“we bring this very exclusive interview with Ms. Jayalalithaa of AIADMK”
(உங்களுக்கான ப்ரத்யேகமான பேட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் செல்வி ஜெயலலிதாவுடன்)
“Madam whats your reaction to the results?”
(தேர்தல் முடிவுகளுக்கு உங்கள் கருத்து என்ன?”
“Well, according to the information that I have received so far, Our AIADMK candidates and the candidates of our allied parties are now leading in more than 222 assembly constituences and in all the 39 lok sabha constituences in the state. ……………and I must say that I am unable to find words to adequately express my gratitude to the voters of Tamilnadu”
தூர்தர்ஷனில் இரவு ஆங்கிலச் செய்திகள் ஒலிபரப்பாக, கீழ்வீட்டில் மாதவன் அண்ணன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்டாலின் மாடிப்படிகளில் நின்றபடி
“என்ன க்கா? சூரியன் உதிக்காதா?” என்றான் கவலையுடன்.
“அதுக்கு வாய்ப்பில்ல போலடா ஸ்டாலின், உங்கப்பா வேற வருத்தப்படுவார் சொன்ன இல்லை. இருநூறு தொகுதிக்கு மேல லீடிங், மேஜாரிட்டியே கிடைச்சிடும். அனேகமா தனிப்பெரும்பான்மையோட ஆட்சியைப் பிடிச்சிருவாங்க பாரு” என்று ராணி அக்கா பெருமையுடன் சொல்ல
“அண்ணா அங்க சோகமா இருக்கார், நீங்க என்ன சந்தோஷமா பேசுறீங்க?” என்ற ஸ்டாலினின் குரலிலும் சோகமே. அவன் சார்ந்த கட்சி ஜெயிக்காத சோகம், அவன் அப்பா வேறு வருத்தப்படுவார். கோகி வீட்டினர் எதிர்க்கட்சி அவர்களுக்கு மகிழ்ச்சி.
“என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு எல்லா ஆம்பிளைங்களையும் முந்திட்டு தனி மனுஷியா ஆட்சியைப் பிடிச்சா எங்களுக்கு எல்லாம் சந்தோஷம்தானே? வீட்ல நம்ம பேசுறத கேட்கவே அந்த பில்டப் கொடுப்பார் இவர், இப்போ தமிழ் நாடே லேடி கையிலனா பெருமைதானேடா?” என்றபடி அவர் வீட்டினுள் போக, ஸ்டாலின் மாடியேறினான்.
“என்னடா எல்லா இடத்துலயேயும் சூர்யன் டல்லாவே இருக்கு?” ஸ்டாலின் ராமுவிடம் கேட்க
“காலேஜ் திறந்தும் இன்னும் அவன் ஆளு வரலன்னு நம்மாளு சோகத்துல இருக்கான் டா” என்று ராமு சொன்னான்.
“ஹரே சூர்யா! ஏமாயிந்திரா?” என்று ஸ்டாலின் சூர்யாவின் தோள்களில் கைப்போட்டுக் கேட்க
“நா ப்ரியத்தம்மா பார்த்து ஒரு மாசம் மேல ஆகுதுடா” என்ற சூர்யாவின் வார்த்தைகளின் வலியை ஸ்டாலினால் உணர முடிந்தது.
“கோகிட்ட சொல்லி வைச்சிருக்கேன் டா, யமுனா வந்துட்டா கண்டிப்பா சொல்லுவா. எதாவது உடம்பு சரியில்லாம இருக்கலாம்” ஸ்டாலின் ஆறுதல் சொல்ல
“எனக்கு அவ குரலாச்சும் கேட்கனும்டா” என்று சூர்யாவின் குரலில் காதலின் தவிப்பு.
“வந்துடுவா, இப்ப எதுவும் பிரச்சனை இல்லாம இருந்து நீ பேசப்போய் பிரச்சன வந்தா என்ன செய்றது?” என்றான் ஸ்டாலின். வெகு நேரம் பேசி அவனை சமாதானம் செய்தான்.
அடுத்த நாள் ராணியாக்காவின் வீட்டு தொலைப்பேசிக்கு அழைப்பு வந்தது.
“ஸ்டாலின்! உனக்குப் போன்” என்று ராணியக்கா கத்த
“எங்கப்பாவாதான் இருக்கும், அவர் கட்சி தோத்துடுச்சுன்னு புலம்புவார்” என்று நண்பர்களிடம் சொன்னவன் கீழே இறங்கிப்போனான்.
“யாரோ பொண்ணு பேசுது? யார் ஸ்டாலின்?” என்று ராணி அக்கா குறுகுறுவென பார்த்தபடி கேட்க
“என் அத்தப்பொண்ணுக்கா” என்றான்.
“பார்டா, ஸ்டாலினுக்கு முறைப்பொண்ணு எல்லாம் போன் செய்யுது. ஆனா அடிக்கடி எல்லாம் பண்ணக்கூடாது சொல்லிடு ஸ்டாலின், அவர் இருந்தா திட்டுவார்” என்றார்.
“இல்லைக்கா, எதாவது முக்கியமா இருக்கும்” என்றவன் அந்த தொலைப்பேசியின் ரீசிவரை எடுத்துக் காதில் வைத்தான்.
அந்த பக்கம் கேட்ட செய்தியில் குதித்தபடி மாடிக்கு ஓடினான். துணிகளைக் காயப்போட்டுக்கொண்டிருந்த சூர்யாவின் முன்னே நின்றவன்
“ஹரே! நுவ்வு நிஜம் செப்புத்துன்னவா?” சூர்யா கண்களில் ஆவலும் உண்மையாக இருக்க வேண்டுமே என்ற காதல் மனம் பரபரக்க கேட்டான்.
“நிஜம்தான் டா, கோகிலாகிட்ட சொல்லி புலம்பிட்டு இருந்தேன். அதனால அவ ப்ரண்ட் காணுமேன்னு போன் செஞ்சுப் பேசியிருக்கா, யமுனா நாளைக்கு வந்துடுறேன்னு சொன்னாளாம்” என்ற ஸ்டாலினை சூர்யா அணைத்த்துக்கொண்டான்.
யமுனாவின் குரல் கேட்காது, பேசாது கடந்த இந்த நாட்கள் அவனை அவ்வளவு கொடுமை செய்தன. தூரங்களைக் கடக்க முடியாத அந்த துயரத்தை சொல்லில் அடக்கிவிட முடியாது. எப்படி இருக்கிறாள், உடல் நலமில்லையா? வேறு பிரச்சனையா? என்று பரிதவிப்பு முடிவுக்கு வந்ததில் அவனிடம் அவ்வளவு நிம்மதி.
“தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ?
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன் தோளில்
துஞ்சியதோ?”
“பார்த்தியாடா? தூங்காம பாட்டுக் கேக்கிறதை” என்று ராமு சிரிக்க
“அவன் ஆளும் இந்த பாட்டைக் கேட்குமா இருக்கும்டா, சாரோட ஆளை நாளைக்குப் பார்க்க போறார்ல, அந்த எக்ஸைட்மெண்ட்” என்றான் ஸ்டாலின்.
சூர்யா இவர்களின் பேச்சைக் காதில் வாங்கவில்லை. டேப் ரெகார்டரில் பாடல் ஓட, இதே கேஸட் யமுனாவிடமும் கொடுத்திருந்தான். அவளும் கேட்பாளோ என்று எண்ணம். அவளும் கேட்டுதான் இருந்தாள்.
கும்பகோணத்தில் இருந்த அவர்கள் வீட்டில் அவளின் அறையில் மெல்லிய சத்தத்தில் பாடல் ஓட, மனமெல்லாம் பாரம் மங்கையிடம். கண்ணோரம் கண்ணீர். பாடல்கள் அவற்றின் சூழலுக்கு ஏற்ப நம் மனதில் பதிவதில்லை, நமது சூழலுக்கு ஏற்றவாறே அவற்றின் தாக்கம் அமைகிறது. அப்படிதான் யமுனாவிற்கும்! காதலால கசிந்துருகி கேட்ட பொழுதுகள் போய் இப்போது காதல், அதனை நினைத்தால் கலக்கம் மட்டுமே மிஞ்சியது.
சுத்தமாய் நம்பிக்கையே இல்லை, சூர்யாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற பயம், ஆர்வமில்லாமல் ஒரு அச்சம் மனதில். சென்ற மாதம் இருபத்து ஒன்றாம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்துக்குப் பிரச்சாரத்துக்கு வந்தபோது குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டிருக்க, நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. அதனால் கல்லூரிக்கு யமுனாவை அனுப்பவே அவளின் அப்பா சற்குணப்பாண்டியன் ஒத்துக்கொள்ளவில்லை. யமுனாவால் அப்பாவிடம் எதிர்த்தும் பேசமுடியவில்லை, பழக்கமில்லையே. அம்மாவிடம் அழ, அவரோ
“பொம்பள புள்ள படிச்சு என்ன செய்யப்போற, அங்க போய் நீ எப்படி இருக்கியோன்னு பயந்துட்டே இருக்க முடியாது” என்றார்.
அண்ணன் உதயமூர்த்தியிடம் பேச அவன் மட்டுமே அப்பாவிடம் பேசி தங்கையைக் கல்லூரி அனுப்ப சம்மதம் வாங்கினான். இந்த நிகழ்விலே யமுனா மனம் கலங்கியிருக்க, ஊருக்குக் கிளம்ப இரு நாட்கள் இருக்கும்போது அந்த சம்பவம் நடந்தது. இப்போது நினைத்தாலும் நெஞ்சைக் கவ்வியது பயம். சூர்யாவை நினைக்க நினைக்க அழுகை வந்தது. காதலின் எதிர்காலம் என்ன என்ற பெரும்பயம் மனதை ஆக்ரமிக்க உறக்கமற்ற இரவானது.
அடுத்த நாள் சூர்யா யமுனாவிற்குக் கல்லூரி விடும் சமயம் கல்லூரியின் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான். கோகிலாவை வழியனுப்ப வரும் யமுனாவைப் பார்க்க அவன் எதிர்ப்பார்க்க, கோகிலா மட்டுமே வந்தாள்.
“யமுனா ரா லேதா?” என்று டென்ஷனுடன் சூர்யா கோகிலாவிடம் கேட்க
“காலேஜ் வந்தா சூர்யா, என்னவோ சோகமா இருக்கா. இப்போ கூப்பிட்டா வரல” என்று சொன்னபின் சூர்யாவால் பொறுத்திருக்க முடியவில்லை.
“ப்ளீஸ் கோகிலா, யமுனாவை அழைச்சிட்டு வா. ஐ மிஸ் ஹெர் எ லாட். அவ வரவரைக்கும் நான் போக மாட்டேன் சொல்லு” என்றவன் பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்துகொண்டான். கோகிலா யமுனாவைத் தேடிச் சென்று இதனை சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.
“சூர்யா! அவ கிட்ட சொல்லிட்டேன். ஆனா அவ வரல, உங்களுக்கு அவளைத் தெரியும்தானே? ஊருக்குப் போயிருக்கா அங்க எதாவது சொல்லியிருப்பாங்க. மனசுல உள்ளதை அவ என்னைக்கு வெளியே சொல்லியிருக்கா?” என்று கோகி வருத்தமாய்ப் பேச
“என் ப்ரியத்தம்மா எங்கிட்ட சொல்லுவாளே” என்று மனதில் நினைத்தவன் தவித்தபடி யமுனாவிற்காகக் காத்திருந்தான். கோகிலாவிற்குப் பேருந்து வரவும் அவள் கிளம்பிவிட்டாள்.
“சூர்யா, அவளே நார்மல் ஆகிடுவா. நீங்க வெயிட் பண்ணாதீங்க” என்று அவள் சொல்லி செல்ல ஒரு மாதமாக யமுனாவைப் பார்க்காது, பேசாது அவள் நலமறியாமல் தவித்தவன் எப்படி நங்கையைக் காணாது போவான்?
சூர்யாவின் பிடிவாதம் தெரிந்த யமுனா சில நிமிடங்கள் கூட காத்திராமல் கல்லூரி வாசலுக்கு வந்து நிற்க, அடர் பச்சை சுடிதாரில் வந்து நின்றவள் முகத்தில் பசுமை இல்லை, பயம் மட்டுமே. கலக்கத்தை சுமந்த கண்களுடன் நின்றவளைக் காணவும் சூர்யாவுக்குப் பதற,
“என்னாச்சு ரா? ஏன் ஒரு மாதிரி இருக்க? நீ கொஸம் நேனு எதுருசூஸ்துனானு, (நான் உனக்காக காத்திருக்கிறேன்). ஏமாயிந்திடா?” என்று யமுனாவை நெருங்கி கேட்க யமுனா அழுதாள்.
“என்னாச்சு டா? ஏன் அழற?” என்று சூர்யா கேட்க கேட்க யமுனாவிடம் பதில் இல்லை, அழுகை மட்டுமே.
“சூர்யா, எனக்குப் பயமாயிருக்கு சூர்யா. உங்களோட சேர முடியலன்னா நான் செத்துடுவேன். எங்க வீட்ல எல்லாம் இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க” என்றாள் கலக்கத்துடன்.
யமுனாவின் செத்துவிடுவேன் என்ற வார்த்தை சூர்யாவைக் காயம் செய்தது. சாகவா இத்தனை காதல்?
“ஷட் அப் யமுனா! ஏமாயிந்தி இப்புடு? மீரு எண்ட்ட தைரியங்கா உன்னாரு…ப்ச்” என்று காலால் தரையை மிதித்தவன்
“dont ever say that to me, எப்படி உன்னால செத்த்..அப்படி சொல்ல முடியுது? சாகவா நா ப்ரேமா? இப்படி அழுதுட்டே இருக்காத யமுனா. எனக்கு இரிட்டேட் ஆகுது” என்றான் பல்லைக்கடித்து.
“சூர்யா?!” அழுகையுடன் யமுனா அழைக்க, அவன் முறைத்தான். இன்னும் அவளின் அழுகை குறையவில்லை. அது சூர்யாவின் கோபத்தை தூண்டியது.
எப்போதும் சூர்யாவிடம் கண்டதெல்லாம் காதலும் கனிவுமே. இப்போது கோபம் காண பயத்தில் படபடவென்று பேசிவிட்டாள்.
“எங்க அப்பாவோட சித்தப்பா பேத்தி அங்க தஞ்சாவூர்ல காலேஜ் படிக்கிறப்ப ஒரு பையனைக் காதலிச்சது தெரிஞ்சு கல்யாணம் செஞ்சுவைச்சிட்டாங்க சூர்யா” என்று சொல்லி பார்க்க அவனோ
“அதுக்கு என்ன யமுனா?” என்றான்.
“அ..அது எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க சூர்யா. உங்களை எதாவது செஞ்சிடுவாங்களோன்னு பயமாயிருக்கு, அந்த பொண்ணு லவ் பண்ணின பையனை வேற ஜாதினு அடிச்சு அவன் உயிருக்கே ஆபத்து தெரியுமா?”
“யாருக்கோ என்னவோ நடந்தா நமக்கும் அப்படி நடக்குமா? அந்த பொண்ணு மாதிரி நீ வேற யாராச்சும் கல்யாணம் செய்வியா?” என்ற சூர்யாவின் வார்த்தைகளில்
“செத்துப்போயிடுவேன் சொல்லாத யமுனா, அப்ப கூட உனக்கு என்னோட வாழனும் தோணாதா? அந்தளவு கூட உன் லவ்வுக்கு தைர்யம் லேதா?” என்று கேட்டவன் கோபத்துடன் நடந்தான்.
யமுனாவுக்கு சூர்யா போவதை தாங்கமுடியவில்லை. அவன் பின்னே ஓடியவள்
“சூர்யா, அப்படி சொல்லாதீங்க. எனக்கு உங்கள எதாவது செஞ்சுடுவாங்கன்னு பயம், அதான் அப்படி சொன்னேன்” என்று அவன் கைபிடித்து சொல்ல, அவன் அசரவில்லை. அசையாமல் நிற்க
“நா உங்க ப்ரியத்தம்மா தானே பேசுங்க சூர்யா, எங்கிட்ட கோபப்படாதீங்க ப்ளீஸ். இத்தனை நாள் உங்கள பார்க்காம பேசாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்” என்று யமுனா பாவமாக சொல்ல
“அவுனா?” என்று அவன் பார்க்க
“அவுனு சூர்யா” என்று யமுனா கண்ணீரோடு சொல்ல,
“நா ப்ரியத்தம்மா! தெலுங்கு பேசுறியா?” என்று சிரித்தவன் கோபம் விட்டு அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.