வேலுவின் குடும்பம் ஊர் திரும்பி வாரம் சென்றது. ஆனால், கணவன் , மனைவிக்குள் ஏதோ ஒரு இடைவெளி. அது வேலுக்கு மட்டும் தான் தோன்றியது போல, பூர்ணா சகஜமாக தான் இருந்தாள். எப்பவும் போல மகள், வீடு, தோட்டம், வேலை என்று தான் நாள் சென்றது. பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. தன்னை கை நீட்டி அடித்ததை பத்தி கூட கணவனிடம் மனைவி கேட்க வில்லை. ஒரே மற்றமாக மூவரும் ஒரே அறையில் தான் தங்கினர். வரும் போது பெரியாத்தாவும் உடன் வந்ததால் ஒரே அறை.
இது பற்றி தனிமையில் வேலு, தம் மனைவியிடம் கேட்ட போதும்,
“அதுனால என்ன வேலு. என்னைக்கு இருந்தாலும் நாம ஒரே அறையில் இருக்க தானே வேண்டும்” என்க.
குழம்பி போனது என்னவோ வேலு தான். என்ன சொல்கிறாள் இவள். தன்னுடன் வாழ தயார் என்கிறாள இல்லை எதார்த்தமாக கணவன் – மனைவி என்ற அர்த்தத்தில் சொன்னதை தான் அப்படி எடுத்து கொண்டோமா! வேலுக்கே ஒன்றும் புரியவில்லை.
ஆனால், முன்ன போல் இல்லாமல் வேலுவின் பார்வை சற்று உரிமையோடு மனைவியை தொடர்ந்தது. தவறு, சரி என்பதெல்லாம் தாண்டியும், அவன் கட்டுப்பாட்டில் அவன் இல்லை. நித்தமும் பூ வைத்து, உச்சி குங்கும வாசனையும், கண்ணாடி வளையல் குலுங்க அன்னமிடும் மனைவி புறம் மனம் வழுக்கி விழுந்தது.
அறையில் பெரிய படுக்கையறை கட்டில் மாற்ற பட்டு, அவனது பிரோவில் அவளின் துணிகள் இடம் பெற்றது. தூங்குவதற்கு மட்டுமே இந்த அறைக்கு வந்தாள் பவித்ரா. மற்றபடி அவளின் உபயோகம் எல்லாம் வேறொரு அறையில் தான். பூர்ணாக்கு சலனம் என்று எதுவுமில்லாமல் சகஜமாக இருக்க, வேலுக்கு தான் தடுமாற்றம். நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு பின், வேலுவின் அறையில் ஒரு பெண் வாடை.
குளியலறயில் சந்தன சோப்பும், மஞ்சள் வாசனையும். படுக்கையில் ராத்திரி வைத்த மல்லிகை வாசம். பவுடர், சேரில் கிடந்த துவைத்த துணிகளில் பூர்ணா சேலை வாசம் என்று கணவன், மனைவிக்கு உரித்தான அறையாக காட்சி அளிக்க. வேலுக்கு தான் சகலமும் சுத்த தொடங்கியது.
அன்று விடுமுறை தினமாக இருக்க பவித்ரா வீட்டில் தான் இருந்தாள். அப்போது தான் சந்தைக்கு சென்று வீடு திரும்பினான் வேலு. ஒரு புது டி.வி. எஸ்15 எடுத்திருக்க, அதில் தான் மாட்டுக்கு தவுடும், புண்ணாக்கும் கட்டி கொண்டு வந்தவன், அதை வெளி திண்ணையில் போட்டு விட்டு. உள் நோக்கி குரல் கொடுத்தான்.
“ஆயி! ஏத்த , அப்பனுக்கு அஞ்சாறு மோர் தண்ணி கொண்டுவா. உங்க அம்மை அடிப்படையில கலக்கி வச்சுருப்பா. செம்பு கொள்ள மோந்து வாத்தா. தொண்டை வறண்டு போய் கிடக்கு” என்று மகளை நோக்கி வேலு குரல் கொடுக்க.
“இந்தா வாரேன்ப்பா” மகளின் சத்தம் மட்டும் வர,
டி. வியில் பழைய சிவாஜி படம் பார்த்து கொண்டே கயிற்று கட்டிலில் சாய்ந்து கிடந்த பெரியாத்தா, மகனின் அரவம் உணர்ந்து.
“எய்யா சாமி! வந்துட்டியா வா ராசா வா, உள்ளாரா வந்து செத்த நேரம் குறுக்காத்து. சோர்ந்து போய் தெரியுறா, வெயில்லு அதிகமா?” என்க.
“ஆமா ஆத்தா, வெயிலு மண்டைய போளக்குது. தாகம் வேற, முக்குக்கு ஒரு டீ கடை இருக்கே தவிர, மோர் கடைய காணோம். எப்போ வீடு வரும்ன்னு இருந்தேன்” என்று வேலு புலம்ப,
“என்னவோ மகனே, இந்த வெயிலு ஆள கொள்ள தான் போகுது” என்று ஆத்தாவும் , மகனும் பேசி கொண்டிருக்க, மகள் வந்தாள் கையில் மோரோடு.
தந்தையின் கையில் மோரை வைத்தவள், ஒரு நோட்டு பேனாவோடு அமர்ந்தவள், “ கத்தரிக்காய் சிப்பம் எவ்வளவு ப்பா? கூலி எம்புட்டு போச்சு? இன்னைக்கு செலவு எம்புட்டு? மிச்சம் எவ்வளவு?” என்று வகையாக கணக்கு எழுதி காசை எண்ணி வாங்க.
தகப்பனுக்கு அம்புட்டு பெருமை. எல்லாம் பூர்ணாவின் ஏற்பாடு தான். அவள் இருக்கும் போது அவளிடம் தருவது, இல்லையேன்றால் மகளிடம் கணக்கு ஒப்படைக்க வேண்டும்.
“ஏலே வேலு! கண்ட மாதிரி காசா உள்ள போடாத. வரவு, செலவு தெரியாம பொம்பள எப்படி குடும்பம் நடத்த. வயசு புள்ளா வச்சுருக்கோம் காசா சேமிக்க வேண்டாம். எல்லாத்தையும் வெள்ளாமைக்கு போடாத. வீட்டுக்கு, செலவுக்கு, சேமிப்புக்குன்னு எல்லாம் தனியா போடு” என்றதோடு மட்டுமல்லாமல்,
“ வீட்டு பொம்பள கைலா காசா குடுத்து வாங்கி பழகுவே! வீணா இறைக்க யாருக்கும் மனசு வராது . ஆம்பளைக்கு கை ஓட்ட சிந்தி போகும். பொண்டாட்டி கிட்ட குடுத்துட்டு அடிக்கடி கை நீட்ட ஆம்பளைக்கு மனசு வராது. காசும் வீட்டுல நிக்கும்”…என்று சொல்லியதோடு வரவு, செலவு எழுதி வைக்கும் முறையை மகளுக்கும் சொல்லி கொடுக்க, கச்சிதமாக பிடித்து கொண்டாள் பூர்ணாவின் வெல்லகட்டி.
மோர் குடித்து வேலு இளைப்பாற, “ அப்பா! களை வெட்ட ஆள் வரங்களாம், அதனால் அம்மா மாட பிடிச்சுட்டு போகலயாம். நீங்க வந்த பின்னாடி மேக்கு தோட்டத்துக்கு மாட புடிச்சு போவீங்களாம். உங்களுக்கு சோறும் அம்மா கொண்டு போய்டாங்கப்பா”என்று மகள் சேதி சொல்ல,
கடுப்பான பெரியத்தா, “ஏண்டி! ஆத்தாளுக்கும், மகளுக்கும் வேற வேலை இல்லையா! எம் மகன பாடா படுத்துறீங்க. காடு கரையவே காங்க முடியல, இதுல உங்காத்தா மாடு வாங்கி பகுமானம் பண்றா. அவ பாக்க வேண்டி தானே! எம் மவன சக்கையா புழிஞ்சு போடுற உங்க அம்மை” என்று பெரியாத்தா வசவு தொடர்ந்தார் மருமகளை.
அரசி காலத்துக்கு பின் மாடு வளர்ப்பை எல்லாம் விட்டு விட்டான் வேலு. வயதான ஆத்தா வீட்டை, மகளை பார்ப்பதே பெரிது, இதில் மாடு வேற என்று எண்ணியவன் மாடு வளர்ப்பை கை விட்டான். ஆனா, பூர்ணா விட வில்லை.
“ ஊர்ல நம்ம வீட்டுல மட்டும் தான் மாடு இல்லை வேலு. கிராமத்து மக்க வெள்ளி, செவ்வாய்க்கு நேரம் செண்டு பாலுக்கு நிக்க முடியாது. வீட்டுல புள்ளைய வச்சு கிட்டு, கறவை மாடு கட்டாயம் வேணும்” என்ற பிடிவாதம் மனைவியிடம் தான்.
ஆத்தாவுக்கும் ஆசை தான், மகனின் வேலை பளுவை பார்த்து சில நேரம் ஆதாங்கமாக வாய் விடுவார். தோளில் கிடக்கும் துண்டால் முகம் துடைத்த வேலு, பின்கட்டில் கிடந்த மாட்டை அவிழ்க்க.
“ எய்யா வேலு! செத்த நேரம் படுத்து எந்திரிலே. முகம் செத்து போய் கிடக்கு” என்று பரிவாக அம்மை அழைக்க.
“இல்லத்தா, அங்க ஒருத்தி வெயில்ல வெந்து கிடக்க. நான் தைபார மனசு வராது. மாட்டை கட்டி வச்சுட்டு வேப்ப மர நிழல்ல கட்டையை சாய்க்கிறேன்” என்ற வேலு கிளம்ப,
“அந்த சீமை சித்ராங்கி தாளத்துக்கு ஏற்ப நியும் ஆடுல” என்று ஆத்தா நொடித்து கொள்ள.
“வேலை இல்லாம் வீட்டிலே இருக்குறதால, நாடகம் பார்த்து கெட்டு போன ஆத்தா” என சின்ன சிரிப்போடு வேலு சொல்ல.
“வேலை இல்லாததால வெட்டி பேச்சு பேசுரனாக்கும். நெசந்தான் மகனே! கூனு விழுந்து பின்னாடி அடிப்படி வேலை பார்க்காம சுகமா உட்கார்ந்திருக்கேன். பம்பரமாக சுத்துறா, உடம்பு என்னத்துக்கு ஆகும். அவ இழுப்புக்கு நீயும் போற மகனே” என்று புலம்பிய படி பெரியாத்தா உள்ளே சென்றார்.
முன்பெல்லாம் வீட்டை கவனிப்பது, தாயில்லா பிள்ளையை பார்ப்பது, முக்கியமாக அடுப்படி வேலை தான் அவரை பாடாய் படுத்தும். உதவிக்கு வேலு ஆள் வைத்தாலும், முன் நின்று சமையல் செய்வது அவரை முடக்கி போட்டது. வலுக்கட்டாயமாக செய்யும் வேலை வலுவிழக்க செய்தது. தற்போது அவருக்கு எந்த கவலையும் இல்லை. சாவி கொத்து பறி போன சோகம் கூட இல்லை. எல்லாம் பூர்ணா வசம், அப்படி கட்டுகோப்பாக வைத்திருந்தாள். நேரத்திற்கு உணவும், ஓய்வும் அவரை மீட்டேடுத்தது.
அந்த தார் சாலையில் முன்ன ஒரு மாடும், பின்ன ஒரு மாடும் என்று நடுவில் வேலு நின்று இழுத்து சென்றான். வாய்க்கு வந்த ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்து கொண்டே முன்னே செல்ல, மறுபக்கம் கொஞ்சம் தள்ளி நின்றது தாமரை. போன் பேசி கொண்டே நடந்து வந்தவளை மெல்ல நிமிர்ந்து அவளை ஆராய்ந்து வேலு.
எப்போதும் இருக்கும் நேர்த்தி, இப்போதும் இருந்தது. நல்ல நீல கலரில் சுடிதார் போட்டு, பட்டு கூந்தலை ஒரு கிளிப்பில் அடக்கி, பெரிய பூ போட்ட தோடு, ஒரு கையில் வாட்ச் மறுகையில் அழகான ஒரு செயின் என்று முகம் மின்ன நின்றிருந்தாள்.
வேலு அப்படியே குனிந்து தன்னை பார்க்க, கத்தரி லோடு ஏற்றும் போது கட்டிய கைலி, வரும் போது வாங்கி வந்த புண்ணாக்கு வாசனை உடம்பில் அடித்தது. காலையில் இருந்து ஓயாத வேலையில் வெந்து போய் இருந்தான். மனம் தன்னை போல் ஒப்பிட, தற்போது தங்களின் வாழ்க்கையில் சரியான பாதையில் நிற்பதாக தான் தோன்றியது.
புண்ணாக்கு மூடை தூக்கி வந்த பின், மகளை நெருங்கி அமரும் போது, மகளின் முகத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. மகளிடம் சகஜபாவம் மட்டும் தான் இருந்தது. அதே போல் தான் பூர்ணாவிடமும். அவர்களுக்கு இது எல்லாம் பழகிய ஒன்று.
தாமரைக்கு எதிலும் நேர்த்தி இருக்கணும். எந்த விஷயத்திலும் பதட்டம், அழுகை, கண்ணீர் எதுவும் இருக்காது. விரல் நுனி கூட சுத்தம் சொல்லும், ரொம்ப நாசுக் பார்ப்பாள். அவளின் குணமே அது தான், அதனால் தான் ஒட்டாமல் போய் விட்டது போல. விவசாய குடும்பத்தில் உள்ள இவனுக்கு, தாமரையோடு ரொம்ப நாள் தோது போட முடியாமல் போனதும் ஒரு காரணம். காலத்துக்கும் நடிக்க முடியாது இல்லையா!. பத்து வருடத்தில் தாமரை வயதே தெரியவில்லை, அவனுக்கு அப்பட்டமாக தெரிந்தது.
ஒரு பெருமூச்சு வெளிவர வேகமாக முன்னேறினான். கடவுள் எப்போதும் சரியானதை தான் செய்வார் என்ற நம்பிக்கையோடு. அவனுக்கு இன்னமும் ஆச்சர்யமும், அதிசயமுமான விசயம் என்னவென்றால், அது தாமரை இப்பவும் பார்க்கும் நாசுக் மற்றும் நேர்த்தி தான்.
தாமரையின் கணவன் அருணுக்கு கிட்டத்தட்ட நாப்பது லட்சத்துக்கு மேல் கடன் உள்ளது அவனுக்கு தெரியும். இது என்ன புறணி என்று அவன் நினைத்தாலும் அவ்வாறு எண்ணாமல் இருக்க முடியவில்லை. நேத்து கூட அருண் ஊருக்கு வந்திருந்தான், தாமரையை அழைத்து செல்ல, வேலு தோப்புக்கு போகும் போது பார்த்தான் தான். அதே கார், உடை, அதே நேர்த்தி. இருவரும் வெகு சாதரணமாக பேசி கொண்டிருந்தனர். சண்டை வாக்குவாதம் என்று எதுவுமில்லை . அது தான் வேலுக்கு ஆச்சர்யம்.
அவன் நினைப்பான், நம்மாவூராக இருந்தால் நடப்பதே வேற என்று. கறி காசு, மொய் காசு என்று ஒரு ஆயிரம் ரூபாய் வராவிட்டால் கூட ரோட்டில் வைத்து சண்டை கட்டுவர். ஒரு நாள் சம்பளம் குடுக்கவில்லை என்றால் கூட மந்தையில் வைத்து விடுவார் மனைவி.
வேலுவின் நினைவு தன்னை போல் பூர்ணாவிடம் சென்றது. ஒரு தப்பு செய்து விட்டு, அவளிடம் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு நாள் குடிச்சதுக்கு விளக்கமாரு பிய்ய அடித்தாள் . இப்படிலாம் கடன் என்றால் தோலை உரித்து தொங்க விட்டு விடுவாள். நாப்பது லட்சம் கடம், தனக்கெல்லாம் ஒரு வாய் கஞ்சி உள்ளே இறங்காது. இவர்களின் சகாஜபாவம் கண்டு, படிப்பறிவு, நாகரிகம், மேல் தட்டு வாழ்க்கை என்றால் இது தான் போலும்.
சர்வ ஜாக்கிரதையாக , தாமரை புறம் பார்வை கூட திருப்பாமல் நடந்தான் வேலு. ஆனால், தாமரையின் பார்வை வேலு மீது மட்டுமே நிலை கொண்டிருந்தது. நொடியும் விலகாமல் அவனையே பார்த்து நிக்க, அவஸ்தையாக உணர்ந்தான் வேலு. இந்த பத்து வருடத்தில் எத்தனையோ முறை ஊருக்கு வந்திருக்கிறாள். ஆனால், ஒரு நாளும் அவள் பார்வை வட்டம் வேலுவை தொட்டத்து இல்லை. இன்று மட்டும் ஏன்? தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? அவளின் பார்வையில் பழைய சுபாவம் எதுவுமில்லை, தவிப்பும், வேண்டுதலும் மட்டுமே நிற்க. அடுத்து நகர வேலுக்கு கால் ரெண்டும் ஒத்துழைக்க வில்லை. என்னவென்று ஒரு வார்த்தை கேட்போம் என்று மனதில் நினைத்து திரும்ப,
தாமரையும் புரிதலோடு வேலுவைநோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தாள். அப்போது தான் வேலை முடித்து கரையேறி மக்கள் வர, நொடியில் உணர்ந்த இருவரும் பதறி போய், தங்கள் பாதையில் சென்றனர்.
வேலுக்கு மூச்சே நின்று போச்சு. கொஞ்சம் சுதாரிப்பு இல்லையென்றால் ஊரே பேசு பொருள் ஆகிருக்கும். தங்களுக்கென வேறு துணையோடு ஒதுங்கி கொண்ட இருவரும் பேச என்ன இருக்கிறது. ஏனோ வேலுவால் மாமன் மகள் தாமரையை தவிர்க்க முடியவில்லை. உடன் வளர்ந்த பாசமா! அல்லது ஒரு காலத்தில் தன் துணை இவள் என்ற பரிவா எதுவென்று சொல்ல தெரியவில்லை. ஆனால், அவளை கடக்க முடியவில்லை.
சிறு வயது முதலே, அவளை அவ்வளவு ரசிப்பான் வேலு. கையாட்டி பேசுவது, சாப்பிடுவது, உடை அணிவது என்று எல்லாம் அவனை ஈர்க்கும். ஏதோ சினிமாவில் வரும் ஹீரோ கண்ட ரசிகன் நிலை தான் வேலுக்கு. தற்போது தெரிகிறது தூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி என்று, இருந்தும் அவளிடம் கொண்ட பரிவு மட்டும் மாற மாட்டதே என்று மனதோடு புலம்பிய படி காடு வந்து சேர்ந்தான் வேலு.
மற்ற ஆட்கள் சென்ற பின், பூர்ணா மட்டும் தலையில் துண்டை போட்டு, இருக்கும் களைகளை வெட்டி எடுத்து கொண்டிருந்தாள்.
“ பருத்தி செடி பக்கமா கட்டாம மேக்காலே கொண்டு போய் மாட்ட கட்டு வேலு” என கணவனை கண்டு பூர்ணா சொல்ல,
அவள் சொல்லிய படி செய்து விட்டு, பக்கத்தில் இருந்த மோட்டார் அறைக்கு சென்று ஒரு குளியலை போட்ட பின்பு தான் வெளியே வந்தான். அதற்குள் பூர்ணா இருவருக்கும் மதிய உணவு எடுத்து வைக்க. அமைதியாக வந்து உண்டவனின் சோப்பு வாசத்தை உணர்ந்தவள்.
“மத்தியான வெயில்ல தண்ணி ஊத்திருக்க, வெளிய எங்கையயும் வேலை இருக்க வேலு?” என்ற மனைவியின் கேள்விக்கு இல்லை என்ற தலையாட்டல் தான் பதிலாக வந்தது.
“இப்ப குளிச்சாலும் திரும்ப சேறுல தான் கால வைக்கணும் வேலு. பருத்தி காட்டுக்கு தண்ணி பாய்ச்சணும், மாடு மேய்க்கணும், சோள தட்டை அறுக்கணும். வேலை கிடக்கே எதுக்கு இப்பவே தண்ணி ஊத்துன” என்று கேட்ட மனைவிக்கு, அமைதி மட்டுமே பதிலாக கிடைக்க.
ஒன்றும் புரியாமல் குழம்பிய பூர்ணா, வீட்டை நோக்கி நடையை காட்டினாள்.
அக்கா வீட்டில் இருந்து வந்ததில் இருந்து, இந்த ஒதுக்கம் தான் பூர்ணாவிடம். முன்பெல்லாம், மதிய பொழுது இருவருக்கும் இனிமையா இருக்கும், லீவு நாளில் கூட பவித்ராவை உடன் வைத்து கொள்வாள். தனியாகவெல்லாம் பொழுது களியாது.
வீடு வந்த பூர்ணா, மகளுக்கு பிடித்த உணவு வகைகளை மகளோடு சேர்ந்து செய்து கொண்டிருக்க, பெரியாத்தா தெரு போகும் திண்ணையில் அமர்ந்து அரட்டை. அவர் தோழி காமாயி மகனுக்கு பெண் அமையவில்லை, அது குறித்த பேச்சு போய் கொண்டிருந்தது.
இருவரும் ஏதோ பேசி கொண்டிருக்க, அங்கு வந்தார் நல்ல சிவம். வேலுவின் எதிர் வீட்டில் இருக்கும் தம் பங்காளி ஒருவரை பார்க்க வந்தவர். தம் மூத்த அக்காவை பார்த்து மருகி நின்றார்.
பெரியாத்தாவிக்கு, அவரை மாதிரி மருகல், உருகல் எதுவுமில்லை. தம்பியை பார்த்து கொண்டே,
“ இங்காரு காமயி! அன்னியத்துல பொண்ணு அமஞ்ச நல்லதுன்னு நினை. சொந்தக்கார கழுத்தைக தான் வெசமம் புடிச்சதுக. புது சொந்தம், புது உறவுன்னு நல்லா தான் இருக்கும். எங்கள பாரு மகள், மகன் ரெண்டிக்கும் வெளி சம்மந்தம் தான். என்ன குறைஞ்ச போச்சு! எம் மருமகள் தங்க சேலை கணக்கா, ஒத்த ருபாய்ய பத்து ரூபாய்யா மாத்திபுடுவா, கைகாரி” என்று மருமகள் புகழ் சிவம் காதில் விழும்படி பேச,
மறுத்து ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றார் சிவம். பொழுதும் மசங்க, நால பக்கமும் இருட்டு கட்டி கொண்டு வந்தது. வானம் பார்த்து உள்ளே செல்ல மெதுவாக எழுந்தவர், வீடு இருக்கும் சந்தில் யாரோ ஒரு அரவம் தென்பட, “ யாருலே அது” என்று பெரிய அரட்டல் போட்டார் பெரியத்தா.
அமைதியாக அந்த உருவம் உள்ளே செல்ல, ரெண்டு எட்டில் மடக்கி பிடித்து, முகம் பார்க்க தாமரை.
அவளை பிடித்த கையை உதறி, தூசி தட்டுவது போல இரு கைகளையும் தட்டியவர்.
“மெட்ராஸ்காரிக்கு எம்வீட்டு சந்துல என்ன வேலை?” என்று நக்கலாக கேட்க.
“அத்தை” என்று மருகி போய் தாமரை அழைக்க,
“அடி செருப்பால” யாருக்கு யாருடி அத்தை. உம் புருசன பெத்த பார் ஒருத்தி, அவள சொல்லு அத்தைன்னு. ரோட்டுல போற யாரோ ஒருத்தி என்னைய அத்தைன்னு முறை வைக்கிறவ! ஒரு தராதரம் வேணாம்” தான் கொடியின் அக்கா என்று நிரூபித்தார் பெரியாத்தா.
வீடு செல்ல வெளியே வந்த சிவம், தமைக்கை ஏதோ பேசுவதும், மகள் அழுவதும் கண்டு பதறி போய் அருகே வந்தார்.
“தலை நாள்ல ஆம்பிளை பிள்ளை பெத்து, சீரும் சிறப்புமாக வாழ்றன்னு உங்காத்தா பெருமை பேசி திருஞ்சாளே! இப்ப வின்ன குடியை தாங்கி நிற்கிறையே என்ன விசயம். உம் பவுசு அம்புட்டு தான்னு, கட்டுனவன் அத்து விட்டுடானா!” என்று எகத்தாளமாக பெரியாத்தா கேட்க.
“அக்கா” என்று பதறி போய் அழைத்தார் சிவம். ஒரு பொம்பள பிள்ளை கிட்ட பேசுற சேச்சா இது!
“அக்கான்னு இன்னொரு தடவை கூப்ட சந்திசிரிச்சு போகும் பார்த்துக்க. பெத்தவ மாதிரி உன்னைய வளத்ததுக்கு நெஞ்சுல நெருப்பு வச்சவன் நியி, காலத்துக்கும் மறக்குமா நீயி செஞ்சது. இன்னைக்கு தான் துரைக்கு அம்படுத்தா அக்கான்னு! உம் பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுனியே, அன்னைக்கு உனக்கு நினைப்பில்லாமா போச்சுல. எங்க நெஞ்சில் ஏறி மிதுச்சதுக்கு தான் கடவுள் கை நிறைய கூலி கொடுத்துருக்கான்” என்று ஆவேசமாக பேசியர்.
பார்வையில் நையாண்டி கலந்து, “ எம் மருமகன் காடு வாங்கிருக்கான், வீடு வாங்கிருக்கான்னு காடுகரையெல்லாம் புருசனும், பொண்டாட்டியும் தமுக்கு வச்சு சொல்லி திரிஞ்சீங்களே! ஊர் முழுக்க கடன் வாங்கி வச்சுருக்கான்னு சொல்லல. எம் மகன் சரி இல்லன்னு அத்து விட்டு வேற பார்த்தியே! இன்னைக்கு இவனும்சரி இல்லை தான். என்ன செய்ய போற சிவம். அடுத்து மூணாவத ஒன்னை பார்ப்பியா ” என்று பேச
கூனி குறுகி போனாள் தாமரை. ஒரு வார்த்தை பேச வில்லை. கண்களில் இருந்து நீர் அருவியாக கொட்டியது.
“அக்கா! என்ன பேசுற. நீயி தூக்கி வளத்த புள்ளை, இப்படி பேச எப்படி மனசு வந்துச்சு உனக்கு?” என்று ஆற்றாமையாக சிவம் கேட்க.
“நியி தூக்கி வளத்த புள்ளை தான் வேலு. மூத்த ஆண் வாரிசுன்னு நெஞ்சிலே போட்டு தூங்க வைப்ப. கையை உருவி வளத்த நியே, அவன் கையை வெளங்காம பண்ணி புட்டையே. உம் உடன் பிறப்பு வேற எப்படி இருப்பேன்” என்று ஆதங்கமாக கேட்க.
பதில் பேச முடியவில்லை சிவத்தால். அன்று சரியாக தோன்றிய ஒன்னு, இன்று முழுக்க முழுக்க தவறாக தோன்றியது. பெரியாத்தா சொல்வது போல், மருமகன் அருணை என்ன செய்ய முடிந்தது தங்களால். எப்படியேனும் மகளுடன் சேர்த்து வைக்க தானே பார்க்கிறோம். இந்த அறிவு அன்று இல்லையே. தன் பக்கமும் கூட்டம் இருக்கிறது என்று காட்ட, அடங்காமல் ஆடி. இன்று மொத்தமாக ஒடுங்கி போனோமே!
“ஏத்தா கொஞ்சும் கிளி! சொல்லு பொறுக்காத மகராசி. ஒத்த அடிக்கு சாக போனவ! இன்னைக்கு இம்புட்டு நடந்து போச்சே என்ன செய்ய போறவா! கிணற இல்லை கயிற” என்று இரக்கமில்லாமல் கேட்க.
“அக்கா! வேணாக்கா! எந்திமிருக்கு நான் ஆடி அடங்கி போனேன். நீயும் வார்த்தையை விடாத. ரொம்ப நொந்து போய் கிடக்கேன். பாவமும், சாபமும் நம்மளோட. அடுத்த தலை முறையாச்சும் நல்ல இருக்கட்டும்” என்று கண்களில் நீரோடு சிவம் பேச
விரக்தியாக சிரித்த பெரியாத்தா, “ ஏலே சிவம்! நாம எதிரியா நின்னு பேச்சு வார்த்தையே இல்லாம போனாலும், உம் கூட பொறந்தவ உசுரோட தான் நிக்ககேன். என்னைய நீயி பாக்குற, உன்னைய நான் காங்கிறேன். ஆனா, அறுவது வருசம் ஒட்டி பொறந்த ஒத்த உசுரு, தூக்கி தீக்கு கொடுத்தேன். என் நெஞ்சு தான் தீயா நிக்குது. உம் கூட பொறந்தவ ரெண்டு பேரு விட்ட கண்ணீரை தான், உம் தலை மேல அள்ளி வச்சிருக்க” சிறிய இடைவெளி விட்டு “அனுபவி” என்று தொண்டையடைக்க பேசியவர் நில்லாமல் உள்ளே சென்று விட்டார்.
“ ஏத்தா பவி! மதிய புளி குழம்புல சேர்த்த தேங்காய் பொருமலா இருக்கு. நான் செத்த கண்ணசருறேன். உங்கம்மை கிட்ட சொல்லிரு ராத்திரிக்கு கஞ்சி தண்ணி மட்டும் போதுமின்னு” பேத்தியிடம் சொல்லி உள்ளே சென்றவர். அரசி நினைவோடு மடிந்து படுத்தார்.
மகளை கை தாங்களாக அழைத்து சென்ற சிவத்திற்கும், தாமரைக்கும் அந்த நாள் நினைவிலாடியது.
பெரியாத்தாவுக்கு அவ்வளவு நம்பிக்கை தம் உடன்பிறந்தவன் மீது. தான் தூக்கி வளத்த தம்பி, ஒரு பிறப்பு, தன் கைக்குள் நின்ற தாமரை. ஏதோ கெட்ட நேரம் கண்திருஷ்டி போல. கொஞ்ச நாள் போனால் எல்லாம் சரியாகும். ஊர் அத்து விட்டாள் என்ன, கோவிலில் வைத்து மறுகல்யானம் முடித்து கொள்ளலாம், ஒரு பெண் பிள்ளையும் இருக்கே. என்னைக்கு இருந்தாலும் சேர்ந்து விடுவார்கள் என்ற எண்ணம் அவருக்கு தின்னாமாக இருந்தது.
ஆனால், சிவம் மகள் என்று வரும் போது யாரையும் பார்க்க வில்லை. அந்த ஊரோடு ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் முடித்து கொண்டனர். இதனால் தான் தாமரை திருமண காரியம் யாருக்கும் தெரியாமல் போனது. என்றாவது சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிய உறவுகளின் நம்பிக்கையை எல்லாம் பொய்யாக்கி, அருண் – தாமரை திருமணம் முடித்து, தம் குடும்பம் மொத்தத்தையும் கூட்டி கொண்டு வின்னகுடி வந்தார் சிவம்.
பூமணி பிடிவாதம் தான், வரவே மாட்டேன் என்று அடமாக நின்ற தாமரையை இழுத்து வந்தது.எந்த ஊரில் அவமான பட்டு, அசிங்க பட்டு வெளியேறி வந்தோமோ! அதே ஊர் முன் தலை நிமிர்ந்து நிக்கும் நோக்கோடு தான் வந்தனர் சிவம், பூமணி தம்பதிகள்.
பார்! பார் எம் மகளின் வளமான வாழ்வை. அழகான, படித்த, அந்தஸ்து மிக்க பொருத்தமான மணமகனை என்று ஊர் முன் காட்டவே, ஊர் விருந்து ஏற்பாடு செய்ய. கொதித்து போனார் அரசி. அவ்வளவு ஆத்திரம், ஆவேசம். நிலைகுத்தி போய் நம்ப முடியாமல் நின்றிருந்தார் பெரியாத்தா. அவரால் தம் தம்பி செய்த செயலை ஏற்கவே முடியவில்லை. கிராமத்து மனுசி சாஸ்திரம் மீறிய புதுமையை மனதால் ஏற்க அங்கீகரிக்க முடியவில்லை.
கொடியும் கொஞ்ச, நஞ்ச பேச்சு பேசவில்லை. நாக்கை பிடிங்கி சாகும் கேள்வி தான் கேட்டார். திரும்பவும் அதே கைகலப்பு , சண்டை என்று வரவும் சிவம் தான் பயந்து விட்டார். திரும்ப ஒரு பஞ்சாயத்து கூட்ட பட, வெட்டி விட்ட பின் ஒருவர் வாழ்வில் மற்றொருவர் தலையிட கூடாது தான். ஆனால், பெற்ற பிள்ளை மீது உரிமை கோரலாம் தானே! வேலு கேட்டதும் அது தான். தன் மகள் தனக்கு வேண்டும் என்று.
பெரியாத்தாவும் மகனை ஆதரித்தார். என்றேனும் சேர்ந்து விடுவார்கள் என்று தானே பேத்தியை விட்டு வைத்தது. தற்போது இல்லை என்றான பின் தம் வாரிசு, தம் வீட்டோடு.
அரசியும் தெளிவாக சொல்லி விட்டார். தன் மகன் உயிரோடு இருக்கையில் எவனோ ஒருவன் தன் பேத்திக்கு அப்பனாவதா! பிள்ளை வேண்டும் என்று மல்லுக்கு நின்றார். அத்தோடு, திருமணத்தின் போது போட்ட நகை, அவள் பெயரில் வேலு வாங்கிய இடம் வரைக்கும் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டார் அரசி.
தாமரை தான் அழுது பிள்ளையை தர மறுத்தது. மற்றபடி சிவம், பூமணி, அருண் என்று அனைவருக்கும் பவித்ராவை பெற்றவனிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர். அருணுக்கு குழந்தையோடு கொஞ்சமும் ஓட்ட வில்லை. திருமணத்திற்கு முன்பே சொல்லி விட்டான், குழந்தை பொறுப்பு தங்களை சாராது என்று. அதனால் தான், பூமணி எப்படியேனும் பவித்ராவை , அதன் தகப்பனிடன் ஒப்படைக்க நினைத்தார்.
வேலு தனித்து நிற்க. தாமரை தனக்கென ஒரு வாழ்வை அமைத்து கொண்டாள். அருணும் ஏற்று கொள்ளாத போது, பிள்ளை தகப்பனிடம் வந்தது. இனி, தாமரயோ அல்லது அவள் வீட்டாரோ பிள்ளையிடம் என்றும் உரிமை கோர கூடாது என்று பால், தண்ணியில் சத்தியம் வாங்கப்பட்டது.
உயிரே போய் விட்டது தாமரைக்கு. முதலில் கணவனோடு, அடுத்து பெற்ற பிள்ளையிடம் உறவை முறித்துக் கொண்டாள். தாம் பெற்ற மகள் மீதே உரிமை அற்று போனாள். தாமரை அழுது உருண்டாளும் சத்தியம் வாங்கியே விட பட்டது.
கொடி முழுதாக முடங்கி விட்டார். முடி வெட்டாமல், தாடி வளத்து, அழுக்கு படிந்த சட்டையோடு, கையில் ஒரு பிள்ளையோடு தம் மகன் நிக்க, புது மணப்பெண்ணாக பட்டும், நகையும் மின்ன, கணவன் கை பிடித்து நின்ற தாமரையை கண்டவருக்கு மனது தாங்க வில்லை. சதா அழுது அழுது ஓய்ந்தவர், அடுத்த மூன்று மாதத்தில் கை, கால் இழுத்து கொள்ள படுத்த படுக்கையானார். அன்னம், தண்ணி என்று ஒன்றும் இறங்காமல் மகனின் நினைவிலே உயிரும் நீத்தார்.
உடன் பிறந்தவள் இறப்பு, பெரியாத்தாவை சாய்த்து விட்டது. மருகி கரைந்தவர், மகன் ஒரு பெண் பிள்ளையை வைத்த கொண்டு வளக்க தெரியாமல் திண்டாடுவதை கண்டு. தானும் சென்று விட்டால் மகன் அனாதையாகி விடுவான் என்று பயத்தில் தான், வைராக்கியமாக தன்னை மீட்டு கொண்டார். ஆனால், மனதில் மட்டும் உடன் பிறந்தவன் மேல் கோபம் இருந்து கொண்டே இருந்தது.
பழைய நினைவு பெரியாத்தாவை துவள செய்தது. தாம் பேசியதை பற்றி வெளியே யாரிடமும் காட்டி கொள்ள வில்லை. அவருக்கு தெரியும் வேலுக்கு இதெல்லாம் பிடிக்காது என்று, அதனால் தான் அப்படியே மறைத்து விட்டார்.
மேலும், ஒரு வாரம் கடந்தது. நிலமை சீராகதான் சென்றது.ஆனால், தாமரை தான் வழியில் எங்கும் வேலு கண்களுக்கு தட்டு பட்டு கொண்டே இருந்தாள். அவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை, தன்னை சுற்றியே கண்களில் மான்றாடலோடு ஏன் வருகிறாள். அவரவர் வாழ்வில் வேறு துணையோடு, வேறு பாதையில் சென்ற பின் தங்களுக்குள் என்ன இருக்கிறது? என்று யோசிக்கும் போதே மனதில் இடி விழுந்தது.
“பவித்ரா” , மகள் இருக்கிறாளே, இருவருக்கும் இடையில். அதை எப்படி மறந்தோம், அவள் மருக்குவதும், கண்களில் நீரோடு பார்வையாலே வேண்டுவதும் பிள்ளைக்காகவா. வெட்டி விட்டு பத்து வருடம் கடந்த பின், இது என்ன? எப்படி கையாள?. இதனால், இருவரின் குடும்பமும் அல்லவா பாதிக்கப்படும் ! என்ன புத்தியில் செய்கிறாள் இந்த தாமரை.
அன்று மழை மேகம் உடையும் எண்ணத்தோடு திரண்டு நிக்க, தெக்கு தோட்டத்தில் கணக்கு முடித்தவன், மழை தூறலாக பொழியும் முன் வீடு நோக்கி நடையை எட்டி போட்டான். கம்மா கரை தாண்டி, தன் பூந்தோட்டதில் கால் வைக்க, வேலுவை நோக்கி நேராக வந்தாள் தாமரை.
எத்தனையோ ரசனையான பொழுதுகளை இருவரும் கண்ட இடம் இந்த பூந்தோட்டம். அந்த நினைவின் சுவடு துளி இல்லாமல், இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கினர்.
பொங்கும் கண்ணீரை அடக்கி, துடிக்கும் உதட்டை மடக்கி, ஓடி சென்று வேலுவின் கால்களில் விழுந்தாள், “மாமா” என்ற கதறலோடு. வேலுக்கு சர்வமும் நடுங்கி விட்டது. மனதில் இடி முழக்கம். நீண்ட நெடிய பத்து ஆண்டுகள் கழித்து வரும் வார்த்தை “ மாமா” என்று, இதற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று கூட தெரியாமல் நின்றான் வேலு.
தாமரையின் கதறல் நொடிக்கு நொடி அதிகமாக, சுற்றம் உணர்ந்து சுதாரித்த வேலு. குனிந்து தாமரையை பார்த்தான், தன் கால்களை இறுக கட்டி கொண்டு கண்ணீர் விடும் பெண்ணவளை கண்டு மனதில் துயரம் முண்டியது. அவளை தொட்டு தூக்கி அழுகையை நிப்பாட்ட வேண்டுமா! எந்த உரிமையில் என்று மருகி நின்றான் வேலு.
எந்த உரிமையில் தாமரை தாமரை “மாமா” என்று அழைத்தது. சொந்த ஆயித்த மகன் என்ற உறவு கொடுத்த உரிமை தானே. அதுவே வேலுவையும் எழுப்பியது. வெகு சில வருடம் தானே மனைவியாக நின்றவள், தான் தூக்கி வளத்த சொந்த தாய் மாமன் மகள் தானே. சிறு வயது தொட்டே உடன் வளர்ந்து, துணை நின்ற உறவு கொடுத்த அழுத்தம், குனிந்து தாமரையை தூக்கி நிறுத்தினான்.
இருவர் உடலிலும் நடுக்கம் தான். “தாமரை”என்று அவன் அழைக்க,
“ மாமா” என்று கேவினாள் பெண். “நான்”, “எனக்கு” அடுத்த வார்த்தை வர தடுமாறியது. எவ்வாறு கேட்க? அந்த உரிமை தனக்கு இருக்கிறதா! “மாமா” என்று விக்கி கொண்டே “எம் புள்ளை” என்றாள் ஒரே வார்த்தையில். எதிர்பார்த்தான் தான், உண்மையில் வலித்தது.
என்னை பார்த்து ஒதுங்கி போகுது! நான் யாரோவா! கிட்ட நெருங்க முடியல, நிமிந்து ஒத்தை பார்வை கிடையாது. நெஞ்சு வலிக்குது மாமா. நான் என்ன செய்ய, என்னால தாங்க முடியல. இத்தனை வருஷமா, மனசை அறிச்சு கிடந்த நினைப்பு, ஒன்னும் முடியல.
என்னைய யாரோ மாதிரி பார்த்த ஒதுங்கி போற எம் பிள்ளையை பார்க்க முடியல என்று கண்ணீர் விட்டு அழுதவள். வேலுவின் முன் தன் இரு கைகளையும் கூப்பி, “ மாமா , எம் பிள்ளை மேல நான் உரிமை கேட்கல, உறவு கேட்கிறேன். அவ அம்மா நான், அந்த உறவு வேணும். எம் பிள்ளையோட உறவு வேணும்” கண்களில் நீர் நிற்காமல் வெளியேற கேட்டாள் தாமரை.
அழுது அழுது கண் வீங்கி, முகம் சிவந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள் தாமரை. பெற்றவள் பிள்ளையை கேட்க, இவன் என்ன செய்வான். உரிமையாக அல்லாமல் உறவாக, அதட்டி கேட்காமல் மருகி கேட்கிறாள். அவளை மறுக்க இவன் யார்? பெற்றவளிடம் பிள்ளையை காட்ட மறுக்க முடியுமா என்ன? மடி சுமந்து, வலி தாங்கி பெற்றவள், மறுக்க முடியாமல் “சரி” என்ற ஓற்றை வார்த்தையில் சொல்லி, விலகி நடந்தான்.
“பாசம் வைப்பவன் என்றும் ஏமாளி தான் போல” ஐயோ! என் சம்மு! நியும் ஏமாளி! நானும் ஏமாளி! உன்கிட்ட என்னத்த சொல்ல, நீ தாங்குவியா தங்கமே! உம் மகள் உனகில்லை என்று! பூர்ணாவின் ஆதாரமே பவித்ரா தானே. இனி நீ வெறும் வளர்ப்பு ஆயா மட்டும் தான், “அம்மா” என்ற சொல் தாமரைக்கு உரியது. தன்னாலே தாங்க முடியலையே, பூர்ணாவால் எவ்வாறு தாங்க இயலும்.
தனக்கு தோள் குடுத்து, தன் சுமையை உன் முதுகில் வைத்து சுமந்த உனக்கு, துரோகி ஆகி போனேன் சம்மு. எப்போதும் போல இன்றும் உன்னை கை விட்டேன். நான் பாவி!
ஆக, கடைசியில் பெற்றவள் தான் ஜெயித்து விட்டாள். என்ன தான் உருவி, மருகி வளத்தாலும், பெற்ற தாய்க்கு இருக்கும் உரிமை பூர்ணாக்கு இல்லாமல் போனது. தாலி கொடி உறவு, தொப்புள் கொடி உறவாக மாறுவது எவ்வாறு! அவள் உரிமை வேலு மீது மட்டும் தான் பவித்ரா மீது இல்லையென்று,வேலுவே காட்டி விட்டான். எங்கனம் தாங்குவாள் சம்பூர்ணா.