தானே? அப்படி பக்கத்துல போனாளே பயப்படுறா” என்று சூர்யாவும் கோபமாய்ப் பேச
“டேய் ஒவ்வொருத்தங்க ஒவ்வொரு மாதிரி. இதே கோகின்னா பயப்பட மாட்டா. அதட்டிப் பேசினா வாய்லயே போடுவா நம்மள, அவங்கப்பா நீ இந்திராகாந்தி மாதிரி ஆகனும்னு சொல்லி வளர்த்திருக்கார். அந்த பொண்ணு ஒரு கிராமத்துல இருந்து படிக்க வந்திருக்கு, நீ காதல்னு பின்னாடி சுத்தினா பயப்படாதா?” என்று திட்டினான் ஸ்டாலின்.
“அடேய்! சண்டையை விடுங்கடா, சூர்யா நீ சொல்லு” என்று ராமு கேட்க
“ஏன்ட்ரா ராமு? சொல்லியாச்சு எக்ஸாம் முடிஞ்சு பார்த்துக்கலாம். நீ டீயைக் கொடு” என்று சொல்லி குடிக்கும்போதே யமுனா சூடாய்க் குடிக்க மாட்டாளே என்ற எண்ணம் குளுமையாய் அவனுள் தோன்றியது.
அன்று பரீட்சை முடிந்த பின்னும் சூர்யாவிடம் பதட்டம். பரீட்சை முடியவும் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ‘புதுவசந்தம்’ படம் பார்க்க சென்றிருந்தனர், சூர்யாவைத் தவிர. பரீட்சை முடியவும் அவன் மட்டும் கன்னிமரா நூலகம் வந்து காத்திருந்தான்.
“டேய், படம் நல்லா இருந்துச்சுல டா. நம்ம கூடவும் ஒரு பொண்ணு வந்து தங்கினா எப்படி இருக்கும்?” என்று ராமு கேட்க
“டேய்! மணி ஆறாகிடுச்சே டா. இவ்வளவு நேரம் அவனைக் காணுமே, ஹாஸ்டல்ல கூட இதுக்கு அப்புறம் வெளியே விட மாட்டாங்களே. என்ன அவனைக் காணும்?” என்று ஸ்டாலின் புலம்பினான்.
“அவன் அந்த பொண்ணை ஒருவேளை ஹாஸ்டல் வரைக்கும் விட போனானோ என்னவோ? வந்துடுவான். இல்லைன்னா சமைச்சுட்டு நம்மளே போய் லைப்ரரில பார்ப்போம்” என்றான் ராமு. இவர்கள் சூர்யாவைப் பற்றிய கவலையில் இருக்க அங்கே அவனோ காதலிக்காக காத்திருந்தான்.
வலக்கையில் கட்டியிருந்த வாட்சில் மணி ஏழு என்று காட்ட, காத்திருப்பு நீண்டதே தவிர, காதலி வரவும் இல்லை. காதல் சொல்லவுமில்லை.
சூர்யா அப்போதும் மனம் கேளாமல் அவள் கல்லூரி பக்கமாய்ப் போய்ப் பார்க்க, அவள் வரவே இல்லை. யமுனா ‘இல்லை’ என்று சொல்லக் கூட தன்னைப் பார்க்க வராமல் போக, அது பயங்கரமாய் அவனைக் காயப்படுத்தியது.
‘ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே!’