“யமுனா, ஏண்ட்டிமா இதி? ஏன் இப்படி பண்ற? ஒன் வீக்கா நான் வெயிட் பண்றேன். ஐ அம் ரியலி சாரிடா” என்று சூர்யா பத்து நிமிடமாய்க் கெஞ்சினான்.
ஒரு வாரம் அவனை அலையவிட்டு இப்போதும் பேசவில்லை யமுனா. யமுனா எப்போதும் அமைதிதான், இன்று அதனை அதிகம் பயன்படுத்தினாள். சற்குணபாண்டியன் கண்டிப்பான தந்தைதான்! ஆனால் பெண்பிள்ளை மீது கை நீட்டியதில்லை. அப்பா அடித்திருந்தால் கூட யமுனா ஏற்றிருப்பாளோ என்னவோ? சூர்யா அடித்ததைதான் ஏற்கவே முடியவில்லை. சூர்யாவின் கோபம் தெரியும், அதில் எப்போதும் ஒரு நியாயம் இருக்கும். அதை விட அவனிடம் அவள் உணர்ந்த மென்மையின் மேன்மையையே கண்டுபழகியவளுக்கு அவனின் அடி மிகுந்த வலியைக் கொடுத்தது.
“இப்பவே இவ்வளவு கோவப்படுறவர் நாளைக்கு கல்யாணம் ஆனா பின்னாடி இப்படி இருக்கமாட்டாருனு என்ன நிச்சயம்? இவரை நம்பி வரேன் சொல்ற யமுனாவை எப்படி அடிக்கலாம்?” என்று கோகிலா சூர்யாவையும் ஸ்டாலினையும் சண்டை போட்டாள்.
கோகிலாவிடம் கெஞ்சி யமுனாவை அந்த வார இறுதியில் வெளியே அழைத்து வந்திருந்தான் ஸ்டாலின். சூர்யா பாவமாக ஸ்டாலினை பார்த்தான். கோகிலாவின் பேச்சில் சூர்யா தவித்து போய் யமுனாவை பார்க்க அவளோ கண்களில் நீரை சுமந்து நின்றாள்.
“நீ ஏண்டி அழற? இவர் அடிச்ச வாங்கிட்டு வந்துட்டு இப்ப என்ன அழுகை? அப்பவே பட்டுனு ஒன்னு போடவேண்டியதுதானே? நமக்கு கை இல்லையா? இல்லை இவருக்கு கன்னம் இல்லையா? என்னமோ உன் ப்ரண்ட் பத்தி அப்படி பேசுவ? என்ன இது?” என்று ஸ்டாலினையும் விடாது பேசினாள் கோகிலா.
“கோகி, சாரிமா. நான் அன்னிக்கு கோவத்துல டென்ஷன்ல அடிச்சிட்டேன், தப்புதான் ரா. ஐ அம் சாரி” என்றவன் யமுனாவின் முகம் பார்க்க அவளின் கண்களில் இருந்த நீரைப் பார்த்தவன் அவள் கையைப் பற்றி தன் நெஞ்சம் அருகே கொண்டு சென்றவன்
“யமுனாம்மா, நுவண்டே நா சர்வம் டா! அன்னிக்கு அடிச்சது தப்புதான் டா, சாரிம்மா. ப்ளீஸ் ஐ அம் சாரி, வேணும்னா கோகி சொன்னமாதிரி என்னை அடிச்சிடு” என்றான்.
“அவ அடிக்கமாட்டான்னு தைரியம் உங்களுக்கு. அதான் இப்படி சொல்றீங்க. அடிக்கிறதை அடிச்சிட்டு மறுபடி இப்படி பேசினா நாங்க மனசு இறங்கிடணும்ல” என்றாள் கோகிலா.
“போதும் கோகி, அவனை பத்தி தெரியாம பேசாத. தப்புன்னு உணர்ந்து மன்னிப்பு கேக்கிறான்ல. ஒரு தடவ மன்னிச்சு விட சொல்லுடி. நீ சமாதானம் செஞ்சு வைப்பேன்னு பார்த்தா இன்னும் பெருசாக்குற?” என்றான் ஸ்டாலின் முறைத்துக்கொண்டு.
“அவரை இந்த தடவை மன்னிச்சுடுவா, ஆனா நீ இது மாதிரி
என்கிட்டே எதிர்ப்பார்க்காத” என்று கோகிலா முறைப்பாக சொல்ல
“யமுனா, ப்ளீஸ்!” என்று சூர்யா கெஞ்ச, அவன் நெஞ்சில் இன்னும் யமுனாவின் கரம் அடங்கி இருந்தது. யமுனா தன் கரம் எடுக்க முயல சூர்யா விடவில்லை. ஸ்டாலின் அதனைப் பார்த்தவன் கோகிலாவை பிடித்தபடி கடலை நோக்கி நண்பனுக்கு கண்காட்டி விட்டு நடந்தான்.
ஒரு கரம் யமுனாவின் கரத்தை நெஞ்சில் வைத்திருக்க, சூர்யாவின் மற்றொரு கரமோ அவளின் கன்னத்தை மெல்ல தடவியது. யமுனா முகத்தை திருப்பிக்கொள்ள
“யமுனா உன் சூர்யா பாவமில்லை” என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை.
“நீ என்னை நம்பாம பேசிட்டேன்னு தான் அப்படி நடந்துட்டேன். தப்பு தான் ரா”
சூர்யா கெஞ்சவே செய்ய, யமுனாவிற்கு சூர்யாவின் அந்த வார்த்தைகளில் மௌனம் உடைந்து கோபம் பெருகியது.
“உங்களுக்காக நான் எத்தனை வருஷம் வேணும்னாலும் காத்திருப்பேன் சூர்யா, ஆனா என் வீட்ல? அதை யோசிக்க மாட்டீங்க
நீங்க” யமுனா உணர்ச்சிவசத்தில் பேச, சூர்யாவிற்கு யமுனாவை புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த தவிப்பு, அதில் பெருகிய காதல், அதனால் பொங்கிய கோவம் என அவளின் ஒவ்வொரு உணர்வையும் ரசித்து பார்த்தான். முன்பு அவளின் காதல் காண காத்திருந்த நொடிகள் எல்லாம் கண்முன் வந்து இப்போது யமுனா காதலை பிரதிபலிக்க பேரின்பம் அவனிடம்.
சுற்றி ஜனத்திரள் இருக்க, எதையும் கவனிக்கும் மன நிலையில் இல்லை அவன். யமுனாவின் தோளை சுற்றி கைகள் போட்டவன்
“சாரிடா யமுனா! நிஜமா சாரி. நீ சொல்றது சரிதான், ஆனாலும் என்கிட்டே வேலை இல்லை, நான் சம்பாரிக்கல. நீ என்னை நம்பி வந்தா நானும் அதையெல்லாம் யோசிக்கணும் தானே? புரியுதா உனக்கு?” என்று தன் நிலையை தன்னவளிடம் தலைவன் சொல்ல , தலைவிக்கும் புரிந்தது.
“என்னால அதையெல்லாம் யோசிக்க முடியல சூர்யா. உங்களை என்னால மறந்துட்டு வாழ முடியாது. அதான் எனக்குத் தெரியும்! உங்க காதலை நான் ஏத்துக்கும்போதே எனக்குத் தெரியும் எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு. அதை நான் பலதடவை உங்க கிட்ட சொல்லிட்டேன் . அவங்களை மீறி போறதை தவிர எனக்கு வேற வழி இல்லை சூர்யா.” என்று யமுனா சொல்லவும் சூர்யாவின் இன்னொரு கரம் யமுனாவின் கையை அழுத்தமாய் பற்றியது.
காதல் சில சமயம் தரும் தைரியம் அலாதியானது! அப்படிதான் யமுனாவுக்கும் சூர்யாவின் காதல் தனி தைரியம் தந்தது. யமுனாவின் காதல் சூர்யாவுக்கும் புது தெம்பு தந்தது. வாழ்க்கை பற்றிய பயம், நிதர்ஸனம் எல்லாம் யோசித்தாலும் அந்த நேரம் காதல் என்ற உணர்வே மீகி இருந்தது.
“பிரியத்தம்மா! தேங்க்ஸ் எ லாட் ! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலம்மா. பட் நேனு சத்தியங்கா செப்த்தானு டா, எப்பவும் உன்னை இனிமே கஷ்டப்படாத மாட்டேன், அடிச்சது அதுதான் லாஸ்ட். நம்ம உன் இஷ்டப்படியே கல்யாணம் பண்ணிக்கலாம் “என்று சூர்யா புன்னகையுடன் சொல்ல அந்த பாவனையில் மகிழ்ந்து போனாலும்
“அது என்ன என் இஷ்டம்? உங்களுக்கு இல்லையா” யமுனா முறைத்துக்கொண்டு கேட்டாள்.
“உனக்கு பயமா இல்லையா யமுனா? நம்ம செய்ற விஷயம் நம்ம வீட்ல ஏத்துக்கலைனா என்ன செய்றது? என்னோட நானா கண்டிப்பா இதை எதிர்பார்க்க மாட்டார்” என்ற சூர்யாவுக்கு உள்ளுக்குள் பயம்.
“நீங்க கூட இருக்கும்போது எனக்கு பயமில்லை சூர்யா, இத்தனை வருஷம் எங்கப்பாவுக்கு அம்மாவுக்கு பொண்ணா, என் அண்ணாவுக்கு தங்கச்சியா இருந்தேன். அதெல்லாம் தானா அமைஞ்சது. இனிமே உங்களோட மனைவியா இருக்க போறேன், என் லைஃப்ல நான் எனக்குப் பிடிச்சு செஞ்ச விஷயம் ஒன்னு படிப்பு, இன்னொன்னு நீங்க சூர்யா. படிக்க எங்க அண்ணா சப்போர்ட் இருந்தது, இது நானே தேடிக்கிட்டது. அதுல எனக்கு சந்தோசம் தான்!” என்றாள் முழு மனதுடன், முழுமையான காதலுடன்.
சூர்யாவுக்கு தன்னை நம்பி வரும் பெண்ணை நல்லபடியாக காப்பாற்ற வேண்டுமே என்ற பயம், கூடவே அவளை நன்றாகப் பார்க்க முடியும் என்ற திடமும் இருந்தது. காதல் போலவே கல்யாணமும் அவர்கள் இருவரின் முடிவாக மாறிப்போனது.
அந்த வருடம் யமுனாவின் படிப்பு முடிந்தது. ஊருக்குப் போகும் முன் சூர்யா அவளை பார்க்க வந்தான். யமுனாவின் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
“சாயந்திரம் அண்ணன் வந்துடும், நான் ஊருக்குப் போயிடுவேன். எப்படியும் அண்ணன் நான் சொன்னா மெட்ராஸுக்கு அனுப்பி வைச்சிடும். ஒருவேளை என்னை வீட்ல விடலைனா நீங்க கண்டிப்பா வந்துடுவாங்க தானே? எனக்கு ரொம்ப பயமா இருக்கு சூர்யா” யமுனாவின் கைகள் சூர்யாவை இறுக்கமாய் பற்றி இருந்தன.
இன்று மாலை உதயமூர்த்தி தங்கையை அழைக்க காரில் வந்துவிடுவான். தேர்வுகள் முடிந்த பின் எந்த காரணம் சொல்லியும் பொய் சொல்லி தப்பிக்க முடியாதே, அதனால் கோகிலா அவளிடம்
“உங்கண்ணன் கிட்ட டிசி கொடுக்க லேட் ஆகும், இல்லை மார்க் ஷீட் கிடைக்க லேட் ஆகும்னு எதாவது சொல்லு. அவர் நம்ப வைக்கிற மாதிரி தைரியமா சொல்லணும் டி சாத்துக்குடி” என்றிருந்தாள்.
“எல்லாத்தையும் சரியா வருமான்னு யோசிக்காத டி, சரியா வரவைக்கும்னு நினை. உன்னோட சூர்யா வேணும்னா நீ பயப்படமா தைரியமா இருக்கணும்” என்று பலவாறாக திட்டம் தீட்டி அனுப்பி வைத்தாள். ஒருவேளை யமுனாவால் வர முடியாத சூழ் நிலை இருந்தாலும் கூட கோகிலாவிற்கு திருமணம் என்று பொய் சொல்வது. இல்லையென்றால் நேரடியாகவே ஸ்டாலின் அப்பாவின் மூலம் கட்சி ஆட்களை கொண்டு பேசுவது என்று திட்டம் வகுத்தனர்.
“கண்டிப்பா வந்துடுவேன் யமுனா, பயப்பட கூடாது. நீ சூர்யா வைஃப், அதுல நோ சேஞ்ச். தைர்யமா இருடா” என்றான் சூர்யா நம்பிக்கையுடன்.
பதினைந்து நாட்கள் சென்றிருக்கும், அவர்கள் திட்டம் செய்தபடி இரண்டாவது நாளில் திருமணம். ஸ்டாலினின் அப்பா உதவியுடன் பதிவு திருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்தது.
யமுனா வீட்டில் அண்ணனிடம் சென்று சொல்ல, உதயமூர்த்தி தங்கையை முழுதாக நம்பினார்.
“அறுவடை முடிஞ்சு போலாமா யமுனா?” என்று உதயமூர்த்தி கேட்க
“இல்லண்ணா, அப்புறம் லேட்டாகிடும். நம்ம வீட்ல விடமாட்டாங்களே” என்றவளுக்கு உள்ளுக்குள் அவ்வளவு பயம். அதை விட சூர்யாவின் மீது அதீத காதல்.
“சரி யமுனா, அப்பாகிட்ட கேட்கிறேன். நீ சோகமா இருக்காத. உன் கூட்டாளிகளைப் பார்த்துட்டு பத்திரமா வாம்மா” என்ற அண்ணனை ஏமாற்றுகிறோமே என்ற குற்றவுணர்வு யமுனாவின் நெஞ்சம் அழுத்தியது.
உதயமூர்த்தி தங்கைக்காக அப்பாவிடம் சென்று பேச அவரோ
“படிச்சு முடிச்ச பின்னாடி மெட்ராஸ்ல என்ன வேலை இவளுக்கு? அதெல்லாம் வேண்டாம்” என்று மறுத்தார்.
“இல்லப்பா, அவ செர்டிஃபிகட் வாங்கனும்”
“என்ன பெரிய சர்டிபிகெட்? வேலைக்கா போக போறா? அப்படியே அவசியம்னாலும் அறுவட முடிஞ்சு நீ போய் வாங்கிட்டு வா” என்று சற்குணப்பாண்டியன் கண்டிப்புடன் சொன்னார். தங்கையின் முகம் பார்த்த உதயமூர்த்திக்கோ அவளின் பொலிவற்ற முகமே பட, தோழிகளைப் பார்க்க விரும்புகிறாள் போல. அந்த சந்தோஷத்தை ஏன் விட வேண்டும் என்று நினைத்து
“அப்பா, ராத்திரி ஏறினா காலையில போய்ட்டு மறுபடி நைட்டு வந்து இறங்கிடும் பா. எப்பவாது அவளே போறதுதானே? நம்ம வசதிக்கா காலேஜ் தொறந்து வைப்பாங்க? நாளா பின்ன சர்டிஃபிகெட் வேணும்னாலும் கட்டி கொடுத்த பின்னாடி யமுனாவை அழைச்சிட்டு போக முடியுமா?” என்றான் உதயமூர்த்தி. அதனால் சற்குணப்பாண்டியனும் சம்மதித்தார்.
“அண்ணா, என்னை மன்னிச்சிடு” என்று யமுனா தாங்கமாட்டாது பஸ் ஏறும் முன் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்க
“அப்பா திட்டுறது என்ன புதுசா யமுனா? நீ பத்திரமா போய்ட்டு சீக்கிரமே நாளைக்கு கிளம்பி வந்துடுடா” என்றான் உதயமூர்த்தி. யமுனாவிற்கு வீட்டின் மீது பாசம் தான், அதிலும் அண்ணன் என்றால் இன்னுமே அதிகம். வாழ்க்கை சில நேரம் ஒன்றை இழந்ததால்தான் ஒன்றை தரும்!
சில நேரம் இழப்பது சுமையாகவும் பெறுவது சுகமாகவும் இருக்கும்! சில நேரம் இழப்பது வரமாகவும் பெறுவது சுமையாக இருக்கும்! யமுனாவிற்கு இதனை பகுத்தறிய முடியா நிலை. ஆனால் காதல் மட்டுமே தலைவியின் தலையாய நிலை!
ப்ராட்வே பேருந்து நிலையத்தில் அந்த அதிகாலை வேளையில் யமுனா வந்து இறங்க, அவள் வரும் நேரம் சரியாக நின்றிருந்தான் சூர்யா. அதுவரையில் வீட்டில் மாட்டிவிடுவோமோ சூர்யாவை பார்க்க வேண்டுமே என்று பலவாறான உணர்ச்சியில் சிக்கியவள் அவனைக் கண்ட நொடி அத்தனையும் மறந்து அவன் மட்டுமே யாதுமாகிப்போனான்.
“யமுனா” என்று சூர்யா காதலாய் அழைக்க அவனைக் கட்டிக்கொண்டாள். காதல் கரை சேர்ந்த நதியாய் அவள்! நதியில் தெரியும் கதிர் பிம்பமாய் அவன்!
“டேய்! எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டு இன்னிக்கு நான் உனக்கு பண்ணி வைக்க வேண்டியதா இருக்கு, சீக்கிரம் வாடா. உன் ப்ரியத்தம்மா எங்கயும் போகாது” என்ற ஸ்டாலினின் குரலில் இருவரும் விலகினர்.