ஆறு மாதங்கள் சட்டென ஓடிவிட்டன. எல்லாருக்கும் ஒவ்வொரு கனவுகள். கல்லூரி படிப்பு இந்த செமெஸ்டருடன் முடிந்து விடும். சிலர் மேற்படிப்பு படிக்க திட்டம் வைத்திருக்க, இப்போதே சிலருக்குத் திருமண பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. யமுனா சூர்யாவிடம் இது பற்றி பேசினாலும் அவனிடம் கிடைக்கும் பதிலில் இவளுக்கு திருப்தியில்லை.
“கோகி மாதிரி நீயும் பிஜி பண்ணு யமுனா, வீட்ல நீதானே பேசனும்” என்று சூர்யா சொல்லிவிட கோகிலாவின் வீடு போலவா தன் வீடு என்று யமுனாவிற்கு ஆயாசமாக இருக்கும். இதைப் பற்றி பேசத் தொடங்கினாலே அவன் டென்ஷன் ஆக, இருவருக்கும் கிடைக்கும் இனிதான நொடிகள் இழக்க மனமில்லாமல் தன் மனதினுள் இந்த கவலையை எல்லாம் புதைத்துவிடுவாள்.
பொங்கல் விடுமுறைக்குச் சென்ற வந்த யமுனா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தாள். வீட்டில் மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். விடுமுறைக்குச் சென்றவளை சொந்தத்தில் இருந்து ஒரு குடும்பம் பெண்பார்க்க வந்தனர். ஜாதகம் பொருந்தாமல் போக அதனை விட்டனர். அண்ணனிடம் சொன்னபோதும் கூட
“படிச்ச பையனாதான் யமுனா நாங்க பார்க்கிறோம், மேலபடிக்கனும்னா கூட படிக்கலாம், இல்லையா வேலைக்கும் போகலாம். இப்பவே பார்க்க ஆரம்பிச்சாதானே நல்ல வரன் கிடைக்கும். அப்பா இதுக்கு மேல பொறுக்க மாட்டார்” என்றுவிட யமுனா மனதளவில் மிகப்பெரிய அழுத்தத்திற்கு ஆளானாள்.
சூர்யா சொல்வது போல் வீட்டில் காதல் பற்றி சொன்னாலும்கூட உடனே வேறு மாப்பிள்ளையை தான் பார்ப்பார்கள். அவள் மனதை அதில் இருக்கும் ஆசைகளை யாரும் அங்கே புரிந்து கொள்ளப் போவதில்லை என்ற எண்ணம் யமுனாவிற்கு. அதனையும் விட அப்பாவிற்குத் தான் அவரை மீறி காதல் செய்தது தெரிந்தால் உறவுக்கார பெண்ணின் காதலன் போல் சூர்யாவையும் அடித்துவிட்டால், இல்லை வேறு எதாவது ஆகிவிட்டால்?
குழப்பத்தில் இருந்த அவள் முகத்தைப் பார்த்த அவளின் தோழிகள் என்னவென்று விசாரித்தனர். யமுனா அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட
கோகிலா அவளிடம் “இங்க பாரு உன் லைஃப் இது. அவங்க என்ன நினைப்பாங்க? இவங்க என்ன செய்வாங்க, அப்பா ஏத்துப்பாரா? இப்படினு யோசிச்சிட்டு இருந்த அடுத்தவங்க முடிவுதான் நீ ஏத்துட்டு வாழற மாதிரி ஆயிடும். உனக்கு சூர்யாவைப் பிடிச்சிருக்கு. தைரியம் இருந்தா வீட்டில் சொல்லு இல்லையா வீட்டை மறந்துட்டு சூர்யா கிட்ட மனசுல உள்ளதை பேசிடு” என்றாள்.
“சூர்யாகிட்ட பேசினா அவர் எப்பவும் படிப்பு முடியட்டும், நான் ஐபிஎஸ் ஆகிட்டு வரேன்னு சொல்றார்டி” என்று யமுனா சொல்ல
“அவர் அவரோட இஷ்டத்துக்குப் பேசுவார் டி, உன்னோட சூழ்னிலை நீ சொன்னாதானே புரியும்?” என்று கேட்டாள் கோகிலா.
“என்னடி சாணக்யா சீரியல் கதையா ஓடுது?” என்றபடி சுமதி இவர்களின் பேச்சில் புகுந்தாள்.
“சீரியலை விட சீரியஸான கதை ஓடுது” என்றாள் கனிமொழி.
“யமுனா இங்க பாரு, கோகி சொல்ற மாதிரி நீதான் டி தைரியமா முடிவெடுக்கனும்” என்றாள் சுமதி.
கோகிலா
“யமுனா, ஒன்னு புரிஞ்சிக்கோ சூர்யாவா உங்கிட்ட வந்து காதல் சொல்லியிருந்தாலும் அதை ஏத்துக்கிட்டது நீ, லவ் பண்றதுன்னா சும்மா சந்தோஷமா ஊர் சுத்துறது மட்டுமில்ல, அதுல தெளிவா உறுதியா நிக்கனும்” என்றாள் அழுத்தமாக.
“உனக்கென்ன டி நீ ஈசியா சொல்லுவ, உங்க வீட்ல பார்த்த பையனயே லவ் பண்ற, இவ பாவம்” என்று கனிமொழி யமுனாவிற்காகப் பேச சுமதியும் ஆமோதித்தாள்.
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை, ஸ்டாலினை வீட்ல பிடிக்கலன்னு சொன்னாலும் நான் அவனை ரெஜிஸ்டர் மேரேஜ் கூட பண்ணிப்பேன். அவங்க அப்பா இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்கல, இவளையே கேளேன் நீ. ஆனா என்னோட காதல் நான் தானே காப்பாத்திக்கனும். எதுவும் செய்யாம எல்லாரும் சேர்த்துவைப்பாங்கனு நான் நினைச்சா ஒன்னும் நடக்காது. இவளும் தானே சூர்யாவை உருகி உருகி லவ் பண்றா, அப்போ இவதான் தைரியமா முடிவெடுக்கனும்.”
“வீடு வேணும்னா சூர்யாவை விட்டுற வேண்டியதுதான்” என்று கோகிலா பட்டேன சொல்ல
“கோகி, என்னால அப்படி சூர்யாவ விடவே முடியாது” என்றாள் யமுனா உறுதியாக.
“அப்போ உங்க வீட்டை நீதான் எதிர்க்கனும்”
“அதுக்கு சூர்யா ஒத்துக்கனுமே, அவர் இன்னமும் ஒரு முடிவு சொல்லாம இழுத்தடிக்கிறார். படிப்பு, பரீட்சைனு பேசுறார்” என்றாள் யமுனா சலிப்பாக.
“இங்க பாரு சாத்துக்குடி, சூர்யாவோட லவ் எப்படினு நான் உனக்கு சொல்லத் தேவையில்லை. உனக்கே தெரியும், ஆனா நாளைக்கு சண்டைன்னு ஒன்னு வந்தா யாரும் உனக்காக நிக்க மாட்டாங்க, வீட்ல உன்னை கல்யாணத்துக்கு அப்புறம் ஏத்துக்காமவும் போகலாம். அப்போ சூர்யா மட்டும்தான் உனக்குப் போதுமான்னு நீயே யோசி, எதுனாலும் கோகி உன்னோட ப்ரண்டா எப்பவும் இருப்பா” என்றாள் கோகிலா.
இப்படி பலவித பேச்சுவார்த்தைகளை தோழிகளிடம் முடித்த யமுனாவிற்கு எல்லாரின் கருத்துகளும் சேர்ந்து இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பொங்கல் விடுமுறை முடிந்து சூர்யா தன் ப்ரியத்தம்மாவைக் காண ஆவலுடன் வந்தான்.
கடற்கரை காற்று அள்ளியது. முன்மாலைப்பொழுது, அலையைப் பார்த்துக்கொண்டு யமுனா நிற்க, சூர்யா அவள் சொன்னதைக் கேட்டான்.
“யமுனா, ஏன்ட்டிமா நுவ்வு? கொஞ்சம் உன் வீட்ல பேசக் கூடாதா?” என்று அப்போதும் யமுனாவை சமாளிக்கும் விதமாகவே பேச கோபம் வந்தது.
யமுனாவிற்கு அவளின் உணர்வுகளை பெரிதாய் யாரிடமும் பகிர்ந்தது கிடையாது. அண்ணனிடம் மட்டுமே ஒட்டுதல், அதுவும் இந்த விசயத்தினால் உண்டான குற்றவுணர்வில் யமுனா தவித்திருக்க சூர்யாவிடம் மட்டுமே உள்ளத்தை உள்ளபடி காட்டியிருக்கிறாள். சூர்யா யமுனாவின் பொக்கிஷம்! அவனைக் காணும்போது உள்ளம் பறக்க, உயிர் சிறகடிக்கும் அந்த உணர்வு! சூர்யா அவளின் வரம், வாழ்க்கை! என்ற நிலையில் இருப்பவளிடம் இந்த பேச்சு பெரும் உளைச்சலைத் தந்தது.
“எனக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சாட்டாங்கன்னு சொல்றேன் சூர்யா, உங்களுக்குப் புரியுதா இல்லயா? do you understand?” என்றாள் ஆவேசமாக. அன்று ஏதோ ஒரு குடும்பம் முன் புடவையில் தயாராகி நின்றவளுக்கு அப்படியொரு கோபம். வீட்டில் காட்ட முடியாத அத்தனையையும் அவனிடம் காட்டினாள்.
“I can understand! நீ நம்ம விஷயம் சொல்லுரா. டைம் கேளு, நீதானே உங்கவீட்ல பேசனும்” என்று சூர்யா பேச
“அதெல்லாம் பேசினா ஒத்துக்குறவங்க கிடையாது. எனக்குத் தெரியும் எங்க வீட்டைப் பத்தி. நம்ம ரெஜீஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்ற யமுனாவின் பேச்சில் சூர்யாவுக்கு உண்மையில் அதிர்ச்சி. படம் பார்க்க அழைத்தாலே அத்தனை பயம்கொள்ளும்பெண் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்ய வேண்டும் என்றால்?
“நான் புரிஞ்சுதான் பேசுறேன், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம், இந்த வருஷம் லாஸ்ட் எக்ஸாம் முடிஞ்சதும் மேரேஜ் பண்ணிக்கலாம் சூர்யா” என்றாள் உறுதியாக.
“அது தப்பு யமுனா, நான் சொல்றதை புரிஞ்சிக்கோ, எப்படி யாருமில்லாம நம்ம கல்யாணம் செய்றது, எனக்கு வேலை கூட இல்லரா. திஸ் இஸ் நாட் ரைட்!” என்றான் சூர்யா தெளிவாக, திடமாக.
“வேலை எல்லாம் வாங்கிக்கலாம் சூர்யா, நான் உங்களை ஒன்னுமே கேட்கமாட்டேன். நானும் படிச்சு முடிச்சிருவேன், வேலைக்குப் போறேன்”
“அது காதும்மா, என்ன வயசு உனக்கும் எனக்கும்? இப்புடு… ப்ச், இப்போ எப்படி நம்ம மேரேஜ் செய்ய முடியும்? படிக்க வந்துட்டு வேலை கூட இல்லாம கல்யாணம் செஞ்சுட்டு போனா நா நானா என்ன நினைப்பார்?” என்று சூர்யா கேட்க
“அப்போ எங்க வீட்ல படிச்சதும் கல்யாணம்னு சொல்லிட்டு இப்போ நான் மறுத்துப் பேசினா எப்படி ஒத்துப்பாங்க? இந்த வயசெல்லாம் ப்ரியத்தம்மான்னு என் பின்னாடி சுத்தும்போது தெரியலையா?” என்று கோபத்துடன் கேட்டாள் யமுனா.
“ஏமிரா? இப்புடு கூட நீதான் என் ப்ரியத்தம்மா, எப்பவும் அதேதான். ஆனா லவ் வேற டா பங்காரம். செட்டில் ஆகாம எப்படி மேரேஜ் செய்றது. இரண்டு பேருக்குமே கஷ்டம்ரா. ஒரு வேலை கூட இல்லாம எப்படி உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்க வீட்ல கேட்க முடியும்?”
காதல் வேறு என்று சூர்யா சொன்னதை தப்பாக அர்த்தம் படித்தாள் யமுனா.
“லவ் வேறன்னா எனக்குப் புரியல சூர்யா? நாந்தான் இதெல்லாம் வேண்டாம்னு விலகிப்போனேனே என் பின்னாடியே வந்துட்டு இப்ப கல்யாணம் வேண்டாம் சொல்றீங்க, காதலிக்க ஒருத்தி கல்யாணம் செய்ய ஒருத்தியா?” என்று வார்த்தை விட
“யமுனா! என்ன பேசுற நீ? சொல்றதை கூட ஒழுங்கா புரிஞ்சிக்க மாட்டியா நீ?” என்று சூர்யா கத்த
“இந்த வயசுல காதலிச்சா சரியா? வேலை இல்லாம ஏன் காதல் சொன்னீங்க அப்போ? நானும் பார்க்கிறேன் கல்யாணம்னு சொன்னாலே தள்ளிப்போடுறீங்க? என்னை வேற ஒருத்தனுக்குக் கட்டி வைச்சிருவாங்கனு பேசுறேன், அப்பவும் வீட்ல பேசுன்னா என்ன அர்த்தம்? இல்ல இங்க மெட்ராஸ்ல ஊர் சுத்த நான், கல்யாணம் உங்க குண்டூர் பொண்ணு யாராச்சும் பண்ணிக்கலாம்னு ஐடியாவா உங்களுக்கு?” என்று ஆவேசத்துடன் யமுனா கேட்க சூர்யாவின் கோபம் எல்லைக் கடக்க, கையை கூட வாஞ்சையாகப் பிடிப்பவன் யமுனாவின் கன்னத்தில் அறைந்தான்.
“நோர்முய்யி! ஹவ் டேர்? டேமிட்” என்றான் கண்கள் சிவக்க.
வேறு பெண்ணைக் கனவில் கூட நினைக்காதவனிடம் உணர்ச்சிவேகத்தில் யமுனா பேசிவிட கொதித்துதான் போனான்.
எல்லாருக்கும் இங்கு வெவ்வேறு உலகம்! ஒவ்வொரு உலகத்திலும் பலவித உணர்வுகள்! அவர்களின் உலகம், அதில் நிலவும் சூழலே உணர்வுகளை தீர்மானிக்கிறது. அப்படித்தான் சூர்யாவின் உலகம் வேறு! யமுனாவின் உலகம் வேறு! இருவரின் உணர்வுகளும் வேறு! இரு உலகம் சங்கமிக்கும்போது சச்சரவுகள் வருவது இயல்புதானே?
வீட்டில் பேச தைரியமற்று இருக்கிறாளே என்று யமுனா குறித்து சூர்யா நினைக்க, அந்த தைரியமில்லையென்றாலும் யமுனா தன்னை நம்பி தன்னுடன் வாழ எத்தனை காதலும் நம்பிக்கையும் பெரிய தைரியமும் வேண்டும் என்று அக்கணம் உணராது போனான் சூர்யா. சூர்யாவின் அந்த கடுமையை எதிர்ப்பார்க்காத யமுனா அழுகையுடன் வேகமாக நடந்து பேருந்தில் ஏறிச்சென்றுவிட்டாள்.