புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 18.2
பூர்ணா வீடு வந்து இரண்டு நாள்களுக்கு மேல் ஆகியும் வேலு வீடு வர வில்லை. அவனுக்கு தான் தெரியுமே பூர்ணா கோபம் பற்றி, வர மாட்டேன் என்றவளை பிள்ளையை வைத்து இழுத்து பிடித்தவன், அவள் அருகிலே இருந்து கோபத்தை தூண்டி விட அவனுக்கு என்ன பைத்தியமா!
பூர்ணாவின் நிதானம், அமைதி, பொறுமை எல்லாம் மகளிடம் மட்டும் தான். அவளின் பாசத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டவனை ஒரு கை பார்த்து விடுவாள். அதன் தொட்டு எழுந்த பயத்தில் தான், வேலுவின் மறைமுக நாடகம். அவளின் கோபம் ஆறாமல் களத்துமேட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை.
வேலுவின் எண்ணத்திற்கு தக்க தான் பூர்ணாவும், அவன் மீது கோபத்தில் இருந்தாள். ஊர் அறிய கணவன், மனைவியாக அறிய பட்டாலும், மனதளவில் துளி எண்ணம் கூட வேலுவின் மனைவியாக அவள் உணரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தங்களை பிணைத்திருந்தாலும், மனைவியாக அவன் வீடு செல்லும் நினைப்பெல்லாம் இருந்தது இல்லை. நெஞ்சில் உறவாடும் கனத்த தாலி கொடி வேலுவின் மனைவி என்று அறிவுறுத்தினாலும், அதன் உறவை ஆழமாக உணர்ந்ததில்லை.
வெற்று கழுத்தாக இருந்ததில் தற்போது ஏறி இருக்கும் கனத்த தாலி நொடி குறையாமல் வேலுவின் மனைவி தான் தன் என்று உணர்த்தினாலும், அதை ஏற்று பூரிக்கவெல்லாம் இல்லை, அதே நேரத்தில் அதை எண்ணி மன வேதனையில் துடிக்கவும் இல்லை. தாலிக்கான உறவை, அது கொடுக்கும் சொந்தத்தை கடந்து, மறந்து வாழ முன்னாடியே பழகி கொண்டாளே. அவளின் எண்ணம் எல்லாம் நட்பை அடிப்படையாக கொண்டு ஆரம்பித்த தங்கள் உறவு கணவன் – மனைவி என்ற நிலையிலா முடிய வேண்டும் என்பது தான். ஆண், பெண் பழக்கம் வெறும் நட்பாக மட்டுமே முடியாது என்று இவர்கள் உறவை எதிர்த்த பலருக்கும், அது உண்மை தான் என்பது போல் நடந்து விட்டதே என்ற மறுகல் தான் மனதில்.
பூர்ணா வீடு வந்த மறுநாளே, அனைவரின் வாய்க்கும் அவலாகி போனாள். பரிதாப பார்வை போய், தற்போது பொறாமை பார்வை தான் நிலை கொண்டது. “ இந்த வயசுக்கு பின்னாடி திருமணமா!, தாய் இல்லா பிள்ளையை பாக்குற மாதிரி வேலுவை பிடிச்சுட்டாளே, என்ன இருந்தாலும் பூர்ணா ராசி காரி தான் முன்னாடி கவர்மெண்ட் வாத்தியார், இப்போ பெரிய சம்சாரி வீடு, கொடியரசி இருந்தா உள்ளா கூட விட மாட்டாங்க, இப்போ அந்த வீட்டவே ராஜாங்கம் பண்றா! வள்ளி செத்தாலும் மகளுக்கு எப்படி ஒரு வாழ்க்கையை அமச்சு கொடுத்துட்டு போய்டா பாரு!, அவளுக்கு புருசன் இல்லா, இவனுக்கு பொண்டாட்டி இல்ல. விசயம் வேற மாதிரி போச்சு போல, அதான் யாருக்கும் சொல்லாம முடிச்சுட்டாங்க!”
ஊராரின் பேச்சு காதுக்கு வந்தாலும் அதை எல்லாம் ஒரு பார்வையில் கடந்து விட்டாள் பூர்ணா. இதை எல்லாம் எண்ணி முடங்கினால் என்றோ அவள் இறந்திருக்க தான் வேண்டும். அவள் முதல் திருமண வாழ்வின் போதே, பல கடந்து வந்தாகிவிட்டது. முகத்திற்கு நேரே பேசியவர்களையே கடந்தாச்சு, முதுகுக்கு பின் பேசுபவர்களுக்கு ஏன் காது கொடுக்கணும்!. அவளின் எண்ணம் எல்லாம் வேலு தான். பையன் இன்னும் கையில் சிக்க வில்லை.
வேலு வரும் போது பார்த்து கொள்ளலாம் , எப்படியும் வீடு வந்து தானே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் மகளோடு ஐக்கியமாகி விட்டாள். பவித்ராக்கும் தொடர் விடுமுறை இருக்க, இருவருக்கும் கொண்டாட்டம் தான். மகளின் சிரிப்பிலும், அன்பிலும் தான். தன் தாயின் இழப்பில் இருந்து தன்னை மீட்டு கொண்டிருந்தாள் பூர்ணா.
ஒரு நாள் மாலை பொழுதில் பால் கொழுக்கட்டைக்கு தாய், மகள் இருவரும் தயார் செய்து கொண்டிருக்க, வீட்டு வாசலில் யாரோ வரும் சத்தம். முதலில் நிமிர்ந்து பார்த்த பூர்ணா கண்டது, மெதுவாக பம்மி கொண்டு வரும் வேலுவை தான்.
“ஏட்டி பவி! யாரோ வீடு மாறி வந்துருக்காங்க! என்னன்னு கேட்டு அனுப்பி வை. இல்லனா உள்ளாரா வர வந்துருவாங்க!”
தாயின் சொல்லில் எழுந்து பார்த்த பவி, “ அம்மா! அது அப்பா! உங்களுக்கு தெரியலையா!”
“அட! யாரு நம்ம காட்டு ராசா மாவன! ஆமா! ஒருவழியா வீடு கண்டு புடிச்சு வந்துட்டியா!” என நக்கலாக கேட்க.
தலை கலைந்து, சட்டை வேட்டி எல்லாம் மண்ணாக, முகம் முழுக்க வேர்த்து கண்கள் ரெண்டும் சிவப்பாக இருக்க. நிலை சரியில்லாமல் வீடு வந்தான் வேலு. நக்கலாக பேசி கொண்டிருந்தவள், நெருங்கி வந்த வேலுவை பார்த்து அதிர்ந்து நிற்க.
மகளை ஒரு பார்வை பார்த்தவன், கண்களில் நீரோடு பூர்ணாவை பார்த்து கையெடுத்து கும்பிட!
தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவள். “ பவி! உள்ளாரா போய் படி! நானும், அப்பாவும் செத்த நேரத்தில வந்துறோம்!”
தாயையும், தந்தையும் பார்த்த சின்ன சிட்டு, மறுக்காமல் சரியென்று உள்ளே சென்றது.
“ ஏலே வேலு! நியி குடிப்பியாலே! எனக்கு தெரிஞ்சு உனக்கு அந்த பழக்கம் கிடையாதே!. இளந்தாரி பயலா இருக்கும் போது கூட தொட மாட்டியேலே! எப்ப இருந்து இந்த சகவாசம். எம்புட்டு நாளா நடக்குது. உன்கூடவே இருந்தும் நான் காணலையே! எங்கண்ண கட்டிப்பிட்டையே வேலு” என்று கண்களில் நீரோடு, நம்ப முடியாத அதிர்வோடும் பூர்ணா பேச.
தலை நிமிராமல் கண்ணீர் விட்டான் வேலு. தாமரையின் பிரிவு, அதை தொடர்ந்து தாயின் இழப்பு, கை குழந்தையின் கவனிப்பு, எல்லாவற்றையும் தானே சுமக்கும் பரிதவிப்பு, தனிமை, வழி காட்டும் தந்தை இல்லாமை என்று எல்லாம் ஒரு சேர தாக்க, தவறி போய் குடியில் விழுந்து விட்டான்.
வீட்டில் பெண் பிள்ளை இருப்பதால். பகலில் குடிப்பதோ, இல்லை குடித்து விட்டு சலசலப்பு, சண்டை இழுப்பதோ என்று எதுவும் இருக்காது. இரவில் தனியறையில் தன் வேதனை மறக்க குடிப்பவன், விடிந்தால் ஏதும் அறியாதது போல இருந்து கொள்வான். பெரியாத்தாவுக்கும் விசயம் தெரியும், தோலுக்கு மேல் வளர்ந்த மகனை எங்கனம் கண்டிக்க. அவனின் மனதில் இருக்கும் காயத்தை புரிந்து கொண்டவர், கண்டும் காணாமல் இருந்து கொள்வார். இந்த காலத்தில் யார் தான் குடிக்காமல் இருக்கா என்று எண்ணமும் ஒரு காரணம்.
பூர்ணாக்கு தன் கடந்த காலம் ஒரு நொடி கண் முன் வந்து போனது. குடித்து விட்டு நிதானம் இன்றி வண்டியில் ஏறி, நடந்த விபத்தில் தான் அவள் தந்தை இறந்தது. அண்ணாக துணை நின்ற பெரியம்மா மகன் மோகன் இறந்ததும் குடியால் ஏற்பட்ட கை கலப்பில் தான். அத்தோடு, கணவன் கதிரவனின் அத்தனை ஆட்டத்திர்க்கும் காரணம் குடி தான். தன் வாழ்வில் வந்த அனைத்து ஆண்களும் குடிகாரர்கள் தான். அதன் பாதிப்பு இருந்ததா என்றால் நிச்சயம் இருந்தது. தானும், தன் தாயும் பூண்ட விதவை கோலத்திற்கு முழு முதற் காரணமும் குடி தான்.
வேலுவை பற்றி மனதில் பெருமையாக நினைத்த ஒரு விசயம் இது தான். தற்போது அதுவும் அடி பட்டு போனது. அவளுக்கு கோபம் எல்லாம் வரவில்லை, முட்டி கொண்டு அழுகை தான் வந்தது. அவளின் அழுகை பார்த்த வேலு, அவளருகில் மண்டி போட்டு, இரு கைகளையும் பற்றி தன் நெற்றியில் வைத்தவன். உடல் குலுங்க அழுதான்.
கண்களில் நீரோடு என்னவென்று பார்த்த மனைவியை பார்த்தவன்.
“ ஏட்டி சம்மு! உமக்கு நான் துரோகம் செஞ்சுடேன்லே! உங்கூட நான் பழகுன பழக்கத்துக்கு உண்மையா இல்லாம போனேன். தாய பிள்ளையா பார்த்த உன்னிய தாரமாக்கிடேன். நான் பாவி! அயித்த, அம்புட்டு பெரிய மனுசி கையெடுத்து கும்பிட்டு கேட்கும் போது, மறுத்து ஒதுங்கி போகும் மனசு எனக்கு இல்லவே!. யாரோட கட்டாயமும் இல்லா, அத்த மறுக்க முடியாத படி கேட்டாக! நானும் மறுக்க முடியாம தலையாட்டிடேன்”
“எல்லாருக்கும் நல்லதுன்னு யோசனை பண்ணாலும், உமக்கு நான் செஞ்சது துரோகம் தாம்லே!. உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும்னு நினைச்சு எனக்கு அமைச்சு கிட்டனோ! மனசு கிடந்து அடிச்சுக்குது”
“நியி என்ன தண்டனை குடுத்தாலும் கை கட்டி வாங்கிறேன்! சிறு துளி கூட எம் மனசுல தப்பு இல்லவே. ஆனா, ஊர் முன்னாடி உன்னிய சங்கட படுத்திடேன்ல! எம் மவள மட்டும் நினைக்கலவே, உன்னியும் யோசிச்சு தான் முடிவெடுத்தேன். ஆனா, உன்னை கேட்காம எடுத்துட்டேன். என் சம்மு எம் மேல வச்ச நம்பிக்கையை ஓடச்சுட்டேன்லே!” என்று அழுக அவனுக்கு என்ன? பதில் சொல்ல, பெருமூச்சு தான் வந்தது பூர்ணாக்கு.
“எல்லாம் விதிலே! நம்ம தலையெழுத்து இப்படின்னு இருக்க. யார நோக! . அடிச்சு பிடிக்க இந்த பருக்கு மவளுக்கு யாரு இருக்க? உன்னிய விட்டா. கொஞ்ச கோபம் தான், அது ஆறி போச்சு. இனி, புலம்பி ஒன்னும் ஆகது. போய் ஆக வேண்டிய வேலையை பாருலே” என்று எழுந்தவள்.
பின், அவன் புறம் திரும்பியவள். “ எம்புட்டு நாளா, இந்த கருமம் வேலு?”
குனிந்த தலை நிமிராமல் இருக்க. அவனிடம் ஒன்னும் தேராது என்று கண்டு. அமைதியாகவே எடுத்து சொன்னாள்.
“குடி குடும்பத்த கெடுத்திடும் வேலு. ஏதோ காரணம் இன்ன வரைக்கும் குடிச்ச. இனி வேண்டாம் என்ன?”
அவனிடமிருந்து வெறும் தலையாட்டல் மட்டுமே.
“எங்கப்பன் செத்து, ஒத்த பிள்ளையோட எங்கம்மை தனியா நின்ன மாதிரி! எங்க ரெண்டு பேரையும் ஒத்தைல நிக்க வச்சுராத வேலு! காலத்துக்கும் கூட இருப்பேன்னு வந்துட்டேன். தனி கட்டையா ஆக்கி பிடாத”
“அப்பன் ஆதரவு இல்லாம. நானும், அம்மையும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. சீரழின்சிட்டேன், அந்த வலி, வேதனை என்னோடு போகட்டும். எம் மவளுக்கு வேணாம்” என்று கண்ணீரோடு பேச,
பதறிய வேலு, அவள் கை பிடித்து. “ ஏட்டி! எதுவும் சொல்லிப்பிடாத! மன வேதனை, ஆத்தமாட்டாம தான். இனி, தொட மாட்டன்லே சத்தியம்!” என்க.
மன நிறைவோடு புன்னகை செய்தவள். “ ஏலே வேலு. வெறும் வாய் வார்த்தைக்கு சத்தியம் செய்யலையே. குடிகாரன் பேச்சு! நான் அறியாததா. குடிகார அப்பன், குடிகார அண்ணன், குடிகார புருசன்னு பார்த்தவ. சொன்ன வார்த்தையை காப்பாத்தள, வகுந்துடுவேன் வகுந்து” என மிரட்டி விட்டு தான் உள்ளே சென்றால்.
எந்த சூழலோடும் பொருந்தி போகும் பூர்ணா. வேலு வீட்டோடும் பொருந்தி போனாள். அவளின் தினசரி வழக்கம் என்னவோ அது தான் வேலு வீட்டின் நடைமுறையாக மாற்றி விட்டாள். அப்பா, மகள் இருவரும் அவளோடு ஒட்டியே தான் நடந்தனர். அவளின் பழக்க வழக்கத்தை தான் அவர்களும் கடை பிடித்தனர். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருந்த வீடு, அவளின் கை வண்ணத்தில் ஒரு ஒழுங்கமைப்புக்கு வந்தது.
அதுவும், பவித்ரா முழுக்க முழுக்க பூர்ணா வசம் தான். அம்மா என்ன சொன்னாலும் அவளுக்கு அது தான் வேதம். பூர்ணாவிற்கும் நிகழ்காலம் சமரசம் வீசியது. என்றோ ஒருநாள் முகம் தெரியாத ஒருவனோடு கண்ட கனவு, இன்று நிறைவேறியதைப் போல் இருந்தது. ஆனால், காதலோடு வாழும் வாழ்க்கை தான் இல்லை. இல்லாவிட்டால் போகிறது மன நிம்மதியோடு வாழும் வாழ்க்கை கையில் இருக்கிறதே. எதிர்காலம் இருட்டாக இல்லாமல் நேர் பாதையில் ஒளி தோன்றி அழைக்க, வாழ்ந்து தான் பார்ப்போமே என்னும் புது துணிவோடு இறங்கி விட்டாள் பூர்ணா.
அதி காலையில் எழுந்து வேலுவோடு காட்டிற்கு செல்பவள், லோடு ஏற்றி அவனை அனுப்பி விட்டு, அந்த ஒத்தையடி பாதையில் பறந்தோடி வருவாள் மகளை பள்ளிக்கு அனுப்ப. எது நடந்தாலும் பூர்ணாக்கு முதல் தேவை பவித்ராவை கவனிப்பது தான். வெறும் கலவை சாதமெல்லாம் இப்போது இல்லை. விதவிதமாக கூட்டு, பொரியல், அவியல் என்று தினம் ஒரு விருந்து தான். உணவு பண்டம் கூட மகளுக்கு என்று வீட்டிலேயே சிறப்பாக செய்து , தினம் ஒரு பழச்சாறு என்று மகளை அசத்தி விடுவாள். மதுரையில் இருக்கும் போது, அவள் தான் பார்த்திருக்கிறாளே, அவள் தெருவாசிகள் தங்கள் பிள்ளைகளை கவனிப்பதை. அப்போதே முளைவிட்ட ஆசை, தனக்கு ஒரு பிள்ளை என்று, பத்து வருடத்திற்கு பின் தற்போது தான் நிறைவேறியது. ஏதோ இப்போது தான் தொடக்க பள்ளியில் சேர்த்தது போல் ரவுண்டு கட்டி மகளுக்கு செய்வாள்.
மகள் பள்ளி செல்ல, வேலு வந்து விடுவான். பின், இவர்களுக்கான நேரம், காலை உணவை முடித்து கொண்டு, மதிய உணவுவோடு. அடுத்த கட்ட தோப்பு வேலைக்கு சென்று விடுவார்கள். வேலையில் தயக்கமெல்லாம் பூர்ணாக்கு கிடையாது. சரிக்கு சரியாக வேலுக்கு தோது போட்டு வேலை செய்பவள். மதிய நேரம் வேப்ப மரத்தடியில் இருவரும் ஒரு குட்டி தூக்கம் போட்டு, திரும்ப பழையபடி தங்கள் வேலையை தொடருவர்.
தாம்பத்திய சுகம் கடந்து, சாகும் வரை துணை நிற்கும் பிணைப்பை உருவாக்குவது நடுத்தர வயது தானே. உடல் ரீதியான தேவைகளின் அவசியம் குறைந்து, மனரீதியான தேவையை அதிகரிக்கும். காதல் தாண்டி புரிதலும், பரஸ்பர அன்பும், அனுசரிப்பும் தாம்பத்திய வாழ்வை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும். முதல் கட்ட காதல் இல்லையென்றால் என்ன? அடுத்த கட்ட புரிதலும், அன்பும் இருக்க, வாழ்க்கை தெளிந்த நீரோடையாக தெரிந்தது வேலுக்கு.
அன்று, தக்காளி லோடு ஏற்றும் வேலை இருக்க, கணவன் – மனைவி இருவரும் அதிகாலையிலேயே மற்றவர்களோடு வேலையை தொடங்கி விட்டனர். முதுகு வலிக்க நிமிர்ந்த வேலு, அருகிலிருக்கும் மனைவியை திரும்பி பார்க்க. மடி கூட்டி பழம் பறித்த பூர்ணா, நாலை மடியில் சேர்ப்பதும், நாலை வாய்க்குள் போடுவதுமாக இருந்தாள். அவளை சிரிப்போடு பார்த்தவனை முறைத்தவள்,
“நல்ல கனிஞ்ச பழம் வேலு, அம்புட்டு ருசி! உனக்கு என்னா தெரியும். வாய் நமநமங்குதுலே” என்று பேசி கொண்டே, அடுத்தடுத்து உள்ளே தள்ளினாள். லோடு ஏற்ற கூடையை எடுத்தவன், வேலை செய்தவர்களுக்கு வீட்டுக்கு பழம் எடுக்க சொல்ல, தடுத்து விட்டாள் பூர்ணா.
“இங்கரு வேலு! வெள்ளாமைல வருமானம் பாக்குறது ஒன்னும் லேசு பட்ட காரியமில்லை. லோடு ஏத்துற காயை வீட்டுக்கு அள்ளி போக சொல்றவன். வேலைக்கு ஓசி இல்லையே! கூலி தான் கொடுக்கிறையே. அப்புறமென்னலே, ஒரு கிலோ தக்காளி நூறுக்கும் போச்சு, அஞ்சு கிலோ தக்காளி நூறுக்கும் போச்சு. காலையில லோடு ஏத்துறோம்,பொழுசாய சும்மா தானே கிடக்கு அள்ளிட்டு போகட்டும். இப்ப கூடையை கட்டுலே” என்று அவனை சத்தம் போட, மறு பேச்சில்லாமல் கூடையை கட்டினான்.
“கூலி காரிக்கு, சம்சாரி யோகம் வந்தா, பவுசு தூக்கத்தான் செய்யும்” என்று முணங்குவது கேட்டாலும்,முகம் மாறாமல் கூலி கொடுத்து அனுப்பி விட்டாள். அது ஒரு ஒத்தையாடி பாதை நடந்து சென்று தான், ஆட்டோவில் ஏற்ற வேண்டும். வேலு ஒரு கூடையை தலையில் சுமந்து திரும்பி பார்க்க, பூர்ணாவும் ஒரு கூடையை தலையில் சுமந்து வரப்பில் ஏறி நின்றாள். அதிர்ந்து போன வேலு,
“ஏட்டி! என்னாலே செய்றவ, ஒத்த வரப்பு விழுந்தா இடுப்பு போகும், கூடையும் கணம். விடு சம்மு நான் பார்த்துகிடுதேன்!”
அவனை அசால்ட்டாக ஒரு பார்வை பார்த்தவள், “ எட்டி நடையை போடுலே! நான் ஒன்னும் தெரியாதவ பாரு. நேத்து கல்யாணமான பருவ சிட்டாக்கும், அப்படியே தாங்குறவன். களத்து மேடு, கம்மாக்கரைன்னு சுத்துனவ தானே. இது ஒரு கணமா! விறகு கட்டு, அரிசி மூடன்னு தூக்குன உடம்பு தான், எதையும் தாங்கும். உம் கரிசனமெல்லாம் வேண்டாம்!” என்றவள் பாதை பார்த்து நடையை போட, வேலுக்குதான் பயமாக இருந்தது. ஒத்த வரப்பு சேரும், செகதியுமாக இருக்க. வழுக்கி விழுந்தால் கருவேல முள் தான் மெத்தை. ஆனால், கொஞ்சமும் பயமின்றி வேலுவோடு சரியாக தக்காளி கூடை சுமந்து லோடு ஏற்றி அனுப்பி விட்டு, மகளை காண வீடு வந்து விட்டாள்.
பூர்ணாக்கு, காலை நேரம் சக்கரம் கட்டாத குறை தான். அதிகாலை காட்டு வேலை, இரு வேளை சமையல், மகளின் தேவை என்று உட்கார கூட நேரமில்லாமல் ஓடுவாள். அது, அவளுக்கு பிடித்தமும் கூட, தன் வீட்டு வேலையை தானே செய்வதில் ஒரு திருப்தி.
அன்று பள்ளி விடுமுறை தினமாக இருக்க, பவித்ராவையும் தோட்டத்திற்கு உடன் அழைத்து சென்றாள். வேலு தான்,
“ புள்ளை எதுக்குலே! வெயிலு வேற சரி போடு போடுத்து” என்க.
“ சம்சாரி மகளே காடு வர தயங்குன! சாதாரண மக்கள என்னத்த சொல்ல. நம்ம அந்த வெயில்ல தானே திரிஞ்சோம்! எம் மவளும் பழகட்டும். அப்பதான் மண்ணோடு ஒட்டுதல் வரும், பின்னாடி இதெல்லாம் யாரு பார்ப்ப்பா!” என்று பிடிவாதமாக அழைத்து சென்றாள்.
வெளி வாசலில் தாமரை அமர்ந்திருக்க, மூவர் பார்வையும் நொடி கூட திரும்ப வில்லை. ஆனால், தாமரை பார்வை மட்டும் மகளை விட்டு அசையவே இல்லை. கூடையில் உணவோடு பூர்ணா முன்னே நடக்க, கையில் கொத்து களை கொண்டு வேலு பின்னே வந்தான். தோட்டம் செல்லும் மகிழ்ச்சி பவித்ராக்கு, துள்ளலோடு முன்னே சென்றாள். தாயின் கை பிடித்து ஏதோ சுவாரஸ்யமாக பேசுவதும், தந்தையை கேலி செய்து சிரிப்பதும், பின் இருவரையும் சுற்றி வருவதும் என்று கலாட்டா தான்.
மகளை அங்குலம் அங்குலமாக அளவெடுத்தால் தாமரை. “அவள் தந்தை போல் நீல முகமாக இருந்தாலும், கண்கள் தன்னை மாதிரி உள்ளதோ! முடி கூட தன்னை மாதிரி தானோ, குழந்தையாக இருக்கும் போது சுருண்டு கிடந்தது, தற்போது நீண்டு கிடக்கே. காலை சற்று குறுகி நடக்கும் நடை, தன் நடையே தான். சிரிக்கும் போது தெரியும் பெரிய பெரிய பல் கூட தன்னை போல் தான்”. அய்யோ! என் மகள்! என் ஜாடையில்!
தாமரைக்கு மனம் அடித்து கொண்டது, இழப்பின் வலி அதிகம் என்று தெரிந்ததால். கடந்த காலத்தை மீட்கவும் முடியாமல், நிகழ் காலத்தில் சேரவும் முடியாமல், மகளை எண்ணி துடித்து போனாள். சொந்தமாக கூட நெருங்க முடியாதே! உள்ளம் பதற குடும்பத்தோடு செல்லும் மகளையே பார்த்து நின்றாள் தாமரை.
நிழல் பாங்கான இடத்தில் மகளை அமரச் செய்த பூர்ணா. கத்தரி காய் பறிக்க, வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்த பவித்ரா. நேரம் செல்ல செல்ல தம் தாய் – தந்தையோடு இணைந்தது கொண்டாள். பூர்ணா எதிர்பார்த்ததும் இது தான், மண் மீதான பிணைப்பு தன்னாலே தோன்ற வேண்டும் என்று.
மதிய நேரத்தில் உணவை முடித்த பின், அங்கிருந்த கயிற்று கட்டிலில் மகளை படுக்க வைத்தவள், நீரோடிருந்த ஈர வாய்க்காலில் உடல் அழுந்த அவளும் சாய்ந்தாள். குளு குளுவென இருக்கும் ஈர மணல் அவ்வளவு சுகம். இவர்கள் இருவரையும் பார்த்தவாறு நிம்மதியோடு அமர்ந்திருந்தான் வேலு.
நடுத்தர வயது தாம்பத்திய வாழ்வின் இனிமையை அனுபவித்து கொண்டிருந்தான். முன்பெல்லாம் வேலை முடித்து ஆட்கள் சென்ற பின் ஒத்த காட்டில் தனியே சுற்றுபவனுக்கு, தற்போது துணையாக மனைவி உடன் இருக்கிறாள். ஏதேனும் ஒரு பேச்சு அவர்களுக்குள் ஓடி கொண்டே தான் இருக்கும்.
“ஏலே வேலு! இந்த வருசம் நெல்லு வித்த காசுல புள்ளைக்கு நகை வாங்கணும்ல! கவிதக்கா மகளுக்கு எடுத்த மாங்கா மாலை எங்கண்ணுக்குள்ளே நிக்குது. அதே மாதிரி ஒன்னு நம்ம புள்ளைக்கும் எடுக்கணும்ல” என்க.
“ஏட்டி சம்மு! சின்ன புள்ளைவே! எப்ப என்ன அவசரம். பொருத்து செய்வோம்! இது எல்லாம் வேற யாருக்கு. எல்லாம் உம் மவளுக்கு தான்”
“ பொட்ட புள்ளை பொறந்தது தான் தெரியும். ஆளாகி நிக்குறது யாருக்கு அம்படும். பெத்தவளுக்கு தான் கதி. கல்யாணம்ன்னு நிக்கைல தான் பார்ப்பையோ! அப்பா நமக்கு கடவுள் என்ன வழி விடுதோ! யாருக்கு தெரியும். நாம நல்லா இருக்கும் போதே புள்ளைக்கு சேர்த்துபுடனும்”
வேலுவின் முகம் யோசனையை காட்டியது. இதுவரை, மகளுக்கு என்று நகை எதுவும் தனியாக செய்ததில்லை. அவனுக்கு மகள் எப்போதும் குழந்தை தானே. குழந்தை, பெரிய பெண்ணாகி விட்டாள் என்று எடுத்து சொல்வதற்கும் தாய் வேண்டுமே! பூர்ணா சொல்வது போல் பின்னாடி என்ன நடக்கும் என்று யார் கண்டார்? தங்கம் விக்கிற விலைக்கு பெண் பிள்ளை பெற்றோர் தற்போதிருந்தே சேமிப்பை தொடங்க வேண்டும். அது தான் நிதர்சனம் என்று புரிய, மனைவி சொல்லுக்கு மறுக்காமல் தலையாட்டினான்.
மூவரும் திரும்பி வீடு வரும் போதும், வெளியே நின்றிருந்த தாமரையின் பார்வை, பவித்ராவை தான் வட்டமிட்டது. அதை, வேலு – பூர்ணா உணர்ந்தாலும், பவித்ரா திரும்பி கூட பார்க்கவில்லை. அதையும் கவனித்தே இருந்தனர் தம்பதிகள். பூர்ணாக்கு மனது என்னவோ போல் இருந்தது. பவித்ரா அவள் மகள் தான். அது உறவு ரீதியாக வந்ததே தவிர, உரிமையாக இல்லையே. வேலுவின் மனைவி என்பதை கொண்டு பவித்ராவின் தாய் . ஆனால்,தாமரை வேலுவின் மனைவியாக இல்லாவிட்டாலும் அவள் பவித்ராவின் தாய் தானே.
தன் மகளாக மட்டுமே பார்த்த பவித்ராவை, தாமரையின் மகளாக நினைக்க கூட முடிய வில்லை. ஆனால், பத்து மாதம் சுமந்து பெத்தவள் உரிமை கேட்கும் போது, மற்றவள் ஒதுங்கி தான போக வேண்டும். அவளின் நியாய மனம், தாமரையின் சார்பாக வாதாட சோர்ந்து போனாள். தாமரையின் கண்களில் தெரிந்த ஏக்கமும், பாசமும் அவளுக்கு பரிதவிப்பை உண்டு பண்ணியது.
“ஏட்டி சம்மு! நீங்க வீட்டுக்கு போங்க. மணி என்னைய வர சொன்னான். ஒரு எட்டு என்னனு பார்த்துடு வந்துறேன்” என்று மனைவியிடம் சொல்லிய வேலு. மாற்று பாதையில் செல்ல தொடங்க.
ஒரு பெருமூச்சுடன் முன்னே நடந்தவள் ஏதோ ஒரு யோசனையில் திரும்பி பார்க்க. தாமரை தான் இடம் விட்டு அகலாது பவித்ராவையே பார்த்து நிற்க. அவசரமாக மகளின் கையோடு தன் கையை கோர்த்து பூர்ணா, விறுவிறுவென முன்னே செல்ல, கண்கள் ரெண்டும் நீரால் நிறைய வீட்டிற்குள் நடந்தாள் தாமரை.
இரவு உணவு முடிந்து, மகள் உறங்கிய பின்னும் வேலு வீடு வந்து சேர வில்லை. அவனுக்காக காத்து வெளி வாயிலில் நின்று கிடந்தாள் பூர்ணா. ஏதேனும் அவசரம் என்றால் சொல்லி விடுவான், தாமதம் எல்லாம் செய்ய மாட்டான். அப்படி இருக்க, இன்னும் காணலையே என்று மனம் புலம்ப தொடங்க.
“என்னக்கா! தெருவ பார்த்தே நிக்குறீங்க? மச்சான இன்னும் காணலைய? எப்படியும் நடுசாமம் ஆகி போகும். நீங்க போய் படுங்க” என்று மணியின் மனைவி வனிதா சொல்லி செல்ல,
முழித்த பூர்ணா, “ என்னாலே சொல்ற? விவரமா சொல்லிடி! அவுக எங்க போய்ருக்காகன்னு உமக்கு தெரியுமால?”
“ தெரியாம என்ன? வெள்ளி கிழமையான நம்மூர் ஆம்பளைக முக்காவாசி அங்க தானே குடியிருக்குக! உம் புருசனும், எம் புருசனும் அங்கதான். கள்ளு கடையே கதின்னு கிடக்குங்க! என்று வனிதா சொல்லிய நொடி, அதிர்ந்த பூர்ணா,
“என்னாலே சொல்ற! நெசமாத்தான? இனி மேட்டு குடிக்க மாட்டேன்னு எம் கைல அடிச்சு சத்தியம் செய்தானே” என்று மறுக.
“ மம்க்கூம்! எம் புருசன்லாம் தினக்கி ஒரு சத்தியம் பண்ணி காத்துல ஊதி விட்டு போயிடுவான். நீயி வேற அதை நம்பினாக்கும். பங்காளிக ரெண்டு பேரும், இப்ப கள்ளு கடைய தான் பங்கு பாக்குறாங்க. எம் புள்ளைக தனியா கிடக்கு, வீடு போறேன்கா” என்று தன் போக்கில் சொல்லி விட்டு நடையை கட்ட.
வேலுவின் மற்றொரு பரிமாணத்தில் அதிர்ந்து நின்ற பூர்ணாவின் மனதில் தந்தை முகமும், கதிரவன் முகமும் மாறி மாறி தோன்ற. சேலையை இழுத்து சொருகியவள். பக்கத்து வீட்டு படிவத்தாவிடம்,
“ஆயித்த! உள்ளாரா புள்ளை தூங்கது. நியி செத்த பார்த்துக்க! உம் மவனுக்கு புது மாப்பிள்ளை சோக்கு தீரல போல, கொஞ்சம் மந்திரிச்சு விட்டுவாறேன்” என நக்கலாக சொன்னவள், வெளி வாசலில் கிடந்த வாசல் கூட்டும். கட்டை விளக்கமாறை கையில் எடுத்தவள்,
“ஏலே வேலு! குடிகாரன் பேச்சு, விடுஞ்சா போச்சுன்னு காட்டிட்டியே! இந்தா வாரேன். உம் முதுகு முக்காத்துட்டு பெறாது” கோபம் முகத்தில் கொப்பளிக்க, ஊர் எல்லையை நோக்கி வேக நடையை போட்டாள்.
அங்கே, முழு போதையில் நிதானமின்றி வேலு விழுந்து கிடக்க, தட்டு தடுமாறி எழுந்த மாறன், அந்த ஒத்தையடி பாதையில் கையில் விளக்கமாறுடன் நடந்து வரும் பூர்ணாவை பார்த்தவன்.
“ஏலே வேலு! வேட்டைக்கு போற சாமி, நம்மளை நோக்கி வருதுல! எந்திருச்சு ஒரு வணக்கத்தை போடு”
தள்ளாடிய படி எழுந்த வேலு, கை கூப்பி சாமி என்று முணங்கிய படி நிமிர்ந்து பார்த்தவன். அரண்டு போனான், பூர்ணா உக்கிர பார்வையில்.
வாய் குளரியபடி “சம்மு” என்று சொன்ன நொடி, முகத்தில் விழுந்தது முதல் அடி.
இன்னும் அரண்டு போனவன், “ ஏட்டி நான்” என்று ஆரம்பிக்க அடுத்த அடி தோளில்.
“ நான் சொல்றத கேளு” அடுத்தடுத்து தொடர்ந்து அடி தான்.
“ காத்துல பட்டம் விடுற மாதிரி, செஞ்ச சத்தியத்தை பறக்க விட்டியேலே! இந்த காலு தான இனி இந்த பாதை வழி வருமா! இந்த கை தான இனி தொடுமா! இந்த வாய் தான இனி கேக்குமா!” என்று அடி வெளுத்து விட்டாள்.
அங்கிருந்த ஒருவருக்கும் முகத்தில் ஈயாடவில்லை. குடித்தால் எல்லார் வீட்டுலையும் சண்டை வருவது தான். கை கலப்பு கூட வீட்டில் தான், கள்ளு கடை வரை வந்து அடிப்பது பூர்ணா தான். ஒத்த பொம்பிளை அடிக்க, சுற்றி இருக்கும் அத்தனை ஆண்களும் பார்த்தே நின்றனர். நெருங்கும் துணிவு யாருக்கும் இல்லை. அவ்வளவு ஆக்ரோஷம் அவள் முகத்தில். இழப்பின் வலி அவளுக்கு மட்டும் தானே தெரியும்.
அரண்டு நின்ற மாறன், “ ஏட்டி சம்மு! வருசம் சென்டு சம்மந்தம் பண்ணனும். இவ்ளோ பெரிய ஆம்பளை மேல கை வக்கிறையே! எம்புட்டு ஏத்தம் உனக்கு?” என்று சத்தமிட
“ ஏத்தம் தான். அதுக்கு இப்ப என்னாங்குற! நாளைக்கு அவன் விழுந்து கிட்டா நீயா பார்ப்ப! எடுக்க, கொள்ள நான் தானே பார்க்கணும். அவன் இல்லன்னா ஒத்த பொட்ட புள்ளையா நீயா கட்டி கொடுத்து நல்லது, கெட்டது பார்ப்ப. உம் வீட்டு வாசலுக்கு வந்து நிக்க முடியுமா! ஒன்னும் ஆவாதுல அப்ப மூடிக்கு போடா! எம் வீட்டு சமாச்சாரம் உனக்கேதுக்கு! குறுக்கால வந்த குறுக்கிலையே மிதிப்பேன். எந்தங்கச்சி ஒன்னும் சொல்ல மாட்ட, இன்னும் ரெண்டு சேர்த்து போட தான் சொல்லுவா!” என்று அவனுக்கு ஒரு அரட்டல் விட மடங்கி போனான்.
முழு போதையில் இருந்த வேலுக்கு ஒரு சுரணையும் இல்லை. உடம்பு முழுக்க வரி வரியாக கோடு விழுந்து, இரத்தம் கட்டி வீங்கி போய் கிடந்தது. அவனை அப்படியே போட்டு வீட்டை நோக்கி நடையை போட்டாள் பூர்ணா.