சூர்யா சிரித்தபடி தன் கைப்பற்றவும்தான் யமுனாவிற்கு நிம்மதியாய் இருந்தது. அப்பாவின் கோபம் பார்த்து பழகியிருந்தாலும் சூர்யாவின் கோபத்தைத் தாங்கவே முடியவில்லை.
யமுனாவின் கலக்கம் உணர்ந்த சூர்யா “அன்ட்டிக்கி பயமா நீக்கு? உன்னைப் பார்க்கனும்னு எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா?” என்று முகம் பார்க்க
“நானும் ரொம்ப ஆசையாதான் இருந்தேன்”
“அதனாலதான் என்னை இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைச்சியா?”
“போங்க சூர்யா, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், பயந்தேன் தெரியுமா? ஊர்ல என்ன ஆச்சுனு தெரியாம பேசாதீங்க” என்றாள் யமுனா கோபத்துடன்.
“ஏமாயிந்தி?” என்று அவன் கேட்க
“ராஜீவ் காந்தி இறந்து இங்க் மெட்ராஸ்ல கலாட்டானதும் எங்கப்பா என்னைப் படிக்கலாம் வேண்டாம், இங்கயே இருன்னு சொல்லிட்டார். எனக்கு அந்த நிமிஷம் எப்படி இருந்தது தெரியுமா? உங்களைப் பார்க்கவே முடியாதோன்னு நினைச்சப்ப உயிரே இல்ல” என்று இப்போது சொல்லும்போதும் யமுனாவிடம் நடுக்கமே.
“அண்ணன் தான் அப்பாகிட்ட பேசி என்னை இங்க அனுப்பி வைச்சது. அப்பா கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டார்”
“இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம் ரா? ஃப்ர்ஸ்ட் படிச்சு முடி” என்று சூர்யா சொல்ல
“நீங்க ஈசியா சொல்லிடுவீங்க சூர்யா, எனக்கு இப்பவே மாப்பிள்ளை பாக்கனும்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க” யமுனா பதட்டமாக சொன்னாள்.
“அதனால என்ன? என் அண்ணய்யா எனக்கு சப்போர்ட் பண்ணூவார், உன் அண்ணய்யாவும் உனக்கு சப்போர்ட்டாதானே இருக்கார், அவர்கிட்ட லவ் பண்றேன்னு சொல்லு யமுனா” என்றான் சூர்யா.
“என்ன அண்ணங்கிட்டயா? அண்ணா என்னை நம்பி படிக்க அனுப்பியிருக்கு, இப்பவும் அப்பாகிட்ட அவ்வளவு பேச்சு வாங்கி அனுப்பிவைச்சார். நிச்சயமா எங்கண்ணா காதல் கல்யாணம், அதும் வேற ஜாதி, மொழி எல்லாம் ஒத்துக்கவே மாட்டார். அந்த சொந்தக்காரப்பொண்ணு படிக்கிறப்ப ஏன் காதலிச்சது, அதான் வேற இடத்துல கட்டிக்கொடுத்துட்டாங்கன்னு எங்கண்ணனே பேசுச்சு தெரியுமா?”
“இட்ஸ் ஓகே யமுனா! இப்பவே யோசிச்சு நீயும் டென்ஷனாகி என்னையும் டென்ஷன் பண்ணாத. அப்போ பார்த்துக்கலாம், ஒரு மாசம் ஆகுது உன்ன பார்த்து, என்னை அவாய்ட் பண்ணி அந்த மொமண்ட் ஸ்பாயில் பண்ணிட்ட” என்றான் குறையாக.
இப்போதும் யமுனாவின் கை சூர்யாவிடம் அகப்பட்டிருக்க, எப்போதும் போல் நெஞ்சருகே வைத்து அகம் தொட வைத்தான். அப்போதுதான் கண்ணில் பட்டது அவள் கையில் வைத்திருந்த மருதாணி.
தன்னருகே கொண்டு முகர்ந்து வாசனைப் பிடித்தான். யமுனா சட்டென கையை இழுத்தாள்.
“இப்ப இது ரொம்ப முக்கியமா?” என்றாள் கோபமாக.
“எனக்கு முக்கியம்தான். அழகா இருக்கு டா ஹென்னா நா ப்ரியத்தமாவுக்கு” என்று அவன் ரசித்து பேச யமுனாவினால் அந்த சூழலில் ஒட்டவே முடியவில்லை. அவன் அருகே இருக்கும் தைரியம் அவனை விட்டு விலகினால் அச்சமாக அல்லவா மாறிவிடுகிறது, அதிலும் ஊருக்குச் சென்று வந்த பின் இன்னும் பயம் அதிகமாகத்தான் இருக்கிறது. எதிர்காலத்தின் பயம் நிறையவே அவளை அச்சுறுத்தியது.
“யமுனா! லிஸன், முதல்ல எந்த வீட்ல லவ் பண்றோம் சொன்னா ஒத்துப்பாங்க, என் நானா கூட ஒத்துக்கமாட்டாங்க. ஆனா அதையே நினைச்சு டென்ஷன் ஆகாதம்மா. இப்போ போய் சாப்பிடு, மெஸ்ல சாப்பாடு காலியாகிடும்” என்றதும் முறைத்தபடி யமுனா
“எனக்கு சுமதி எடுத்து வைச்சிருப்பா” என்றாள்.
“ஓஹ், அச்சா. நீ முதல்ல சாப்பிடு, நம்ம இந்த வீக் வெளியே போகலாம். உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன். நுவ்வு நா ப்ராணம்டா. அதை மட்டும் நினைச்சிக்கோ, வேற எதுவும் யோசிக்காத” என்று சூர்யா சொல்ல யமுனாவோ கலங்கிய கண்களுடன்
“உங்களால என்னை புரிஞ்சக்கவே முடியல சூர்யா, என்னால வேற எதுவும் யோசிக்க முடியல. அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்னாவாகும்னு ஒவ்வொரு நிமிஷமும் எனக்குப் பயமா இருக்கு, நீங்க ஈஸியா நினைக்காத, யோசிக்காத சொல்றீங்க” என்றாள்.
“ஏன்ட்டீ யமுனா? நுவ்வு நன்னு ஏம் செய்யமன்டவ்வு? ப்ச் ( நான் என்ன செய்யனும் நீ நினைக்கிற)” என்று அருகே இருந்த மரத்தின் மீது குத்தவும் யமுனா இன்னும் கலங்கி அவனைப் பார்க்க
“ஐபிஎஸ் பாஸ் ஆகிட்டு உடனே உன்னை வந்து கல்யாணம் பண்ணிப்பேன் யமுனா, என்னை நம்புரா. இப்படி நீ டென்ஷன் ஆனா எனக்கும் டென்ஷன் ஆகுது? தென் எப்படி என்னால படிப்புல கவனம் வைக்க முடியும்? போலீஸ் ஆகிட்டா உன் அப்பாவையும் என்னால ஃபேஸ் பண்ண முடியும். சும்மா அதெல்லாம் யோசிக்காம படிச்சு முடிக்கிற வழியைப் பாரு. எப்பவும் பயப்படக்கூடாது” என்று அவளின் கைப்பற்றி பொறுமையாகத் தட்டிக்கொடுக்கவும் யமுனாவுக்கு மனதில் பயமிருந்தாலும் சூர்யா பேசவும் அவனின் நியாயம் புரிய அமைதியாக தலையசைத்தாள்.
“முதல்ல போய் சாப்பிடு”
“நீங்களும் சாப்பிடுங்க, அஞ்சு நிமிஷம் இருங்க. போயிடாதீங்க, நான் உங்களுக்குப் பலகாரம் எடுத்துட்டு வந்தேன். கொண்டு வரேன்” என்று யமுனா வேகமாக உள்ளே சென்று ஒரு டிபன் பாக்ஸ் எடுத்து வந்து தர, அதை வாங்கியவன் சிரிப்புடன்
“அவ்வளவு டென்ஷன்லயும் நீ எனக்கு ஸ்வீட் எடுத்துட்டு வந்தியா?” என்று கேட்க யமுனாவும் வெட்கி புன்னகையுடன்
“நான் மறந்துட்டேன், அம்மாதான் உன் சினேகிதிங்களுக்கு பலகாரம் எடுத்துட்டு போவலையான்னு கேட்டுச்சு. அப்புறம் உங்களுக்குத் தனியா எடுத்து வைச்சேன்” என்றாள்.
“தேங்க் யூ” என்று சொல்லி கிளம்பிப் போக யமுனாவுக்கும் பல நாள் கழித்து காதலனைக் காணவும் மனம் லேசாக இருக்க கல்லூரிக்குள் போனாள்.
வீட்டுக்குச் சென்ற சூர்யாவை ராமுவும் ஸ்டாலினும் பிடித்துக்கொண்டனர். இனிப்பு பலகாரத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு காரத்தை மட்டும் சூர்யாவுக்காக வைத்தனர். பலகாரத்தை உண்டு அவர்கள் கிண்டலாகப் பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் சூர்யாவின் கவனம் இவர்களிடம் இல்லை. மொட்டை மாடி சுவரில் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்திருந்தவனின் முகம் யோசனையில் இருந்தது.
“என்னாச்சு டா? ஏன் யமுனா காலேஜ் வரலையாம்?” என்று ஸ்டாலின் விசாரிக்க
“எதுவும் பிரச்சனை இருந்தா பலகாரம் எல்லாம் வந்திருக்காதே” என்று ராமு மூளையைக் கசக்க
“அதானே?” என்றான் ஸ்டாலினும்.
“வேற பிரச்சனை டா” என்ற சூர்யா நண்பர்களிடம் அவனுக்கும் யமுனாவுக்குமான உரையாடலை சொன்னான்.
“யமுனா கிட்ட எவ்வளவு சொன்னாலும் எப்பவும் பயப்படுற டா. இன்னிக்கு அவளும் பயந்து டென்சன் ஆகி என்னை பார்க்க வராம என்னையும் டென்சன் பண்ணிட்டா” என்றான் சோர்வாக.
“என்னடா இந்த பொண்ணு இப்படி இருந்தா நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா எப்படி இவனுக்காக வந்து நிக்கும்? இப்படி பயந்துட்டு வீட்ல பார்க்கிறவனை கட்டிக்கிட்டா” என்று ராமு பேசவும்
“அப்படி பேசாத ராமு” என்றான் சூர்யா எரிச்சலாக.
“என் பிரியத்தமாவை எனக்குத் தெரியும். அவ என்னை தவிர யாரையும் பார்க்க மாட்டா. “
“அவ நான் இல்லைனா செத்துடுவேன்னு சொன்னா தெரியுமா ரா?” என்றான் சூர்யா உணர்ச்சிவசப்பட்டு.
“செத்துடுவேன் சொல்றது ஓகே, உன்னோட வாழ்ற தைரியம் இல்லன்னா என்ன செய்றது அந்த பொண்ணை? அந்த வலியை அனுபவிச்சவன்றதால சொல்றேன் சூர்யா, இன்னமும் எனக்கு கோதை எனக்கில்லன்றது பெரிய கஷ்டம். அது உனக்கும் வேண்டாம்னு தான் இவ்வளவு துயரம் சொல்றேன். ஆசையை அதிகமா வளர்த்துட்டு பின்னாடி கஷ்டம் நமக்குத்தான்”
“சும்மா அதையே சொல்லாத ராமு, உன் கதை மாதிரி எல்லாருக்கும் இருக்கணும் கிடையாது. சூர்யா பாரு மொழி தெரியாமலே யமுனாவை இந்தளவு லவ் பண்ண வைச்சிட்டான். எதோ ஊர்க்கார பிள்ளை குழப்பத்துல பேசிடுச்சு, சூர்யா விடு நீ அதையே நினைக்காத” என்றான் ஸ்டாலின்.
“இல்லடா, ராமு சொல்றதும் சரிதானே, யமுனா கொஞ்சமும் தைரியம் இல்லாம இருந்தா எப்படி? எனக்கு இன்னிக்கு அவ என்னை அவாய்ட் பண்ணினதும் ஒரு மாதிரி ஆகிடுச்சு தெரியுமா? எப்பவும் நானா பயம், அண்ணய்யா பயம். இந்த டைம் அவளை ஊருக்கு விடலன்னு அப்படி டென்ஷாகிட்டா” என்று புலம்பினான் சூர்யா.
“டேய் இவ்வளவு குழப்பாத” ஸ்டாலின் அறிவுறுத்த
“மீரு அர்த்தம் சேஸ்கோலேரூடா ஸ்டாலின்(நான் சொல்லவரது உனக்குப் புரியல ). என்னை உனக்குப் புரியல. இப்போ யமுனா இப்படியே இருந்தா அவங்க வீட்ல ஃபோர்ஸ் பண்ணினா வேற முடிவு எடுத்துட்டா.. வேற மீன்ஸ் வேற கல்யாணம் எல்லாம் கண்டிப்பா செய்ய மாட்டா. ஆனா நான் இல்லைன்னு தப்பா முடிவு எடுத்துடுவாளோன்னு எனக்கு பயமா இருக்கு டா” என்றான் சூர்யா.
“அட! அப்படியெல்லாம் செய்யாது டா யமுனா. உன்னை அதுக்கு எவ்வளவு பிடிக்கும்னு இன்னிக்கு இவ்வளவு கலாட்டாவுலயும் பலகாரம் கொடுத்ததுலேயே தெரிஞ்சிடுச்சு..யமுனாவுக்கு நீ சொன்னதுதான் உனக்கும் சொல்றேன் டா. இப்பவே யோசிச்சு குழப்பிக்காத. ஐபிஎஸ் பாஸ் பண்ணிட்டு பொண்ணு கேட்டா எப்படி கொடுக்காம போறார் அவங்கப்பான்னு பார்த்திடலாம்” என்றான் ஸ்டாலின்.
“நீயும் உன் பிரியத்தம்மாவும் கொஞ்ச நாள் இந்த கல்யாண கனவெல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு படிக்கிற வழியை பாருங்க” என்று ஸ்டாலின் சொல்லவும் ராமு சிரிப்புடன்
“இதுல கொடுத்து வைச்சவன் நம்ம ஸ்டாலின் தான். கோகிலாவ விட்டா தேர்தல நிக்கும் . அப்படி ஒரு தைரியமான பொண்ணு. அதான் நண்பன் தைரியமாய் எல்லாருக்கும் அட்வைஸ் பன்றான்” என்று சொல்ல ஸ்டாலின் முதுகில் அடி போட்டான் ராமசந்திரன்.
“வயித்தெரிச்சல் புடிச்சவனே, இப்படி பேசித்தான்டா ஆட்சி மாறிப்போய் எங்கப்பா கோவத்துல இருக்கார். இப்போ அவங்க வீட்ல சம்மந்தம் வைக்கலாம்னு ஐடியா இருக்கானே தெரியல. எங்கம்மாவ விட்டு கேட்டதுக்கு படிக்கிறவயசுல எதுக்கு அந்த பேச்சுன்னு திட்டிவிட்டாராம்”
“அவர் திட்டினா உன் கோகி விட்டுடுமா? என்று சிரித்தான் ராமு.
“அவ என்னை கடத்திட்டு போயாச்சும் கல்யாணம் பண்ணிப்பா” என்று ஸ்டாலின் சொல்ல அந்த பாவனையில் மூவருக்குமே சிரிப்புதான். சூர்யாவுக்கும் நண்பர்களிடம் மனதை சொன்ன பின் பாரம் குறைந்த உணர்வே .
அந்த வார இறுதியில் சேரன் பாண்டியன் திரைப்படத்துக்கு ஜோடியாக வந்திருந்தனர் சூர்யாவும் ஸ்டாலினும்.
கிராமத்து திரைப்படம் என்பதால் யமுனா விரும்பி பார்க்க, அந்த படத்தில் கோவை வட்டார வழக்கு என்பதால் சூர்யா அந்த தமிழை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
“என்ட்ராவா?” என்று தனக்குள் பேசிய சூர்யா அவனருகே இருந்த ஸ்டாலினிடம் “என்ன இந்தப்படத்துல கொஞ்சம் தெலுங்கு வருது?” என்று கேட்க
“டேய் அது என்ற ஒன்ற டா, அது கோவை ஆக்செண்ட், உங்க ஊர்ல குண்டூர் தெலுங்கு, இங்க சென்னை தெலுங்குன்னு எவ்வளவு பார்க்கிற, அதுமாதிரி இது. இன்னும் மதுரை தமிழ், திருநெல்வேலி தமிழ், தஞ்சாவூர் தமிழ்னு நிறைய இருக்கு” என்றான்.
“பேசாம படம் பாருங்க” என்று கோகிலா ஸ்டாலினிடம் முணுமுணுக்க
“இவன் தான் கோகிமா” என்று நண்பனை முறைத்தவன் படத்தில் மூழ்கினான். அந்த படத்திலும் காதலுக்கு எதிர்ப்பு வர பார்த்திருந்த யமுனாவிற்கு மனது பிசைந்தது. அந்த கலக்கத்தை களையாமல் வளரவிட்டவள் அதனால் சூர்யாவையும் பின்னாளில் காயப்படுத்தினாள், தானும் காயப்பட்டாள்.
படம் முடிந்து இவர்கள் ஜோடியாகப் பேசிக்கொண்டு வர சூர்யாவின் கையில் கைக்குட்டையை நீட்டினாள் யமுனா.
“எங்கிட்ட இருக்கே” என்று சூர்யா பார்க்க
“பிரிச்சு பாருங்க சூர்யாகாரு” என்றாள் யமுனா. அந்த பாவனையே அவனை கொள்ளைக் கொள்ள ஆசையாய்ப் பிரிக்க, அந்த கைக்குட்டையில் சூர்யா யமுனா என்று ஆங்கிலத்தில் embroidery செய்திருக்க
“சால பாகுந்தி டா ப்ரியத்தம்மா, நீயே பண்ணியா?” என்று சூர்யா மகிழ்வுடன் கேட்டான்.
“ஊர்ல உங்க ஞாபகமாவே இருந்தது. அப்போ யாருக்கும் தெரியாம பண்ணினேன். இன்னொன்னும் பண்ணினேன்”
யமுனா சொல்லவும் காதல் மேலோங்க அவளின் கைப்பற்றிக்கொண்டான்.
“இன்னொன்னு எக்கடா?” என்று சூர்யா கேட்க, சூர்யோதயம் யமுனாவின் கைகளில் கைக்குட்டையில் கலை நயத்துடன் காட்சியளிக்க சூர்யா ரசித்து பார்க்க, அவர்கள் அருகே வந்த ஸ்டாலினின் பார்வையிலும் அது விழ
“உங்க பெயரும் கோகி பெயரும் போட்டாண்ணா?” என்று கேட்டாள் யமுனா.
“இல்லை இல்ல, இதே மாதிரி உதயசூரியன் வேணும். எங்கப்பாகிட்ட கோகிலா செஞ்சதுன்னு சொன்னா கொஞ்சம் சந்தோஷப்படுவார். அதுக்குதான்” என்றதும் கோகிலா மறுத்தாள்.
“எதுக்கு? உங்க வீட்டுக்கு வந்தாலும் நான் என்னோட கொள்கை எல்லாம் மாத்திக்க மாட்டேன் ஸ்டாலின். சும்மா இந்த வேலையெல்லாம் எங்கிட்ட எதிர்ப்பார்க்காத. உங்கப்பா எங்கப்பா எல்லாம் எப்படி கட்சி மாறாம இருக்காங்களோ அப்படித்தான் நானும். ஒத்துக்கிட்டா ஊரறிய கல்யாணம், இல்லையா ரெஜீஸ்டர் மேரேஜ். சூர்யா நீங்க கையெழுத்து போடுவிங்கதானே?” என்று கேட்க
“கண்டிப்பா” என்று சூர்யா சொல்ல, எப்படி கோகிலா இவ்வளவு தைரியமாகப் பேசுகிறாள், வீட்டிற்குத் தெரியாமல் திருமணமா என்று அதிசயித்துப் பார்த்த யமுனாவிற்கு அப்போது தெரியவில்லை, தனக்கும் அப்படி ஒரு தைரியம் வரப்போகிறதென.