புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 17.2
பூர்ணா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாள், விசயம் சாதரணமாக முடிந்து விடும் என்று எண்ணி இருக்க, விஸ்வரூபம் எடுத்தது போல் காரியங்கள் அடுத்தடுத்து தொடங்கியது. தாலி செய்தாச்சு, தாலி கட்டு சேலை வாங்கியாச்சு, ஊர் அம்மன் கோவிலில் வரும் மாதத்திற்கு நாள் குறித்து பதிவும் செய்தாகி விட்டது. பூர்ணா சொல்வதை காது குடுத்து கூட கேட்க தயாராக இல்லை வள்ளி. அவருக்கு மகளின் கழுத்தில் ஏறும் மஞ்சள் தாலி மட்டுமே பிரதானம். பெரியாத்தா போடும் தாளத்திற்கு ஏற்ப ஆடி கொண்டிருக்கிறார்.
இருவரும் தங்கள் முடிவின் நிலை மாறாமல் ஒருவருக்கொருவர் எடுத்து சொல்லி புரிய வைத்து, முடியாமல் போக வாதம் விவாதமாக மாறி சண்டையில் தான் முடிந்தது. சரிக்கு சரியாக சண்டை போடும் தாயை முதல் முறையாக பூர்ணா பார்க்க, எடுத்து சொன்னாலே தலையாட்டும் மகளின் பிடிவாதத்தை தாயும் முதல் முறையாக தான் பார்க்கிறார். மகள் ஆக்கி வைக்கும் உணவை கூட மறுத்து விட்டார் வள்ளி. முதலில் அழுது சமாதானம் சொல்லி என்று என்ன செய்தும் மனம் இறங்க வில்லை வள்ளி. ஒரு கட்டத்தில் பூர்ணாவும் விட்டு விட்டாள், உன் பிடிவாதத்தில் நீயி இருந்தால் என் முடிவில் நான் நிற்பேன் என்று. பூர்ணாவின் ஐந்து வயதில் இருந்தே இருவர் மட்டுமே அவ்வீட்டில். ஆனால், தற்போதைய சூழல் போல் ஒரு நிலை இதுவரை வந்ததில்லை. அந்த ஒத்த ஓட்டு வீட்டில் தனி சமையல், தனி படுக்கை வரை வந்து விட்டார்கள் தாய், மகள் இருவரும்.
பூர்ணாவிற்கு தாயின் மனநிலை புரிந்தாலும், அவரின் விருப்பத்திற்கு தலையாட்ட முடியவில்லை. வள்ளிக்கும் பதினாறு வயதில் திருமணம் முடித்து இருபத்தி ஒரு வயதில் கைம்பெண்ணாக ஒற்றை பெண் குழந்தையோடு நின்று விட்டவர். அந்த சிறு வயதிலே கணவனை இழந்து வறுமையில், உறவினர் துணை இன்றி ஒரு பெண் பிள்ளை வளர்க்க அவர் பட்ட பாடு அவருக்கு தானே தெரியும். வறுமையை விட தனிமை அல்லவா அவருக்கு மிக கொடுமையாக இருந்தது. இரவில் உறங்கும் போது எல்லாம் கணவனின் நினைவு இல்லாது ஒரு இரவும் கடந்தது இல்லையே. எத்தனை நாட்கள் தன்னை அரவணைக்க, தோள் சாய்த்து ஆறுதல் சொல்ல, துவளும் போது மடிசாய்க்க என்று இறந்த கணவனை மனம் ஏங்கத்தான் செய்யும். மகளை அணைத்து உறங்கும் போதெல்லாம், ஒற்றை கால மேலே போட்டு ஒரு கையால் தன்னை இழுத்து அணைத்து அசதியில் உறங்கும் கணவனின் வியர்வை வாசத்தை காற்றில் தேடி அழுதது எத்தனை இரவுகள்! “கசகசன்னு இருக்கு தள்ளி போங்க?” என்று தள்ளி விட்டாலும் தூக்கத்தில் சிரிப்போடு தன்னை இழுத்து அணைக்கும் அந்த முரட்டு கரத்தை இன்று எங்கு போய் தேடுவது? விட்டத்தை வெறித்து அழுத பொழுது அதிகம் அல்லவா! .
இப்படி வெளியில் சொல்ல முடியாத கைம்பெண் கணம் அதிகம் தானே! அப்படி இருக்க? தம் மகளுக்கு தன்னை போல விதி விட்டதே என்று சாமி கும்புடுவதையே நிப்பாட்டி விட்டார் வள்ளி. முன்னோர் சொல்வார்கள் குல தெய்வக் வழிபாடு விட்டு விட்டால், தம் குலம் தேடி சாமி வீடு வருமாம்! அப்படி வந்தது போல, சாமி வரம் தர, இவள் எட்டி உதைக்க பார்க்கிறாளே! தன் போல் மகள் முடங்கி விட கூடாது என்று தான் மகளோடு சிறு பிள்ளை போல் மல்லுக்கு நிற்கிறார்.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், தம் சரிபாதி கொடுக்கும் அரவணைப்பும், அதில் ஏற்படும் ஆறுதலும், தெம்பும் யாரும் கொடுத்திட முடியாதே!. வேலு நிச்சயம் மகளுக்கு நல்லதொரு துணை என்று கண்டவர், எப்படியேனும் அவளை சம்மதித்தது விட எல்லா வழியுலும் முயல்கிறார். ஒரே வீட்டில் முகம் கொடுத்து கூட பேசாமல், அவள் பார்க்கும் போதெல்லாம் அழுது புரண்டாலும் பூர்ணாவை இம்மி அசைக்க முடியவில்லை.
ஆனாலும், வள்ளிக்கு ஏதோவொரு நம்பிக்கை. வேலு முதற்கொண்டு எல்லாரையும் எட்ட நிறுத்தி விட்டவள், பவித்ராவை மட்டும் இழுத்து கொள்வாள். அந்த ஒரு வெளிச்சம் மட்டுமே வள்ளியை கல்யாணத்தை நோக்கி நகர்த்தி கொண்டிருக்கிறது.
வேலு எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் இன்னும் திண்டாடதோடு தான் திருகிறான். மனதில் குழப்பமே மேலோங்கி நிற்கிறது, மற்றவர்கள் சொல்வது போல், இத்திருமணம் நடந்தால் பொதுவான நன்மைகள் பல தான். தாய் பாசம் அறியாத பவித்ராவுக்கும், குழந்தை ஏக்கத்தில் தனித்து நிற்கும் பூர்ணாவுக்கும் ஒரு குடும்ப சூழல் அமையும் தான். இவர்கள் இருவரின் நன்மை மட்டுமே வேலுக்கும் பிரதானம். ஒற்றை ஆளாக எல்லாவற்றையும் தம் தோளில் சுமந்து நிற்பவனுக்கு, ஏற்ற துணையாக அவன் சம்மு நிற்பாள் தான். பெண் பிள்ளை வளர்ப்பில் புது பரிமாணத்தில் நிற்கும் வேலுக்கு, அவன் சுமையை சுமக்க பூர்ணா துணை நிற்பாள் தான். ஆனால், அது தோழியாக அல்லாமல் அவன் மனைவியாக. அது தானே இவர்களின் பிரச்சனையே. இத்தனை வருடத்தில் நொடி நேரம் கூட தன் ஜோடியாக எண்ணாதவளை காலத்துக்கும் ஜோடி சேர்க்க பார்க்குதே காலம்! இதை என்னவென்று சொல்ல!
பூர்ணாவுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்த சிறந்த நண்பனாக துணை நிற்காமல், அவளை தன் துணையாக்கி கொள்வது நட்பின் துரோகம் அல்லவா! அதை தான் தன்னால் செய்ய இயலுமா!. பூர்ணா சொல்லுக்கு மறு சொல் சொல்லாத வேலுவா, அவள் வார்த்தை மீறி வாழ்க்கையில் அவளை கை பிடிப்பான். திருமணம் என்பது சாதாரண விசயம் அல்லவே! அதுவும் முதல் திருமண வாழ்வில் தோற்ற இருவரும், புது வாழ்வில் இணைய எவ்வளவு மெனக்கெட வேண்டும், முந்தைய வாழ்வின் காயம் எந்தளவிற்கு என்று அறியாமல் எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆறுதல் அளித்து கரை சேர முடியும். இதற்கு இடையில் பவித்ராவின் வாழ்வும் உள்ளதே. நல்ல குடும்ப சூழலை எதிர்பார்க்கும் தம் மகளுக்கு, தங்களின் பிடிப்பற்ற திருமணம் பாதிப்பை ஏற்படுத்தி விட்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும் தானே. காதல் என்பது துளி கிடையாது, இருப்பது அடிப்படை அன்பும், புரிதலும் தான். திருமணத்தின் பின் இந்த ஒற்றுதலும் காணாமல் போய் விட்டால் , வாழ்வு முந்தைய நிலையை விட சீர் கெட்டதாகி விடுமே. ஒற்றை கையால் தாங்கி நிற்கும் கண்ணாடி பாத்திரம் போல தான் இரண்டாம் திருமணமோ! அதை தாங்கள் சரியாக கையாளாமல் உடைத்து விட்டால். தங்களுடன் சேர்த்து சுற்றி இருக்கும் அனைவரும் காயப்பட்டு போவார்களே! ஒரு திருமண முறிவு, ஒரு தலைமுறை உறவே சீர் கேட்டு போகும் என்று கண்ணார கண்டவன் துணிந்து இறங்கும் தைரியம் சுத்தமாக இல்லாமல் போனது.
அத்தோடு எல்லாவற்றிற்கும் மேலாக அவனின் சம்மு, அவளின் நட்பை என்றும் இழக்க முடியாதே! அனைவரின் நலன் கருதி இத்திருமணம் முடிந்தால், அவன் சொம்பு வை முற்று முழுதாக இழந்து விட வேண்டியதான். பலமான காற்றில் பற்று கோல் இன்றி ஆடும் முரங்கை மரம் அவள். அவளின் கை பற்றி அரணாக நின்று, வாழ்வின் கடை முனை மட்டும் துணை நின்று நண்பனாக நன்மையை கொடுப்பதா? அல்லது திருமணத்தை நிறுத்தி அவளுடனான அவன் நட்பிற்கு நியாயம் செய்வாதா?. ஒன்றும் புரியவில்லை வேலுக்கு. நட்பை நடுவில் வைத்து அவள் வாழ்வை காப்பதா?, அவள் வார்த்தையை காப்பதா?. முடிவு எதுவாகினும் தன் சம்முவை காய படுத்த முடியாது.
விடிய விடிய இதே சிந்தனையில் உழன்று, தூக்கம் துளி இன்றி அடுத்த வேலையை பார்க்க புறப்பட்டான். இன்று பவித்ராவின் பள்ளி ஆண்டு விழா, வகுப்பு எல்லாம் இருக்காது. ஒரே ஆட்டம், கொண்டாட்டம் தான். மதியத்திற்கு மேல் தான் விழா, ஆனால் காலை தொட்டு களைகட்டும். காலையிலே மாணவ செல்வங்களின் பெற்றோர் தம் பிள்ளைகளுடன் வந்து, அவர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிக்கு உடன் நின்று முடியும் போது தான் அழைத்து செல்வர். வேலு எப்போதும் வேலை பளு காரணமாக விழா முடிவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன் தான் சென்று மகளை பார்த்து, அழைத்து வருவான். தாமதமாக வரும் தந்தை மீது, பவித்ராக்கு வருத்தம் தான். ஆனால், அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய மாட்டாள், சமத்தாக புரிந்து நடந்து கொள்வாள். இந்த ஆண்டாவது மகளுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் விரைவில் கிளம்பி தம் வேலை எல்லாம் முடித்து விட்டு, மதியம் பள்ளி செல்ல திட்டம்.
அதற்கேற்ப விரைவாக, எழுந்து காலை கடன் முடித்த பின், சாமி கும்பிட உள்ளறை வந்தவன் அதிர்ந்து நின்று விட்டான். அங்கு வீற்றிருக்கும் சிவனின் காலடியில், சந்தனம் கலந்த பட்டு வேட்டி சட்டையும், சிவந்த குங்கும கலரில் பட்டு சேலையும் இருக்க, அதன் மேல் வெத்தலை வைத்து மஞ்சள் குங்குமம் நடுவே, புது மஞ்சள் கயிற்றில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் பொருத்தி இருக்கும் புது மஞ்சள் தாலி கயிற்றை கண்டவன். அது யாருக்கு என்று புரிந்ததும் உடல் சிலிர்த்து, மனதில் பயம் பரவியது. சாமி கும்பிட வந்தவன், வந்தபடி வெளியேறி கூடம் வர, பெரியாத்தா தான் போனில் மகளுடன் நாத்துனார் சீர் வரிசை முறை பற்றி பேசி கொண்டிருந்தார்.
“ இங்காரு வாணி! ரெண்டாவது தானேன்னு குறையா செய்ய கூடாது. வீட்டளவு விசேசம் தான். ஆனா, உம் முறை சரியா செய்யணும். தாமரைக்கு செஞ்சத விட ஒரு பிடி அதிகமா செய்! உம் பிள்ளையொட பிள்ளை வரைக்கும், எம் பிள்ளை சீர் செய்வான். அவன் எதுவும் சொல்வான்னு நினைக்காத, நான் பார்த்துகிடுதேன். வளமா உம் கூட பொறந்தவனுக்கு செய் என்ன!” என்று அவர் பாட்டுக்கு அடுத்தடுத்து பேசி கொண்டே செல்ல, அவரை கடுப்பாக பார்த்தான் வேலு.
அவனுக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை, தலை குனிந்து தாலி வாங்குபவள் நிமிர்ந்து சண்டைக்கு நிக்க, தாலி கட்டுபவனும் முறுக்கி கொண்டு நிக்க, என்ன சொல்லி கல்யாணம் செய்வோம் என்று இத்தனை திட்டம்! அது தான் வேலுக்கு விளங்கவில்லை. இந்த யோசனையில் இருந்தவனை பள்ளி செல்ல கிளம்பி நிற்கும் பவித்ரா களைக்க.
மகளை பார்த்தவன், “ஆயி! இந்த வருசம் எப்படியும் அப்பா வெள்ளன வந்துருவேன். உம் கூடவே நின்னு, உம் சோட்டு பிள்ளைக எல்லாம் பார்த்து பேசி, அவசரபடாம அப்பா மெதுவா உன்னை கூட்டியாரேன்”.
“நீங்க பிஸின்னு எனக்கு தெரியும்பா! காட்டு வேலைய பாருங்க. அப்பத்தா சொண்ணாக கதிரு அறுக்கணுமன்னு! நான் அம்மாவ வர சொல்லிருக்கேன்! அப்படியே, பொழுசாய அம்மத்தா வீட்டுக்கு போயிட்டு அங்கேயே இருக்கேன். ராத்திரி வந்து என்னைய கூப்பிடுக்கங்க!” என்று அவள் பாட்டுக்கு சொல்லி செல்ல, மகனை ஒரு பார்வை பார்த்த பெரியாத்தவும், பேத்தியை பஸ் ஏற்ற பின் சென்றார். வேலு தான் அடுத்த பேச்சு வராமல் முடங்கி போனான். மகளின் பேச்சில் இருந்த அழுத்தம், பூர்ணாவுடனான அவர்களின் உறவை உறுதி படுத்தியது.
பவித்ராவுக்கு சிறு வயிலிருந்தே ஒரு பெரிய ஆசை. அது என்னவென்றால் இவர்கள் பள்ளியின் ஆண்டு விழாவின் போது, பெற்றோர் உடன் இருந்து கொள்ளலாம், அவர்களின் நிகழ்ச்சிக்கு உதவியாக. பெரும்பாலும் தாய்மார்களே அதிகம் உடன் இருப்பதால், வேலு தவிர்த்து விடுவான். இதில் தான் போய் என்ன செய்ய என்று. ஆனால், பவித்ராக்கு அது பெரிய ஏக்கம், தன் தோழிகளின் அம்மா எல்லாம் கூடவே திரிவதும், மற்ற பிள்ளைகளின் அம்மாவுடன் கலப்பதும், அழகான ஆடை அணிவித்து, மேக்கப் செய்து போட்டோ எடுப்பது, மதிய உணவை மடியில் அமர்த்தி ஊட்டுவது என்று அன்று ஒரு நாள் பள்ளியே அமர்க்களாக படும். பெரிய அக்காமர்களுக்கு கூட அம்மா உடன் நிற்க, தான் மட்டும் தனியாக ஓடி திரிவதும், மற்றவர்களின் பரிதாப பார்வையும் எல்லாரையும் விட்டு ஒதுக்கி வைத்தது.
ஆனால், இன்று தான் மட்டுமே உரிமை கொண்டு உறவு கொண்டாட, தனக்கும் அம்மா இருக்கிறாள் என்று காட்ட, பூர்ணாவை கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளை. அதுவும், மதிய உணவோடு. பூர்ணா வருவாளா?. அந்த சந்தேகம் வேலுக்கும் இருக்க, தற்போதைய நிலை சாதகமாக இல்லாததால், மகள் வாட கூடாது என்று வேலு வந்து விட்டான் பவித்ராவின் பள்ளிக்கு மதிய நேரத்தில். ஆனால், வந்தது தாமரை, அவள் மகன் ராகுலும் அந்த பள்ளியில் தான் படிக்கிறான். மகனோடு, மகளையும் நெருங்குவதற்கு உணவோடு வந்து விட்டாள். காலம் கடந்த பின் ஏதும் நடக்காதது போல், எளிதாக மகளை நெருங்க முடியவில்லை. தன்னை பார்த்தாலும் அம்மா என்ற சிறு சலனமும் பவித்ராவின் பார்வையில் இல்லை. யாரோ போல அவள் கடந்து செல்ல, தாமரையால் தான் அவ்வாறு கடக்க முடியாமல், தவித்து போய் நின்று விட்டாள்.
அங்கே, தாமரையை கண்ட வேலுக்கு மனதில் ஒரு பயம் வந்தது. இது என்ன புது பஞ்சாயத்து? திரும்ப முடியா வண்ணம் அவரவர் பாதையில் சென்ற பின், மீண்டும் மகளை நெருங்க நினைக்கும் தாமரையின் நோக்கம் என்ன?. பவித்ராவை பார்த்து ஏன் இந்த மறுகலும், தவிப்பும். இத்தனை வருடம் போல இனியும் இருந்து விட கூடாதா? கோட்டை அளித்த பின், ஏன் புது வட்டம்? புரிந்தும், புரியாமலும் வேலு நிற்க.
பவித்ராவின் பார்வை வட்டத்தில் இவர்கள் இருவரும் விழுந்தாலும், கவனம் செல்ல வில்லை. எப்போதும் வராத தந்தை வந்த மகிழ்ச்சி கூட இல்லை. ஏன்? வேலுவை மகள் நெருங்க கூட இல்லை. அவள் நினைவு எல்லாம் தன் அம்மா இன்னும் வரவில்லை என்பதில் தான் இருந்தது. பூர்ணா வரமால் போகலாம் என்ற நினைவே இல்லை பவித்ராக்கு. அவ்வளவு நம்மிக்கை பூர்ணா மீது. அதை பொய்யாக்காமல் வந்து விட்டாள் பவித்ராவின் அம்மா!
அவ்வளவு தான், எதிர்ப்படும் யாரையும் கண்டு கொள்ளாமல், ஓடி சென்று “அம்மா” என்று கூவலில் பூர்ணாவை கட்டு கொண்டாள் பவித்ரா. உள்ளே ஏதோ ஒன்று உடைய திடனின்றி மகளை பார்த்து நின்றாள் தாமரை. அவளின் நிலை கண்டு வேலுக்கு தான் பாவமாக இருந்தது. ஆனால், தான் என்ன செய்ய இயலும் தன்னாலும் மகளை விட்டு கொடுக்க முடியாதே! அவன் வாழ்வின் ஆதாரமும் மகள் தானே. ஒரு பெருமூச்சோடு மகளை நோக்கி நடையை போட்டான்.
பவித்ராக்கு அவ்வளவு சந்தோசம், அம்மா! அம்மா! என்று பூர்ணாவை சுற்றி சுற்றி வந்து கொஞ்சி கொண்டிருந்தாள். மகளை புன்னகையோடு பார்த்தவள்,
“ ஏட்டி! என்னாலே இது? ஒரு பக்க பின்னால் அவுந்துருச்சு? ஒழுங்கா தலை பின்னாலைய? நல்ல நாள் தலைக்கு குளிச்சா என்ன? இங்க பாரு வெள்ளை பாவாடை பின் பக்கம் மண்ணு? விழுந்து புரண்டையா? எதுக்கு இப்படி வேர்த்து இருக்கு?” என்று பார்த்த நொடியில் பத்து கேள்வியுடன் தான் உடன் சென்றாள் பூர்ணா.
இந்த கவனிப்பு தானே, பூர்ணாவின் பின்னே பவித்ராவை சுற்ற வைப்பது.
“ஏம்மா லேட்டு? எம்புட்டு நேரம் காத்து கிடக்க?, வெளி கேட்டவே பார்த்து கிடந்தேன்” என உரிமையாக குறை பட்டு கொள்ள,
“ம்ம்க்கூம்! வகை தொகையா வேணும்ன்னு சொன்னியே! அடுப்ப பத்த வைக்க கேஸ் திர்ந்து போச்சு! அது எப்ப பதிஞ்சு வர! அதான், விறகு அடுப்புல வச்சு எடுத்து வர தாமசம் ஆகி போச்சுலே!” என்று பேசி கொண்டே, அங்கிருந்த ஒரு மர நிழலில் இருவரும் அமர. ஆட்டு குட்டி போல உடன் வந்த வேலுவை கவனிப்பார் தான் யாரும் இல்லை.
ஒரு பெரிய கூடையில், தட்டு, கரண்டி, பெரிய கேரியரும், தண்ணி பாட்டிலும் இருக்க. மற்றொரு கட்டை பையில் புது உடை இருந்தது. பாசம் இருக்குமே தவிர, இத்தகைய கவனிப்பு எல்லாம் அவனுக்கு வராது.
“நல்ல தண்ணி இங்கேயே கிடைக்கும்மா? எதுக்கு வேஸ்டா சுமந்துட்டு வந்த?”
“ ஏட்டி! நம்மூர் சோனை தண்ணி, ஊத்துல இருந்து வாரது. தேங்கா தண்ணி மாதிரி இருக்கும், நாலு பேருக்கு குடுவே” என்க.
“குடிக்கிற தண்ணில என்னத்த இருக்கு? இதுல நாலு பேருக்கு குடுக்க வேணுமாம்! இவளோட!” என்று சலித்து கொண்டதென்னவோ வேலு தான். அதுவும் மனதிற்குள், வெளியில் சொல்லி அவளிடம் யார் வாங்கி கட்டுவது.
மதிய உணவு நேரம் ஆதலால், மற்ற பிள்ளைகள் தம் வீட்டினரோடு ஆளுக்கொரு மரத்தடியில் அமர, தம் வகுப்பு பிள்ளைகளோடு பவித்ராவும் ஒரு மரத்தடியில் அமர்ந்தாள்.
பூர்ணா தான் கொண்டு வந்திருந்த பெரிய துண்டை விரித்து, அதில் பதார்த்தங்களை அடுக்க ஆரம்பித்தாள். வெள்ளை சாதத்தோடு நாட்டு கோழி கூட்டு, ஆட்டு கறி குழம்பு, கோழி வறுவல், முட்டை பணியாரம், மூளை வறுவல் கூட இருந்தது. நல்ல அகலமான தட்டில் மகளுக்கு போட்டு ஊட்ட, ஆசையாக வாங்கி கொண்டாள் பவித்ரா. உடன் பயிலும் தோழிகளுக்கும் பங்கு சென்றது.
“எங்கம்மா வச்ச குழம்பு, சூப்பரா இருக்கும். சாப்பிட்டு பாருங்க!” என்று ஒருத்தர் விடாமல் கொண்டு போய் குடுத்து வந்தவள், தன் தோழியின் அம்மாக்களிடம் எல்லாம், தன் அம்மா என்று பூர்ணாவை தான் அறிமுகம் செய்து வைத்தாள்.
பவித்ரா ரொம்ப ஆசைப்படவும், குழந்தையின் மனதை நோகடிக்க விரும்பாமல் பள்ளி வந்தவளை, பவித்ராவின் ஆர்ப்பாட்டம் தர்ம சங்கடபடுத்தியது. இருந்தும் மகளின் முன் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்து கொண்டாள். பின்,விழா ஆரம்பிக்கும் போது மகளுக்கு புது ஆடை அணிவித்து, தலை பின்னி பூவைத்து, சின்ன சின்ன அலங்காரம் செய்து, மற்ற தாய்மார்கள் உடன் முன் சென்று விட. பின் தங்கி பார்த்து நின்றதென்னவோ வேலு தான். இத்தனை வருடங்களில் மகளுக்கு பரிசு வழங்கும் நேரத்திற்கு மட்டும் சென்று வருபவன், மகளின் எதிர்பார்ப்பை எல்லாம் யோசித்தது இல்லை. இன்று, பவித்ராவின் ஆர்ப்பரிப்பை காண்கையில், தாய் அன்பிற்காக மகளின் ஏக்கம் கண்டு, மனம் மீண்டும் அல்லாட தொடங்கியது.
தாமரையின் ஒரு கண் பவித்ரா மேல் தான் இருந்தது. அதுவும், பவித்ரா – பூர்ணா இடையேயான உறவு அவளுக்கு எதுவோ உணர்த்த, மனம் தான் வேதனையில் துடித்தது. மகள் மனதில் தாயாக தான் இல்லையே என்று. பவித்ராவை தான் கையில் பிடிக்க முடிய வில்லை, அவ்வளவு சந்தோசம். தனக்கும் ஒரு குடும்பம் இருக்க என்று காட்டுவதில் அவ்வளவு ஆர்வம். விழா முடியும் வரை உடன் இருந்து, பல போட்டோ எடுப்பது, சிற்றுண்டி உண்டு மெதுவாக தான் வீடு வந்தனர்.
முதலில், பூர்ணா வீடு செல்ல. அவள் இறங்காமல் மகளை பார்த்தவள், “ஆயி! உள்ளாரா ஓலை பெட்டியில் கடலை உரண்டை இருக்கு, எடுத்து தூக்குல வச்சு வா! உனக்கு பிடிக்கும்ல” என்க, சந்தோசமாக தலையாட்டி பவித்ரா உள்ளே சென்ற பின், வேலு புறம் திரும்பியவள்.
“ஏலே வேலு! எம் அம்மைக்கு அப்புறம், எனக்கு ஒரு கஷ்டமன்ன தாங்கி நிக்க நீயி நிப்பன்னு நான் நம்புறேன். எனக்கு பெரிய கஷ்டமா நீயே மாறிப்பிடாத! பவித்ராவை எம் உசுரா வச்சிருக்கேன், மலடியா நின்னவள அம்மான்னு உணர வச்சது அந்த பிஞ்சு தான். நேரடியாக சின்னதா என்னால நோகச்செய்ய முடியாதுலே! புள்ள கண்ணீர் விட்டா மனசு தாங்காது. இப்ப மாதிரியே எப்பவும் புள்ளையா நான் வளக்குறேன். உமக்கு துணையா தோள் கொடுக்குறேன். ஆனா, அதுக்கு கல்யாணம் தான் தீர்வு இல்லவே!”
அசிங்கமாக இருக்குலே, முப்பத்தாறு வயசுல ரெண்டாம் கல்யாணமா! மானமே போய்டும். இம்புட்டு வருசமும் நேர்வழியா நின்னேன், பாதை மாற விரும்பலவே! யாரு என்ன சொன்னாலும் எம் மனசுக்கு ஒப்பலை. நான் வளர்ந்த வளர்ப்பு தாண்டி, என்னை சுத்தி போட்ட வேலிய தாண்டி தைரியமாக வர. துணிச்சல் இல்லவே! ஒத்த படுக்கை தான் வேலு, அதா ரெண்டா விரிக்க எம் மனசு ஒத்துக்காது” என்று படபடவென பேசி வர,
பதறி ஏதோ சொல்ல வந்த வேலுவை தடுத்தவள், “ புருசன், பொண்டாட்டி உறவுன்னா என்னன்னு தெரியாத சின்ன புள்ளைக இல்லை நாம! எல்லாம் பார்த்து வந்தவக தான, நாளைக்கு என்னவும் மாறும். அந்த மாற்றம் எல்லாம் எம் வளர்ப்புக்கு ஒத்து வராது வேலு. என்னைய விட்ரு, நல்ல பெருமாள் மவ இப்படித்தான்! எம் மனசுக்கும், உன்னோட நான் வச்ச உறவுக்கும் துரோகம் பண்ண மாட்டேன்” என தெளிவாக பேசி அவள் வழியில் செல்ல,
தடுமாறி போனான் வேலு. சாமியறையில் பார்த்த மஞ்சள் தாலியும், மகளின் விருப்பமும் அவனை தடுமாற செய்ய, அதை கூட கண்டு பிடித்து நான் தடம் மாற மாட்டேன் என்று சொல்லி விட்டாளே பாதகி!
பவித்ராவை வழி அனுப்பி விட்டு வீட்டினுள் வந்தவள் பார்த்தது. அடமானம் வைத்திருந்த நகைகளையெல்லா திருப்பி, வேலுக்கு மாமியார் வீட்டு சீராக இரண்டு பவுன் நகை எடுத்து வந்து, அவளிடம் அழகு காட்டி கொண்டிருந்த வள்ளியை தான். அதிர்ந்து போய் அவற்றை எல்லாம் எடுத்து பார்த்த பூர்ணா. இது எல்லாம் வாங்க காசு ஏது? திரும்பி தாயை பார்த்தாள். அவளின் முதல் திருமண முறிவின் போது அடகு போன நகைகள், இதுவரை வட்டி மட்டுமே கட்ட முடிந்தது. தற்போது அடகு வைத்த நகைகளையும் திருப்பி, தங்கம் விக்கிற விலைக்கு மேலும் இரண்டு பவுன் சங்கிலி என்பது சாத்தியமில்லாதது. அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது? தாயை கேள்வியாக பார்க்க,
அவர் சொன்ன பதிலில் அவள் தான் கொதித்து போனாள். அப்பா நியாபகமா வைத்திருந்த திருநெல்வேலி வீட்டை விற்று வந்த பணம் தான் இவ்வளவும். எந்த ஒரு நிலையிலும் அந்த வீட்டை தொடாமல் வைத்திருந்தவர்கள், இன்று விக்கிமளவுக்கா தாய்க்கு தன் கல்யாண பித்து பிடித்து போய் இருக்கு . அப்படியொரு கோபம், தாய் என்றெல்லாம் பார்க்க வில்லை வார்த்தையில் விளாசி விட்டாள். தந்தையின் நிழலாக தன்னோடு இருந்ததை தொலைத்து விட்டோமே என்று ஆத்திரம். வள்ளியும் சும்மா விட வில்லை தன் பங்குக்கு அவரும் பேச, பெரிய களோபரம் தான். அடுத்த வீட்டு மக்கள் எட்டி பார்க்கும் அளவுக்கு.
இப்பொழுதெல்லாம் பூர்ணா தாயோடு பேசுவதே இல்லை, ஏன் நேர் கொண்டு பார்ப்பதும் இல்லை. வள்ளியும் வேறு விதத்தில் மிரட்ட ஆரம்பித்தார். அதாவது, மருந்து மாத்திரை எதுவும் எடுத்து கொள்வது இல்லை, சரியாக உண்பதும் இல்லை, பனி சேராது என்று தெரிந்தும் மாசி மாத குளிரில் நடுங்கியபடி கிடந்தும். பூர்ணா கண்டு கொள்ளவே இல்லை. மகளின் போக்கு பயத்தை கொடுக்க, வேலுவை சென்று பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதன் படி, மறுநாளே வேலுவை ஐயனார் கோவிலில் பார்க்கவும் செய்தார், “ என்னா அயித்த! வர சொல்லி சொன்னிக?என வினவ,
அவனை நிமிர்ந்து பார்த்தவர், கையெடுத்து கும்பிட்டு, “ ஐயா ராசா! எம் மவளுக்கு ஒரு வழி சொல்லு சாமி, பெரியவக பேசி நிக்க, அவ பிடிவாதம் தளரலையே! காலத்தும் எம் புள்ள தனி கட்டை தான?” என்று அழுக,
பதறி போன வேலு, “ அத்த கையெடுத்து கும்பிட்டு என்னைய பாவியா ஆக்காதீக! அவ மனசு தீய வெந்து கிடக்க, மீறி நாம என்னத்த செய்ய, அவசரப்பட்டு எதுவும் செஞ்சு அவள இழந்து நிக்க கூடதுல”
பூர்ணாக்கு இருக்குறது பயம் தான் வேலு. முந்தி நடந்தது தொடருமான்னு பயம்? கல்யாணம் நடந்த எல்லாம் சரியா போகும். ஒரு தடவ தப்பா போன, காலத்துக்கும் அதிலே கேடக்கணுமா என்ன? எம் புள்ள ஒத்தைல கிடந்தது அல்லாடுரத பார்க்க பெத்த மனம் இடம் குடுக்கலவே! வெளிய தாட்டியமா காட்டிக்கிட்டாலும், உள்ளாரா ஒடைஞ்சு போய் கிடக்க. தனியா நின்னு உலகத்த பாக்குற வயசா அவளுக்கு” என மூக்கை உறிஞ்சி பேசி கொண்டே வந்தவர்.
பெரும் அராட்டலில், “எம் புள்ள முடங்கி போச்சே சாமி! மகராசியா வாழ வேண்டியவ, சகுனம் பார்த்து ஒதுங்கி போகுதே! வெள்ளன எந்திருச்சு தெரு வழி நடக்க மாட்ட, நாலு பேரு நல்லதுக்கு வாங்கன்னு. கல்யாணம், விசேஷம், காத்து குத்து, சடங்கு எதுக்கும் போய் நிக்க மாட்ட, சோட்டு பிள்ளைக யாரும் கூட சேத்துகிறது இல்லை, வம்ம வவுசியா வாழ்றவங்க வக்கத்து நின்னவள ஒதுக்கிட்டாங்க. கட்டி போட்டாலும் வீட்ல நிக்காதவ, ஊர்ல எந்த விசேசத்துக்கும் போகல, வேலையும், வீடுமா அலைஞ்சு கிடக்க அவ காலம் என்னைக்கு போக” சற்று நிறுத்தி,
தினக்கி எம் புள்ளை பாடு படுதுல வேலு! நல்ல சீலை கட்ட மாட்ட, முதல்ல எந்திருச்சு போய் பால் வாங்க மாட்டா, தண்ணி குழாய்க்கு முன்ன நிக்க மாட்ட, அன்னிக்கு ராத்திரி முழுக்க தலைவலின்னு கடை திறந்ததும் முதல்ல மாத்திரை வாங்க போன ஏதோ சொல்லிடாங்க, எம் மனசு பட்ட பாடு எனக்கு தான் தெரியும். எம் மவ செஞ்ச தப்பு தான் என்ன? விதவை, மலடின்னு ஒதுக்கி வச்சுடாங்களே! அவ கழுத்துல ஒத்த மஞ்ச கயிறு ஏறாம எம் கட்டை வேகத்துல வேலு! உம் ஆத்தா வந்து பரிசம் போட்டாங்க, உன்னிய எப்படிலே நான் நம்புவேன்? அவ சொல்ல நீயி தாண்ட மாட்ட, அந்த நினைப்பு தான் அவளுக்கு”
“எப்படியாவது எம் புள்ளை வாழ்க்கைய காப்பாத்தி குடுலே வேலு! அவ சுமங்கலி கோலத்தை நான் பாக்கணும்! அந்த ஐயனார் சாட்சிய வச்சு உமக்கு நேசமாவே பூர்ணா நல்லா இருக்கணும்னு நினைப்பு இருந்த, அவளை கை விட மாட்டேன்னு வாக்கு குடு வேலு” என பெரும் குரலில் கத்தி அழ,
அவரின் கை பிடித்து ஆறுதல் சொன்ன வேலுவின் சொல் காதில் ஏறவே இல்லை. எத்தனை வருட அழுத்தமோ, சாமியின் காலடியில் மண்டியிட்டு விழுந்து போனார். வேலு தான் பதறி போய் தூக்கி கொண்டு ஓடினான். விசயம் அனைவருக்கும் சொல்ல பட, அலறி அடித்து வந்தனர். ஆனால், வள்ளியின் நிலையில் மாற்றம் இல்லை. முன்னவே பக்கவாதம் வந்து விழுந்தவர் தான், இன்று மொத்தமாக முடங்கி விட்டார்.
பூர்ணா தான் அனைத்தையும் பார்ப்பது. தாயிடம் பேச்சு மூச்சு எதுவும் இல்லை. கண்களில் ஒளி மட்டும் தான் இருந்தது. வேலு, பெரியாத்தா, பவித்ரா, கலைவாணி, மணிமாறன் எல்லாம் அங்கே தான். தொண்டைக்கும், நெஞ்சுக்கும் இழுத்து கிடந்தது, கொடுத்த நீர், பால் எல்லாம் வந்த வழியே வெளியேற. கண் மூடி திறப்பது மட்டும் தான் உயிர் இருப்பதை உணர்த்தியது. ஏதோ ஒன்று அவர் உள்ளத்தை அழுத்தி கொண்டிருந்தது போல. அது என்னவென்று தான் எல்லோருக்கும் தெரியுமே!.
வள்ளி நிலை கண்டு பெரியாத்தாவுக்கு தாங்க வில்லை, “ ஏட்டி! உம் அம்மை உடம்பு புண்ணாகிடக்கு, நல்ல படிய அனுப்பி வைலே! உம் வீம்ப விடு, பெத்தவள சுகமா போக விடு. உம் பேச்சு இனி ஒன்னும் இல்ல! உன்னை மட்டுமே நினச்சு வாழ்ந்தவளுக்கு அந்த கொடுப்பணைய கொடுவே! உம் சத்தம் கூடாது. வாழும் போது எதையும் அனுபவிக்கல, நிம்மதியா போய் சேராட்டம்” என்று சொன்னவர். தன் மகளை ஒரு பார்வை பார்க்க, வந்து விட்டான் கலைவாணன்.
எடுத்து வந்த புது மஞ்சள் கயிற்றை கொடுக்க. வாங்கிய வாணி சாமி முன் வைத்து கும்பிட்டு, வள்ளியின் கரம் தொட்டு, பெரியாத்தா கையில் கொடுக்க. குல தெய்வத்தை மனதில் நினைத்து, மகன் கையில் தந்தார் அவன் ஆத்தா.
மனம் படபடக்க, கை நடுங்க தாலியை வாங்கியவன். பூர்ணாவை ஒரு பார்வை பார்க்க, நடப்பது அறிந்தாலும் தலை நிமிர வில்லை. வள்ளியை ஒரு பார்வை பார்க்க, அவர் கண்களில் அப்படி ஒரு பிரகாசம். இது தான் வேண்டும் என்பது போல், இழுத்து ஒரு பெருமூச்சு விட்டவன். சிலை போல் அமர்ந்திருந்தவளை நோக்கி குனிந்தவன், எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து, சம்பூர்ணா கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தம் சரி பாதி ஆக்கி கொண்டான் தங்க வேலு.