புதுமண தம்பதிகளுக்கு விமர்சையாக விருந்து நடக்க, முகத்தில் தயக்கமும், மனதில் தடுமாற்றமுமாக நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தான் வேலு. சர்வ அலங்காரங்களுடன் தன்னருகில் தம் மனைவியாக அமர்ந்திருந்தாவளை பார்த்து மனதில் புது சலனம் முளைத்தது. அவன் தடுக்க நினைத்தும் முடியாமல், கண்கள் பூர்ணா மேல் ரசனையாக பாய்ந்தது. அதுவே, வேலுக்கு ஒரு பயத்தை கொடுத்தது.
தான் ஏன்? எவ்வாறு? தன்னுடைய கடமையாக, பொறுப்பாக கருதி மணந்தவள் மேல், எந்த நொடியில் கள்ளம் புகுந்து ஆட்படுத்தியது. எப்படி மாறியது? தன்னுடைய பார்வையின் கனிவு போய் ரசனை கூடு, ஆராய தூண்டும் தம் உணர்வுகளை எண்ணி ஆண் மகனாக வெட்கம் கொண்டான். ஒரு பெண் பிள்ளைக்கு தகப்பனான தானே, மனைவியே ஆனாலும் உள்ளம் சேராமல் உடலை ரசிக்கும் தன் மனநிலை எண்ணி வெட்கி போனான்.
மனைவி தான். தொட்டு தாலி கட்டி காலத்துக்கும் துணை நிக்கும் உறவு தான். இவனை தாண்டிய உரிமை வேற யாருக்கு உள்ளது. இது வெளிப்பாடு தான், நியாயம் எவ்வளவும் பேசலாம். ஆனால், உண்மை, அதன் நிலை வேறல்லவா! தேவைக்கு நடந்த திருமணம். துணை இன்றி அநாதரவாக நிக்காமல், அநாதரவாக நின்ற இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கின்றனர், வித்தியாசம் அவ்வளவே. என்றேனும் ஒரு நாள் மாறும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், நிஜத்தில் தன்னை போல் உறவும், உரிமையும் பெண் மீது தோன்றுகிறதே!
திருமணம் செய்து வைத்தால் பைத்தியம் கூட தெளியும் என்று பெரியவர்கள் சொல்வது இது தான் போல. இவனுக்கு தெளிந்ததா! இல்லை பிடித்ததா! என்று அவனுக்கே தெரியவில்லை. ஆக மொத்தம், வேலுக்கு தன்னை தான் பிடிக்க வில்லை. தன்னுடைய தடுமாற்றம் சுத்தமாக பிடிக்க வில்லை. நொடி நேரமே என்றாலும்! பூர்ணா உடலின் மேல் பாய்ந்த ரசனையை, அது கொடுத்த துள்ளலை ஏற்க தான் முடியவில்லை. தன்னை குறித்தே அசிங்கமாக இருந்தது.
சின்னது தொட்டு பழக்கம் இருவருக்கும். தொட்டு பேசி, அடித்து உருண்டு என்று பல சேட்டை செய்து வளந்தவர்கள் தான். அவ்வளவு ஏன்? பூர்ணா பெரிய பெண் ஆனதை கூட கண்டு சொன்னவன் இவன் தான். எந்த சங்கோஜமும் இல்லாமல் மாதம், மாதம் வீட்டுக்கு தூரம் ஆகும் போது வரும் வலியை கூட தயங்காமல் பகிர்ந்து கொள்வாள். பாவாடை – சட்டை, தாவணி, சேலை என்று அவளின் பரிமாணம் அனைத்தையும் பார்த்து உடன் நின்றவன் தான். ஒரு நாளும் ஆண் மகனாக பெண்ணவளை ரசித்ததில்லை. இள வயதிலும் தொட்டு, அடித்து பழக்கம் தான்.
பின் மண்டையில் தட்டி அடிப்பான், தோளில் கை போட்டு இழுப்பான்…, பூர்ணாவும் வயிற்றில் குத்துவது, கிள்ளி வைப்பது என்ற குரங்கு சேட்டை செய்தவள் தான். ஆனால், தடுமாற்றம் என்பது நொடி கூட இல்லை. தற்போது தம் மனைவியாக தோள் உரச நின்றவள் மேல், தன்னாலே தோன்றும் உரிமையை தடுக்க முடியவில்லை வேலுவால்.
மனைவி மீது வந்த கலவையான வாசனை அவனை கட்டி இழுத்தது. பத்து வருடங்களாக உணர்ந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. அவளை பார்க்கவே கூடாது என்று நினைத்தாலும் கண்கள் அவள் பக்கம் தான் மோதியது. சில தடவை மருகுவதும், சில தடவை ரசிப்பதுமாக நேரம் சென்றது.
மகளோடு ஏதேதோ கதை பேசி சிரித்து கொண்டிருந்த பூர்ணா, அடிக்கடி தன்னை பார்ப்பதும், பின்னர் வேறு புறம் திரும்பி ஏதோ புலம்புவது என்று இருந்த கணவனை கவனிக்க தொடங்கினாள். நாடியில் விரல் வைத்து யோசிப்பது, தலையை அழுத்தி பிடித்து கொண்டு வாய்க்குள் முனங்குவது , ஓர பார்வையில் மனைவியை பார்த்து விட்டு தலையை குனிவது என்று இருந்தவன் முதுகில் ஒரு அடி போட்டு,
சுரீர் என்று முதுகில் விழுந்த அடியில் அரண்டு போனவன், முதுகை கை கொண்டு தேய்த்தவாரு நால பக்கமும் பார்த்து கொண்டான், யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று!
“கோட்டி கழுதை! ஏம்லே! என்னைய அடிச்ச…, நான் ஏதோ சின்ன பயலகணக்கா நொட்டுன்னு கையை நீட்டுறவ! எனக்கு நேசமாத்தான் கோவம் வந்துரும். பாத்து இருந்துக்க!” என்று வேலு வலித்த முதுகை தடவியபடி கடுப்போடு கூற,
“அடிக்காம என்னாலே பண்ணுவாங்க! ஏதோ கிறுக்கு பய மாதிரி நீயா சிரிக்கிற, நீயா பேசிக்கிற, அப்பப்ப என்னைய வேற நோட்டம் விடுற! என்னாலே ஆச்சு உமக்கு?”
“ஒன்னும் ஆவல! புது சேலை, பூவு, பொட்டுன்னு இன்னைக்கு அம்சமா இருந்தய! அதான், கண்ணு உன்னைய விட்டு அகல மாட்டதுல. என்னமோ மனசு கெதியா கிடக்கு. நான் என்னமும் தப்பு பண்றனாலே!” என்று மனதில் தோன்றிய உணர்வை தப்பாமல் ஒப்பிவித்து, அதற்கான தீர்வையும் அவளிடமே கேட்டான் வேலு.
“என்னைய நோட்டம் விடுறேன்னு எங்கிட்யே சொல்றியாக்கும். அதுக்கு நான் பாராட்டணுமாக்கும்! பச்சை பிள்ளை மாதிரி வச்சிருக்கிற மூஞ்சிய மாத்துல! கூறு கெட்டு போச்சு உமக்கு. இல்லைன்னா எங்கிட்ட போய் இப்படி பேசுவியா! மரியாதையா எந்திருச்சு ஓடிபோலே!” என்று முறைத்து கொண்டு பேசியவளை பார்த்தவன்,
“நான் என்னாலே செய்யட்டும். உங்கிட்ட இருந்து நான் என்னத்த மறைக்க. முன்னலாம் நான் அப்படி இல்லவே! உமக்கே நல்லா தெரியும். இன்னைக்கு தான் தொலஞ்சு ! என்னன்னு அம்படல!” என்று புலம்பியவன். மேலும்,
“இன்னைக்கு நியி புதுசா தெரிஞ்ச சம்மு! ஒருநாளும் நின்னு பார்க்க தோணலவே, இப்ப கண்ணை அப்படி திருப்ப கூட முடியல! தாலியும், குங்குமமும் எனக்கு உரியதுன்னு நினைப்பு வந்துருச்சோ! என்னவோ! தங்கவேலு தடுமாறி தான் போனான். நான் என்னாலே செய்யட்டும் நீயே சொல்லு?”
மனைவியின் பார்வையில் மாற்றம் இல்லாது இருக்கவும், “சம்மு உம் யோசனை எமக்கு புரியுது. பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டியும் ஆட்டுறேன்னு எண்ணாதவே! உம் கிட்ட எதையும் மறைச்சு எமக்கு பழக்கம் இல்லை. நியி நிமிந்து பார்த்தாலே போதும் உள்ளதா சொல்லிடுவேன். உங்கிட்ட எனக்கு என்னாலே தயக்கம்! சரியோ! தப்போ! கதி நீதானே! எமக்கு என்ன தோணுதோ அதை மறைக்காம உடைச்சு உங்கிட்ட மட்டும் தான் பேசுவேன். இன்னைக்கும் பேசிட்டேன்”….
வேலுவின் பேச்சை சலனமில்லாமல் கேட்ட சம்மு, மறுத்து ஒன்னும் சொல்லாமல் , அவன் முகத்தையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்க. வேலு தான் குழம்பி போனான். அவன் எதிர்பார்த்தது வேற, நடப்பது வேற. இவன் பேச்சில் கோபம் கொண்டு, பேசியே துவசம் பண்ணும் சம்மு இல்லாமல், சாந்தமாக அமர்ந்திருக்கும் சம்முவை பார்த்தவன் . அவள் தோள் தொட்டு,
“என்னாலே சம்மு! என்னாச்சு?” என்று வினவ,
ஒரு பெருமூச்சு விட்டவள், “கிளம்பலாம் வேலு. புள்ளைக்கு தூக்கத்துக்கு கண்ணு சொருகுது!” என்று சொல்லிவள் கிளம்ப ஆயத்தமாக, ஒன்றும் புரியாமல் முழித்த வேலுவும். ஒரு பெருமூச்சோடு மனைவியை பின் தொடர்ந்தான்.
காரிலும் அமைதியாக வந்தவள், வீடு வந்த பின்னும் வேலுவுடன் முகம் கொடுத்து பேச வில்லை. மகளை தூங்க வைத்து, அவளோடு ஒட்டியே தானும் படுத்து கண் மூடி கொண்டாள். ரொம்ப அசதி போல என்று எண்ணிய வேலுவும், மெளனமாக வெளியேறினான்.
பூர்ணாக்கு கண்கள் மட்டும் தான் மூடி கிடந்தது, மனமோ தீவிர சிந்தனையில் தான் உலன்றது.
வேலுவின் வார்த்தை தான் எத்தனை சத்தியமானவை. தன் எதார்த்த நடையில் வேலு பேசி சென்றாலும்! அதன், சாராம்சம் பூர்ணாவை பலமாக தாக்கியது. அவள், நினைவு எல்லாம் வேலு சொன்ன வார்த்தையில் தான்.
உண்மையான உறவில் முகாந்திரமும், முகமூடியும் தேவையில்லை என்று தெளிவாக சொன்னானே! அந்த உண்மையான உறவில் முதலில் நிற்பது கணவன் – மனைவி உறவு தானே. எத்தனை தம்பதிகள் தங்கள் வாழ்க்கை துணையிடம் முகமூடி இல்லாது தொடர்கின்றனர். தப்பு மட்டுமே முகமூடி என்ற வரையறைக்குள் வராதே! தம் உணர்வுகளை, சங்கடங்களை, நிறை – குறைகளை, அவ்வளவு ஏன்! நினைத்ததை எல்லாம் ஒளிவு மறைவு இன்றி சொல்லும் ஒரே இடம் தங்களது வாழ்க்கை துணையிடம் தானே. அப்படி எத்தனை பேர் நேர் சிந்தனை கொண்டு தம் துணைகளை அணுகுகிறார்கள்.
சமூகத்தில், சொந்தத்தில், வெளியில் என்று தாம் பார்க்கும் நபர்களுக்கு தக்க, ஒரு முகமூடி அணிந்து தான் செல்ல வேண்டும். தான் இது தான் என்று உண்மையை உறைக்க சொல்வது தங்கள் இணையிடம் தான். எத்தனை பேர் அந்த சுதந்திரத்தை தங்கள் இணைக்கு தருகிறார்கள். மனம் தானாக கணவன் கதிரவனினை எண்ணி பார்த்தது.
காலம் கடந்தாலும், மனம் மக்கி போனாலும், நடந்த நிகழ்வு ரணமாக நின்றது. சும்மாவா! ஆறு ஆண்டு கால வாழ்க்கை அல்லவா! கணவன் கதிரவனிடம் எளிதாக அணுக வெல்லாம் முடியாது. ஒரு தடவைக்கு பத்து தடவை யோசித்து, தான் என்ன சொல்ல வேண்டும், அதில் கணவன் வெளிப்பாடு, எப்போது பேச வேண்டும், எவ்வாறு பேச வேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று பல தடவை மனதில் ஒத்திகை பார்த்து தான் பேச்சே ஆரம்பிக்க முடியும். அதுவும், அவன் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தால் கிட்ட கூட செல்ல மாட்டாள். சாதாரண பேச்சு வார்த்தை கூட கதிரவனிடம் செல்லாது,
ஆதங்கமாக கூட ஒரு வார்த்தை சொல்ல முடியாது. ஒன்னு செய்தால், அவர்களுக்கு திரும்ப பத்து செய்யாமல் தூக்கம் வராது கதிரவனுக்கு. அப்படி தான் ஒரு நாள், பக்கத்து வீட்டு கவிதக்கா வித்தியாசமா செஞ்ச மீன் குழம்பை ருசி பார்க்க குடுக்க,
“அடுத்த வீட்டுல ஓசி கஞ்சி வாங்குற உம் பழக்கம் போகாத! உங்கப்பன் அப்படி? தராதரம் தெரியாத தற்குறி. நாளைக்கு அடுத்த தெருவுக்கு தட்டை தூக்கி போ”…
கூனி குறுகி போவாள் பூர்ணா. அவள் என்ன பிச்சையா எடுத்தாள். சொந்தமாக பழகும் மக்களிடம் உணவு பரிமாற்றம் நடப்பது தானே. அவனை மீறி ஒரு வார்த்தை பேச முடியாது. இரவு ஆழ்ந்த உறக்கத்தில் கூட எழுப்பி பேசுவான். அதுவும் எப்படி?
“ ஒன்னு மல்லாக்க தூங்ககுற இல்லனா குப்பறா படுக்குற. பொம்பள மாதிரி குறுகி படுக்க தெரியாதா! அது என்ன, ஆம்பள தனம்”…… தூக்கத்தில் என்ன ஆம்பள/ பொம்பள. உறக்கம் போது தானே. மனதோடு புலம்பிய படி கணவன் சொல்வதை செய்வாள். ஒருகளித்து படுத்து கழுத்து வலியும், முதுகு வலியும் வந்தது தான் மிச்சம்.
“ முசுமுசுன்னு மூச்சு விடுற! நான் தூங்க வேண்டாமா! முகத்துக்கு மட்டும் துண்டு போடு”
அசௌகரியமாக இருக்கும். ஆழ்ந்த உறக்கம் வராது. அவன் மட்டும் தூக்கம் என்ற பெயரில் ரயில் ஓட்டுவான். ஒன்னும் சொல்வதற்கில்லை. ஏதேனும் கேட்கவோ, பேசவோ, ஏன் பார்க்கவோ கூட கூடாது. கணவன் முகம் பார்த்து, கண் பார்த்து தான் நடக்க வேண்டும்.
ரொம்பவும் கொடுமையான விசயம் உணவு தான். கதிரவனின் நிலையை பொறுத்து தான் அவளுக்கு உணவே. அவன் கோபமாகவோ, வருத்தமாகவோ இருக்கும் போது பூர்ணாக்கு உணவு கிடைக்காது. அவன் சோகமாக இருக்கும் போது, எப்படியேனும் அவள் முகத்தில் சோகம், கண்ணீரை கொண்டு வந்துவிடுவாள். இல்லையென்றால், தற்போதைய பிரச்சனை பின்னே போய், இவள் முன்னே வந்து விடுவாள்.
வீடு வரும் கணவன் முகத்தை வைத்தே நிலைமையை ஊகித்து, அவசர அவசரமாக அடுப்படியில் கிடக்கும் மிச்ச மீதியை தன் வாய்க்குள் திணித்து கொள்வாள். களவாணி கஞ்சி தான், என்ன செய்ய? கொஞ்சமும் பாவம் பார்க்காத கணவனை வைத்து கொண்டு. மனைவி தான் உணவை தியாகம் செய்ய வேண்டுமே தவிர, கணவனுக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை. அதனால் தான், அடுப்படியில் அவசர உணவு. பசியை போக்க ஏதோ ஒன்னு, விதவிதமாக உண்ணுபவள் கிடையாது என்பதால், கதிரவனுக்கு எதுவும் தெரியாது.
மறுநாள் கவிதா அக்காகிட்ட பெருமையாக சொல்லி கொள்வாள்.
“ எக்கா, நேத்து தங்கச்சி வீட்டுல சண்டைன்னு மூஞ்சி சுண்டி போய் தான் வந்தான் அந்த எம்டன். மத்தியானம் வச்ச சோத்துல ஊறுகாய் வச்சு உள்ளே அமுக்கிட்டு, நானும் அந்தாளு கிட்ட சோகமாவே லுக்கு விட்டு படுத்து தூங்கிட்டேன்” என்று கணவனை பற்றி பொரணியும் பேசி, சொந்த வீட்டிலே திருட்டு தனாமாக உண்டதை பெருமை பேசி கொள்வாள்.
தான் வாழ்ந்த வாழ்க்கை தான் என்ன? பெருமூச்சு தான் வந்தது. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பயந்து நடுங்கி, சாப்பிடும் சாப்பாட்டில் கூட சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்தும், கடைசியில் தனக்கு கிடைத்த பெயர் தான் என்ன “வேசி” என்ற பட்டம் தானே.
உறங்கும் மகளை தட்டி குடுத்தவள், உடுத்தி இருக்கும் பட்டு சேலையை மாற்ற சென்றாள். மாற்றுடை எடுக்க வந்த பூர்ணா, அங்கிருக்கும் ஆளுயர கண்ணாடியை யோசனையாக பார்த்தவள், அதன் அருகே சென்று, தலை முதல் கால் வரை தன்னை அலசி ஆராய்ந்தாள். நிறைய மாற்றம் தான், கண்ணாடியை பார்த்து கொண்டே முன்னே நடந்தவள் அப்படியே முன்னும், பின்னுமாக நடந்து தன்னையே கண்ணாடியில் பார்த்து கொண்டாள்.
மனதில் நிம்மதி இருந்தால் முகத்தில் பொலிவு கூடும் போல. தான் அழகி என்ற எண்ணம் இதுவரை அவளுக்கு தோன்றியதில்லை. ஆனால், இன்று உணர்ந்தாள் தானும் கொஞ்சம் அழகு தான் என்று. முகஸ்துதியை பெரிதாக நினைக்க விட்டாலும், உரிமையாக வேலு சொன்னதும் ஒரு சிலிர்ப்பு தோன்ற தான் செய்தது. அது எதனால் என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
திருமணம் முடித்து முதல் இரண்டு வருடங்களில் குழந்தை இல்லாதது ஒரு வருத்தத்தையும், கவலையையும் மட்டும் தான் கொடுத்தது. அடுத்து ஒரு வருடம் சென்றும் பிள்ளை இல்லை என்றதும் தான் பேச்சு, பூர்ணா நோக்கி திரும்பியது.
அதுவும், இவளின் கடைசி நாத்துனார் கிருஷ்ண வேணிக்கு, இவளை கண்டாலே ஆகாது. தங்கள் வீட்டில் இவள் யார் உரிமையாக வலம் வர என்று ஒரு கோபம். அண்ணனின் செல்ல கடை குட்டி, அவள் என்ன சொன்னாலும் யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள். குழந்தை பேச்சு என்று பெரிதாக எடுக்காததால், வேணி அசால்டாக பூர்ணாவை காயப்படுத்துவாள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தாய் வீட்டிற்கு வரும் அக்கா, தங்கை மூவரும் வஞ்சம் இல்லாமல் இவளை போட்டு தாக்கி தான் செல்வார்கள்.
பெரிய அண்ணி சுமதி தான், தம் ஒரே தம்பிக்கு குழந்தை இல்லையே என்று பேச்சை ஆரம்பிக்க. பிடித்து கொண்டாள் வேணி, தன் அன்பு அண்ணனுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லா பெண்ணை கல்யாணம் செய்த வைத்து விட்டார்கள் என்று ஆரம்பித்தவள், குறை முழுவதும் பூர்ணா தான். ராசி இல்லாதவள், முன்னோர்கள் பாவம் செய்தவர்கள், குடுப்பணை இல்லை, நல்ல எண்ணம் இல்லை, அப்பன முழுங்கியவள், ஒத்த கட்டையாக செல்லும் விதி வாங்கியவள் என்று வாய்க்கு வந்த படி எல்லாம் பேசுவார்கள்.
ஒரு சிறு முக சுணக்கம் கூட முகத்தில் காட்ட மாட்டாள் பூர்ணா. காட்டவும் முடியாது. கொண்டவன் துணை நின்றாள் கூரை ஏறியும் பாயலாம். மற்றவர்களுடன் சேர்ந்து கட்டிய மனைவியை குறை பேசுபவனிடம் என்ன நியாயம் எதிர் பார்க்க. இங்கு, நாத்துனார்களே பரவாய்ல என்று எண்ணும் அளவிற்கு தான் கணவன்.
பூர்ணா எப்போதும் அவர்கள் பேச்சு தன்னை பாதித்ததாக கூட காட்டிக்க மாட்டாள். நீங்கள் என்னவும் பேசி கொள்ளுங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்பதாக தான் இருக்கும் அவள் நிலைப்பாடு. அது தான் வேணிக்கு ஒரு ஆவேசத்தை கொடுத்தது போல, இவளை அழ வைக்காமல் விட மாட்டேன் என்பது போல், அடுத்து அவள் பேசிய அனைத்தும் தப்பாமல் பூர்ணாவை தாக்கியது தான்.
“சுமதிக்கா , எனக்கு என்னவோ இவ பொண்ணே இல்லைன்னு தான் தோணுது. அவ உடம்ப பாருங்க கொஞ்சமும் அசருதா. ஆம்பள மாதிரி சும்மா திம்முன்னு தான் திரியுறா. எனக்கு சந்தேகம் தான்” வேணி ஆரம்பிக்க,
அடுத்த வாரிசு மாலதி, “நெஞ்சை நிமித்தி, கையை வீசி வீசி தான் நடக்குறா! எம்புட்டு வேலையும் நொடியில் முடிக்குறா. இப்பலாம் இந்த மாதிரி நிறைய நடக்குது. எதுக்கும் அவ, மாசம் மாசம் குளிக்கிராளன்னு பாருங்க”…
“ஏண்டி! இந்த கருமத்தை நான் எப்படி டீ போய் பாக்குறது. பேசுறா பாரு பேச்சை” என்று கடுப்பாக சுமதி சொல்ல, மற்ற இருவரும் வெடித்து சிரித்தனர்.
உள்ளே இருந்த பூர்ணாக்கு, கண்ணெல்லாம் கலங்கி போனது. பேச முடியாது வாயை அடைக்கலாம், காதை எப்படி அடைக்க. அச்சு பிசறாமல் அனைத்தும் விழுந்து தொலைத்தது. வெளியே செல்லவே மனம் வரவில்லை. கணவனோடு, நாத்துனார். கணவன்மார் மூவரும் இருக்க தான் இந்த பேச்சு. உடம்பே கூசி போனது. மற்ற ஆண்கள் முன்னால், தாளவே முடியவில்லை. கணவனும் நேரத்திற்கு காபி கேட்க, பொங்கும் அழுகையை அடக்கி கொண்டு எழுந்து சென்றாள்.
குனிந்த தலை நிமிராமல் காபி கொடுத்து செல்ல, பூர்ணா முகத்தை பார்த்த வேணிக்கு அவ்வளவு திருப்தி. கண்களில் நீர் நிறைய, அதை அடக்கி உதடு துடிக்க நகர்ந்தவவளை பார்த்து, அவ்வளவு கொண்டாட்டம்.
நல்ல வளத்தி தான் பூர்ணா, இரு பக்க தோள்களும் அகன்று தான் இருக்கும். அவள் தகப்பன் போல, அதில் பெருமை வள்ளிக்கு. அவங்க அப்பன மாதிரி என்று பெருமை பேசுவார். தற்போது இந்த பேச்சை கேட்டால் என்ன உணருவார். காட்டு வேலை செய்த உடம்பு வளையாமல் தான் நிக்கும். மண்ணு, செங்கல், கல்லு சுமக்கும் வேலையில் வேக எட்டு வைத்து தான் நடப்பாள். அது அவள் பழக்கம் அது ஒரு குறையா!.
நிமிந்த நடை தான், முதுகை குறுகி நடக்க தெரியாது. அவள் வம்சாவளி இப்படி தானாம். அதற்கு இவள் என்ன செய்வாள். பெத்தவங்க கிட்ட இருந்து தானே வரும் உடல் வாகு, நிறம்,முகம் எல்லாம். ஒரு பெண் எப்படி தான் இருப்பாள். தான் அழகு இல்லையேன்னு தெரியும் தான். ஆனால், இவர்கள் பெண்ணே இல்லை என்று சொல்லும் போது தாங்க முடியவில்லை பூர்ணாவால்.
ஊரில் மாமன் முறையில் யாரேனும் ஒருவர் கருவாச்சி என்று கேலி செய்தால், அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவாள். வக்கு இல்லாமல் வாக்க பட்டு வந்தவள் வாய் திறக்க முடியுமா! பொறந்த வீட்டு மகராசிகள் ஒரு சொல் சொல்ல முடியாது. சொல்லி விட்டு தப்பிக்கவும் முடியாது. அழுது ஆர்ப்பாட்டம் செய்து, இதனால் தான் பிள்ளை இல்லாமல் மலடியாக நிற்கிறாள் என்று மேலும் பேசுவார்கள். அது, இன்னும் வலி தான். கூசாமல் கைநீட்டுவான் கணவன்.
மெளனமாக வாய் மூடி கொண்டு கறி குழம்புக்கு மசால் அரைத்தாள். பொறந்த வீட்டு ராஜ்ஜியம், தன் வீட்டிற்கே வந்து, தன் கையால் உண்டு, தன்னையே பேசி செல்வார்கள். அமைதியாக கேட்டு கொள்ளணும் வாக்க பட்டு வந்த மகராசி.
கடந்த கால துயரில் சிக்கி கொண்டவளை கலைத்தான் வேலு.
“என்னாலே! மரம் மாறி நிக்குறவ. என்னத்த பெரிய யோசனை”
ஒன்னுமில்லை என்று தலையாட்டியவள், உடை மாற்றி வந்தாள். மகளின் தலையை வருடி கொடுத்த வேலு, “ உம் மவளுக்கு இன்னைக்கு நல்ல ஆட்டம் தான். சொந்தத்தை எல்லாம் பார்த்து நம்மள தேடவே இல்லை, பார்த்தியா” என்று வேலு கேட்க.
சோட்டு ஆளு இல்லாம, தனியா கெடந்துச்சுல. அதான், ஒரே கொண்டாட்டம். நம்ம பவிக்கு, நல்ல நீள மூக்கு. பெருசானதும் நாகரீகமேல்லாம் பார்க்காம ஒத்த வைர கல்லு மூக்குத்தி போடணும் வேலு” என்றாள், தன் துயர் மறந்து மகள் பற்றிய பேச்சில் உற்சாகமாக,
“சரி சம்மு. நீயி சொன்ன மறுப்பேது” என்று தலையாட்டினான் வேலு.
“முடி வளக்கணும்லே. பாரு கொஞ்ச நாள்லே எம்புட்டு நீளமா வளருது. முடி மின்னும் போல நம்ம பவிக்கு” என்று மகளை பார்த்தவாறு பூர்ணா சொல்ல,
“ம்ம் தாமரைக்கு முடி நல்ல நீளம். அப்ப ஆயீக்கு வளராம இருக்குமா. அவங்க அம்மா முடி தான் போல” என்று வாய் தவறி சொன்ன பின்பு தான்அர்த்தம் புரிந்து துடித்து போனான்.
பூர்ணா முகம் சிரித்த படி இருந்தாலும், கண்கள் கலங்கி போனது. என்ன இருந்தாலும் பவித்ராவின் தாய் தானாக முடியாதே. பாராட்டி சிராட்டி வளத்தாலும், பத்து மாதம் சுமந்து பெத்தவளுக்க தானே முன்னுரிமை. பாழ் வயித்துக்கு ஒன்ன சுமக்க கடவுள் வரம் கொடுக்களையே.
“ ஏட்டி சம்மு! மனசார சொல்லாகவே. வாய் தவறி ஏதோ வந்துருச்சு. வெசன படாத, பவித்ரா அம்மா நீதாலே” என்று வேலு சமாதானம் சொல்ல.
“அம்மா நான் தான் வேலு. அதுக்கு தான இந்த கல்யாணம்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல்,
“உடம்புல எண்ணெயை தடவி மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டுமாம். எனக்கும் அப்படி தான் எதுவும் ஒட்டாது போல” என்று வேலு முகம் பார்க்காமல் சொன்னவள். பவித்ரா தலையில் ஒரு முத்தம் வைத்து, எழுந்து சென்று விட்டாள்.
கடந்த கால வலியை கடக்காமல் நிக்கும் போது, வேலுவின் பேச்சு பெரும் வலியை கொடுத்தது. நமக்கு எந்த உறவும் கொடுப்பணை இல்ல போல, ஒத்த கட்டையா போறதுக்கு விதி இருக்குதோ!