மித்ரங்கா தனது பகல் நேர துயில் கலைந்து மெல்ல இறங்கி கீழே வந்தாள். கணவனை அருகே காணவில்லை என்றதும் தன்னால் ஒரு சுணக்கம் வந்துப்போனது. கூடத்தின் ஒரு ஓரத்தில் மேசை நாற்காலி அமைப்போடு சில நாட்களாய் அங்கே புதிதாய் வசிப்பவனிடம் அவள் கண்கள் தன்னையறியாது போனது.
அவனும் அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க, அவள் பதிலுக்கு கீற்றாய் கூட புன்னகிக்காமல், தலையை நிமிர்வாய் சிலுப்பிக்கொண்டு அங்கிருந்த சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
அந்த புதியவன் ‘ஆண்டனி’ வந்ததில் இருந்து, என்னவோ அவளுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. தான் அந்த அரண்மனைக்கே ராணியானாலும், தன்னை ஒருவன் சதா சர்வ காலமும் கண்காணிப்பது பெரும் அசௌகர்யத்தை தான் உண்டாக்கியது. அவன் என்னவோ தன்னை பற்றி நூல் எழுத தான் கவனிக்கிறான் என்று புத்திக்கு புரிந்தாலும், அது அவளுக்கு தொந்தரவாக இருந்தது. ஹென்றியிடம் சொல்லி அவனை வெளியேற்ற ஒரு நொடி போதுமா அவளுக்கு?
ஆனால், ‘இது என் விருப்பம்… மறுப்பாயா?’ என்றவன் ஆசையாய் கேட்டது தான் அவளை பொறுத்துப்போக வைத்தது. தனக்காக பார்த்துப்பார்த்து எல்லாம் செய்பவனின் இந்த சிறு விருப்பத்திற்கு கூட தான் ஒத்துழைக்கவில்லை என்றால் எப்படி!? என தன்னைத்தானே கேட்டு அமைதிப்படுத்திக்கொள்வாள்.
இப்போதும் அவள் அவனை அலட்சியப்படுத்திவிட்டு நகர, அடுக்களையில் இருந்து கையில் ஒரு ட்ரேவுடன் குனிந்த தலை நிமிராது வந்தாள் ஒருத்தி. அவளை கையமர்த்தி தடுத்தவள், “எங்கே போகிறாய்?” என்று வினவ, அவள் ஹென்றி குடிக்க பானம் கொண்டு வர சொன்னதாக சொல்ல, அவளிடம் இருந்து அதை பெற்றுக்கொண்ட மித்ரங்கா, பக்கவாட்டில் நிமிர்ந்து நின்றிருந்த அந்த கண்ணாடியில் தன் உருவை ஒருமுறை கூர்ந்து அவதானித்தாள்.
சிறு பிழையும் இல்லாமல் இருக்க, திருப்தியான புன்னகையுடன் அவள் வெளியேற செல்கையில், “சார் ஹென்றி இஸ் இன் லேபோரட்டரி” என்று குரல் கொடுத்தான் ஆண்டனி.
அவன் குரலில் நின்றவள், மெதுவாக திரும்ப, அவன் சிநேக சிரிப்பை உதிர்த்தான். அதை ஏற்க்காதவளோ, “உமக்கு நான்கு மொழிகளில் புலமை என்று கேள்வியுற்றேனே?” என்றாள் புருவம் உயர்த்தி.
“எஸ், தை ஹைனெஸ்!” என்றான் அவன் சிரம் தாழ்த்தி.
“ஆனால், உம் புலமையில் இப்போதென் மனம் ஐயம் கொண்டுவிட்டதே!” அவள் சொன்னதும், அவன் முகத்தில் சிறு பதட்டத்துடன், “what didst I doth wrong thy highness?” (நான் என்ன தவறிழைத்தேன் என் பெருந்தகையே!) என்று வினவ,
“நான் உங்கள் ஊர் ராணி அல்ல… எங்கள் மண்ணின் ராணி! தமிழ் மண்ணின் ராணி! இது என் கோட்டை! இங்கே அண்டிப்பிழைக்க வந்த நீ, எம் மொழியை தான் பேச வேண்டும்! புரிந்ததா?” என்று கண்கள் சிவக்க, அதிகாரத்துடன் கேட்க, அவனையறியாமல், “புரிந்தது!” என்று உரைத்தன அவன் உதடுகள்.
அதே அதிகார தோரணையில் திரும்பியவள் இரண்டடி நடந்து, தன் நடையை நிறுத்தி, தலையை மட்டும் பக்கவாட்டாக திருப்பி, “do not show thy language proficiency to me! I won’t lend my ears thee”
(உன் மொழி புலமையை என்னிடம் காட்டதே! நான் அதற்கு செவிசாய்க்க மாட்டேன்) என்று சொல்லிவிட்டு போக, ஆண்டனி அனைத்தையும் தன் தட்டச்சு இயந்திரத்தில் கொட்ட ஆரம்பித்தான்.
மாடிப்படிகளுக்கு பின்னே தாழ்வான மறைவுப்பகுதியில் ஓரமாய் இருந்த பூச்சாடியை அவள் மெதுவாய் நகர்த்த, தரையில் ஒரு பிளவு உண்டாகி உட்புறம் படிகள் கண்ணுக்கு தெரிந்தது. தன் நீண்ட கனமான பாவாடையை ஒரு கையால் உயர்த்திப்பிடித்தவள், மெல்ல உள்ளே இறங்கினாள்.
கீழே கருகும்மென இருந்தது. இருட்டு கண்ணிற்கு பழகவே பல நொடிகள் பிடிக்க, மெல்லமாய், “ஹென்றி…!” என்றழைத்தாள்.
அவள் குரலே அங்கே எதிரொலித்தது. லேசான பயம் நெஞ்சை கவ்வ, “ஹென்றி” என்றாள் மீண்டுமாய். இருட்டுக்கு கண்கள் பழகிப்போனது. மெல்ல முன்னேறி நான்கெட்டுகள் வைத்தவன், மீண்டுமாய் அழைத்துப்பார்த்தாள் பதிலே இல்லை எனவும், ஹென்றி இங்கே இருப்பதாய் சொல்லி அனுப்பிய ஆண்டனி மீது கோவம் வந்தது. அதே கோவத்துடன், வந்த வழி செல்ல எண்ணி, திரும்பியவள் சட்டென எதிலோ மோத, எதிர்ப்பாராத உரசலில் உடல் விதிர்த்து தூக்கிவாரிப்போட, கையில் இருந்த தட்டு தெறித்து தரையில் விழுந்து சிதறியது. அச்சத்தம் வேறு அகாலமாய் அங்கே ஒலிக்க, அதைவிட அலறலாய் கேட்டது மித்ரங்காவின் சத்தம்!!!
“ஹே ரிலாக்ஸ்! நான் தானே!” என்றபடி அவளை தன்னோடு ஹென்றி சேர்த்தணைக்க, அவளது பதட்டம் குறையவே பல நிமிடங்கள் எடுத்தது. அவள் துடிப்பு சற்று அடங்கியதும், அவளை தோளோடு அணைத்தபடியே எங்கோ அழைத்து சென்றவன், ஏதோ செய்ய… அந்த இருட்டு குகைக்குள் வெளிச்சம் உண்டானது.
ஆளுயர மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டான் ஹென்றி. அவனிடம் இருந்து லேசாக விலகியவள், “எங்கே சென்றீர்கள்? பயந்தே போனேன்!” என்றாள் மிச்சம் இருந்த படபடப்புடன்!
“கழிவுகளை கொட்ட வெளியே சென்றிருந்தேன்!” என்றவன் சொல்ல, “வெளியிலா? நான் அங்கிருந்து தானே வந்தேன்!?” அவள் புரியாமல் கேட்க, “நான் சுரங்கம் வழி வெளி சென்றேன்!” என்றவன், அந்த ஆய்வகத்து வழியே நீண்டு, சற்று தூரத்தில் தெரிந்த ஓரிடத்தை கைகாட்டினான். மித்ரங்கா உள்ளே வருவதற்கு இருந்த அதே அமைப்பே அங்கேயும் இருந்தது. நீண்ட நிமிர்ந்த படிகள், அதன் மேலே ஒரு கதவு!
“இவ்வழி சென்றால்?” அவள் கேள்வியாய் நிறுத்த, “காட்டின் மையப்பகுதியை அடைய முடியும்!” என்றான் ஹென்றி!
“ஓ!” என்றவளுக்கு அப்போது தான் தான் அவனை தேடி வந்த காரணம் நினைவு வர, “உங்களுக்கென கொண்டு வந்த பானம் வீணாகிவிட்டது! நான் மீண்டும் சென்று எடுத்து வருகிறேன்!” என்று சொல்லி நகர, அவள் விரல்களோடு தன் கரம் கோர்த்து அழுத்தமாய் பிடித்தான் ஹென்றி.
திரும்பியவள், ‘என்ன?’ என்று விழிகளால் வினவ, பேச்சே இன்றி அவன் பார்வைகள் அவளை மொத்தமாய் வருடிக்கொண்டிருந்தது. அதில் தன்னை மீறி கன்னம் சூடேற, லேசாக தாழ்ந்த அவள் சிரத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தியவன், “கலைந்த மேகங்கள் கூட வானிற்கு வனப்பை தருமென, உன்னிந்த கலைந்த கோலம் எனக்கு உணர்த்துகிறது!” என்றான் ரகசிய குரலில். அவன் குரல் கூட அவ்விடத்தில் எதிரொலித்தது, ஆனால் அது முன்பை போல பயத்தை கொடுக்காமல், கிளர்ச்சியை தான் கொடுத்தது.
ஆனாலும் போலியாய் முறைத்த பெண்ணவளோ, “ஆய்வாளனுக்கு எந்நேரமும் ஆசை பேச்சுக்கள் மட்டும் தான் போலவே!” என்று சொல்ல, “பேச்சுக்கள் மட்டும் ஏன்? ஆராய்ச்சிக்கு வா! என்கிறாயா?” அவன் உடனே குறும்பாய் கேட்க, இன்னமும் சிவக்கும் முகத்தை அவனிடம் இருந்து மறைக்க அவள் வேகமாய் திரும்ப, நொடிக்கூட தாமதிக்காமல் அவளை பின்னோடு கெட்டியாக அணைத்துக்கொண்டான் ஹென்றி.
“எ…என்ன இது? விடுங்களேன்!” வெறும் வார்த்தையாக மறுத்தவளும் கூட அவனோடு இழைய தான் செய்தாள்.
“உன்னை பார்த்துவிட்டால் என் கைகள் எம் பேச்சையே கேட்க மாட்டேன் என்கிறதே!? நான் என்ன செய்ய!?” அவன் அப்பாவி போல கேட்க, “கைகளை கட்டிப்போட்டால் சொல் பேச்சு கேட்கும்!” என்றாள் அவள்.
“அப்படியென்றால் இப்போதே கட்டிப்போடு! இதோ இப்படி…” என்றவன் தன் கைகளை அவள் வயிறோடு இன்னமும் இறுக்க, “ஸ்ஸ்! நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் நான் அப்படியே மடங்கி உங்களுக்குள்ளேயே புகுந்துவிடுவேன் போல!” அவனிடம் இருந்து திமிருவது போல பாசாங்கு செய்துக்கொண்டே சொல்ல,
“வந்துவிடு! உன்னை எனக்குள்ளேயே பொத்தி வைத்துக்கொள்கிறேன்!” என்றான் அவள் காது மடலோடு உரசி! அவன் தீண்டலில் தேகம் கூச்சொரிய பெண்ணவள் கண்மூடி நின்ற கணம், ஏதோ ஒரு சத்தம் கேட்க, இருவருமே திடுக்கிட்டு கலைந்தனர்.
அவர்கள் எதிரே ஆண்டனி நின்றிருந்தான். அவன் கைகளில் ஏதோ இருக்க, மித்ரங்காவின் பார்வையில் அப்பட்டமான வெறுப்பு!
“ஆண்டனி, வாட் ஆர் தீ டூஇங்?” ஹென்றி கேட்க, “ஐ…” என ஆரம்பித்தவன், மித்ரங்காவை பார்த்துவிட்டு, “என்னை அழைத்ததை போல சத்தம் கேட்டது! அதனால் வந்தேன்!” என்றவனை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள் அவள்.
“கணவன் மனைவி தனித்திருக்கும் இடத்தில் இப்படி தான் அனுமதி கேட்காது நுழைவாயா?” என்று கேட்ட மித்ரங்காவின் குரலில் என்ன முயன்றும் சற்றும் இலகுத்தன்மை இல்லை.
“மன்னிக்க வேண்டும்!” என்றவன் கரத்தில் இருந்ததை அப்போது தான் ஹென்றி கவனிக்க, “எங்களை நிழல்படம் எடுத்தாயா என்ன?” என்றான் ஆர்வமாய்.
‘ஆம்!’ என்றவனோ, “புத்தகத்தில் படங்களும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்!” என்று சொல்ல, “எதற்குமே அனுமதி கேட்கும் நற்ப்பண்பு இல்லையா உன்னிடம்!?” என்றாள் மித்ரங்கா காட்டமாக.
ஆண்டனி பதில் சொல்லும் முன் அவளை தோளோடு அணைத்துக்கொண்ட ஹென்றி, “கோபம் வேண்டாம் மித்ரா!” என்றவன், “புத்தக வேலைகள் எந்த அளவில் உள்ளது?” என்றான் ஆண்டனியிடம்.
“ராணியின் பிறப்பு முதல் இன்று வரை பதிவு செய்தாகிவிட்டது ‘தை மெஜஸ்டி’”
“எக்சலேன்ட்!” என்று பாராட்டிய ஹென்றி, “என் ராணியை பற்றிய சிறு தகவல் கூட விட்டுப்போக கூடாது! வருங்கால சந்ததிக்கு என் இதய ராணியை பற்றிய அத்தனை சிறப்புகளும் கடத்தப்பட வேண்டும்! வரலாற்றில் நீங்கா இடம்பெற்று என்னவள் திகழ வேண்டும்” என்றவன் கண்கள் பெண்ணை கொள்ளை ஆசையுடன் பார்த்தது.
மித்ரங்காவுக்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை என்றாலும் மறுத்து பேசாது நின்றாள். ஆண்டனி சென்றதும், ஏதோ சிந்தனையில் இருந்த மித்ரங்காவின் முகத்தை தன்னை நோக்கி திருப்பிய ஹென்றி, “உனக்கு ஆண்டனியை பிடிக்கவில்லையா?” என்று கேட்டான்.
“இல்லையே!” என்றாள், உண்மை மறைத்து.
“பொய்!” அவன் அவள் கண்களை பார்த்து சொல்ல, “அந்தரங்க நேரம், அனுமதி இன்றி வருபவனை கண்டால் நேசமா பொங்கும்!?” என்று அவள் கடுப்புடன் கேட்டதில் வாய் விட்டு சிரித்தான் ஹென்றி!
அவன் சிரிப்பு அவளுக்கு சற்று கோபத்தை கிளற, “என்ன இருந்தாலும் அவர் உங்கள் இனமல்லவா? அதான் கண்டிக்கக்கூட தோன்றவில்லை உங்களுக்கு” என்றாள் குறையாக.
சிரிப்பை நிறுத்தியவன், “அவனை இப்போது நீ திட்டியதற்கு வேண்டுமானால் காரணம் இருக்கலாம்! ஆனால், இதற்கு முன்?” அவன் கேள்வியாய் நிறுத்த, அவள் புரியாமல் பார்த்தாள்.
பதில் சொல்லாத ஹென்றி, அங்கிருந்து நடந்து சென்று ஒரு பெரிய பெட்டியில் ஒரு விசையை திருகினான். அதில் இருந்து ஒலி வர ஆரம்பித்தது.
“நான் உங்கள் ஊர் ராணி அல்ல… எங்கள் மண்ணின் ராணி! தமிழ் மண்ணின் ராணி! இது என் கோட்டை! இங்கே அண்டிப்பிழைக்க வந்த நீ, எம் மொழியை தான் பேச வேண்டும்! புரிந்ததா?”
மித்ரங்காவின் அதிகார குரல் கேட்டதும், அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. இது எப்படி சாத்தியம்!? அவள் அந்த பிரம்மிப்பில் விழி விரித்து நிற்க,
“உன் மண்ணை, உன் மொழியை, உன் ஆக்களை உனக்காக ஏற்றுக்கொண்ட என்னை போல, உன்னால் முடியவில்லை தானே!?” என்றான் ஹென்றி.
அவன் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றுக்கூட தோன்றவில்லை அவளுக்கு. அந்த பெரிய பெட்டியையே அதிசயம் போல பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரங்கா.
கேட்டதற்கு பதில் இல்லை என்றதும், அப்படியே அப்பேச்சை விட்டுவிட்டான் அவன்.
“இது…!?” அவள் உதடுகள் கூட அசையாது கேட்க, “ஒலிபதிவு இயந்திரம்!” என்றவன், “நாம் பேசுவதை பதிவு செய்து வைத்து எப்போது வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம்! அதோடு, நம் பேச்சை பலரும் கேட்கும்படி ஒரு இயந்திரம் தயாரிக்கும் வேலையில் இருக்கிறேன்! ஆனால்…!” என்றவன் தயங்கி நிறுத்த,
“ஆனால் என்ன?” என்றாள் அவள்.
“ஆனால், அதற்க்கான வசதிகள் இங்கே இல்லை! எனக்கு தேவைப்படும் பல பொருட்கள் இங்கே கிடைப்பது இல்லை! அதைவிட இதற்கு முதலில் நான் உரிமபட்டயம் பெற வேண்டும்! அதற்க்கெல்லாம்….!” என்றவன் நிறுத்த, அவள் கேள்வியாய் புருவம் சுருக்கினாள்.
“அதற்க்கெல்லாம்… நான் என் நாட்டிற்கு செல்ல வேண்டும்!” என்றான் சற்றே தயங்கி.
“ஓ!” என்றவளுக்கு அவன் சொன்னதை உட்கிரகிக்க சில நிமிடங்களே தேவைப்பட்டது. அவன் நாட்டிற்கு போவது என்றால்…?! அவளால் கிஞ்சித்தும் அதை கற்பனை கூட செய்ய இயலவில்லை.
“இங்கு திரும்ப எத்தனை காலம் எடுக்கும்?” அவள் வினவ, “ஒரு… ஒரு வருடம்!” அவன் அவளை விட தயங்கியே சொல்ல, அதை கேட்ட சில நொடிகளில் அவள் தலை கிறுகிறுத்து கண்கள் மேலே சொருக, அப்படியே பின்னோக்கி சரிந்தவளை பதறிக்கொண்டு தாங்கினான் ஹென்றி!
அடுத்து அவன் போட்ட சத்தத்தில் வீட்டின் அத்தனை வேலையாட்களும் அடித்துப்பிடித்துக்கொண்டு அங்கே வந்து குவிந்தனர்.
சற்று நேரத்தில் மித்ரங்கா அவள் அறை கட்டிலில் கிடத்தப்பட்டாள். வீட்டில் இருந்த ஒரு வயதான பெண்மணி அவளுக்கு என்னவென்று பார்க்க, அவள் நாடி பிடித்தவரின் முகத்தில் பிரகாசம்!
ஹென்றியின் பதைபதைத்த முகங்கண்டு, “வாரிசு உருவாகிருக்கு” என்றவர் சிறு வெட்கத்தோடு சொல்ல, அந்நேரம் கண்விழித்த மித்ரங்காவிற்கும் அது தெளிவாக கேட்டது.
சும்மாவே அவளை மகாராணியென தாங்குபவனை இனியும் கேட்கவும் வேண்டுமா என்ன? அவள் பாதம் தரையில் தாங்காமல் பார்த்து பார்த்து கவனித்தான். தன் ஆராய்ச்சியை கூட மறந்துவிட்டு முழு நேரமும் அவளுக்கு பணிவிடை செய்வதிலேயே தான் மும்முரமாய் இருந்தான்.
நாளுக்கு நாள் மெருகேறும் அவள் உடலும், கன்னங்களின் பளபளப்பும் அவனை அவள்மீது பித்தாகி போக வைத்தது. கணவனின் தொடர் கவனிப்பில் மெலிந்த தேகம், சதைபிடிப்போடு மாறியது. அவனருகில் அவள் ஏக மகிழ்ச்சியாய் இருந்தாள்.
ஆனாலும், கணவனுக்கு அப்படி இல்லையோ!? அவனுக்கு எதுவும் வருத்தம் இருக்குமோ என்ற ஐயம் இப்போதெல்லாம் அவளுக்கு வர ஆரம்பித்திருந்தது.
அன்று அவன் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றவன் அதன்பிறகு அதை பேசவே இல்லை. தன்னை இங்கே தனியே விட்டு போக முடியாமல் அவன் தயங்குவது புரிந்தது. அவளுக்கும் அவனை விட்டு வாழ்வது கடினம் தான். ஆனாலும், அவனுக்காக அதை செய்ய துணிந்தாள்.
‘உன்னை தனியே விட மாட்டேன்’ என்றவனை பல நாட்களாக கெஞ்சி, மிஞ்சி, சண்டையிட்டு அவன் அவா’வை தீர்த்துக்கொள்ள அனுப்பிவைத்தாள்.
“நீங்கள் திரும்பி வரும்போது நம் இளவரசனோடு உமக்காக இங்கே காத்திருப்பேன்!” தன் கண்ணீரை கண்ணோடு கட்டிக்கொண்டு சிரித்த முகமாய் அவள் பேச, அவள் உருவத்தை தன் கண்ணுக்குள்ளேயே பூரணமாய் நிரப்பிக்கொண்டவன், அவளுக்கு பின்னே நின்ற ஆண்டனியிடம், “உன் வேலையை நீ இன்னும் செம்மையுற செய்ய வேண்டும்! என் ராணியின் பேறுகாலத்தை கண்முன் காட்டிவிடும் வகையில் உன் எழுத்துக்கள் அமைத்திருக்க வேண்டும்! நான் திரும்பி வருகையில் என் ராணியோடு நானிருக்க வேண்டிய முக்கிய தருணங்களை நான் இழந்துவிட்டேன் என தோன்றாத வகையில் உன் எழுத்துக்கள் என்னை கட்டி இழுக்க வேண்டும்!” என்று சொல்லிவிட்டு, பிரியவே மனமில்லாதவனாய் அங்கிருந்து உடல் மட்டும் நகர, தன் தேசம் நோக்கி சென்றான் ஹென்றி ஸ்டீஃபெனோ!
தன் காதல் மனைவியை எப்போது திரும்ப பார்ப்போம் என்ற ஏக்கத்துடன் செல்பவன் அறிந்திருக்கவில்லை, அவளை தான் மறுமுறை பார்க்கும்போது தன்னுடைய பூலோக பயணம் முடிவுறும் என்று!!!