அந்த குரல் கேட்டதுமே நால்வரும் ஸ்தம்பித்து அப்படியே நிற்க, “லேடி…வாய்ஸ்!” என்று முணுமுணுத்தாள் பவித்ரா.
வித்தகன் பவித்ராவின் கரத்தை கெட்டியாக பற்றிக்கொள்ள, “சம்மு, என்கூட வா!” என்று அவளை பிடித்துக்கொண்டான் பிரஷாந்த்.
“நமக்கு இப்போ டைம் இல்ல… எந்த பக்கமா போறது?” பிரஷாந்த் அவசரகதியில் வித்தகனிடம் யோசனை கேட்க, “ஒண்ணும் புரியலடா!” என்றான் அவன்.
அவர்களுக்கு இருபக்கமும் பாதை இருந்தது. ஏதேதோ மரத்தினாலான பொருட்கள்! குடுவைகள்! பெட்டிகள்! ஆனால், அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததை போல சடலங்கள் இருந்ததற்கான அறிகுறியே அங்கே இல்லை. துர்நாற்றமும் இல்லை. இத்தனை வருடங்களில் எல்லாம் மறைந்திருக்குமோ!? பெரும்பாடான தூசி குப்பைகள் இன்றி நன்றாகவே இருந்தது.
எல்லாம் அவர்கள் கண்ணிலும் கருத்திலும் பதிய, ஒரு முடிவுடன், “எந்த பக்கம் எக்சிட் இருக்குன்னு நமக்கு தெரியாது பிரஷாந்த், ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு போவோம்! என்ன சொல்ற நீ!?” என்றான் வித்தகன்.
மறுயோசனையின்றி அதை பிரஷாந்த் ஆமோதிக்க, பெண்களின் கரங்களை கெட்டியாய் பற்றியபடி ஆளுக்கு ஒரு திக்கில் பிரிந்து முன்னேறினர்.
முடிவு செய்து நகர்ந்துவிட்டாலும், தொண்டைக்குழி பயத்தில் துடிக்கத்தான் செய்தது.
“பிரஷாந்த், என்னை விட்டுடாதடா!” சம்மு மொத்தமாய் அவனோடு ஒண்டியவளாய் நடக்க, அவள் முகத்தை திரும்பிப்பார்த்தவன், தன் இடக்கரத்தை அவள் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, “என்னை விட்டாலும் உன்னை விட மாட்டேன்!” என்றான் ஆழ்ந்த குரலில்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “லூசு மாறி உளறாத!” என்று கடிய, அந்த நொடியில் கூட சிரிப்பு எட்டிப்பார்த்தது அவனுக்கு.
அடிமேல் அடி வைத்து நகர்ந்துக்கொண்டிருந்த வித்தகன், சட்டென தன்னை ஒட்டிக்கொண்டு வருபவளை திரும்பிப்பார்த்தான். அவள் அரைக்கண்ணில் எதையோ முணுமுணுத்துக்கொண்டு வர, அவள் பக்கமாய் குனிந்தவன், “என்ன சொல்ற?” என்றான் பதட்டமாய்.
“ஹான்!?” என நிமிர்ந்தவள், “கந்த சஷ்டி கவசம்!” என்றாள் பேதலித்த முகமாய்.
“நான் கூட நீ தனியா பேசவும் பயந்துட்டேன்!” என்றவன் சுற்றிலும் ஒருமுறை பார்த்துக்கொண்டே முன்னேற, “இப்படி போயிட்டே இருந்தா வழி எங்கன்னு எப்படி கண்டுப்பிடிக்குறது?” என்றாள் பவித்ரா.
“சரி தான், ஆனா வெளில போற வழி எப்படியும் இந்த லேப் முடியுற இடத்துல தான் இருக்க வாய்ப்பிருக்கு… ஏன்னா, இந்த இடத்துக்கு மேல வீடு தானே இருக்கு…சோ இன்னும் நம்ம கடைசிக்கு போகணும்ன்னு தோணுது!” என்று வித்தகன் சொன்னது ஒத்துக்கொள்ளும்படியாக தான் இருந்தது பவித்ராவுக்கு.
“கடவுளே… கதவு திறந்துடனும்!” பவி வேண்டிக்கொள்ள, வித்தகனின் சத்தமில்லா வேண்டுதலும் அதுவாக தான் இருந்தது.
நடந்துக்கொண்டிருந்த பவித்ரா ஒரு நொடி சடாரென நின்றுவிட, கோர்த்திருந்த கரம் இழுப்பட்டதில் வித்தகனும் நின்று, என்னவானது என்று திரும்பி அவளை பார்க்க, அவள் கண்களோ வேறொரு இடத்தில் குவிந்து நின்றது.
அதுப்போன திக்கில் அவனும் திரும்ப, அவன் கண்ணில் பட்டதை பார்த்து அவன் நயனங்கள் இயல்பை விட மும்மடங்காய் விரிந்துப்போனது.
கூரிய முனைகள் கொண்ட பளபளக்கும் அம்புக்குவியல்! பார்த்த மாத்திரத்தில் திக்கென நெஞ்சுக்கூடு அடைத்துக்கொள்ளும் போல இருந்தது. அந்த பளபளக்கும் அம்புகளின் மேலே மித்ரங்கா கவிழ்ந்து கிடந்து உயிர் துறந்ததும், அவள் மீதே தன் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் துறந்த ஹென்றியும் காட்சிப்பிழையாய் தோன்றி மறைய, அனிச்சையாய் ஒரு நடுக்கம் இருவர் உடலிலும்.
“பயமா இருக்குஜி!” என்ற பவித்ரா அவன் முழங்கையை இறுக்கமாய் பற்றிக்கொள்ள, “போய்டலாம்!” என்ற வித்தகன் வேகமாய் அங்கிருந்து நகர, அந்நொடி… காற்றை கிழித்துக்கொண்டு மின்னலிலும் விரைவாய் பவித்ராவின் தொங்காட்டானை உரசிக்கொண்டு பாய்ந்தது ஒரு அம்பு!
மூச்சடைத்துக்கொண்டது இருவருக்கும். திரும்பிப்பார்க்கக்கூட திராணி இல்லை. அவர்களை தாண்டி சென்ற அம்பு எங்கே போனது என்றுக்கூட தெரியவில்லை. கண்ணில் காண்பதெல்லாம் உண்மையில் நடக்கிறதா அல்லது கானலா என்ற ஐயம் வேறு!
தலையை கொஞ்சமும் திருப்பாது, “பிரஷாந்த்…!” என்று கத்தினான் வித்தகன். பதில் குரல் வரவில்லை. மெல்ல மெல்ல தலை திருப்பினான். அவர்களுக்கு சற்று தூரத்தில் பிரஷாந்தும் சம்யுக்தாவும் நடந்து செல்வது தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்த்துக்கொண்டே, “பிரஷாந்த்…த்த்த்” என்றான் இன்னமும் சத்தமாய். அவன் குரல் அந்த அடைப்பட்ட ஆய்வகத்துக்குள் அகாலமாய் எதிரொலித்தது. ஆனாலும் அதைக்கேட்டு பிரஷாந்த் திரும்பாது நடக்க, “சம்யுக்தா…ஆஆஆ…!” என்று அலறினான் இப்போது.
அதற்குமே அவர்களிடம் எதிரொலி இல்லாமல் போய்விட, “இவ்ளோ கத்துறீங்க? ஏன் கேட்கல அவங்களுக்கு!” என்றாள் பவித்ரா பீதியுடன்.
அவன் கலக்கம் பொறுக்காதவள், “இப்போ என்ன? கேட்கல… அவ்ளோதானே! நம்ம போவோம் அங்க!” என்றவள் அங்கிருந்து அவர்களை நோக்கி ஒரெட்டு எடுத்து வைக்க, கண்ணிமைக்கும் கணத்தில் வித்தகனின் கரத்தில் இருந்து பிய்த்தெடுக்கப்பட்டவள், அதிவேகத்தில் தூக்கி அடித்து அந்தரத்தில் தொங்கவிடப்பட்டாள்.
கை கால்கள் காற்றில் உதற, யாரோ தன் சங்கு கழுத்தை நெரிப்பதை போல மூச்சுக்கு தவித்து கண்கள் சொருகும் அளவு திணறிக்கொண்டிருந்தாள் பவித்ரா. அதைக்கண்ட வித்தகனுக்கு தன் உயிரே தவித்துக்கொண்டிருப்பதை போன்றதொரு வாதனை. அலறித்துடித்து அவளை பற்றி இழுக்க முயன்றான். அவனால் ஒரு சிறு கீற்றாய் கூட அவளை இழுக்க முடியவில்லை.
“பவி… ஐயோ… வந்துடு பவி!” அவன் அலறிக்கொண்டே தன் தலைக்கு மேல் தொங்குபவளின் காலை பற்றி இழுக்க, பவித்ரா தன் கழுத்தை பற்றிக்கொண்டு நாக்கு வெளியே தொங்க திணறினாள்.
“டேய்… பிரஷாந்த்!!!” கத்தியவன், “உன்னால முடியும் பவி… நீ போர்ஸ் போடு, இறங்கப்பாரு!” என்று சொல்லிக்கொண்டே இழுத்தவன், “ஏய் பிரஷாந்த் டேய்” என்று கத்தினான் மீண்டுமாய்.
பவித்ராவால் தன் கழுத்தை நெருத்துக்கொண்டிருக்கும் அந்த கண்ணிற்கு புலப்படாத சக்தியை மீறி இயங்கவே முடியவில்லை. கால்கள் தரையில் இருந்தால் எப்படியோ… இங்கே கால்களும் அந்தரத்தில் தொங்க, அவளால் ஒன்றும் முடியவில்லை. வித்தகன் பேச்சு கூட ஏதோ பாதாளத்தில் ஒலிப்பதாக தான் இருந்தது.
“டேய் பிரஷாந்த்.. திரும்பிப்பாருடா!” கத்திய வித்தகனுக்கு தொண்டையடைத்து கண்கள் கலங்கியது.
“ஏய் என்னை எதாவது பண்ணு, அவளை விட்டுடு!” என்றுக்கூட கத்தியவன், அப்படியே மடங்கி அமர்ந்து தன்னை மீறி கதறிவிட்டான்.
சம்முவை கவனமாய் பற்றிக்கொண்டு நடந்த பிரஷாந்துக்கு உள்ளுணர்வு ஏதோ உந்த, மெல்ல பின்னால் திரும்பியவன் கண்ட காட்சியில் உறைந்தே போனான். அதைத்தொடர்ந்து பார்த்த சம்யுக்தா நடுநடுங்கிப்போக, அந்நேரம், “டேய் பிரஷாந்த், வாடா!” என்ற வித்தகனின் குரலில் நொடியும் தாமதிக்காது அங்கே ஓடினான்.
அந்தரத்தில் அநாதரவாய் தொங்கிக்கொண்டிருக்கும் பவியை பார்த்தவனுக்கு என்ன செய்வதென விளங்காதுப்போக, தலையில் கைவைத்து ஸ்தம்பித்து நின்றுப்போனான். தலையை பிடித்துக்கொண்டு கதறிக்கொண்டிருந்த வித்தகனிடம் விரைந்தவன், “எழுந்திரிடா! வாடா!” என்று கைப்பிடித்து தூக்க, அவனை கண்டதுமே யானை பலம் வந்ததை போல இருந்தது வித்தகனுக்கு.
இருவருமாய் சேர்ந்து பவித்ராவின் பாதத்தை பற்றி முடிந்தமட்டும் பலம்க்கொண்டு இழுக்க, முதலில் சிறிது கூட அசையாது இருந்த அவள் நிலை, அவர்களின் தொடர் இழுப்பில் ஆட்டம் கண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் கீழிறங்க, அதில் இன்னமும் வலு பெற்றவர்கள், பிரம்மபிரயத்தனப்பட்டு அவளை முழுமூச்சாய் இழுத்தபோது, பவித்ராவை பற்றியிருந்த மாய உரு தகர்ந்து அவர்கள் கை சேர்ந்தாள் அவள்.
இழுத்த வேகத்தில் மூவருமே தடுமாறி கீழே விழ, விழுந்த நிமிடமில்லாமல் எழுந்த வித்தகன், பதறியடித்து சென்று பவித்ராவின் சிரத்தை தூக்கி, “பவி.. பவிமா!” என்றான்.
கண்ணைக்கூட திறக்க முடியவில்லை அவளால். நாவை தாண்டி தொண்டை வரை வரண்டுக்கிடந்தது. இருமக்கூட தெம்பில்லை அவளுக்கு.
கன்னத்தில் வித்தகன் தட்டிய ஸ்மரணையில் மெல்ல இமைகளை பிரித்தவள், அவனைப்பார்க்க, “ஒன்னும் இல்லல? நல்லா தானே இருக்க?” என்றான் தவிப்புடன்.
‘ம்ம்ம்’ என்பதாய் மெல்ல இமைகளை மூடித்திறந்தாள். கையில் ஏந்திய அவள் தலையை அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் வித்தகன். அவள் தனக்குள் நலமாய் இருப்பதை உணரவே அவனுக்கு நிமிடங்கள் தேவைப்பட்டது. ஒன்றும் சொல்லாமல் அவன் முதுகை ஆதரவாய் வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான் பிரஷாந்த்.
அவன் அணைப்பில் தன்னை சிறிது தேற்றிக்கொண்டவள், “நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள் திக்கித்திக்கி. இன்னுமாய் இறுக்கியவன், “நான் நல்லா இல்ல…!” என்றான் இன்னமும் குறையாத நடுக்கத்துடன்.
பிரஷாந்துக்கு ஏதோ புரிவது போல இருக்க, சிரித்துக்கொண்டான் சத்தமே இன்றி!
அணைப்பில் இருந்தவாக்கில் நிமிர்ந்து வித்தகனின் முகத்தை நோக்கினாள் பவித்ரா. அவன் முகத்தில் கூட நடுக்கம் அப்பட்டமாய் தெரிந்தது. கண்ணை மூடிக்கொண்டு தன்னை அணைத்திருந்தவனை சில நொடிகள் பார்த்தவள், ஒன்றுமே சொல்லாமல் மொத்தமாய் இடையோடு கட்டிக்கொண்டாள். தயக்கமே இன்றி அவள் அணைப்பிற்கு பதில் ஆற்றினான் வித்தகன்.
அதற்குமேல் அங்கே அவர்களை பார்த்துக்கொண்டு நிற்க, பிரஷாந்துக்கு இங்கீதம் தடுக்க, மெல்ல சிரிப்புடன் எழுந்து அங்கிருந்து விலகியவன், மெல்ல திரும்ப, அவன் இதழில் உறைந்திருந்த புன்னகை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மங்கி தேய்ந்தது. அவன் கண்கள் பரபரப்பாக, நெஞ்சுக்கூடு படபடவென அடிக்க, அவன் சிரமும் உடலும் வேகமாய் எல்லாப்பக்கமும் திரும்பியது. அதில் அவன் இதய துடிப்பு இன்னுமே அதிகரிக்க, முயன்று நிதானித்தவன், “சம்மு…!” என்றான் மெல்ல.
பதில் இல்லை…!
“சம்மு…?” மீண்டும் அவன் அழைக்க, பவித்ராவிடம் இருந்து விலகிய வித்தகன், “என்னாச்சுடா?” என்றான்.
கீழுதட்டை மேற்ப்பற்க்களால் கடித்துக்கொண்டு தன் பயத்தையும் பதட்டத்தையும் அடக்கியபடி திரும்பியவன்
“காணோம்… சம்முவக்… காணோம்!” என்றான் முயன்று தருவித்த நிதானத்துடன்!!!