மதியம் மணி ஒன்னு, குளிர்ந்து அமைதியாக காட்சி அளித்தது அந்த மாயானம். நேற்று தான் யாரோ இறந்திருப்பார்கள் போல, வழி நெடுக மாலை கிடந்தது. அதில் கால் மிதி படும் உணர்வு சிறிதும் இன்றி, விசுவிசு வென்று வேக எட்டு வைத்து நடந்து சென்றாள் பூர்ணா. சுற்றி இருந்த சூழல் கொஞ்சமும் பயத்தை ஏற்படுத்த வில்லை அவளுக்கு. அந்த சுடுகாட்டை கடந்து, பொட்டல் காட்டில் தனியே நடந்து, கொஞ்சம் தள்ளி மலையோரம் வந்தாள். முகத்தில் அழுத்தமும், கடினமும் கூடி கிடந்தது, நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவள் வர வேண்டிய இடம் வந்தது, மலையோரம் மிக சிறு தோட்டம். அவர்களுக்கு உரியது தான், புழங்காமல் மக்கி போனது.
தங்கள் இடத்தின் எல்லையில் கால் வைக்கும் போதே மனம் அமைதி கொண்டது. பேய் தோட்டம் என்று யாரும் எட்டி பார்க்காமல் ஒதுக்கி போட்டது, ஆடு, மாடு கூட இந்த பக்கம் வாராது. மனுச நடமாட்டம் சுத்தமாக கிடையாது. இங்கு பேய் இருப்பதாக ஊரில் பேச்சு ரொம்ப காலமாக இருக்கு.அந்த பேயை காண தான், இவள் இவ்வளவு தூரம் வந்ததே.
மெதுவாக நடந்து நடுப்பகுதிக்கு வந்தாள். ஒத்த வேப்பமரம், அதை சுற்றி சின்ன பாறை கல், அதை விட்டு நாலடி தூரத்தில் ஒரு மொட்ட கிணறு இருக்கும். மெதுவாக அந்த கிணற்றை எட்டி பார்த்தாள், பழைய துணிகள் மூட்டையாக கட்டி கிடந்தது. அதுவும், மக்கி மண்ணாக கிடந்தது. ரொம்ப பெரிய கிணறு நீர் வரத்து இல்லாமல், புழங்கமல் மண் மூடி சிறு கிணறாக செடி, கொடி மண்டி கிடந்தது.
மனம் வெறுமையில் வெந்து போய் கிடக்க, முகம் மட்டும் அமைதியாக அந்த வேப்ப மரத்தையே பார்த்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் சொல்லும் அந்த பேயை காண தான் காத்துகொண்டிருந்ததாள் மற்றவர்கள் சொல்லும் பேய், வேற யாருமில்லை பூர்ணாவின் அப்பத்தாவும், அத்தையும் தான்.
அந்த வேப்ப மரத்தில் தான், அவள் அப்பத்தா தூக்கு போட்டு செத்தது, மொட்டை கிணறாக இருக்கும் அந்த கிணற்றில் தான், இவள் அத்தை தற்கொலை செய்து கொண்டது. சிறு வயதில் இந்த கதைகளை கேட்டு, பயந்து தான் அந்த பக்கமே போகவே மாட்டாள். வருடத்தில் ஒரு முறை, வள்ளி மட்டும் விளக்கு போட்டு வருவார்.
காதால் கேட்டவைகளை, இன்று கண்ணால் காண்கிறாள். மனதில் துளி பயமில்லை. எல்லாவற்றையும் இழந்த பின் வரும் தைரியம் அவளுக்கும் வந்ததை போல. மணிமாறன் மூலம் சேதி எப்போதோ காதுக்கு வந்து விட்டது. மனம் புயலடிக்க, வெளியில் சாந்தமாக காட்டி கொண்டாள்.
காலையில் தான் வேலு, மகளை மட்டும் கூட்டி சென்றான். அவளிடம் எந்த விளக்கமும் அளிக்க வில்லை. குனிந்த தலை நிமிராமல் , அம்மாவும் உடன் வர வேண்டும் என்று அடம்பிடித்த மகளை சமாதானம் செய்து, நேருக்கு நேர் மனைவி முகம் பார்க்காமல் ஒதுங்கி சென்றான். அவளுக்கு விசயம் முன்னமே தெரியுமே. அவன் செல்லும் வரை அமைதியாக இருந்தவள். தம் குடும்பம் என்று இவர்களை காண வந்து விட்டாள். செத்தவர்கள் பேய் என்று மற்றவர்கள் சொல்லலாம், சொந்தம் சொல்லுமா என்ன?
மெதுவாக சென்று வேப்பமரத்தை தொட்டாள். உடலில் ஒரு சிலிர்ப்பு, தன் அப்பத்தா தூக்கு போட்ட, அந்த மர கொப்பை பார்த்தவாறு பேசினாள், “ என்ன பாக்குறீங்க? யாரு இவன்னா? எல்லாம் உங்க இரத்தம் தான்”…
வேப்ப மரம் காற்றில் லேசாக ஆடியது, “ ஆமா! உம் பேத்தி தான். பல வருசமா ஒத்தையில கெடக்குறீக , துணைக்கு தான். எனக்கு முப்பத்தாறு முடிய போகுது”….
கிணறு அடியில் இருந்து குருவி ஒன்று பறந்து வந்து மரத்தில் அமர்ந்து கொண்டது. “ஆமா! முப்பத்தாறு தான். அதிசியமா இருக்கா. இருக்கும்! இருக்கும்! ஆத்தாவுக்கு முப்பது, அயித்தைக்கு இருபத்தி மூணு, எங்கப்பணுக்கு முப்பத்தி ரெண்டு எல்லாம் பாதிலே நின்னு போனீங்க. நான் மட்டும் தாண்டி நிக்கிறேன்ல. சாவுற நேரம் எனக்கின்னும் வரல. உங்கள மாதிரி நான் சாவ தேடியும் போகா மாட்டேன். வாழ்வேன் நெஞ்சை நிமித்தி வாழ்வேன். அப்படி என்ன தான் இந்த வாழ்க்கை எனக்கு வச்சுருக்கு, எதை பார்த்து பயந்து, உங்களை நீங்களே முடிச்சு கிட்டீங்க! எனக்கு பயமில்லை. முதுகு ஒடியிற வரைக்கும் சோதனை வந்தாலும், நான் ஒரு கை பார்த்துறேன். என்ன வரம் வாங்கி வந்தோம்! நம்ம வம்சமே என்னோடு போச்சு” என்று அடக்கப்பட்ட அழுத்தத் தோடு பேசிக் கொண்டிருந்தவள்.
கொஞ்சம் நேரம் அமைதியாகி, நெஞ்சை தடவி விட்டு கொண்டு. பின், “ ஆத்தா! இரத்த பந்தம் தான் சொந்தமாம், மனசால வளத்த உறவுக்கு மதிப்பிலை. என் சொந்தம்ன்னு நானும் திரும்பி பார்த்தா எல்லாம் சுடுகாட்டுல தான கெடக்குதீங்க, போய் நிக்க கூட எனக்கு ஆள் இல்லாம போச்சு. யாரும் பேய், பூதம்ன்னு சொல்லட்டும். எனக்கு நீங்க யாரு? உங்க வீட்டுல தானே நான் பொறந்தேன். நம்ம பிள்ளை பட்ட பாடு போதும்ன்னு நினைச்சா உங்க கூடவே கூப்பிடுங்க, இல்லையா எனக்கு காத்து நில்லுங்க” என்று கண்களில் நீரோடு ஆதங்காம சொன்னவள். அங்கிருந்த சிறு நீள பாறையில், முந்தி சீலையை விரித்து படுத்து கொண்டாள். வேப்ப மர நிழல், அவள் படுத்திருக்கும் பாறையில் படர்ந்தது.
அங்கு தாமரை பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தாள். மகளை காண போகிறோம் என்ற ஆசையும், படபடப்பும், அவளை இயல்பாக இருக்க விட வில்லை. நீண்ட நாள்களாகவே மனதில் உருத்தி கொண்டு, குற்ற உணர்ச்சியில் அவளை குறுகுறுக்க செய்தது .
வேலுவோடு தம் உறவை முறித்து கொண்ட பின், மன நிலை பாதிக்கப்பட்டவள் போல் இருந்தவளை, அவள் பெரியம்மா மகன் தான். சென்னையில் தன் வீட்டிற்க்கு கூட்டி போய், ஒரு வேலையும் வாங்கி கொடுத்து தன் வீட்டிலேயே வைத்து கொண்டான். பவித்ரா, பூமணி வளர்ப்பில் தேனியில் இருந்தாள்.
அருண் சாப்ட்வேர் என்ஜினீயர், நல்ல வேலை, கை நிறைய சம்பளம், பார்க்கவும் தாமரையின் கனவு நாயகன் போல் தான் இருப்பான். தாமரை இருந்த அதே குடியிருப்பில் தான், அருணும் இருந்தான். திருமணமான பெண் என்பது தெரியாமலே கண்டதும் காதல் கொண்டவனை, தாமரை பற்றி முழுதாக தெரிந்த பின்னும், அவன் காதல் அவனை விட்டு போக வில்லை.
முழுதாக ஒன்றை ஆண்டுகள் காத்திருந்து தாமரையை மன முடித்தான். அவனின் ஒரே கட்டளை பவித்ராவை, எக்காலத்திலும் தன்னால் ஏற்க முடியாது என்பது தான். அது ஒன்று தான் தாமரைக்கும் அவன் மீதான குறை. மற்றபடி அன்பு கணவன் தான். சென்னை மேல் தட்டு வாழ்க்கையும், ஐ ஆம் சிங்கிள் என்று சாதாரண நடை முறையும், அருணின் காதலும் வெகு விரைவில் அவளை உள்ளிழுத்து கொண்டது.
மகளா அல்லது அருணா என்று தாமரை தடுமாறும் போது, “ ஒத்த பிள்ளை பெத்தா, உம் புருசன் உம் கையில. அதுக்கப்புறம் நீயி என்ன சொன்னாலும் கேக்குற மாதிரி மாத்திக்க” என்ற பூமணி அறிவுரையை நம்பி, மீண்டுமொரு திருமண பந்தத்தில் தன்னை இணைத்து கொண்டாள்.
ராகுல் பிறந்த பின்பும், தாமரை என்ன செய்தும், பவித்ராவின் பெயரை கூட அருண் எடுக்க விட வில்லை. “இந்த கல்யாணத்தையாவது தக்க வச்சுக்க. இதையும் கெடுத்து, இன்னொரு பிள்ளையோடு வந்து நிக்காததே” என்று தாய் கறாரக சொன்ன பின்னே நிதர்சனம் புரிந்தது. குறை எல்லோரிடமும் இருக்கும், வாழ்க்கை ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதே, ஏதேனும் ஒரு கஷ்டம் வாழ்வில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும், மனதை எக்காலத்திலும் திருப்தி படுத்த இயலாது போன்ற எதார்த்த தத்துவத்தை பட்டே தெளிந்தாள்.
“உங்களுக்கு எத்தனை குழந்தை?, ராகுல் ஒரு பையன் தான?, இது முதல் குழந்தையா?”என்ற கேள்வி வரும் போது எல்லாம் மனதறிந்து போய் சொல்வாள். பக்கத்து வீட்டு சர்மி, பத்து வயதில் பெரிய பெண்ணாகிய போது, தம் மகளை எண்ணி மனம் துடித்து போவாள். மற்ற பெண் பிள்ளைகளை பார்க்கும் போது எல்லாம், தம் முதல் மகவின் நினைவு கொள்ளும். அதுவும், ராகுலுக்கு ஐந்து வயதான போது, இரண்டாவது எப்போது என்று கேட்கும் நபர்களுக்கு பதில் சொல்ல இயலாது தடுமாறுவாள். அதுவும், அருணின் பெண் பிள்ளை ஆசையை கண்டு, இவள் தான் துடித்து போவாள்.
மகளின் மீது கொள்ள ஆசை இருந்த போதும், தம் நிலை மீறி வர துணிவில்லாமல் இருந்தவளை தூண்டி விட்டது பூர்ணா – பாவித்ரா பாசம். தன்னை யாரோ போல் பார்வை பார்த்து கடந்து செல்லும் மகளின் செயலை ஏற்க முடியவில்லை. பூர்ணா மீதான பவித்ராவின் பாசத்தை அவளுக்கு சிறு பொறாமையை தோற்று வித்தது.. மகளை நினைத்து ஒவ்வொரு இரவும் தான் உருக, மகளின் உதாசீனம் அவளை துவள செய்தது. உன் அம்மா தான் தானென்று நிரூபிக்க துடித்தாள் பெண். மகளை சேரும் வழியாக கண்டது வேலுவை தான். மற்றபடி, பெரியாத்தா, சம்முவை நெருங்க கூட முடியாதே.
மிகுந்த தயக்கத்தோடும், படபடப் போடும், பூந்தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் தாமரை. வேலு இங்கு தான் வர சொன்னான். மகளை எவ்வாறு எதிர் கொள்ள போகிறோம் என்ற பயமும், தொட்டு தடவி பார்க்கும் ஆசையும், எதிர்பார்ப்பும் அதிகம் இருந்தது.
சரியான நேரத்திற்கு வேலு, வண்டியில் தன் மகளுடன் வந்து விட்டான். இது தான் என்று எந்த முகாந்தரமும் இல்லாமல் தான் மகளை அழைத்து வந்தான். தங்களது தோட்டம் தானே என்று இறங்கிய பவித்ரா, அங்கு அமர்ந்திருந்த தாமரையை பார்த்து யோசனையாக தந்தை முகம் பார்த்தாள்.
ஒரு பெருமூச்சு விட்ட வேலு, “ ஆயி! நான் எந்த விளக்கமும் உமக்கு சொல்ல வேணாம். யாரு என்னன்னு உமக்கே புரிஞ்சுருக்கும். உங்கள பார்த்து பேசனுமாம், அப்பன் தண்ணி பாச்சனும். வேலையை முடிச்சுட்டு வாரேன், பேசிட்டு வாங்க. பொறவு, வீட்டுக்கு போவோம்!” என்று வேலு நகர.
தந்தை கை பிடித்த மகள், “ அம்மாக்கு தெரியுமாப்பா? சொல்லிடீங்களா!” என்று கேட்க.
இல்லை என்ற தலையாட்டலே பதிலாக வர, “தப்பு இல்லையாப்பா? என்க.
“ தாமரை உம்” என்று வேலு ஆரம்பிக்க,
அதை தடுத்து, தாமரையை நோக்கி கை நீட்டிய பவித்ரா, “ அவங்கள பாக்க வந்தது தப்புன்னு நான் சொல்லப்பா! அம்மா கிட்ட சொல்லாம வந்தது தான் தப்பு ” என்று பொட்டில் அடித்தது போல் பேசியவள். தாமரையை நோக்கி மெதுவாக நடந்தாள்.
தன்னை நோக்கி வரும் மகளை கண்டு அவ்வளவு பரவசம் தாமரைக்கு. கட்டி கொள்ள ஆசை தான், இந்த வயதில் மகள் விரும்புவாள தெரியாதே! கொஞ்சம் தயக்கம் எட்டி பார்க்க, தன் அருகே அமருமாறு மகளிடம் சைகை செய்தாள்.
பவித்ராவும் சின்ன சிரிப்போடு, கொஞ்சம் இடைவெளி விட்டு அமர. உச்சி முதல் பாதம் வரை மகளை அளவெடுத்தவள். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் முழித்தால். கைகளை கோர்த்து மடக்கி, பிரித்து, ஏதோ யோசித்து. பின் மெதுவாக பவித்ரா புறம் திரும்பி,
“நான் யார்ன்னு தெரியுமா?” தாமரை கேட்க
பலமான தலையாட்டலே பிள்ளையிடமிருந்து வர, வாய் திறந்து பதில் சொல்ல வில்லை என்ற வருத்தம் தாமரைக்கு.
“உன் கோபம் எனக்கு புரியுது. என் சூழ்நிலை அப்படி? உனக்கு புரியும் படி சொல்லணும்” என்று தாமரை பேசிக்கொண்டிருக்கும் போதே!
“ உங்க மேல எனக்கு எதுக்கு கோபம்? உங்க மேல நான் ஏன் கோபப்படனும்?” என்று புரியாமல் பவித்ரா கேட்க.
பதில் சொல்ல முடியவில்லை தாமரையால். என்னவென்று விளக்கம் கொடுக்க, முழு தப்பும் தன் பேரில் தானே.
“ நான் தான் உன் அம்மா, உன்னை சுமந்து நான் தான் பெத்தேன்”
“தெரியும்” ஒரு வரி பதில்.
“அப்புறம் ஒரு தடவை கூட எங்கிட்ட நீ பேசவே இல்லையே. என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி நீ போன” குறைபாட்டு கொண்டாள் தாமரை.
“எப்பவும் அப்படி தானே. நான் எப்பவும் போல தான் இருந்தேன்” மீண்டும் கேள்வி கேட்க முடியா பதில். இதற்கு முன் வந்த ஓரிரு நாளில் மகளை காண முயற்சி செய்ய வில்லையே.
“ ராகுல் உன் தம்பி தெரியுமா! உங்க ஸ்கூல் தான் படிக்கிறான். அவன் கூட பேசுறையா! உன் தம்பி தானே!” என்று பிள்ளைகளை சேர்க்கும் ஆர்வத்தோடு தாமரை பேச,
ஒரு நொடி யோசித்த பவித்ரா, “ ராகுல்? ம்ம், எங்கப்பா பேரு தங்க வேலு, ராகுல் அப்பா பேரு அருண்குமார் தானே. ஒரு தடவை விளையாடும் போது ஐ. டி கார்ட்ல பார்த்தேன்”
தாமரை கப்பென்று வாயை மூடி கொண்டாள். வளர்ந்த மகளின்முன் கொஞ்சம் அசிங்கமாகவும், கொஞ்சம் அழுகையாகவும் வந்தது.
“ பவி, வந்ததிலிருந்து என்னை அம்மான்னு சொல்லல” கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது.
“கூப்பிட வரல” நச்சென்று ஒரு பதில்.
கண்ணை தாண்டி நீர் வழிந்தது, “ ஏன் வரல?” தொண்டை வேறு அடைத்தது.
“தோணல” ஒரு வார்த்தையில் பதில்.
“ஏன்” என்றாள் அழுகையோடு. ரொம்ப பெரிய ஏமாற்றம் தான். மனம் ஏற்க மறுத்தது.
தாமரையின் அழுகை மகளுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தது.
“தெரியல, உண்மையாவே எனக்கு தெரியல”
கட்டுப்படுத்த முடியவில்லை தாமரையால். வளர்ந்த மகள் முன் கேவி அழுவது கஷ்டமாக இருந்தது. ஆனால், தாங்க முடியவில்லையே.
“ நான் தான் தப்பு, எனக்கு இது தேவை தான். நான் தான் சரியில்லை போல. நீ மட்டும் போதும்ன்னு இருக்காம, அவசரப்பட்டு. பெத்த பிள்ளை முன்னாடி குற்றவாளியா இருக்கேன்” என்று அழுகையோடு பேசியவளை பார்த்து, பவித்ராக்கு கவலையாகி போனது.
“ நான் உங்களை போட்டோல. என்னை தூக்கி வச்சு, முத்தம் கொடுத்து எல்லாம் பாத்துருக்கேன். ஆனா, எனக்கு உங்ககிட்ட ஒன்னுமே தோணல. நிஜமா! உங்களை பார்க்கும் போது எதுவும் வரல. எல்லாரும் சொன்னாங்க தான். எனக்கு தான் ஒட்ட முடியல”
கொஞ்சம் இடைவெளி விட்டு, “ நீங்க சுடிதார் போட்டு, வித்தியாசமா இருக்கு. நீங்க எங்கம்மா மாதிரியே இல்லை. அதான், எனக்கு உங்ககிட்ட வரல. எனக்கு சரியா சொல்ல தெரியலை”
கொஞ்சம் மண்டையை சொறிந்து, சடையை பிடித்து இழுத்து, யோசித்து, “ தெரியல. உங்களை பிடிக்காம இல்லை, பிடிக்கவும் இல்லை. உங்களை நான் யோசிக்கவே இல்லை”…. மொத்தமாக முடித்து விட்டாள்.
தாமரை விரக்தியாக சிரித்து கொண்டாள். தனக்கு தாய் இல்லை என்ற ஏக்கம் இருந்தால் தானே, தாயை தேடும் உணர்வு வரும். அவள் அம்மா போல் தான் இல்லையாம், உள்ளே துக்கம் பொங்கி எழுந்தது. அம்மா என்ற அவள் வரையறை யாருக்கு என்று தெரிந்து விட்டது. இனி தான் என்ன செய்தாலும் வீண் தான்.
தனக்கு தெரிந்த வரை, தன் வயதுக்கு புரிந்த வரை தெளிவு படுத்தியவள். அடுத்து என்னவென்று பார்க்க,
தன்னை சமாளித்த தாமரையும், மகளை நோக்கி, “உனக்கு கொஞ்சம் டிரஸ், ஸ்வீட், ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி வந்தேன். பாரு பிடிச்சிருக்கா!” இதையாவது மகள் ஏற்க வேண்டும் என்ற ஆவலில் காட்ட.
“முட்டி வரை பாவாடை போட்டா அம்மாக்கு பிடிக்காது. நெறைய ஸ்வீட் சாப்பிட அம்மா விட மாட்டாங்க. வெளி கடைல ரொம்ப வாங்கி தர மாட்டாங்க. சொந்தக்காரங்க குடுத்தா மட்டும் தான் வாங்கிபாங்க. அம்மா கிட்ட சொல்லாம யார்டையும் எதுவும் வாங்கி சாப்பிட கூடாது. எங்க வீட்டுக்கு வந்து, அம்மாகிட்ட பேசிட்டு, அப்புறம் தாங்க வாங்குறேன்” என்றாள் அம்மாவின் பிள்ளையாக.
முழுதாக ஓய்ந்து போனாள் தாமரை. நெத்தியடி என்பார்களே அதுபோல, மகள் தனக்கான இடத்தை காட்டி விட்டாள். யார் சொல்லிருந்தாலும் ஏற்காது மனம், இனி ஏற்க தான் வேண்டும்.
“ரொம்ப தெளிவாக, தைரியமா பேசுற. குட்” பாராட்டாக தாமரை சொல்ல.
“எங்கம்மா சொல்லிருக்காங்க. நாம தப்பு செய்யாதப்பா, தனியா நின்னாளும் தைரியமா நிக்கணுமன்னு” என்றாள் பெருமையாக, அது தன் தாயை பற்றியது.
வேலு வந்து விட்டான். அழுது முகம் வீங்கி இருக்கும் தாமரையும் , அசௌகரியமாக அமர்ந்திருக்கும் மகளையும் கண்டவன், “ ஆயி! வீட்டுக்கு கொண்டு போக கொஞ்சம் பூவை பறித்தா! உங்கம்மா சாமிக்கு போடுவா” என்க. மகள் தாட்டாமல் எழுந்து சென்றாள்.
“பேசவேண்டிய எல்லாம் பேசிட்டியா தாமரை” என்று வேலு கேட்க.
“சம் பூர்ணா மக கிட்ட நான் பேசுறதுக்கு என்ன இருக்கு மாமா!” என்று சோர்வாக சொன்னாள் தாமரை.
வேலு, அவளை ஆச்சரியமாக பார்க்க. ஒரு பெருமூச்சு விட்டு எழுந்து வந்தவள்.
“ பவிக்கு எம் மேல வெறுப்பு, கோபம்ன்னு எதுவுமே இல்லை. ஏன் தெரியுமா? நான் அவளுக்கு யாருமே இல்லையாம்! அவ என்னை யோசிக்க கூட இல்லையாம் மாமா” என்று அழுதவள்.
“யாரோ மாதிரி என்னை கடந்து போறாளேன்னு கவலை எனக்கு. ஆனா, உண்மையிலேயே நான் அவளுக்கு யாரோ தானாம். அவ வயித்தல இருக்கும் போது எவ்வளவு கனவு, இந்த கையாள தான் தூக்கி வளத்தேன். முதல அம்மான்னு தான் பேசவே ஆரம்பிச்சா! இன்னைக்கு நான், எங்கிட்ட ஒண்ணுமே தோனலையாம். இதுல வேடிக்கை என்னன்னா, அவ அம்மா மாதிரி நான் இல்லையாம்” என்று விரக்தியாக சிரித்தவள்.
“என்னைய அவள் யோசிக்க கூட இல்லையாம். இதுக்கு மேல என்ன பேசனும்ன்னு கூட எனக்கு தெரியல. யாரோ ஒருத்தி அப்படி பாக்குற, நான் எப்படி நெருங்க முடியும். சரியான தண்டனை தான் எனக்கு” என்று தாமரை அழுக.
வேலுக்கும் கவலையாக தான் இருந்தது. ஆனால், நிதர்சனம் என்ற ஒன்று உள்ளதே. அதை இருவருமே ஏற்க தான் வேண்டும்.
“ஒன்றை வயசுல தூக்கி குடுத்த கை குழந்தை இல்ல பவித்ரா. விவரம் தெரிந்த பொண்ணு, தைரியசாலி. அப்படித்தான் சம்மு வளப்பா!”
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கே மாமா! என்னோடு வர சொல்லலயே, என்னையும் எத்துக்கன்னு தான் சொல்றேன். யாரோ மாதிரி இல்லாம?” என்று தாமரை சொல்ல,
அவளுக்கு இன்னும் புரியவில்லை என்று கணித்தவன்.
“பவித்ராவ பார்க்க போறேன்னு உங்க வீட்டுல சொன்னைய தாமரை” என்று வேலு கேட்க.
“இல்லை சொல்லல. வீட்டுல விட மாட்டாங்க” என்று சோர்வாக சொல்ல.
“நீயி பெத்த மகளை பார்க்கிறது கூட யாருக்கும் தெரியாம திருட்டு தானமா தான் பார்க்க வந்திருக்க. இதுல பவித்ரா உன்னைய ஏத்துகலன்னு சடவு சொல்ற” என்று காட்டமாக கேட்டவன்.
“உம் புருசன் கிட்ட தைரியமா எம் மகன்னு சொல்ல முடியுமா!”
இல்லை என்ற தலையாட்டியவள், “ இனியும் பவித்ரா மேல உள்ள பாசத்தை மறைக்க விரும்பல. அவங்க கிட்ட தெளிவா பேசணும்” என்று தாமரை சொல்ல
“வேண்டாம் தாமரை. இதுவரை நாம எப்படி இருந்தோமோ! இனிமேலும் அப்படியே இருப்போம். அது தான் எல்லோருக்கும் நல்லது. தெளிவா இருக்குற எம் மகளை மீண்டும் குழப்பாத” என்ற வேலு.
அப்புறம் ஏன் உன்னை பார்க்க கூட்டிவந்தேன்னு பாக்குறைய. நாளைக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அப்படின்னு யாருக்கும் தோன கூடாது. இனி ஒரு முறை நாம பேசிக்கவே வேண்டாம் தாமரை. ஆனா, இன்னைக்கே எல்லாம் பேசிப்போம்” என்ற அமைதியாக சொன்னவன். மகளை பார்த்தான். பவி பறக்கும் ஒரு பட்டம் பூச்சியை பிடிக்க துரத்தி ஓடி கொண்டிருந்தாள்.
“நாம ரெண்டு பேரும் திரும்பி பார்க்க முடியாத, ஏன் நினைக்க கூட கூடாத தூரம் வாழ்க்கையில கடந்து வந்தாச்சு. உன்னுடைய கடந்த காலம் நான் மட்டும் இல்லை பவித்ராவும் தான். நீ அழுதாலும், புலம்புனாலும் சில விசயத்தை கடக்க தான் வேணும், அதுல பவித்ராவையும் கடந்து விடு தாமரை. நியும் உம் குடும்பத்தோட நல்ல இரு, நானும் எம் குடும்பத்தோட நல்லா இருக்கணும்” என்று சொன்னவன்.
“சம்முக்கும் மகள் தான் அடிப்படை. எங்க உலகமே அதா வச்சு தான். இன்னைக்கு வந்ததும், ஏதோ ஒரு மூலையில அம்மான்னு உம் நினைப்பு இருக்குமான்னு தான். அப்படி எதுவுமில்லை நல்லது தான். எம் பொழப்பு சம்மு கூட தான். நானும் நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்றதால தான், உம்மோடு சாதாரணமா பேசுறேன். கூட வளந்த பாசமோ என்னவோ உம் மேல எனக்கு வெறுப்பு வரல. நம்ம வாழ்க்கை நிறைவாக போக, கடந்ததை மறந்து தான் போகணும். எம்புட்டு பேரு அம்மா இல்லாம தனியா கிடந்தது கஸ்டபடுறாங்க, உம் மகளுக்கு பெத்தவள மறக்குற அளவுக்கு ஒருத்தி அம்மாவ வாச்சு இருக்கான்னு நிம்மதியா போ. உம் மகள விட்ட மாதிரி, மகனையும் விட்டுடாத” என்று சொன்னவன், தூரத்தில் இருந்த மகளை அழைத்து கொண்டு வண்டியில் புறப்பட்டான்.
ரொம்பவும் சோர்ந்து போய், தளர்ந்த நடையோடு வீடு வந்தாள் பூர்ணா. மாமியாரும், மகளும் உறக்கத்தில் இருக்க, வேலு கூடத்தில் உள்ள கயிற்று கட்டிலில் கிடந்தான் உறங்காமல். அடுப்படி சென்று பார்த்தவள் அறிந்து விட்டாள், வேலு மட்டும் உண்ணவில்லை என்று.
துரைக்கு ஒரப்பு, புளிப்பா, சூடா தான் உள்ள இறங்கும் சோறு. காலையில் இருந்த மன உளைச்சலில் வெறும் உப்பு பருப்பும், ரசம், கோஸ் பொரியல் தான். அதனால் தான் துரைக்கு உள்ளே இறங்க வில்லை போல. கெடையென்! உம் உடம்பு! எனக்கு என்ன வந்தது. தனக்கு சோறு போட்டு கொண்டு, சாப்பிட அமர்ந்து விட. வெறுமையாக பார்த்தான் வேலு.
“காரியவாதி, கண்டுக்காத சம்மு, உம் வேலையை பாரு” என்று நினைத்த படி உண்ண ஆரம்பித்தாள் பூர்ணா. அவள் சாப்பிடும் போதே, இரண்டு முறை அடுப்படி சென்று சொம்பு தண்ணி குடித்து வந்தான் வேலு.
“பரதேசி பைய, ஒரு நாளைக்கு ரசம் சோத்த திண்ண தான் என்னவாம். பொண்டாட்டி மனசு வெந்து கிடந்தாலும், புருசனுக்கு வக்கணையா வாய் கேக்குது” என்று மனதில் புலம்பியபடி, அடுப்படியில் என்ன இருக்கு என்று பார்க்க, துண்ட கருவாடு மட்டுமே இருந்தது. சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக், கருவாடு சேர்த்து வதக்கி, சுடு சோறில் பரிமாற, எழுந்து அமர்ந்தவன் வேகவேகமாக உண்டான்.
“இம்புட்டு பசி இருந்த உள்ளதா போட்டு திங்க வேண்டி தானே, நானே தான் வரணுமா. பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா போதும் கையை கூட கழுவ சொல்லுவாங்க. எல்லா ஆம்பளையும் ஒண்ணுதான் போல! நீயும் தான் கண்டுக்காம போக வேண்டிய தானே. உம் மனசும் அடங்குதா! முகம் வாடி நின்ன உடனே ஓடி போய் வேலை செய்யுற. அதான், உன்னைய எள்ளுக்கு கூட மதிக்க மாட்றான் கொடியரசி மகன்” மீண்டும் மனதில் புலம்பிய படியே, பின் கட்டில் முள்ளு வெட்ட தொடங்கினாள்.
திருப்தியாக உண்டு முடித்தவன். மெதுவாக, அவள் அருகே இருந்த கல்லில் அமர்ந்து, “ எட்டி சம்மு! முள்ளு வெட்டுரிய!”என்று வேலு ஆரம்பிக்க.
“இல்லலே கலக்டர் ஆபீஸ்ல கையெழுத்து போடுறேன்” என்று வெடப்பாக பதில் சொல்லி, தன் வேலையை தொடர்ந்தவள், “ மூடு மந்திரம் எதுக்கு வேலு ஒடைச்சு பேசு” என்று நேராகவே விசயதிற்கு வந்தாள்.
வேலுவும் எந்த ஒளிவு மறைவின்றி தாமரை வந்தது முதல் அனைத்தையும் சொல்லி விட்டான்.
நிர்மலமாக அவனை பார்த்தவள், “ இதெல்லாம் எதுக்கு வேலு எங்கிட்ட சொல்லிட்டு இருக்க. நீ முடிவெடுத்து செஞ்சா சரிதான்” என்று சாதரணமாக முடிக்க.
வேலு தான், “ உமக்கு எம் மேல கோபம் தானலே!”
“கோபம் எதுக்கு வேலு. உம் புள்ளை, உம் முடிவு. நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. இந்த வாழ்க்கை எனக்கு கெடச்சதே பெருசு. ம்ம் அப்படித்தான் நினைக்கணும். இந்த கல்யாணம் நடக்கலன எம் அம்மையும் செத்து பருக்கா நிக்கனும். ஒரு குடும்பமா நிக்கிறேன் உம்மால தானே. அதுக்கு நன்றி கடன் தான் நிறைய இருக்கு” என்று பூர்ணா சொல்ல.
இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் குழம்பினான் வேலு. அப்போ கோபம் இல்லையா அல்லது தன்னை தள்ளி வைத்து விட்டாளா?
“ஏட்டி சொம்பு! பவி மேல நீயி உயிரயே வச்சிருக்க. ஒன்னைய கலக்காம நானே ஒன்னை செஞ்சுட்டேனு கோபம் நெசமாவே இல்லையாலே!” என்று ஆதங்கமாக வேலு கேட்க.
“நீயே சொல்லிட்ட வேலு. புள்ளை மேல நான் உசுரையே வச்சேன்னு. நியாயத்துக்கு நான் கோபப்படனும் தான். ஆனா, புள்ளை பெக்க தகுதி இல்லாதவ, கோபப்பட தகுதி இருக்க வேலு. எந்த உரிமையில சண்டை போட, எனக்கான உரிமை நீதான வேலு. ஊர்ல யார்கிட்டையாவது நியாயம் கேட்க முடியுமா! பெத்தவ கேட்டா புள்ளையை குடுக்க தான் வேணும். நம்ம சனமும் இத தான் சொல்லும். ஊர் ஆயிரம் சொல்லட்டும். உனக்கும் இது தான் சரின்னு தொனிருக்க பார்த்தியா. அப்போ யாரு தப்பு, நான் தான் தப்பு. வலிக்கும் தான் ஆனா சாக மாட்டேன்” என்று சொன்னவள். தொடர்ந்து வேலையை பார்க்க.
“ஏட்டி! எம்புட்டு பெரிய வார்த்தையை விட்டு புட்ட! என்னாலே சம்மு! எம் புள்ளையா பார்க்கலானு தாமரையும், பெத்தவ கிட்ட பேசலான்னு பவியும், ஒரு நாளும் எண்ணிற கூடாதுல்ல. புள்ளை பெத்தவ புள்ளையா காங்கணும்னு நிக்கிறப்ப! நான் என்னன்னு மறுக்க நீயே சொல்லு” என்றவன். கொஞ்சம் தயங்கி,
“பார்த்து பேசின பின்னாடி எல்லாமே ஒரு நிதானத்துக்கு வந்திருச்சு. அவரவர் எல்லை என்னன்னு எங்களுக்கு நாங்களே புரிய வச்சாச்சு. இன்னைக்கு இல்லன்ன, என்னைக்காவது இந்த பேச்சு தொடரத்தான் செய்யும். அதான் சுட்டோட சூடா முடிச்சுட்டேன். இனி நம்ம வாழ்க்கையில தாமரைக்கு இடம் இல்லை”
“அத்தோடு, அது வந்து சம்மு! இப்ப மனசால நான் நல்லா இருக்கேன். ரொம்ப தெளிவா இருக்கேன். என் எதிர்காலம் நீதான்னு. உம் குடும்பம் உனக்கு தான்லே!” என்று சந்தோசமாக வேலு சொல்ல
பூர்ணாவின் கண்களில் நீர் பெறுக,அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ ரொம்ப வலிக்குதுலே வேலு. தாங்க முடியாம வலிக்குது வேலு. கடைசில நீயும் ஆம்பள தான்னு காட்டிட்ட! தாமரைக்கு ஒரு தெளிவு கிடைக்கணும், பவித்ரா மனசு என்னன்னு தெரியணும், ஆத்துல யும், சேத்துலயும் கால் வச்சு இருந்த வேலு, இப்போ சரியா தம் குடும்பத்து பக்கம் நிக்கிறான். எல்லாம் சரி தான். இதுல நான் எங்க வாரேன் வேலு. என்னைய பத்தி ஒண்ணுமே யோசிக்கலையாலே!” என்று பூர்ணா ஆதங்கமாக கேட்க.
அதிர்ச்சியான வேலு, “ஏட்டி சம்மு! உம்மை யோசிச்சு தான் இம்புட்டும்”
விரக்தியாக சிரித்து பூர்ணா “பெத்தவ புள்ளையா பார்க்க கேட்டா, அது நியாயம் தானே. நீயே சொல்லிட்ட அவ தான் பெத்தவன்னு. அது உண்மை தான். அந்த உண்மை எனக்கு எம்புட்டு வலிக்கும். நியாயமே இல்லாத வலி. யார் கிட்ட சொல்ல முடியும், என்னான்னு சொல்ல முடியும். நான் சொல்லாமவே எம் வலியை நீதானே புரிஞ்சுகனும். உமக்கு கூட புரியலையே வேலு”
“அந்த பாளப்போன சாமிக்கு நான் கண்ணுக்கு தெரியாம போனேனே வேலு! நாதியத்து நிக்காம குடும்பமா நான் நிக்கிறதே எனக்கு பெருசுன்னு நினைச்சியா வேலு. நான் எங்க போவேன், எனக்குன்னு யார் இருக்கா, தட்டி கேட்க அண்ணன், தம்பி இல்லை. ஆதரவு கொடுக்க அக்கா, தங்கச்சி இல்லை. ஏன் ? ஒரு பொழுது நிக்க ஆத்தா, அப்பன் வீடும் இல்லை. இதை தாண்டி நான் வெளியேற மாட்டேன்னு தானே நீயும் துணிஞ்சு செஞ்ச! எம் நல்லதுக்க, எனக்கு எது நல்லதுன்னு உமக்கு தெரியுமா வேலு” என்றவள்.
“யாரை பார்த்தும் பொறாமை பட கூடாதுன்னு தான் நினைப்பேன். இன்னைக்கு ரொம்ப ஏக்கமாக இருக்குலே! தாமரை உனக்கு இம்புட்டு செஞ்சும் அவளை பத்தி யோசிக்கிற, என்ன இருந்தாலும் இரத்த சொந்தம் தனி தான் போல” என்று சொன்னவளை பார்த்து , ஏதோ மறுத்து சொல்ல போன வேலுவை தடுத்தவள்,
“உம் குடும்பம் நான் தான்னு சொல்ல போற! எம்புட்டு நாசுக்க உம் மனசா சொல்லிட்டா! அது தான் இன்னும் வலிக்குது. என் தேவை இது தான்னனு நீயா யோசிக்கிற பார். உன் கடந்த காலத்தில இருந்து வெளியேறி புது வாழ்க்கைக்கு தயாராகிட்ட. அப்ப நான் எம் வலி, வேதனை,கஷ்டம் இது எதையும் நீ யோசிக்கலையே. இவளுக்கு இந்த வாழ்க்கையே பெருசுன்னு நினைச்சய! பெருசு தான் மட்டச்சியா திரிஞ்சேன் பூவு, பொட்டு, தாலின்னு நல்ல இருக்கேன். மலடின்னு இல்லாம புள்ளையும் இருக்கு, எல்லாம் உன்னால தான்.ஆனா, நெஞ்சு முட்ட ரோசமும், தன்மானமும் நெருக்கி கிடக்கு. அதான் சிரிக்க முடியல”
சேலை முந்தியை எடுத்து மூக்கை , கண் என்று துடைத்தவள், “ எதையும் தாங்கிட்டு வலிக்காத மாதிரி நான் நிக்கிறேன், அதான் எனக்கு வலிக்கவே செய்யாதுண்ணு நெனச்சுட்ட போல. எம்புட்டு அடி பாட்டாலும் மனசு கல்லா மாற மாட்டாது. பொம்பள புத்தி பாசம் வச்சுட்டேன் மாற முடியல. அஞ்சு வயசுல உம் கூட நின்னேன் அன்னைக்கும் வேலு தான், இன்னைக்கும் வேலு தான். என்னைய ரெண்டா வெட்டி போட்டாலும் சம்முக்கு வேலு தான். எம் பாசம் மாறாது” என்றவள் விடுவிடுவென உள்ளே சென்று விட்டாள்.
கண்களில் நீரோடு வேலு தான் தவித்து போனான். தான் எங்கு தவறினோம் என்று.
மகள் எழுந்து காத்திருக்க தாய் வந்தவுடன் கட்டி கொண்டாள். அமைதியாக மகளின் தேவையை கவனித்து, அவளோடு அமர்ந்து கொண்டாள்.
எதையும் தாயிடம் மறைத்து பழக்க மில்லாத பவியும், தாமரையை சந்தித்ததை விவரித்தாள்.
“எனக்கு அவங்களோட ஒட்டவே இல்லம்மா! உம் வாசம் அவங்க கிட்ட வரவே இல்லை. எங்க கணக்கு மிஸ்ச பாக்குற ஃபீல் தெரியுமா! நான் சொல்லிட்டேன் நீங்க, எங்கம்மா மாதிரி இல்லன்னு”
அதிர்ந்த பூர்ணா, “ சாமி, அவ உன்னைய பெத்தவ” என்க.
“தெரியும். ஆனா, அவங்க என் அம்மா இல்லையே. நீங்க தானே எங்கம்மா. அத தான் சொன்னேன். உங்களை அம்மான்னு கூப்பிடவே எனக்கு தோணல. எங்கம்மா நீங்க இல்லன்னு” என்று ஆரம்பித்து பேசிய அனைத்தையும் சொன்னாள் பவித்ரா.
மகள் பேசபேச அவளையே பிரமிப்பாக பார்த்து கொண்டிருந்தாள் பூர்ணா. இதோ தனக்கான அங்கீகாரம். தன் மகள் தன்னை புரிந்து கொண்டாளே! அம்மா என்ற உறவு தனக்கு மட்டுமானது என்று காட்டி விட்டாள். சுயநலம் தான், மனம் அதை தான் விரும்பியது. எத்தனை வருட வாழ்வில் உண்மையான உறவு. மனம் நெகிழ்ந்து போனது. மகளை வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள். உன்னை சுமக்கும் பாக்கியம் எனக்கு இல்லாம போனதே தங்கம்!
சற்று முன் இருந்த வெறுமை களிப்பாக மாறியது. ஓடி சென்று மாமியாரை எழுப்பியவள், “ அயித்த! பஞ்சாங்கத்தில வர வெள்ளி நல்ல நாளா பாருங்க, பொங்க வைக்கணும்” என்றவள். வெளியே வந்து வேலுவிடம்,
“ஏலே வேலு! ஓட்டு மேல வெள்ளை சேவ ரெண்டை புடிலே! நேத்தி கடன் செலுத்தனும். சும்மா மசமசன்னு நிக்காம சொல்றத செய்” என்று உள்ளே செல்ல.
ஒன்றும் புரியாமல் முழித்தவன், மனைவி பின்னர் சென்றான். என்ன ஆச்சு இவளுக்கு? இப்போ தான் நாரா கிழிச்சா? அதுக்குள்ள எந்த சாமி வந்துச்சு.
அதை தான் பெறியாத்தாவும் கேட்டார். “என்ன திடு திப்புண்ணு ? சாமி காரியம், சுத்த பத்தமா இருக்கணும்” என்க.
“அதெல்லாம் சுத்தம் தான். நம்மூர் பேச்சியம்மன் சாமிக்கு நான் அம்மாவான்னா ரெட்டை சேவ படைச்சு, பொங்க வச்சு, மொட்டை எடுக்குறேன்னு நேத்தி கடன் இருக்கு. சாமி காரியம் தாமதிக்க கூடாது” என்று பூர்ணா சொல்ல .
அதிர்ந்த வேலு, “மொட்டை எடுக்க போரியா. இந்த வயசுலையா! நான் எடுக்கவா உனக்கு பதிலா. முடி இல்லாம கஷ்டம்” என்று வேலு சொல்ல,
“அதெல்லாம் வேணாம். நேத்தி கடன் நான் போட்டது. நாம் செஞ்சா தான் திருப்தி”
“நான் சொல்லல. உம் பொண்டாட்டி சரியான புள்ளை கிறுக்கு புடிச்சாவ” என்று பெரியாத்தா சொல்ல, வேலுக்கும் அப்படி தான் தோன்றியது.
அடுத்த வெள்ளியே நல்ல நேரத்தில் நேத்தி கடம் செலுத்தி திருப்தியாக முடித்தனர். தாயோடு கோவில் வந்த தாமரையும் கண்டாள்.
“ஏதோ புள்ளைக்கு வேண்டுதலாம். அதான் செய்றாங்க” என்று ஒருவர் சொல்ல,
“ பார்த்தியா தாமரை, அந்த மலட்டு சிறிக்கிக்கு பகுமானத்தை. ஓசில ஒலை வச்சு ஊருக்கே விருந்து வச்சாலாம் ஒருத்தி. அந்த மாதிரி தான் இருக்கு, இந்த கூத்து. வாடி போலாம்” என்று பூமணி இழுத்து செல்ல,
குடும்பம் சகிதமாக நிற்கும் அவர்களை பார்த்தவாறு சென்றாள் தாமரை.