“சம்முவ காணோமா? உன்னோட தானே டா வந்தா?” வித்தகன் பதறிக்கேட்க, “என்னோட இருந்தா… நான் ஓடி வந்தப்போ என்னோட அவ வராளான்னு பாக்கல நான்!” கலங்கும் போல இருந்த கண்களை அடக்கிக்கொண்டே சொன்னான் பிரஷாந்த்.
சிறிது நேரம் யாரும் ஒன்றுமே பேசவில்லை. பேச்சும் வரவில்லை.
“ஒன்னும் ஆகாது அவளுக்கு!” மெல்லியக்குரலில் பவித்ரா பிரஷாந்திடம் ஆறுதலாய் சொல்ல, அழுத்தமாய் திரும்பிப்பார்த்து, “ஆகாது! தெரியும்!” என்றவன், “அவ வாய்க்கு பேய்க்கூட அவளை வச்சுக்காது!” என்றான். அவன் சொன்னதற்கு பவித்ரா மெலிதாய் புன்னகைக்க, “ஏய்…” என முறைத்தான் வித்தகன்.
அவனை பார்த்த பிரஷாந்தின் பார்வையில் ஒன்றுமே இல்லை. வாய் தான் பகடி சொன்னதே ஒழிய அதற்க்கான எந்தவித உணர்வும் அவனிடம் துளியும் இல்லை. தீ மேல் நிற்பவன் போன்ற அவஸ்தையில் தான் நின்றிருந்தான்.
“தேடலாம் டா அவளை!” வித்தகன் சொல்ல, “எங்கன்னு தேட சொல்ற? என்ன செய்ய முடியும் நம்மால?” இயலாமை தந்த கோபத்துடன் வந்தன பிரஷாந்தின் வார்த்தைகள்.
“கூட நின்னவ கையைப்பிடிச்சுட்டு ஓடிவர எவ்ளோ நேரம் ஆகிருக்கும் எனக்கு? என்னை நம்பி வந்தவளை விட்டுட்டேன்ல?” பிரஷாந்த் தன்னையே நொந்துக்கொண்டு பேச, “இங்க நடக்குற எதுவுமே நம்ம கைல இல்லடா, தேவையில்லாம உன்னை நீயே பிளேம் பண்ணிக்காத!” என்னதான் வித்தகன் ஆறுதல் பேசினாலும் அது பிரஷாந்தை எந்தவிதத்திலும் தேற்றவில்லை.
அப்போது. ‘ஹக்…’ என்ற சத்தம்! அதைத்தொடர்ந்த மெலிதான இருமல் சப்தம்! மூவரின் அவயங்களும் சுறுசுறுப்பாகி ஒலி கேட்ட வழி விரைய, அங்கே இருந்த நீண்ட மர மேசைக்கு மறுபுறம் மயக்கநிலையில் கிடந்தாள் சம்யுக்தா.
அந்த மரமேஜை மூவரையும் திகில் பிடிக்க வைத்தது. இதில் தானே அந்த ‘அலர்’ இறந்துக்கிடந்தது?!
அவளை கண்டதுமே அவளை நோக்கி விரைந்த பிரஷாந்த், அதைவிட வேகமாய் அவளை அங்கிருந்து எழுப்பினான். தளர்ந்து நின்றவள், அரைகண்ணை திறக்க, “போலாம் வித்தகா! இதுக்குமேல இங்க இருக்கவே கூடாது!” என்றான் பிரஷாந்த். பேசினாலும், அந்த நொடிகளில் அவன் கண்கள் அவள் நலத்தை அதிவேகமாய் ஆராய்ந்திருந்தது.
“எந்த பக்கம் டா போறது?” தலையில் வைத்த கையோடு தெற்கு வடக்கு புரியாது வித்தகன் குழம்ப, “கொஞ்சம் நிதானமா யோசிப்போம்! இருங்க” என்ற பவித்ரா தாங்கள் இருக்கும் இடத்தை ஒருமுறை அவதானித்தாள்.
“என்னனே தெரியல ப்ரஷு… மயக்கமா இருக்கு! உன் பின்னாடி தான் ஓடி வந்தேன், அப்பறம் என்ன ஆச்சுன்னே தெரியல!” பிரஷாந்தின் மீதே பாதி சரிந்தபடி ஹீனமான குரலில் முணுமுணுத்தாள் சம்யுக்தா.
“ஜி… இப்போ நம்ம வீட்டோட ஹாலுக்கு கீழ தானே நிக்குறோம்?” என்று கேட்டாள் பவித்ரா. யோசித்த பார்த்த வித்தகனும் ‘ஆம்’ என்றுரைக்க, “ஹால்ல இருந்து வலது பக்கம் கிட்சன், இடது பக்கம் ரூம்ஸ் இருக்கு. கிட்சன்’ல இருந்து வெளில தோட்டத்துக்கு போற மாறி ஒரு கதவு இருக்கு, நான் பாத்தேன்!” என்று சொல்ல,
“ஆமா, நானும்… பாத்தேன்!” என்றாள் சம்மு சற்று தெளிந்தவளாய்.
“எனக்கென்னவோ, வலது பக்கம் போறது தான் சரியா இருக்கும்ன்னு தோணுது! நீங்க என்ன சொல்றீங்க ஜி?” என்றாள் பவி கேள்வியாய்.
யோசித்தவன், “உனக்கு என்ன தோணுது பிரஷாந்த்!?” என்று வினவ, “ஏதோ ஒரு பக்கம் போவோம்! வா” என்றான் அவன் அவசரமாய்.
தாமதித்து நிற்பதற்கு ஏதோ ஒரு பக்கம் முன்னேறுவோம் என்று துணிந்தவர்கள், தங்கள் இணையின் கரத்தை கெட்டியாய் பற்றிக்கொண்டு வெகு வேகமாய் அங்கிருந்து விரைந்தனர். குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மெழுகின் மெல்லிய ஒளிக்கூட இல்லை. குறுக்கே இருந்த பொருட்கள் எதையும் தொடாமல், எதிலும் படாமல், எதையும் பார்க்காமல் நால்வரும் ஓட, சம்முவின் கால்கள் சட்டென நின்றுப்போயின.
“ஹே வா!” அவளை பிடித்து பிரஷாந்த் இழுக்க, அவன் குரலில் மற்ற இருவரும் நின்றனர்.
சம்மு காலை முன்னோக்கி வைக்க, அவளால் நகரவே முடியவில்லை.
“என்னடி பண்ற? வா என்னோட!” பிரஷாந்த் கையை பிடித்து இழுக்க, “முடியல பிரஷாந்த், என்னால வர முடில… யாரோ என்னை புடிச்சு பின்னாடி இழுக்குறாங்க!” என்றாள் பீதியாய்.
ஆண்கள் திகைத்து நின்றது சில நொடிகள் தான். ஒரு கரத்தை ஏற்கனவே பிரஷாந்த் பற்றியிருக்க, இப்போது அவளது மறுகரத்தை வந்து பிடித்தான் வித்தகன். அவனது மற்றொரு கரம் பவித்ராவை விடாமல் பற்றியிருந்தது.
இப்போது சம்யுக்தாவின் இருகரத்தையும் பிடித்து ஆண்கள் இருவரும் இழுக்க ஆரம்பித்தனர். பவித்ராவை அப்படி இழுத்தபோது பலன் கிடைத்ததை போல, இப்போது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்கள் முயற்சியை தொடர, அதன் பலன் என்னவோ சுழியமாக தான் இருந்தது.
“ஹே கொஞ்சம் போர்ஸ் போடு சம்மு, வந்துடலாம்!” பிரஷாந்த் சொல்லிக்கொண்டே இழுக்க, “என்னால கொஞ்சமும் அசையவே முடில டா!” என்றவளுக்கு கண்ணீர் தான் வந்தது.
மேலும் மூவராய் சேர்ந்து முயற்சிக்க, “வேண்டாம் டா… என்னை விடுங்க! நீங்க எப்டியாவது போய்டுங்க” என்றுவிட்டாள் சம்யுக்தா கண்ணீரோடு.
“ஏய் கொன்னுடுவேன் உன்னை… வாடி ஒழுங்கா!” குரல் நடுங்க, மிரட்டினான் பிரஷாந்த்.
“முடியல டா என்னால! கொஞ்சமும் நகர முடியல!” கண்ணீர் வழிய தழுதழுத்தவள், “என்னை பத்தி யோசிக்காதீங்க… போய்டுங்க இங்கிருந்து” என்றாள் கெஞ்சலாய்.
“உன்னால முடியும் சம்மு, வாம்மா!” வித்தகன் அவளை ஊக்க, “நீங்க சொன்னீங்க தானே ஜி? மத்தவங்களை பத்தி யோசிக்காம தங்களை காப்பாத்திக்க பார்க்கனும்ன்னு… இங்க நிக்குற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து தானே… தயவுசெஞ்சு போங்க! ஒரு உயிருக்காக மூணு உயிர் வேணா போக வேண்டாம்!” என்றாள் கண்ணீருடன் தெளிவாய்.
“அன்னை தெரசாவா நீ? சும்மா தியாகி மாறி பேசாம எப்படி வெளில வரணும்ன்னு யோசி! மனசை நிலைப்படுத்து” கடுப்பாக பிரஷாந்த் கத்த, “டேய் நான் என்ன வேணுன்னா வரமாட்டேன்னு நிக்குறேன்! என்னால அசையவே முடியல டா” என்று பதிலுக்கு அவளுமே கடுப்படிக்க, அவள் நிலையும் புரியத்தான் செய்தது.
“என் உயிரே போனாலும் சரி, உன்னை விட்டுட்டு இங்கிருந்து நகர மாட்டேன்!” பிரஷாந்த் உறுதியாய் சொல்ல, “ஆமா சம்மு!” என்று உடனே வித்தகனும் சொல்ல, அடுத்த நொடியில்லாமல், இருவரின் கரத்தில் இருந்தும் ரத்தம் சிந்தியது.
“ஹே, ரத்தம் வருது” பவித்ரா அலற, சம்முவை பிடித்திருந்த தங்கள் கரத்தில் விழுந்த வெட்டை விழி தெறிக்க பார்த்தனர் இருவரும். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அடுத்த இடத்தில், மெதுவாய் மிக மெதுவாய், அவர்களின் சதை பிரிந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
வலி பொறுக்காமல், ‘ஆஆஆ’ என வித்தகன் அலற, இரு பெண்களும் உடல் வெடவெடக்க நின்றிருந்தனர். பிரஷாந்துக்கு வலி தாள முடியாமல் போனாலும் சம்முவின் கரத்தை விடவே இல்லை.
சிறிதும் இடைவெளி இன்றி அடுத்த இடத்தில் வெட்டு விழ ஆரம்பிக்க, வித்தகன் பொறுக்க மாட்டாமல் சம்முவிடம் இருந்த கரத்தை விலக்கிக்கொண்டு மடங்கி அமர்ந்தான். வலி பொறுக்காமல் அவன் பல்லைக்கடித்துக்கொண்டு கையை தாங்க, அவன் காயத்தை அழுகையோடு பரிசோதித்தாள் பவித்ரா.
“பிரஷாந்த், வேண்டாம் டா… விட்டுடு என்னை! பாரு ரத்தம் எவ்ளோ வருது” என்று கதறலாய் சம்மு சொல்ல, அவன் தன் பிடியை துளியும் தளர்த்தவில்லை. மாறாக இரு கைகளாலும் பற்றிக்கொண்டான்.
“வேண்டாம் டா” அவள் சொல்லும்போதே, பிரஷாந்தின் கரத்தில் மீண்டும் வெட்டு விழுந்தது. பல்லைக்கடித்துக்கொண்டு அவன் நிற்க, “ஏன்டா இப்டி பண்ற? போய் தொலையேன்!” என்று கத்தினாள்.
“முடியாது டி… இப்போ இல்ல, எப்பவும் உன்னை விட முடியாது, விட மாட்டேன்!” வலியை மறைக்க, கத்தினான் பிரஷாந்த். சம்யுக்தா அதிர்ந்து, பேச்சற்று நின்றாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அசையாது பார்த்துக்கொண்டு வார்த்தைகளின்றி நின்றனர். எத்தனை நொடிகள் அந்நிலை நீடித்ததோ, “டேய், ரத்தம் டா!” என்ற வித்தகனின் அலறல் தான் இருவரையும் மீட்டது.
இதுவரை இல்லாத வண்ணம் வித்தகனின் முகம் கலவரம் பூசி வெளுத்திருக்க, அவன் கண்கள் பிரஷாந்தின் ரத்தம் வடியும் கரத்தை உயிர் துடிக்கப்பார்க்க, அங்கே கீழே வழிந்திருந்த ரத்தம், மெல்ல மேலெழும்பி, மெதுவாய் மிக மெதுவாய் ஐவிரல்கள் போல மாறியது.
உள்ளங்கை விரல்கள் போன்ற அமைப்பில் அந்தரத்தில் பறந்த ரத்தம், மெல்ல உயர்ந்து சம்யுக்தாவிற்க்கும் பிரஷாந்திற்கும் நடுவே நின்றது. ஈரக்குலை நடுங்கியது என்று சொல்வார்களே!? அதை உண்மையில் நால்வரும் உணர்ந்த தருணம் அது!
அவர்களுக்கு நடுவே நின்ற ரத்தக்கரம் மெல்ல பறந்து, மிதந்து சம்யுக்தாவின் பின்னால் போனது. அதையே நால்வரும் கண்களால் தொடர, இப்போது அந்த கரத்தை மீறி ஏதோ தெரிந்தது. அகலமாக பட்டை போன்று காற்றில் ரத்தம் படிய, இப்போது அதற்கு கீழே…
கீழே… கண்கள்! அடுத்தடுத்து நாசி, உதடுகள்! இப்போது ரத்தம் சம்யுக்தாவின் கழுத்தின் பின்னே, ஒரு முகமாய்… அதுவும் ஒரு பெண்ணின் முகமாய் உருபெற்று நின்றது. முகமும், ரத்தக்கரமும் மட்டுமே காற்றில் மிதந்து அவர்கள் கண்களில் தென்ப்பட, எப்படி இத்தனை அதிர்ச்சியை கண்டும், தங்கள் நெஞ்சம் வெடிக்காது போனது என்ற ஆச்சர்யம் கூட நொடி நேரம் அவர்களுக்கு எழுந்திருக்கும்!
இத்தனை நேரம் சம்யுக்தாவை நகராமல் பிடித்திருந்தது அது தான்! அந்த ரத்த உரு தான்!
அந்த உருவம் கூட யாரென்று உணர முடிந்தது.
ராணி மித்ரங்கா ஷரபாயி! பிரஷாந்தின் ரத்தத்தை தன் கரத்தால் அள்ளி முகத்தில் தோய்த்திருக்கிறாள் என்று புரிந்தது. அதையும் மீறி அவள் கரத்தில் சிக்கியிருக்கும் சம்யுக்தா!
இங்கிருந்து போய்விடலாம் என்று இதுவரை இருந்த நம்பிக்கை கூட இப்போது… இந்த நொடி அக்கோர வடிவை கண்டதும் வற்றிப்போய்விட, அப்போது, மீண்டும் பிரஷாந்தின் கரத்தில் வெட்டு விழ ஆரம்பித்தது.
அதைக்கண்டு கதறிய சம்மு, “டேய், என்னை விடுடா… நரம்பு ஏதாவது கட் ஆனா என்னடா செய்வ?” என்றாள் அழுகையாய்.
‘மாட்டேன்’ என தலையசைத்த பிரஷாந்த், “எப்படியும் செத்துடுவோம்! அது உன்னோட செத்ததா போகட்டும்டி” என்றான் உதடு கூட அகண்டு அசையாது!
பிரஷாந்தின் கரத்தில் நீண்டுக்கொண்டிருந்த வெட்டு சட்டென அப்படியே நின்றுப்போனது. அவன் திகைத்து அந்த உருவை பார்க்க, அதில் விஷம புன்னகை கூட உண்டானதோ?! இப்போது எங்கிருந்தோ வேகமாய் பறந்து வந்தது ஒரு கூர் முனை அம்பு!
சரியாய் அது அந்த ரத்தகரத்தில் அடைக்கலம் புக, இப்போது அதன் கூர்முனை மெதுவாய் சம்யுக்தாவின் குரல்வளையை குறிப்பார்த்தது. பதற்றம் என்பதெல்லாம் வெறும் பொருளற்ற சொல் அந்த கணத்தில்! மூவருக்கும் உண்மையில் உயிரே இல்லை. சம்யுக்தாவோ கண்களை இறுக மூடிக்கொண்டு நின்றிருந்தாள்.
பேயிடம் பேச்சுவார்த்தை நடத்த எல்லாம் ஒருவருக்கும் தோன்றவில்லை.
குறிப்பார்த்த அம்பு இப்போது அவள் எச்சில் கூட்டி விழுங்கிய மேடு பள்ளத்தில் மெல்ல தன் முதல் முத்தத்தை பதித்தது. குபுக்கென்று ரத்தம் எட்டிப்பார்த்தது. பின்னால் இருந்த ரத்த முகம் இப்போது முன்னே அவள் கழுத்தருகே நெருங்கியது. சொட்ட ஆரம்பித்த ரத்தத்தை தன் நா’கொண்டு நக்கிக்கொண்டது போலும்!?
அடுத்த நிமிடம் அந்த அம்பு அங்கே இல்லை. எங்கோ தூர சென்றது.
சென்ற வேகத்தை விட பல மடங்கு வேகத்தில், காற்றை கிழிக்கும் பலத்துடன் அது பாய்ந்து வந்து சம்யுக்தாவின் குரல்வளையை கிழிக்க வேகமெடுக்க, மூவரும் ஸ்தம்பித்து பித்துப்பிடித்த நிலையில் நின்றனர். நடப்பதை எப்படி தடுக்க வேண்டும் என்றுக்கூட விளங்காத மரத்த நிலை!
அதிவேகமாய் பாய்ந்து வந்த அவ்வம்பு, அவள் குரல்வளையை தொட்டுக்கொண்டு அது குத்திக்கிழிக்க முயன்ற இறுதி நொடியில், அப்படியே நின்றுப்போனது. சம்யுக்தாவிற்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை கூட உணர்ந்துக்கொள்ள முடியாத அளவு மூவரும் அப்படியே நிற்க, இப்போது எங்கோ ‘தடால்’ என்ற சத்தம்!
அப்பெருஞ்சத்தத்தில் நால்வருமே சுயம் பெற, இப்போது அந்த ஆய்வகத்துக்குள் மெல்ல சூரிய ஒளி எட்டிப்பார்த்தது. ஒளி வந்த திக்கில் பார்த்தவர்களின் கண்களில் அங்கிருந்து வெளியேறுவதற்க்கான வாயில் திறந்திருப்பது தெரிய, ஷணத்தில் உற்சாகம் கொப்பளித்தது.
இன்னமும் சம்முவின் கழுத்தை விட்டு விலகாது நின்றிருந்த அம்பைக்கண்டு அக்கோர முகம் இன்னும் கோரமாக, வன்மமாக, வெறியோடு இருக்க, அப்போது, “க்கோ!(GO)” என்ற குரல் நால்வரின் மத்தியிலும் அழுத்தமாய் கேட்டது.
தங்கள் செவிகளை சேர்ந்த குரல் உண்மையானதா என்று பெரும் ஐயம் வேறு! இன்னமும் அசையமுடியாத சம்முவின் நிலையும் அவர்களை அங்கிருந்து போக விடாது தடுக்க, சட்டென தன்னை இழுத்துப்பிடித்த யாரோ தன்னை விடுவித்ததை போல முன்னோக்கி சென்று விழுந்தாள் சம்யுக்தா.
அவள் விழுந்த மறுகணம் நால்வரும் வினாடி கூட வீணடிக்காது, அங்கிருந்து ஒளி வந்த திக்கில் வாசலை தேடி ஓடினர். முதலில் பிரஷாந்த் தன் தலைக்கு மேலே திறந்திருந்த ஓட்டை வழி எம்பிக்குதித்து வெளியேறினான். சுற்றிலும் மரங்கள், புதர்கள் என்று இருந்தாலும், சூரிய ஒளி அவ்விடத்தை நன்கு வெளிச்சமாக்கி பயமற்றதாக காட்டியது.
மேலே ஏறியவன், கரம் கொடுத்து பெண்கள் இருவரையும் மேலே இழுத்தான். அடுத்து வித்தகனுக்கு அவன் கரம் கொடுக்க, மேலே ஏறிக்கொண்டிருந்தவன் பார்வை அந்த ஆய்வகத்தை ஒருமுறை தீண்டியது.
அங்கே அந்த ரத்தக்கறை படிந்த முகம் இன்னமும் குறையாத வெறியோடு அங்கே துள்ளிக்கொண்டிருக்க, இவன் கண்ணுக்கு புலப்படவில்லை என்றாலும், அந்த உருவின் முன்னே யாரோ நிற்ப்பதை அவனால் உணர முடிந்தது. அந்த கண்ணுக்கு தெரியாத உருவம் தான் தங்களை காப்பாற்றி வெளியே அனுப்பியிருக்கிறது என்பதும் புரிய, அது யாராக இருக்கும் என்ற அவன் சந்தேகத்தை உறுதி செய்யும்படி, அவன் செவிகளில் கேட்டது, “ஹென்றிஈஈஈ…” என்று ஆத்திரத்துடன் அலறும் பெண்ணின் குரல்.
நின்றுவிட்டான் அப்படியே!
மேலே இருந்த பிரஷாந்த், “டேய், வாடா” என்ற கத்தவும் தான் நிலை உணர்ந்து வேக வேகமாய் வெளியே வந்தான் வித்தகன். நால்வரும் வெளியேறிய மறுகணம், அந்த ஓட்டை சட்டென மூடிக்கொண்டு, அதன்மீது சடுதியில் புற்கள் சூழ்ந்துக்கொண்டது.
நால்வரும் வெளியே வந்துவிட்டோம் என்பதை உணரக்கூட நேரம் எடுக்கவில்லை. அங்கிருந்து சென்றால் போதும் என்று ஓட்டம்! தலைத்தெறிக்க ஓட்டம்! கண்மண் தெரியாது வெளிச்சம் கிடைத்த பக்கம் நால்வரும் ஓட,
“சம்யுக்தா!!!!” என்ற குரல்!
ஓடிக்கொண்டிருந்தவள், “அப்பா?” என்ற சொல்லோடு நின்றுவிட்டாள். நால்வரின் முன்னும் மூச்சுவாங்க ஓடி வந்து நின்றனர் சுதர்சனமும், ராஜசேகரும் கூடவே வனத்துறை அதிகாரிகள் சிலரும்!
அவர்களை கண்ணால் கண்டதும் தான் தாங்கள் உயிரோடு தப்பிவிட்டோம் என்பதையே உணர்ந்தனர் நால்வரும்!
பெண்கள் இருவரும் தங்கள் தந்தையை கட்டிக்கொண்டனர்.
“என்னம்மா இது ரத்தம்?” பதறிக்கொண்டு ராஜசேகர் விசாரிக்க, “அப்பா, ப்ரஷு’க்கு ரொம்ப ரத்தம் ப்பா! ஹாஸ்பிடல் போனும்! சீக்கிரம் போலாம் ப்பா” என்று பறந்தாள் சம்யுக்தா.
நால்வரையும் பார்த்தவர்களுக்கு அவர்களின் ஓய்ந்த தோற்றமும், காயங்களும் தெரிய, மேலும் தாமதிக்காமல் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் கிடைத்த செய்தி காவல்துறைக்கு பகிரப்பட்டது.
தேவையான மருத்துவம் பார்க்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நால்வரையும் வந்து விசாரித்தனர் போலீசார்! என்ன நடந்தது? எங்கே சென்றார்கள்? என்ன ஆனது? என்று நால்வரையும் விசாரிக்க, அதற்கு நால்வரும் தாங்கள் பார்த்த, அனுபவித்த விஷயத்தை ஒன்றுவிடாமல் பகிர, விளைவு…
அவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் மனநல ஆலோசனை தீவிரமாக வழங்கப்பட்டது!