“ஐயோ என் தலை தலை தலை….” அலறிக்கொண்டே அரக்கப்பரக்க எழுந்து அமர்ந்தாள் சம்யுக்தா. அவள் கைகள் தன் கழுத்தை பற்றிக்கொண்டிருக்க, “பதறாத பதறாத! உயிரோட தான் இருக்க” என்று ஆரஞ்சு சுளையை மென்றுக்கொண்டே அசுவாரஸ்யமாய் சொன்னான் பிரஷாந்த்.
அவன் சொன்னதும் தன் தலையை தொட்டுப்பார்த்தவள், “உப்ப்… இருக்கு!” என்றாள் நிம்மதியாய். இரண்டு நாட்களாய் நால்வருமே அந்த மருத்துவமனையில் தான் இருந்தனர். ஏதேதோ பரிசோதனைகள் நடந்தது. கடந்த சில நாட்கள் சரியாக உண்ணாதது, நீர் அருந்தாது, தொடர் அதிர்ச்சிகள் எல்லாம் சேர்த்து அவர்களை பலமிழக்க செய்ய, சலைன் ஏற்றப்பட்டது. நால்வரும் தனித்தனியே இருக்க மறுக்க, அவர்களுக்காகவே ஒரு ஜெனரல் வார்டை வி.ஐ.பி வார்டாக மாற்றிக்கொடுத்திருந்தனர்.
மருத்தின் தாக்கத்தில் அடிக்கடி தூங்கி விழும் சம்யுக்தா, எழும்போது, “ஐயோ என் தலை” என்ற அலறலோடு தான் எப்போதும் விழிப்பது. முதலில் பதறியவர்களுக்கு இப்போது போர் அடித்துப்போனது.
தன் பெட்டில் எழுந்து அமர்ந்தபடி பக்கத்து பெட்டில் இருந்த பிரஷாந்திடம், “மணி என்னடா?” என்றாள் சம்யுக்தா.
மொபைலை எடுத்துப்பார்த்தவன், “மூணு மணி!” என்று உரைக்க, “ஏய்…ஈஈ” என்று கத்தியே விட்டாள் சம்மு.
வித்தகன் சத்தமாக சிரித்தான். பவித்ரா தான், “ஈவனிங் சிக்ஸ் ஆச்சு சம்மு” என்றாள் மெல்லிய புன்னகையோடு.
நால்வரிலும் பிரஷாந்துக்கு தான் காயம் அதிகம். கை முழுக்க பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. ஒரு வெட்டு வேறு ஆழமாய் விழுந்திருக்க, தையல் போட்டிருந்தார்கள்.
அப்போது கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தார் சுதர்சனம். கையில் நால்வருக்குமான உணவுப்பை இருந்தது. பொதுவாய் நலம் விசாரித்தவர் மகளின் அருகே சென்று அமர்ந்தார். இந்த இரண்டு நாட்களில் இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ளக்கூட நேரம் வாய்க்கவில்லை. முதலில் மருத்துவர்கள் பிடித்துக்கொள்ள, இப்போது காவலர்கள் பிடித்துக்கொண்டனர் நேரத்தை!
அடுத்து ஒன்றும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தவர், திரும்பி, பிரஷாந்தை பார்த்தார். அவனோ மும்மரமாக சம்முவிடம் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தான். ஒரு பெருமூச்சுடன் மகளிடம் திரும்பியவர், “என்னை மன்னிச்சுடும்மா!” என்றார் வேதனையாய்.
“ப்பா… விடுங்க…! நான் தான் சாரி சொல்லணும். உங்ககிட்ட பொறுமையா பேசாம அவசரப்பட்டு கிளம்பி வந்து தான் நானே பிரச்சனைல மாட்டிக்கிட்டேன்!” என்றாள் பவி வருத்தமாய்.
“இல்லம்மா! நீ காரணம் இல்லாம மறுக்குறன்னு நினைச்சு, உன்னை மிரட்டியாவது வழிக்கு கொண்டு வரணும்ன்னு தப்பா நினைச்சுட்டேன்! என் ஆசையை உன்மேல திணிக்கனும்ன்னு நினைச்சது எவ்ளோ பெரிய தப்பு?” அவரே தன் செய்யல பொறுக்காது ஆதங்கமாய் கேட்டார்.
அதை நியாயப்படுத்தி எதுவும் பேசவில்லை அவள்.
கூடவே, “சாரி பிரஷாந்த், என்னோட அவசரத்தால உனக்கும் கஷ்டம்! உன் அம்மாக்கிட்ட நானே நேர்ல மன்னிப்பு கேட்குறேன்!” என்றார்.
“ஐயோ அங்கிள்… சாரி எல்லாம் எதுக்கு? எனக்கு விருப்பம் இல்லாமையா நீங்க நிச்சயம் செஞ்சீங்க!? விடுங்க” என்றுவிட, அங்கே அவனை சம்மு, “ரொம்ப விருப்பமோ?” என்று முறைத்துக்கொண்டிருந்தாள்.
தந்தை மகளிடையே மௌனம் நீள, “பவி…” என்று மெலிதாய் அழைத்தான் வித்தகன். அவள் திரும்ப, “அப்பா ரொம்ப ஃபீல் பண்றாரு பாரு… கன்வின்ஸ் ஹிம்!” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“ப்பா?” என்று அழைக்க, சுதர்சனம் நிமிரவும், “இப்பவும் ஒரு டான்சர் தான் உங்க மருமகனா வரணும்ன்னு நினைக்குறீங்களா ப்பா?” என்றாள்.
உடனே, “இல்லவே இல்லம்மா! உனக்கு பிடிச்சவனா நீ கைக்காட்டு! எனக்கு சம்மதம் தான்!” என்றார் திடமாய்.
அவர் பதிலில் பவித்ராவின் முகம் அன்றலர்ந்த மலராய் விசாசிக்க, “அப்பா இவர் என் ஃபிரண்ட்! சினிமால பாட்டு எழுதுறாரு, டைரெக்டர் ஆக ட்ரை பண்றாரு!” என்று வித்தகனை கைக்காட்டினாள் பவித்ரா.
அவனைப்பார்த்து புன்னகைத்த சுதர்சனம், “நாலு வார்த்தை பேசக்கூட ரெண்டு நாளுல நேரம் கிடைக்கல தம்பி! உங்க பேரென்ன?” என்று விசாரிக்க,
பவித்ரா, “வித்த…” என்று ஆரம்பிக்கும்போதே, “ஸ்ரீகுமார்” என்று சொல்லியிருந்தான் வித்தகன். அவனை திகைப்பாய் திரும்பி பவித்ரா பார்க்க, அவனோ குறும்பாய் சிரித்துக்கொண்டிருந்தான்.
பெயரைக்கூட தெரிந்துக்கொள்ளாமல் போனோமே! என்ற சுணக்கத்தோடு பவி உம்மென்று இருக்க, “அதுக்கென்ன அங்கிள்? காலம் முழுக்க நேரம் இருக்கு… பொறுமையா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்குறோம்!” என்றான் புன்னகையோடு!
ஒரு நொடி அதிர்ந்தார் சுதர்சனம்! என்ன சொல்கிறான் இவன் என்று!?
ஆனால், அவன் பேச்சிற்கு மகள் முகத்தில் உதித்த நாணம் அவரை நிதானிக்க வைத்தது. விஷயத்தை விளங்க வைத்தது. மறுத்து பேசவில்லை. மறுக்கத்தோன்றவில்லை. கொஞ்சமே கொஞ்சம் மனம் சுணங்கினாலும், அதை புறம்தள்ளி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட, அந்த தெளிவு அவர் முகத்தில் ஒரு மலர்ந்த புன்னகையை தெளித்தது.
இப்போது கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள் காவலர்கள்.
பொதுவாய் நால்வரிடமும் நலம் விசாரித்தவர்கள், மீண்டும் என்ன நடந்தது என்று ஒருமுறை விசாரிக்க, அப்போது மருத்துவரோடு உள்ளே நுழைந்தார் ராஜசேகர்.
சம்யுக்தா அப்போது தான், “அந்த வீட்ல டைமே ஓடாது சார்… மூணு மணிலையே தான் இருக்கும் தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டிருக்க, அவளை நோக்கி வந்துக்கொண்டிருந்த மருத்துவர் அப்படியே ஜெர்க்காகி நின்றுவிட்டார்.
“ரெண்டு நாளுக்கு முன்ன சொன்ன அதே ஓடாத கடிகாரமா?” என்று அவர் திகைத்து கேட்க, கூட வந்த நர்ஸோ, “அதே தான் டாக்டர். ஓடாத கடிகாரம், ஆளை முழுங்குற கண்ணாடி, காத்துல பறக்குற ரத்தம்ன்னு சொன்னதையே சொல்லுது இந்த பொண்ணு!” என்று சொல்ல,
“எல்லாருக்கும் எத்தனை செஷன் கவுன்சிலிங் கொடுத்தீங்க?” என்றார்.
“மூணு சார்!” என்றதும், “இந்த பொண்ணுக்கு மட்டும் ஆறு தடவையா குடுங்க, நான் அப்பறம் வந்து பாக்குறேன்!” என்று ஓடியே விட்டார். அதைக்கேட்ட சம்மு புசுபுசுவென முறைக்க, அவள் சகாக்கள் மூவரும் கண்ணில் நீர் வர சிரித்து அவளை இன்னமும் வெறுப்பேற்றினார்.
“போலிஸ் சார்… நான் சொன்னா யாருமே நம்ப மாட்டேங்குறீங்கள்ள? நீங்களே நைட்டு மூணு மணிக்கு அந்த இடத்துக்கு போய் பாருங்க. நான் சொன்னதெல்லாம் உண்மையா பொய்யான்னு உங்களுக்கே புரியும்” என்றாள் சவாலாய்.
மெலிதாய் சிரித்த இன்ஸ்பெக்டரும், “சரிதான்! இன்னைக்கு நைட்டு நானே அங்க போய், அந்த வெள்ளைக்காரன் ராணிக்கு கிப்ட்’டா குடுத்தான்னு சொன்னியே, வைர கிரீடம்! அதை தேடி எடுத்துட்டு வந்து உனக்கே கிப்ட்’டா தரேன்! என்ன?” என்று நக்கல் தொனியில் சீரியசாய் சொல்ல,
“அப்ப்…பாஆஆஆ” என்று சிணுங்கினாள் சம்யுக்தா.
சிரித்த ராஜசேகரும், “விடுங்க இன்ஸ்பெக்டர், இன்னும் ஷாக் போகல போல! பொறுமையா பேசிப்போம்!” என்றதும் இன்னமும் தான் கோபம் ஏறியது அவளுக்கு.
முதலில் உள்ளதை உள்ளபடி சொன்னபோது ஒருவரும் நம்பவில்லை என்றதும், சொல்வதையே நிறுத்திக்கொண்டனர் அந்த மூவரும். சம்யுக்தா மட்டும் தான் நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லை என்று போராடிக்கொண்டிருக்கிறாள்.
அவர்களுக்கோ காட்டை சல்லடை போட்டு தேடியும் கிட்டாதவர்கள் திடீரென சிக்க, அதிலும் காயங்களோடு சிக்க, வேறெதுவும் தவறாக, கடத்தல், தாக்குதல் போல நடந்திருக்குமோ என்று ஐயம்! பெண்கள் இருவருமே பெரிய இடம் அல்லவா!?
அந்த இன்ஸ்பெக்டர் போகும் வரை உம்மென்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அவள் இருக்க, “விடுடா பாப்பா! அவங்க நம்பலைன்னா என்ன இப்போ?” என்று சிகை வருடினார் ராஜசேகர்.
“நீங்கக்கூட தானே நம்பல…போங்க!” என்று அவள் முறுக்கிக்கொள்ள, “நம்புறேன் தங்கம்! அப்பா நம்பாம இருப்பேனா!?” என்று செல்லம் கொஞ்சினார்.
பார்த்துக்கொண்டிருந்த பிரஷாந்துக்கு, ‘இப்படியெல்லாம் கொஞ்சி கொஞ்சி வளருங்க… பின்னால இதுங்களை வச்சு கஷ்டப்படுறது நாங்க தானே!?’ என்று கடுப்பு எழாமல் இல்லை.
இரண்டு நாளில் பெரிதாய் பேசிக்கொள்ள முடியவில்லை என்றாலும் ராஜசேகர் கண்ணில் இருந்து எதுவும் தப்பவில்லை. மகள் விரலில் நிச்சய மோதிரம் இல்லாமல் இருந்ததை கவனித்ததுமே அவர் அவயங்கள் அலர்ட் ஆகின.
வித்தகனும் பவித்ராவும் இணக்கமாய் பேசிக்கொள்வதை விட, தன் மகள் அனைத்திருக்கும் பிரஷாந்தை சார்ந்து இருப்பது, அவனிடமே ஒண்டிக்கொண்டு நேரம் கடத்துவது எல்லாம் புரிய, அவன் ஜாதகத்தை சில மணிநேரங்களில் அலசி ஆராய்ந்துவிட்டார்.
தனிப்பட்ட முறையில் அவனை பற்றிய விவரங்கள் பூரண திருப்தியே அவருக்கு! ஆனால், அவனுக்கு நடந்த நிச்சயதார்த்தம் மட்டுமே உறுத்திக்கொண்டிருக்க, இதோ இப்போது சுதர்சனம் பேச்சுவாக்கில், வித்தகனை ‘மாப்பிள்ளை’ என்று விளித்தலில், அதுவும் மறைந்திருந்தது.
“அப்பறம் சம்மு?” என்று அவர் ஆரம்பிக்க, ஆர்வமாய் தந்தையை பார்த்தாள் சம்யுக்தா.
“கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்ன்னு மாப்பிள்ளையை கேட்டு சொல்லு” என்றுவிட, திக்கென்றது அவளுக்கு. பிரஷாந்தும் கலவரமாய் பார்க்க, “அங்கிள்…” என்று ஆரம்பித்தான் வித்தகன்.
திரும்பி அவனை பார்த்தவர், “சீக்கிரம் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணு ஸ்ரீ… சம்மு கல்யாணம் முடிஞ்சதும் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றார். அடுத்த வார்த்தைக்கூட வரவில்லை வித்தகனுக்கு. எப்படி இதை அவரிடம் சொல்வது என அவன் தயங்க, சொல்லிவிடலாம் என்ற முடிவில் சம்மு வாய் திறக்க,
“ஆனா ஒரு கண்டிஷன்!” என்று மற்றவரை பேசவிடாது நிறுத்தினார் ராஜசேகர்.
கேள்வியாய் பார்த்தவனிடம், “நீ பண்ணப்போற படத்துல வர அத்தனை பாட்டுக்கும் கொரியோக்ராபி மட்டும் என் மாப்பிள்ளை தான் பண்ணுவாரு!” என்று ஸ்ட்ரிக்ட்டாய் சொல்ல, அவர் சொன்னதை கிரகிக்கவே சில நொடிகள் எடுத்தது வித்தகனுக்கு.
புரிந்ததும் சம்மு தாவி வந்து கட்டிக்கொண்டாள் தந்தையை.
“ஹே பாத்து” என்றவரும் மகளை கட்டிக்கொள்ள, பிரஷாந்த் வெட்கமும் ஆனந்தமுமாய் கலந்துக்கட்டி ஏதோ ஒரு ரியாக்ஷனை காட்டிக்கொண்டிருந்தான்.
வித்தகன் தான் வேண்டும் என்றபோதும் அவர் மறுக்கவில்லை. பிரஷாந்த் தான் வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியபோதும் அவர் தடுக்கவில்லை. உலகில் ஆங்காங்கே வாழும் சில வினோத தந்தைகளில் அவரும் ஒருவர்!
அதன்பின் என்ன? பெரியவர்கள் நகர்ந்ததும் ஜோடிகளின் காதல் பேச்சுக்கள் ஆரம்பித்தன.
பிரஷாந்திடம் பேசிக்கொண்டே எதேச்சையாய் வாசல் பக்கம் பார்த்த சம்முவின் கண்கள் லேசாக சுருங்கி, விரிந்தது.
“ஏய் குழந்தைடா!” விழி அகற்றாது பார்த்துக்கொண்டே திகைப்பாய் அவள் சொல்ல, “அதெல்லாம் முடியாது போடி! கை கட்டு பிரிக்கணும். நார்மல் ஆகணும்! அதுக்கு எப்படியும் ஒரு மாசம் ஆகும்! அதுக்கு பிறகு தான் குழந்தை எல்லாம்” என்று சீரியசாய் சொன்னவனோ, “வேணுன்னா… அதுவரைக்கும் குஸ்கா சாப்பிடலாம்” என்று கண்ணாடிக்க, இப்போது சம்மு தான் பார்த்ததையே மறந்து அவனை தலையணை கொண்டு மொத்த ஆரம்பித்தாள்.
“என்ன பேச்சு பேசுற நீ!?” திட்டிக்கொண்டே மொத்த, “நீ அடிச்சுட்டே இருடி! அங்க பாரு ஒருத்தன் ஒரே பெட்’ல இடிச்சுக்கிட்டு உட்காந்து கொஞ்சிட்டு இருக்கான்!” என்றதும் எதிரே பார்க்க, அங்கே வித்தகனும் பவித்ராவும் வேறொரு லோகத்தில் சுவாரஸ்யமாய் ஒட்டி உரசிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
சம்மு அதை ஆச்சர்யமாய் பார்த்து, “ஜி’க்குள்ள இப்படி ஒரு ரெமோ இருப்பார்ன்னு தெரியாம போச்சு டா!” என்றாள்.
“எனக்குள்ள கூட தான் பத்து ரெமோ பப்பரப்பேன்னு படுத்துருக்கான்! ஹும்! பார்க்க தான் ஆளில்லை!” என்று சலிக்க, அந்த ‘டாம் அண்ட் ஜெர்ரி’ ஜோடியின் சண்டை அங்கே முடிவில்லாமல் தொடர்ந்தது.
கொஞ்சி கொஞ்சி காதல் செய்வது ஒரு ரகம்!
மிஞ்சி மிஞ்சி ஊடலில் காதல் செய்வது இன்னொரு ரகம்!
இரண்டு ஜோடிகளையும் பார்த்து திருப்தியாய் அங்கிருந்து மெல்ல நழுவி சென்றது அது!
நடையிலேயே ஒரு துள்ளல்!
வாயிலோ, ‘ராஜா கையை வச்சா… அது ராங்கா போனதில்ல…’ என்று குஷியாய் ஒரு பாடல்!
மருத்துவமனை வளாகம் விட்டு வெளியே இருளில் வந்து ஒதுங்கி நின்றது அந்த குழந்தை!
ஆம்…குழந்தை!
நீர்க்குமிழியில் இருந்து தப்பி வந்து மனிதப்பெண்ணின் உடலில் விழுந்து கருவாகி பிறந்து, பிறந்ததும் எழுந்து ஓடி, மீண்டும் தன் நீர்க்குமிழி உலகில் நுழைந்த அந்த குழந்தை!
அது தன் கழுத்தில் இருந்த சங்கிலியை கையில் பற்றிக்கொண்டு ஏதோ முணுமுணுக்க, அதன் உருவம் யார் கண்ணுக்கும் காணக்கிட்டாத அளவு புள்ளியிலும் புள்ளியாய் மாறியது. மறுநொடி அங்கிருந்து மறைந்து, தன்னுடைய நீர்க்குமிழி உலகிற்குள் நுழைந்தது.
அவனுக்காக அங்கே ஆயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டிருந்தனர். அவன் செய்து முடித்த காரியம் அவர்களை எட்டியிருக்க, ஸ்டைலாய் கெத்தாய் நடந்துவருபவனை வாயை பிளந்து, ‘யாரு சாமி இவன்!?’ என்ற வியப்பும் அதிர்ச்சியும் போட்டிப்போட பார்த்துக்கொண்டிருந்தனர்.
பூக்களை இருக்கைகளாய்க்கொண்டு அனைவரும் அமர்ந்திருக்க, அத்தனை பேரையும் தாண்டிக்கொண்டு செம்ம கெத்தாய் நடந்தது அந்த குழந்தை. அவனை வரவேற்கும் வண்ணம் தங்கள் மலரில் இருந்து எழுந்து நின்றனர், தலைவனும் தலைவியும்! கூடவே அந்த இன்னொரு குழந்தையும்! அதாவது அன்று அவனுக்கு போட்டியாய் இருந்த குழந்தை. வருபவனைக்கண்டு அன்று போல துவேஷம் இல்லை அவன் முகத்தில், மாறாக வியப்பு தான்!
தங்களை நோக்கி நடந்து வரும் மகனைக்கண்டு உணர்ச்சிவசப்பட்டார் தலைவி! ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்’ நிலை தான் அவருக்கு. அதே தான் தலைவனுக்கும் என்றாலும், அதை தன் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை அவர்.
அன்று அவனுக்கு ‘முடி’ கொடுக்கக்கூடாது என்று சொன்னவர்களை எல்லாம் ‘பார்த்தாயா என் மகனை!’ என்று இறுமாப்புடன் கம்பீரமாய் பார்த்து நின்றார்.
வந்தவன் நேராக தன் அன்னையை தேடி சென்று அணைத்துக்கொண்டான். அவனை அவர் உச்சிமுகர, அடுத்ததாய் தந்தையை நெருங்கியவன் தாள் பணிந்தான். அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்தவர், “என் மகன்! நான் வைத்த சோதனையில் வென்று வந்திருக்கிறான்! இப்போது என்ன சொல்கிறீர்?” என்று கூட்டத்தை பார்த்து கேட்டார்.
உடனே சிறு சலசலப்பு!
அவனை முன்பு வேண்டாம் என்றவர்களுக்கு கூட இப்போது ‘வேண்டாம்’ என்று சொல்ல முடியவில்லை என்றாலும், அதை பொதுவில் ஒப்புக்கொள்ள சற்றே தன்மானம் தடுத்தது என்னவோ உண்மை தான்.
அந்த தன்மான தலைகளில் ஒன்று, “என்ன இருந்தாலும், ஜோடிகளை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக காதல் அணுக்களை திணிப்பது எல்லாம் அத்தனை ஏற்ப்புடையதாக இல்லை” என்றார் முகத்தை சுளித்து.
மற்றவர் பேசும்முன்னே முந்திய தலைவி, “நீங்கள் என் மகனுக்கு இறக்கைகளை கொடுத்திருந்தால் அவன் நம்மை போலவே எல்லா இடங்களுக்கும் எளிதில் சென்று தன் வேலையை செவ்வனே செய்திருப்பான். இருப்பினும் எப்படியோ சமயோஜிதமாக யோசித்து நால்வரையும் ஓரிடத்தில் வைத்து நீங்கள் கொடுத்த சோதனையில் வெற்றி கண்டான் தானே!?” என்று வக்காலத்து வாங்கினார்.
“ஆம்… இருந்தாலும்…!” என்று இழுக்க, “எனக்கு ஒன்று சொல்லுங்கள்… இதுவரை நாம் ஒருவருக்கு கொடுத்த காதல் அணுக்களை யாராவது எப்போதாவது மாற்றியமைத்திருக்கிறாரா? அல்லது அப்படி செய்வது தான் சாத்தியமா? நம் தேசத்தின் ‘இஷ்க்புங்கா’ மலரது தேனின் வலிமை உணர்ந்தவர் தானே நீங்கள் எல்லோரும்?” என்றார் தலைவி கூட்டத்திடம்.
அவரை ஒத்த எண்ணம் கொண்டவர்களில் சிலர் ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்ள, “மானுட ஜோடிகளிடம் நாம் நமது ‘இஷ்புங்கா’ மலரின் தேனை தெளித்துவிட்டால், அவர்களுக்குள் காதல் அணுக்கள் பெருக்கெடுக்கும்! அத்தேனின் ஆயிட்காலமாக நாம் கணித்து வைத்திருப்பதற்கு முன்னால் அது செயலிழந்துப்போக வாய்ப்பே இல்லையே! அப்படிப்பட்ட செய்தற்க்கரிய காரியத்தை எந்தவித அபார சக்திகளும் இல்லாமலே நம் இளவரசன் செய்து முடித்திருக்கிறாரே!” என்று பாராட்டுகள் ஆரம்பித்தது. தலைவியின் முகம் இப்போது பெருமையில் மிளிர்ந்தது.
“சோதனையில் வென்றால் அரசப்பதவி என்று எல்லோரும் ஒப்புக்கொண்டு தானே இவனை அனுப்பிவைத்தோம்!? இப்போது சோதனையில் வென்று வந்து நிற்கிறான். வாக்கு தவறுவது நம் தேசக்குற்றம் என்கையில் இப்போது என்ன செய்வதாக உத்தேசம்!?” அமைதியான குரலில் வினவினார் தலைவர்.
முழுமனதாய் சரியென்று சொல்ல, இன்னமும் சிலருக்கு மனதில்லை என்றாலும் பெரும்பான்மையான வாக்குகள் ‘முடி’ கொடுக்க சம்மதிக்க, அக்கணமே பதவியேற்ப்பு விழா அமோகமாய் நடைபெற்றது.
தலைவனும் தலைவியும் தங்கள் சக்தியில் இருந்து ஒருபங்கை பிரித்து மிகமிக சந்தோஷமாய் தங்கள் மகனுக்கு கொடுத்தனர். உடலில் சக்திகள் உயிர்ப்பெற்றதுமே தன்னால் அவன் முதுகில் வளர்ந்தது இதய வடிவிலான இறக்கைகள். அவன் உடலே இப்போது பல்லாயிரம் மின்மினி பூச்சிகள் ஒட்டிக்கொண்டதை போல மினுமினுக்க, அந்த கூட்டத்தின் நடுவே அவன் மட்டும் சூரியன் போல பிரகாசித்தான். அவனைக்கண்டவர்களுக்கு தன்னால் ‘இவன் நம் தலைவன்’ என்ற எண்ணம் உதித்தது.
கூட்டம் மொத்தமும் மலர்களை அவன்மீது தூவி தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரமாய் வெளிப்படுத்த, அவன் கரத்தில் அம்புகள் நிறைந்த குடுவை கொடுக்கப்பட்டது. அதை பத்திரமாய் பெற்றுக்கொண்டவன் புன்னகைக்க, அதை அவன் முதுகில் அணிவித்தான் அவன் தம்பி.
அடுத்து நீட்டப்பட்ட ஒரு குடுவையை மிகமிக பத்திரமாய் பொக்கிஷமாய் பெற்றுக்கொண்டான். அது ‘இஷ்க்புங்கா’ மலரின் தேன்! அம்பை தேனில் தோய்த்து அதை யார்மீது எய்கிறானோ அவர் காதலில் ‘தொப்பகடீர்’ என்று விழுந்தே தீருவார்கள்.
அவன் சிரத்தில் அவர்கள் தேசமலரால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்பட, கம்பீரமாய் தன் இருக்கையில் அமர்ந்தவன்,
“க்யூபிட் உலகில் வாழும் காதல் தூதர்களின் புதிய அரசனாகிய நான்…!” என்று தன் பதவியேற்ப்பு சாசனத்தை சொல்ல ஆரம்பித்தான்.
“நம் தேசத்தின் வழிமுறைகளை மீறாது, நடைமுறைகளை மாற்றாது, நம் தேசமலரான ‘இஷ்க்புங்கா’வை என் இறக்கையென கவனமாய் பாதுகாத்து, மானிடர்களிடன் காதல் பெருக்கெடுக்க வைப்பேன் என்று நம் தேவன் மன்மதன் மீது ஆணையாக உளமார உறுதியளிக்கிறேன்” என்றான்.
அவன் உரை முடிந்ததும் வானை பிளக்கும் அளவு கரகோஷம்!!!
அதோடு விட்டானா அவன்?
“வாழ்க்கைல யார் ஃபர்ஸ்ட்டு முன்னாடி போறாங்கன்னு முக்கியம் இல்ல… லாஸ்ட்ல யார் ஃபர்ஸ்ட் வராங்குறது தான் முக்கியம்!
நான் வருவேன் டா… சும்மா ஸ்டைலா… கெத்தா!!!” என்று பஞ்ச் பேச,
“கடவுளே! இவனிடம் இருந்து மனித வாடையை மட்டும் எப்படியேனும் எடுத்துவிடுங்களேன்!” என்று தலை மேல் கும்பிடு போட்டான் ஒருவன். வாய்க்கொள்ளா சிரிப்பு அலையலையாய் ஓடியது அக்கூட்டத்தில்.
ஏற்கனவே காதல் அணுக்கள் பாய்ச்சப்பட்ட இரு ஜோடிகளின் காதலை முறித்து ஜோடி மாற்ற வேண்டும் என்று அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த சோதனையை அசால்ட்டாக முடித்து சாதனை செய்ததன் பலனாய், அந்த கியூபிட் உலகின் புதிய அரசனாக மாறியது அந்த குழந்தை!!!
இனி என்ன? ஒரே அம்(ன்)பு மழை தான்…!
நள்ளிரவு!!!
நன்மங்கலம் காட்டுப்பகுதி!!!
“சார்… அந்த பொண்ணு என்னவோ லூசு மாறி சொல்லிட்டு இருக்கு, அதைப்போய் நம்பி இவ்ளோ தூரம் வந்துட்டு இருக்கோம்?” என்று சலித்துக்கொண்டான் அந்த ஏட்டு.
“ஒருவேளை உண்மையா இருந்தா? வைர கிரீடமாம்யா! இருநூறு வருஷ பழசுன்னா இப்போ அதுக்கு என்ன மதிப்பு தெரியுமா? சும்மா வா! கிடைச்சா நம்ம வம்சமே செட்டில் ஆகிடும்” என்றான் அந்த இன்ஸ்பெக்டர். சம்யுக்தாவிடம் விசாரணை செய்த அதே இன்ஸ்பெக்டர்.
சற்று தூர நடையில் இருவருமே அதிர்ந்து நிற்கும்படி புது பொலிவுடன் வண்ண விளக்குகள் மின்ன காட்சி தந்தது அது.
‘எழவு வீடு’
வாயை பிளந்தவர்கள் வேகவேகமாய் உள்ளே ஓடினர். திறந்தே கிடந்த கதவு, ஜொலிக்கும் உள் அலங்காரம் இதில் எல்லாம் அவர்கள் மதிமயங்கி நின்ற கணம், வாசல் கதவு படாரென அடைத்துக்கொண்டது.
கூடவே, கடிகாரம் ‘டங்…டங்…’ என்று ஒலியெழுப்ப, அது காட்டிய ‘மூன்று மணி’யை இருவரும் திகிலுடன் வெறித்தபோது கேட்டது அந்த குரல்…
‘வெல்கம்… வெல்கம் டு எ லவ் வீடு!’
அது ஆணின் குரல் அல்ல… ஹென்றியின் குரல் அல்ல…!
பெண்ணின் குரல்… ராணி மித்ரங்கா ஷரபாயின் குரல்!!!
தப்பிக்க வாய்ப்பே இல்லை…!
-முடிந்தது-
(முழு நீள காதல் கதைகளை மட்டுமே இதுவரை எழுதியிருந்த எனது புதிய முயற்சியே இது!
இக்கதையை பற்றிய உங்களது மேலான கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன!