திடீரென கேட்ட அலறலில் பிரஷாந்தும் சம்யுக்தாவும் நெஞ்சுக்கூடு தூக்கிவாரிப்போட அதிர, ஆணவனை பயத்தில் ஒட்டிநின்றுக்கொண்டாள் சம்யுக்தா.
“என்னாச்சு?” கீழிருந்தே சத்தமாய் கத்தினான் பிரஷாந்த். மேலிருந்து, ‘ஒன்னும் இல்ல’ என்ற வித்தகனின் குரல் கேட்க, “உப்ப்… மனுஷன பயத்துலயே வச்சுருக்கானுங்க ப்பா!” என்றவன் நெஞ்சை நீவிக்கொண்டே தன் விரைத்த உடலை தளர்த்த, ‘பயந்துட்டேன் டா!’ என்ற சம்முவும் அவனோடு சேர்ந்து மீண்டும் சோபாவில் விழுந்தாள்.
மேலே, வியர்வை கொட்ட கொட்ட சீரற்ற மூச்சுகளுடன் திணறிக்கொண்டிருந்த பவித்ராவை கைத்தாங்கலாக பிடித்து ஓரமாய் கிடந்த சிறு மேசை ஒன்றில் அமரவைத்தான் வித்தகன்.
“பவி, ரிலாக்ஸ்! வாய்ல மூச்சு விடாத! மெல்ல மெல்ல வாயை மூடி நிதானமா மூச்சு விடு! ஜஸ்ட் ஃபாலோ மை வேர்ட்ஸ்! ஸீ… எவ்ரிதிங் இஸ் நார்மல்! வீ ஆர் சேஃப்!” தொடர்ந்து அவன் ஆறுதலாக பேசிக்கொண்டே இருக்க, சில நிமிடங்கள் எடுத்தது அவள் தன்னிலைக்கு வர!
இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, “என்னை மாதிரி தான் வேணுமா? நான் வேணாமா?” என்று பேச்சுவாக்கில் வித்தகன் கேட்டுவிட்டிருக்க, அவன் கேட்டபின்பு தான், என்ன கேட்டோம் என்பதையே உணர்ந்தான் அவன். அதே போல தான் பவித்ராவும். மனதில் வித்தகன் மீது சிறு ஈர்ப்பு எழுந்தது என்னவோ உண்மை தான். ஆனால், இப்படி உடனே ‘சரி’ என்று தலையாட்டும் அளவுக்கு அவள் மனம் இன்னும் முன்னேறவில்லை.
அப்படி இருக்கையில் இருவரும் தங்களை மீறி வார்த்தைகளை விட்டுவிட்டு அது கொடுத்த தாக்கத்தில் அதிர்வில் ஒருவர் முகத்தை பார்த்தபடி மற்றவர் அமர்ந்துவிட்டனர்.
வித்தகன், ‘என்னை இப்படி பேச சொல்லி எதுவோ ஒன்று உள்ளுக்குள் இருந்து உந்தியதே! என்ன அது!?’ என்று தன் மனதோடு உரையாட, அவனையே பார்த்துக்கொண்டிருந்த பவித்ராவின் கண்களில் அவனுக்கு பின்னால், சற்று தொலைவில் ஏதோ ஒன்று விநோதமாக தென்பட்டது.
என்ன அது? என்று அவள் உற்று நோக்கும்போது, காய்ந்துப்போன இரத்தக்கறைகள் உடலில் ஆங்காங்கே ஒட்டிப்பிடித்திருக்க, பிறந்து சில நாட்களே ஆனதை போன்றதொரு தோற்றத்தை ஒத்த ஒரு குழந்தை, அனாயாசமாக காற்றில் மிதந்துக்கொண்டு இவளை பார்க்க, இவள் கண்களோ அதன்மீது நிலைகுத்திப்போயின!
அவள் தன் கண்களையே நம்பயியலாத அதிர்வில், விரிந்த கண்களை சிமிட்டக்கூட செய்யாது அதை பார்த்துக்கொண்டே இருக்க, அவளை பார்த்து தன் பற்கள் அற்ற பொக்கை வாய் கிழிய, சிரித்தது அந்தக்குழந்தை! அவ்வளவு தான்… பவித்ராவின் ‘வீ…..ல்ல்ல்’ என்ற அலறலில் அலறி குதித்தது, பிரஷாந்த், சம்மு மட்டும் அல்ல. அந்த குழந்தையும் தான்!!!
சில நிமிடங்களில் தன்னை சமன்படுத்திக்கொண்டு, அயர்ந்த தோற்றத்தில் இருந்தவளிடம், “என்ன ஆச்சு!?” என்று மெதுவாய் வினவினான் வித்தகன். நிமிர்ந்து பார்த்தவளோ, “சொன்னா நம்ப மாட்டீங்க!” என்றாள் முணுமுணுப்பாய்.
“இங்க நம்ம வந்ததுல இருந்தே, நடக்குறது எல்லாம் நம்ம நம்பிக்கையை மீறுன விஷயம் தான்! அதனால சொல்லு!” வித்தகன் அழுத்தி கேட்க, தான் கண்டதை அவள் தயக்கமாய் உரைக்க, வித்தகன் பேச்சற்று நின்றான்.
இப்போது அவனிடம், “என்ன ஆச்சு?” என்று வினவினாள் பவித்ரா.
யோசனையும் குழப்பமுமாக இருந்தவன், “அந்த ராணி கர்ப்பமா இருந்தாங்கல்ல?” என்று வினவ, ‘ஆம்’ என்றவளுக்கு இப்போது சிந்தனை அவன் போகும் வழியே போக, கிலி பிடித்தது.
“அப்போ?” அவள் மிரட்சியாய் கேட்க, “தெரியல! பிறந்த குழந்தை’ன்னா! ஒருவேளை, அவங்களுக்கு எதுவும்…!” என்றவன் அதற்கு மேல் சொல்லாமல் நிறுத்திவிட்டான். தன் கற்பனை குதிரைக்கு இறக்கை கட்டுவதை விட, நடந்தது என்ன என்பதை அறிந்துக்கொள்வது தான் முக்கியம் என்று தோன்றியது. வீணான கற்பனைகளுக்கு நேரம் சிந்தாமல், இங்கிருந்து விரைந்து வெளியேற வேண்டிய மார்கத்தை தேட வேண்டும் என்று தோன்றியது.
அப்படியே சில நொடிகள் அமர்ந்தான். தங்களுக்கு தெரிந்தவரை அந்த அரண்மனைக்குள் நடந்தவற்றை மௌனப்படமாய் ஓட்டிப்பார்த்தான். ராணியின் குண இயல்பை ஆராய்ந்து பார்க்கையில் கண்டிப்பாக தனது பாதக பக்கத்தை வெளிக்காட்ட விரும்பியிருக்க மாட்டார். அந்த ஆண்டனியை வேலையை விட்டே அனுப்பியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று எண்ணியவனுக்கு, ஒருவேளை அப்படி நிகழாமல், ஆண்டனி முழுமையாக நடந்தவற்றை பதிவு செய்திருந்தால்!?
ஆண்டனி…!
அவன்தானே எழுதியது!? அப்போது…!!!
இதே போக்கில் சிந்தித்தவனின் மூளையில் பொறிதட்ட, விலுக்கென்று எழுந்தவன், “வா பவி!” என்றுவிட்டு தடதடவென படிகளில் இறங்கினான்.
அவன் ஓடி வரும் வேகத்தில், உண்டான சத்தம் அந்த வீடு முழுக்க எதிரொலிக்க, கீழே சோபாவில் இருந்த இருவரும் அடித்துப்பிடித்துக்கொண்டு எழுந்தனர்.
“ஐயையோ, சும்மா இருக்கோம்ன்னு தெரிஞ்சா கத்துவான்… நான் சோபாவுக்கு கீழ பாக்குறேன், நீ மேல பாரு!” என்ற பிரஷாந்த், தரையோடு தரையாய் கிடந்து தேடுவதை போல நடிக்க, சம்முவோ அண்ணாந்து பார்த்து காற்றில் எதுவும் மிதந்து வருகிறதா என்று தேடிக்கொண்டிருந்தாள்.
மின்னல் வேகத்தில் இறங்கி வந்தவனோ, நடுக்கூடத்தில் நின்று, “மாடியில இருந்து வந்தா, வலப்பக்கம் கிட்சன், அதுக்கு கொஞ்சம் தள்ளி, கண்ணாடி! கண்ணாடிய ஒட்டின மாதிரி…” கைகளை ஆட்டி சொல்லிக்கொண்டிருந்தவன் கண்களில் அவன் தேடி வந்தது விழுந்தது.
ஏதோ பழைய துணி ஒன்று மூடி இருக்க, அருகே சென்றவன், மெல்ல அதை உருவினான். அத்தனை தூசி கிளம்பியது. கண்ணில் அது பட்டு எரிச்சல் கொடுக்க, கூடவே இருமல் வேறு!
மூவரும் அவனை கேள்வியாய் பார்த்துக்கொண்டிருக்க, இருமி முடித்து, கலங்கிப்போயிருந்த கண்களை ஒருவாறாய் சிரமப்பட்டு பிரித்தவனோ, தன் எதிரே தெரிந்த மேசை, நாற்காலியை கண்டு, தன்னை மீறி விழி விரித்தான்.
அதைக்கண்டதுமே ஏதோ ஒரு பிரகாசம்! புத்தகம் கிட்டிவிடும் என்ற நம்பிக்கை!
“என்ன பண்றீங்க நீங்க!?” பவி கேட்க,
“இது… இந்த டேபிள்!” என்ற வித்தகன், அதையே பார்த்துக்கொண்டிருக்க, வெகு சொற்ப வினாடி இடைவெளியில், அவனை போன்ற ஆச்சர்யத்துடன், “ஆண்…ஆண்டனி டேபிள் தானே!?” என்றாள் சம்மு.
அவளிடம் பிரகாசமாய் தலையாட்டியவன், வேகமாய் சென்று அந்த மேசையை ஆராய்ந்தான். ஆறு இழுப்பறைகள் இருந்த அந்த டேபிளை வித்தகன் குடைய, பிரஷாந்தும் உடன் சேர்ந்தான். அத்தனையும் பூட்டி இருந்தது.
ஆனாலும், அந்த மேசை மரத்தால் செய்ததாலோ என்னவோ, கரையான் அரித்துப்போட்டிருந்த மேசை, ஆண்களின் வலுவான நான்கைந்து அடிக்கே உலுத்துப்போய் திறந்துக்கொண்டது.
ஏதேதோ பொருட்கள்! மிகவும் பழமை வாய்ந்தது எல்லாம் இருந்தது. ஆனால், புத்தகம் போன்ற அமைப்பு ஒன்றுமே இல்லை! வெகு நேரம் எடுத்து தேடினான் வித்தகன். கண்டிப்பாக இதில் தான் இருக்க வேண்டும் என்று என்னவோ அவனுக்கு ஒரு திடம்! அது ‘இல்லை’ என்ற ஆனபோது அவனால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
கோபத்தில் அந்த மேசையை அப்படியே எத்தி தள்ளிவிட்டு, ஆத்திரமாய் ‘ஆஆஆ’ என அவன் கத்த, கீழே விழுந்த அந்த மேசையோ, கொஞ்சநஞ்சம் ஒட்டியிருந்த தன் உயிரையும் நீர்த்தது. சிறுசிறு பாகமாய் உடைந்து கிடந்த அந்த மேசையை கண்டு இன்னும் ஆத்திரம் கூட எட்டி மிதித்தான் வித்தகன். அப்போதுமே அவன் ஆத்திரம் அடங்கவில்லை.
எங்குமே இல்லை என்றால், வேறு எங்கு என்று தான் தேடுவது!? இங்கிருந்து எப்படி தப்பிப்பது? என்ற தொடர் சிந்தனையில் அவன் சுவரை காலால் எத்திக்கொண்டு நிற்க, “டேய், இங்க பாரு!” என்று கத்தினான் பிரஷாந்த்.
வேகமாய் அவன் திரும்ப, கீழே உடைந்து கிடந்த மேசையின் மேல்பாகத்தில் ஏதோ ஒரு ஓட்டை போன்று இருப்பதை ஆராய்ந்துக்கொண்டிருந்தான் பிரஷாந்த்.
“என்ன அது!?” வித்தகன் வேகமாய் வந்தான்.
“ஏதோ இருக்கு இதுக்குள்ள!” என்றவன், “ஏய் சம்மு, கத்தி குடு!” என்றான். அவளும் தன் இடையில் இருக்கும் சிறு கத்தியை எடுத்து நீட்ட, அதைவைத்து குத்தி குத்தியே அந்த ஓட்டையை பெரித்தாக்கினான் பிரஷாந்த். சற்று பெரிதானதும், இருவருமாய் சேர்ந்து அதை அடிக்க, சுக்கலாய் உடைந்தது அந்த பலகை!
உடைந்த பாகங்களை அகற்றிவிட்டு பார்க்கையில் ஏதோ ஒரு பெரிய பொருள் கனத்த துணியால் சுற்றப்பட்டு இருந்தது. கண்டிப்பாக அது தான் அவர்கள் தேடும் அந்த புத்தகம் என்று புரிந்தது.
நைந்துப்போயிருந்த அந்த துணியை கத்தி கொண்டே மெல்ல மெல்ல கிழித்த பிரஷாந்த், உள்ளிருந்ததை பத்திரமாய் வெளியே எடுக்க, ஒரு கனத்த புத்தகம் அவர்கள் கைகளுக்கு கிட்டியது.
ஆனால், அதில் இருந்த எழுத்துக்களின் அர்த்தத்தை தான் அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
எழுத்து ஆங்கிலத்தில் இருக்க, இரு ஆண்களும் அதன் அர்த்தம் புரியாமல், பவித்ராவை பார்க்க, அவளுமே இது என்ன என்று புரியாமல் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிரஷாந்த் எழுத்துக்கூட்டி, “உன்னே சொம்ப்ரே எப்போபீ’யா?” என்று முழிக்க,
“une sombre epopee’ன்னா A DARK EPIC’ன்னு அர்த்தம்!” என்றாள் சம்யுக்தா.
புத்தகம் அவள் கைகளுக்கு மாறியது. அதில் இருந்ததை படித்து, அதற்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தாள் சம்யுக்தா.
மீண்டும் காலம் நூற்றியம்பது ஆண்டுகளுக்கு முன் பயணித்தது.
“இது என்னுடைய மூன்றாவது பதிவு! முதலில் எழுதிய தமிழ் பதிப்பை ராணி மித்ரங்கா ஷரபாயி அழித்துவிட்டார். எழுத்தை தொடரக்கூடாதென்று என்னிடம் வேண்டி கேட்டுக்கொண்டார்.
ஆனாலும், நான் வந்த வேலையை பாதியில் விடக்கூடாது என்று, ராணியறியாது ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கினேன்! ஆனால், அதையும் கண்டுவிட்ட ராணி, என்னை இப்போது மிரட்டவே செய்தார். சர் ஹென்றி எனக்கிட்ட வேலையை பாதியில் விட மனமொப்பாத நான், செய்வகையறியாது திணறினேன்!
ராணியின் சொல்லை மீறி எழுத எனக்கு ஐயம் இருந்தபோதும், இங்கு நடக்கும் காரியங்கள் எதுவும் நல்லவையாக படவில்லை. சர் ஹென்றியும் ஒரு வருடத்தில் வருவதாக சொன்னது, இப்போது அதையும் தாண்டி சென்றுக்கொண்டிருந்தது.
ராணியின் இயல்புகள் அனைத்தும் மாறியது! சர் ஹென்றி திரும்பிவருகையில் அவர் எனக்கிட்ட வேலையை செவ்வனே செய்துமுடிக்கும் எண்ணத்தில், என் தாய்மொழியான பிரெஞ்சில் நிகழ்வுகளை பதியவைக்கிறேன்!
இப்படிக்கு,
ஆண்டனி!”
முதல் பக்கத்தில் இருந்த அவனது ஆசிரியர் குறிப்பை படித்த சம்யுக்தா, அடுத்த பக்கம் திருப்ப, “எதுக்கு ராணி இவனை எழுதக்கூடாதுன்னு சொல்லணும்?” என்றாள் பவித்ரா.
“நடக்கிறது எதுவும் நல்லதா இல்லன்னு ஒரு லைன் இருந்துச்சு கவனிச்சியா? என்னவா இருக்கும்?” என்று வித்தகன் வினவ, “அழகு குறைஞ்சதுல கோவம் வந்து வியர்டா பிகேவ் பண்ணுச்சே அந்த ராணி! அதுல பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சுருக்குமோ!?” என்றான் பிரஷாந்த் சந்தேகமாய்.
பவித்ரா, “அச்சோ பாவம்! கன்சீவா வேற இருந்தாங்கள்ள?” என்று வருத்தமாய் உச்சுக்கொட்ட,
“கொஞ்சம் எல்லாரும் ஷட் அப் பண்றீங்களா?” சத்தம் போட்டாள் சம்மு.
“என்ன இருக்குன்னு படிச்சுட்டா தெரிஞ்சுடப்போகுது! அதைவிட்டுட்டு…!” அவள் சற்று கடுப்பாக சொல்ல, ‘அதுவும் சரிதான்’ என்று சம்முவின் மொழிபெயர்ப்பை கேட்க ஆரம்பித்தனர்.
“உங்களுக்கு என்னுடைய வருத்தங்கள் ராணி! நீங்கள் கர்பமாக இல்லை!” என்றார் மருத்துவர் வில்லியம். அவர் சொன்னதை கேட்டு அங்கிருந்த வேலையாட்கள் அனைவருமே நெஞ்சில் கைவைத்து அதிர்ந்துப்போக, ஆண்டனி மித்ரங்காவின் உணர்ச்சியற்ற முகத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
மாதங்கள் ஒன்பது கடந்தும் அவளிற்கு வயிறு மேடிடவில்லை. குழந்தையின் அசைவுகள் இல்லை. பேறுகால தொந்தரவுகள் இல்லை. அவ்வப்போது அவளை கவனித்துக்கொள்ளும் பாட்டி ஒருவரின் வழி காட்டுதல் தான் அதுவரை!
ஆனால், அன்று காலை தன் அறையில் இருந்து வெளியே வரும்போதே அடிவயிறை பிடித்துக்கொண்டு விந்திவிந்தி வந்தவள், தடுமாறியே தரைத்தளத்தை அடைந்தபோது மயங்கியே சரிந்தாள். பதறிப்போய் அவளை மெத்தை இருக்கையில் கிடத்திய சிறிது நேரத்திற்க்கெல்லாம் அவள் உடையில் உதிரப்போக்கு தடம் பதித்தது.
அதற்குமேல் ஆண்டனி தாமதிக்கவில்லை. காரை அனுப்பி கோட்டையில் இருந்து அவர்கள் இன மருத்துவரை வர செய்தான். வந்து பார்த்தவர், வெகு நேர பரிசோதனைக்கு பின்னே,
“உங்களுக்கு என்னுடைய வருத்தங்கள் ராணி! நீங்கள் கர்பமாக இல்லை!” என்று சொல்ல, மற்றவர்கள் அடைந்த அதிர்ச்சி கூட ராணியிடம் இல்லை.
“டாக்டர், அது எப்படி சாத்தியம்! நிறைமாத கர்ப்பிணி அவர்கள்” என்றான் ஆண்டனி.
“நோ ஆண்டனி! அவர்கள் கர்பமாகவில்லை. அது அவர்கள் உடலில் ஏற்ப்பட்ட சிறு குறைபாடு! சிலருக்கு இப்படி ஆவதுண்டு! மாதக்கணக்கில் அவர்களின் சுழற்சி முறை தள்ளி போவதுண்டு! அதை பலர் இப்படி தான் கர்ப்பம் என்று எண்ணிக்கொள்கிறார்கள்!”
“ஆனால், இது!? இப்படி நடந்திருக்கிறதா?” நம்ப முடியாமல் ஆண்டனி கேட்க, ஆண்டனியின் தோளில் நட்பாய் கரம் போட்டு, அவனை அங்கிருந்து பல அடிகள் நகர்த்திப்போன வில்லியம்,
“குயின் மேரி’யை அறிவீர்கள் என்று நினைக்கிறேன்! அவர்களுக்கு கூட இப்படி ஒரு வியாதி இருந்தது. அவர்கள் கர்ப்பம் இல்லை என்று தெரிந்தபோது மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அதன் பாதிப்பு, கிட்டத்தட்ட முன்னூறு ஆட்களை உயிரோடு எரித்துக்கொல்ல வைத்தது” என்று நிறுத்தியவர்,
“ராணி மித்ரங்காவின் நிலை கூட அப்படி மாறலாம்!” என்று சொல்ல, ஆண்டனி திகைத்தான்.
“அவர்கள் இப்போதே மனதளவில் சமநிலையில் இல்லை! அவர்கள் உடலில் ஏகப்பட்ட காயங்கள் உள்ளது! எதனால் என்று கேட்டதற்கு பதில் இல்லை. உணர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கி வைப்பது பெரும் பிரளயத்தையே உண்டாக்கும்! கவனம் ஆண்டனி!” என்ற வில்லியம், “முடிந்தவரை விரைவாக வர சொல்லி சர் ஹென்றிக்கு தகவல் அனுப்புங்கள்!” என்றுவிட்டு கிளம்பினார்.
ஆண்டனி எத்தனை நேரம் அப்படியே திகைத்து நின்றானோ!? ஒரு பணியாள் தன் கொலுசொலி ஒலிக்க, மாடியேறும் அரவத்தில் திரும்பியவன், “நில்!” என்றான். அவள் பணிவோடு நிற்க, அவள் கரத்தில் இருந்த பானத்தை கண்டவன், அது ராணிக்கு தான் என்பது புரிய, “என்னிடம் கொடு!” என்று வாங்கிக்கொண்டு, முதல்முறையாய் ராணியின் அறைக்கு சென்றான்.
கட்டிலில் சாய்ந்து கலைந்த ஓவியமாய் அமர்ந்திருந்தாள் மித்ரங்கா! முகத்தில் முன்பிருந்த தேஜஸ் துளியும் இல்லை. உடல் எடைக்கூடி, கருவளையம் விழுந்து ஆளே மிகவும் ஓய்ந்து காணப்பட்டாள். அன்று தன் முகத்தை கண்டு கதறி கத்தியவள், அதன் பின்னே மிகவும் வித்தியாசமாக தான் இருந்தாள்.
காரணமின்றி சிரிப்பது, காரணமின்றி கத்துவது, வேண்டுமென்றே வேலையாட்களை வதைப்பது என சிறிது சிறிதாக அவள் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஒரு நாளின் வெகு நேரத்தை அவள் ஹென்றியின் ஆய்வுக்கூடத்தில் தான் கடத்தினாள். அந்த கூடத்தினுள் நுழைய ஒருவருக்குமே அனுமதி இல்லை. என்ன செய்கிறாள் அங்கே என்று யாருக்குமே தெரியாது!!!
மெல்ல நுழைந்தவன், “ராணி!” என்றான், அழைப்பாய். அவள் கண்கள் மட்டும் இவனை நோக்கி திரும்பியது.
“குடிக்க பானம் கொண்டு வந்தேன்!”
அவள் கண்கள் அருகே இருந்த மேசையை சுட்டிக்காட்டின. அங்கே குவளையை வைத்தவன், “முன்னமே தெரியுமா உங்களுக்கு?” என்றான். கர்ப்பம் இல்லை என்றதும் அவளிடம் தென்படாத அதிர்ச்சி அவனை அவ்வாறு கேட்கத்தூண்டியது.
“உணர முடிந்தது!” என்றாள் மெலிதான குரலில். அதற்குமேல் அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஆறுதலாய் பேசுமளவு நெருக்கமும் இல்லை. அவன் எழுத்து வேலையை நிறுத்திவைக்க சொல்லி சில மாதங்கள் முன்பு தன் மிடுக்கை விட்டு கெஞ்சலாக கேட்டதோடு சரி! அதன்பின்னே எந்த பேச்சுகளும் இருவரிடமும் இருந்ததில்லை.
“நான் சர் ஹென்றி’க்கு தந்தி அனுப்புகிறேன்!” அவன் சொன்ன மாத்திரத்தில் வேகமாய் எழுந்தவள், “எதற்கு? ஏன்!?” என்று பதட்டமாய் கேட்டவள், “அதெல்லாம் தேவையில்லை, அவர் வரும்போது வரட்டும்!” என்றாள்.
“அவரை வர சொல்லி தந்தி அனுப்ப போவதில்லை. ஆனாலும், ‘இதை’ தெரியப்படுத்த வேண்டுமல்லவா!?”
“ஒன்றும் தேவையில்லை!” என்று கோபமாக சொன்னவள், பின் தன்னை சமாளித்து, “அவர் விட்டுசென்ற அழகு ராணியும் இல்லை, அவரின் வாரிசும் இல்லை. குறைந்தபட்சமாய் அவர் ஆசையும், கனவுமாவது முழுமையாய் நடக்கட்டும்!” என்றாள் வேதனை முகத்தை அவனுக்கு காட்டாது!!!
ஆண்டனிக்கு புரிந்தது, அவள் கணவன் அனுதினமும் ஆராதித்த அழகும் போய், சுமப்பதாய் நினைத்த குழந்தையும் போய், இப்போது எங்கே தன் கணவனும் தன்னை விட்டு சென்றுவிடுவானோ, தன்னை வெறுத்துவிடுவானோ என்ற ஐயமே, பாதுகாப்பின்மையே அவளை இப்படி வருத்துகிறது என்று!!!
இடம், சூழ்நிலை மாறினால், மனதுக்கு இடம் சேர்க்கும் என்று அவனுக்கு தோன்றியது. ஆனால், எங்கே அனுப்ப முடியும் அவரை! அதுவும் ஹென்றி இல்லாத நேரத்தில்!!! அவளுக்கென இருந்த ஒரே தந்தையும் இயற்கை எய்தியிருக்க, அவள் மனநிலை கருதி அதைக்கூட இன்னமும் தெரியப்படுத்தியிருக்கவில்லை அவளுக்கு!
தொலை தூரத்தில் இருந்தாலும், ஒரு திங்களுக்குள் இரண்டு தந்திகள் வந்துவிடும் ஹென்றியிடம் இருந்து! இங்கு நடப்பவை எல்லாம் அவனுக்கு தெரியப்படுத்தப்பட்டுக்கொண்டு தான் இருந்தது, ராணி அறியாமல்! இந்நிலையில் தான் அவளை சந்திப்பதை ராணி விரும்பவில்லை என்றும் கூட அவன் அறிவான்!
ஆனால், முன்பை விட நிலைமை இப்போது இன்னும் மோசமல்லவா? குழந்தை என்பது ஹென்றிக்கும் உரித்தானது தானே! அது ‘இல்லை’ என்றான செய்தியை கண்டிப்பாக சொல்லிதானே ஆகவேண்டும்!! ராணியிடம் சரி என்றவன், எப்போதும் போல அவள் அறியாமல் செய்தி அனுப்ப முடிவு செய்தான்.
அவன் சிந்தனையில் அவன் நிற்க, “இப்போது என் முகத்தில் எதுவும் மாற்றம் தெரிகிறதா?” என்றாள் ராணி.
முகத்தை உற்றுப்பார்த்தான். அவனையறியாமல் அவளது பளிங்கு முகம் மனக்கண்ணில் தோன்றி, இப்போதிருக்கும் முகத்துடன் ஒப்புமை செய்து வருந்தியது. ஆனாலும், “தெரிகிறது ராணி! முகத்தின் தேஜஸ் மீள்கிறது!” என்றான்.
அவள் ஒளி பெற்ற அவள் முகம், எதையோ சிந்தித்துக்கொண்டிருக்க, அவளிடம் இருந்து விடைபெற்று கீழே சென்றான். அவன் இடத்தில் சென்று அவன் அமரும்போது அடுக்களை ஓரமாய் நின்று ஒருத்தி கண்ணை கசக்கிக்கொண்டிருப்பது தெரிய, “என்ன ஆகிற்று?” என்றான் அவளிடம்.
சட்டென கேட்ட அவன் குரலில் தூக்கி வாரிப்போட நிமிர்ந்தவள், மலங்க மலங்க விழித்தாள்.
“உன்னைத்தான்! எதற்க்காக அழுகை?” அவன் மீண்டும் கேட்க, கண்களை துடைத்தவள், “என் அக்காள்…!” என்றாள் விசும்பிக்கொண்டே!
“யார்?!” என்றான் புரியாமல்.
“இங்கே வேலை பார்த்தாளே! செவ்வி! என் அக்காள்” அவள் சொல்ல, நினைவு கூர்ந்தவன், “அவளுக்கென்ன?” என்றான்.
“இரு திங்கள் கடந்துவிட்டது! அவளை எங்கும் காணக்கிடைக்கவில்லை!” என்றிட, “இறுதியாய் எங்கே பார்த்தாய்?!” என்றான்.
“அன்றிரவு வேலை முடித்து நாங்கள் இருவருமே ஒன்றாக தான் கிளம்பினோம்! அப்போது ராணி செவ்வியிடம் குடிக்க ஏதேனும் கொண்டு வர சொல்லி பணிந்தார். அவளை விட்டு நான் முன்னே சென்றுவிட்டேன்! அதன்பிறகு அவளை இன்று வரை நான் பார்க்கவில்லை” என்றாள் அழுதுக்கொண்டே.
“இரு திங்கள் பொறுத்துவிட்டு இப்போது சொல்கிறாய்!?” சிறு கோபத்துடன் ஆண்டனி கேட்டிட, “இல்லை… நான் மறுதினமே சொன்னேன்!” என்றாள் உடனே.
“யாரிடம்!?”
“ராணியிடம்!” என்றவள், “நான் சொன்னதில் வருத்தம் கொண்ட ராணி, அவரே தனிப்பட்ட முறையில் ஆட்களை விட்டு தேட சொல்வதாக சொன்னார்! இதை வேறு யாரிடமும் சொல்ல தேவையில்லை என்றும் சொன்னார்! ஆனால், இப்போதுவரை என் அக்காளின் சுவடு தெரியவில்லை” என்றாள், விசும்பிக்கொண்டு.
ஆண்டனியின் புருவங்கள் நெரிந்தது.
“யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னாரா?!” என்றான்.
“ஆம்!” என்றவளும், “எனக்கென்று இருப்பது அவள் ஒருத்தி தான்! அவளும் இல்லாமல் நான் என்ன செய்வேன்!?” என்றாள், கண்ணை துடைத்து!
அவள் அழுகையில் சிந்தனையை விட்டவன், “நீ வருந்தாதே! நானும் ஒருமுறை ராணிக்கு நினைவுப்படுத்துகிறேன்!” என்றான்.
அவளை அனுப்பிவைத்தவனுக்கு யோசனைகள் அதிகமானது. காணாமல் போன அந்த பெண்ணை தன் நினைவடுக்கில் மீள்கொணர்ந்து பார்த்தான்.
‘ராணி ஏன் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல வேண்டும்!?’ அது வேறு அவனுக்கு முட்டியது.
அவ்வாறு யோசித்துக்கொண்டிருந்தவனின் மூளைக்குள் மின்னலென நினைவு வந்துப்போனது அந்த நாள்! அந்த நாளின் ‘மூலம்’!
தன் முகத்தை கண்ணாடியில் கண்டு ராணி ரத்தம் தோய்ந்த கரங்களால் அடித்துக்கொண்டு கதறிய ‘அந்த நாள்’…!
“““மோசமாகவா? அதைவிடவே மோசம்! ராணியின் முகத்தை காண சகிக்கவில்லை. எத்தனை அலட்டல் தான் அழகி என்று!? இவள் வனப்புக்காக தான் அந்த ஆங்கிலேயன் இவளை கொணர்ந்ததே! திரும்பி வருபவன், இவள் முகத்தை கண்டான் என்றால், தலைதெறிக்க தன் சொந்த நாட்டுக்கே திரும்பி ஓடிவிடுவான்!”””
இந்த பேச்சு!? இதை அவனும் தானே அன்று கேட்டான்!? அதைக்கேட்ட பின் தானே ராணி தன்னை துன்புறுத்திக்கொண்டது!?
அப்போது இதை பேசியது அவளாக இருக்குமோ!?
அப்படியென்றால்…!???
ஆண்டனிக்கு எண்ணங்கள் தாறுமாறாக ஓடியது. ஆனாலும், ‘இருக்காது!’ என்று தன்னை அவன் சமாதானப்படுத்த, மாடியில் இருந்து இறங்கி வந்தாள் மித்ரங்கா.
இவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே வந்தவள், ரகசிய பொத்தானை அழுத்தி, ஆய்வறைக்குப்போக, அவனுக்கு இன்னமும் ஏதேதோ ஐயம் உண்டானது.
அவன் ஐயத்தை எல்லாம் மெய்ப்பிக்கும்படி, அந்த இருண்ட அறைக்குள், ஒரு மெழுகின் வெளிச்சத்தில், கட்டியாய் இருந்த ரத்தத்தை கையில் எடுத்து பிசைந்து, தன் முகத்தில் தேய்த்துக்கொண்டிருந்தாள் ராணி!
அவள் கைகளில் முகத்தில் எல்லாம் ரத்தக்கட்டிகள்! ரத்தம் புதிது இல்லை என்பதால், அதன் நீர்த்தத்தன்மை மறைந்து, கட்டியாகிருந்தது. அதை பிசைந்து பிசைந்து தன் முகமெல்லாம் பூசி, அடுத்து உடலுக்கும் தேய்க்க ஆரம்பித்தாள். உடலெல்லாம் ரத்தக்கறை படிந்து, அவள் உரு பார்க்கவே கோரமாக இருக்க, அங்கிருந்த ஆய்வுக்கூட இரண்டடி ஆடிப்பாவையில் தன் உருவை கண்டவளுக்கு, வார்த்தைகளில் வடிக்க இயலாத ஒரு புத்துணர்ச்சி!!!
அதே ஆடிப்பாவையில், சற்று தூரத்தில், பாதி அழுகிய நிலையில் அலங்கோலமாக கிடந்தாள், காணாமல் போன செவ்வி!!!