யமுனா அங்கே சூர்யாவை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. நம்பமுடியாத ஒரு ஆனந்தம்!
மீண்டும் நம்ப முடியாமல் “சூர்யா” என அழைக்க
“நேனே மா ” என்று சூர்யா புன்னகை செய்ய, யமுனாவிற்கு சந்தோஷத்தில் கண்ணில் நீர் நின்றது.
“என்னைத் தேடுனியா?” என்று சூர்யா யமுனாவை நெருங்கி வர ஒரு அடி பின்னால் நகர்ந்து கோகிலாவை பார்த்தாள்.
அவளோ “என்ன ஏன் டி பார்க்கிற? நீதான இவரை பார்க்கணும் சொன்ன, உனக்காக அண்ணா இங்க வந்துட்டாங்க பாரு” என்றாள்.
கோகிலாவின் இந்த வார்த்தைகள் யமுனாவை பயம் கொள்ள செய்தன. எனக்காக வந்தான் என்றால் ‘ஐயோ! காதல் என்பானே’ என்று பதறியது மனம்.
சட்டென திரும்பி கல்லூரிக்குள் போக பார்க்க, சூர்யா உடனே
“ஏமாயிந்தி யமுனா?” என்றான் அவனும் டென்ஷனாக.
சூர்யா பேச அவன் பக்கம் கூட பார்வை போகவில்லை.
அவனைப் பார்க்க வேண்டும் என்ற பரிதவிப்பு, பார்த்தவுடன் பரவசம் என பல பாவனைக் காட்டியவளுக்கு அவன் காதல் என்று வந்து நிற்கையில் பதில் சொல்ல முடியவில்லை. காதல், கல்யாணம் எல்லாம் அவளைப் பொருத்தவரை குடும்பத்தினரின் முடிவு, அதிலும் அவள் வீட்டில் எல்லாம் அப்பா சற்குணப்பாண்டியனின் சட்டம்.
சூர்யாவுடன் மீண்டும் பேசி பிரச்சனையை இழுத்துக் கொள்ள தயாராக இல்லை யமுனா. என்னவோ மீண்டும் குழப்பங்கள் சூழ்ந்தன. சூர்யாவைப் பார்த்த சந்தோஷம் அது கொடுத்த பரவசம் எல்லாம் கண நேரத்தில் காணாமல் போக, அழுகை வர கண்ணீருடன் கல்லூரிக்குள் போக பார்க்க, கோகிலா யமுனாவின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“என்னாச்சு யமுனா? அண்ணா கேட்கிறார்ல பேசாம போற. எதாவது பேசுடி. அன்னிக்கு அப்படி அழுத” என்று கேட்க தோழியை முறைத்த யமுனா
“கோகி ப்ளீஸ் பேசாதடி. எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம்” என்று சூர்யாவைப் பார்க்காமல் சொல்லியவள் முன்னால் நடக்க
“உனக்கு என்னைப் பார்க்க வேண்டாம்னா ஏன் இந்த அழுகை யமுனா? என்னை பார்த்தவுடனே அப்படி சந்தோஷப்பட்ட?” என்று சூர்யாவின் கேள்விகள் கோபத்தில் வந்தன.
நின்று பேசக் கூட செய்யாமல் பயப்படும் இந்த செயல் சுத்தமாய் அவனுக்குப் பிடிக்கவில்லை.
“என்னை பாரு யமுனா” என்று சொல்ல
“சூர்யா! எனக்குப் பசிக்குது. நான் ஹாஸ்டல் போகனும்” என்று கீழே குனிந்து யமுனா சொல்ல
“ரைட்! நீ சாப்பிட்டு வா யமுனா. நான் இங்கேயே வெயிட் பண்றேன். ஆனா நீ வந்தா மட்டும்தான் நான் இங்க இருந்து போவேன். அதை மறக்காத” என்றான் அழுத்தமாக.
“டேய்! விடுடா நாளைக்குப் பேசிக்கலாம். நம்ம போகலாம், இன்னும் நம்ம சாப்பிடல” என்று ஸ்டாலின் சொல்ல
“இல்லை ரா ஸ்டாலின், நான் வரல. நீங்க போங்க. யமுனா சாப்பிட்டு வரட்டும், நான் பேசனும் இன்னிக்கு” என்றான் தீவிரமாக.
“நான் வரமாட்டேன்” என்று யமுனா பேச
“நானும் போக மாட்டேன் யமுனா, நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தாத ப்ளீஸ். நான் உங்கூட ஃபைவ் மினிட்ஸ் பேசினா போதும்” என்றான் சூர்யா.
இவனுடன் பேசினால் இவனுக்கான என் தேடல் அதிகமாகிவிடும். இந்த தவிப்பை நான் தவிர்க்க வேண்டும். அதற்கு இவனை பார்க்க கூடாது என்று அழுத்தமாய் நம்பினாள்.
பார்க்காமல் இருந்தாலும் துன்பம், பார்த்தாலும் துன்பம் என்ற இந்த நிலை பிடிக்கவே இல்லை யமுனாவிற்கு.
கோகிலா உடனே “அண்ணா, இப்படித்தான்னா தொட்டா சிணுங்கியா இருக்கா, உங்களைப் பார்க்கவே முடியாதான்னு அப்படி அழுதா, இப்போ பேசாம போறா” என்று பெருமூச்சு விட்டாள்.
“உன் ப்ரண்ட் ஏன் டி நின்னு பேசாம எப்ப பாரு அருவியைத் திறந்துவிடுது” என்று எரிச்சலானான் ஸ்டாலின். ராமு சூர்யாவைப் பார்த்தவன்
“சூர்யா, அந்த பொண்ணை டென்ஷன் பண்ணாத. அப்புறம் பேசலாம், நீ வா” என்று அழைக்க
“டேய் என்ன விளையாடுறியா? அன்னிக்கு நைட் வரைக்கும் உனக்குப் பதில் சொல்ல வந்துச்சா இந்த பொண்ணு? வீணா டைம் வேஸ்ட் பண்ணாத. எவ்வளவு தெளிவா பேசின, டைம் கொடுப்போம் டா. இப்போ வா நீ” என்று ராமு கண்டிப்பாய்ப் பேச
“ரைட் தான் ராமு, டைம் கொடுக்கத்தான் நினைச்சேன். நேத்து நீங்க சொன்னப்போ கூட யமுனாவோட இந்த ரியாக்ஷன் நான் நினைக்கல. பட் இப்போ என்னைப் பார்த்து அவ்வளவு சந்தோஷமும் அழுகையுமா நிக்குறா. அவ என்னவோ டென்ஷன்ல இருக்கா, அதைப் பேசி அவ டென்ஷன் போக்காம நான் வரமாட்டேன். இப்படி அவ அழறது நாக்கு இஷ்டம் லேது ரா” என்றான் முடிவாக.
ஹாஸ்டலுக்குச் சென்ற யமுனாவிற்கு இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே ஒரு நிலை. அவனை பார்த்தவுடன் அப்படியொரு அளவிடா முடியாத ஆனந்த அலை அவளுள் ஆர்ப்பரித்தது. அடுத்து என்று நினைக்க பயம். நெஞ்சம் வலித்தது.
அவள் தோழி கனிமொழி வந்து அழைக்க, முகத்தைத் துடைத்துக் கொண்டு உண்ணப் போக, கோகிலா இவளைத் தேடி வந்தவள்
“யமுனா! இப்படி அழறதால உனக்கும் எல்லாருக்கும் கஷ்டம்தான். அழுகை ஆறுதலா இருக்கனுமே தவிர எதுக்குமே தீர்வாகாது. ஒழுங்கா யோசிச்சு ஒரு முடிவெடு. உன் மனசுக்கு என்ன வேணும்னு நீயே முடிவு பண்ணு. ஆனா ஒன்னு நீ வந்து பேசற வரைக்கும் சூர்யா அங்க இருந்து நகர மாட்டார், அவ்வளவுதான் சொல்லிட்டேன். அன்னிக்கும் அவ்வளவு நேரம் உனக்காக லைப்ரரியில வெயிட் பண்ணினவர், நீ வரலனதும் காலேஜ் பக்கமாவே நைட் வரைக்கும் சுத்தியிருக்கார். நான் சொல்றதை சொல்லிட்டேன்” என்றாள்.
“இன்னொரு தடவ அழுத, உன்னை சும்மா விட மாட்டேன் டி கழுத” என்று திட்டிவிட்டுப் போனாள்.
“என்னாச்சு” என்று கனிமொழி பார்வையால் கோகிலாவிடம் கேட்க ‘அப்புறம் சொல்றேன்’ என்று விட்டு போனாள்.
உண்டு முடித்து விடுதியில் தன்னறையில் இருந்த தலைவிக்குத் தலைவனின் நினைவுகளே. இருப்பானா இல்லை சென்றிருப்பானா என்று எண்ணம் போனது.
உண்மையில் சூர்யாவை மிகவும் பிடித்தது மங்கையின் மனதுக்கு. சூர்யாவின் காதல் வேண்டாம் என்ற மனது, சூர்யாவை வேண்டாம் என்று நினைக்க முடியவில்லை.
‘சூர்யா’ என்பவன் தான் காதலென இன்னும் உணரவில்லை யமுனா. சூர்யோதயம் என்றோ எப்போதோ அவளுள் நிகழ்ந்திருக்க, அதனை ஏற்கவும் எதிர்க்கொள்ளவும் தைரியமற்று இருந்தாள்.
அப்படியே யோசனைகளுடன் அந்த காரிடாரின் தூணில் சாய்ந்திருந்தவளின் கவனம், ஹாஸ்டலில் இருந்து வெளியே சென்று விட்டு வந்த பெண்கள் மேல் திரும்பியது. ஹாஸ்டலில் இருக்கும் பெரிய கடிகாரத்தைப் பார்க்க, இன்னும் பத்தே நிமிடத்தில் ஹாஸ்டல் கதவு மூடிவிடும். அதன் பின் வெளியே செல்ல அனுமதி இல்லை.
தனக்காக குண்டூரில் இருந்தே வந்திருப்பவன் கண்டிப்பாய் போயிருக்க மாட்டான் என்று நம்பியது மனம். என்ன செய்வதென யோசித்தவள் கனிமொழியைப் பார்த்தாள். கோகிலா போல் தைரியமான பெண் அவள், அவளை நம்பி என்னவும் சொல்லலாம்.
“கனி! என் கூட வாயேன்” என்று பொன்னியின் செல்வனை படித்துக் கொண்டிருந்தவளை அழைக்க,
“ஏய் இருடி சாத்துக்குடி! வந்தியத்தேவனும் குந்தவையும் மீட் பண்ற சீன். இன்னும் பத்து நிமிஷத்துல கேட் மூடிடுவாங்க. இப்போ எங்க கூப்பிடுற?” என்று வர மறுத்தாள்.
“கனி, ப்ளீஸ் வாடி” என்று கலங்கிய குரலில் யமுனா அழைக்க, அந்த கலக்கம் வேறெதுவும் கேட்க விடவில்லை கனியை.
“கேட் க்ளோஸ் பண்ற டைம், எங்க போறீங்க?” என்று ஹாஸ்டல் நிர்வாகி கேட்க
யமுனா கனிமொழியைப் பார்க்க, “மேம், வந்துடுவோம். அஞ்சே நிமிஷம்” என்று சொல்லி அவளை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
கல்லூரிக்குப் பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையைத்தைப் பார்த்த யமுனா கனிமொழியிடம் “கனி, அங்க ஒருத்தர் வெள்ளை சட்டைப் போட்டு இருக்காரா பாரேன்” என்று சொல்ல
“ஆமா டி இருக்காரே. யார் அவர்?” என்று கேட்க, இன்னும் அவன் போகவில்லை என்றதும் வேகமாய் அவனிடம் கால்கள் போனது.
“சூர்யா!” என்று மூச்சிரைக்க போய் அவன் முன் நின்றாள்.
“இன்னும் போகலையா நீங்க? சாப்பீட்டீங்களா?” என்று கேட்க
“நீ வராம நான் போ மாட்டேன் சொன்னேன் யமுனா” என்று சொல்ல, யமுனாவின் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் நனைக்க
“ஸ்டாப் இட்! அழாத யமுனா. என்ன செஞ்சேன் நான் இப்போ?” என்றான் கோபமாக.
“எ..என்னாலதானே நீங்க சாப்பிடாம இருக்கீங்க, ஸ்…ஸாரி சூர்யா” என்று விசும்ப
“இந்த இடத்துல நின்னுட்டு அழாத” என்று அதட்டினான்.
“ஸாரி சூர்யா” என்றாள் மீண்டும்.
“யமுனா, உனக்கு என்னாச்சு?” என்று நிதானமாய்க் கேட்க
“என்னை பிடிக்கலையா?” என்றான். அந்த பாவனையைப் பார்த்த பாவைக்கு அப்படி சொல்லவே மனமில்லை.
“உங்களைப் பிடிக்கும் சூர்யா” என்றாள் உடனே.
“அப்போ ஏன் அழற? ஏன் பயப்படுற?” இன்னும் இன்னும் பொறுமையாய்ப் பேசினான். அவனின் கனிவு யமுனாவைக் கரைய வைத்தது.
அதற்குள் கனிமொழி அங்கே வந்தவள்
“யமுனா, டைம் ஆச்சு. கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க” என்று சொல்ல, யமுனா பரிதவிப்புடன் சூர்யாவைப் பார்க்க,
“போ யமுனா” என்றான்.
“சூர்யா!” என்று யமுனா பார்க்க
“நேனே டா” என்றான் மதியம் கண்ட அதே புன்னகையுடன். ஆனாலும் அவன் உண்ணாமல், ஏன் நீர் கூட அருந்தாமல் அங்கே காத்திருந்தது யமுனாவிற்கு மிகுந்த கஷ்டமாகிப்போனது.
“டைம் ஆச்சு யமுனா, போ” என்றான்.
“ப்ளீஸ் சூர்யா, சாப்பிட போங்க” என்று யமுனா சொல்லிவிட்டு கனிமொழியின் அருகே செல்ல, அவன் ஒன்றும் கூறாது அவளைப் பார்த்தான்.
அந்த பார்வையில் என்ன உணர்ந்தாளோ “சூர்யா, நா..நான் நாளைக்குப் பேசுறேன், சத்தியமா பேசுறேன். ஆனா சாப்பிடாம இருக்காதீங்க. ப்ளீஸ்” என்று வேகவேகமாய் சொன்னவள் கனிமொழியுடன் நடக்க,
“ப்ரியத்தம்மா!” என்று கொஞ்சம் சத்தமாய் அழைக்க, யமுனா திரும்பி பார்க்க
‘யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு தோப்போடு சேராதோ காத்து பனி காத்து வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை விடை போலே அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாளோ’