தன் மொபைலில் ஏதோ ஒரு வீடியோவை வெகு தீவிரமாக தேடிக்கொண்டிருந்தான் பிரஷாந்த். அவன் பிரபுதேவா முன்னிலையில் ஆடிய நடனம் ஒன்றுக்கு அவர் எழுந்து நின்று கை தட்டியதாக அவன் சொல்ல, சம்யுக்தா அவனை நக்கல் செய்திருந்தாள்.
‘காசா பணமா… அடிச்சு விடு அடிச்சு விடு!’ என்றவள் சொல்ல, அவனும் ‘ஆயா சத்தியமா உண்மை!’ என்று வாதாட, அவள் நம்ப மறுக்க, ‘என்கிட்ட கிணறு வெட்டுன ரசீது இருக்கு’ என்ற கதையாய், அவன் தன் மொபைலில் வைத்திருந்த அந்த நடன வீடியோவை புதைகுழியில் கையை விட்டவன் போல துளாவிக்கொண்டிருக்க, சம்யுக்தா நன்றாக சாய்ந்து அமர்ந்து கடைக்கண்ணால் மறுப்பக்கம் இருந்தவனை நோட்டம் விட்டாள்.
வித்தகன் லேசான புன்னகையுடன் இருக்க, வழமைப்போல அதை ரசித்தவளின் செவிகளில் விழுந்தது, ‘அவ மேல எவ்ளோ லவ் இருந்துருந்தா நாலு வருஷம் ஆகி கூட விடாம போய் ஓகே சொல்லிருப்பீங்க!?’ என்ற பவியின் கேள்வி.
என்னதான் அவர்கள் மெல்லிய குரலில் பேசினாலும், அந்த நிசப்தமான இடத்தில், கைக்கெட்டும் தொலைவில் இருந்தவர்களின் பேச்சு செவி சேராமல் போய்விடுமா என்ன?!
அதிலும், வித்தகனின் பதில் என்னவாக இருக்கும் என்று அறிய, தன் செவிகளை தீட்டி வைத்திருந்த சம்யுக்தாவின் காதுகளில் ஒரு ஒற்று கூட தவறாமல் சென்று சேர, ஸ்மரணை இழந்தவளாய் சிலை போன்று சமைந்துவிட்டாள்.
அவள் தோழிகள் கூட கேட்டனர், எப்படி இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர் உன்னிடம் காதலை சொன்னார்? என்று!!! ஏன்? தந்தை கூட கேட்டாரே! தொடர்பே இல்லாமல் இருந்தவன், எப்படி திடீரென முளைத்தான் என்று!?
அப்போதெல்லாம் அதை ஆராய தோன்றவில்லையே அவளுக்கு!
ஆனால், அவன் வாயாலேயே இப்போது சொன்னதும்!? அதிலும், காதல் இருக்கிறதா? என்ற கேள்விக்கு அவன் சொன்ன ‘தெரியல’ என்ற வார்த்தை அவளை உள்ளுக்குள் வதைத்தது.
அவன் காதலை சொல்லி நான்கே மாதங்கள் தான் ஆகிறது! அதற்குள் திருமணமே உறுதி செய்யும் அளவுக்கு வேகம் காட்டியது தான் தானே!? அவனாக எதுவுமே செய்யவில்லையே! ஒருவன் தன்னை உண்மையாக நேசிக்கிறானா? இல்லையா? என்பதை கூட உணராத அளவு அறிவிலியா நான்!?
அத்தனையும் தாண்டி அவன் இப்படி ஒரு செயலை செய்திருப்பானா? அவன் தன்னை ஏமாற்றி இருப்பானா? அவனால் அது முடியுமா?
தன் காதல் பொய்த்ததை விட, அவன் மீதான அவள் எண்ணம் பொய்த்துப்போனதை தான் அவளால் ஜீரணிக்க இயலவில்லை.
“இயா! காட் இட்! இங்க பாரு சம்ஸு! இந்த வீடியோ தான்!” என்று அந்த காணொளியை அவன் உற்சாகமாய் அவளிடம் காட்ட, கருவிழி கூட அசையாது அமர்ந்திருந்தவளை உலுக்கினான் பிரஷாந்த்.
“என்ன? நம்ப முடிலையா? ஷாக்ல அப்படியே உறைஞ்சுப்போய்ட்ட போல!” என்றவன், அவள் தோளை சுற்றி கைப்போட்டு, இருகைகளாலும் மொபைலை நோண்டினான். எந்தவித கல்மிஷமும் இல்லாத இயல்பான தொடுகை! அவளுக்கு வெகு நெருக்கமாய் இருந்த அவன் தோள் மீது முகத்தை அழுத்திக்கொண்டாள் சம்யுக்தா.
“என்ன சம்ஸு… நான் ஆதாரம் காட்டுனதும் மூஞ்ச எங்க வைக்கிறதுன்னு தெரியலையா? விடு விடு! நான் தானே!” என்று கிண்டலாய் சொல்லிக்கொண்டே மொபைலில் கண் பதித்திருந்தான்.
அப்போது, ‘டங்’கென்ற சத்தம் மும்முறை அந்த வீட்டையே அதிர வைத்தது. தன்னியல்பாய் உடல் தூக்கிப்போட, அந்த சத்தம் அடங்கியதுமே, “வெல்கம்… வெல்கம் டு எ லவ் வீடு!” என்று கட்டை குரலில் சத்தமாய் பிரஷாந்த் சொல்ல, அவனை தொடர்ந்து கேட்ட அந்த கொடூர குரல் இப்போது அவர்களுக்கு பயத்தை கொடுப்பதற்கு பதில் சிரிப்பை தான் கொடுத்தது.
“ஏன்டா?” வித்தகன் சிரித்துக்கொண்டே வினவ, “பின்ன? டிவி விளம்பரம் மாறி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருந்தா!?” என்று கேட்டவனை கண்டு துளி பயமும் இன்றி சிரித்தனர் மூவரும்.
***
நிவாஸ் கமிஷ்னர் அலுவலக வாயிலில் நின்றிருந்தான். சற்று நேரம் ரகுனந்தபூபதியிடம் பேசியதற்க்கே அவனுக்கு தலை கிறுகிறுவென வந்துவிட்டது. அவன் விட்டால் போதுமென, கிளம்பி வெளியே வந்து நின்றுவிட்டான்.
ரகுனந்தபூபதி நேராக தனது காரை நோக்கி வந்தான். அவன் டிரைவர் நடேசன் காவலர் சீருடையில் அவனுக்காக காத்திருந்தார். ராஜசேகர் வேறுப்பக்கம் போக, “ஒரே இடத்துக்கு தானே போகப்போறோம்? எதுக்கு தனித்தனியா? கம் வித் மீ!” என்றவன்,
ஷைலஜாவிற்கு அந்த அமைச்சர் மகன் கொலை வழக்கிற்கான சில வேலைகளை கொடுத்து அனுப்பியிருந்தான்.
கார் கிளம்பி சிறிது நேரத்தில் எல்லாம், காரின் மியுசிக் சிஸ்டம் ஒலிக்க ஆரம்பித்தது. கூடவே அவன் குரலும்!
நேரம் போகப்போக, பாதி வழியில் குதித்துவிட்டால் என்ன என்றே தோன்றிவிட்டது ராஜசேகருக்கு! பல்லைக்கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
சுதர்சனுக்கு மண்டை வலி கபாலத்தை பிளந்தது. நிவாஸுக்கோ ஒரு படம் அமைய இருக்கும் நேரத்தில் இப்படி போலிஸ் கேஸ் என்றால், தன் கரியரே கருகிவிடுமே என்ற கலக்கம்!
ஒரு வழியாய் அவர்கள் வர இருந்த காட்டுப்பகுதியை அடைந்தபோது, “கஜிறாரே! கஜிறாரே! ராரே ராரே லேலா” என்று பாடல் ஓட, பூபதியும் உடன் ஆட,
“சார்… வந்துட்டோம்!” என்றார் நடேசன். பாடல் நின்றுவிட, சைட் மிரர் வழியே சுற்றிலும் பார்த்தான் பூபதி.
“மிஸ்டர் ராஜசேகர்? எனக்கொரு டவுட்” என்று பூபதி கேட்கவும், “சொல்லுங்க சார்!” என்று ஆர்வமாய் முன்னே நீண்டார் அவர்.
“புருஷன், பொண்டாட்டி கூடவே மாமனாரும் சேர்ந்து, ‘கஜிறாரே கஜிறாரே’ன்னு ஹிந்தில என்னா கும்முன்னு ஆடுறாங்க! ஏன் நம்ம தமிழ்ல இந்த மாதிரி முற்ப்போக்கு சிந்தனை எல்லாம் இன்னும் வராமையே இருக்கு!? இதைப்பத்தி நடிகர் சங்கத்துக்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம்ன்னு இருக்கேன்! ஆஸ் எ ப்ரோடியுசரா நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்களா?” என்றான் தீவிரமாய்.
முன்னால் நீண்ட அவர் உடல் தன்னைப்போல பின்னே நகர்ந்து சீட்டில் சாய்ந்தது. அவரிடம் இருந்து பதில் இல்லாமல் போனதும், “ஒரு டான்ஸ் மாஸ்டரா நீங்க கூட எனக்கு சப்போர்ட் பண்ணலாம் மிஸ்டர் சுதர்சன்!” என்று சொல்ல, அவரும் வாயடைத்து அமர்ந்திருந்தார்.
அவர்களை கண்டுக்கொள்ளாதவன், தானே கதவை திறந்து வெளியேற, கூலர்ஸ் அணிந்த அவன் கண்கள் சுற்றிலும் அளவெடுத்தது. அவன் கைகள் இயல்பாய் டக் இன் செய்திருந்த பேன்ட்டை அட்ஜஸ்ட் செய்ய, அவன் முன் வந்து நின்று சல்யுட் வைத்தார் ஒரு பாரஸ்ட் கார்ட்.
வெகு சுருக்கமாய் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தவன், துணைக்கு வருகிறேன் என்றவர்களை மறுத்துவிட்டு, தன்னுடன் வந்தவர்களோடு உள்ளே சென்றான்.
காடு நீண்டது… நீண்டது… நீண்டுக்கொண்டே இருந்தது.
“இன்னும் எவ்ளோ தூரம் தான் போகணும் நடேசன்!?” பூபதி ஓரிடத்தில் நின்றுவிட்டு கேட்க, அவர் அந்த நிவாஸை பார்க்க, அவன் தன்னிடம் இருந்த மேப் கொண்டு, “இன்னும் 500 மீட்டர் போகணும் சார்!” என்று சொல்ல,
“யோவ் என்னையா இது? வந்ததுல இருந்து ஒரே கேஸ் பின்னாடி சுத்தி சுத்தி போர் அடிக்குதேன்னு உங்களோட இங்க வந்தா… காலைல நான் தின்ன ஐஞ்சு முட்டையும் நடந்தே செரிச்சுடும் போலயே!” என்று தலையை கோதிக்கொண்டான் அலுப்பாய்.
“அவ்ளோதான் சார்… கிட்ட வந்துட்டோம்!” என்ற நிவாஸுடன் சேர்ந்து நடேசனும் சொல்ல, முனகிக்கொண்டே மேற்கொண்டு நடந்தான் பூபதி.
மெல்ல பின்தங்கிய ராஜசேகர், “எனக்கு இவர் மேல நம்பிக்கையே இல்ல… உனக்கு!?” என்று வினவ, அவரை விட சோர்வாய் ‘இல்லை’ என்று தலையசைத்தார் சுதர்சனம்.
ஒருவழியாய் காட்டின் மையப்பகுதியை அவர்கள் அடைய, அங்கே நட்டநடுவில் அழகுற இருந்ததைக்கண்டு, அவன் கைகள் தன்னால் கூலர்சை கழட்டியது, தன்னைமீறி “வாவ்…!” என்று அதிசயித்தான் பூபதி.
அவனை போலவே தான் மற்றவர்களும் நின்றிருந்தனர்.
“சார், இதான் லொகேஷன்!” என்ற நிவாஸின் குரலில் திரும்பிய பூபதி, “இங்கயா வரதா இருந்துச்சு உங்க ப்ளான்?” என்றான் வியப்பாய்.
பிரஷாந்த் உடன் சேர்ந்து மூவரும் சிரித்துக்கொண்டிருக்க, வேறேதோ பேச்சுக்குரல் கேட்பதை உணர்ந்தான் வித்தகன்.
“உஷ்!” என்றவன், செவிகளை கூர்மையாக்க, இப்போது மீதமிருந்தவர்களுக்கும் குரல்கள் கேட்டது.
“யாரோ பேசுற மாறி இருக்கு!” பவி பயந்தவளாய் சொல்ல, ஒருவேளை குரல் வீட்டிற்குள் இருந்து தான் வருகிறதோ என்று அரண்டுப்போயினர்.
அப்போது, “இங்க தான்னா? எங்க? என் பொண்ணை இங்க காணமே!” என்று பதட்டமாய் வந்த ராஜசேகரின் குரலில், வேகமாய் அந்த ஜன்னல் புறம் விரைந்தாள் சம்யுக்தா.
நிற்பது தன் தந்தை தான் என்று தெரிந்ததும், “யாகூ!!!” என்று குதித்தவள், “அப்பா… அப்பா… இங்க இருக்கேன்!!!” என்று கை காட்டினாள். அவள் குரலில் மூவரும் அங்கே வர, “நான் சொன்னேன்ல? என் அப்பா என்னைத்தேடி கண்டுப்பிடிச்சு வந்துடுவாருன்னு!” என்றாள் பெருமிதமாய்.
வெளியே அவருடன் இரு காவலர்கள் இருக்க, “அது என் அப்பா!” என்று சுதர்சனை கை காட்டினாள் பவித்ரா.
கண்ணாடி கதவின் வழியே பார்த்த வித்தகனும், “என் பிரன்ட் நிவாசும் இருக்கான்!” என்றான்.
கூடவே, பவித்ராவும் அவள் தந்தையை அழைக்க, வெளியே போவதற்காக பிரஷாந்த் நால்வரின் உடைமைகளையும் அள்ளிக்கொண்டு வந்து நிற்க, வித்தகன் மட்டும் மனம் முழுக்க வேண்டுதலுடன் ‘திக் திக்’கென்ற அலைப்புறுதலுடன் அமைதியாக நின்றான்.
“ஒருவேளை கண்ணாடியா இருக்குறதால நம்ம பேசுறது வெளில கேட்கலையோ?” என்ற பிரஷாந்த், அதை அடித்து உடைக்க ஏதேனும் சிக்குமா என்று பார்த்தான்.
ஒரு பித்தளை ஜாடி கிடைக்க, அதைக்கொண்டு வலுவாய் அடித்தான். கண்ணாடியில் சிறு விரிசல் கூட விழவில்லை.
“கண்ணாடி ஸ்ட்ராங்’கா? இல்ல, இந்த ஜாடி வீக்கா?” என்று அதிர்ந்து கேட்டவனிடம், “நீ தான் டா வீக்கு! தள்ளு பேக்கு” என்ற சம்மு, ஜாடியை பிடுங்கிக்கொண்டு அந்த கண்ணாடியில் அடிக்க, அப்போதும் அது அசையவில்லை.
“நீ அடங்கு!” என்ற சம்மு, இப்போது இன்னும் வேகமாய் பலம் கொண்டு அடிக்க, கண்ணாடி உடையவில்லை என்றாலும், அந்த பக்கம் நின்றிருந்த பூபதியின் கவனம் இவர்கள் புறம் திரும்பியது.
“ஏய் போலிஸ் நம்மளை பார்த்துட்டாரு!” என்று கத்திய பவித்ரா, “சார்…. ஹெல்ப் அஸ்! ப்ளீஸ்! சார்” என்று கையசைக்க, கூடவே சம்முவும் உதவி கோரி கத்த, பூபதி அந்த யன்னலிடம் மெதுவாக நடந்து வந்தான்.
வெகு அருகே வந்துவிட்டவனை நிம்மதியுடன் பார்த்தவர்கள், தெம்பாய் நின்றனர், இன்னும் சற்று நேரத்தில் வெளியேறிவிடுவோம் என்ற நம்பிக்கையில்.
அருகே வந்தவனோ, “இந்த காட்டுக்குள்ள… இவ்ளோ அழகா… வித்தியாசமா… அட்ராக்டிவ்’வா…!” என்று வியப்பாய் சொல்லிக்கொண்டே போக, “சார், இந்த பக்கம் வாங்க சார்!” என்றார் நடேசன்.
திரும்பியவன், “ஏன்?” என்று கேட்க, “ஒரு நிமிஷம் வாங்க சார், சொல்றேன்!” என்று அழைத்தார் நடேசன்.
அவனும் தன் வியப்பேரிய பார்வை மறையாமலே அவரிடம் சென்றவன், ‘என்ன?’ என்று கேட்க, “இது பத்தி நான் நிறைய கேள்விபட்டுருக்கேன் சார்!” என்றார் அவர்.
பூபதி அந்த யன்னலை விட்டு விலகியதும், “நம்மளை வெளில கூட்டிட்டு போயிட்டு இவரு கதை பேசுனா என்னவாம்!” என்று முனகிக்கொண்டே முகத்தை திருப்பினாள் பவித்ரா.
“பாரேன்! என் அப்பாவை! என்னை பார்க்காம எங்கயோ பார்த்துட்டு நிக்குறாரு! இருக்கட்டும், வெளில போய் கவனிச்சுக்குறேன்!” என்று கறுவினாள் சம்யுக்தா.
“அப்படி என்ன நடேசன் கேள்விப்பட்டீங்க!?” பூபதி அசட்டையாய் கேட்க, “சார்! நீங்க நினைக்குற மாதிரி இது சாதாரண ‘மரம்’ இல்ல சார்! இது சில பேர் கண்ணுக்கு ஒரு அழகான பெரிய வீடா தெரியுமாம்!” என்று சொல்ல, அவரை நம்பாமல் பூபதி பார்த்தான் என்றால்…
“ஷிட்…ஷிட்…ஷிட்….!!!!” அந்த வீடதிர கத்திக்கொண்டு அங்கிருந்த தூணில் தன் ஏமாற்றம், இயலாமை எல்லாம் சேர்ந்து அடித்துக்கொண்டிருந்தான் வித்தகன்.
தன் கண்ணுமுன்னே பரந்து விரிந்து பலவண்ண பூக்களால் சூழ்ந்து கவர்ச்சிகரமாய் மின்னிக்கொண்டிருந்த மரத்தை கண்ட பூபதி, “என்ன சொல்றீங்க நடேசன்? இந்த மரம் ‘வீடா’ தெரியுமா?” என்றான் நம்ப மாட்டாமல்.
“ஆமா சார்! இது வீடா தெரியுமாம்! அந்த வீட்டை பார்த்த யாரா இருந்தாலும் உள்ள போகணும்ன்னு நினைப்பாங்களாம்! அப்படி மட்டும் உள்ளே போய்ட்டா… அவங்க பிரேதம் கூட நமக்கு கிடைக்காது சார்!” என்று திகிலாய் நடேசன் சொல்ல,
“அப்படி என்ன வீடுய்யா இது?” பூபதி அசட்டை சிரிப்புடன் கேட்க,
“எழவு வீடு சார்!” என்றார் நடேசன், வார்த்தையிலேயே திகில் சேர்த்து!
12
திக்பிரம்மை பிடித்ததை போல வெறித்துக்கொண்டு நின்றிருந்தனர் மூவரும். மூச்சுவிடக்கூட தோன்றவில்லை.
“அப்போ… இது…வீ… வீடு இல்லையா?” வெளிவராத வார்த்தைகளை கடினப்பட்டு சுமந்துக்கொண்டு கேட்டாள் பவித்ரா.
“இது பாக்குறவங்களுக்கு மரம் மாதிரி தெரியுதா?” திகிலுடன் வீட்டை சுற்றிலும் பார்த்துக்கொண்டே பவித்ரா கேட்க, அவளுக்கு பதில் சொல்ல யாருமில்லை.
“நமக்கு மட்டும் எப்படி வீடா தெரிஞ்சுது!?” படபடக்கும் உதடுகளுடன், துடிப்பாய் அவள் கேட்க,
“அப்போ அவ்ளோதான்’ல!?” என்றாள் சம்மு, உணர்வே இல்லாத குரலில்.
பவி திக்கென்று அவளை திரும்பிப்பார்க்க, “நம்ம இங்க மாட்டிருக்கோம்ன்னு தெரிஞ்சா தானே, யாராவது காப்பாத்துவாங்க!? நம்ம இருக்குறதே யாருக்கும் தெரியப்போறது இல்ல… அப்போ அவ்ளோ தான்ல!?” என்றாள் சம்யுக்தா, வெளிறிய குரலில். அவள் சொன்ன நிதர்சனத்தில் பவித்ராவுக்கு பல்ஸ் குறைந்தது.
அப்போது திடீரென ஆவேசமாக வித்தகனின் சட்டையை கொத்தாக பிடித்து கீழே இருந்தவனை தூக்கி நிறுத்தினான் பிரஷாந்த். எதிர்ப்பாராத அவன் தொடுகையில் வித்தகன் தடுமாற, “சொல்லுடா… என்ன நடக்குது இங்க?” என்று கேட்டு அவனை உலுக்கினான் பிரஷாந்த்.
அவன் கண்களில் கோபமும் பயமும் போட்டிப்போட்டது. இங்கிருந்து தப்பிக்கவே முடியாது போய்விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் என்றால், எல்லாம் தெரிந்து இங்கே வந்தவனை பார்க்கும்போது கோபம் கோபமாய் வந்தது. அவனைத்தொட்டு தானே இவர்கள் மூவரும் அங்கே சிக்கியதே! அவன் இந்த வீட்டை காட்டாது போயிருந்தால், இங்கே வர வேண்டிய அவசியம் கூட இல்லையே மற்றவர்களுக்கு.
‘இது வீடாய் தெரியாமல், மரமாய் தெரிகிறது’ என்று செவியுற்றதும், மூவரும் அடைந்தது அதிர்ச்சி என்றால், வித்தகன் அடைந்ததோ எதிர்ப்பார்ப்பு பொய்த்துப்போன ஏமாற்றம்! அது பிரஷாந்த் கண்களை விட்டு தப்பவில்லை. அப்படி என்றால், இந்த வீட்டை பற்றிய அத்தனையும் அவனுக்கு தெரியும் என்று தானே அர்த்தமாகிறது!?
“சொல்லுடா… இப்போவாது சொல்லித்தொல! என்ன நடக்குது இங்க?” கிட்டத்தட்ட அவன் கழுத்தை நெருக்கிக்கொண்டு ஆத்திரமாய் பிரஷாந்த் கேட்க, அவனை வித்தகனிடம் இருந்து பிரிக்கவே இரு பெண்களுக்கும் மிகுந்த சிரமமாய் போனது.
வித்தகனால் பேசக்கூட முடியவில்லை. அவனுக்கு எல்லாம் தெரிந்து தான் வந்தான் என்றாலும், சத்தியமாய் இதெல்லாம் உண்மையாய் இருக்கும் என்று அவன் நூறிலும் ஒரு பங்காய் கூட நினைத்திருக்கவில்லை. இப்போது அவன் கேட்டவை எல்லாம் அச்சு பிசகாமல் நடக்க, உள்ளுக்குள் அவனுமே அலண்டுதான் போயிருந்தான்.
“எ..என..எனக்கு ஒன்னும் தெரியா…து டா!” வித்தகன் சிரமப்பட்டு சொல்ல, அவனை விட்ட பிரஷாந்த், ஆத்திரத்தை எல்லாம் திரட்டி தூணில் குத்தினான். தூணிற்க்கா வலிக்கும்!? அவன் ஐவிரல் முட்டிகளில் தான் ரத்தம் கசிந்தது.
பதறிய சம்யுக்தா, தன் கழுத்தில் இருந்த ஸ்டோலை கொண்டு அவன் ரத்தம் துடைக்க, “சத்தியமா வேற எதுவும் தெரியாது டா!” என்றான் வித்தகன் அயர்வாய்.
“உங்களுக்கு என்ன தெரியும்? அதை சொல்லுங்க முதல்ல!” பவித்ரா கேட்க,
“இங்க நம்ம என்ன எல்லாம் பார்த்தோமோ அதெல்லாம் தான் எனக்கு தெரியும்!” என்ற வித்தகன், “இந்த காட்டுக்குள்ள ராத்திரி மூணு மணிக்கு வந்தா, அழகா ஒரு வீடு தெரியும்! அந்த வீட்டுக்குள்ள போய்ட்டா வெளில வரவே முடியாது! அந்த வீடு மத்தவங்க கண்ணுக்கு மரமா தான் தெரியும்! இதுவரை உயிரோட தப்பிச்சு வந்தவங்க ஒருத்தருமே இல்லன்னு மட்டும் தான் தெரியும்!” என்றான் சோர்ந்து.
“பயப்படாம இருந்தா இங்கிருந்து போயிடலாம்ன்னு சொன்னீங்க?” பவித்ரா கேட்க, “அப்படி தான் என் பிரன்ட் சொன்னான். பயப்படலன்னா மட்டும் தான் இந்த கதவு திறக்கும்ன்னு! நெட்ல எடுத்த டீடெய்ல்ஸ் தான் இதெல்லாமே! அதுல வேற ஒன்னும் இல்ல!” என்றவன்,
“இதெல்லாம் நான் அப்ப கொஞ்சமும் நம்பல! புதுசா ஒரு பேய் படம் பண்ணனும்ன்னு என் பிரன்ட் தான் இந்த இடத்தை சொன்னான்! அவனுக்கு சும்மா கம்பெனி குடுத்து ஸ்க்ரீன் ப்ளே’க்கு ஹெல்ப் பண்ண தான் நான் வந்தேன்!” என்றான் வித்தகன்.
“பைத்தியமா நீ!? நீ வந்தன்னா, நீ மட்டும் வர வேண்டியது தானே? என்ன எழவுக்கு எங்களையும் மாட்டிவிட்ட?” என்று கத்தினான் பிரஷாந்த்.
“பிரஷாந்த், ஒரு முறை பொறுமையா யோசிச்சு பாரு! தப்பு என் மேல மட்டுமே இல்லன்னு உனக்கே புரியும்” என்றான் வித்தகன் பொறுமையாக.
விருப்பமில்லாத அமைதி நால்வரின் நடுவிலும். பிரஷாந்தின் அடிப்பட்ட கையின் மேல் துணியை அழுத்தி வைத்து பிடித்தபடி அவனுடனே கலங்கிய முகத்துடன் நின்றிருந்தாள் சம்யுக்தா.
“வெளில… போக… போகவே…” பேச முடியாமல், மூச்செடுத்து அழுகையை அடக்கிய பவித்ரா, “முடியாதா?” என்றாள் தழுதழுத்த குரலில். சம்யுக்தாவுக்கும் அழுகையாய் வந்தது. பிரஷாந்தின் தோளில் விசும்பிக்கொண்டே சாய்ந்தாள்.
கேட்டுவிட்டு சத்தமில்லாமல் அழுதவளை வித்தகனால் பார்க்க முடியவில்லை. எட்டி அவள் கரத்தை ஆதரவாய் பிடிக்க, அவன் கரத்திலேயே முகத்தை அழுத்தியவள், சத்தமின்றி குலுங்கினாள்.
வெளியே இருந்தவர்கள் எப்போதோ சென்றுவிட்டிருந்தனர்.
சுற்றிலும் இருட்டு… மின்மினியாய் மெழுகுவர்த்தியின் கீற்று ஒளி. அசாத்திய அமைதி! இதற்கு முன் இருந்ததை விட இப்போது பயத்தில் அடிவயிறு கலங்கியது நால்வருக்கும்.
‘பயப்படக்கூடாது!’ என்ற வித்தகனுக்கே நடுங்கியது.
தன்னை பிடித்திருந்த சம்முவின் கரத்தை திடீரென உதறிக்கொண்டு எழுந்த பிரஷாந்த், நடு வீட்டில் சென்று நின்று, “ஏய்… எனக்கு நீ யாரு என்னன்னு எல்லாம் தெரியாது! ஆனா, நான் ஏன் இங்க இருக்கேன், எதுக்கு இருக்கேன்னு கண்டிப்பா தெரியனும்! சொல்லு… பதில் சொல்லு!” மேலே பார்த்து வீடதிர கத்தினான்.
“என்னடா பண்ற நீ!?” வித்தகன் அவனை அமைதிப்படுத்த முயல, “விடு என்னை!” என்று அவனை உதறியவன், “நீ பேசுனல்ல? நீ பேசுனப்போ லைட் ஆன் ஆச்சுல? அப்டின்னா நம்ம பேசுறதை இங்க யாரோ கேட்குறாங்கன்னு தானே அர்த்தம்!?” பிரஷாந்த் ஆவேசமாய் கேட்க, இரு பெண்களுக்கும் வெடவெடத்தது.
திரும்ப மேலே பார்த்தவன், “உன்கிட்ட தானே பேசுறேன், எனக்கு தெரிஞ்சே ஆவணும்! என்னதான் நடக்குது இந்த வீட்டுல!? என்ன தான் நடந்துச்சு! சொல்லு… தெரியனும் எனக்கு… இப்போவே…. இப்…பவேஏஏ!!!” தன் கட்டுப்பாட்டை இழந்து உணர்ச்சிவசத்தில், பயமிகுதியில் அவன் அலற, அந்த நொடி, எங்கிருந்தோ அவன் காலடியில் வந்து விழுந்தது ஒரு கனமான பொருள்.
தன்னிசையாய் அவன் நகர, அது வந்து விழுந்த அதிர்ச்சியில் பெண்கள் அலறி கத்த, எகிறி குதித்த இதயத்தை கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறினர் ஆண்கள்.
அது விழுந்த வேகத்தில் சற்று கனமாக புகைமண்டலமே அவ்விடம் உருவானது. அது அடங்கியபோது, இருமலை சமாளித்து அவ்விடம் பார்க்க, மிக மிக மிக பழமையான ஒரு கனத்த புத்தகம் வடிவிலான ஏடு அவர்கள் கண்களில் பட்டது.
எங்கிருந்து வந்திருக்கும் என்று மேலே எல்லா பக்கமும் பார்க்க, கண்டுக்கொள்ள இயலவில்லை.
என்னதான் வீராப்பாய் கத்திவிட்டாலும், பிரஷாந்துக்கு உடல் உறுப்புகள் எல்லாம் ஆட்டம் கண்டது.
விழுந்து கிடந்த அந்த ஏட்டையே பீதியுடன் நால்வரும் வெறிக்க, அதை நெருங்கவே யோசனையாக இருந்தாலும், இந்த ஏட்டில் தான் இவ்வீட்டின் வரலாறு இருக்கும் என்று திண்ணமாய் தோன்றியது. பின்னே, அதை தானே பிரஷாந்த் வேண்டியது!!!
‘திறக்கலாமா? வேண்டாமா?’ என்று பெரும் யோசனை நால்வருக்கும்!
நால்வரையும் முந்திக்கொண்டு, சாளர இடைவெளி கூட இல்லாத வீட்டிற்குள் வீசியது தென்றல்!!! தன்னால் பிரண்டது அந்த முதல் பக்கம்!!!
திறந்த பக்கத்தை நின்றுக்கொண்டு பார்த்திருந்த நால்வரும், அதில் ஏதோ உருவம் இருப்பது கண்டு, மெல்ல அதை நோக்கி குனிய, மீண்டும் வீசிய தென்றல், இப்போது பக்கத்தை புரட்டாமல், அதன் மீது படிந்திருந்த அடர்த்தியான, மைப்போன்ற தூசியை, ஒரு நொடியில் விலக்க,
தெளிந்த பக்கத்தில் அவர்கள் கண்ட உருவத்தில், ஒருசேர நால்வரின் இதழ்களும் அனிச்சையாய் பிளந்தது.