அலர் அதிர்வு மீளாது பார்க்க, சிரித்தபடி ரத்தம் தோய்ந்த தன் கரங்களை அப்படியே தன் முகத்தில் ஆனந்தமாய் தேய்த்தாள் மித்ரங்கா. அலரின் விழிகள் இன்னமும் விரிந்துக்கொள்ள, “சூடான குருதி உணர்ந்து எத்தனை நாட்கள் ஆனது!?” என்றாள் ராணி சிலாகிப்பாய்.
அலரின் கால்கள் தள்ளாடியது. மூக்கை துளைத்த நாற்றம் இப்போது மூளையில் உரைக்க, கண்கள் அப்படியே சுழல, அங்கே கண்ட காட்சியில் அவள் இதயமே நின்றுப்போனதை போல ஆனது.
எங்கு காண்கிலும் ரத்தக்கறைகள்!
மேசையில் அவள் பார்வை பதிய, அங்கே கிடந்த துணியை அவள் கண்கள் உற்று நோக்க, அது உணர்த்திய செய்தியில், அவள் நெஞ்சம் விம்மியது. கத்தி கதறி அழக்கூட முடியவில்லை.
தன் கைகளை ஆசையாய் முகர்ந்துப்பார்த்த ராணிக்கு, அலரின் பார்வை போன இடம் புரிய, “இதுவா? உன் தமக்கை உடையது தான்! நல்ல பருத்தி புடவை! துடைக்க உதவுமென வைத்திருக்கிறேன்!” என்றாள் இயல்பாய்.
அலரின் கால்கள் மொத்தமாய் வலுவிழந்து கீழே சரிந்தாள். அவள் விழுந்த வேகத்தில் கழுத்தில் குத்திக்கொண்டு நின்ற அம்பு தரையில் பட்டு வெளியே தெறித்து விழுந்தது. குபுகுபுவென ரத்தம் பாய்ந்தோட, ஒருவித வேகத்துடன் வந்து ஒரு மண்சட்டியில் அதை பிடித்தாள் மித்ரங்கா.
“ஏன் இப்படி வீணடிக்கிறாய்?” என்று கடிந்துக்கொண்டவள், “இது எத்தனை அற்புதமான மருந்து தெரியுமா? விலங்கின் ரத்தத்தில் கூட இத்தனை மருத்துவ பலன் இல்லை. நீயே பார், என் முகம் இப்போது எத்தனை ஜொலிக்கிறது என்று!? மனித ரத்தம் அத்தனை சக்தி வாய்ந்தது போல!” என்றவளோ, சற்று தொலைவில் காட்ட, அங்கே நாயோ, நரியோ ஏதோ ஒரு அழுகிய நிலையில் கிடந்தது. அந்த நிலையிலும் கூட அலருக்கு அடிவயிறு பிரட்டியது.
“சிறு வயதில் இருந்தே வில் அம்பு பயிற்சியில் என்னை என் தந்தை ஈடுப்படுத்தியது இப்போது தான் எனக்கு உதவுகிறது தெரியுமா!?” என்றவள்,
“நானே நம்பவில்லை, என்னால் இவ்வளவு சரியாய் இருட்டில் கூட குறிப்பார்க்க முடியும் என்று!” என்றாள் பெருமிதமாய்.
சட்டி நிரம்பியதும், ஒரு வெள்ளை துணியால் அவள் காயத்தில் கட்டுப்போட்டவள், அவளது கை கால்களையும் கட்ட தவறவில்லை.
“பயப்படாதே! நீ இப்போது சாக மாட்டாய்! அதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும்! அதுவரை உன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எனக்கு தேவையான ரத்தத்தை எடுத்துக்கொள்வேன்!” என்றதும் அலருக்கு பயத்திலும் வலியிலும் உடல் தூக்கித்தூக்கி போட்டது.
“ஏன் அப்படி? என்று கேட்கிறாயா? மொத்தமாய் கொன்றால், ரத்தம் இறுகிவிடுகிறது! அதை வெகு நாட்களுக்கு பயன்ப்படுத்த முடிவதில்லை. அதனால் தான், கொஞ்சம் கொஞ்சமாய்… வேண்டும் என்கிறபோது…” என்றவள், மென்மையாய் சிரித்தாள்.
முகத்தில் இருந்த ரத்தக்கறை காய்ந்துபோயிருக்க, வெட்டிவேரை கொஞ்சம் எடுத்து, ஈரம் தோய்த்து, மெல்ல முகத்தில் தேய்த்துக்கொள்ள ஆரம்பித்தாள், தன்னை அங்கிருந்த சிறு கண்ணாடியில் பார்த்தவாறே!
ஒருப்பக்கம் தேய்த்தவள், “பார்த்தாயா? என் முகம் இப்போது எத்தனை பொலிவாக உள்ளது என்று! அன்று கண்ணாடியில் என் முகத்தை பார்த்து அழுது, என்னை துன்புறுத்திக்கொள்ள பார்த்தேனே!? நினைவிருக்கிறதா உனக்கு?” என்றவள்,
“அன்று என் கரத்தில் இருந்த ரத்தத்தோடு முகத்தில் அடித்துக்கொண்டு அப்படியே மயங்கிப்போனேன்! மறுதினம் எழுந்து என்னை சுத்தப்படுத்திக்கொண்ட போது தான் என்னில் எழுந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்! ரத்தமுலாம் பொலிவை தருகிறதென கண்டறிந்தேன்! அதன்பின் என்னை நானே காயம் செய்து அதை பயன்படுத்தினேன்! ஆனாலும், எத்தனை நாள் அப்படி என்னை வருத்த முடியும் சொல்!? அதுவேறு தழும்பாகிக்கொண்டது! அதன்பின் தான் விலங்குகளை சோதித்து, எதுவும் சரி வரவில்லை என்றதும் உன் அக்காளை பிடித்தேன்!” என்றபடி சந்தோஷமாய் திரும்ப, அலர் அங்கே அழுகையில் குலுங்குவதை கண்டு, கையில் இருந்ததை அப்படியே போட்டுவிட்டு அவளிடம் வந்தவள், “எதற்கு அழுகை? ஹும்? உன் தமக்கை கூட இங்கே தானே இருக்கிறாள்!?” என்றாள் ஆறுதல் போல.
அலரின் அழுகை இன்னமும் கூட, “இதோ பார், இங்கே தான்!” என்றவள் ஒரு சாக்கை வேகமாய் திறக்க, அதில் இருந்து படபடவென வெளியேறியது லட்சம் ஈக்கள்! சில எலிகள் கூட! பார்த்த கணத்தில் குடலோடு பிரட்டிக்கொண்டு வரும் அளவுக்கு இருந்ததை ராணி ஒரு சின்ன முகசுளிப்பு கூட இல்லாமல் பார்க்க, அங்கே கிடந்த சடலத்தை கண்டதும்,
“அச்சோ! இது அந்த ரங்கன்! உன் அக்காள் இங்கே தான் எங்கேயோ!?” என்று சொல்லிக்கொண்டே அங்கும் இங்கும் தேடியவள், வேறொரு சாக்கை விலக்க, அதன்மீது இருந்த ஒரு தகர பெட்டி கீழே விழுந்தது.
அதனடியில் எலி தின்றது போக மீதமாய், உருவமே இன்றி கிடந்தாள் செவ்வி!
“ஹான்… இதோ இங்கே தான் இருக்கிறாள்! நீ அழாதே! என்ன?” என்றவள், மீண்டும் தன் முகத்தை தேய்க்கும் வேலையில் இறங்கிவிட்டாள்.
அலரின் கழுத்தில் துணியை மீறி ரத்தம் கசிந்துக்கொட்ட, “இங்கே நாற்றம் வராமல் இருக்க நானும் என்னென்னவோ செய்கிறேன்! ஆனாலும், வெளியே வரும் அளவுக்கு போய்விட்டது! என்னவரும் வந்தபிறகு இங்கே இனி நான் எதையும் செய்ய முடியாது!” என்று சோகமாய் சொன்னவள்,
“அங்கே என் அரண்மனையில் என்றால், எனக்கென பல இடங்கள் உண்டு!” என்று சொல்ல, அலர் இங்கிருந்து தப்பிக்க முடியுமா என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு துழாவினாள்.
“சிறு வயது முதலே விலங்குகளை துன்புறுத்தி ரசிப்பது என் பொழுதுபோக்கு! வேட்டைக்கு கூட தந்தை அறியாமல் செல்வேன்! இப்போது மனித வேட்டை நடத்தும் அளவுக்கு என் வீரம் வளர்ந்துவிட்டதை நினைத்தால், எனக்கே பெருமிதமாக உள்ளது!” என்றவள் சொல்லிக்கொண்டே போக, அப்போது ஆய்வகத்தின் மேல்பக்க கதவு திறந்துக்கொண்டது.
நொடியில் ராணியின் முகம் கலவரம் பூச, வேக வேகமாய் அவள் அங்கே போவதற்கும் மூக்கை பொத்திக்கொண்டு ஆண்டனி உள்ளே நுழைவதற்கும் சரியாக அமைந்தது.
வந்தவன் பேச்சற்று, திகைத்து, ஸ்தம்பித்து இன்னும் என்ன என்ன வார்த்தைகள் தமிழில் உண்டோ அத்தனையும் ஒன்று சேர நின்றிருக்க, அவனை கண்டவள், உதடு சுளிப்புடன், “நீயா?” என்றாள் அசட்டையாய்.
“எ..ன்..ன இது!?” என்ற இருவார்த்தைகள் அவன் வாயில் இருந்து வருவதற்குள் மூச்சு வாங்கியது.
“ஹென்றி ஒருவரால் மட்டுமே நீ என்னிடம் இருந்து தப்பினாய்! இல்லை என்றால், என்றோ இந்த கூட்டத்தில் நீயும் ஒரு மூலையில் எலிக்கு உணவாகியிருப்பாய்” என்றவள் குரலிலும் உடல்மொழியிலும் ஏகப்பட்ட அலட்சியம்!
அப்போது தான் அங்கே தரையில் அலர் கிடப்பது ஆண்டனியின் கண்ணில் பட, துடிதுடித்து வேகமாய் அவளிடம் விரைந்தான். அவளை கையில் ஏந்தி தூக்கியவன், அவள் நிலையை கண்டு கதறி, “சொன்னேனே! என்னை கேளாமல் எங்கும் போகாதே என்று சொன்னேனே!” என்று அழுக, அவளுக்கும் உயிர் வாதனையில் அழுகை பொங்கியது.
அதற்குமேல் தாமதிக்காமல் அவன் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு எழ, “ஏய், என்ன செய்கிறாய்?” என்று குறுக்கே வந்தாள் ராணி.
“நீ பெண்ணே அல்ல… பேய்…! உன்னை காண்பது கூட பாவம்!” உச்சக்கட்ட வெறுப்பில் மொழிந்தவன் அவளைக்கடந்து போக முயல, வெறிக்கொண்டவள் போல அவனை பிடித்து பின்னால் இழுத்தாள் மித்ரங்கா.
நிலைத்தடுமாறியவன் கையில் ஏந்திய அலறோடு கீழே விழ, “மரியாதையாக சென்றுவிடு! இல்லை நீயும் எனக்கு இரையாவாய்!” என்றாள் கண்கள் விபரீத ஒளியில் மின்ன…!
“ச்சீ! மனித ஜென்மமா நீ எல்லாம்? உன்னையும் தேவதை என்று நம்பிக்கொண்டிருக்கிறானே! முட்டாள் அவன்!” ஆண்டனி கத்த, “உன்னைப்போல அறிவாளியாய் இருந்து உயிர்த்துறப்பதை காட்டிலும், முட்டாளாய் இருந்து உயிர் வாழ்வது மேல்!” என்றவள் கையில் இப்போது வில் இருந்தது.
“உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தருகிறேன்! அவளை விட்டு விட்டு இந்த அரண்மனையை விட்டே சென்றுவிடு! மறுத்தால், இக்கணமே உன் உயிர் போவது நிச்சயம்!” அப்பட்டமான மிரட்டல் அவளிடம் இருந்து!
“நான் கோழை அல்ல!” என்றவன், மீண்டும் அவளை ஏந்திக்கொண்டு எழுந்து நிற்க, மித்ரங்கா முகத்தில் கோணலான சிரிப்பு!
அவன் அங்கிருந்து இரண்டடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான். மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த அம்பு அவன் கணுக்காலில் சொருகிநின்றது.
தடுமாறி அவன் திரும்ப, “வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் வருவதில்லை ஆண்டனி! புத்தியை உபயோகப்படுத்து!” என்றாள் அவள்.
அவன் ஒன்றுமே சொல்லாமல், காலை தாங்கிக்கொண்டு அங்கிருந்து நகரப்போக, “இங்கே நுழைந்தவர்கள் எவரும் என்னை மீறி உயிருடன் வெளியேறியதில்லை. உனக்கந்த அரிய வாய்ப்பை வழங்கினேன்… தவற விட்டு விட்டாய். இனி அதற்காய் நீ வருந்தக்கூட உனக்கு அவகாசம் இல்லையே!” என்றவள் போலியாய் வருத்தம் போல உச்சுக்கொட்டினாள்.
“என்னவோ செய்கிறாய் என்று எண்ணினேனே தவிர, உன்னிடம் இத்தனை கொடூரத்தை துளிக்கூட நான் எண்ணவில்லை” என்று சொன்னவன், அவளை திரும்பியும் பாராது நடக்க, அவனது நடு முதுகில் சொருகி நின்றது ஒரு அம்பு.
அவனைக்கண்டு அலட்சியமாய் சிரித்தவள், “உனக்கு இங்கே தான் சமாதி!” என்றாள்.
“நீ செய்வது ஹென்றிக்கு தெரிந்தால் என்னாகும் என்று சிறிதேனும் நினைத்தாயா?” கடைசி கேள்வியாய் அவன் கேட்க, “தெரிந்தால் தானே!? நீயும் இவளும் காதல்க்கொண்டு ஓடிவிட்டீர்கள் என்று சொல்வேன்! என்னவர் என் பேச்சையா நம்பாமல் போய்விடுவார்!?” அத்தனை இறுமாப்பு அவள் குரலில்.
ஆண்டனிக்கு வலியிலும் வேதனையிலும் கோபம் தலைக்கேற, கையில் இருந்த அலறை மேசைமீது கிடத்தியவன், தன் கரத்தை பின்னே கொண்டு சென்று பல்லைக்கடித்துக்கொண்டு வேகமாய் உருவினான் அந்த அம்பை!
ரத்தம் பீறிட்டு கொட்டியது. அப்போதும் மித்ரங்காவிற்கு கீழே வீணாய் போகும் ரத்தத்தின் மீது தான் கவலையே!
வலியை எச்சில் கூட்டி விழுங்கி அடக்கியவன், “உன்னை இப்படியே விட்டு சென்றால் இன்னும் எத்தனை உயிரை பலியிடுவாயோ!? உன்னால் போகும் கடைசி உயிர் எனதாகவே இருக்கட்டும்!” என்றதும், அவள் இன்னும் அலட்சியமாய் சிரிக்க,
“ஆனால், என் கரத்தால் மடியப்போகும் முதல் உயிர் உன்னது தான்!” என்று விரல் நீட்டி அவளை சுட்டினான்.
அவள் கண்கள் பெரிதாய் விரிய, “நீ… என்னை கொல்வாயா?” என்று ஆச்சர்யமாய் கேட்டவள், “எங்கே!? முயன்றுப்பார்!” என்றாள் ஆணவமாய்.
கையில் இருந்த அம்பை இறுக்கிப்பிடித்தவன், தாங்கிய கால்களோடு ஓங்கிய கையோடு அவளை நோக்கி வர, அசையாமல் நின்றவள், இறுதி நொடியில் லேசாக இடப்பக்கம் நகர, ஆண்டனி வந்த வேகத்தில் அங்கே இருந்த சாக்கின் மீது விழுந்தான். வயிறை பிரட்டிக்கொண்டு வாந்தி வந்தது. கொலகொலவென்று பிடிமானமே இல்லாத நாற்ற பிண்டம் ஒன்று அங்கே இருக்க, அதன் மீது தான் விழுந்திருந்தான்.
தன் மீது அசூயையை உணர்ந்தவனுக்கு இன்னமும் தான் நிற்காமல் குமட்டியது. அவன் நிலையை கண்டவள் சிரித்தாள். சத்தமாய் சிரித்தாள். அந்த அறையே எதிரொலிக்க சிரித்தாள். அவள் சிரிப்பு சாத்தானை நினைவுப்படுத்தியது அவனுக்கு.
“நீ… என்னை… கொல்வாயா!?” ஒவ்வொரு வார்த்தைக்கும் கொக்கரித்தாள்.
ஆண்டனியால் தன்னை சமாளிக்கவே முடியவில்லை. குமட்ட குமட்ட தலை வேறு கிறுகிறுத்தது. அப்படியே ஓடிந்து அமர்ந்துவிட்டான். அவனை இளக்காரமாய் பார்த்தவள், “முடிந்தால் உன் உயிரை காப்பாற்றிக்கொள்!” என்றுவிட்டு அங்கிருந்து திரும்பி நடந்தாள்.
வெளியேறும் படிகளில் அவள் கால் பதித்த கணம், அவள் தோள்பட்டையில் பலமாய் குத்தி நின்றது ஒரு அம்பு! சுர்ரென்று ஏறும் வலியை காட்டிலும் ஆண்டனியின் மீது வன்மம் தலைவிரிக்க, வெறிக்கொண்டவள் போல திரும்பியவள், அங்கே மூச்சு வாங்க தொய்ந்து நின்றவனின் கழுத்தை தன் இடக்கையால் அழுந்த பிடித்தாள்.
அவன் ஆண் தான்! திடகாத்திரமானவன் தான்! ஆனால், அவள் முன் அவன் ஒன்றுமே இல்லை. அவள் இறுக்கி பிடித்த விரல்களுக்கு நடுவே அவன் கழுத்து நசுங்கியது. மூச்சு விட முடியாமல் தள்ளாடியது. அவள் கொடுத்த இறுக்கத்தில் அவன் துவள, அவன் கால்கள் தரையில் இருந்து இரண்டு அடிகள் அந்தரத்தில் தொங்கியது. அத்தனை வெறி, ஆத்திரம், ஆவேசம் அவளுள்.
இன்னும் சில நொடிகள்! இப்படியே அவள் பிடித்தால், அவன் உயிர் போவது உறுதி என்ற நிலையில், “மித்ரா!” என்ற குரல்.
அந்த குரலில் தன்னையறியாது ராணியின் உடலில் நடுக்கம்! அதன் விளைவாய் கைகள் தளர, தன்னை அவளிடம் இருந்து பிரித்துக்கொண்டு வேகமாய் சென்று தரையில் விழுந்தான் ஆண்டனி.
மீண்டும், “மித்ரா!” என்ற குரல். இப்போது அவளுக்கு நெருக்கமாய் கேட்க, ஒருவித நடுக்கத்துடன் மேல்நோக்கி திரும்பினாள். முதல் படியில் காலை வைத்திருந்தான் ஹென்றி.
“என்ன ஒரே சத்தம்!?” என்றவன், இரண்டாம் படியில் காலை வைத்தபோது, அந்த நாற்றம் அவனை அப்படியே தேங்க வைத்தது. வாயை கைகளால் மூடிக்கொண்டான். மனம் மத்தாளமிட்டது. என்னவோ விபரீதம் நிகழப்போகிறது என்று உள்மனம் கூக்குரலிட்டது. நடுங்கும் கால்களை அழுத்தி வைத்து இறங்கினான்.
மித்ரா அசையவில்லை. வருபவனை தான் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதுவரை தொண்டை நீர் வற்ற இருமிக்கொண்டிருந்த ஆண்டனி, “ஹென்…ஹென்றி!” என்றான் அழைப்பாய்.
ஹென்றியின் கண்கள் அவனது ஆசைகாதலியை, முதல் காதலை, தன் ஆய்வகத்தை வெகு நாட்களுக்கு பிறகு பார்த்தது. இது அவன் காதலியே இல்லையே! முதல் காதலி மட்டுமா மாறியிருந்தாள்!?
அவன் கண்கள் மித்ரங்காவை வெறித்தது. தன் காதலிகள் இருவருமே சுயம் இழந்து கண்முன்னே நிற்ப்பதை காண சகிக்கவில்லை அவனுக்கு. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு கிளம்பியது. வாழ்க்கையில் முதல்முறையாக அழுகை வருகிறது அவனுக்கு.
மேசை மீது உணர்வற்று கிடக்கும் அலர், உடல் முழுக்க ரத்தமாய் ஆண்டனி… அதைவிட, ஆங்காங்கே கிடக்கும் உருக்குலைந்த சடலங்கள்! ஹென்றிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் ஸ்தம்பித்து நிற்க, “ஹென்றி… இவள் ராட்சசி! அரக்கி… இவளை நம்பாதே!” என்று வீறுக்கொண்டு கத்தினான் ஆண்டனி.
அவன் சொன்னதில் ஹென்றியின் முகம் மாற, அதைக்கண்ட மித்ரங்கா, “நான்… நான் இப்படி செய்வேனா? ம்ம்? என்னை நம்ப மாட்டீர்களா?” என்றாள் கண்கள் கலங்க.
அவள் முகத்தை கண்டவனுக்கு இரக்கம் உருவாக, “இல்லை… நடிக்கிறாள்… சாகசக்காரி! நம்பாதே ஹென்றி!” என்று கத்தினான் ஆண்டனி.
“பொய் உரைக்கிறான்! இத்தனை நாளும் இங்கே ஆட்களை கொன்று ரசித்தது இவன் தான்! இன்றென்னிடம் கையும் களவுமாக அவன் மாட்ட, உங்களிடம் உண்மையை சொல்ல போவதாக சொன்ன என்னை… இதோ.. இங்கே குத்தி காயப்படுத்திவிட்டான். அவனிடம் இருந்து தப்பிக்கவே நான் அவனை தாக்கினேன்! இப்போது உங்களை கண்டதும் அப்படியே மாற்றி பேசுகிறான்!” விசும்பிக்கொண்டு சொன்னவளின் காயத்தை அவசரமாய் ஆராய்ந்தான் ஹென்றி.
ரத்தம் வந்துகொண்டிருக்க, “ஹவ் டேர் தௌ(யூ) ஆண்டனி?” என்று கண்கள் சிவக்க கத்தினான் ஹென்றி.
“do not trust her henry! she is forsooth a witch”
(அவளை நம்பாதே ஹென்றி! உண்மையில் அவள் தான் கொடூரி!) ஆண்டனியும் சொல்ல, ஹென்றியை யோசிக்க விடாமல் கட்டி அணைத்து அழ ஆரம்பித்தாள் மித்ரங்கா. ஹென்றிக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது. நடப்பவை எல்லாம் கொடும் கனவாக போய்விடாதா? என்று தோன்றியது.
ஹென்றி தன்னை நம்பப்போவதில்லை என்று உணர்ந்த ஆண்டனி, வேகமாய் எழுந்து கைகளில் நீரை அள்ளியவன், மேசை மீது கிடந்த அலரின் முகத்தில் தெளித்து எழுப்பினான்.
“அலர்… விழித்துக்கொள்! அலர்… கண்ணைத்திற!” ஆண்டனி அவளை சிரமப்பட்டு உசுப்ப, இங்கே ஹென்றியின் கைகளுக்குள் சொகுசாய் சாய்ந்து அவன் செய்வதை வேடிக்கைப்பார்த்தாள் மித்ரங்கா.
அலரின் கைகட்டினை கழட்டிவிட்டவன் அவள் முகத்தில் வேகமாய் தட்ட, அவளிடம் உணர்வு வந்தது. மலங்க மலங்க விழித்தபடி அலர் தலைதூக்க, அங்கே மித்ரங்காவை பார்த்த மாத்திரத்தில் அவள் உடல் நடுங்க, ஆண்டனியிடம் வேகமாய் ஒண்டினாள்.
“இங்கே பார்! உன்னை துன்புறுத்தியது யார்? யாரென்று சொல்!” அவன் உலுக்க, அவள் கழுத்தில் இருந்து மீண்டும் ரத்தம் வெளியேற ஆரம்பித்தது.
“சொல் அலர்! உன்னை இப்படி செய்தது யார்!?” அவன் ஆவேசமாய் கேட்க, மித்ரங்காவை பார்த்த அலர், அவளை சுட்டிக்காட்ட கை உயர்த்திய கணத்தில், ஹென்றியின் பிடியில் இருந்து நொடியில் வெளிவந்த மித்ரங்கா, கீழே கிடந்த வெட்டுக்கத்தியை எடுத்து ஒரு வீச்சாய் இறக்கினாள் அலரின் கழுத்தில். அவள் வீசிய வேகத்தில் பாதி அறுந்த தலை பின்னால் தொங்கியது.
ஆண்டனிக்கும் ஹென்றிக்கும் உலகமமே சமைந்த நிலை!
“எல்லாம் உன்னால்…!” என்று ஆக்ரோஷமாய் கத்தியவள் பின்னால் திரும்பி, அங்கே சமைந்து நின்றிருந்த ஆண்டனியிடம் கத்தியை ஓங்க, அவன் சுதாரித்து விலகும் முன் அவன் நெஞ்சில் இறங்கியிருந்தது அது!!!
ஹென்றிக்கு இந்த நொடியே செத்துவிடக்கூடாதா என்று தோற்றியது.
அவனை குத்தியும் ஆத்திரம் தீராதவள், அங்கே அடுக்கிவைத்து நிறுத்தப்பட்டிருந்த அம்புகள் நிறைந்த கலனில் இருந்து சில அம்புகளை எடுத்தவள், வில்லை தேட, அவள் செயல் உணர்ந்தவன், வெகு பிரயத்தனப்பட்டு படிகளை நோக்கி ஓடினான்.
அவன் ஓடுவதை கண்டு அவள், அவனை பிடிக்க வர, இப்போது அவளை ஹென்றி தடுத்துப்பிடித்தான்.
“விடு… என்னை விடு!” அவள் திமிர, உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியேறிய ஆண்டனி தட்டுத்தடுமாறி நடக்க, சில அடிகள் கூட அவனால் அதற்குமேல் முடியவில்லை. புரிந்துப்போனது இனி தன் உயிர் தன்னிடம் இல்லை என்று.
அவன் கண்கள் அவனது ஆஸ்தான வேலை இடத்தை நோக்கியது. காற்றில் புரண்டுக்கொண்டிருந்தன அவன் எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தின் பக்கங்கள்.
கடைசி ஆசை போல எழுந்தவன், பேனாவை எடுத்தான். மை தொடவில்லை. தன் உதிரம் தொட்டு எழுதினான், அந்த அரக்கியின் கருப்பு பக்கத்தை!!!
“என்னை விடு…!” மித்ரங்கா திமிர, ஹென்றியால் அவளை பிடிக்கவே முடியவில்லை.
“என்ன? என்ன இப்போது? நான் தான் கொன்றேன்! என்ன செய்ய போகிறாய்!?” என்று திமிறிக்கொண்டே கத்தியவள், “இது தான் நான்! என்னுடன் நீ வாழ தான் வேண்டும்! மறுத்தால் நீயும் இருக்க மாட்டாய்!” என்ன செய்கிறோம் என்றே புரியாது அவள் கத்திக்கொண்டிருந்தாள்.
ஹென்றிக்கு வெறுத்துப்போனது. அவனால் அவன் காதலியை இப்படி காண சகிக்கவில்லை.
அழுதுக்கொண்டே, “வேண்டாம் மித்ரா! விட்டுவிடு! நாம் எங்கேனும் போய்விடுவோம்!” என்றான்.
“போனால் மட்டும்!? நான் இப்படித்தான். எனக்கு மனித வேட்டை மிகவும் பிடித்துள்ளது!” அவள் கண்கள் மின்ன சொல்ல,
“வேண்டாம் மித்ரா! என்னை உயிரோடு கொல்லாதே!” என்றான் கண்கள் சுரக்க!
“அவனை கொன்றால் தான் என் ஆத்திரம் தீரும்! என் வாழ்வின் போக்கையே மாற்ற வந்தவன் அவன்! அவன் மட்டும் இல்லையென்றால், உன் முன்னே நான் இப்படி நிற்கும் நிலையே வந்திருக்காது” அடங்காத ஆத்திரத்தோடு அவள் திமிறிக்கொண்டு கத்த, அவளை அடக்கும் வழியறியாதவன், வேகங்கொண்டு அவளை தன்னிடம் இருந்து பின்னால் தள்ளினான்.
எங்கோ போய் விழுந்தாள் அவள்!
முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டான் ஹென்றி!
“என்னால் முடியவில்லை மித்ரா! நடப்பதெல்லாம் பொய் என்று ஆகிவிடக்கூடாதா என்று உள்மனம் ஏங்குகிறது. உன்னை எப்படியடி நான் விட்டு வாழ்வேன்! ஏன் இப்படி அரக்கியாகி போனாய்? நானறிந்த மித்ராவுக்கு நகைப்பை தவிர ஒன்றும் தெரியாதே!” என்று கதறியவன்,
“ஒருவேளை நான் தான் உன் சுயத்தை பார்க்க தவறிவிட்டேனோ? புற அழகை நான் ஆராதித்த அளவு, உன் அக அழகை காணவில்லையோ!? ஐயோ!!! நெஞ்சமே கொதிக்கிறது!” என்று கண்ணீர் கொட்ட கொட்ட மடங்கி அமர்ந்து கதறினான்.
அவன் அழுகை நீண்டுக்கொண்டே போக, அவளிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்றதும் தான் நிமிர்ந்துப்பார்த்தவன், அவள் எதன் மீதோ சரிந்துக்கிடப்பது கண்டு, வேகமாய் தூக்கி விட ஓட, அவளை நெருங்கியவன் கால்கள் நொடி நேரம் நின்று, பின்னே அதிர்ச்சியில் பல அடிகள் பின்னோக்கி ஓடி கீழே சரிந்தது.
அங்கே அம்புகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கலனில் அவள் விழுந்திருக்க, அவள் உடலை கணக்கற்ற அம்புகள் முத்தமிட்டிருந்தன. அவளிடம் அசைவில்லை. உயிர் பிரிந்துவிட்டது!
திக்பிரம்மை பிடித்தவன் போல அமர்ந்துவிட்டான் ஹென்றி!
நானா? நானே வா? நானே அவளை கொன்றுவிட்டேனா? அவன் மனம் ஓலமிட எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ… மெல்ல எழுந்தவன், அந்த இடத்தை சுற்றிப்பார்த்தான். மனம் இறுகிப்போனதை போல ஆனது.
மேலே ஏறி கூடத்தை அடைந்தான். அங்கே மேசை மீது சரிந்துக்கிடந்தான் ஆண்டனி. அவன் உயிர் பிரிந்து பல நிமிடங்கள் ஆகியிருந்தது. அவன் கீழே இருந்த புத்தகத்தை எடுத்து புரட்டினான். அவனுக்கு இவன் இட்ட பணி! உயிர் விடும் நேரத்தில் கூட தன் வேலையை முடித்துவிட்டே போயிருக்கிறான்.
ஹென்றியின் இதழ்களில் விரக்திப்புன்னகை! அங்கிருந்து பேனாவை எடுத்தான். வழிந்துக்கொண்டிருந்த ரத்தத்தில் தோய்த்து எழுதினான்.
பின், ஆண்டனியை தூக்கிக்கொண்டு ஆய்வகம் வந்தவன் அவனை அங்கே கிடத்தினான். கண்கள் அவனை மீறி மித்ரங்காவை பார்த்தது. நெஞ்சம் விம்ம, கண்கள் உடைப்பெடுக்க, அவளை நெருங்கியவன், அவள் கன்னத்தில் அழுத்தமாய் கண்ணீரோடு முத்தம் வைத்தான்.
மறுநொடி, அம்புகளில் ஒன்றை எடுத்து அதன் கூறிய பாகத்தால் தன் கழுத்தை அறுத்தவன், கண்மூடி மெல்ல மெல்ல மித்ரங்காவின் மீதே படர்ந்தான்.
புத்தகத்தை சுற்றி அமர்ந்திருந்த நால்வரும் சிலையாகி சமைந்து இருக்க, சம்யுக்தா இப்போது பவித்ராவின் பக்கம் புத்தகத்தை திருப்பினாள்.
ஹென்றியின் கடைசி எழுத்துக்கள்!
“’twere love at first sight, at last sight, at aye and aye sight
I would thou to wot that thou hast been the last dream of mine soul”
புரியாத ஆங்கிலத்தில் இருக்க, அதை படித்த பவித்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.
“முதல் பார்வையில உன்மேல வந்த காதல், கடைசி பார்வையிலும், என் ஒவ்வொரு பார்வையிலும் இருக்கும்…
என் ஆத்மா காண்ற கடைசி கனவு நீயா இருக்கனுங்குறது தான் என்னோட விருப்பம்!” இதை சொல்லி முடிக்கும் முன்னே பவித்ரா விசும்பிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
சம்முவும், “ஹென்றி பாவம் ல!” என்று கண் கலங்க, அங்கே ஆண்களின் கண்கள் கலங்கவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்! அவர்களுக்குமே சொல்லமுடியாத பாரம் நெஞ்சில்!!!