புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 19.2
என்ன புடிக்கலையாவா? நல்லா கேட்ட போ! நம்மூர் வாசத்துக்கு மனசு ஏங்கும். ஆனா, யார் கிட்ட கேட்க. அம்மா வயசானவங்க, இம்புட்டு தூரம் வாரதே பெருசு. அப்புறம் உம் புருசன் ஏதாவது முக்கிய விசேசம்னா தான் அக்கான்னு ஒருத்தி இருக்கிறதே அவனுக்கு தெரியும் போல, மத்தபடி ஒரு போனு கூட கிடையாது. வயசு பிள்ளைக ரெண்டு பேர வச்சு கிட்டு எங்குட்டு நடையை கட்ட” என்று சலித்து கொண்டவள்.
“காய் வாசம் இழுக்குது, நம்ம தோட்டத்து காய் எண்ணெய் கத்தரிக்காய் போட்டு சுடு சோறுல உருட்டி சாப்ட, சட்டி சோறு காணாது. இங்கெல்லாம் உருட்டு தக்காளி தான், நம்ம காட்டு தக்காளி சக்கரையா இனிக்குமே. மல்லிகைப்பூன்ன நம்மூர் வாசம் எந்த பூக்கும் இல்லவே! சுரைக்காய் கூட்டு கறி குழம்பே வேணாம் அம்புட்டு ருசியா இருக்கும்” என்று பிறந்த ஊர் பெருமைகளை வாணி அள்ளி விட, வாய் மூடாமல் கேட்டு கொண்டிருந்தான் வாணன்.
“நம்மூர் சோனை தண்ணிய கூட கொண்டு வந்துருக்கேன் மதினி” என்று பூர்ணா தர,
சேலை எல்லாம் நனையுமாளவு தண்ணியை குடித்த வாணி. “ வயிறே நிறைஞ்சு போச்சு சம்மு. ஊர் மெச்ச சீர் செஞ்சவங்க, இதெல்லாம் பார்த்து பண்ணல. எல்லா ஊர்லையும் எல்லாம் கிடைக்கும் தான், ஆன மணம் ஒவ்வொரு ஊருக்கும் தனி இல்லையா!. சட்டுன்னு போற தூரத்துல நான் வாக்கப்படல. அம்மாக்கும் வயசு போய், எந்தம்பிக்கும் வாழ்க்கை கேட்டு, நான் யார்ட போய் செல்லம் கொஞ்ச. சொந்தன்னு இன்னிக்கு தானே வந்துருக்கான். அங்க வேற பொம்பளைக இல்லை நான் யார் கிட்ட பொறந்த வீட்டு பவுச காட்ட சொல்லு” என சோகமாக வாணி பேச,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. தங்கள் வீட்டு பெண் மனதில் இவ்வளவா என்று வேலு, பெரியாத்தா இருவரும் மலைத்து நிற்க. கலைவானனுக்கு மனைவியின் ஏக்கம் இப்போது தான் புரிந்தது. பிள்ளைகள் இருவரும் பெரியவர்களாக வளர்ந்து நிற்க, குடும்ப பொறுப்பு, கடைமை, பொருளாதார நிலை, பிள்ளை படிப்பு, எதிர்காலம் என்று நடுத்தர வயதின் மேல் நிலையில் நிற்கும் தன் மனைவிக்கும் விளையாட்டுதனமான ஏக்கங்கள் இருக்க தான் செய்யுமோ! எந்த வயதிலும் பெண்களுக்கு பிறந்த வீட்டு சுகம் அலுப்பதில்லை போலும்!.
“ஏன் மச்சான்! உங்கவூர் தண்ணி கூட வாசம் வீசுமா என்ன?” என கிண்டல் தொனியில் வாணன் கேட்க,
“காத்து கூட மணக்கும் அண்ணே! புகை, புழுதி இல்லாம, காத்துல வர ஈர வாசம் நடு மண்டை வர சம்முண்ணு மணக்கும். மண்ணை உழுது வரும் புழுதி கூட வாசமா தான் இருக்கும்” என்று அடுத்த பட்டிமன்றத்துக்கு பூர்ணா தயாராக,
ஒரு சிறு சிரிப்போடு வெற்றி கரமாக பின் வாங்கி விட்டான் கலைவாணன். பூர்ணாவின் கலகல பேச்சில் பொழுது நன்றாக செல்ல, வந்து சேர்ந்தான் வாணியின் புதல்வன் ராகவ். பதினேழு வயதில், சிவந்த நிறத்தில், அரும்பு மீசையோடு சிரித்த முகமாக பேசியவனை முதல் பார்வையிலேயே பிடித்து போனது பூர்ணாக்கு. மனதில் ஏதேதோ கற்பனை வளம் வர, உற்சாகமா தன் மதினியோடு பேச ஆரம்பித்தாள்.
பூர்ணாவின் பேச்சில் அதிகமாக ராகவின் பெயர் அடிபடவும் சுதாரித்து கொண்டான் வேலு. மனைவியை ஊர்ந்து கவனிக்க, அவளின் எண்ண ஓட்டம் புரிந்து பதறி போனான். வெள்ளந்தியாக வாணி பதில் சொல்ல, விசமமாக தான் பூர்ணா கேள்வி இருந்தது. யாரும் கவனித்து கேட்கும் முன், மனைவியை தனியே தள்ளி கொண்டு வந்தவன்.
“ ஏட்டி சொம்பு! கூறு கெட்டு போச்சா உமக்கு?” என்று வேலு கடிந்து கொள்ள.
“இப்ப என்னாலே ஆகி போச்சு! பொம்பள பிள்ளையை பெத்தவக நாம. நாலும் பொருத்தமா நிக்க, மனசு நினைச்சுச்சு. இப்பவேவா எல்லாம் ஆக போது. காலம் வரும் போது பாப்போம். சொந்தத்தில நல்லது நிக்க, ஒரு ஆசை தான் வேலு” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல். அவன் மனதையும் கரைத்தாள்.
“இங்கரு வேலு! உங்கக்காவும், மாமாவும் நல்லவங்களா தான் தெரியுராங்க. இந்த காலத்துல யார நம்ப முடியுது. சொந்தம்ன நல்லது, கெட்டது எதுனாலும் அனுசரிச்சு இழுத்து போகும்ல! நமக்கும் ஒத்த பிள்ளை, நாளபின்ன வேறுபாடு வராது. வீடு, வசதி, குணம், பழக்கம் எல்லாம் சுகம் தான். அதான் ஒரு ஆசை” என்று பூர்ணா விளக்கம் கொடுக்க,
மனைவியின் பதில் மனதில் அடுக்கடுக்கான ஆசையை உண்டு பண்ண, ஒரு நொடி நினைத்தாலும். மறு நொடி மனதில் தாமரை முகமும், தாய் மாமன் முகமும் தோன்றி மறைய, அதை தொடர்ந்து நடந்த சம்பவமும் மனதை நிறைக்க. உள்ளம் குலுங்கியது, போதும் சொந்தம் என்ற உணர்வு தான் வேலுக்கு. கடைசி வரை அக்கா என்ற உறவாது தொடரட்டும் என்று என்னியவன்.
“உம் கனவு பேச்சு எல்லாம் போதும் சம்மு. எங்கிட்ட சொன்ன மாதிரி ஆத்தா கிட்ட சொல்லாத. நியி நினைக்கிறது எதுவும் நடக்காது. எம் மாமனும், எங்கம்மைகளும் எம்புட்டு உசுரா இருந்தாகன்னு உமக்கு தெரியும் தானே! கடைசில என்ன ஆச்சு, செத்த இலவுக்கு கூட நிக்க முடியாம போச்சு! ஒன்னுக்குள்ள ஒன்னு சம்மந்தம் பண்ணி பட்டதெல்லாம் போதும் சம்மு. கஷ்ட நஷ்டதில கூட நிக்குற உறவு, பேசி ஒதுக்கி வைக்க விரும்பல” என்று மனம் நொந்து வேலு பேச,
பூர்ணா ஒரு பெருமூச்சு விட்டவாறு, “ எங்கம்மையும் புலம்புனாக என்னான்னு, சொந்தத்தில ஒரு மாப்பிளை இல்லாம போச்சே, நிறையோ – குறையோ சொந்தம் அனுசரிக்கும்ன்னு. நம்ம தலைவிதி கெட்டு போனோம். நம்ம புள்ளைக்கு கடவுள் நல்ல வழி விடும் வேலு. தப்பான யோசனையை விடு”
“ இப்ப இருக்குற காலம் வேறலே. நாமலாம் பெத்தவங்க சொன்ன மறுபேச்சில்லாமா செய்வோம். இந்த கால பிள்ளைக கிட்ட எதிர்பார்க்க முடியுமா! நம்ம புள்ளைனாலும் நம்ம விருப்பத்தை திணிக்க கூடாதுலே!” என வேலு புரிய வைக்க.
“அத வேணா ஒத்துகிறேன் வேலு. இருந்தாலும் மூணு மாடி வீடு, ரெண்டு காரு, நல்ல குணமாவும் இருக்கான்” என ஏக்கமாக சொல்லியவள், அங்கிருந்த பளிங்கு தூணை தடவி, “எம் மக வீடா வருமா வேலு”என்று ஒரு கேள்வி கேட்க.
“செருப்பு தான் வரும், போடி முன்னாடி” என அரட்டல் போட்டு இழுத்து சென்றான்.
“ஐயே! வயசு புள்ளை இருந்தா, பெத்தவளுக்கு தோணத்தான் செய்யும். அதுக்கு போய் வையுறவன்!” என்று முனங்கி கொண்டே தான் உடன் சென்றாள்.
இரவில் பவித்ராவை தங்களுடன் வைத்து கொள்கிறோம் என்று வாணி எவ்வளவு எடுத்து சொல்லியும். பூர்ணா கேட்க வில்லை. “ பவி இல்லாம எனக்கு தூக்கம் அண்டாது மதினி” என்று கூட்டி சென்றாள்.
மகளை தூங்க வைத்த பின், வேலு மனைவியிடம், “ ஏட்டி! எப்பவோ வார அயித்த கூட ஒரு நாள் தூங்குண என்னாலே!”
“வயசுக்கு வந்தோம்ன்னு பேரு தான், இன்னும் உம் மவ போர்வைய நனைக்குறா. நாளைக்கு மவனுக்கு பொண்ணு பார்க்கும் போது இது ஒரு குறையா மதினிக்கு அம்பட கூடாது பாரு அதான்” என்று பூர்ணா ஒரே போடாக போட,
கடுப்பானவன், “ சம்மு உம் தொலைநோக்கு சிந்தனையை கண்டு உடம்பு புல்லரிச்சு போச்சு” என்று மொழிய,
“ம்ம்ம்கூம் உமக்கு என்ன! நான் பொ” என்று பூர்ணா ஆரம்பிக்க,
“பொம்பிளை பிள்ளை பெத்தவ, ஆதான! எனக்கு நல்லா வரும் வேண்டாம். பேசாம படுடி” என்று அதட்டல் போட
கழுத்தை வெட்டியவள் மறுபக்கம் திரும்பி படுத்து கொள்ள, நடுவில் பவித்ரா. இருவர் முகத்திலும் உறைந்த புன்னகையோடு, நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியான உறக்கம்.
“ பவி என்கூடவே தூங்கடுன்னு சொல்லியும் வம்பா இந்த சம்மு கூட்டிட்டு போய்டா. பிள்ளையை தான் உத்து உத்து பாக்குறாங்க. என்னைக்கு ரெண்டு பேரும் சேர போறாங்க. நீங்க அவசர பட்டு கல்யாணம் பண்ணி வச்சுடிங்க. அவங்க இன்னமும் அப்படியே தான் இருக்காங்க” என்று தன் தாயிடம் புலம்பி கொண்டிருந்தாள் வாணி.
“ஏட்டி! தாலி கட்டிடான்ல. இனி எல்லாம் மாறும். ஆனா, உடனே மாறாது” பெரியாத்தா வியாக்கானம் பேச,
அவரை முறைத்து வாணி. “ஒத்த தாலி கட்டிட்டா எல்லாம் எப்படி மாறும். அட போம்மா! நியி வேற அங்குட்டு” என வாணி சலித்து கொள்ள
“தாலி மட்டும் போதும், தன்னல சேருவாங்க”
“ சேருவாங்க …சேறுவாங்க…, அவங்க ரெண்டு பேருக்கும் இடையில தான் காதலே இல்லையே அப்புறம் எப்படி” என இருகைகளையும் விரித்து மகள் கேட்ட கேள்விக்கு,
“ இவ யாருடி சுத்தம் கூறு கெட்டவள இருக்கா! அந்த காலத்தில நாங்கல்லாம் காதல் பண்ணமாக்கும். கம்மாகரையிலும், களத்து மேட்டிலும் பாட்டு பாடிகிட்டு … அது என்னது லவ்வுயு சொன்னமாக்கும். போடி இவளே! ஒத்த மஞ்ச கயிறு தான், கட்டுனது யார இருந்தாலும் காலத்துக்கும் சொந்தம்தான். இப்பதானே போன்ல பேசி கல்யாணம் கட்டுறாங்க, அப்பல்லாம் ஏது போன்னு? கழுத்துல மஞ்ச கயிறு ஏறிட்டா தன்னாலே உறவும், உரிமையும் வந்துடும்வே! அது தான் தாம்பத்தியம். சாதாரண கயிருன்னு நினைக்காத, எப்படி பட்ட ஆம்பிளை, பொம்பளையும் வாழ வச்சுப்புடும். தாலி கயிறு கொடுக்குற உணர்வு ஆலாதியானது. அதை மாத்தி வாழ நம்ம புள்ளைக பழகல”
“உங்க காலம் வேற, இந்த காலம் வேறம்மா. காலம் மாறி போச்சு!”
“காலம் மாறிடுச்சுன்னு பொம்பளைக யாரும் ஆம்பிளை கழுத்துல தாலி கட்டலையே. ஐந்நூறு வருசத்துக்கு முந்தியும் தாலி தான், இப்பவும் தாலி தான். அப்பவும் ஒரு பொண்ணு தான் தாலிய சுமக்குறா, இப்பவும் ஒரு பொண்ணு தான் தாலி சுமக்குறா! உடுப்பும், படிப்பும் மாறலாம், நம்ம அடையாளம் மாறாதுலே! போய் தூங்கு” என்றபடி பெரியத்தா எழுந்து செல்ல, பின்னாடியே வாணியும் சென்றாள்.
மறுநாள் காலையிலே பரபரப்பாக அனைவரும் கிளம்பி விட்டனர். எங்கு, நகையும், உடையும் வாங்குவதற்கு தான். பவித்ரா பெரிய பெண்ணாகிய பின் அத்தை முறைக்கு வாணி எதுவும் செய்யாததால், மருமகளுக்கு ஏதேனும் வாங்கி குடுக்க, உடன் குடும்பத்தையே அழைத்து சென்றாள்.
நகரின் பெரிய நகைக்கடையில் அனைவரும் கூடியிருக்க, ஒவ்வொன்றாக பார்த்து வந்தனர். பூர்ணாவும் மகளுக்கு என்று உற்ச்சாகமாவே ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு பார்த்தாள்.
கேரளா பாணியில் நெல்லு மாலை அனைவருக்கும் பிடித்து போக, அதையே தேர்வு செய்தனர். அது, சுமார் ஏழு சவரன் இருந்தது. பூர்ணா தனியாக வேலுவிடம் கேட்டு தான், வாணியின் மகள் ராகவிக்கு குடை சிமிக்கி வாங்கி கொடுத்தாள்.
பூர்ணா தான் வேலுவிடம், “பார்த்தியா வேலு, தக்காளியும், கத்தரியும் தூக்கி அலையுறவன்னு கேலி செய்தியே. அது பண்ண வேலையை, சுளையா தாங்க நகை வீடு வந்து சேர்ந்துருக்கு. தம்பி மகளுக்கு செய்யணும்னு உம் அக்காக்கு நினைப்பிருந்தாலும், உம் மாமாவும் துணை நிக்கணும்ல! நல்ல மனுசன் தான்” என்று பாராட்டியவள்,
“ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் வேலு, தாய்மாமன் மொய் தானே ஓசி. அயித்த மாமன் செஞ்சா அது செய்முறை தான். திரும்ப செய்யணுமா!”என கெட்டவள பார்த்து தலையில் அடித்து கொண்டவன்.
“ரொம்ப யோசனை செய்யாதா! வா துணி எடுக்க போவோம்” என்று அடுத்து ஜவுளி கடை சென்றனர். விலையை பற்றி கவலை இன்றி அனைவரும் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்ய. எல்லாரையும் ஆராய்ந்த படியே அமர்ந்திருந்தாள் பூர்ணா.
அவள் வீட்டில் எல்லாம் பட்ஜெட் தான். முதலில் துணியின் விலை பார்த்து தான், தரம் பார்ப்பாள். தங்களுக்கு கட்டுபடியாகது என்ற பின் மற்றவை பின் ஏன் கண் செல்ல வேண்டும். அதனால், தான் இவர்களின் வசதி வாய்ப்பில் உடனடியாக கலந்து கொள்ள முடியவில்ல.
வேலுவின் கட்டாயத்தில் வந்தவள், மகளுக்கு மட்டும் நல்லதாக பார்த்தாள். ஆனால், எந்த துணியை எடுத்து போட்டாலும் அதன் விலையில் தான் முதல் கண்கள் போகும். அவள் பழக்கமே அதுதான். விலை பார்க்காதே என்று வேலு சொல்லியும், அவளால் தடுக்க முடியாது. விலை பார்த்தே துணி எடுப்வாள்.
மகளுக்கு, மதினிக்கு, இராகவிக்கு, அயித்த என்று எல்லோருக்கும் எடுத்தவள் தனக்கு மட்டும் எதுவும் எடுக்க வில்லை. வேலு சொல்லியும் எடுக்கவில்லை. தனியே அழைத்து சென்று, வேலு காரணம் கேட்க.
“இன்னைக்குகே உமக்கு எம்புட்டு செலவு. மதினி வீட்டாலுகளுக்கு எடுக்கணும், பவி சின்ன புள்ளை ஏங்கி போகும் அதுக்கும் எடுக்கணும். உங்கிட்ட காசு இருக்கா என்னான்னு எனக்கு தெரியாதே வேலு. உனக்கு அதிகம் செலவு வைக்க கூடாதுல. கத்தரியும், தக்காளியும் கை கொடுக்கல.”
இடை மறித்த வேலு, “ அதனால சம்பூர்ணா கை கொடுக்குறீங்களாக்கும்”என்று நக்கலாக வேலு கேட்க.
“பின்ன என்ன! கைல காசு இருக்கா, இல்லையான்னு தெரியாம. இஷ்டத்துக்கு செலவு செஞ்சு நான் பழகல வேலு. விலையும் கூட இருக்க, பேசாம இருந்து கிட்டேன்” என பூர்ணா புரிய வைக்க
வேலுக்கு அப்படி ஒரு சிரிப்பு, “ நான் காசு நிறையா தான் கொண்டு வந்தேன். உமக்கு பிடிச்சத எடு” என்க.
அவனின் சிரிப்பு பூர்ணாக்கு தான் பிடிக்கவில்லை, “ என்னாலே சிரிப்பு. உம் கையிருப்பு வீட்டு பொம்பளைக்கு தெரியினுமா இல்லையா. சம்பாத்தியம், வருமானம் எல்லாம் வீட்டு பொம்பளைக்கு சொல்லாம, கக்கத்தில காசு வச்சு நிக்குறவன். வரவு, செலவு சொல்ல மாட்டியோ அம்புட்டு கௌரவம்!” என்று அவனை விரட்ட,
ஏதோ சொல்ல வந்தவனையும் தடுத்தாள், “ உம் வரவும் தெரியாம, வரவுக்கு தக்க செலவும் செய்ய தெரியாம நான் நிக்கென். நீயும் முளிக்கிறவன். நீ தானே வேலு சொல்லணும், இம்புட்டுக்கு எடுக்க சொல்லி. இல்லைன்னா எம் கைல காசா தரணும். இருப்புக்கு தக்க நான் செலவு பார்த்துபேன். எதுவும் சொல்லாம மரமா நிக்குற” என்று பூர்ணா வாதம் செய்ய
என்ன சொல்வதென்று முளித்த வேலு. கடைசியில் மனைவியிடம் சரணடைந்து விட்டான்.
பூர்ணாவும் சமாதானமாகி சேலை தேர்வில் இறங்கி விட்டாள். வேலு தான், எலுமிச்சை கலரில் ரோஸ் கலர் பார்டரில் ஒரு சேலையை கொண்டு வந்து கொடுக்க. பூர்ணா முகத்தில் சிரிப்பு. இது அவள் தேர்வு தான், விலை அதிகமாக இருக்க விட்டுவிட்டாள். அதை எவ்வாறு இவன் பார்த்தான்.
“சேலையே வேணாம்னு சொன்னவ! இதையே உத்து பார்த்த”
“பார்த்ததும் பிடிச்சது, விலையை பார்த்து ஒரு ஏக்கம். பழக்கமான ஏக்கம் தான். அழகான சேலை எல்லா மேலையும் கண்ணு போகும். ஆனா, கைலா இருக்குற காசுக்கு தக்க எடுத்து வருவேன். இன்னிக்கும் அதான். பிடிச்சது ஆனா கட்டுபடியாகது. வாங்கத்தான் காசு வேணும், பார்த்து ரசிக்க கண்ணு போதும்லே” என பூர்ணா விளக்கம் சொல்ல,
“இனி, வாங்கவும் ஆசை படலாம். வாங்கி கொடுக்க பூர்ணா வூட்டுகாரான் தங்கவேலு இருக்கான்” என்று ஜம்பமாக வேலு சொல்ல,
“அப்படியா வேலு, கீழ ஒரு சேலை பார்த்தேன் அஞ்சு லட்சமா! வாங்கி கொடு” என்று பூர்ணா கேட்ட நொடியில் வேலு முழித்தானே ஒருமுழி, அக்மார்க் திருட்டு முழி. பூர்ணாக்கு அப்படியொரு சிரிப்பு. கலகலவென, சிறு வயதில் வேலு ரசித்த சிரிப்பு. வேலு எதிர்பார்த்த சிரிப்பு. அத்தோடு, எலுமிச்சை வண்ண பட்டு புடவையும் பேக் செய்ய பட்டது.