கண்களை மறைத்திருந்த கைகள் மெல்ல விலக, இமைகளை சுருக்கி விரித்து, மெல்ல கண் திறந்தாள் அவள்.
அவள் பார்வையின் முன்னே அவள் கற்பனையில் முன்பொருமுறை சொன்னது காட்சிப்படமாய் விரிந்திருக்க, அதை நம்ப முடியாத அதிர்ச்சியும், அதைக்கண்டதால் உண்டான விம்மிதமும் அவள் இரு கண்களிலும் போட்டிப்போட்டது.
வார்த்தைகள் வெளிவராத பாவனையில் அவள் தன்னகருகே நின்றவனை திரும்பிப்பார்க்க, அவனோ அவள் கொள்ளும் வியப்பில் மகிழ்ந்தவனாய்,
“வெல்கம்… வெல்கம் டு எ லவ் வீடு!” என்றான் அவள் காதோரம் காதலோடு!
இன்னமும் விரிந்த வியப்போடு, “லவ்… வீடு?” அவள் கேள்வியாய் நிறுத்த, “எஸ்… உன்னையும் என்னையும் போல… நீயும், நானும் – சேர்ந்ததை – போல, இப்போது – நம்ம – மொலியும் – சேர்ந்தாச்சு!” என்றான் நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாய், அவனது பிள்ளைத்தமிழில்.
இப்போது தன் முன்னே பளபளக்கும் அந்த வீடு, இன்னமும் மனதுக்கு சொந்தமாகி போனது அந்த குறுநில இளவரசி மித்ரங்காஷரபாயி’க்கு!
அந்நாளில் ஆங்கிலேயர் நிறுவிய பல்கலைகழகமொன்றில் கல்வி கற்க சேர்ந்தவள் தான் மித்ரா… மித்ரங்காஷரபாயி!
கிழக்கில் ஒரு குறுநில அரசனின் ஒரே செல்ல மகள்! அவள் பிறந்ததே ஒரு வரலாறு தான்! அரசிக்கு பேறுகாலம் நெருங்கியபோது ஒரு வினோத ஆசை வந்ததாம்! கப்பலில் வலம் வந்து, இயற்கையை ரசித்துக்கொண்டே பிள்ளையை ஈன்றெடுக்க வேண்டும் என்று அவர் அரசனிடம் ஆவலை கொட்ட, அதை மறுக்கத்தோன்றாத அரசனும், கையோடு வைத்தியரையும் அழைத்துக்கொண்டு கப்பலை கிளப்பிவிட்டார்.
நாட்கணக்கே இன்றி கப்பல் அந்த கடலுக்குள் நீந்த, அரசிக்கோ உவகை ஊற்று! அவர் எந்த அளவுக்கு மகிழ்ந்தார் என்றால், தான் அடைந்த உவகையின் உச்சநிலையில், உயிரே போனாலும் கூட பரவாயில்லை என்று தோன்றுமளவு!!!
அவருக்கு தெரியவில்லை, இந்த கடல்பயணத்தோடு தன் வாழ்க்கை பயணமும் முற்று பெறுமென்று!
பிரசவ வலி நடுக்கடலில் வர, வைத்தியர் முன்னேர்ப்பாட்டுடன் இருந்ததால் அங்கேயே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் முகம் கலவரம் பூசிக்கொண்டது. அரசிக்கு உதிரப்போக்கு அளவுக்கடந்து வருவதோடு குழந்தையின் தலையும் வெளியே தெரியாததால் அவர் பதட்டம் கொள்ள, நேரம் போகப்போக அவரால் உணர முடிந்தது, இரண்டில் ஒரு உயிரே நிலைக்கும் என்று!!!
அந்நேரம் அவ்வழி வந்த கப்பலில் இருந்து சிலர் இவர்களிடம் உரையாடி, உதவி செய்வதாக சொல்லி வர, சில நிமிடங்களில் அவர்களின் இளவரசி ஜனித்திருந்தாள். அவர்களுக்கு கோடி நன்றிகள் உரைத்த அரசனும், அந்த போர்த்துகீசியர்களிடம் மகளுக்கு பெயர் வைக்க சொல்லி கேட்க, அவர்கள் சொன்னது தான், ‘ஷரபாயி!’ என்ற அவளது பின்பெயர்!
மகள் பிறந்த சந்தோஷம் மறைவதற்குள் மனைவி மறைந்ததில் தளர்ந்துப்போனார் அரசர். வேறொரு அரசியை நாடக்கூட அவருக்கு எண்ணமில்லை. மகளே உலகம் என்று அவர் இருக்க, அவளும் பெண்களுக்கு விதிக்கப்படும் எந்த தடையும் இன்றி வளர, அதுவே அவளை பல்கலைகழகம் வரை படிக்க அனுப்பியது.
போன இடத்தில் அவள் சந்தித்தவன் தான், ‘ஹென்றி ஸ்டீஃபெனோ!’ ஆங்கிலேயே ஆளுநரின் மகன். இருவருக்கும் கண்டதும் காதல் வரும் என்று யாரும் ஆரூடம் கூட சொல்லவில்லை. ஹென்றிக்கு அவள் மேல் காதல் வந்தது ஒன்றும் அதிசயம் அல்ல. அவளது, கண்ணை, கருத்தை பறிக்கும் லாவண்யத்தில், அவன் சொக்கி விழாமல் இருந்தால் தான் அதிசயமே! அவளை பெண் கேட்டு படையெடுக்காத இளவரசர்களே சுற்றுவட்டாரத்தில் இல்லை எனலாம்!
மகளின் விருப்பத்தை மட்டுமே கேட்கும் தந்தையாக, அவள் எண்ணம் போல அவளை விட்டவருக்கு, மகள் ஒரு வெள்ளையனை அழைத்து வந்தபோது அதை ஏற்றுக்கொள்ள துளியிலும் துளியாய் கூட மனம் இல்லை.
சிப்பாய் கலகம் நிகழ்ந்து, நாட்டில் ஆங்காங்கே விடுதலை முழக்கங்கள் கேட்க ஆரம்பித்த நேரம் அது! வெள்ளையர்களை எதிர்த்து போராட்டாங்கள் ஆங்காங்கே முளைத்துக்கொண்டிருந்த நேரமது!
வெள்ளையர்களை விரோதிகளாக, நம் நாட்டை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளாக நம்மவர்கள் பார்க்க, அதில் ஒருவனை மகள் அழைத்துவந்தபோது, அதிர்ச்சியின் உச்சவரம்பை அடைந்தார் அவர்.
மகளே தன் சுவாசம் என வாழ்ந்தவருக்கு, மகள்ப்பற்றா? மண்ப்பற்றா? என்று வந்தபோது, ஒரு அரசனாக, நாட்டில் மட்டும் அல்ல, தன் கோட்டைக்குள்ளும் ஒரு வெள்ளையன் ஊடுருவுவதை பலமாய் எதிர்த்தார். தன் காதலில் உறுதியாய் இருந்த மித்ரங்காவும் கோட்டையை விட்டு ஹென்றியுடன் வெளியேறினாள்.
ஹென்றியின் பெற்றவர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அடிமைகளாக, சேவகர்களாக இருக்க வேண்டியவர்களை அவர்களுக்கு சமமாக வைத்துப்பார்க்க அவர்கள் விரும்பவில்லை.
தடைகளை மீறி, தன்னிச்சையாக திருமணம் செய்துக்கொண்ட இருவரும், பெற்றவர்களை விட்டு பல மைல்கள் கடந்து வந்து தனியே வசிக்க, இப்போது தன் ஆசை மனைவிக்காக அவள் விருப்பபட்டபடியே ஒரு சின்ன அரண்மனையை கட்டியிருந்தான் ஹென்றி!
இன்னமும் வீட்டின் வெளிதோற்றத்தை ஆசையாக பார்த்துக்கொண்டு நின்ற தன் காதல் அரசியை தோளோடு அணைத்துக்கொண்ட ஹென்றி, “கம், லெட்ஸ் கோ!” என்றான் முன்னோக்கி கை விரித்து.
அவளும் சிரித்தமுகமாய் உள்ளே ஒரு அடி எடுத்து வைக்க, உள்ளிருந்து குனிந்த தலை நிமிராது கைகளில் ஏந்திய தட்டுடன், அள்ளி முடிந்த புடவை கட்டுடன், அவர்கள் முன்னே வந்து நின்றாள் ஒருத்தி.
மித்ரங்கா கேள்வியுடன் பார்க்க, “வோர்கர்ஸ்!” என்றான் ஹென்றி! வந்தவள் இருவருக்கும் ஆரத்தி எடுத்துவிட்டு வழிவிட, நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்க்குள் காலெடுத்து வைத்தாள் அவள்.
அவள் வீட்டிற்குள் நுழைந்த நொடி, வாயிலின் மேல்புறத்தில் இருந்த கடிகாரம் தன் இருப்பை உணர்த்தி சத்தமிட, கூடவே, ஹென்றியின், ‘வெல்கம்… வெல்கம் டு எ லவ் வீடு!’ என்ற பதிவு செய்யப்பட்ட குரல் வீட்டின் அத்தனை மூலைகளில் இருந்தும் வர, இமைக்க மறந்து, செப்பு இதழ்கள் மெலிதாய் பிளக்க, திகைத்து நின்றாள் மித்ரங்கா.
பின்னே, பெரிதான அறிவியல் முன்னேற்றங்களோ, மருத்துவ ஞானமோ இல்லாத அந்த காலகட்டத்தில், கடிகார முள் சத்தம் வந்ததும், ஹென்றியின் குரல் வீடெங்கும் ஒலித்தால், அவள் திகைக்கத்தானே செய்வாள்!?
அந்த திகைப்பு கூட ‘இது எப்படி சாத்தியம்?’ என்று நினைத்து அல்ல… தன் கணவனின் கண்டுப்பிடிப்பு தான் எத்தனை நுட்பமானது!? என்ற பெருமையில் விழைந்தது.
ஹென்றிக்கு மொத்தம் இரண்டு காதல்கள்! இரண்டுமே அளவிட முடியாத அளவு!
ஒன்று மித்ரங்கா மீது என்றால், மற்றொன்று அறிவியலின் மீது!!!
ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தில் பாதியை அவன் அவனது ஆய்வுக்கூடத்தில் தான் செலவிடுவான். அதற்கென்றே இந்த வீட்டின் கீழ் மட்டத்தில் யார் கண்ணிலும் புலப்படாத வகையில் ஒரு பறந்து விரிந்த ஆய்வுக்கூடத்தை கூட அமைத்திருந்தான்.
என்னதான் அவன் புதிது புதிதாய் கண்டுப்பிடித்தாலும், அதற்க்கான அங்கீகாரமும் ஏற்பும் அவனுக்கு அவன் தந்தையாலேயே கிடைக்கவில்லை. அவன் மீதிருந்த கோபத்தில் ஆளுநராய் தன் அதிகாரத்தை செலுத்தி அவனை இயங்கவிடாமல் முடக்கிக்கொண்டிருந்தார்.
விரைவிலேயே இங்கிருந்து அவனது நாட்டிற்கு மித்ரங்காவுடன் பறந்துவிட வேண்டும் என்பதே அவன் அவா. ஆனால், அதை அவளிடம் உரைக்கும் நேரம் தான் இன்னும் கிட்டவில்லை அவனுக்கு.
அந்த வீட்டிற்குள் குடி வந்த நாள் முதல் மித்ரங்காவின் வாழ்வில் வசந்தம் தான் வீசியது. அவள் கால்கள் தரையில் இருந்தாலும் மனம் வானத்தில் பறந்துக்கொண்டு இருந்தது. ஹென்றி அவன் காதலை நாள் தவறாது அவள்மீது பொழிந்துக்கொண்டிருந்தான். அவளுக்கு அப்போதெல்லாம் அந்த வாழ்க்கையே வரம் போல இருந்தது.
அவள் அழகை அவன் ஆராதிக்காத நாட்களே இல்லை எனலாம். தான் அழகி என்று அவளுக்கு தெரிந்தாலும், அவன் கண்களுக்கு அவள் பேரழகியாக தெரிகிறோம் என்பது அவளுக்கு கர்வத்தை கொடுத்தது. பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்துக்கொள்வாள். அவன் தன்னிடம் மயங்கும் தருணங்களில் எல்லாம் ஏதோ உலகையே வென்றதை போன்றதொரு மமதை அவளுள் எழுந்தது.
அந்த அரண்மனையின் அத்தனை வேலைகளுக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவள் தனிமையை உணரக்கூடாது என்றே அவளுக்காக அவள் மொழி பேசும் ஆட்களை வீட்டோடு வைத்திருந்தான் ஹென்றி. அவள் உறங்கும் நேரங்கள் எல்லாம் அவனுக்கு ஆய்வகத்தில் கழியும்! அவள் விழித்திருக்கும் தருணங்கள், அவன் கையணைப்புக்குள் நேரம் விரையும்! அவன் எந்த இடைவெளியில் உறங்குவான் என்பது அவனுக்கே தெரியாத ஒன்று!
மொத்தத்தில் தன் இரண்டு காதலையும் தாங்கினான்!!!
அன்று காலை தன்னறையில் அமர்ந்து தன் விழிகளுக்கு அஞ்சனம் தீட்டிக்கொண்டிருந்த மித்ரங்காவின் பின்னோடு வந்து அவளை பிரம்மிப்பாய் பார்த்தான் ஹென்றி!
அவன் பார்வை எப்போதும் போல இன்றும் அவளுக்கு கர்வத்தை ஏற்ற, மிடுக்காக தலையை திருப்பி, ‘என்ன?’ என்றாள், விழியசைவில். சொக்கிவிட்டான் அவன்!
எத்தனை அழகிகளை கண்டிருப்பான்!? அவன் கண்ட எவருமே இவள் அளவிற்கு அவனை கட்டி இழுத்ததே இல்லையே!!!
பார்த்தது பார்த்தபடி அவன் நிற்க, அவன் முன் வந்து நின்றவள், “எப்படி இருக்கிறேன்!?” என்று தன்னை சுட்டிக்காட்டி கேட்க, மறுநொடி, அவள் இதழ்களில் ஆழ புதைந்துக்கொண்டான் ஹென்றி. அவள் சிகை கலைக்காமல், ஆடை நெகிழ்த்தாமல், ஆழமாய் அழுத்தமாய் முத்தம் பதித்து மனமில்லாமல் நிமிர்ந்தவன், அவள் கண்களை தாபத்தோடு முற்றுகையிட்டு,
“வீனஸ், டயானா, ஏரிஸ் எல்லாம் உன் அழகின் முன்னே மண்டியிட வேண்டும்!” போதைக்குரலில் அவன் சொல்ல,
“யார் அவர்கள் எல்லாம்!?” சின்னதாய் புருவம் சுருங்க, துளிர் கோவத்தில் மூக்கு விடைக்க, அவள் கேட்ட விதத்தில், தாபம் தணிந்து பல் வரிசை தெரிய சிரித்தவன், அவளை இடையோடு அணைத்துக்கொண்டு, “உங்கள் ஊர் ரம்பை, ஊர்வசி போல, எங்களுக்கு வீனஸ், டயானா…!” என்றான் நெற்றி முட்டி.
விளங்கிக்கொண்டதும் சிணுங்கலாய் சிரித்தவள், “தேவதைகள் அளவிற்கு நான் அழகா?” என்றாள்.
“தெரிய வேண்டுமா?!” அவன் கேட்க, இவள் ‘ம்ம்’ என்றாள் ஆர்வமாய்.
அவளை முன்னோக்கி திருப்பி தன் கரம் கொண்டு அவள் கண்கள் மூடினான் ஹென்றி!
“உனக்கொரு பரிசு!” அவள் காதோரம் அவன் சொல்ல, “இன்னுமா?” என்று தான் அவளுக்கு கேட்கத்தோன்றியது. அவளை மெல்ல படியிறக்கி அவன் அழைத்து வர, வேலையாட்கள் எல்லாம் கண்டும் காணாமல் ஒதுங்கி நின்றனர்.
ஓரிடம் அழைத்து வந்தவன், மெல்ல கைகளை பிரிக்க, மூடியிருந்த கண்களை சுருக்கி மெல்ல திறந்தவள், விழி விரித்தாள்.
அவள் முன்னே அவளை விட உயரமாய் சுற்றிலும் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட ஒரு கண்ணாடி இருக்க, அதில் தெரியும் தன் முழு உருவத்தை இமைக்க மறந்து பார்த்தாள் அவள்.
அவளுக்கே அந்த கணம் தான் ‘தான் எத்தனை அழகு!’ என்று எண்ணத்தோன்றியது. அவள் பின்னே நின்றிருந்தவன், “இந்த ஆடிப்பாவைக்கே (கண்ணாடி) இப்போது தான் அழகு கூடியுள்ளது!” என்றான் அவளிடம் கிசுகிசுப்பாய்.
வெட்கத்தில் கன்னம் சிவக்க அவள் குனிய, அவள் சிரம் மீது எதையோ வைத்தான் ஹென்றி. நிமிர்ந்து பார்த்தவள் இன்னமும் திகைத்தாள். கண்ணைப்பறிக்கும் வைரக்கற்களால் ஆன சிறு மகுடம்!!!
கண்ணாடியோடு அதை தொட்டுப்பார்த்தாள். அவள் கம்பீரம் பல மடங்கு உயர்ந்ததை போல இருந்தது.
ஆனாலும், “எதற்கு இதெல்லாம்!?” என்றவள் கேட்க, “உன் தந்தையிடம் இளவரசியாக இருந்த உன்னை, இந்த ஏழை ஆய்வகன் தன் இதய ராணியாக மாற்றியதன் சிறு அடையாளம்!” என்று அவன் கண்சிமிட்ட,
“அடே யப்பா… மிகவும் ஏழை தான் போல!?” அவள் பகடியாய் சொல்ல, அவனும் சத்தமாய் சிரித்தான். அவன் சிரிப்பில் அவளும் இணைந்தபோது அவர்கள் முன்னே ஒரு வெள்ளைக்காரன் வந்து இடைவரை தாழ்ந்து வணக்கம் வைத்தான்.
“யாரிவர்!?”
“இவர் ஆண்டனி! இனி நம்மோடு தான் வசிப்பார்!” அவன் சொல்ல, இதுவரை எந்த ஒரு வெள்ளையரையும் அவன் பணியமர்த்தியதில்லை என்பதால் அவள் கேள்வியோடு பார்க்க, அதை புரிந்தவன்,
“இவருக்கு நான்கு மொழிகளில் நல்ல புலமை உண்டு! அதில் தமிழும் அடக்கம்! நம் வாழ்க்கையை அருகே இருந்து புத்தகமாய் எழுதவே இவரை வர செய்தேன்!” என்று அவன் சொல்ல, ‘இது எதற்கு?’ என்று தான் தோன்றியது அவளுக்கு.
அவளை உணர்ந்தார் போல, “இது என் ஆசை! மறுப்பாயா?” என்றான் தயவாய்.
சட்டென சிரித்தவள், ‘மாட்டேன்!’ என சிரம் அசைக்க, அவளை தோளோடு அணைத்துக்கொண்டான் ஹென்றி!
!!
வந்த புதியவனின் ரூபத்தில் இவர்களின் காதல் முற்றுபெறும் என்று அப்போது கட்டியம் சொல்ல ஒருவருமில்லை.