வேலுக்கு மனம் ரொம்ப பாரமாகி போனது. பவித்ரா மீதான பூர்ணாவின் பாசம் தெரிந்தது தான். அவள் பேச்சு, செயல் எல்லாம் மகளை கொண்டுதான், வீட்டிலோ அல்லது வெளியிலோ எது என்றாலும் மகளை மனதில் கொண்டு தான் செய்வாள். மகளை வயிற்றில் சுமக்க வில்லையே தவிர, நொடி குறையாமல் நெஞ்சில் சுமப்பவள். அவள் உருகுவதும், மறுகுவதும் மகளிடம் மட்டும் தான்.
மகள் பின்னோடே சுற்றும் மருமகளை பார்த்த பெரியாத்தா கூட சொல்வார், “சரியான பிள்ளை கிறுக்கு பிடிச்சவ” என்று. பவித்ராவின் தாய் என்ற ஸ்தானத்தில் தான் வேலுக்கு மனைவியானதே. இருந்தும் என்ன செய்ய? இது மாதிரி சில பல சங்கடங்களை சந்திக்க தான் வேண்டும். அது பூர்ணாக்கும் தெரியும் தான். ஆனால், வேலு சொன்னது தான் அவளை உறுத்தியது.
பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவளுக்கு, வேலுவின் பேச்சு, பொட்டில் அடித்தது போல் வலிக்க, ஆதங்கத்தில் பேசி விட்டாள். தற்போது ஆற அமர யோசிக்கையில் தான், வேலு எதார்த்தமாக சொன்னதை தான் பதார்த்தமாக எடுத்து கொண்டோம் என்று புரிந்தவள் தன்னை மாற்றி கொண்டாள். அது தானே பூர்ணா.
சகஜமாக மனைவி பேசுவதை கண்டு ஆச்சரியமான வேலு,
“என்னாலே கோபம் பேச்சா! மூஞ்சியை சுண்டிகிட்டு போனவ, நான் பதறி போனேன் தப்பா பேசி போட்டோமோன்னு! உம் மனசு தெரிஞ்சும், பட்டுன்னு வார்த்தை வந்துருச்சுலே. உனக்கு வேதனையாக்கி போட்டேனே சம்மு!”…
“இதுல வேதனைக்கு என்னாலே வேலு இருக்கு. நெசத்த தான சொன்ன. அப்ப கொஞ்சம் வலி தான், யோசனை பண்ணி பார்த்த நிதர்சனம் அதான வேலு. நான் என்னதான் கண்ணுக்குள்ள வச்சு பார்த்தாலும், பெத்தவ அவ தான. சும்மாவா பெத்தா! எம்புட்டு கஷ்ட பட்டாளோ, நான் அதா யோசிக்காம வருத்தபட்டுபோனேன் பாரு. நான் ஒரு கூறு கெட்டவளே! சொல்லுவாங்க வாந்தி, மயக்கம் வருமாம், நல்லது எதுவும் திங்க முடியாதுன்னு அதுவும் பிள்ளை வலி மரண வலியாம். நான் என்னத்த கண்டேன். ஆறு வருசத்தில ஒரு அறிகுறியும் தெட்டு படல” என்று சொல்லும் போது லேசாக கண்கள் கலங்கியது.
“பத்து மாசம் செமந்து, உயிர கொடுத்து பெத்தவளுக்கு இந்த உரிமை கூட இல்லாட்டி எப்படி வேலு. வேணாம்னு பிள்ளையை தூக்கி கொடுக்கும் போது, அவ மனசு என்ன பாடு பட்டுச்சோ! யாருக்கு தெரியும். பெத்தவ துடிக்காம சந்தோசமாக செஞ்சிருப்பா” என்று பூர்ணா சொல்லும் போது, வேலு முகம் கசங்கி தான் போனது தாமரை நினைவில்.
“ யார சொல்லி நோவ? காலமும், நேரமும் கண்ணை கட்டுன மாதிரி மனுசங்களை சில நேரம் சுத்தி விட தான் செய்யும். வரம் எம் மடியில விழுந்து போச்சு, அதுக்கு நான் வணங்கணுமே தவிர, ஏட்டிக்கு போட்டிய நிக்க கூடாதுலே! நானே நினைச்சது உண்டுலே கோபத்தில் முகம் சுருக்கும் போது தாமரை மாதிரின்னு. ஏதோ ஒரு ஆற்றாமை விட்டு தள்ளு” என்று ஒரு புரிதலோடு பூர்ணா சொல்ல, மன நிறைவாக புன்னகை செய்தான் வேலு.
அடுத்து தூக்கம் கலைந்து பவித்ராவும் எழுந்து வந்தவள், “ அம்மா” என்ற அழைப்போடு மடியில் ஏறி அமர்ந்து, தாயின் கழுத்தை கட்டி கொண்டு அடுத்த அரைகுறை தூக்கத்திற்கு தயாரானாள். பார்த்த பெற்றவர்கள் இருவரும் அர்த்த புன்னகை புரிந்தனர்.
பதினொரு வயது பெண் சிறு குழந்தை போல மடியில் தூக்கி வைத்து கொள்வாள் பூர்ணா. இன்னும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு தான், மாதம் மாதம் வரும் வழி பாட்டையும் சிறு முக சுணக்கம் கூட இல்லாமல் தாங்குவாள். வேலு கூட சொல்லுவான், உள்ளாடைகளை துவைக்க, தன் துணிகளை மடிக்க என்று சிறு சிறு வேலைக்கு பழகுமாறு. ஆனால், பூர்ணா தான் ஒத்தை பிள்ளை, அப்புறம் நான் எதுக்கு அம்மான்னு இருக்கேனாம் என கூறி வேலுவின் வாயை அடைத்து விடுவாள்.
பத்து மாதம் வலி தாங்கி, உடல் சுருங்கி பெற்ற தாமரை எப்படி தாயோ! அதே போல் ஒரு தாயாக பெண் குழந்தையின் பொறுப்பையும், கடமையையும் தாங்கி நிற்கும் பூர்ணாவும் ஒரு தாய் தானே. பிள்ளை சுமக்கும் வரம் ஒரு பெண்ணுக்கு கிடைக்காததாலே, தாய்மை உணர்வு அற்றவள் ஆகி விடுவாள! கர்ப்பம் செத்தாலும், தாய்மை உணர்வு சாகாது தானே! அந்த நிலையில் நின்று தான் பூர்ணாவும், தன்னை பவித்ராவின் தாயாக நிலைப்படுத்தி கொண்டாள்.
கலைவாணன் சித்தப்பா தாமோதரன், பெரியோர்களில் பிந்தி நிற்பது இவர் மட்டுமே. மூத்த தலைமுறை என்பதால் கலைக்கு மிகுந்த மரியாதை அவர் மேல். அவர் சொல் எங்கும் நிற்கும், அதற்கு தக்க தான் அவரும் நடந்து கொள்வார். அத்தகைய மரியாதை மிக்க மனிதருக்கு, ஏனோ மதுரை வீட்டு சொந்தம் மட்டும் ஆகாது. ஏதாவது குற்ற குறை வந்து கொண்டே இருக்கும் அவர் வாயில் இருந்து. மருமகன் சரியாக நிற்பதாலோ என்னவோ பெரியத்தாவும் சரி, வேலுவும் சரி அவர் பேசுவதை பெரிது படுத்த மாட்டார்கள். அத்தோடு, பெண் குடுத்த இடம் என்பதால் கொஞ்சம் நயந்து தான் போவார்கள் .
அவர் தாமோதரன். புதுமண தம்பதிகளை காண தற்போது தான் வந்தார். படிப்பறிவு இல்லாமல் கிராமத்து கலையுடன் இருக்கும் வேலு, அவருக்கு இளக்காரம் தான். வரவேற்பு, அறிமுகம், விசாரிப்பு எல்லாம் முடிஞ்சு ஆற அமர பேச ஆரம்பத்தார்கள் பெரியவர்கள்.
வேலு தம் மனைவியிடம் சொல்லி தான் அழைத்து வந்தான். அவளின் வெடுக்கென்று குணத்தை கொஞ்சம் அடக்கும் படி. பெரியவரின் பேச்சு எப்படி மாறும் என்று யாருக்கு தெரியும். தம் தமைக்கையுடன் பிணக்கு வராமல் இருந்தாலே போதும் என்ற நிலை தான் வேலுவுக்கு.
புது மன தம்பதிகளை ஆசிர்வதித்த தாமோதரன், “இது தான் இப்ப கட்டி ட்டு வந்த பொண்ணா? முன்ன அழகா இருந்தா போதும்ன்னு கட்டினிங்க, அது சரி இல்லன்னாவும் இப்படி முடிச்சு போட்டீங்க” என்று சிரிப்போடு தாமோதரன் சொல்ல,
பூர்ணாவின் பார்வையில் உஸ்னம் ஏறியது. மற்றவர்கள் சங்கடமாகத்தான் பூர்ணாவை பார்த்தனர். அவரின் குணம் அவர்களுக்கு தெரியும், பூர்ணா புதுசு இல்லையா, அதனால் வந்த சங்கடம்.
கலை தான், “ சித்தப்பா! என்ன பேசுறீங்க? பூர்ணாக்கு என்ன குறை தங்கமான பொண்ணு. நம்ம வேலு தான் குடுத்து வச்சுருக்கணும்”… என்றான் சமாதானமாக,
“அட, என்னப்பா நீயி! நான் என்ன வேலு சம்சாரத்த குறையா சொன்னேன். பார்க்க கொஞ்சம் முத்துன மாதிரி இருக்கேன்னு கேட்டேன். அம்புட்டு தான் வேற ஒன்னும் தப்பா கேட்கல” என தாமோதரன் தன் கெத்து குறையாமல் பேச,
கலை தான் வாயை வைத்து கொண்டு சும்மாவே இருந்திருக்கலாம் என்று நினைத்தான். வாணி பார்வையாலே தம்பி மனைவியிடம் மன்னிப்பு கேட்க. வேலு மனைவியின் கையை இறுக பற்றி கொண்டான்.
இப்போ பூர்ணாக்கு கோபம் எல்லாம் வர வில்லை, மனதில் வலி தான் வந்தது. வைராக்கியமாக அழ கூடாது என்று நின்றாள். இந்த மாதிரி பேச்சுகள் தன்னை விட்டு எப்போதும் நீங்காது போல…..
“என்ன பேச்சு அண்ணே , நீங்க பேசுறது. வேலுக்கு ஆறு மாசத்துக்கு இளமை சம்மு. அவ வளத்தியும், உடம்பும் அவ அப்பனகெனக்கா. அவக வம்சம் எல்லாம் அப்படித்தான், ஓங்கு தாங்க இருப்பாங்க. வேலு செய்ற எல்லா வேலையும், இவளும் செய்வா. ஒரு ஆம்பள நிக்க முடியாது இவ வேலைக்கு முன்னாடி. எடுத்து கட்டி செய்றதுல எம் மருமகளை மிஞ்ச ஆளே இல்லை. ஒண்ணும் இல்லாம போய்ருப்போம் நாங்க, கட்டி தாங்குறது இவ தான். நாங்க செஞ்ச புண்ணியம் தான், இவ வீடு வந்தது”…. என்று பெரியாத்தா தம் மருமகளின் முக்கியத்துவம் என்ன என்று உணர்த்திய பின் தான் ஓய்ந்தார்.
என்றும் அடங்கி போகும் தம் சம்மந்தி, இன்று எகிறி நிக்கவும், முதலில் திகைத்தவர், பின் அந்த பேச்சையே விடுத்து வேலுவின் தொழில் பற்றி பேச்சை ஆரம்பித்தார்.
“ அப்புறம் வேலு, விவசாயம் எல்லாம் எப்படி போகுது . வானம் பார்த்த பூமி தானே உங்க காடு. முப்போகம் விளையாது இல்ல! தண்ணி இருக்க, தக்காளி விலை குறஞ்சி போச்சாம். வருமானம் வருதா!”
“மழை ஒன்னும் அந்தளவு பெய்யல மாமா. கிணத்து தண்ணி தான், ஊத்து இருக்கு பக்கத்தில. ஓரளவு போகுது வெள்ளாமை. கடன்னு நிக்காம சாமி காப்பாத்தி விடுது” என்று நயந்தே பதில் சொன்னான் வேலு.
பூர்ணா தான் கடுப்பாக பார்த்தாள். இது என்ன! உனக்கு அடங்கி நான் என்னும் தோரணை.
“கடனா! பார்த்து வேலு, வெள்ளாமை தூக்கி விடுற மாதிரி ஆள அமுக்கிபிடும். கடன் வரைக்கும் போக வேண்டாம். ஒன்னு ரெண்டு முன்ன பின்னனாளும் எம் மகன் கிட்ட கேளு. சொந்தம்ன்னு நாங்க எதுக்கு இருக்கோம். ஊருக்கே வட்டிக்கு விடுறான், உனக்கு செய்யாமவ போவான்”…
“எம் மருமவ குணத்துக்கே எம்புட்டும் செய்யலாம். நாளைக்கு ஒரு விசேஷம்ன்ன தாய் மாமன் சீர் தான் மொத சபை நிறைக்கணும். எங்களவுக்கு சீர் செய்யணுல, உன்னைய ஒரு பய குறை சொல்ல கூடாது. ஏற்கனவே உம் பொழப்பு ஊர் சிரிச்சு போய் இருக்கு, இனி சிறப்பா வாழணும். கூட குறைய நின்னாலும் மகன் பார்த்துபான்” பெருந்தன்மையாக தாமோதரன் சொல்ல,
வாணிக்கு தப்பாக ஒன்றும் தோன்ற வில்லை. கஷ்டத்தில் உதவுகிறேன் என்ற மாமனாரின் பேச்சு அவளுக்கு நிம்மதியை தான் கொடுத்தது. ஆனால், பூர்ணாக்கு எல்லாம் தப்பாக தான் தெரிந்தது. வரிகளுக்கு இடையே பொருள் உணர்தல் என்றொரு வாக்கியத்தை கச்சிதமாக படித்தாள். ஏன்! வாணியை தவிர அனைவருக்கும் பொருள் உணர தான் முடிந்தது. இனி பொறுக்க வேண்டாம் என்று பூர்ணா தம் பேச்சை தொடங்கினால்.
“பெரியப்பா குணம் பெருந்தன்மையா இருந்தாலும், பொண்ணு குடுத்த இடத்தில கை நீட்டுற அளவு வக்கத்தவங்காள சாமி எங்கள வைக்கல. முப்போகம் அமோக விளைச்சல் இல்லாட்டியும் முப்போகமும் விளைச்சல் தான், சும்மா தரிசா கிடக்கல. எல்லாம் காலத்துக்கு தக்க வெள்ளாமை கிடைக்குது. ஊருக்கே கணக்கு பாக்காம செய்ற குடும்பம் நாங்க, எங்க வீட்டு பொண்ணுக்கு செய்யாம விடுவோமா!” என்று நயமாக சொல்லியவள். கொஞ்சம் நிறுத்தி,
“நான் ஒரு மடச்சி பெரியவங்களுக்கு தெரியாததா! தெரியாம என்ன, அது தெரிஞ்ச நால தானே திருச்சியில இருந்து மதுரைக்கு பொண்ணு கேட்டு வந்தீங்க. இத்தனை வருசமும் எப்படி சபை நிறைச்சு சீர் செஞ்சோமோ அப்படியே அடுத்தும் செய்வோம். விவசாயம் ஆள அமுக்காது பெரியப்பா, மண்ணுல என்ன போட்டாலும் பொண்ணு தான். நீங்க விவசாய குடும்பம் இல்லைல அதான் உங்களுக்கு ஒன்னும் தெரியல!” என்று ஒரு குட்டு வைத்தே அமைதியானாள்.
தாமோதரருக்கு தான் ஒரு சின்ன பெண்ணிடம் வாயடக்கி போவதற்கு விருப்பமில்லை, “ என்னம்மா இப்படி பேசுற. சொந்த பந்தம் நாங்க இருக்கோம்ன்னு சொன்னது குத்தமா. எங்க தொழில் என்ன? சொத்து மதிப்பு தெரியுமா? வானம் பார்த்து நாங்க பொழப்பு நடத்தல, எங்க ஒரு நாள் வருமானம் வருமா உங்க வெள்ளாமை. எங்க வீடு வாசல் பார்த்துமா இப்படி பேசுற?”..
பூர்ணாவும் விடவில்லை, “வானம் பார்த்து பொழப்பு நடத்துற குடும்பத்து பொண்ணு வேணும்ன்னு தானே கட்டி போனிங்க. நானும் அந்த ஊர் தான் பெரியப்பா, அந்த வானம் பார்த்து தான் உங்க வீட்டுக்கு வகையா செஞ்சாங்க. வருமானம் ஏன் வராது பெரியப்பா? வடக்கு தென்னையும், வாழையும். கிணத்த சுத்தி நெல்லு, ஊத்து பக்கத்தில கரும்பு, மலையோரம் கடலை, பருத்தி, கீழ வெங்காயம், தக்காளி, கத்தரி. எதுவும் கை குடுக்காம போகாது, யார்டையும் கையேந்தவும் விடாது. ஒண்ணுமே இல்லானாலும் கம்பு, சோளம்ன்னு தட்டையை விதச்சு கூட வருமானம் பாப்போம். தள்ளாத காலத்திலும் ரெண்டு மாட்டை புடிச்சா யாருக்கும் அஞ்சாம வாழ்வோம் நாங்க”…..
“பார்த்தியா வாணி உங்க வீட்டு புது மருமகள் பேச்சை. எம் மருமகள் தம்பி தானேன்னு கூப்டு வச்சு பேசுனதுக்கு, என்னையவே குத்தலா பேசுது இந்த பொண்ணு. நேத்து இன்னியாரம் வந்துட்டு எம்புட்டு பேச்சு. நியும் வந்து பதினெட்டு வருசம் ஆச்சு, ஒரு சொல்லு வந்துருக்குமா! உம் வளர்ப்பு அப்படி. தோட்டம் துறவுன்னு புதுசுல அதான் பவுசு கூடி போச்சு, இருக்குறவங்களுக்கு எதுவும் பெருசா தெரியாது, இல்லாதவங்களுக்கு எல்லாம் பெருசு தான். தன்மை, அனுசரிப்புன்ன என்னன்னு எமருமக கிட்ட கேளு. ஏற்கனவே ஒரு இடத்தில வாழாம வந்துட்டா, இங்கையும் உம் வாயால கெடாத” என்று தாமோதரன் சொன்ன நொடி, “ சித்தப்பா” என்று பெரிதாக ஒரு அரட்டல் போட்டான் கலைவாணன்.
“ போதும் சித்தப்பா கிளம்புங்க. வார்த்தையை விடாதீங்க, திரும்ப அள்ள முடியாது” என்று அமைதியாகவே சொல்லி அழைத்து செல்ல பார்க்க,
“வாடா ! என்னையவே அரட்டு. நம்ம வீட்டுக்கே வந்து, நம்மளையே போட்டு பாக்குது! கலிகாலம் முத்தி போச்சு! என்ன சொல்ல அது அது வளர்ப்பு அப்படி. நம்ம வீட்டு பொண்ணுகள ஒரு குறை சொல்லி முடியுமா” என்று தாமோதரன் குறை பட்டு கொண்டார்.
யாருக்கும் பேச முடியவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. இது தான் குடும்ப அரசியல், வாணியை கொண்டு பூர்ணாவை தாக்கி பேசி விட்டார். இனி, பூர்ணா பக்கம் நின்றாள், அது வாணியை குறைவாக காட்டும். அமைதியாக இருந்தாலும் அவரின் பேச்சை ஆதரித்தது போல் ஆகும். சின்ன சின்ன பேச்சு எங்கையோ கொண்டு போய் விட்டது.
ஆனால், பூர்ணாக்கு அப்படியே விட மனதில்லை. அது என்ன வளர்ப்பு. எம் வளர்ப்பில் என்ன குறை. மனம் உதைக்க, வேலு தன்னை அமைதியாக சொல்லுவதையும் காதில் வாங்காமல்,
“அப்படி என்ன பெரியப்பா, உங்க வீட்டு வளர்புல இருக்கு. எம் வளர்ப்புல இல்ல. நின்னு பதில் சொல்லிட்டு போங்க”…
வாசல் வரை சென்றவர் திரும்பி, “ ம்ம்ம் நடுத்தர வயது தாண்டிய பின்னாடி ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்கியே. அம்புட்டு ஒரு காரியம்லாம் எங்க வீட்டு புள்ளைகா செய்ய துணியாதுக. சாகுற வரைக்கும் ஒரு கட்டை தான். அதுவும் உம் வயசுலலாம் நினைச்சு கூட பார்க்க மாட்டாங்க” என்று ஆவேசமாக சொன்னார் தாமோதரன். அவரால் மகன் தன்னை வெளியேற சொன்னதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.
அதே ஆவேசம் தான் பூர்ணாவுக்கும், “ ஓ அப்ப நாப்பது வயச நெருங்குற ஆம்பள, பொம்பளைக்கு துணை தேவை இல்லையா. அப்படின்னா உங்க வீட்டுல எல்லாம் நாப்பது வயசுக்கு மேல ஆம்பளைக பொண்டாட்டியை தள்ளி வச்சுடுவாங்கள” என்று ஆதங்கம் குறையாமல் கேட்க.
ஸ்தம்பித்து போனார்கள் அனைவரும். அடுத்த நொடி வேலுவின் கை பூர்ணாவின் கன்னத்தை பதம் பார்த்தது. அதிர்ச்சியில் அடுத்து பேச வராமல் பூர்ணா நின்றாள். வாணியின் கண்களில் கண்ணீர் கரகரவென்று வந்தது.
அதிர்ந்து நிக்க நேரமில்லை என்று கலை தன் சித்தப்பாவை வழியனுப்பி விட்டு உள்ளே வர, பெரியாத்தா தான் மகனை பிடித்து சத்தம் போட்டு கொண்டிருந்தார். பெண்கள் இருவரும் வாய் திறக்க வில்லை.
“என்னைய! என்ன செய்ய சொல்ற ஆத்தா. இவ வாயை அடைக்க வேற வழி தெரியல. கொஞ்சம் பொறுமையா, அனுசரிச்சு போனாத்தான் என்னவாம்.அடுத்த வீட்டுல விருந்தாளியா வந்து இருக்கோம். வேலு பொண்டாட்டியால மனகசப்பு வந்ததா இருக்க கூடாது” என்று சொல்லியதோடு, தன் அக்காவிடம் மன்னிப்பும் கேட்க. வாய் வார்த்தையாக கூட மறுப்பு சொல்லாமல் அமைதியாக நின்றிருந்த வாணியை பார்த்து கொதித்து போனது பூர்ணாக்கு.
வாணிக்கு, அவள் கவலை. அடுத்து சொந்தத்தில் என்ன பேச்சு வரும், கணவனுக்கு தம் வீட்டாரால் ஒரு தலைகுனிவு, மாமியார் கேட்கும் போது எப்படி சமாளிக்க, மற்றவர்களிடம் என்னவென்று விளக்க. இந்த பூர்ணா கொஞ்சம் அமைதியாக இருந்திருந்தால் இவ்வளவு தூரம் வராதே என்ற எண்ணம் தான் அவளுக்கு.
“மன்னிப்பு எல்லாம் எதுக்கு வேலு. நானும் கொஞ்சம் சுதாரிச்சு இருக்கணும். சித்தப்பா குணம் தெரிஞ்சும் விட்டுடேன். உங்கள விருந்துக்கு கூப்பிடு வச்சு சங்கட படுத்திட்டேன்” என்று ஒரு குன்றலோடு கலை பேச, பதறி போனாள் வாணி.
“ என்னங்க எதுக்கு இப்படி மருகி பேசுறீங்க. சின்ன மாமா குணம் தெரிஞ்சது தானே, விடுங்க. பூர்ணா கொஞ்சம் விட்டு குடுத்து போய்ருக்களாம். சொந்தம் தானே, எல்லாத்துக்கும் முட்டாம அனுசரிச்சு தான் நிக்கணும்” என்று வாணி நேராக கூட பூர்ணாவிடம் சொல்லாமல் பொதுவில் வைத்து பேச,
அடுத்து முடியவில்லை பூர்ணாவுக்கு, “ உங்க மகள பேசுனாலும் சொந்தம் தானேன்னு அனுசரிச்சு தான் போவீங்களா மதினி” என்று நேராகவே பூர்ணா கேட்க.
“என்ன பேசுற நீ. எம் மகளுக்கு சாபம் கொடுக்குறைய நீயி” என்று பூர்ணா சொன்ன சொல்லை தாங்க முடியாமல் பதறி போய் பேசினாள் வாணி .
“ வாணி” என்று கலை அதட்ட . “சம்பூர்ணா” என்று அழுத்தி கையை பிடித்தான் வேலு. தன் கையை அவனின் பிடியில் இருந்து உதறிய பூர்ணா,
“ விடுலே எம் கையை . மூச்! நீயி பேசவே கூடாது. ஆம்பளன்னு ஒரு தடவை உன் கை நீண்டு வந்துருச்சுல. அடுத்து அடிக்க நீயும் யோசிக்க மாட்ட. நான் பேசுறதெல்லாம் பேசிக்கிறேன். அடுத்து மொத்தமா அடுச்சுக” என்றவள்.
வாணியின் புறம் திரும்பி, “ வாய் வார்த்தையாக சொன்ன ஒரு சொல்ல கூட உங்களால தாங்க முடியலையே. நிர்ச்சந்திய நடு வீட்டுல வச்சு என்னைய பேசும் போது யாரும் ஏன் கேட்கல? இது தான் அவர் குணம்ன்னு எனக்கு மட்டும் தான் அமைதியா போவீங்களா!. அதான் உங்க மகளுக்கு எப்படின்னு கேட்டேன். மத்தபடி உலகத்தில எந்த பொண்ணுக்கும் என்னைய மாதிரி ஒரு நிலமை வர கூடாதுன்னு சாமிய கும்பிட்டுகிருக்கேன்” என்று விரக்தி புன்னகை சிந்தியவள்.
“ஏன் வேலு? உனக்கும், தாமரைக்கும் என்ன பிரச்சனை. எல்லாம் உம் மகளுக்காக தானே? அப்போ ஏன் எனக்காக நீ பதறி துடிக்கல வேலு! எம் வளர்ப்பு சரி இல்லையாம், எம் பொறப்பு சரி இல்லையாம்” என்று சின்ன குரலில் பேசியவள்.
“நான் பேசுனது தப்புன்னு மன்னிப்பு கேக்குற வேலு. அப்ப அந்த பெரிய மனுசன் என்னைய பேசுனதுக்கு. நான் யார் கிட்ட போய் நியாயம் கேட்க. என் கடந்த கால வாழ்க்கையை விமர்சிக்க அவர் யாரு? எம் வலி, எம் வேதனை புரியாம, நான் கடந்து வந்த பாதை தெரியாம, ரெண்டாவது கல்யாணம் அதுவும் நடுத்தர வயசுல பண்ணிகிட்டா அவ தப்பானவ அப்படியா வேலு? யாரும் கல்யாணம் பண்ணும் போதே, அது தோத்து போய் ஒண்டியா நிக்கணும்ன்னு நினைப்பாங்களா. எங்க விதி தனியா கிடந்தோம், அப்படியே கிடந்த பரிதாபடுவாங்க, அதா தாண்டி எனக்குன்னு ஒரு பாதையில நின்ன அவ வளர்ப்பு சரி இல்லாதவ”என்று வேதனையோடு பூர்ணா பேச,
தாங்க வில்லை வேலுக்கு. “ஏட்டி சம்மு!” என்று அருகே வர,
“அடச்சீ தள்ளி நில்லு. கிட்ட வந்த கொன்னுடுவேன் கொன்னு. உம் மேல கொலை வெறில இருக்கேன். உமக்கு கழுத நீட்டி தாம்லே கண்டவனும் என்னைய பேசுறான். கூரை வீட்டுல, ரேசன் கஞ்சி குடிச்சு கூட நிம்மதியா இருந்தேன். பெரிய பவுசு வாழ்க்கை, உம் கூட சேர்ந்து நானும் தானே வெயில்ல வெந்து சாகுறேன். அது யாரு கண்ணுக்காது அம்படுதா. பூவும், பொட்டும நிக்குறது தான் பெருசா தெரியுது” என்று கணவனோடு மல்லுக்கு நிக்கும் போது, தம் இயல்பு மீண்டாள் பூர்ணா.
அடுத்ததாக வாணியின் புறம் திரும்பியவள், “ ஏன் மதினி, உங்க வீட்டுகாரர் தலை குனிஞ்சு நிக்குறத கூட உங்களால தாங்க முடியலை. ஆனால், உங்க மாமனார் வேலுவ அப்படி பேசும் போது, நான் மட்டும் அமைதியா போனுமா!. உங்க புருசனுக்காக நீங்க பேசலாம், எம் புருசனுக்காக நான் பேச கூடாதா. நாங்க என்ன காசு, பணம் அள்ளி போகவா வந்தோம். சொந்த அக்கா வீடு ரெண்டு நாள் சேந்தாப்புல கூட இருக்க முடியல. யாரு என்ன சொன்னாலும் அனுசரிச்சு போகணும், அதான் பொண்ணா பெத்தவங்க கடைமையா. நீங்களும் எங்ககிட்ட இருந்து இத தான் எதிர்பாக்குறீங்களா!” என்று பூர்ணா கெடுக்கென்று கேட்க.
“அய்யோ சம்மு! எந்தம்பி நான் அப்படி நினைப்பேனா! எம் மாமனார் வார்த்தையை நிதானமில்லாம தான் விடுவார், எங்களுக்கு அது பழக்கம் தான். வேலு எப்பவும் அவர்கிட்ட வாய் திறக்க மாட்டான், அம்மாவும் தான். நீயி தான் கொதிச்சுட்ட, முன்னமே தெரிஞ்சிருந்தா தடுத்திருக்கலாம்” அதே பல்லவியை வாணி பாட, வெறுத்து போன பூர்ணா,
அக்கா மாமனாரு அப்படின்னு வேலு கூட பொருத்து போகலாம். நான் ஏன் அப்படி போகணும். அவரு, நம்ம வீட்டுல வந்து நம்மளவே பேசுது இந்த பொண்ணுன்னு சொன்னாரே? நான் யாரு மதினி? உங்க தம்பி பொண்டாட்டி தானே. நான் ஏன் உங்க வீட்டுக்கு வரணும். எம் புருசனோட அக்கா, எங்க வீட்டு சொந்தம்ன்னு தானே உங்க வீட்டுக்கு வந்தோம். அப்ப எங்க மரியாதைக்கு நீங்க தானே பொறுப்பு” என்று அழுத்தமாக பூர்ணா கேட்க.
கலைவாணனுக்கு ரொம்ப தலை குனிவாக போனது. அவனால் பூர்ணாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை, “நீங்க உங்க வீட்டுல நல்ல மருமகளா நிக்க. நேத்து வந்தவ நான் என் புருசன், என் புருசனோட ஆத்தா, புருசனோட அக்கா, எம் புருசனோட அக்கா புருசன், அந்த அக்கா புருசனோட சின்ன சித்தப்பா வரைக்கும் நான் அனுசரிச்சு போகணும். அப்பத்தான் நான் குடும்ப பொண்ணு, நல்ல பொண்ணு. அவர் சொல்ற மாதிரி நேத்து வந்த எனக்கும், பதினெட்டு வருசம் முந்தி வந்த உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இத்தனை வருசம் எம்புட்டு பாத்திருப்பீங்க, உங்களுக்காக கூட உங்க வீட்டு ஆளுகளுக்கு மரியாதை குடுக்க தெரியலையே. இது தான் நீங்க கட்டி காக்குற சொந்தமா! அப்படி பட்ட சொந்தம் எனக்கு வேணாம்” என்று ஆவேசமாக பூர்ணா சொல்ல,
எல்லோரும் அரண்டு போய் பார்த்தனர். என்ன சொல்கிறாள் இவள்.
“நான் உங்களுக்கு வந்து நிக்காட்டியும், உங்க தம்பி நிப்பாரு. என்ன நடந்தாலும் உங்களுக்காக உங்க தம்பி தாய்மாமன் உறவ விடமாட்டாங்க.அந்த தைரியம் உங்களுக்கும் இருக்கு. என்னைய கூட தள்ளி வைப்பாங்க, நான் வாக்கப்பட்டு வந்தவ உங்கள மாதிரியே என்னைய விட்டு கூட புகுந்த வீட்ட உசத்தி பிடிக்கணும் பாருங்க” என்று சொல்லியவள், நின்று யாரையும் பார்க்க தெம்பில்லாமல் வெளியேறி விட்டாள்.
யாரும் அடுத்தவர்களை பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல், ஒருத்தர் முகம் பார்த்து பேச முடியாமல் அமைதியாகி விட்டனர். பெரியாத்தா தம் மகளை தனியே தள்ளி கொண்டு வந்தவர், நல்லா வாங்கி விட்டார். அவருக்கு மருமகள் பேசியதை தவறாக எண்ண தோன்ற வில்லை. இவள் தம் குடும்பத்தை விட்டு கொடுத்ததால் தானே, இன்று இவ்வளவு பேச்சும்.
கலைவாணனும் தன் தரப்பு தப்பை உணர்ந்தே இருந்தான். வேலுக்கு அடுத்த வீட்டில் வைத்து மனைவியை கை நீட்டி அடித்தது, மிகுந்த குற்ற உணர்வை கொடுத்தது. என்ன செய்ய? எல்லாம் தன் கைவிட்ட இயலாமை, யாரை கண்டிக்க முடியும், உரிமை மனைவியிடம் மட்டுமே. அதனால் தான், மனைவியை நோக்கி கை நீட்டி விட்டான். தற்போது அது ரொம்ப வலித்தது.
மாலை வரை அவரவர் யோசனையில் முடங்கி கிடக்க. தன்னை ஒதுங்க வைத்து கொண்டு வந்த பூர்ணா. ஆள் அரவம் இன்றி வெறிச்சோடி கிடப்பதை கண்டு, மெல்ல அடுப்படி சென்றாள். அங்கும் யாரும் இல்லாமல் இருக்க, வெளி வாயில் சென்றவள், அங்கு சோகமாக அமர்ந்திருக்கும் வாணியை கண்டு,
“ என்ன மதினி ராத்திரி சாப்பாட்டுக்கு நேரம் ஆவலையா? நீங்க பாட்டுக்கு எனக்கு என்னன்னு உட்கார்ந்து இருக்கீங்க. வாங்க, ராத்திரிக்கு என்னன்னு பாப்போம். பிள்ளைக வந்துரும் பால் காய வைக்கணும், மணி அஞ்சு ஆச்சுன்னா உங்க தம்பிக்கு சூட டீ வேணும். சித்திரை மாதம் கூட டீ இல்லாமல் இவகளுக்கு பொழுது நகராது” என்று பூர்ணா சகஜமாக பேசி கொண்டே, அங்கிருந்த பொருட்களை ஒதுங்க வைக்க.
அதிர்ந்து போய் பார்த்த வாணி, “ சம்மு! எங்கிட்டைய பேசுனா நீயி! எம் மேல உனக்கு கோபம் இல்லையா?” என்று வாணி வினவ,
“எதுக்கு கோபம் மதினி வருத்தம் தான். எங்களை நீங்க நினைச்சு பார்க்கலான்னு. குடும்பம்ன்ன மனகசப்பு, சடவு வரத்தான் செய்யும். அதுக்காக ஒரேதா வெட்டிக்கு போற உறவா நம்மது. சண்டையும், சமாதானமும் தான் உறவு, குடும்பம்” என்று எடுத்து சொன்னவள். அடுத்த கட்ட வேலையில் இறங்கினாள்.
“மதினி மண்டை கறி குழம்பு அண்ணனுக்கு பிடிக்குமாம். நீங்க அருவருப்பு பட்டு செய்ய மாட்டீங்களா. குடுங்க நான் வைக்கிறேன், நீங்க அந்த நாட்டு கோழிய பிராட்டி வைங்க உங்க தம்பிக்கு. என் சமையல் தான எப்பவும், இன்னைக்கு அக்கா கை மணத்த ருசி பார்க்கட்டும். பிள்ளைகளுக்கு என்ன வேணும்ன்னு கேளுங்க. வேலையை சீக்கிரம் குடிச்ச, பிள்ளைகளோடு செத்த நேரம் உட்காரலாம்”
வாணிக்கு தான் ஆச்சரியம் பூர்ணாவின் குணத்தில். நல்ல பொண்ணு தான், அதான் ஆத்தா ஒத்த கால்ல நின்னு முடிச்சு போட்டுறுச்சு போல. சமையல் வேலை சீக்கிரம் முடிய, பேச்சு குடுத்து கொண்டே இருவரும் சகஜ நிலைக்கு திரும்பினார். இவர்களின் ஒற்றுமை மற்றவர்களுக்கு தான் நிம்மதியை வர வைத்தது. குடும்ப பெண்களுக்குள் மன சடவு, ஆண்களுக்கு நிம்மதி ஏது!.
அனைத்தும் முடிய, எல்லாவற்றையும் எடுத்து சாப்பாட்டு கூடம் வைத்தவள், மாமியாரை சாப்பிட அழைக்க,
“அடி கூறு கெட்டளே! மருமகன் முன்னாடி நான் மேசையில உட்காரவாக்கும்”
“மருமகன் முன்னாடி இல்ல, மருமகனுக்கு முன்னாடி. மாத்திரை போடனும்ல, நேரத்தோடு சாப்பிட்டு போய் படுங்க” அவருக்கு உணவு குடுத்தவள்.
அடுத்த நேரம் கலகலப்பாக சென்றது. அனைவரோடும் பேசி சிரித்து, கதை பேசி, பொழுதை கழித்து நாள் நிம்மதியாக சென்றது. வாணிக்கும், கலைக்கும் அப்போது தான் நிம்மதியே. தங்கள் வீட்டில், தங்களால் ஒரு சங்கடம் என்று.
வேலுக்கு மனைவி பூர்ணா குணம் புரியத்தான் செய்தது. கூட்டு குடும்பத்தில் அனுசரித்து செல்வது என்பது அடங்கி செல்வதாக இல்லாமல். கோபம், சண்டை, வெறுப்பு எதுவென்றாலும் முகத்துக்கு நேரா பேசி, மனதை கொட்டி விட வேண்டும். மனதிற்குள் வைத்து அழுத்தம் உண்டாவதற்கு நேர்பட பேசுவது, செயலின் கணத்தை குறைக்கும்.
பிடிக்க வில்லையா நேராகவே சொல்லி, நொடி நேர கோபத்தை நொடியில் மறக்க வேண்டும். நாம் சொல்லாமல் மற்றவர்களாக புரிந்து நடப்பது என்பது குதிரை கொம்பு தான்.
பூர்ணா தெளிவாக தான் இருந்தாள். என்னை பேசுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். என்னை பேசுவது எளிதும் அல்ல! என்னோடு உறவாடுவது மட்டுமே எளிது என்று.
இவ்வளவு களோபரத்திலும் வேலுவுடன் சகஜமாக பேச வில்லை பூர்ணா. மனைவி கோபம் அறிந்து ஒதுங்கியே இருந்தான் கணவன். நம் வீட்டில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று. ஆனால், அங்கு தாமரை ரூபத்தில் காத்திருக்கும் பஞ்சாயத்து தெரியாமல்.