சூர்யாவைப் பார்க்க முடியாது என்பது அவ்வளவு வேதனையைத் தர, அவனின் நினைவை விரட்டி அடிக்க முடியவே முடியாதா என்ற மன அழுத்தம் யமுனாவிடம். நிச்சயம் சூர்யா காதல் என்று அவள் மனதில் கல் எறியாமல் இருந்து இருந்தால், இந்த சலனம் யமுனாவிடம் எக்காலமும் தோன்றியிருக்காது.
இப்படி அவனை தேடுகிறாயே என்று தன் மீதே ஒரு கோபம். உண்மையில் இந்த தேடல் காதலா என்ற தெளிவில்லை. அதனையும் விட இதன் எதிர்காலம் என்ன என்று யோசனையுமில்லை. அந்த நொடி, அந்த நேரம் சூர்யாவைப் பார்க்க முடியவில்லையே என்ற எண்ணமே ப்ரதானம். இனி பார்க்கவே முடியாதே என்ற பரிதவிப்பு.
எதனைக் குறித்தும் யோசனை இல்லை. சுற்றம் எல்லாம் கவனத்தில் இல்லை, சூர்யா மட்டுமே நினைவில் நின்றான். முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டு மடியில் அவளின் டிபன் பாக்ஸ் இருக்க, தேம்பி தேம்பி அழுதாள். யமுனா அப்படி அழுது கொண்டே ஓடி வர, கோகிலாவும் தோழியின் பின்னேயே ஓடி வந்துவிட்டாள்.
“யமுனா, என்னடி ஆச்சுன்னு இப்படி அழற?” என்று கோகிலா கேட்க, அவளின் இடையைப் பிடித்தபடி யமுனா இன்னும் அழுதாள்.
“எம்மா! ஏன் அழறன்னு சொல்லிட்டு அழு. என்னாகிப்போச்சு இப்போ?” என்று கோகி யமுனாவின் முதுகைத் தட்டிக்கொடுத்தாள்.
“தெரியல, எனக்கு எனக்கு..” என்றவளுக்கு சூர்யாவைக் குறித்து சொல்ல தயக்கம். அதை விட என்னாவாகிற்று தனக்கு என்று பெரும் குழப்பம்.
“உனக்கு என்ன வேணும் யமுனா? டிபன் பாக்ஸ் கொடுத்தா அழுவியா நீ? ஸ்டாலின் அப்படியே ஷாக் ஆகிட்டார். அவங்க இன்னும் கிளம்பல, நீ அழுததைப் பார்த்து பயந்து போய் இருக்காங்க. என்ன ப்ரச்சனை சொல்லு” என்று இன்னும் அழுத்தமாய் கோகிலா கேட்க யமுனாவின் பதில் இல்லை.
“யமுனா, எனக்குப் பஸ் போயிருக்கும். அடுத்த பஸ் ஆச்சும் பிடிக்கனும், வீட்ல தேடுவாங்க. சீக்கிரம் ஏன் அழறன்னு சொல்லு. நீ சொல்லாம நான் நகர மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.
“கோகி, எனக்கு சூர்யாவை பார்க்கனும் போல இருக்கு” என்ற தோழியை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் கோகிலா.
முடிவை சொல்ல கூட அவனைப் பார்க்காதவள் இன்று அவனைத் தேட, ஆச்சர்யப் பார்வையுடன் யமுனாவை நோக்கி “ஏன் பார்க்கனும்? என்ன தீடீர்னு?” என்று கேட்க நிஜமாய் யமுனாவிற்குத் தெரியவில்லை.
“தெரியல” என்றாள் கண்ணீருடன்.
“தெரியலன்னா என்ன அர்த்தம்?” கோகி கோபத்துடன் கேட்க
“நிஜமா தெரியல கோகி, என்னவோ நீங்க எல்லாம் இருக்கும்போது அவர் இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”
“அவர் குண்டூர் போய்ட்டார் யமுனா, முன்னாடியே உனக்கு அது தெரியும்தானே?” கோகிலா பொறுமையாகப் பேச
“பார்க்கவே முடியாதா?” என்று யமுனா பரிதவித்துக் கேட்டாள். வார்த்தை இல்லை அவள் உணர்வை சொல்ல.
யமுனாவின் நிலையைக் கண்டு கோகிலாவுக்குப் பாவமாய் இருக்க “சூர்யாவை லவ் பண்றியா?” என்று கேட்டாள்.
அதற்கும் “தெரியலயே டி” என்றாள் யமுனா.
“தெரியலன்னா என்ன பேச்சுடி இது? பார்க்கனும்ன்ற, லவ் இல்லைன்ற. அன்னிக்கே அவர் உன் முடிவைக் கேட்டப்போ எனக்கு இதெல்லாம் வேண்டாம்னு சொல்லி, அவரைப் பார்க்கக் கூட போகல. இப்போ என்ன இப்படி?”
“எனக்கு சூர்யாவைப் பார்க்கனும் போல இருக்கு. ஆனா எனக்கு லவ்வெல்லாம் இல்லை. எனக்கு அதெல்லாம் வேண்டாம்” என்றவளை என்ன செய்வதென தெரியவில்லை கோகிலாவிற்கு.
உண்மையில் நட்புக்கும் காதலுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளிக்குள் சிக்கித் தவித்தாள் யமுனா. காதல் என்பதை விட சூர்யாவின் மீதான அபிமானம் அதிகம். அந்த உணர்வின் பெயர் மொத்தமாய் ‘சூர்யா’ மட்டுமே.
சில நிமிடம் அழுது கரைந்தவள், பின் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ,
“கோகி! உனக்குப் பஸ் வந்திடும். நீ கிளம்பு” என்றவள் ஹாஸ்டல் பக்கம் நடக்க,
“ஏன் டி இவ்வளவு நேரம் அப்படி அழுதுட்டு இப்ப இப்படி பேசுற?” என்று கேட்டாள் கோகிலா.
“தெரியல கோகி, எனக்கு என்னவோ மனசுக்குக் கஷ்டமா இருக்கு. சூர்யாவை பார்க்கனும் தோணுது, ஆனா அவர் வேண்டாம்னுதானே விலகிட்டேன், விடு. இன்னிக்கு ஸ்டாலின் அண்ணாவை பார்த்ததும் அவர் எப்பவும் கூட இருப்பார்ல, அந்த ஞாபகத்துல தேடிட்டேன். அவரும் என்னை மறந்திடுவார், நானும் மறந்துடுவேன்” என்று தனக்கு சமாதானம் சொன்னபடி யமுனா ஹாஸ்டலுக்குப் போய்விட, கோகிலா மீண்டும் ஸ்டாலின் நின்ற பேருந்து நிறுத்தம் சென்றாள்.
“ஏய் கோகி! என்னாச்சு உன் ப்ரண்டுக்கு?” என்று ஸ்டாலின் பதறியபடி கேட்க, எல்லாவற்றையும் சொன்னாள் கோகிலா.
“இப்போ என்ன ஸ்டாலின் பண்றது. நீ சூர்யாண்ணாவுக்கு ஒரு லெட்டர் போடுறியா? இல்லைன்னா போன் நம்பர் தெரிஞ்சா ஒரு எஸ்.டி.டி போடேன். யமுனா ரொம்ப அழுதாடா, பாவமா இருக்கு” என்று தோழிக்காகப் பேச
“ரொம்ப பாவம்தான் உன் ப்ரண்ட், ஏன் எங்க சூர்யா நைட் வரைக்கும் லைப்ரரிலயும் உன் காலேஜ் வாசல்லயும் நின்னானே? அப்போ பேசினியா டி நீ? ஒரு மரியாதைக்காகவாச்சும் அந்த பொண்ணு சூர்யா கிட்ட வந்து பேசுச்சா? அவன் என்ன ரோட் சைட் ரோமியோவா? என்ன செஞ்சிடுவான் உன் ப்ரண்டை,?” என்று சூர்யாவுக்காக ஸ்டாலின் கோபமாய்ப் பேசினான்.
“ஸ்டாலின், ஸ்டாப் இட்! ரொம்ப பேசாதடா. அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இங்க படிக்க வந்திருக்கா தெரியுமா? ஈஸியா ஒரு பையன் லவ் சொன்னதுமே அக்ஸெப்ட் பண்ணிக்கனுமா? காத்திருக்க தெரியலன்னா என்ன காதல் உன் ப்ரண்டோடது? இவ சிட்டிவேசன் புரிஞ்சிக்காம அவர் பாட்டுக்கு குண்டூருக்கு மூட்டையைக் கட்டிட்டுப் போய்ட்டார். ஆறு மாசம் தெரிஞ்ச ஒருத்தனுக்காக அப்படியே ஓடி வந்திடனுமோ?” என்று கோகி சண்டைக்கு நின்றாள்.
இவர்கள் சண்டையைப் பார்த்த ராமு “ஏன்மா நீயும் சண்டை போடுற? அட்லீஸ்ட் உன் ப்ரண்ட் அவனை ஒரு தடவ வந்து பார்த்து பேசியிருக்கலாமில்ல” என்று ராமச்சந்திரனும் பேச
“இங்க பாருங்க ராமு, அவ ரொம்ப அமைதியான சுபாவம். சூர்யா கிட்ட பேசுனதே ஆச்சர்யம்தான். மத்தபடி எங்களைத் தவிர யார்கிட்டவும் நெருங்கிப் பழகமாட்டா, இவன் தான் புரியாம பேசுறான்னா நீங்களுமா? உங்க ப்ரண்டும் வெயிட் பண்ணாம ஊருக்கு ஓடிட்டார், இப்போ இவ அழறா” என்றாள் சலிப்பாக.
“அப்போ அந்த பொண்ணு லவ் பண்ணுதாம்மா சூர்யாவை?” என்று கேட்டான் ராமச்சந்திரன்.
“தெரியலன்னு சொல்றா, ஆனா சூர்யாவை மிஸ் பண்றா அது மட்டும் நிஜம்” என்ற கோகிக்கு அடுத்த பேருந்து வர
“கோகி உன் பஸ்” என்றான் ஸ்டாலின்.
“தெரியுது எனக்கு” என்று அவனை முறைத்தவள்
“நீ முடிஞ்சா எதாவது செய், இல்லையா நான் பார்த்துக்கிறேன்” என்று கோபத்துடன் சொல்லி கோகிலா பேருந்தில் ஏறிக்கொண்டாள்.
கோகிலா பேருந்தில் ஏறவும் நண்பர்கள் இருவருக்கும் முகம் கொள்ளா புன்னகை, கட்டிக்கொண்டு
“தேவுடா!” என்று சிரித்தார்கள்.
இருவருமாக அவர்கள் தங்கியிருக்கும் வீடு வந்து சேர, சமையலுக்குக் காய்கறிகள் நறுக்கிக் கொண்டிருந்தான் சூர்யா.
“டேய்! ராஸ்கல்” என்று ஸ்டாலின் சந்தோஷமாய்க் கத்த
“என்னடா? ஒரே ப்ரைட்டா இருக்க?” என்று சூர்யாவும் புன்னகையுடன் கேட்டான்.
“இன்னிக்கு கோகிலாவைப் பார்த்து அப்படியே யமுனாவோட டப்பாவைக் கொடுக்க போனோமா..” என்று ஸ்டாலின் கதையை ராகமாய் இழுக்க
“நுவ்வு அம்மாயிந்னு சூஸாவா?(அவளை பார்த்தீங்களா?)” என்று உற்சாகமாய் முகம் ப்ரகாசிக்க கேட்டான் சூர்யா.
“அவுனு ரா பாபு” என்ற ஸ்டாலின் சொல்ல சொல்ல கேட்டிருந்த சூர்யாவுக்குக் கலவையான உணர்வுகள். அத்தனையிலும் காதல் மட்டுமே அடிப்படை!
“நா அம்மாயி என்னைத் தேடினாளா?” என்று பத்து முறைக் கேட்டு கேட்டு பரவசமடைந்தான் சூர்யா.
“ஆமாடா ஆமா. உன் ப்ரியத்தம்மா உன்னை தேடினா, அதுவும் நாங்க இரண்டு பேரும் மட்டும் இருக்கவும் மூணாவது மடையனை காணுமேன்னு அந்த பொண்ணு கண்ணு தேடிட்டு, இவனைக் காணும்னதும் கண் கலங்கி ஓடிச்சுப் பாரு, அப்படியே ஒரு படம்தான் ஓடிச்சு” என்று சிரித்தான் ராமச்சந்திரன்.
இரண்டு நாட்கள் முன் வந்து நின்ற சூர்யாவைக் கண்டு நண்பர்கள் இருவருக்கும் ஆனந்தம், அதனை விட அதிர்ச்சி.
“என்னடா எங்களைப் பார்க்காம இருக்க முடியலையோ?” என்று ஸ்டாலின் பாசமாய்க் கேட்க
“லேதுடா, என் ப்ரியத்தம்மாவுக்குக் காலேஜ் ஓபன் பண்ணிடுவாங்க இல்லை. அதனால் வந்துட்டேன்” என்று சூர்யா சொல்ல
“அடப்பாவி! அதுக்காகவா வந்த?” என்று ராமு கேட்டான்.
“அதானே பார்த்தேன் ப்ரியத்தம்மான்னு பைத்தியக்காரன் மாதிரி சுத்திட்டு இருந்துட்டு உடனே போறவனா இவன்? பார்த்தியா கரெக்டா வந்துட்டான். டேய் கடங்காரா போகும்போது கொடுத்த சட்டைப் பேண்டை எல்லாம் கேட்க மாட்டியே?” என்று ஸ்டாலின் வம்பிழுக்க
“போடா” என்று சிரித்தான் சூர்யா.
“ஆனாலும் இவன் வந்ததுல ஒரு நல்லது, வாடகையை வழக்கம்போல மூணா பிரிச்சிக்கலாம்” என்று ராமு சொல்ல
“அதேதான் டா, வீட்டு வேலையையும் பிரிச்சுக்கலாம். வாழ்க உன் காதல்!” என்று ஸ்டாலின் கோஷமிட மூவருக்குமே சிரிப்பு.
“சாப்டியா நீ?” என்று கேட்ட ராமு உணவினை எடுத்து வைக்க
“ராமய்யா ராமய்யாதான் டா” என்று சிரித்த சூர்யா அவனின் பையில் இருந்து ஊறுகாய் எடுத்து வைத்து
“கொங்க்ரா பச்சடி ரா, வதினா கொடுத்தாங்க. இது அரிஷலு, ரவா லட்டு” என்று பலகாரங்களை கடை பரப்பினான்.
“அது என்னடா இன்னொரு டப்பா?” என்று ராமுவின் பார்வை போக
“ரைட்! ரைட்! ஆனா குண்டூர் பக்கம் போன வண்டி என்ன பொசுக்குன்னு மெட்ராஸ் பக்கம் வந்துடுச்சு?” என்று ராமு கேட்கவும்
“அதானே? இங்க இருந்தா என் காதலியைப் பார்க்க முடியாதுன்னு அப்படி ஃபீலிங்க்ஸ் விட்டியே டா, என்ன அப்படியே வந்துட்ட? அந்த பொண்ணு உனக்கு முடிவு கூட சொல்லலயே டா” என்றான் ஸ்டாலினும்.
“ப்ச், அது அங்க தனியா இருக்க முடியல. எப்பவும் யமுனா ஞாபகம்தான். யோசிச்சுப் பார்த்தா யமுனா மேல தப்பில்லை, ஷி இஸ் ஜஸ்ட் நைண்டின் ரா, அவளுக்கு நான் லவ் சொன்னதே ஷாக் தான். கொஞ்ச நாள் போகட்டும், பொறுமையா இருக்கலாம் டிசைட் பண்ணிட்டேன்” என்றான் சூர்யா தெளிவாக.
“இங்க இருந்தாதானே அவ மனசுல என்னை நினைக்க வைக்க முடியும், என்னால அவளை தள்ளிவச்சு இருக்க முடியல. அட்லீஸ்ட் அவ இருக்க ஊர்ல இருக்கனும் வந்துட்டேன்” என்றான் முடிவுடன்.
“நீ வந்ததும் அந்த பொண்ணு உன்னைத் தேடி வந்துடுமா?” என்று ஸ்டாலின் நம்பிக்கை இல்லாது பேச
“தேடி வந்துட்டா? வரலனாலும் அவ படிச்சு முடிக்கும்போதும் நான் அவளை நினைக்கிறேன்னு அவளுக்கு என்னைப் புரியவைக்கனும். சின்ன பிள்ள ரா நா அம்மாயி” என்றான் காதலாக.
என்னவோ காத்திருப்பதில் சுகம் கண்டான் அந்த காதலன்.
கடவுளின் க்ருபையோ, காதலின் ஆழமோ என்னவோ யமுனாவின் தேடல் சூர்யாவுக்கு ஒரு புது உணர்வை புலர செய்து மனதை மலரச் செய்தது.
****************
இரவில் ரேடியோவில்
‘வாய் திறந்தேன்
வார்த்தை இல்லை கண்
திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின்
சோதனை புரியுமா இவள்
மனம் இது விடுகதை’ என்று பாடல் ஓட, பாவை மனம் என்னவோ இத்தனை நாள் இல்லாது அந்த இசையில் ஆறுதல் தேடியது.
வாணி ஜெயராமின் குரல் வலியும் தந்து வாஞ்சையும் தந்து போனது வஞ்சிக்கு. நான் கேட்கும் இசை அவரும் கேட்பாரா என்று எண்ணம் அவனில் மட்டுமே உழன்றது.
கட்டாயமாய்க் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள் தன் மனதை. உனக்கு உன் உணர்வே தெரியாத போது அவரிடம் என்ன சொல்வாய், அவரை மதித்து பதில் கூட சொல்லாமல் இருந்து விட்டு இப்போது அவரைப் பார்க்க நினைத்தால் அவர் வந்து நிற்பாரா? என்று மனம் திட்டியது.
அடுத்த நாள் கோகிலாவை பேருந்து நிறுத்தத்தில் விட, ஸ்டாலினும் ராமுவும் வந்து நிற்க, கோகிலா ஸ்டாலினுடன் பேசுவாள் என்று நினைத்து யமுனா
“நான் போறேன் டி” என்று திரும்ப, கை கட்டிக் கொண்டு காதல் பார்வை பார்த்து நின்றான் சூர்யா.
அவனைப் பார்த்து அதிர்ச்சியில் ஆனந்தம் அகத்தில் பெருகி வழிய, ஒரு அடி பின்னால் போன யமுனாவின் விழிகளில் கண்ணீர்.
“சூர்யா!” என்று அழுகையுடன் அவன் பெயரை உச்சரிக்க
“நேனே டா ப்ரியத்தம்மா” என்றவனின் ப்ரியங்கள் இதயம் தொட்டது.
‘வா வா இதயமே என் ஆகாயமே உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே’