இப்பொழுது எல்லாம் வேலு தனியாக உணருகிறான். சம்மு அவனோடு முகம் கொடுத்து பேசுவதே இல்லை, மகளுக்கும் அம்மா மட்டுமே போதும். சுற்றி எத்தனை பேர் இருந்தாலும், தாயை சுற்றியே ஓடுவாள் பவித்ரா. அதில் பெருமை தான் வேலுக்கு. ஆனால், அவர்கள் கூட்டணியில் தன்னை சேர்க்க வில்லை என்பது தான், அவனது கவலையே.
ராத்திரி தூங்கும் வரை குசுகுசுவென இருவரும் பேசி, சிரித்து கொண்டே இருக்க, இவனுக்கு தான் பொருக்க முடியவில்லை. அப்படி என்ன தான் பேசுவீர்கள், நானும் வருவேன் என்று நெருங்கினாலும், கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் அவர்கள் வேலையிலே இருக்க. இவன் தான் சோர்வாக உணருவான். தன்னை மட்டும் ஏன் இந்த சொம்பு கழுதை ஒதுக்குகிறது என்று திட்டி கொண்டே உறங்குவான்.
தென்னை மரங்களை வெட்டி சீர் படுத்தும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க; வேலு ஒரு பக்கம் நோட்டு, பேனா, போன் என்று அமர்ந்து விட்டான். அவனை புரியாமல் பார்த்தவள், விழுந்து கிடக்கும் ஓலைகளை எடுத்து ஓரிடத்தில் குமிக்க ஆரம்பித்தாள்.
வேலை முடித்து ஆட்கள் சென்ற பின்னும் வேலு நிலை மாறாமல் இருக்க, இவளுக்கு தான் உறுத்த தொடங்கியது. என்ன பண்றான், ஏதோ வயசு பையன் காதல் கடிதம் எழுதற மாதிரி தான் ஒளிஞ்சு திரியிறான். ஆயிரம் வேலை கிடக்க என்று பூர்ணா யோசிக்கும் போதே, அவள் பின்னே ஒரு சத்தம் . அது சத்தமில்லை பாட்டு, வேலு பாடிய பாட்டு,
அதிர்ந்து போய் பூர்ணா திரும்பி பார்க்க, ஒரே குஷி வேலுக்கு, மனைவியை கவர்ந்து விட்டோம் என்று. அதனால், பாடலை தொடர்ந்தான்.
“அடி கருப்பு நிறத்தழகி, உதட்டு சிவப்பழகி, சில்லறையா சிதறிட்டேன்டி உம் சிரிப்பில் சில்லறையா சிதறிட்டேன்டி”
“உம் குங்கும உதட்ட வச்சு, குலுங்க சிரிக்கையில , இதழ் ரெண்டும் துடிக்குதடி; அதா பார்த்து எம் மனசு தவிக்குதடி, உன் உதட்டுக்கு சொந்தக்காரன்டி “ என்று வேலு பயங்கர ரசனையில் பாடி கொண்டிருக்க,
முதல் தேங்காய் மாட்டை அவன் காலில் விழுந்தது. “ஆத்தே” என்று வேலு அலறி துடிக்க,
“என்னாலே ஆத்தே! பரதேசி பயலுக்கு பாட்டு கேட்குதோ! காலையில இருந்து ஒத்த ஆள ஓடிட்டு கெடக்கேன்! நாயி என்ன வேலை பார்த்து வச்சுருக்கு!” என்று மேலும் ரெண்டு மட்டைகளை அவன் மேல் வீச,
“ஏட்டி! உமக்கு பிடிக்கும்னு தாம்ல” என்று வேலு இழுக்க.
“ஓ…. நான் கருப்பு நிறத்தழகி, துரை அப்படியே இலந்தை பழ சிவப்பாழகனாக்கும். கருவாப் பயலுக்கு ஏத்தம் கூடி போச்சு. நான் கருப்புன்னு லகள பண்ற”என்று கடுப்பாக பூர்ணா காய,
பதறி போன வேலு, “ஐயோ சொம்பு! இது சினிமா பாட்டு, அப்படி தான் எழுதி இருக்கு, நான் உன்னை போய் அப்படி சொல்லுவென!” என்று வேலு நயந்தே வர,
“இத தான் காலையில இருந்து பரீட்சைக்கு படிக்கிற மாதிரி படிச்சையாக்கும். லூசு பயலே! சித்திரை வந்தா மழை இருக்காது வாழைக்கு பாடு, தக்காளி காய் பிடிக்கல என்னான்னு பார்க்கணும், மேக்கு காட்டுல தண்ணி ஏற மாட்டாது, தென்னைக்கு காய் சிறுத்து போச்சு. இப்படி ஆயிரம் பஞ்சாயத்து தினக்கி வரிசையில் நிக்குது. அத பாக்குறத விட்டுபுட்டு, இளந்தாரி பய மாதிரி சினிமா பாட்டு பாடிக்கிட்டு திரியிற!” என்று தென்னை மட்டை கொண்டு விரட்டியவள்.
“ இன்னொருவாட்டி மைனரு மாதிரி பாட்டு பாடி திறிஞ்ச?, நெஞ்சுல இருக்குற மஞ்சா சாற பிழிஞ்சுறுவேன்” என்று பூர்ணா அரட்ட.
முகம் சுருங்கி போனது வேலுக்கு. “எப்படியும் சரிகட்ட முடியலையே ! என்ன ப” என்ற யோசனையில் வேலு பார்க்க.
“என்னாலே பாக்குறவன். போ… போ… போய் தரிசில கட்டி கெடக்குற மாட்டை அவுத்து, தொட்டி தண்ணில குளிப்பாட்டி விடு” என்று மனைவி கட்டளை இட,
“மாட்டை குளிப்பாட்டவ நான் பாட்டை படிச்சேன்” என்று வேலு முணங்க,
“அப்புறம்” என்று கையில் தேங்காய் வெட்டும் அருவா கொண்டு பூர்ணா திரும்ப, சத்தமில்லாமல் நழுவி விட்டான் வேலு.
அவனுக்கு எப்படி தன்னை மனைவியிடம் புரிய வைப்பதென்று தெரியவில்லை. எப்படி சென்றாலும், சம்பூர்ணாவிடம் வேலைக்கு ஆக வில்லை.
அப்படித்தான் ஒரு நாள் மணிமாறன் பேச்சை கேட்டு, ராத்திரி மல்லிகை பூவும், அல்வாவும் வாங்கி போய் கொடுக்க, வயசு புள்ளை இருக்கும் வீட்டில் என்ன சேட்டை இது என்று தோசை கரண்டியாலே முதுகில் கோலம் போட்டு விட்டாள்.
“வயசு புள்ளை முன்னாடி மட்டும் புருசனா அடிக்கலாமா?இப்படி ஒவ்வொரு ஆம்பளையும் நினைத்தால் ரெண்டாவது புள்ளை, மூணாவது புள்ளையெல்லாம் எப்படி பெத்துகிறதாம்” என்று மனைவிக்கு பதில் சொல்லி, அதற்கும் சொம்புலையே அடி வாங்குவான்.
வெளியே எங்கும் சென்று வந்தால் புது துணி, பிடித்த சாப்பாடு என்று ஆசையாக எது வாங்கி வந்தாலும் மறுக்காமல் வாங்கி கொள்பவள், முகத்தில் சிரிப்பு மட்டும் இருக்காது முறைப்பு மட்டுமே இருக்கும்.
வெகு நேரம் யோசித்த வேலு, இந்த குள்ளா போடுற வேலையை விட்டு, விட்டு நேரடியாகவே பேசுவோம் என்ற முடிவுக்கு வந்தவனாய். நேராக போய் மனைவி முன் நின்றான். மகள் பள்ளி சென்ற பின் தான், இல்லையென்றால் அதற்கு ஒரு பாடு கத்துவாள் மனைவி.
பின் கட்டை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தவள், கணவன் தம் முன் வந்து விறைப்பாக நிற்பதை கண்டு.
“என்னாலே வேலு! என்னா சமாச்சாரசம்?”என்க.
“ ஏட்டி சம்மு! எம் மனசு உமக்கு புரியலையா? நான் உணருறத நீயும் உணரலையா! நான் எதுவும் தப்பு பண்றேனா! ஒன்னும் பிடி படல. எதையும் ஒடைச்சு பேசுல. மனசு தவிக்குது, உன்னை நெருங்கவும் முடியல, விலகவும் முடியல” என்று சொன்னவன். அவள் முகம் பார்த்து,
“ எனக்கே தெரியலலே சம்மு! எப்படி எங்கிட்ட இப்படி ஒரு மாற்றம் வந்துச்சுன்னு. இம்புட்டு வருசம் பழகன பழக்கம் தப்பா போய்ற கூடாதுன்னு மனசு அடிச்சுகுது. அதே, நேரத்தில உம்மை விட்டு தள்ளி நிக்கவும் முடியலை. நியி எம் பொண்டாட்டி! நீயி வைக்கிற குங்குமமும், தாலியும் எனக்குண்ணு நினைக்கிறப்பலாம் அப்படியே பறக்குறேன். இத்தனை வருச கட்டு கோப்பை தாண்டி கண்ணு, உம் மேல பாயுது. ஏதேதோ ஆசை, தப்பாத்தான் தோணுது, சரியாவும் நினைக்கிறேன். ஒன்னும் பிடிபடல. இதுக்கும் மேலையும் மனசுல நான் தூக்கி சுமக்க முடியல. பாரம் அழுத்துது” என்று வேலு தம் பக்க விளக்கம் கொடுக்க.
ஒரு பெருமூச்சு தான் வந்தது பூர்ணாக்கு, “ புரியாம நிக்குறதுக்கு நாம ஒன்னும் சின்ன பசங்க கிடையாதே வேலு. எல்லாமே புரியத்தான் செய்யுது. கல்யாணம்ன்ன எல்லாம் தான், எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். முடி இருக்குற கதவுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு அறிஞ்சவங்க தான். தெரியாதது எதுவுமில்லை ரெண்டு பேருக்கும். ஆனா, திரும்பவும் அந்த கதவ திறக்கிற தைரியம் எனக்கில்லை வேலு. நியி நினைக்கிற மாதிரி செத்தவனை நினைச்சு எம் வாழ்க்கையை தனிமரமா ஆக்கிகில்லை” என்று சொன்ன பூர்ணா, அங்கிருந்த கல்லில் அமர.
வேலு புரியாமல் பார்த்தான். பூர்ணா சண்டை போட்டு வந்தது தெரியும். அதற்கு காரணம் குழந்தையின்மை என்பது தான் வேலு கணிப்பு. அவள் நாத்துனார்கள் உடன் பிரச்சனை என்று சேதி வந்தது தான். அது எந்தளவிற்கு என்று வேலுக்கு தெரியாது. அவளாக மனம் திறக்காமல், அவனுக்கு எப்படி தெரியும். இருவருக்கும் முதல் திருமணம் தோல்வியில் முடிய, அடுத்து கிடைத்த நல்ல வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல எண்ணினான். தற்போது அப்படி இல்லையோ என்றொரு நினைப்பு வர, தீவிரமாக மனைவியை கவனித்தான்.
வேலு முகம் பார்த்த பூர்ணா, “ அந்தாள, நான் என்னனு சொல்ல வேலு. படிச்ச வாத்தியார், பண்பானவன், அம்மா, அப்பா இல்லாத மூணு பேர நிலையா நின்னு கட்டி கொடுத்தான். ஊருக்குள்ள நல்ல பேரு. எனக்கு மட்டும் ஏன் அநியாயம் செஞ்சான். அவனுக்கு நான் அப்படி என்ன பாவம் செஞ்சேன். தெரியல, நான் ஒரு அடிமையாத்தான் வாழ்ந்தேன். நாய் குட்டி மாதிரி கூடவே ஒட்டிட்டு, என்ன சொன்னாலும் சரின்னு, அவன் எப்படி இருக்கணுமன்னு நினைக்கிறனோ, அந்த மாதிரி தான் நடப்பேன். நம்ம இயல்பை தொலைச்சு, எதார்த்தத்தை இழந்து, சுயத்தை மறைச்சு வாழ்றது ஒரு வாழ்க்கையா!. அத தான் நான் வாழ்ந்தேன்” என்று விரக்தியாக சொன்னவள்.
தன் நெஞ்சை தடவி கொண்டாள், மூச்சாடைப்பது போல் ஒரு உணர்வு, “நாலு இட்லிக்கு ஒரு இட்லி கூட சாப்ட ஒரு பேச்சு வரும், சத்தமா சிரிக்க கூடாது, புது சேலை கட்ட கூடாது, வீட்டுக்கு வெளியே நிக்க கூடாதன்னு ஆயிரம் சொல்லுவான். அதையும் நான் சாதரணமாத்தான் எடுத்துகிட்டேன் வேலு. நல்ல வாழ்க்கைன்னு நினைச்சு தான் வந்தோம், அப்படி இல்லை. எவ்வளவோ ஆம்பளைக இதை விட தப்பா இருக்கிறாங்க, நமக்கு பரவாயில்லை. எம் புருசன் அப்படி தான், அனுசரிச்சு சரிகட்டி போவோம்! என்னைக்காவது ஒரு நாள் நம்ம வாழ்க்கை மாறும்ன்னு ஒரு நம்பிக்கை. ஒரு வருசம் மூச்சு விடாமல் இழுத்து போனேன். அப்புறம் தான் தாங்க முடியல” என்று சொல்லி கொண்டே வந்தவள், அடக்க முடியாமல் கேவி விட,
துடித்து போனான் வேலு, “விடுல சம்மு, விடு. நான் எதையும் கேக்கல, நியும் எதுவும் சொல்ல வேண்டாம். நடந்ததா மறந்து விட்டு தள்ளு, இப்ப நாம நிம்மதியா தானே இருக்கோம். இது போதும், நியும் அழுகாத. பாரு! எனக்கும் கண்ணெல்லாம் கலங்கி போச்சு!” என்று அவளை நெருங்கி வேலு சமாதானம் செய்ய,
அவன் கையை பிடித்து கொண்டே, “ ரொம்பவும் பொறுக்க முடியாம தான் நானும் எதுத்து பேச, அவ்வளவு தான் வேலு. பேய் புடிச்சா மாதிரி ஆகிட்டான். குரல் உசராது, கை நீட்ட மாட்டான். ஆனா… ஆனா… நான் என்னன்னு சொல்ல வேலு. எங்கூடவே வளந்தவன் உங்கிட கூட சொல் முடியல வேலு. ராத்திரி… ராத்திரி ரொம்ப படுத்துவான். அது எப்படின்ன, ஆறு மணிக்கு மேல ஆனாலே எம் உடம்பு தன்னாலே உதறும், நடுங்கி போவேன். கொஞ்சமும் பாவம் பார்க்க மாட்டான். கட்டுன புருசன், இதை கொடுமைன்னு வெளிய சொல்ல முடியுமா! சந்தோசமா கூட வெளிய சொல்ல முடியாத விசயத்தை. நான் எப்படி துக்கத்தை சொல்லுவேன். எம்புட்டு பழக்கம் இருந்தாலும், தயக்கம் ஓடைச்சு சொல்ல வரல” என்று பூர்ணா தேம்பா.
வாயில் வார்த்தை ஒன்றும் வராமல் ஓய்ந்து போனான் வேலு. கணவன், மனைவி சண்டை என்று ஏதேதோ நினைத்து இருக்க, இப்படி என்று அவள் சொல்லி தான் தெரிகிறது. தாம்பத்திய உறவு! இவன் அறியாதது அல்லவே! அதனால் தான், மனைவியை எண்ணி பரிதவித்து போனான்.
“ஏட்டி சம்மு! யார்டையும் நியி சொல்லவே இல்லையா?” என்று மன வேதனையோடு வேலு கேட்க.
மன சோர்வோடு , “சொல்லாம என்ன வேலு? பெரிய மதினி கிட்ட சொன்னேன். யாருக்கும் இது பெரிய விசயமா தோணல” என்றாள் வருத்தத்தோடு.
ஆம், ஆரம்பத்தில் கணவன் கதிரவனின் தொல்லைகளை சகித்து அமைதியாக இருந்தவள். முதலில் தன் மன சங்கடத்தை பெரிய நாத்துனார் சுமதியிடம் தான் சொன்னாள். அதற்கு அவர்,
“இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு எங்கிட்ட கொண்டு வருவியா பூர்ணா. எந்தம்பி குடிக்கிறான், இல்லையா குடிச்சுட்டு அடிக்கிறான், வேற பொண்ணுக கூட தொடர்பா இருக்கான், வீட்டுக்கு வாங்கி போடுறது இல்லை, வீட்டுல வசதி இல்லை. இப்படி என்னவும் சொல்லு நான், அவன் கிட்ட கேக்குறேன். அதை விட்டு, இதை போய் பிரச்சினையாக்குறையே வெட்கமா இல்லை. எங்கிட்ட சொன்ன மாதிரி, நாலு பேர் கிட்ட சொல்லாத ஊர் சிரிக்கும். அவ அவ புருசன் தன்னை சுத்தி வர மாட்டானான்னு ஏங்குறாங்க! நியூ என்னன்னா? புருசனா புடிச்சு வைக்க தெரியலையே!” என்று அவளையே சாடி செல்ல. ரொம்பவும் சோர்ந்து போனாள். வீட்டிற்கு மூத்தவர், அவரே தன்னை தப்பு சொல்ல, யாரிடம் நியாயம் கேட்க முடியும்.
அதுவும் சில காலம் தான். மீண்டும் பொறுக்க முடியாமல் சண்டை வந்தது. இந்த முறை கை நீட்டி விட்டான். பூர்ணாவும், தான் இங்கிருப்பது சரி வராது என்று எண்ணி, தம் பிறந்த வீட்டிற்கு பெட்டியை கட்டி விட்டாள். முதன் முறையாக , கதிரவனுக்கு கொஞ்சம் பயம் வந்தது. வீட்டு விசயம் வெளியே போக விரும்ப வில்லை போல. அடுத்து நொடியே, தம் உடன் பிறந்த மக்களிடம் தகவல் சொல்ல. அடுத்தடுத்து படையெடுத்து விட்டனர்.
யார் சமாதானம் சொல்லியும் பூர்ணா கிளம்புவதற்கு உறுதியாக நின்றாள். அத்து விடும் எண்ணம் அவளுக்கு இல்லைதான். ஆனால், பிறந்த வீடு என்ற ஒன்று உள்ளது, வசதி இல்லாவிட்டாலும் தட்டி கேட்க தாய் இருக்கார் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அப்போதாவது கதிரவன் அடங்குவான் என்ற ஒரு எண்ணம் பூர்ணாக்கு.
மாலதி முதற்கொண்டு எப்போதும் இறங்கி வராத வேணி வரை பேசியும், மனம் இறங்க வில்லை பூர்ணா. கொஞ்ச நஞ்ச அடி இல்லை, சாப்பாட்டு மேசை கைப்பிடி கொண்டு, எங்கு அடி விழுது என்ற நிதானம் கூட இல்லாமல் அடி நொறுக்கி விட்டான். அதனால் தான், எப்போதும் கணவன் என்று பொருத்து போகும் பூர்ணாவே பொங்கி விட்டாள்.
“ நம்ம வீட்டு பிரச்சனை, அடுத்தாளு எதுக்கு பஞ்சாயத்து பண்ண, அண்ணா கிட்ட நான் பேசுறன். இனி, இப்படி நடக்காமல் பார்த்துக்கலாம்” என்று மாலதி சமாதானம் சொல்ல.
அமைதியாக, அழுத்தமாக அமர்ந்திருந்தாள் பூர்ணா. இதே போல் வேணி வீட்டில் பிரச்சனை வரும் போது! அண்ணன், அக்கா, தங்கை, அவர்கள் கணவன் என்று குடும்பமே போய் துணை நின்றனர். அப்போது அது குடும்ப பிரச்சினை, எனக்கு வந்தால் கணவன் மனைவி பிரச்சனை, வெளி ஆள் வர கூடாதா! யாரு, தன் தாய்யா வெளி ஆள்? அவர் இல்லாமல் தான் இந்தாளுக்கு மனைவி என்று நான் வந்தேனா! மனம் கொதித்தது.
நீங்கள் பெரிய ஆட்கள் என்றால், அது உங்களோட . எனக்கு என்ன வந்தது. இல்லாதவர்கள் என்றால் அவ்வளவு இளப்பமா! கூலோ – கஞ்சியோ எனக்கு பழக்கம் தான். பெற்ற தாய் இருக்க வேற என்ன வேண்டும். மன வைராக்கியத்துடன் வீட்டின் வெளியிலே பையை வைத்து கொண்டு அர்ந்திருந்தாள் பூர்ணா.
வேக எட்டு வைத்து வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்தார் வள்ளி. இதுவரை ஒரு பிரச்னையும் இல்லையே, யார் கண்ணு பட்டது என்ற புலம்பலோடு வந்தவர். வெளியே நிற்கும் மகளை கண்டு கொள்ளாது, நேர உள்ளே சென்றவர். மருமகன் முன் தான் நின்றார் .
“என்னப்பா தம்பி! புள்ளை ஏதோ சண்டன்னு சொல்லுது, நீங்களும் கோபத்துல கை நீட்டிருக்கீங்க!” என்று மனதாங்கலோடு வள்ளி கேட்க.
“அக்கா! ஏதோ புருசன், பொண்டாட்டி சண்டை. வார்த்தை கூட குறையா வர, கை நீட்ட வேண்டியதா போச்சு. நாங்களே பேசி சரி செஞ்சுருப்போம். அது தான் உங்களை வர சொல்லி, பெட்டியை தூக்கி வேற நிக்குது” என்று கதிரவன் ஒரு சாதாரண சண்டை போல சொல்ல,
கொதித்து போனாள் பூர்ணா, “ எவ்வளவு சாமர்த்தியம். செய்தது தப்பு என்று ஒப்புக்கொள்ள வில்லை, நடந்ததுக்கு வருத்தமும் இனி நடக்காது என்று நம்பிக்கையும் தர வில்லை, தன் தாய் வந்ததும், தான் பெட்டியை தூக்கி வெளியேறியதும் தான் குற்றம் என்று சொல்கிறானே!” நொந்து போய் பூர்ணா பார்க்க.
“அம்புட்டு தான தம்பி. நான் கூட பெரிய சண்டையோனு பயந்திட்டேன். புத்தி சொல்லி விட்டுட்டு போறேன் தம்பி. அப்பன் இல்லாத பிள்ளை, கூட குறையோ நீங்க இழுத்து போங்க தம்பி” என்று வள்ளி நயந்தே பேச. கொண்டாட்டம் தான் கதிரவன் வீட்டு மக்களுக்கு.
மகளிடம் வந்த வள்ளி, “சம்மு, தம்பிகிட்ட நான் பேசிட்டேன். இனி சண்டை வராதுன்னு சொல்லிருக்கார். நீயும் பார்த்து நடந்துக்கோ! சரியா! குடும்பம்ன்ன நாலும் இருக்க தான் செய்யும். அனுசரிச்சு, விட்டு குடுத்து போறவ குடும்ப பொண்ணு. சுதாரிச்சு போலச்சுக்கோ தாயி” என்று வள்ளி கொஞ்சலாக சொல்ல.
“எம்மா! நடந்தது தெரியாம பேசாத. நியி நினைக்கிற மாதிரி இங்க நான் நல்லா இல்லை. வாழ வெட்டிய வந்துற கூடாதுன்னு அமைதியா பொருத்து போறேன். அந்தாளு ரொம்ப மோசம், தொட்டதுகெல்லாம் குறை சொல்லிட்டு, நிம்மதியா சாப்ட கூட முடியல” என்று பூர்ணா பொங்கி அழ,
“ஆரம்பத்துல எல்லாரும் அப்படித்தான். நீயும், உம் புருசனும் மட்டும் தானே, அமைதியா போ, நாள் செல்ல செல்ல சரிபடுவாரு தம்பி. சின்ன சின்ன குறை எல்லாருக்கும் தான் இருக்கும். விட்டு கொடுத்து போ, என்னைக்கும் கெட்டு போக மாட்ட. அம்மா சொல்றத கேளு சம்மு” என்று வள்ளி ஆறுதல் சொன்னாலும் பூர்ணாக்கு தம் கஷ்டத்தை எடுத்து சொல்ல தெரியவில்லை.
“எம்மா! நியூ எம் உடம்ப பாரு, மாட்டை அடிக்கிற மாதிரி அடுச்சுருக்காங்க. பெத்தவ கிட்ட சொல்ல கூடாதுன்னு பாக்குறேன். ராத்திரி கூட பாடு தான்” என்று பூர்ணா திரும்ப ஆரம்பிக்க
“எந்த புருசன் தான் பொண்டாட்டியை அடிக்கல. உங்கப்பாவே கை நீட்டுணவக தான். உம் வாய் எனக்கு தெரியாதா! கூட கூட பேசிருப்ப, அதான் தம்பி கை நீட்டிருக்கும். பொம்பள நீதான் விட்டு குடுத்து போனும்” என்று வள்ளி கண்டிப்பாக சொல்ல, அழுகையோடு மறுத்து சொல்ல வந்த மகளை தடுத்தவர்.
“கவர்மெண்ட் வாத்தியார் மாப்பிள்ளைன்னு ஊரே உம் மேல பொறாமை படுது. வள்ளி ஒத்த பொம்பளையா, பிள்ளையை கட்டி கொடுத்துட்டான்னு பெருமை பேசுறாங்க. உங்கப்பன் செத்த பின்னாடி நிம்மதியே இல்லை எனக்கு. உம் கல்யாணம் முடிஞ்சு தான் நல்ல கஞ்சியே தொண்டைல இறங்குது. உங்காத்தா நிம்மதியா கெடுத்திடாத தாயி. பெத்தவள பொணமா பாக்கணுன, அத்துகிட்டு வா” என்று வள்ளி நடையை கட்ட. ஒரு வார்த்தை பேச முடியாமல் வாயடைத்து போய் நின்றாள் மகள்.
வள்ளிக்கும் அழுகை தான். வறுமையில் இருதாலும், கண்ணசைவிலே மிராட்டுவாரே தவிர இப்படி உடம்பு கண்டி போகும் அளவுக்கு அடிக்க மாட்டார். தற்போது பாவம் பார்த்தால் மகள் தன்னோடு வந்து விடுவாள். அதற்க கல்யாணம் செய்வது, நாள் சென்றால் சரியா போகும் என்பது அவர் கணிப்பு.
பூர்ணா தலை நிமிர வில்லை. அசிங்கமாக, அவமானமாக இருந்தது. ஜம்பமா தாய் வருவார், அவரோடு செல்வேன் என்று பெட்டியை தூக்கி வந்த பின், வெட்கம் கெட்டு செல்ல மனம் வர வில்லை. அக்கா, தங்கை மூவரின் முகத்தில் அப்படியொரு எகத்தாளம், கேலி, நக்கல்.பெற்றவர்களே பெண்ணை, கட்டி கொடுத்த வீட்டில் விட்டு கொடுத்தாள். அவளுக்கு அந்த வீட்டில் என்ன மரியாதை இருக்கும்.
எல்லோரும் இவளையே வேடிக்கை பார்க்க, குனிந்த தலையோடு அடுப்படி சென்று அடைந்து கொண்டாள். தட்டி கேட்க ஆள் இல்லை என்ற தைரியத்தில், அவளுக்கு அடுத்தடுத்து நடந்தது எல்லாம் கொடுமை தான்.
வேலு முழுதாக நொறுங்கி போனான். மனசு ஆறவில்லை, எப்பவோ நடந்ததுக்கு இப்போ யாரிடம் நியாயம் கேட்க முடியும். மனதில் இருப்பதை கொட்டி, அவளாக ஆறுதல் அடைந்தால் தான் உண்டு. செத்த மனுசனை எழுப்பவா முடியும்.
பூர்ணாவும் சோர்ந்து போனாள். பழைய நினைவு தாக்கம் போல, “ கவிதாக்கா தான் ஒத்த புள்ளை பொறந்தா எல்லாம் மாறும்ன்னு சொல்ல. அப்ப பிடிச்சது எனக்கு கிறுக்கு, புள்ளை வரம் கேட்டு போய், எம் வாழ்க்கை தான் போச்சு” என்று மூக்கை உறிஞ்சி துடைத்தவள். எங்கதையை பேசுனா நேரம் தான் ஆவும், நிம்மதி சேராது வா போய் வேலையை பாப்போம்” என்று எழுந்து சென்று விட்டாள்.
அன்றிரவு மகள் தூங்கிய பின், பூர்ணா அருகே வந்த வேலு. கையில் மல்லிகை பூவும், அல்வாவும் கொடுக்க. புரியாமல் பார்த்தாள் மனைவி.
“புண்ணு வீங்கி போய் கிடந்த, அதை சீல் பிதுக்கி மருந்து கட்டி ஆற விடனும். வலிக்கும்ன்னு பயந்தா துரு பிடிக்கும், ஒப்புக்கொடு” என்க.
“யாரை” என்றாள் பூர்ணா.
“உன்னையத்தான், அடுத்த வீட்டு பொம்பளயை சொன்ன, பஞ்சாயத்து ஆகாது!” என்று வேலு ராகம் இழுக்க.
போடா லூசு பயலே என்று திட்டி கொண்டே, கவரை வாங்கி உள்ளே சென்றால் பூர்ணா.
மறுநாள் தென்னையில் காய் இறக்கும் வேலை நடந்து கொண்டிருக்க,
“என்னடா கொஞ்ச நாள் சந்தோசமா இருக்கோம்! ஒரு கஷ்டமும் இல்லையேன்னு பார்த்தேன். வந்துருச்சு!” என்ற வேலு புலம்ப,
“என்னாலே ஆச்சு” என்றாள் பூர்ணா.
“ என்ன ஆகணும்! காய் சிறுத்து போச்சுலே! இத லோடுக்கு அனுப்ப முடியாது. தரமான காய் தான், அளவு சிறுத்து போச்சு. பாரு, பருப்பு எப்படி நல்லா இருக்குன்னு. யார் வாங்குவா! தெரு தெருவாக விக்க வேண்டி தான்” என்று அழுத்து கொண்டான் வேலு.
“அதையே செய்வோம் வேலு!” என்ற மனைவியை யோசனையாக பார்க்க.
“என்னாலே சொல்ற. விவரிச்சு சொல்லு”
“ஆமா வேலு! யாரையோ புடிச்சு, காயை காட்டி, பேரம் பேசி விக்குறதுகுள்ள போதும்னு ஆகிறது. அதுக்கு நாமளே! ஏன் விக்க கூடாது. நடுவுல எதுக்கு ஒரு ஆளு” என்று பூர்ணா யோசனை சொல்ல.
“இது சரி வருமாலே! நியி முன்னாடியே யோசனை பண்ணியா” என்க.
“ஆமா வேலு! ஏற்கனவே யோசிச்சது தான். நல்ல நேரம் இப்பத்தான் வந்துருக்கு. வேலு! நல்ல கேளு. மாட்டு தாவணி தானே லோடு வரும். ராத்திரி ரெண்டு மணில இருந்து விடிகாலை வரை வியாபாரம் நடக்கும். நாம எல்லா நாளும், எல்லா நேரமும் கடை போடுவோம். அதுவும் கொள்முதல் விலைக்கே!” என்று பூர்ணா எடுத்து சொல்ல
“நம்மாள ஆவுமா சம்மு. விவசாயம் தாண்டி வியாபாரம் தெரியாது எனக்கு. கடை போட்ட யாரு வருவா! காடு கரையெல்லாம் யாரு பார்ப்ப. எனக்கு மதுரையில யார தெரியும், எப்படி ஆள பிடிக்க. பழக்கம் ஒன்னும் பெருசா இல்லையே!” என்று நடை முறை பிரச்சனையை வேலு முன் வைக்க.
“ யார தெரியணும், வாய் தாட்டியம் போதும். எல்லாரும் நாலும் தெரிஞ்ச தொழில் தொடங்குறாங்க. அடி பட்டு கூட கத்துகுவோம் வேலு. பெரிய ஆள ஏன் பிடிக்கணும்? மதுரையில தெருவுக்கு ஒரு புரோட்டா கடை, ஆப்ப கடை, இட்லி கடை இருக்கும். அந்த மாதிரி ஆட்களை பிடிப்போம். விசேஷ வீட்டுல சமையல் செய்யர ஆளுக கிட்ட பேசுவோம். மதுரை முச்சூடும் சுத்தி அலஞ்சு கூட ஆட்களை புடிப்போம் வேலு. உழைக்க அஞ்சுற ஆள நம்ம. கடையை நீ பாரு, காடு கரையை நான் பாக்குறேன்” என்று பூர்ணா தைரியம் சொல்ல.
யோசனை தான் வேலுக்கு, “ ஏட்டி சம்மு! சரி வருமா! தனியா நின்னு தோட்டம் பார்பயா? வேலை அதிகமே, எப்படி? நானும் இல்லாம?” என்று வேலு மீண்டும் புலம்ப.
“தனியா நிக்கனும் வேலு. சுயமா தான் நிக்கனும். எம் மவ, என்னை பார்த்து தான வளருற, நான் தானே அவளுக்கு எடுத்து காட்டா இருக்கணும். நம்ம அம்மா! படிக்காதவ, அவளே சுயமா நின்னு விவசாயம் பார்த்தா. தானும் அப்படி சுயமா நிக்கணும்னு தோனும்ல!. உம் கையை நான் எதிர்பார்த்த, எம் மவளும் அவ புருசன் கையை தான எதிர்பார்ப்பா. அதான் சொல்றேன்,நான் தனியாவே நிக்குறேன், துணையா நியி நில்லு, உமக்கு துணைக்கு நான் நிக்குறேன்” என்று பூர்ணா எடுத்து சொல்ல.
வேலுக்கு இன்னும் யோசனை தான். புது தொழில் இறங்க தயக்கம். ஏதேனும் நஸ்டம் என்றால் தாங்க யாரு இருக்க. உதவ கூடியவர்கள் யாரும் இல்லை. மனைவி சொல்வதும் சரியாக தான் தோன்றுகிறது.
பெரியாத்தா சொல்லி விட்டார், “ தயங்காம இறங்கு மகனே. காலம் ஒரு நேரம் தான் கை கொடுக்கும். இப்ப நமக்கு கொடுக்குது. சரியா செய்வோம்ன்னு நம்பு. மருமக துணைக்கு நான் நிக்கேன். தைரியமா நியி இறங்கு, ஒரு கை பார்ப்போம் மகனே” என்க.
மனைவி சொன்ன பின், மறு பேச்சு ஏது! சந்தோஷமாக தொடங்கினான் வேலு. மதுரையில் கவிதக்கா கணவர் மூலம் ஆட்களை பிடித்தாள் பூர்ணா. ஒரு வார அலைச்சல் தான், சிறு சுணக்கமும் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து, எல்லாத்தையும் சரியாக பார்த்து கொண்டாள் பூர்ணா.
கடைக்கு என்ன பேர் தேர்வு செய்வது என்று வேலு குழம்ப, “ சாமி பேர்ல ஆரம்பி மகனே. ஆனா, உம் பொண்டாட்டிய ஒரு வார்த்தை கேட்டுக வேலு?” என்றார் பெரியாத்தா.
“தலைச்ச பிள்ளை நிக்க வேறென்ன” என்று ஒரு வார்த்தையில் பூர்ணா முடிக்க. பவித்ரா பேரே தெரிவு செய்ய பட்டது.
மணிமாறன் தான் பெயரை பார்த்து விட்டு, பூர்ணா உடன் இருக்கும் போதே! “ அடுத்த புள்ளை பொறந்த! சடவு வராது?”
மனைவியை ஒரு பார்வை பார்த்த வேலு, “ தேங்காய் மண்டியோட சேர்த்து காய்கறி மண்டி, அரிசி மண்டி, வாழைக்காய் மண்டின்னு ஆரம்பிப்பேன்” என்று கெத்தாக வேலு பேச.
“விவஸ்த கெட்டவன்” என்று பூர்ணா முனங்க. “பார்த்தியா சொம்பு! உம் புருசனா, அடுத்த மூணு புள்ளைக்கு அடி போடுறான்” என்று மணிமாறன் ஏத்தி விட.
“ இனுக்கு கிடச்ச போதும், சந்துல சிந்து பாடுறது. போக்கத்தவன் பேச்சை பாரு. காதோரம் முடி நரச்சு போச்சு, வயிறு முன்னே தள்ளி நிக்குது, குனிஞ்சு நிமிந்து வேலை செஞ்சா மூச்சு வங்குது. இதுல மூணு பிள்ளையா?” என்று சாடி விட்டு எழுந்தவள், போகிற போக்கில்,
“ஏன் வேலு! வயசு நாப்பது ஆக போதே, இன்னுமா உனக்கு இளமை ஊஞ்சலாடுது!” என்று நக்கலாக கேட்டு செல்ல.
வெடித்து சிரித்தான் மணிமாறன். உருண்டு,புரண்டு சிரிக்க,அவனை எத்தி தள்ளி விட்ட வேலு .
“ என்னாலே சிரிப்பு! சும்மா கிடலே” என்று அரட்ட.
“உம் ராஜதந்திரம் அனைத்தும் வீணா பேச்சே பங்கு! ஒரே வார்த்தையில் ஆப் பண்ணிபுடுச்சே அந்த சொம்பு” என்று சிரிக்க.
“கூறு கெட்டவ! வேற எப்படி பேசுவா” என்று சொன்னவன் முகத்திலும் சிறு வெட்கம்.