“போன செமெஸ்டர் எல்லாம் க்ளீயர் பண்ணியாச்சா ஸ்டாலின்?” ராணி அக்கா கேட்க அவர் வீட்டு டீவியின் ஆண்டனாவை சரி செய்தபடி பேசிக்கொண்டிருந்தான் ஸ்டாலின்.
“அக்கா, தம்பி கிட்ட டீவி தெரியுதா பார்க்க சொல்லுங்க”என்று அவன் சொல்ல ராணியும் கீழிருந்த மகனிடம் கேட்க, அவனும் பதில் சொன்னான். வேகமான செருப்பு சத்தம் கேட்க ராணி அக்காவும் ஸ்டாலினும் படிக்கட்டுப் பக்கம் பார்க்க, சூர்யாதான் வேகமாக நடந்து வந்து அறைக்குள் நுழைந்தான்.
ரேடியோவில் பாடல் ஓட ராமச்சந்திரன் உற்சாகமாகப் பாடிக்கொண்டிருந்தான். அவன் எழுதிய வங்கித் தேர்வு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்த மகிழ்ச்சி அவனிடம். சூர்யாவோ கோபத்துடன் வந்தவன் பாட்டு கேட்டு
“அதை ஆஃப் பண்ணு ரா” என்று கத்தினான்.
“டேய் சூர்யா! ஏன் டா? உனக்காகத்தான் வெயிட் பண்ணினேன்..” என்று ஆரம்பிக்க
“என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடு ராமு” என்ற சூர்யாவின் குரலில்
“என்னாச்சுடா? யமுனாவைப் பார்க்கத்தானே போன?” என்று ராமு நண்பனின் அருகே வந்து உட்கார்ந்தான்.
சூர்யா நடந்ததை சொல்ல, ராமு அவனுக்கு மேல் கோபமானான்.
“எவ்வளவு திமிர்டா உனக்கு? அந்த பொண்ணை அடிக்கனும்னா எவ்வளவு தைரியம்? இதான் உன் லவ்வா?” என்று ராமு கத்த அந்த சத்தம் வெளியே கேட்டது.
“எதாவது சண்டையா?” என்று ராணி அக்கா ஸ்டாலினைப் பார்க்க, ஹவுஸ் ஓனரிடம் என்ன சொல்வதென யோசித்தவன்
“சும்மா பேசிட்டு இருக்கானுங்க க்கா” என்றான்.
“என்னை சந்தேகப்படுறா ராமு, நான் அப்படியா? என்னை நம்பல டா யமுனா” என்று ஆதங்கமாய் சொன்னான் சூர்யா.
ராமுவோ “உன் இஷ்டத்துக்கு சுத்திட்டு இப்போ வெயிட் பண்ணுன்னு சொன்னா அந்த பொண்ணு என்ன செய்யும்?” என்று கத்தினான்.
சத்தம் நன்றாக வெளியே கேட்க ஸ்டாலின் உடனே “அக்கா படம் போட்டிருப்பான், நீங்க போங்க. இவனுங்க சும்மா பேசுறானுங்க” என்றான்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் வந்துடுவார் ஸ்டாலின், சத்தம் கேட்டா அவர் கோவப்படுவார். பார்த்து இருந்துக்கோங்க” என்று ராணி அக்கா சொல்லிவிட்டு செல்ல, ஸ்டாலின் கோபத்துடன் நண்பர்களிடம் போனான். ராணி அக்காவும் அன்று ஞாயிறு படம் பார்க்கும் ஆர்வத்தில் பெரிதாக கேள்வி கேட்காமல் சென்றுவிட்டார்.
“ஏன் டா இரண்டு பேரும் கத்துறீங்க?” என்று ஸ்டாலினும் கத்த
“இவன் என்ன செஞ்சிட்டு வந்திருக்கான் தெரியுமா?” என்று ராமு கேட்டான்.
“ஹரே ஸ்டாலின்! என்னைப் புரிஞ்சிக்காம பேசுறான் டா இவன்” என்று சூர்யாவும் கத்த, இருவரையும் சமாதானம் செய்தான் ஸ்டாலின்.
“எதுனாலும் கோவப்படாம பேசுங்கடா, ராணியக்கா சொல்லிட்டு போயிருக்காங்க. இன்னும் நாலு மாசம் ப்ரச்சனை இல்லாம போயிடனும்” என்று பொறுமையாகச் சொன்னான் ஸ்டாலின்.
சூர்யா எல்லாவற்றையும் சொல்ல,
“யமுனாவாடா உன்னைப் பார்த்து அப்படி சொல்லிச்சு?” என்றான் அதிர்ச்சியாக.
“ம்ம், தனே ஆலா செப்பிண்டி ரா (அவ தான் அப்படி சொன்னா). எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? அவளை தவிர யாராவது நான் பார்த்திருக்கேனா டா?” என்று தன்னை நம்பாமல் காதலித்து ஏமாற்றுபவன் போல் யமுனா பேசியிருக்க அந்த வருத்தம் தாளாது பேசினான் சூர்யா.
சூர்யாவின் காதல், தவிப்பு எல்லாம் உணர்ந்த ஸ்டாலினும் அவன் தோளில் கைப்போட்டு “விடுடா! ஏதோ அந்த பொண்ணு கோவத்துல பேசியிருக்கும். பெருசு பண்ணாத, ஆனாலும் அதுக்காக கை நீட்டி இருக்க வேண்டாம் நீ, கோகினா நீட்ன கையை உடைச்சிருப்பா” என்று ஸ்டாலின் சொல்ல
“நானும் என்ன வேணும்னா அடிச்சேன், எனக்கு கஷ்டமா இருக்குடா. நானே என் பிரியத்தம்மாவை அடிச்சிட்டேன். அவ என்னைப் புரிஞ்சிக்காம பேசிட்டா டா. அவளை லவ் பண்ணிட்டு வேற யாரையும் நான் எப்படி கல்யாணம் செய்வேன்? அதான் கோவத்துல அடிச்சிட்டேன். அழுதுட்டே போய்ட்டா” என்ற சூர்யாவின் குரலில் வருத்தம் இருந்தது.
“கல்யாணம் செய்யணும்னு இப்பவே சொன்னா எப்படி டா? என்ன வயசு ஆகுது நமக்கு?” என்று சூர்யா கேட்க
“டேய் காதல் இந்த வயசுலதான் வரும். அதுக்காக இப்பவே எப்படி டா கல்யாணம் செய்ரது?” என்று ஸ்டாலினும் திட்டினான். அவனுக்கும் யமுனாவின் பயம் அர்த்தமற்றதாய் தோன்றியது.
“ஏண்டா? அது பாட்டுக்குப் படிச்சிட்டு இருந்த பொண்ணை காதல்னு சொல்லி உன் பின்னாடி சுத்த வைச்சிட்டு இப்ப இப்படி பண்றது எந்த வகையில் நியாயம் சூர்யா? ஸ்டாலின்! அவனுக்குத்தான் அறிவில்லை, உனக்கும் இல்லையா? அந்த பொண்ணு இவனை நம்பாம பேசிச்சு சொல்றானே நம்பினதாலதான் டா பெத்தவங்களை விட்டுட்டு இவனை கல்யாணம் செஞ்சுக்க நிக்குது” என்று பட்டென்று சொன்னான் ராமு.
“நீ சொல்றது சரி ராமு. ஆனா இப்போ கல்யாணம் செய்றா வயசா? இவன் இன்னும் ஐபிஎஸ் பாஸ் பண்ணல, படிக்கிறதுக்காக இவங்க வீட்ல அனுப்பிருக்காங்க, அந்த பொண்ணு வீட்ல பேசி கொஞ்சம் டைம் வாங்கினா என்னவாம்?”
“சாம்பிராணியா டா நீ? அந்த பொண்ணுக்கு
வீட்ல மாப்பிள்ளை பார்க்கக் ஆரம்பிச்சுட்டாங்க, பொண்ணு இருந்தா படிச்சதும் கல்யாணம் செஞ்சிடுவாங்க. அதுவும் காதல் கீதல்னு சொன்னா கேள்வி கேட்காம உடனே எவனயாச்சும் பிடிச்சு கட்டிவைப்பாங்க. என்ன இப்போ இரண்டு பெரும் படிச்சு முடிக்க போறாங்க, வாழ்க்கையில சில சந்தர்ப்பங்கள் திரும்பவே வராதுடா. அந்த பொண்ணே துணிச்சலா கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கு. இவர்க்கு என்ன கேடு?” என்றான் சூர்யாவை முறைத்தபடி.
“என்னை நம்பி வர யமுனாவை நான் நல்லா பாத்துக்க வேண்டாமா? வீட்டை விட்டு வர நினைக்காம அந்த தைர்யமோட வீட்ல பேசலாம்னு தானே டா நான் சொல்றேன்” என்றான் சூர்யா.
“இவன் சொல்றது சரிதானே டா? கல்யாணம் பண்ணி ரெண்டு வீட்லயும் ஏத்துக்கலனா என்ன செய்றது? நடு ரோட்ல நிப்பாங்களா? கொஞ்சமாச்சும் ப்ராக்டிகலா பேசுடா” என்றான் ஸ்டாலின் நக்கலாக.
“மடப்பயலே! நாளைக்கு எல்லாம் இருந்து இவனோட யமுனா இல்லன்னா அப்போ என்னடா செய்வீங்க?”
“அதெல்லாம் என் யமுனா என்னை விடமாட்டா” உறுதியாய் வந்தது சூர்யாவின் வார்த்தைகள்.
“யமுனா உன்னை விட மாட்டான்னு எனக்கு தெரிஞ்சுபோச்சு, நீ அவளை விட்டுடவன்னுதான் நான் பேசுறேன்” என்றதும் சூர்யாவின் கண்கள் சிவக்க
“நானா? நா எப்படி டா அவளை விடுவேன். நா பிராணம் டா யமுனா” என்றான் கோபத்துடன்.
“நீ சொல்ற வரைக்கும் காத்திருக்கணும்னா எப்படி முடியும் யமுனானால?”
“எனக்கும் அவ மேல அன்பெல்லாம் இருக்குடா, சிட்டிவேஷன் புரிஞ்சிக்காம பேசுறா சொன்னேன் டா. ஒரு டு இயர்ஸ் வெயிட் பண்ணினா போதும். வீட்ல பேசியே கல்யாணம் பண்ணிப்போம் ” என்று சூர்யா சொல்ல
“ஏன் ராமு முன்னாடியெல்லாம் யமுனாவுக்கு சப்போர்ட் செய்ய மாட்ட, என்ன அதிசயம் ?” என்று ஸ்டாலின் ராமுவிடம் கேள்வி கேட்க
“டேய்! அந்த பொண்ணு காதல்ல உறுதியில்லாம இருக்கேன்னு தான் எனக்கு கோவம். இப்ப அந்த பிள்ளையே தைரியமா கல்யாணம் செஞ்சுக்கலாம்னு வந்து நிக்குது . இவன் யோசிக்கிறான், எனக்கெல்லாம் இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிருந்தா எவ்வளவு சந்தோசமா இருந்திருப்பேன் தெரியுமா?”
“எது? படிப்பை முடிக்காம கோதையை கட்டியிருந்தா நடுத்தெருவுல நின்னிருப்ப டா லூசுப்பயலே” என்று ஸ்டாலின் கிண்டல் செய்தான்.
“அப்போ நின்னிருப்பேன் தான். இனிமே கோதையைப் பத்தி பேசாத ஸ்டாலின் ப்ளீஸ், நான் மறக்கணும்னு நினைக்கிறேன். ஆனா இந்த மாதிரி நிலைமையில கோதை வந்திருந்தா நான் நிச்சயம் கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன், ஒரு பொண்ணு இவனை நம்பி எல்லாரையும் விட்டு வரேன்னு சொல்லுது , இன்னும் லாஜிக் பேசிட்டு இருக்கீங்க, இரண்டு டிகிரி முடிச்சருக்க ஒரு வேலை கிடைக்காதா உனக்கு? இவன் என்னை மாதிரி இல்ல ஸ்டாலின், அந்த பொண்ணு பேசுற முன்னாடியே அப்படி உருகினான், யமுனா இல்லனா இவன் தாங்கமாட்டான். என்னை மாதிரி இவன் கஷ்டப்பட வேண்டாம்னு தான் இவ்வளவு சொல்றேன் நான்” என்ற ராமுவின் குரல் நெகிழ்ந்திருந்தது.
“வீட்ல பேசவே பயப்படுற பொண்ணு இவனை நம்புதுனா எவ்வளவு தூரம் நேசிக்கணும்? நல்ல யோசிடா, உன்னை நம்பாம அந்த பொண்ணு பேசல, ஒரு ஆதங்கம் பேசியிருக்கும், அதுக்கு போய் கை நீட்டி இருக்க. உன் மேல தான் தப்பு. புரிஞ்சி நடந்துக்கோ, வாழ்க்கை எப்பவும் நம்ம இஷ்டப்படுற மாதிரி நடக்காது. அது போற போக்கிலே போயிடனும்” என்ற ராமு மேலே பேசாமல் எழுந்து கொண்டான்.
சூர்யா மனம் ராமு சொன்னதில் நிலைத்து இருந்தது. எவ்வளவு நம்பிக்கையும் காதலும் இருந்தால் யமுனா என்னை நம்பி அவள் வீட்டை விட்டு வருவாள்? அவ்வளவு காதலா என் மேல்? என்ற எண்ணம் எழ உடலெல்லாம் ஒரு இனிய பரபரப்பு.
‘நா பிரியத்தமா’ என்ற உள்ளத்தின் வார்த்தையை உதடுகள் முணுமுணுத்தது .
ஆனாலும் படிக்க அனுப்பிய அண்ணனை நினைத்தும் அப்பாவை நினைத்தும் ஒரு பயம், கவலை தோன்றியது. கூடவே ஐபிஎஸ் கனவும் துரத்தியது.
திருமணம் முடிந்து படிக்க முடியுமா? எத்தனை நாள் அண்ணய்யாவின் காசில் வாழ முடியும்? யமுனாவின் வீட்டில் ஏற்கவில்லையென்றால் பரவாயில்லை, தன வீட்டிலும் ஏற்கவில்லை என்றால் என்ன செய்வது? மனம் யமுனா வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தாலும் அறிவு அத்தனையும் யோசித்தது. இதில் யமுனாவை அடித்த வலி வேறு.
இரவு உணவு உண்ட பின்னும் சூர்யாவின் மனம் நிலைக்கொள்ளவில்லை.
“நான் தப்பு பண்ணிட்டேன் ரா, யமுனாவை பார்க்கணும் போல இருக்கு. அழுதிட்டே போனா, சாப்பிட்டாளா தெரியலையே? என்று புலம்பிய நண்பனை கண்டு என்ன செய்வதென தெரியவில்லை ஸ்டாலினுக்கும் ராமுவுக்கு.
“பேசாம ஹாஸ்டல் சுவர் ஏறி குதிச்சு பாத்துட்டு வரியா? என்று ஸ்டாலின் கேட்க அவன் கேட்பதில் இருக்கும் நக்கல் புரியாது
“நிஜமா ரா? அப்படி பார்க்கலாமா?” என்று சூர்யா உற்சாகமாய்க் கேட்க
“மட சாம்பிராணியா டா நீ? அவன் உன்னை கிண்டல் பன்றான் டா” என்று சிரித்தான் ராமு.
“தேங்க்ஸ் டா ராமு. நீ பேசலானா நான் இன்னும் யமுனா மேல கோவமாவே இருந்திருப்பேன். இப்படி ஒரு சைட் இருக்குனு யோசிக்கவே இல்லை நானு” என்றான் வருத்தமாக.
“மவனே இன்னிக்கு சண்டே, நாளைக்கு காலேஜ் போய்ட்டு என் கோகிட்ட இந்த விஷயத்தை சொன்னா வைச்சிக்கோ உன்னை உண்டில்லை ஆக்கிடுவா” என்று ஸ்டாலின் சொல்ல ராமுவோ
“அந்த பொண்ணை திட்டினதும் இல்லாம அடிச்சிட்டு வர வந்திருக்க, அந்த பொண்ணுக்கு அது வீட்டை நினைச்சு தான் பயம், உன்னை எல்லாம் பார்த்து பயப்படாது, சோ மவனே நீ சட்னி டா”
“யமுனா இட்லின்னா இவன் சட்னி என்ன சாம்பார் ஆனா கூட சந்தோசமா அவன் டா” என்று சிரித்தான் ஸ்டாலின்.
“போங்கடா, என் கஷ்டம் தெரியமா பேசுறீங்க” என்ற சூர்யா மொட்டை மாடியில் பாய் விரித்து படுத்தான். அவனருகே நண்பர்களும் வந்தனர். ராமுவுக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொல்ல சூர்யாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி .
“டேய்! எங்களுக்கு ட்ரீட் தர” என்று சூர்யா சொல்ல
“அதுக்கு முன்னாடி சூர்யா நீ தரணும் டா எங்களுக்கு, சிக்கீரமே கல்யாணம் நடக்க போகுது” என்று சொல்ல சூர்யாவிடம் வெட்கம்.
“ஆனாலும் பயமா இருக்குடா, அண்ணையாவுக்குத் தெரிஞ்சா என்னவாகும்? பேசாம யமுனாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய் நான் நானா கிட்ட பெர்மிஷன் கேட்டா என்னா?”
“போடா வெண்ண! ” என்ற ஸ்டாலின் “நீ ஒரு பொண்ணை உன் காதலியா அழைச்சிட்டு போறதுக்கும் மனைவியா அழைச்சிட்டு போறதுக்கும் வித்யாசம் இருக்குடா, சும்மா யமுனாவோட போய் நின்னா அப்படியே யமுனாவை அனுப்பி விட்டுருவார், உன் மனைவியா அழைச்சிட்டு போனா அவங்களால ஒன்னும் செய்ய முடியாது.”
“ஆமா டா, நீ பணம் எல்லாம் யோசிக்காத, நான் படிச்சதுமே ஜாப் ல சேர்ந்துடுவேன், உனக்கு நான் ஹெல்ப் செய்றேன் டா”
“காதலுக்காக காசு செலவழிக்க தயாரா இருக்கான் டா நம்ம ராமு. உன் பையனுக்கு நீ அப்போ ராமுனு தான் பெயர் வைக்கணும்.”
“அட போடா” என்று ராமு சிரிக்க
“நான் சிரஞ்சீவினு வைப்பேன் டா” என்று சூர்யா வானத்தை பார்த்து ரசனையாக சொல்ல
“இவ்வளவு நேரம் கல்யாணம் வேண்டாம், கடமை இருக்கு கடலை இருக்குன்னு சொன்னான் டா ஒருத்தன், இப்போ பிள்ளைக்கு பேர் வைக்கற வரைக்கும் போய்ட்டான். நல்ல வருவடா, உன்னோட பாதத்தடத்தை பின்பற்றி நானும் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிடுறேன், ஆனா நான் இவனை மாறி இல்ல டா, ராமு முன்னாடி சொன்னது மாதிரி என் மகனுக்கு ராமுன்னுதான் பெயர்” என்று ஸ்டாலின் சபதம் போல் சொல்ல மூவருக்கும் சிரிப்பு.
அடுத்த நாள் சூர்யா யமுனாவைப் பார்க்க காத்திருக்க, யமுனாவோ சூர்யா நினைப்பது போல் அவ்வளவு எளிதில் இரங்கிவிடவில்லை. அவ்வளவு பிடிவாதம், அவ்வளவு அழுத்தம் அவளின் அமைதியின் பின்னால்.
ஆனால் எல்லாம் தாண்டி அவ்வளவு காதல் அவனின் மேல்! ஒருவாரம் அப்படியே சூர்யாவின் காத்திருப்பு நீண்டது.