நன்மங்கலம் காட்டுப்பகுதி காவல் அதிகாரியின் முன்னே கையில் ஒரு ஆணை காகிதத்துடன் இறுக்கமாய் நின்றிருந்தார் ராஜசேகர், உடன் சுதர்சனமும்!
அவர் நீட்டிய காகிதத்தை வாங்கி பார்த்த அதிகாரி, “மொபைலை தேடித்தரனுமா?” என்றார் திகைப்பும் வியப்புமாய்!
“ஆமா… எங்க பொண்ணுங்க இங்க தான் கடைசியா வந்துருக்காங்க… அவங்களை கண்டுப்பிடிக்க சொல்லி கேட்டேன்! ஆள் கிடைக்கலன்னு சொல்லிட்டீங்க! ஆனா, அவங்க மொபைல் சிக்னல் இங்க தானே காட்டுது! அப்ப மொபைல் இங்க தானே இருக்கும். அதை தேடிக்குடுங்க எங்களுக்கு!” என்று இறுக்கமாகவே கேட்டார் ராஜசேகர்.
அதிகாரி என்ன சொல்வதென தெரியாமல் சுதர்சனத்தை பார்க்க, “சர்ச் பண்ண பர்மிஷன் வாங்கிட்டு தானே வந்துருக்கோம் சார்! அப்றமும் எதுக்கு யோசிக்குறீங்க?” என்று கடுப்பை அடக்கி கேட்க, அதன்பின் அவர்களுடன் மூன்று காவல் அதிகாரிகளை அனுப்பிவைத்தார் அவர்.
ஒரு பொறுப்பான, கடமைத்தவறாத நேர்மையான அதிகாரியிடம் இவர்கள் முன்னமே சென்றிருந்தால், இந்நேரம் பெண்களை கண்டுப்பிடிப்பதில் இத்தனை நாட்கள் வீணாகியிருக்காதே! திறமையான அதிகாரி என பலரால் சுட்டிக்காட்டப்பட்ட ‘ரகுநந்தபூபதியை’ வஞ்சமின்றி திட்டிக்கொண்டிருந்தனர் தந்தைகள் இருவரும்!
திட்டிமட்டும் என்ன பயன்? இனிமேலாவது பிறரை நம்பாது தன் சுயமுயற்சியில் மகவுகளை மீட்டெடுக்க எண்ணி, மீண்டும் அந்த காட்டுக்குள் தன் மகள்களை தேடி புறப்பட்டனர் அத்தந்தைகள்!
***
“நம்ம இங்கிருந்து போறதுக்கு ஒரே வழி தான் இருக்கு!”
கனத்த மௌனத்துடன் இருந்தவர்களை வித்தகனின் குரல் மீட்டது.
யோசித்துப்பார்த்தால் இதைத்தவிர வேறு வழியும் இல்லை தான்! மீண்டும் மௌனம் அங்கே நிலவ, தன்னை சமன்ப்படுத்திய வித்தகன், “இந்த வீட்டுக்குள்ள இருந்து வெளில போறது அவ்ளோ ஈசி இல்லை. ஒரே ஒரு முறை, வாழ்றதுக்காக சாகுற அளவு ரிஸ்க் எடுத்தா என்ன?” என்று அவன் கேட்க, பெண்கள் இருவரும் தங்கள் மனதை தயார்ப்படுத்த, பிரஷாந்த் தான் மனதுக்குள், ‘உனக்கென்னடா…! படத்துல வர பஞ்ச் டைலாக் எல்லாம் சொல்லிட்டு போய்டுவ! எனக்கு தான் இங்க அல்லு வுடுது! ஆம்பளையா பொறந்து பயப்பட கூட சுதந்திரம் இல்ல…’ என்று புலம்ப,
“உன்னைத்தான் கேட்குறோம்! நாங்க மூணு பேரும் போக ரெடி! நீ என்ன சொல்ற!?” என்று பிரஷாந்தின் தோளை உலுக்கிக்கேட்டாள் சம்யுக்தா.
“ஹான்! மாட்டேன்னா சொல்ல முடியும்! போலாம்!” என்றவன் மெல்ல எழுந்து அந்த வீட்டையே சுற்றிலும் ஒருமுறை பார்த்தான். கதையாய் கேட்டபோது வந்த காட்சிகள் எல்லாம் நிழற்ப்படமாய் அவன் கண்முன்னே தெரிந்தது.
அதே கற்பனையோடு அவன் பார்த்துக்கொண்டு நிற்க, மாடியில் இருந்த அறையின் கதவு ஒன்று திறந்தது. அவன் விழிகள் விரியப்பார்க்க, உள்ளிருந்து மெல்லிய சோம்பலுடன், உடலை நெளித்தபடி வெளியே வந்தான் ஹென்றி!
வந்தவனின் பார்வை அங்கும் இங்கும் அலைந்தது. பின்னே மெல்ல படிகட்டுகளில் இறங்கி வந்தான். கீழே இறங்கி வந்தவன், பிரஷாந்துக்கு வெகு நெருக்கத்தில் நின்றான். ஹென்றியின் கண்கள் இப்போது ஆண்டனியின் அறையை பார்த்தது. அதன் கதவு திறந்து இருக்க, திரும்பி அவன் மேஜையை பார்த்தான்.
அங்கே அவன் வேலை செய்ததற்கான அடையாளம் இருக்க, “மித்ரா…!” என்று அழைத்தான். எந்த சத்தமும் இல்லை என்றதும், மெல்ல அடுக்களை பக்கமாக அவன் கால்கள் பெயர, அப்போது யாரோ எங்கோ ஓங்கரிக்கும் சத்தம்!
பதில் மொழி இல்லாமல் போக, சற்று பதட்டமாய் அவன் நடக்க, மீண்டும் அதே ஓங்கரிக்கும் சத்தம். நின்றுவிட்டான். ஒலி வந்த வழி அவன் கண்கள் போக, அவன் புருவங்கள் சுருங்கியது. ஆய்வகத்தில் இந்நேரம் என்ன ஓசை இது!? குழப்பத்தோடு அவன் கால்கள் அவ்விடம் சென்றது.
அந்நேரம், திடீரென ‘டங்….’கென்ற சத்தம்!
விருட்டென தெளிந்தான் பிரஷாந்த். அவன் கண் முன்னே இருந்த ஹென்றி இப்போது இல்லை. இது கற்பனையா? கண்ட காட்சியா? என்று கூட வேறுப்படுத்த முடியாத அளவு அத்தனை தத்ரூபமாய் அவன் கண்ணில் தெரிந்திருந்தது. ஆனால், அது அவனின் ஹாலோசிநேஷன்!
கடிகாரம் மூன்று மணி என ஓலமிட்டதில், நால்வருக்கும் உள்ளுக்குள் ‘திக்…திக்…திக்!’ தான்.
நால்வரின் கையிலும் அவர்கள் மொபைலின் டார்ச் இயக்கத்தில் இருந்தது. ஒரு திட்டமே இல்லாமல் ஆய்வகத்தின் நுழைவாயிலில் நின்றனர். உள்ளே என்ன நடக்கும்? எப்படி இருக்கும்? எதுவும் தெரியாது. ஆய்வகத்தில் இருந்து வெளியேற ஒரு வழி உண்டு என்பது மட்டுமே அவர்களுக்கு இப்போது தெரிந்த ஒரே விடயம்!
கதவு திறப்பதற்கான பொத்தானை தேடி கண்டுப்பிடித்தனர். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அது வேலை செய்யுமா என்று தெரியாது! ஆனால், ஒரு நம்பிக்கை. பொத்தானே இல்லை என்றாலும் கூட அவர்களால் இதன் உள்ளே போக முடியும். என்ன? திரும்பிதான் வர முடியாது!
அந்த பூஜாடிக்கு கீழே இருந்த பொத்தானில் கை வைக்கப்போன வித்தகன் இறுதி நொடியில் தயங்கினான். மூவரும் அவனை கேள்வியாய் பார்க்க, திரும்பியவன் கண்கள் சம்யுக்தாவில் நிலைத்தது.
“என் வாழ்க்கைல நான் தெரிஞ்சே பண்ண முதலும் கடைசியுமான தப்பு நீதான் சம்மு! என் மனசே என்னை மன்னிக்காது! இருந்தாலும், என்னை மன்னிச்சுடுன்னு உன்கிட்ட கேட்க தோணுது! நீ என்னை மன்னிக்கனும்ன்னு பேராசை வருது!” என்றான் வித்தகன்.
ஒன்றும் சொல்லாமல் பார்த்தவள், “உண்மையில எனக்கு கோவமே இல்ல உங்கமேல! சின்ன வருத்தம் இருந்துச்சு, ஆனா அதுக்கூட ஏனோ இப்போ இல்ல… அதுக்காக நான் உங்களை இப்படியே விட்டுடுவேன்னு நினைக்காதீங்க ஜி! நீங்க என்னைக்குமே என்னோட ‘க்ரஷ்’ தான். ஜாலியா சைட் அடிச்சுட்டே இருப்பேன்!” என்றவள் முகத்தில் மெய்யாகவே வருத்தம் தெரியாமல் இருக்க, அவனுக்கு இப்போது தான் மனது சற்று ஆறியது.
“நானும் சாரி!” என்று தடுமாற்றமாய் ஆரம்பித்தான் பிரஷாந்த்.
“உனக்கு விருப்பம் இருக்கான்னு கேட்டுருக்கணும்! இல்லன்னா நீ ‘நோ’ சொன்னபிறகாது போர்ஸ் பண்ணாம இருந்துருக்கணும்! அங்கிள் கூட சேர்ந்து நானும் உன்னை இம்ச பண்ணிட்டேன்! சாரி!” என்றான் பிரஷாந்த் பவித்ராவை பார்த்து.
லேசாக தலைகுனிந்தவள், “இதுல என் தப்பு தான் அதிகம்! நிச்சயம் செஞ்ச பிறகு ‘நோ’ சொன்னது என் தப்பு! முன்னாடியே சொல்லிருந்தா யாருக்கும் எந்த மனகஷ்டமும் இருந்துருக்காது! சாரி!” என்று சொல்ல, “பரவால்ல… பிரெண்ட்ஸ்’ஸா இருப்போம், நீ விருப்பப்பட்டா!” என்று பிரஷாந்த் சொல்ல, பவித்ரா சம்மதமாய் புன்னகைக்க,
“இப்போ நான் யார்க்கிட்ட சாரி சொல்றது!?” என்று முழித்தாள் சம்யுக்தா.
மூவருக்குமே சிரிப்பு வர, “ஹான்… உள்ளே போய் அந்த பேய் ராணிக்கிட்ட சொல்லு… எக்ஸ்யூஸ்மீ, சாரி ஃபோர் த டிஸ்டர்பென்ஸ்… இங்கிருந்து எப்படி வெளில போறதுன்னு சொல்ல முடியுமான்னு கேட்டு சொல்லு!” என்று பிரஷாந்த் கலாய்க்க, பதிலுக்கு சம்முவும் பேச என்று நொடியில் நால்வரின் முகமும் சிரிப்பில் மிதந்தாலும், உள்ளுக்குள், ‘கடவுளே, இதுவே எங்கள் இறுதி சிரிப்பாய் இருந்துவிடக்கூடாது’ என்ற வேண்டுதல் ஓடாமல் இல்லை.
வித்தகன் பொத்தானின் மீது விரல் வைத்தான். அதை அழுத்தும் முன், பயங்கர சப்தத்துடன், பச்சைப்பூத்த, அழுக்கான படிகட்டுகள் அவர்களை விழுங்கிக்கொள்ள விருப்பமாய் காத்திருக்க, மெல்ல மெல்ல விலகியது கதவு.
பிரஷாந்தை பார்த்து, “உள்ள போடா!” என்று வித்தகன் சொல்ல, “ஓய்… நீதானே இவ்ளோ நேரம் வீரனாட்டம் படம் காட்டுன… இப்போ எதுக்கு என்னைப்போக சொல்ற? நீயே போடா” என்றான் பிரஷாந்த்.
“பயமா இருக்குடா! நீ போயேன்!” முதன்முதலாக தன் பயத்தை வெளிக்காட்டினான் வித்தகன்.
“ஏன்டா நீ கடைசி சீன்ல வந்து பயமா இருக்குங்குற! நான் முதல் சீன்ல இருந்தே ட்ரவுசர் கழண்டு தான் சுத்துறேன்! என்னைப்போய் முதல்ல போக சொல்றியே! நியாயமா பேசுடா கொஞ்சமாச்சும்!” வெட்கம் விட்டு பிரஷாந்த் பேச, திறந்து கிடக்கும் வழியை மனம் நடுங்க பார்த்துக்கொண்டு நின்றான் வித்தகன்.
எட்டிப்பார்த்த பிரஷாந்தும் நடுக்கத்தோடு நிற்க, அவன் தோளை சுரண்டிய சம்மு, “பொண்ணுங்க எங்களுக்கு ஆம்பளைங்க உங்களை பார்த்து தான் தைரியமே வரணும்! நீங்களே நடுங்கிக்கிட்டு நின்னா என்னடா அர்த்தம்!?” என்று முனுமுனுக்க, திரும்பி அவளை முறைத்தவன், “ஆம்பளைங்களுக்கு மட்டும் ஆண்டவன் என்ன உணர்ச்சிகளை ஊறுகாய் அளவா வச்சு அனுப்பிருக்கான்? உங்களுக்கு இருக்க அதே பயம், நடுக்கம், அழுகை எல்லாம் எங்களுக்கும் உண்டு! அதை சுதந்திரமா காட்டதான் இங்க உரிமை இல்ல!” என்றான் அவன் சற்றே எரிச்சலும் கோபமுமாய்.
அவன் சொல்வது ஏற்ப்புடையது என்றாலும், ‘தங்கள் பலமே ஆண்கள் தான் இப்போது’ என்பதில் உறுதியாய் இருந்தாள் சம்மு.
நிமிடங்கள் கடக்க, “நான் போறேன்!” என்ற குரல் பவித்ராவிடம் இருந்து.
மூவருமே அவளை திடுக்கிட்டுப்பார்க்க, “நான் போறேன்” என்றாள் பவி மீண்டுமாய்.
“விளையாடாத பவி!” பிரஷாந்த் பதற, “இல்ல பிரஷாந்த், யாராது ஒருத்தர் உள்ள போய் தான் ஆகணும்… யார் போறதுன்னு போட்டிப்போடாம நடக்கப்போறதை ஃபேஸ் பண்ணுவோம்!” என்றாள் உறுதியுடன்.
“பயமா இருக்கு தானே உங்களுக்கு? எனக்கும் பயம் தான்! ஆனா, எனக்கு போகணும்ன்னு தோணுது!” என்று பவி சொல்ல, “நீயே போக ரெடின்னா… எனக்கென்ன? நானே போறேன்!” அவன் சொல்ல,
“நீங்களும் அதானே செய்றீங்க? அவ போறேன்னு சொன்னா விட வேண்டியது தானே!? எப்படியும் நாலு பேரும் அடுத்தடுத்து நுழையத்தானே போறோம்!?” சம்முவும் பேச, பெருமூச்சோடு, “நான் பையன் பொண்ணுன்னு வேறுபாடு பாக்குற ஆள் இல்ல… உள்ளே என்ன நடக்கும்ன்னு தெரியாத பயத்துல தான் உன்னை போக வேண்டாம்ன்னு சொன்னேன்! உனக்கு விருப்பம்ன்னா நீ போலாம்!” என்ற வித்தகன், உள்நோக்கி கை காட்டினான்.
மூவரையும் ஒருமுறை பார்த்த பவித்ரா, முதல் படியில் கால் பதித்தாள்.
அவள் பின்னே போக வித்தகன் எத்தனிக்க, சட்டென அவனை திரும்பி பார்த்த பவி, ஒன்றும் சொல்லாமல் அவன் முகத்தை ஆழ்ந்து நோக்க, என்ன நினைத்தானோ!? அவள் தோள்மீது கரம் வைத்து அழுத்தியவன், “நான் இருக்கேன், உன்கூட!” என்றான்.
அவன் சொன்னதில் அவள் இதழ்களில் அழகான ஒரு புன்னகை உதயமாக, “எதுவரை!?” என்று சிரிப்போடு கேட்டாள்.
அவள் சிரிப்பு அவனையும் தொத்திக்கொள்ள, “உயிரோட இருக்குற வரை!” என்றான் கேலியாய்.
இருவரும் சிரித்துக்கொண்டே அடுத்தடுத்த படிகளில் கால் வைக்க, “துன்பம் வருங்கால் நகுக’ன்னு சொன்னதை ஃபாலோ பண்றானுங்க போல!” என்று சொல்லிக்கொண்டே முதல் படியில் இறங்கிய பிரஷாந்தின் சட்டையை பிடித்து பின்னே இழுத்த சம்மு,
“நீ எதுவரை என் கூட இருப்ப?” என்று வினவ, திரும்பி அவளை முறைத்தவன், “எதுவரை உசுரோட இருப்போம்ன்னே தெரியல… தயவுசெஞ்சு கொஞ்சம் க்ரிஞ்சு பண்ணாம பின்னால வந்து தொல” என்றவனை மண்டையிலேயே தட்டியவள், “ச்சீ ப்பே!” என்ற முகத்திருப்பலோடு இறங்க ஆரம்பித்தாள்.
பவித்ரா முதலில் இறங்க, அவள் படியில் இருந்து காலை கீழே இறக்கிய மறுநொடியில், அவள் இடையோடு கட்டியிருந்த மொபைல் டார்ச் தன் ஒளியை இழந்தது. அதில் அவன் திடுக்கிட்டு நின்றுவிட, அவள் பின்னோடு வந்த வித்தகன், அவள் மீது மோதி நின்று, “என்ன ஆச்சு?” என்றான்.
“தெரியல! ஃபோன் ஆஃப் ஆகிடுச்சு!” என்றவள் குழப்பமாய் தன் மொபைலை உயிர்ப்பிக்க முயற்சிக்க, படியில் இருந்து இறங்கிய வித்தகனின் மொபைல் டார்ச்சும் இப்போது அணைந்துப்போனது. திடுக்கிட்ட இருவரின் பார்வையும் இப்போது அர்த்தமாய் சந்தித்துக்கொண்டது.
“ப்ரெட்டு சுட்டு தின்னப்போ பவர் பேன்க்’ல சார்ஜ் போட்டுவையுங்கன்னு சொன்னேனே! கேட்டீங்களா? இப்போ முக்கியமான நேரத்துல கரென்ட் போய்டுச்சு பார்த்தியா!?” என்று மிதப்பாய் திட்டிக்கொண்டே இறங்கிய பிரஷாந்தின் மொபைல் டார்ச்சும் அவன் கால்கள் அந்த ஆய்வக தரையை தொட்டபோது அணைந்துவிட, தட்டிப்பார்த்து, திருப்பிப்பார்த்து, நோண்டிப்பார்த்து என்ன பார்த்தும், அவனால் தன் மொபைலை உயிர்ப்பிக்க முடியவில்லை. அதுவே சம்முவுக்கும் நடக்க, “எப்படி? புல் சார்ஜ் போட்டேனே!” என்றாள் அவள் அப்பாவியாய். இறுதி முயற்சியாய் நால்வரும் மொபைலை உயிர்பிக்க முயல, அது இறுதிவரை முடியாமல் போக, அதற்கு மேல் அதில் அவர்கள் நேரம் செலவிடவில்லை.
“இப்போ எப்படி போறது இந்த இருட்டுல!?” சம்மு பயமும் கவலையுமாய் கேட்க, “தட்டுத்தடுமாறி தான் போகணும்!” என்றான் வித்தகன்.
குரல் வந்த திக்கை கணக்கிட்டு கைகளை அலையவிட்ட பவித்ரா, வித்தகனை பற்றிக்கொண்டு, “இந்த லேப்ல இருந்து வெளில போக ஒரு வழி இருக்கு. அதை கண்டுப்பிடிச்சு இங்கிருந்து எஸ்கேப் ஆகிறது தான் நம்ம ப்ளான்! கரெக்ட்டா?” என்று இறுதியாய் உறுதிப்படுத்த கேட்க, “கரெக்ட் தான்! ஆனா, எஸ்கேப் ஆக முடியுமாங்குறது தான் டவுட்! நமக்கு 50-50 சான்சஸ் தான் இருக்கு!” என்ற வித்தகனின் பேச்சில் இரு பெண்களுமே அதிர்ந்துப்போயினர்.
“ஏன் ஜி இப்படி குண்டை தூக்கிப்போடுறீங்க?” சம்மு அதிர்ச்சி விலகாது கேட்க, “பின்ன? வாசக்கதவை சாத்துன பேய்க்கு கொல்லைக்கதவை சாத்த தெரியாதா?” என அலுத்துக்கொண்டான் பிரஷாந்த். அருகே நின்றவனை குத்துமதிப்பாய் தேடி ஒரு அடி வைத்தாள் சம்யுக்தா.
அதில் அவன், ‘அம்மே!’ என அலறியதில் அடித்தவளே பயந்துப்போய் அவனை ஒண்ட, இங்கே வித்தகனோடு ஒண்டியிருந்தாள் பவித்ரா.
“ஏண்டா கத்துன?” வித்தகன் எரிச்சலாய் கேட்க, “ஏய் யாரோ என் பொடனில அடிச்ச மாறி இருந்துச்சுடா!” என்றான் பிரஷாந்த் பீதியாய். அவன் அப்படி சொன்னதும் அவனில் இருந்து விலகி, “ச்சை, நான் தான் அடிச்சேன்” என்றாள் சம்மு.
“எதுக்கு டி அடிச்ச?” அவன் எகிற, “ஏன் நான் அடிச்சதுல தேஞ்சுட்டியா?” இவள் வம்பு வளர்க்க, “நீ அடிச்சு தேயுற அளவுக்கு நான் ஒன்னும் சோப்லாங்கி இல்ல தெரிஞ்சுக்கோ!” இவன் பேச, “சோப்லாங்கி’யா? அப்டின்னா? கொரியன் ஹீரோ வா?” இவள் கேட்க, வித்தகனுக்கு பொறுமை பறிப்போனது.
“வாயை மூடுறீங்களா ரெண்டு பேரும்?” வித்தகன் கத்த, “ஏன்டா கத்துற? தூங்கிட்டு இருக்க பேயை கூட எழுப்பி விட்டுடுவ போலயே!” என்று அவனை கடிந்தான் பிரஷாந்த்.
“ம்ம்ம்… அது இவ்ளோ நேரம் நீங்க அடிச்சுக்கும்போது தெரியலல?” என்றவன், “லுக்… இங்க இருக்க ரூட்’ட கண்டுப்பிடிச்சு வெளில போறது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல… இந்த வீட்டோட பேஸ்மென்ட்ல இருக்க இந்த லேப், மொத்த வீட்டோட அளவுக்கே இருக்கு! ரொம்ப பெருசு! இதுல இந்த இருட்டுல நம்ம அந்த எக்சிட்’ட கண்டுப்பிடிச்சு நெருங்குனாலும், இத்தனை வருஷத்துக்கு பிறகு அந்த டோர் திறக்குமான்னு தெரியாது! வெளில போற அந்த வழி இன்னுமே அப்படியே இருக்குமான்னு நமக்கு தெரியாது! எல்லாத்துக்கும் மேல, இங்க இருக்க அமானுஷ்யம் நம்மளை உயிரோட விட்டு வைக்குமான்னு தெரியாது! யாருக்கு வேணா என்ன வேணா நடக்கலாம்! முடிஞ்சவரை போராடி மத்தவங்களை பத்தி யோசிக்காம அவங்கவங்க உயிரை காப்பாத்திக்க பாக்கணும்!” என்றதும், பவித்ராவின் கரங்கள் வித்தகனின் கரத்தை அழுத்திப்பிடித்தது.
அதில் அவன் பேச்சு நொடி நேரம் தடையுற, தொண்டையை செருமியவன், “உள்ளே நுழையலாமா?” என்றான். மொத்த தைரியத்தையும் கூட்டி தனக்குள் தேக்கிக்கொண்டு தடுமாற்றத்தையும் பயத்தையும் ஊதித்தள்ளியவர்கள், “போலாம்!” என்று ஒருமித்த முடிவெடுத்த நொடி, அந்த ஆய்வகத்தின் அத்தனை மூலைகளிலும் சொடுக்கிடும் நேரத்தில் மெழுகுவர்த்தி ஒளிர்ந்து ஒளி பரப்பியது.
தன்னியல்பாய் மனம் திக்கென அதிர, “வெல்கம் டு எ லவ் வீடு!” என்ற குரல் அத்தனை புறத்தில் இருந்தும் எதிரொலித்தது. நால்வரின் உடலும் அக்குரலில் வெளிப்படையாகவே தூக்கி வாரிப்போட்டது. சம்முவுக்கு ஒருப்படி மேலே போய் பயத்தில் மூச்சிரைப்பே வர, அவசரமாய் பஃபை எடுத்து அடித்துக்கொண்டாள்.
அடிக்கடி கேட்டு கேட்டு அலுத்துப்போன குரல் இத்தனை பயத்தை கொடுக்குமா என்ன?! கொடுத்ததே!!! ஏனெனில், இம்முறை
ஒலித்தது, ஒரு பெண்ணின் குரலில்! பெண்க்குரலுக்கே பயந்தவர்களுக்கு அது ‘ராணி மித்ரங்கா ஷரபாயி’ன் குரல் என்பது தெரிந்தால்…!!!