“தோசையா சாதமா?” என்றபடி வந்து உட்கார்ந்த சூர்யாவைக் கண்டு நண்பர்கள் இருவருக்கும் அதிர்ச்சியே.
“ஏன்ட்ரா ராமு? காது கேட்குதா இல்லையா? நான் குளிச்சிட்டு வரேன்” என்று சொல்லி துண்டுடன் பாத்ரூம் சென்றவனை, இன்னமும் அதிர்ச்சி குறையாமல் பார்த்தார்கள் ராமுவும் ஸ்டாலினும்.
“சாதாரணமா பேசுறதைப் பார்த்தா தங்கச்சி ஓகே சொல்லிடுச்சு போல” என்று ஸ்டாலின் முகம் ப்ரகாசமானது.
ராமுவும் “எனக்கென்னமோ அப்படி நினைக்க முடியல. அவன் முகத்துல சந்தோஷமே இல்லையே, யமுனான்னு சொன்னாலே அப்படி ப்ரைட்டா இருப்பான். இப்போ அந்த பொண்ணு ஓகே சொல்லியிருந்தா.. நோ கண்டிப்பா அந்த பொண்ணு ஓகே சொல்லல” என்றான் ராமு.
இவர்கள் பேசுக்கொண்டிருக்கையில் சூர்யா குளித்து வந்தவன்
“அப்புறம் படம் போனீங்களே? எப்படி ரா இருந்துச்சு? யார் ஹீரோ? ஹீரோயின்?” என்று கேட்டான் சூர்யா.
“முதல்லே உன் ஹீரோயின் என்ன சொன்னா? அதை சொல்லாம என்ன என்னவோ பேசுற” என்று ஸ்டாலின் கேட்கவும் சாப்பாட்டுத் தட்டில் இருந்த கவனம் களைய நிமிர்ந்து பார்த்தவன்
“யமுனா வரவே இல்லை” என்றான்.
“சூர்யா?!!!” நண்பர்கள் இருவருக்கும் தாங்கவே முடியவில்லை. அந்த பெண்ணின் மீது இவன் எத்தனை ப்ரியம் கொண்டிருக்கிறான் என்றறிந்தவர்களுக்கு மிகவும் வேதனையானது. இதில் சூர்யாவின் நிலையை யோசித்தவர்கள் அவனைப் பார்க்க, அவனோ ஊறுகாயை எடுத்து தட்டில் போட்டு அமைதியாய் உண்டான்.
இந்த அமைதி என்னவோ பயமுறுத்த
“சூர்யா, இங்க பாரு. என்னாச்சு சொல்லு ஒழுங்கா” என்று ஸ்டாலின் பதட்டமாகக் கேட்க
“நான் வெயிட் பண்ணினேன், அவ வரல அவ்வளவுதான். என்னையே ஏன் பார்க்குறீங்க டா? சாப்பிடுங்க” என்று சூர்யா சொன்னான்.
“உனக்குக் கஷ்டமாயில்லையா?” என்று ராமச்சந்திரன் கேட்க
“ம்ம், கஷ்டமா இருந்துச்சு. ஒரு தடவ கூட யமுனாவைப் பார்க்க முடியலயேன்னு” என்றான்.
“இப்போ என்ன செய்யப் போற?” ஸ்டாலின் கேட்க
“ம்ம், நாளைக்கு டிரெயின் இருக்கு. ஊருக்குப் போய்ட்டு லீவ்ல செர்வீஸ் கமிஷனுக்குப் படிக்கனும். அப்புறம் அங்கேயே பிஜி படிக்கனும்” என்ற சூர்யாவிடம்
“அப்போ யமுனா? உன்னோட ப்ரியத்தம்மா டா. உன் காதல்?” என்று ராமு பரபரத்தான்.
“அவ படிச்சு முடிக்க இன்னும் இரண்டு வருஷம் இருக்கே, பார்த்துக்கலாம். இனிமே அதைப் பத்தி பேச வேண்டாம் ரா. என்னை வேண்டாம்னு சொல்லக் கூட அவ வரல. அந்தளவு வேண்டாம போய்ட்டேனான்னு இருக்கு எனக்கு. தனியா விடுங்க” என்று சொல்லி உண்ட தட்டைக் கழுவிப் போட்டவன் போர்வை தலையணையுடன் படுத்துக் கொண்டான்.
“இப்ப நம்ம எதுவும் பேச வேண்டாம். அவன் ரொம்ப ப்ராக்டிகலா பேசுறான், பார்த்துக்கலாம்” என்று ராமு சொல்ல
“இல்லை டா. அவன் யமுனாவோட ரொம்ப எமோஷனலா அட்டாச் ஆகியிருந்தான். அப்படியெல்லாம் அவனால யமுனாவை ஈசியா விட முடியாது. எவ்வளவு வருத்தமா சொன்னான் பார்த்தியா? அந்த யமுனா பொண்ணு வேண்டாம்னு சொல்லவாச்சும் இவனை வந்து பார்த்திருக்கலாமில்லை. பாவம் எவ்வளவு ஃபீல் பண்றான். இவன் இங்க இருக்கும்போதே அந்த பொண்ணுக்கு ஒன்னும் தோணல, இதுல குண்டூர் போய்ட்டா எப்படிடா? இவன் இன்னும் இப்படி நம்புறான்?” என்று ஸ்டாலின் புலம்பிக்கொண்டிருந்தான்.
அடுத்த நாள் ஊருக்குக் கிளம்பத் தயாரானவன் அவனின் பொருட்களை எடுத்துக்கொண்டான். ஸ்டாலினுக்கு முன்பு கொடுத்த டெரிகாட் பேன்ட் சட்டையை அவனிடமே கொடுத்தவன்
“உன் கோகிக்கு இந்த டிரஸ் பிடிச்சதுன்னு சொன்ன இல்லை, நீயே வைச்சுக்கோ ரா” என்றபோது ஸ்டாலினுக்கு கண்களில் நீர் சுரந்தது.
“என்னடா நீ?” என்றபடி நண்பனை இருவரும் அணைத்துக்கொள்ள
“உங்களை எல்லாம் மிஸ் பண்ணுவேன் ரா. ராமு உன்னோட காஃபி, சமையல் எல்லாம் மிஸ் பண்ணுவேன். என் அம்மாவுக்கு அப்புறம் உன் கையாலதான் அதிகம் சாப்பிட்டுருக்கேன். நல்ல படிங்கடா, சீக்கிரமே டெல்லில இண்டர்வியுல பார்ப்போம். ஆந்திரா வந்தா கண்டிப்பா சொல்லுங்க, லெட்டர் போடுங்க, பட் இங்கிலிஷ்ல. முடியும்போது ஒரு எஸ்டிடி பண்ணுங்க. எங்க வீட்லயே போன் இருக்கு, என் பெயர் சொல்லுங்க, ஸ்டாலின் உனக்குத் தெரிஞ்ச தெலுங்குல பேசிடாத எங்க நானா டென்ஷன் ஆகிடுவார்” என்று சிரித்த சூர்யாவை நண்பர்கள் இருவருமே கட்டிக்கொண்டார்கள்.
பின் சமையல் பொருட்கள் இருக்குமிடம் சென்றவன், அங்கிருந்த டிபன் பாக்ஸை எடுத்து அதில் யமுனா என பெயர் பதிந்திருந்த இடத்தை மெல்ல வருடிக்கொடுத்தவன்
“டேய்! என்னடா மொத்தமா போறியா? யமுனாவை உன்னால மறக்க முடியுமா?” என்று ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கேட்க
“ஏன் மறக்கனும்?” என்று மறுகேள்வி கேட்டான்.
பின் “இங்க பார் ஸ்டாலின், கோகி கிட்ட அடிக்கடி யமுனா பத்தி விசாரிச்சிக்கோ. அவ பாவம் எதுனாலும் சொல்ல தயங்குவா, பயப்படுவா. உன் கோகி மாதிரி போல்ட் இல்ல, ஸோ ஒரு சிஸ்டர் போல அவளைக் கேர் பண்ணிக்கோ” என்று ஸ்டாலினுக்குச் சொல்ல அவனோ விழித்தான்.
“டேய்! இவ்வளவு அக்கறை இருக்கவன் இங்கயே இரேன் டா” என்று ராமு சொல்ல
“இல்ல, எனக்கும் கஷ்டமா இருக்கு ராமு. நான் எங்க ஊருக்குப் போனாதான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க முடியும். இங்க யமுனாவைப் பக்கத்துல வைச்சிட்டு பார்க்காம பேசாம இருக்கறது முடியாது..ரா. அதுக்கு தூரமா இருந்தாலும் என்னை என்னால சமாதானம் செய்ய முடியும். இன்னும் இரண்டு வருஷம் இருக்கே, எதுனாலும் மாறலாம், என் யமுனாவே என்னை தேடலாம். எனக்கான அன்பு என்னைக் கண்டிப்பா வந்து சேரும்” என்றவனிடம் என்ன பேசுவது என்ற நிலையே ஸ்டாலினுக்கும் ராமுவுக்கும்.
கீழே வந்து மாதவன் ஸாரிடமும் ராணியக்காவிடம் சொல்லிவிட்டு சென்றான்.
நண்பனை ரெயில் நிலையத்தில் ஏற்றிவிட்டு வந்த பின், ஸ்டாலின் ராமுவிடம் பொங்கிவிட்டான். ஸ்டாலினுக்கு யமுனாவின் மீது அவ்வளவு கோபம்.
“பிடிக்கலன்னா வந்து சொல்றதுக்கு என்னவாம்டா? எவ்வளவு ஃபீல் பண்ணிட்டுப் போறான் பார்த்தியா?”
“இவன் எந்த நம்பிக்கையில அந்த பொண்ணை நினைச்சிட்டு இருக்கான் தெரியல, இதுக்காகத்தான் இதெல்லாம் வேண்டாம்னு ஆரம்பத்துல சொன்னேன். இந்த காதல்னாலே இதான் பிரச்சனை” என்று எரிச்சலாய் சொன்னான் ராமச்சந்திரன்.
“டவுட் கேட்க மட்டும் பேச முடியுதுல, இந்த மாதிரி எனக்குப் பிடிக்கலங்க சரிவராதுங்கன்னு சொல்றதுக்கு என்ன? இதுல டிபன் பாக்ஸ் வேற ஒப்படைக்க சொல்லிட்டுப் போறான் டா. பெரிய கணையாழி நான் ஒப்படைக்கனுமாம்” என்று ஸ்டாலினும் திட்டினான்.
இங்கே சூர்யாவுக்காக இவர்கள் யோசிக்க சூர்யாவோ ரெயிலில் சென்று கொண்டிருந்தான். தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான் சூர்ய நாராயணன்.
யமுனா லைப்ரரியில் ஒருமுறை தவறவிட்டு சென்றதை தலைவன் தவறாமல் தன்வசப்படுத்தி இருந்தான். அவளது நினைவாய் இருந்த கைக்குட்டையை அணைத்துக்கொண்டவனுக்கு அகம் அடைத்தது.
ஒரு மாதம் ஆகிற்று யமுனாவைப் பார்த்து. காதல் சொன்ன பின் காணும் காலம் வாய்க்கவில்லை. தேர்வுகள் இருக்க படிப்பில் கவனம் செல்ல, யமுனாவை பார்க்க முடியவில்லை, முயலவில்லை.
ஆனால் முப்பது நாள் கழித்து அவள் வருவாள் என்று மனம் பெரிது ஏங்கி எதிர்ப்பார்த்திருக்க, பெரிய ஏமாற்றம் தந்துவிட்டாள் அவனின் ப்ரியத்தம்மா!
கைக்குட்டையை இன்னும் இன்னும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டவன்
“நா ப்ரியத்தம்மா!” என்றான் ஏக்கத்துடனும் ஏங்க வைக்கும் காதலுடனும்.
“எப்போ ரா எங்கிட்டு வருவ? என்னைப் பிடிக்கலையா? ஏன் என்னைப் பார்க்க வரல?” என்று தன்னோடு பேசிக்கொண்டான்.
இங்கு அவன் ப்ரியத்தம்மாவின் நினைவுகள் ஓடு பயணிக்க, பாவையோ அவன் நினைவுகளை மொத்தமாய்த் தன்னை விட்டு தூர வைக்க நினைத்தாள்.
சூர்யாவுக்கோ நண்பர்களின் ஆதரவு இருக்க, யமுனாவிற்கோ ஆதரவுமில்லை ஆறுதலுமில்லா நிலை. கோகிலாவைத் தவிர யாருக்கும் சூர்யாவின் விருப்பம் தெரியாது, யமுனாவிற்கு எப்போதும் தன்னைக் குறித்து யாரும் பேசுவது பிடித்தமில்லை, முடிந்தவரை தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பாள்.
இப்போது தன்னுணர்வுகளை வெளியே சொல்ல முடியவில்லை. அதனையும் விட தன்னுணர்வுகள் தனக்கே புரியாத ஒரு நிலை. ஒங்கியெழும் உணர்வுகளை ஒடுக்கமுடிவில்லை, தானாய்க் கலங்கும் தன் மனதை தடுக்கவும் முடியாத ஒரு நிலை.
கோகிலா யமுனாவிடம்
“ஏன் யமுனா? உனக்கு அவரைப் பிடிக்கலையா? நீ போகவே இல்லன்னு ஸ்டாலின் சொன்னாரு” என்று தோழியிடம் கேட்க
“இல்ல, எனக்கு எதுவும் வேண்டாம் கோகி. என்னை அதைப் பத்தி கேட்காத. எனக்கு இஷ்டமில்ல” என்றாள்.
“உனக்குப் பிடிக்கலன்னு சொல்ல கூட நீ வரலன்னு ஸ்டாலின் ரொம்ப கோவப்பட்டார்.” என்றதும் யமுனாவின் முகம் இன்னும் கசங்கியது. அவன் மொழிந்த காதல் வார்த்தைகள் இன்னும் காதினுள் கேட்டது.
“நுவண்டே நா லோகம்” என்ற அவனின் பேச்சு இன்னும் எதிரொலித்தது.
அவனைப் பார்த்து பிடிக்கவில்லை என்று சொல்லும் தைரியம் கூட தனக்கில்லை என்றே தோன்றியது. அவன் அவன் வழியில் போகட்டும், என்னால் என் வீட்டை மீறமுடியாது. இது எதுவும் எனக்கு வேண்டாம் என்ற உறுதி மட்டும் உள்ளமெல்லாம் நிறைந்து இருந்தது.
“சூர்யாண்ணா கூட குண்டூர் போய்ட்டாராம், நீ பயப்படாத. உன்னை இனிமே எப்பவும் டிஸ்டர்ப் செய்யமாட்டார்” என்று கோகிலா தைரியம் தருவதாய் நினைத்து சொல்லிப்போக, அது இன்னும் யமுனாவை உடையவைத்தது.
அவன் வழியில் அவன் போகட்டும் என்று நினைவே வலியை வன்மையாகத் தந்தது வஞ்சிக்கு.
அவர்களுக்கு இன்னும் ப்ரீட்சை நடந்து கொண்டிருக்க, இரண்டு நாட்கள் விடுமுறை இருக்கவும் ஹாஸ்டல் வராண்டாவில் சுவரில் சாய்ந்தபடி கையில் புத்தகத்துடன் அவள் உட்கார்ந்திருந்தாள். இந்த முப்பது நாட்களும் மூச்சுத்திணறலாமல் அவள் எப்படி இருந்தாள் என்பதே அதிசயம்தான். முயன்று படிப்பில் கவனம் செலுத்த, கணக்குப் புரியவில்லை என்று மேகலா வந்து சந்தேகம் கேட்க, அவள் நோட்டில் சூர்யாவின் கையெழுத்தில் அந்த கணக்கு சுடர்விட்டது. அந்த நினைவே சுட்டது அவளை. எத்தனை பொறுமையுடன் எனக்குப் புரியவைத்தான் என்று நினைவு எழுந்தது.
அடுத்தவரை முட்டாளாய் உணரவைக்காதவர்களே உண்மையான அறிவாளிகள்!
அப்படி அவளை உணர வைத்தவன் சூர்யா. தனக்குத் தெரியவில்லையே என்ற கழிவிரக்கத்தில் இருப்பவளை அத்தனை மென்மையாய்க் கையாள்வான்.
அவனின் சுந்தர தெலுங்கும் அன்பு கொண்ட சுபாவமும் சுறாவளியை அவளை சுருட்டிக்கொள்ள உணர்வு சுழலில் சிக்கி தவித்தாள் யமுனா.
‘ஓடம் போல் ஆடுதே மனசு கூடி தான் போனதே வயசு காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது’