மறுநாள் புதுமண தம்பதிகளுக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள் வாணி. அது ஏற்கனவே அவர்களுக்கு அறிவிக்க பட்டும் இருக்க, காலையிலே எல்லோரும் தயாராகினர். மகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அனுப்பி விட்டவள், தன்னிடம் புது சேலை தவிர, வேற எந்த மாற்றத்தையும் ஏற்க துணியவில்லை. ஏனோ! மனம் இன்னும் தடுமாற்றத்தை மட்டும் விடவில்லை.
அவளின் கோலம் கண்ட பெரியாத்தாவுக்கு பொசுக்கென்று கோபம் வந்தது. இழுத்து பின்னிய சடை, நெற்றியில் வட்ட பொட்டு, கழுத்தில் மஞ்சள் கயிறு தவிர வேறொன்றும் இல்லை, இரு கைகளும் வெற்றாக்க கிடக்க. பற்றி கொண்டு வந்தது வேலுவின் தாய்க்கு. ஆனால், வாணிக்கு தம் தம்பி மனைவி மனம் புரிய தான் செய்தது. மாற்றத்தை சமூகம் அங்கீகரிக்கும் முன் பெண்ணவள் மனமும் ஏற்க வேண்டுமே!
முதல் திருமண பந்தத்தில் இணையும் போது இருக்கும் ஆசையும், எதிர்பார்ப்பும். இரண்டாம் திருமண பந்தத்தில் இணையும் போது இருக்காதே. பயமும், நிராசையும், முந்தின வாழ்வின் எச்சமும், நிகழ்கால அலங்கோலமும் தான் முன் நிற்கும். அதுவும், ஒரு பெண்ணிற்கு இரண்டாம் திருமணம் என்றால், முதலில் நம் சமூகம் ஏற்கும் முன், பெண்ணவள் மனம் ஏற்பதில்லை. நம் வாழ்வோடு இணைந்த கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் , விதிகளையும் மீறி தனக்கென ஒரு புதிய பாதையில் அடி எடுத்து வைக்க எத்தனை பெண்கள் துணிகிறார்கள்?…
நிச்சயமாக பூர்ணாக்கு அந்த துணிவு இல்லை. அவளாக எப்போதும் தனக்கென ஒரு துணை வேண்டும் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. முன்பான வாழ்வு எவ்வளவு வலியை கொடுத்த போதும், மற்றொரு ஆடவனை மனம் ஏற்க துணியவில்லை. வெட்டி விட்ட பின்பும் விதவை கோலம் விதவை கோலம் கண்டு தான் இப்படி தான் என்ற பெண்ணை எவ்வாறு மாற்ற இயலும். கணவன் எப்படி இருந்தாலும் தாலி கொடிக்கு பெண்ணிடம் இருக்கும் மரியாதை, அது தனி தானே.
அதே, தாலி கொடி உறவை வைத்து தான், வாணியும் பெண்ணவள் மனதில் புது உறவுகளை பதியம் போட, செய்யும் ஏற்பாடு தான் கோவில் சிறப்பு பூஜை. தன் ஆத்தாவை சமாதானம் செய்து முன்னர் காரில் அனுப்பியவள். மற்றொரு காரில் தம் தம்பி குடும்பத்தோடு இணைந்து கொண்டாள். வேலுவும், பூர்ணாவும் தங்கள் மகளோடு ஏதேதோ கதை பேசிய படி வர, அவர்களையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் வாணி.
அவள் மனதில் இருவரும் பொருத்தமானவர்களாக தான் தோன்றினர். அரை மணி நேரம் சேர்ந்து பேசினாலே முட்டி கொள்ளும் அளவிற்கு கருத்து வேறுபாடு உள்ள தற்போதைய தம்பதிகளுக்கு மத்தியில், இவர்கள் இருவரின் பேச்சும், செயலும், ஒருவரை ஒருவர் ஒட்டியோ, சார்ந்தோ தான் தான் இருக்கும்.
கோவிலில் இறங்கிய வேலு குடும்பம், பிரகாரம் உள்ளே செல்லும் முன், வழியிலே மறைத்த கலை. தன் மச்சானை மட்டும் தனியே தள்ளி கொண்டு சென்றான். என்னவென்று? புரியாமல் பார்த்து நின்ற பூர்ணாவை, வாணி தனியே அழைத்து செல்ல,
“ என்ன மதினி! என்னைய ஏன் தனியா தள்ளி வாறீக? வேலுவ அண்ணன் கூட்டி போறாக! வேற என்னமும் சோழியா? எதுன்னாலும் சொல்லுங்க மதினி?” என்று பூர்ணா கேட்க.
“விவகாரமான சோழிலாம் ஒன்னும் இல்ல, விசேஷம் தான் சம்மு. உனக்கு மஞ்ச கயிற மாத்தி தாலி பிரிச்சு கோர்க்கணும்! அப்புறம் ரெண்டு பேருக்கும் தனியா பூஜை செய்யணும். அதுக்கான ஏற்பாடு தான்” என்ற வாணி. நடைமுறை போல சொல்லி, பூர்ணாவை அலங்கரிக்கும் வேலையில் இறங்க,
பூர்ணா தான் முகம் இருள நின்றிருந்தாள். வேலுவின் மனைவியாக தன்னை நிலைப்படுத்தி தோற்றத்தில் எல்லாம் மாற்றத்தை கொண்டு வரவில்லை. திருமணம் முடிந்து ஒரே வீடு, இருவரும் சேர்ந்த ஒத்த வாழ்வு என்ற நிலையிலும் அவனின் மனைவியாக தன்னை தானே அங்கிகரிக்கவில்லை என்பது தான் உண்மை.
வேலுவின் மனைவியாக வீட்டில் வலம் வரும் போதும், அடுப்படி வேலை, வீட்டு பொறுப்பு, தோட்ட வேலை என்று வேலுவோடு தோது போட்டு எடுத்து கட்டி செய்யும் போதும்! அவ்வளவு ஏன்? வேலுவின் துணிகளை உள்ளாடை முதற்கொண்டு துவைக்கும் போது தோன்றாத ஒரு நடுக்கம்! மஞ்சள், குங்குமத்தை பார்க்கும் போது மனம் அதிர்ந்து தான் போனது. உணர்வு ரீதியாக, மன ரீதியாக ஆத்மார்த்தமாக பெண்ணில் ஊடுருவும் ஒரு சக்தி வெறும் துகளான மஞ்சள் – குங்குமத்தை தாண்டி வேறெதுக்கும் இல்லையே!.
கண்கள் ரெண்டும் நீரால் நிறைய,நெருக்க தொடுத்த மல்லிகை பந்தல் நடுவே பொருத்தமாக அமர்ந்திருந்த தாழம்பூ குங்குமத்தை தான் இதயத்தை கசக்கும் வலியோடு பார்த்திருந்தாள் பூர்ணா. இனி ஒரு நாளும் தொடவோ! தொட்டு உணரவோ முடியாது! ஏன்? அதன் வாசத்தை ஆள கூட வழியில்லை என்று ஒதுங்கியவளுக்கு எவ்வளவு பெறும் பாக்கியம்.
எத்தனை பேருக்கு கிடைக்கும் வரம்! விலையில் பத்து ரூபாய் தான். ஆனால், மதிப்பில் அதன் தரம் அதிகமே! தன்னை தவிர, அதை யார் நன்கு உணர முடியும். இழப்பின் வலி தெரிந்தவள் தான் மட்டும் தானே!. ஊர் கூட்டி செய்ய விட்டாலும், தனக்கு தானே ஒரு விதவை கோலம் பூண்டாளே. மஞ்ச கயிறே ஆனாலும் கழுத்தில் கிடந்த தாலியையும், நெற்றியில் வைத்து குங்குமத்தையும், கண்ணாடி வளையல்களை அறுத்து தூக்கி எறியும், உள்ளம் எடுத்த ஊமை வலி யாருக்கு தெரியும். போனால் போகட்டும் என்றோ! அலச்சியமாகவோ தூக்கி எறியப்படும் பொருள் அல்லவே! அவை. பொக்கிஷமாக அல்லவா பொத்தி வைத்திருந்தாள்.
அழகுக்காக எல்லாம் குங்குமம் வைக்கும் ரகம் அல்ல பூர்ணா. கை நிறைய அள்ளி, உச்சி நிறைய வைப்பாள். அவ்வளவு ஆசை கொண்ட பெண் தான். அதுவும், வெள்ளி – செவ்வாய் கிழமைகளில் யாரேனும் பூ கொண்டு வந்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டாள். தேவை இல்லை என்றால் கூட வாங்கி கொள்வாள், அது ஒரு நெருடலாக மனதில் நிற்க கூடாதே என்று! அப்படி போற்றி பாதுகாத்தவள், ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து, வாழ்வில் தனிமரமாகி, வெந்த கஞ்சியை குடித்து, விதி வந்தால் சாவோம்! என்று காத்திருந்தவளுக்கு, கடவுள் கருணையில் புது வசந்தம் வர, அதை எட்டி உதைக்க யாருக்கு தான் மனம் வரும்.
நிச்சயமாக பூர்ணாக்கு மனம் வரவில்லை. சுமங்கலி கோலத்திற்கு தானாகவே தன்னை ஒப்பு கொடுக்க, ஆச்சர்யமாக பார்த்ததென்னவோ வாணி தான். எப்படியும் தம்பி மனைவி ஒப்புக்கொள்ள மாட்டாள், எப்படி அவளை சரிகட்ட! என்ற யோசனையில் உளன்ற வாணிக்கு. பூர்ணாவின் தெளிந்த முகம், மனநிறைவை கொடுக்க சந்தோசமாகவே மல்லிகை பூவை கையில் எடுத்தாள்.
எலுமிச்சை வண்ண பட்டில் தாமரை வண்ண பார்டர் தூக்கி கொடுக்க, சுருளான கட்டை முடி அடங்க மல்லிகை அடுக்கி, கல்யாண கண்ணாடி வளையல் கையை அலங்கரிக்க, கன்னங்கள் ரெண்டிலும் மஞ்சள் பூசி, வகுட்டில் குங்குமம் நிறைத்து, கால்களில் முத்து வைத்த புது மெட்டி அலங்கரிக்க, என்னவென்று சொல்ல முடியாத அவஸ்தையோடு மெல்ல பிரகாரம் நோக்கி நடை போட்டாள் பூர்ணா.
வாணியே இரு முறை திருஷ்டி கழித்து விட்டாள். உண்மையாக, அப்படி ஒரு தோற்றத்தில் தான் இருந்தாள் பூர்ணா. புது பெண் என்ற வரையறையில் வந்து விட்டாள்.
பட்டு வேட்டி சட்டையில் வேலு தயங்காமல் தான் நின்றிருந்தான். கோவில், விசேஷம் என்று பழக்கம் இருந்ததால் பட்டு வேட்டி அவனுக்கு அசாத்தியமாக இல்லை. ஆனால், பூர்ணாக்கு அப்படி இல்லை. ரொம்ப தயக்கம் தான். எட்டு எடுத்து வைக்க கால்கள் ஒத்துழைக்க வில்லை. ரொம்ப அசௌகரியம் தன்னை குறித்தே.
நீண்ட நாள் கழித்து தலையில் நின்ற கனமான மல்லிகை பூ வாசம், புது பட்டு சேலையில் வரும் வாசம், மஞ்சள் குங்குமம் கலந்த ஒரு வித மயக்கம் தரும் வாசம் என்று ஏதோ கல்யாணம் செய்யும் புது மணப்பெண்ணிடம் தோன்றுமே ஒரு புது வாசம்! அதே போல் தன் மீதும் வர, கொஞ்சம் மயக்கம் தான் பூர்ணாக்கு.
தோழிகள், சொந்த பந்தங்கள் கல்யாணத்தில் மேடை ஏறி போட்டோ எடுக்கும் போது புதுபெண்ணிடம் தோன்றும் ஒரு வித வாசம், தன் மீதும் வர, தன்னையறியாமல் மனம் ஒரு புது வித உற்சாகத்தில் நுழைந்தது. கடைசியாக, தன் கல்யாண பரிசத்தின் போதும், கல்யாணத்தின் போதும் இருந்த சொல்ல தெரியாத ஒரு குமிளி! தற்போதும் தோன்றியது. வேலுவை பார்க்கவே கண்கள் நேர்பட வில்லை. அப்படி ஒரு தயக்கம். ஏன்? யாரை பார்க்கவும் பெண்ணவள் கண்கள் துணியவில்லை தான்.
தன்னை தானே கடிந்து கொண்டாள் பூர்ணா. என்ன இதுவென்று? “முப்பத்தாறு வயசாச்சு! எல்லாத்தையும் ஆண்டு பார்த்தாச்சு, வயசுக்கு வந்த பிள்ளையை வச்சுக்கிட்டு! இது என்ன மப்பு புடிச்சு வேலை? உனக்கென்ன பதினாறு வயசு பருவசிட்டா! இப்பவே நடு மண்டைல நரமுடி வேற வந்துருச்சு! கொஞ்சம் அடங்கி கெடடி கூறு கெட்டவளே! பாதி வயசுல நானிக்கு திரியிறதா!” என்று தன்னை தானே கடிந்து அடக்கி வைத்து தன்னை எதுவும் பாதிக்க வில்லை என்று சவுடால் பேசி கோவில் மண்டபம் நோக்கி முன்னேற,
அங்கு கூடி நின்ற சொந்த பந்தத்தின் அதிசய பார்வையும், வேலுவின் ஆச்சரிய பார்வையும், பூர்ணாவை தன்னால் தலை குனிய செய்தது. பெரியாத்தாவுக்கு அப்படி ஒரு நிறைவு கண்களில். கையில் வைத்திருந்த கல்லு ஆட்டியலை வாணி கொண்டு பூர்ணா கழுத்தில் போட செய்தவர். கைகளால் திருஷ்டி கழித்து,
“ ம்மம் இப்பதான் நிறைவாக இருக்கு. எம்புட்டு தங்க நகை போட்டாலும் ஒத்த கல்லு வச்ச நகை போட்டா தான் தூக்கி அடிக்குது. அதுவும் கருத்த பிள்ளைக்கு வெள்ளை கல்லு அட்டியல் அம்சமா இருக்கு!” என்று பெரியாத்தா மருமகளை பகடி பேச,
இதுவரை இருந்த தயக்கம் மறைந்து மாமியாரை முறைத்து பார்த்து தான் அக்மார்க் மருமகள் என்று நிரூபித்தாள் பூர்ணா.
“ஏட்டி வாணி, இன்னும் சாவி கொத்தே உம் தம்பி பொண்டாட்டி கைலா வரல! அதுக்குமின்ன எப்படி முறைக்குற பாரும். கருத்த பொண்ண கருப்புன்னு தான சொல்ல முடியும். எம் மருமவன்னு இல்லாததா எல்லாம் எட்டு கட்ட முடியுமா?” என்று மருமகளை மேலும் வம்பிலுத்தார் பெரியாத்தா.
இந்த முறை பூர்ணாவின் பார்வை வேலுவை நோக்கி திரும்ப பதறிய வேலு.
“ ஆத்தா! நீயி செத்த சும்மா இரும்! சம்முக்கு என்ன குறை? அவ கருப்பு ஒன்னும் கிடையாது மாநிறம் தான். அத்தோட கருப்பும் அழகு தான். உம் மவன் மட்டும் என்ன லெமன் கலரா! என்னைய பாரும் கரும்பு காட்டுல வெந்த மாதிரி இருக்கேன். எம் பக்கத்தில சம்மு நின்ன, அவ தங்க சிலையாட்டம் இருப்பா!
வயசு தான் ஆச்சே தவிர, ஒரு கூறு இருக்கா. கலரா முக்கியம் குணம் தான் முக்கியம். சம்மு குணம் பசும் பால் மாதிரி. உமக்கு ஒரு விவரமும் தெரியல. கொஞ்சம் அமைதியா தான் இறேன். எக்கு தப்பா எதுவும் பேசி, எனக்கு சேதாரம் ஆக்கி பிடாத ஆத்தா” என்று வேலு ஒரு அர்த்ததில் கூறி,தம் மனைவியை நிமிர்ந்து பார்க்க. அவளோ, “அட! லூசு பயலே!” என்று பார்க்க. இன்னும் என்னவென்று வேலு கூட்டத்தை பார்க்க,
கூடி நின்ற சொந்தமோ !
“ ஏய்! அயித்த, சாவி கொத்து இல்லாமவே உம் மருமவ முந்தில முடிஞ்சுட்டா!…….. யார? உம் மவன தான்! நீயி தான் பார்த்து சுதானமா இருக்கணும்! உங்க மாமியார் பவுசு இனி செல்லாது!” என்று ஒரு பெண் நக்கல் பேச
“அதானே! எந்தங்கச்சி உருட்டுன்ன சோழிக்கு! கொழுந்தன் தப்பாம தாளம் போடுறாரே!” என மற்ற பெண் கேலி பேச, பேச்சின் தார்ப்பரியம் புரிந்து மனைவியை பார்த்து அசடு வழிந்தான் வேலு.
“அது என்னவோ நெசம் தான். ஒத்த பார்வைக்கே மாமன் தலைகீழா நிப்பாரு போல! நாமளுந்தான் பத்து வருசம் வாழ்ந்து என்ன பிரோசனம். வாயால சொல்லி, கையாள செய்ய வைக்க முடியலையே! எங்கக்கா சாமர்த்தியம் தான்” என அடுத்தடுத்து தொடர் கேலி வர, இடம் கலகலப்பாக மாறியது.
வேலுவும் வாய் வைத்து கொண்டு சும்மா நிற்காமல், “ அட! நீங்க வேற மதினி! ஒத்த வேப்பங்குச்சில தட்டு வச்சு தம்பட்டம் அடிக்காத குறையா, பொண்டாட்டிக்கு தக்க பாட்டு பாடினாலும், புழுதில விட்டுல புறட்டுறாங்க!” என்று வேலு மேலும் பேச,
கலைவாணன் அண்ணனோ, “ மச்சான் சாச்சுபுட்டாங்களே” என்று கலாய்க்க, இடம் கல்யாண களை கட்டியது.
பூர்ணாக்கு என்ன முயன்றும், வெட்கம் கெட்ட மனது! வெட்கத்தை வெளியே விட, சிவந்த கன்னம் மறைக்க தலை குனிந்து கொண்டாள்.
தாயின் அருகில் வந்த பவித்ரா, “ ஊருலே எங்க ஷாலினி மிஸ் தான் ரொம்ப அழகுன்னு நினைச்சேன்! இப்பதான் தெரியுது எங்கம்மா தான் எவ்வளவு அழகு. ம்மா! எப்பவும் இப்படியே இருங்கம்மா”என்று சொல்லி தாயின் கன்னத்தில் ஒரு முத்தம் வைக்க,
மகளை தன்னோடு சேர்த்து அணைத்த பூர்ணாக்கு உள்ளம் உவகை கொண்டது. இந்த சொந்தமும், சுற்றமும் யாரால் வந்தது. இந்த தெய்வம் வீடு வந்ததால் தானே!
தாய், மகள் பிணைப்பை மற்றவர்கள் பரிவோடு பார்த்தனர். நீண்ட வருடங்கள் சென்று ஒரு நல்ல நாள். மறந்தும் யாரும் கடந்ததை பேச வில்லை. காலம் கடந்தது போலவே, தாங்களும் கடந்து செல்ல எண்ணினர் போலும். மாற்றாந்தாய் என்ற சொல்லேவே மாற்றி வைத்தாள் பூர்ணா.
அவர்கள் பக்கம் நாத்துனார் தான் தாலி பிரிச்சு கோர்க்க வேண்டும் என்பது வழக்கம் ஆதலால், வாணியே முன் நின்று பொறுப்பாக எல்லாவற்றையும் செய்தால். நெருக்க கட்டிய சம்பங்கி மாலையோடு மனையில் பூர்ணா அமர்ந்திருக்க. குண்டு, காசு, மாங்காய், வாழைக்காய் என்று வகை மாறாமல் கனமான தங்க தாலி சரடில் கோர்த்து,
“ குடும்பத்தொட தீர்க்க சுமங்கலியாக வாழணும்” என்று ஆசிர்வதித்து தம்பி மனைவி கழுத்தில் அனுவிக்க, “ கட்டையில் போகும் வரை காத்து கொடு தாயே” என்று மனம் உருகி, கண்களில் நீர் நிறைக்க வேண்டுதலோடு தலை குனிந்து வாங்கி கொண்டாள் பொன் தாலி கயிற்றை.
சொந்தமும், சுற்றமும் கலந்த மலர் தூவி, தீர்க்க சுமங்கலியாக வாழணும் என்று தம்பதிகளை ஆசிவதிக்க, மனநிறைவோடு மூத்தார் அனைவரின் காலிலும் விழுந்து வணங்கி எழுந்தனர் தங்க வேலு – சம்பூர்ணா தம்பதிகள்.