“விடுங்க சூர்யா” என்று சொல்ல, உடனே அவளின் கைகளை விட்டவன் கண்களைத் துடைக்க சொல்ல, யமுனா தனது சுடிதார் துப்பட்டாவால் துடைக்க
“வெயிட், அது குத்தும்” என்று சொல்லி அவன் சட்டைப் பையில் இருந்து கைக்குட்டையை எடுத்து நீட்டினான். அதில் முகம் துடைத்த யமுனா,
“இது மாதிரி எங்கிட்டவும் இருந்தது, ஆனா லேடீஸ் கர்ச்சீஃப்?” என்று அவனைப் பார்க்க
அவன் கள்ளச்சிரிப்புடன் “உன்னோடதுதான்” என்று சொல்ல அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.
சூர்யாவோ சாவகாசமாய்
“யூஸ் பண்ணிட்டு கொடுத்திடு யமுனா” என்று அவனுடையது என்பது போல் அவள் கைகளில் இருந்து வாங்கிக்கொள்ள,
“எங்கிட்ட இருந்து எப்போ எடுத்தீங்க?” என்று கேட்க
“அது ஒரு நாள் நம்ம ஹோட்டல்ல சாப்பிட போனோம். அப்ப நீ மிஸ் பண்ணிட்ட, நான் எடுத்துட்டேன். உன்னோட ஞாபகமா எங்கூட இருக்கறது இதுதான். நா ப்ரியத்தமாவோடது” என்று சட்டைப் பையில் அழகாய் மடித்து கைக்குட்டையை வைத்தபடி அவன் உருகி சொல்ல, இவள் மறுகினாள்.
இவ்வளவு அன்பா இவனுக்கு என் மீது? என்று நினைத்து நினைத்து உள்ளம் அடைத்தது.
இப்போது வெயிலும் தாழ்ந்து, மெல்ல பொழுது சாயத்தொடங்கியது. யமுனாவிற்கு நேரமானது உணர்ந்த சூர்யா,
“யமுனா, நுவ்வு சின்னப்பிள்ள ரா. நமக்கு இன்னும் கல்யாணம் செய்ற வயசெல்லாம் ஆகல, உனக்கு மட்டும்தான் உன் நானா பார்த்து பயமா? எனக்கும் என் நானான்னா பயம்தான்” என்று அவன் விளையாட்டுத்தனம் விட்டு பேச, இவனுக்கும் பயமா என்று விழிவிரித்தாள்.
“நிஜமா உங்களுக்கும் பயமா?” என்று யமுனா சந்தேகமாய்க் கேட்க
“சத்தியம் ரா, எல்லாருக்கும் நானா, அம்மா மேல பயம்தான். என்னோட நானா மட்டும் உடனே நம்ம லவ்வுக்கு ஓகே சொல்வாரா என்ன? நீயே இன்னும் சொல்லலயே?” என்று பெருமூச்சுவிட்டான்.
அவள் முகம் பார்த்தவன் “நம்ம இன்னும் லைஃப்ல செட்டில் ஆகனும், நான் ஐபிஎஸ் ஆஃபிஸராகிட்டு உன் நானா கிட்ட வந்து என் யமுனாவை எங்கிட்ட கொடுத்துடுங்க கேட்பேன்” என்றவன்
“கேட்கட்டுமா..?” என்று கேட்டதில் அத்தனை ஆவல், அவள் மீதான காதல் அவன் வார்த்தைகளில், பாவத்தில் வெளிப்பட, அவனிடமிருந்து விடைப்பெறவே எண்ணமில்லை பெண்ணுக்கு.
அவன், அவள், காதல்! அதுவே உலகமாகிடக் கூடாதா என்று பேராவல் பெண்ணிடம்.
“கேட்க…ட்..டும்மா?” என்று மீண்டும் சூர்யா கேட்க, கரைந்து போனாள் அந்த காதல் குரலில்.
யமுனாவிடம் பதில் இல்லாது போக,
“யமுனா? ஏன்ட்டீம்மா?” என்றவன் “என்னம்மா?” என்று திருத்த, தனக்காக இந்தளவு இவன் பார்க்கிறானே என்று தவித்தது மனது, பனித்தது கண்கள்.
“ஏமாயிந்தி?” என்று அவன் பதற, கண்ணீருடன் ஒரு மலர்ந்த புன்னகை.
“ஒன்னுமில்ல” என்று யமுனா தலையசைக்க,
“அப்புறம் ஏன் அழற? அப்பாயிலு அம்மாயினி எடவக்கூடடு…ஐ மீன் பொண்ணுங்களை பசங்க அழ வைக்கக் கூடாதும்மா, என்னால நீ அழுதா கஷ்டமா இருக்கு. லவ் ஒன்னும் தப்பில்லை யமுனா, இப்போ கோகிலா கூட நீ ப்ரண்டானது உன் அப்பாவைக் கேட்டா? லைஃப்ல நம்ம சில சாய்ஸஸ் மேக் பண்ணிதான் ஆகனும். உனக்குப் பிடிச்சா நீ அதுல தைரியமா இருக்க வேண்டாமா? இப்போ என்ன நானா மேல எனக்கும் பயம் இருக்கு, அதை விட உன் மேல நிறைய நிறைய லவ் இருக்கு யமுனா. நீயும் அந்த பயத்தை விட்டு என்னைப் பிடிச்சிருக்கு சொல்லேன்” என்றவன்
“இந்த செமெஸ்டர் முடியட்டும், நீ உன் முடிவு சொல்லு. இல்லையா நான் இரண்டு வருஷம் இங்கதான் இருப்பேன், உனக்காக எப்பவும் நான் வெயிட் பண்ணுவேன் யமுனா. அதுவரை உன்னை டிஸ்டர்ப் பண்ணல, இப்ப டைமாச்சு, ஹாஸ்டல் க்ளோஸ் பண்ணிடுவாங்க. போகலாம் வா” என்று அவளைக் கிளப்பி பேருந்தில் ஏறிக்கொண்டவன் அவளருகே உட்கார இடமிருந்தும் உட்காரவில்லை.
“உட்காருங்க சூர்யா” என்று யமுனா சொல்ல,
“உட்கார்ந்தா உன்னைப் பார்க்க கஷ்டம், நின்னா உன்னை நல்லா பார்க்கலாம்” என்று கண்சிமிட்டியவன் பேருந்து கம்பியைப் பிடித்துக்கொண்டு அவளைப் பார்க்கும் வண்ணம் நின்றுகொள்ள, யமுனாவின் எண்ணம் முழுவதும் சூர்யா என்றவன் மட்டுமே நீக்கமற நிறைந்து இருந்தான்.
பேசினால் பிடிக்கிறது என்றால், பேசாமல் இருந்தாலும் பிடிக்கிறது. பார்த்தால் நினைக்கிறேன் என்று பார்க்காமல் இருந்தால் அப்போதும் நினைவில் நிற்கிறான்.. அவன் சிரித்தால் பிடிக்கிறது, சிரிக்க வைத்தால் பிடிக்கிறது…! அவனுடன் இருக்கும் பொழுதுகள் அத்தனையும் பிடிக்கிறது! அந்த பொழுதுகளை மீண்டும் அகத்தில் அசைப்போட்டால் இன்னும் இனிக்கிறது!
தன்னுடைய சின்ன சின்ன விஷயங்களையும் கவனிக்கிறான், உணர்வுகளை மதிக்கிறான், ரசிக்கிறான். மொத்தமாய் காதலிக்கிறான் என்று யமுனாவின் மனம் உணர்ந்தது. அவன் சொன்னது போல் வாழ்வில் நானே முடிவு எடுக்க வேண்டிய சூழலும் வரும்தானே? அவன் கேட்டது போல் பயத்தை மீறி இவனிடம் என்னால் அன்பு செலுத்த முடியுமா? என்று யோசனை போனது.
ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் கொஞ்சமாய் யமுனாவின் பயத்தைக் காதலால் களைந்தான் சூர்யா. பயத்தைக் களைந்தான் என்பதை விட தைரியமும் துணிச்சலும் தந்தான், தன் பேச்சினால், செய்கையினால்!
பேருந்து நிறுத்தம் வந்துவிட கல்லூரிக்குள் யமுனாவைப் போக சொல்லிவிட்டு அவன் அங்கே நிற்க இரண்டடி வைத்தவள்
“சூர்யா! நீங்க என்னை இனிமே பார்க்க வரமாட்டீங்களா?” என்று கொஞ்சம் தயக்கமாய் விழிகளில் வர வேண்டுமே என்ற விழைதலுடன் கேட்டாள்.
“வரனுமா வேண்டாமா?” என்று அவன் திருப்பிக் கேட்க
“எனக்கு உங்களை லவ் பண்றேனா தெரியல, ஆனா உங்களைப் பார்க்கலன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் சூர்யா” என்று யமுனா சொல்லும்போதே அவள் குரல் கமறியது. தன்னை அதிகம் தேடுகிறாள் என்று அவனுக்குப் புரிய,
சூர்யாவோ “தேவுடா!!” என்று சிரித்தான்.
“என்ன சிரிக்கிறீங்க?” என்று யமுனா கேட்க
“ஏன்ட்டீமா நீ? என்னைப் பார்க்கனும் அவ்வளவுதானே, நேனு டெய்லி வஸ்தானு, ஐ வில் கம். டைம் ஆச்சு, போ” என்று சொல்லி யமுனாவை அனுப்பிவைத்தான்.
யமுனா வரவும் கனிமொழி அவளைப் பிடித்துக்கொண்டாள்.
“என்னடி உன் ஹீரோ என்ன சொல்றார்?” என்று அவள் கிண்டல் செய்ய
“கனி! ஒன்னு கேட்டா உண்மை சொல்லனும். காதலிச்சா தப்பா?” என்று யமுனா தோழியிடம் கேட்க
“ஹீரோ ஸாருக்கு ஓகே சொல்லப்போறியா?” என்று கண்ணடிக்க, அவனை ஹீரோ என்றதில் யமுனாவிற்கு வெட்கம் மலர்ந்தது.
‘நிஜமாவே அவர் ஹீரோதான்!’ என்று மனம் கொஞ்சிக்கொண்டது.
கனிமொழி எல்லாவற்றையும் நடு நிலையுடன் அணுகுவாள் என்று தெரியும். அதனால் அவளிடம் மேலோட்டமாக சூர்யாவிற்குத் தன் மீதான காதலையும், தனக்கு அவனின் மீதான பிடித்தம், அப்பா மீதான பயம். இன்று பேசியது எல்லாம் சொல்ல
“அடியாத்தாடி! ஏன் டி இப்படி ஒருத்தரையா சுத்த வைக்கிற? அவர் என்ன இப்போவே வா ஓடிப்போகலாம், புள்ள பெத்துக்கலாம்னா கூப்பிடுறாரு” என்று கடுப்பாய் சொன்ன கனிமொழி
“வாழ்றது ஒரு தடவதான். நீ கெட்டுப்போனா நானே உன்னைக் கண்டிப்பேன், அவரை கோகிலாவுக்குத் தெரியும் சொல்ற. அவ செம ஷார்ப்! உனக்குப் பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு சொல்லு. எந்த அப்பா அம்மா போம்மா லவ் பண்ணிட்டு வான்னு வாழ்த்தி அனுப்புவாங்க?”
“காதலை வேண்டிக் கரைகின்றேன்
இல்லை எனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்னு பாடியிருக்கார் பாரதியார். காதல் தப்புன்னா, ஏன் பாட்டுல படத்துல கவிதையில கதையில எல்லாம் காதல் வருது. இந்த காதல் ஒரு அரசியல் டி. அது எல்லாத்தையும் உடைச்சிட்டா இங்க ஜாதி, மதம் எல்லாம் அழிஞ்சிடும். அதுக்காகத்தான் இவங்க காதல் பண்ண விடுறதில்ல, ஆனா காதலுக்கும் வயசுக்கோளாறுக்கும் வித்தியாசம் இருக்கு யமுனா” என்று எச்சரிக்கவும் மறக்கவில்லை கனிமொழி.
இதற்காகவே தான் கனிமொழியை யமுனாவிற்குப் பிடிக்கும். கனிமொழியும் சரி கோகிலாவும் சரி அவர்கள் பேச்சில் ஒரு நேர்மை! செயலில் ஒரு துணிவு இருக்கும். அது முடியாத யமுனாவிற்கு அவர்கள் மேல் ஒரு தனி ரசனை!
“நல்லவங்களா, நல்லவங்க மாதிரி நடிக்கிறாங்களா? அவங்க நம்மை விட்டுப் போனாலும் நம்மளால வாழ முடியுமா? எல்லா யோசிக்கனும். ஆசையில காதலிச்சு அவசரத்துல விடக்கூடாது” என்றாள் அழுத்தமாக.
“சூர்யா என்னை விடமாட்டார்” என்று யமுனா ரோஷமாக சொல்ல
“சரிங்க மேடம்! ஆனாலும் ஒரு அளவோட பழகு. எனக்கு அவரைப் பத்தி தெரியல, அதனால ஒரே பார்வையில சொல்ல முடியல. இருந்தாலும் நீ சொல்றது வச்சுப் பார்த்தா நல்ல மனுஷனாத்தான் தெரியறார். உன்னையும் அவர் படிக்கத்தானே சொல்றார்” என்றவள்
“கோச்சுக்காத! அப்படி என்னதான் பேசினார் இதுக்கு முன்னாடியெல்லாம்?” என்று கேட்க யமுனா அவன் கணக்கு சொல்லிக்கொடுத்தது, பின் ஒன்றாய் படம் பார்த்தது எல்லாம் சொல்ல
“அடிப்பாவி! அவரை ஓசில கணக்கு சொல்ல வைச்சுருக்க, இதான் கணக்கு செய்றதா?” என்று யமுனாவைக் கிண்டல் செய்து சிவக்க வைத்தாள் கனிமொழி, கூட சுமதியும் சேர்ந்துகொண்டாள்.
வீட்டிற்குச் சென்ற சூர்யாவின் முகம் அவ்வளவு ப்ரகாசித்தது.
‘யமுனா தீரானா ராதா மதிலோனா
க்ருஷ்ணு நீ ப்ரேம கதா..!’ என்று சந்தோஷமாய்ப் பாடினான்.
“அடேய்! என்னடா யமுனா உன்னைப் பார்க்க வந்துடுச்சா? பாட்டுலயே பதில் சொல்றியா எங்களுக்கு” என்று ராமு சிரிக்க
‘யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே..’
“அந்த பாட்டுதானே டா இது? ஏன் டா யமுனா பெயர் வரப்பாட்டா யோசிச்சுட்டு வந்தியோ? ஆனா இதைப் பாடினா எங்க ஊர் பொண்ணுக்குப் புரியாதுடா, தமிழ்ல பாடனும் பாபு” என்று பாடிய ஸ்டாலின் சிரிக்க, ராமுவின் பார்வையும் ஸ்டாலினின் பார்வையும் ஒற்றைப்புள்ளியில் சங்கமித்து சூர்யாவுக்காக சந்தோஷப்பட்டது.
“அப்போ எங்களுக்கு ரத்னா கஃபேல ரசமலாய் கண்டிப்பா உண்டு” என்று ஸ்டாலின் சூர்யாவைப் பார்க்க
“பயந்துட்டே இருந்தோம் டா. நீ இப்படி சந்தோஷமா வரவும்தான் எங்களுக்கு உயிரே வருது” என்று ராமு சொல்ல
“ஆமாடா. நான் வேற யமுனா உன் லவ்வுக்கு ஓகே சொல்லுச்சுன்னா இந்த ராமச்சந்திரனுக்கு திருப்பதில மொட்டைப் போடுறேன்னு வேண்டியிருக்கேன்” என்று ஸ்டாலின் கிண்டலடிக்க, ராமு
“அவ்வளவு அக்கறை இருந்தா நீயே போடேன் டா மொட்டையை” என்று ஸ்டாலினின் முதுகில் அடித்தான்.
“என்னாச்சு சொல்லு” என்று ஸ்டாலின் ஆர்வமாக.
“என்னைப் பிடிச்சிருக்கு சொன்னா, போக வேண்டாம் சூர்யான்னு என் கையைப் பிடிச்சிட்டா” என்று தனது கையை சூர்யா பார்க்க
“டேய் ராஸ்கல்! உன் ஆளு தொட்ட கைன்னு குளிக்காம எல்லாம் இருந்துடாத சொல்லிட்டேன்” என்று ஸ்டாலின் வம்பு செய்ய,
“இந்தா ஆரம்பிச்சிட்டான்ல, இனிமே வெயில் குளிருதும்பான், மழை சுடுதும்பா. நிலாவே போகாதன்னு பாடுவாங்க, கவிதையெல்லாம் கூட எழுதுவான்..” என்று கிண்டலாய் ஆரம்பித்த ஸ்டாலின்
“டேய் சூர்யா! சூடுடா பாய் விரிக்காம படுக்காத” என்று அக்கறையாய் அதட்டினான்.
இவர்களின் பேச்சை கேட்ட ராமச்சந்திரன் “உனக்கேன் டா பொறாமை? நீயும் காதலிக்கிற கவிதை எழுது, பாட்டு பாடு” என்றான்.
“எதுக்கு நான் பாடி கோகிலா ஓடிப்போகவா? அட போடா!” என்று சலித்த ஸ்டாலின்
“பார்த்தியாடா நம்ம சூர்யா பாபு இத்தனை நாளா ஸ்டாலின்னு என்னையே சுத்தி வந்துட்டு இன்னிக்கு யமுனா ஓகே சொன்னதும் என்னை போடான்னு சொல்லிட்டான் என் நண்பன்…சொல்லிட்டான்….” என்று வேண்டுமென்றே வம்பிழுக்க நண்பர்களுக்குள் கேலி கிண்டல் என்று பேச்சு சென்றது.
இரவு உணவு சாப்பிட சூர்யாவை அழைக்க
“பசிக்கல” என்றான்.
“டேய் அந்த பொண்ணுதான் உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிடுச்சே, அப்புறம் என்னடா? விரதம் எதாவது இருக்கியா?” என்று ராமு கேட்க
“இல்லைடா, நீங்களே சாப்பிட்டுடுங்க. எனக்கு ப்ராமிஸா பசிக்கல, ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இங்க வரைக்கும் என் யமுனாதான் இருக்கா” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.
“இவன் இப்படித்தான் சுத்துவான், அவன் பங்கும் எனக்குத்தான்” என்று ஸ்டாலின் ராமுவிடம் சொல்ல
“நீ மட்டும் என்னவாம்? கோகிலாவைப் பார்க்க போகனும்னா ரெண்டு பக்கெட் எக்ஸ்ட்ரா காலி பண்ணுவ. அவன் புது சட்டை, என் பவுடர்னு எல்லாத்தையும் தூக்கிடுவ” என்று அவனை ஓட்டினான்.
“ஹரே! சத்தம் போடாதீங்க. தமிழ் பாட்டுப் போட போறாங்க” என்று சொல்லி ரேடியோவை அட்ஜஸ்ட் செய்தான்.
“இன்னிக்கு நான் தமிழ் நல்லா பேசுறேன்னு சொன்னதுக்கு அம்மே நன்னு சூஸூ நவ்விண்டி(என்னைப் பார்த்து சிரிச்சா)”
“பின்ன தமிழை தெலுங்கு மாதிரி பேசுறடா பாபு நீ” என்று ராமுவும் ஸ்டாலினும் சிரிக்க
“பாருங்க நான் நல்லா தமிழ் படம், பாட்டு கேட்டு பேசுறேன்” என்று வீராப்பாக சொல்லி ரேடியோவில் சத்தம் கூட்ட,
‘நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவ தேவி தேவலோகம்
வேறு ஏது தேவி இங்கு
உள்ள போது வேதம் ஓது’ என்று அருண்மொழியின் குரலில் பாடல் ஒலிக்க
“உனக்கேத்த பாட்டுதான், எஞ்சாய்” என்று சொல்லி ஸ்டாலினும் ராமுவும் போய்விட, அந்த காதல் கணங்களை அசைப்போட்டவண்ணம் இசையுடன் கிறங்கி உறங்கிப்போனான் சூர்யநாராயணன்.
ஹாஸ்டலில் அன்று காலை எழும்போதே யமுனாவிற்கு ஒரு புது உற்சாகம் புலர்ந்தது. அப்பாவின் மீதான பயம் ஒரு பக்கம் இருந்தாலும், வயதுக்கே உரிய துடிப்பு, கண்டிடாத காதல் கரைபுரண்டு ஓடிட, சூர்யாவை மட்டுமே மனதில் நினைத்தாள்.
இதில் அதிசயமாய் ஒன்று தெரிந்து தெளிந்துகொண்டாள் யமுனா. அப்பாவைப் பற்றி நினைக்கையில் மனதில் வருகின்ற பயம், பதட்டம் எல்லாம் சூர்யாவை நினைக்கையில் மறைந்து குறைந்து ஒரு உவகை, உற்சாகம் அதனை விட ஒரு இனிமை வந்தது.
அகம் உணரும் இனிமை முகத்திலும் இதழ்களிலும் புன்னகையாய் குடியேறியது. இத்தனை நாள் இருந்த குழப்பங்கள் தீர்ந்து ஒரு நிம்மதி நெஞ்சில் குடிவந்தது.
இதில் அன்று சுடிதார் அணிந்தவள் ‘சூர்யாவுக்கு இந்த கலர் பிடிக்குமா? என்ன பிடிக்கும் அவங்களுக்கு?’ என்று அவனை நினைத்தபடி கிளம்ப, அது மனதை அத்தனை துள்ளலோடு வைத்திருக்க, முகமே அவ்வளவு தெளிவாய் இருந்தது. கோகிலாவிடம் சொல்ல
“சூர்யா தப்பானவரா இருந்திருந்தா நான் பேசவே சொல்லியிருக்க மாட்டேன் யமுனா. நம்ம சுசி பின்னாடி ஒருத்தன் சுத்தினானே அவனை நானே ஈவ் டீசிங்க்னு பிடிச்சுக் கொடுத்தேன். நல்ல காதல் அமையறது வரம், நீ வேணும்னா பாரேன் கண்டிப்பா சூர்யாண்ணா உன் லைஃப்ல வந்ததுக்கு நீ ஒரு நாளும் ஃபீல் பண்ணவே மாட்ட. அந்தளவு குண்டூர்காரர் உன்னைப் பார்த்தாலே உருகுறாரே” என்று கிண்டல் செய்தவள் பின் சீரியஸாய் முகத்தை வைத்து
“இங்க பாரு உன் சூர்யாட்ட சொல்லிடு இனிமே ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மான்னு என் ஸ்டாலின் தூக்கத்தை எல்லாம் கெடுக்க கூடாது. எதுனாலும் நீங்களே பேசிக்கோங்க” என்று சொல்லி கண்ணடிக்க, யமுனாவின் முகம் உன் சூர்யா என்றதில் மின்னியது.
அன்று மதியம் கோகிலாவுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றவளுக்கு சூர்யா வருவானா என்ற ஆவல் அதிகம் இருக்க, கோகிலாவின் பேச்சில் கவனமின்றி கண்கள் கண்ணனுக்காய் அலைப்பாய்ந்தது.
“அதோ சூர்யாண்ணா வந்துட்டாரே” என்று கோகிலா வேண்டுமென்றே சொல்ல அவசரமாய் யமுனாவின் பார்வை கோகிலா நோக்க
“இப்படி உடனே தொட்டா சிணுங்கியா இருக்கக் கூடாது யமுனா. அப்புறம் நான் சூர்யாண்ணாகிட்ட சொல்லிடுவேன். எப்பவுமே பார்த்துட்டே இருக்க முடியுமா என்ன? அவங்களும் படிக்கனும் தானே? பாரு ஸ்டாலின் கூட வரல” என்றாள் கோகிலா.
“நீ சிரிச்சா இந்த முகமே அழகா இருக்கும், ஒழுங்கா சிரிச்சிட்டு இருக்கனும். முக்கியமா இப்படி மூஞ்சித்தூக்கி வைக்காத, நம்ம எல்லாம் போலீஸ்காரங்க பொண்டாட்டி ஆகப்போறோம், அதுக்கேத்தமாதிரி தைரியமா இருக்கனும்” என்று கோகிலா சொல்ல போலிஸ்காரன் பொண்டாட்டி என்ற வார்த்தையில் வஞ்சிக்குள் வர்ணஜாலங்கள்!
கோகிலா சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் ஓட, அந்த நாள் இனிதே ஓடினாலும் இதயத்தின் ஓரம் சூர்யாவின் தரிசனத்துக்கு ஏங்கியது. இரவில் மேகலா பாடலை டேப் ரெகார்டரில்
ஓடவிட அதிலும் கூட சூர்யாவின் நினைவே. அவனைப் போலவே அவன் பெயர் வரும் பாடலை அசைப்போட்டபடி உறங்கிப்போனாள்.
இரண்டு நாட்கள் சென்றிருக்க, யமுனா நூலகம் சென்றாள். என்றும் எதிர்ப்பார்க்கும் அன்று எதிர்ப்பாரா வகையில் சூர்யாவைப் பார்க்க, அவனிடம் ஓடத் துடித்தன கால்கள். அவன் யமுனாவைக் கவனிக்கவில்லை, மிகவும் கவனமாய் புத்தகத்தைப் படித்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான். அவனின் படிப்பு முக்கியமென்று தெரிந்து தொந்தரவு செய்யாது அரை மணி நேரம் காத்திருந்தாள். அரை மணி கழித்து சூர்யா புத்தகத்தை மூடிவிட்டு கைகளை நீட்டி மடக்கி சுற்றிப்பார்க்க, பார்வையில் இவனைப் பார்த்தபடி பாவை நின்றாள்.
“ஹே! ப்ரியத்தம்மா, ரா ரா” என்று உற்சாகமாய் சொன்னவன் இருக்குமிடம் உணர்ந்து மெல்ல அவளைக் சைகையால் அழைக்க,
“என்ன டா டவுட்டா?” என்றான் யமுனாவிடம், அவள் கையில் இருந்த புத்தகத்தைக் கண்டு.
“ஏன் எப்பவும் டவுட்தான் கேட்கனுமா?” என்று கோபத்துடன் கேட்டு விட்டாள் யமுனா. அவ்வளவு காதல் என்று சொல்லி, இரண்டு நாளாய்க் காணாது இருந்துவிட்டு இப்போதும் இப்படி பேச உரிமையாய் ஒரு தேடல் இப்போது அவளிடம் தொடங்கியிருக்க, கோபம் கூட இயல்பாய் வந்தது.
“அப்போ வேறென்ன வேணுமா என் ப்ரியத்தம்மாவுக்கு?” என்று அவன் மெல்லக் கேட்க மெல்லிசையாத் தீண்டியது அவன் பேச்சு. கூடவே கோபம் கொண்டோமே பேசுவானோ என்று பார்க்க, அவனோ கையைப் பிடித்து வெளியே அழைத்துப் போனான். வெளியே சென்றதும் யமுனா கூச்சத்தில் கையை விலக்கிக் கொள்ள, சூர்யா அதனைப் புரிந்து விட்டுவிட்டான்.
“கோவமா பேசிட்டேன் ஸாரி” என்று யமுனா குனிந்த தலையுடன் சொல்ல
“என்னது நீ கோவப்பட்டியா? எங்கிட்ட உனக்கு எல்லா ரைட்ஸூம் இருக்கும்மா” என்றவன் அவளுடன் இயல்பாய்ப் பேசினான். காதலோ காதல் பற்றிய பேச்சு இல்லை, பொதுவான பேச்சுகள். பேசியபடி அவளை கல்லூரி வரை அழைத்து வந்துவிட, அந்த தூரங்கள் நீளாதோ என்று ஏங்கியது இருவரின் மனதும்.
அடுத்த நாள் சூர்யா வருவானா என்று பார்த்தபடி கல்லூரி வாயிலில் கோகிலாவுடன் பேசிக்கொண்டிருக்க, ஸ்டாலினும் வரவில்லை, சூர்யாவும் வரவில்லை.
‘படிப்பாங்க’ என்று தன்னை சமாதானம் செய்தபடி அவள் உள்ளே போக நினைக்க, எதிர்ப்பக்கம் நின்று
“ப்ரியத்தம்மா!” என்று அவன் அழைக்க யமுனாவின் கால்கள் அவனிடம் விரைய,
“பார்த்து வா!” என்றவன் அவளை நெருங்கி “நீ கோகிட்ட பேசிட்டு இருக்கேன்னுதான் நான் வரல” என்று விளக்கம் சொன்னவனை விழியகற்றாது பார்த்து
“ஹாப்பி பர்த்டே சூர்யாகாரு” என்று வாழ்த்தினாள் யமுனா.
“கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான் அழகே நீ எங்கே என் பார்வை அங்கே