மறுநாள் கடை திறப்பு, முதல் நாளே காய் எல்லாம் குடோன் வந்து விட்டது. கையை கடிக்காத , அதிக பொருட் செலவில்லாத, சொந்த இடத்திலே, சிறிய அளவிலே தகரம் வைத்து அடைத்து தான் கடை திறந்தார்கள். வேலுவின் தந்தை முன்பு வாங்கி போட்ட இடம் தான், முன்பு தரிசாக ஊரை விட்டு தள்ளி இருந்தது. தற்போது, நான்கு வழிச் சாலையாக நிற்க, இது தான் தோது என்று முடித்து விட்டார்கள் வேலு தம்பதிகள்.
முதல் நாள் வந்த காயை ஆட்கள் மட்டை உரித்து தனியே அடுக்க, இணைந்து கொண்டார்கள் வேலுவும், மணிமாறனும். வேலுவின் சிந்தனை வேலையில் இல்லை என்று அறிந்த மாறன், “ என்னாலே தனியா சிரிச்சு திரியிறா? என்னா சங்கதி?” என்று வினவ.
“அதில்லை மாற, நம்ம சம்முவ பாரேன். கொஞ்சம் வித்தியாசமா தெரியலை” என்றான் வேலு.
தன் வேலையில் மூழ்கி இருந்த பூர்ணாவை, திரும்பி பார்த்த மாறன், “ என்னா வித்தியாசம்! ஒன்னுமில்லையே . எப்பவும் போல மிளகா பழ மூக்கு விடக்க, முறச்சு பார்த்து நிக்குது சொம்பு” என்று மாறன் கேலி செய்ய.
அவனை முறைத்து பார்த்தவன், மனைவி கணக்கு பார்க்கும் அழகை ரசிக்க தொடங்கினான்.
“செட்டி நாட்டு சிவப்பு காட்டன் சேலையில், குடை சிமிக்கியும், கழுத்தில் மின்னும் தாலி கொடியோடு , சாதி பூ வாசம் தூக்க, அங்கிருந்த சேரில் அமர்ந்து கணக்கு பார்த்து கொண்டிருந்த மனைவியின் ஆளுமையை கணக்கு பார்த்தான் வேலு”.
பார்க்கும் யாரும் படிக்காத, கிராமத்து பெண் என்று எடை போடும் வகையில் இல்லாமல், சற்று ஆளுமை கூடி முதலாளி தோரணையில் தான் இருந்தாள் பூர்ணா. அவள் நிமிர்வும், துணிச்சலான பேச்சும் அவளை அப்படி காட்டியது. வேலு நினைத்து கொண்டான் முதலாளிதுவம் என்பது பிறப்பில் கிடையாது, உழைப்பில் தான் உள்ளது போல.
நிச்சயமாக, பூர்ணா உழைப்பில் தான் இந்த புது கடையே. பணம் மற்றும் வெளி வேலைகளை வேலு பார்த்து கொண்டாலும். அவள் பேச்சு திறமையால் மட்டும் தான் உள்ளூர் ஆட்களை பிடிக்க முடிந்தது. உணவு கடை தான் நோக்கம் என்பதால், தின வருமானம் தான், அது அவ்வளவு எளிதல்ல. நம் மக்களின் பழக்கத்தை மாற்றி, புது கடைக்கு வர வைப்பது. அவளின் பேச்சு சாமர்த்தியம் மட்டுமே.
படிப்போ எட்டு தாண்ட வில்லை . ஆனால், கணக்கு வழக்கில் கச்சிதம் தன் பூர்ணா. மன கணக்கில் அவ்வளவு தெளிவு.ஒரு முதலாளியாக மனைவியின் தோரணையை அவ்வளவு ரசித்தான் வேலு. இது தான் அவன் ஆசைப்பட்டதும். அவளை அத்தகைய உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க தான் விரும்பினான்.
சம் பூர்ணா என்ற பெண் தோழியாகவும் தாண்டி, மனைவியாகவே வேலுவை ஈர்த்தால். தினம் ஒரு புது பரிமாணத்தில் அவனை கட்டி இழுக்க, அடங்காமல் அவழுள் அடங்கவே விரும்பினான் வேலு. பூர்ணா என்றால் கட்டு திட்டம் தான். வீடு, காடு, தோட்டம், கணவன், பிள்ளை என்று எல்லாம் ஒழுங்கு படுத்தி நேர்த்தியாக கொண்டு வந்து விடுவாள். மனைவி சொன்னா சரியாத்தான் இருக்கும், அம்மா சொல்றது தான் கரெக்ட், மருமககிட்ட ஒரு வார்த்தை கேட்டுகணும் அவ கோளாறு சரியா தான் இருக்கும்” என்று எல்லாரும் அவள் பிடியில் தான், அதுவும் விரும்பியே.
மறுநாள் திறப்பு விழா சிறப்பாக நடக்க, கையில் பிடிக்க முடியவில்லை பவித்ராவை. தன் பேரில், தன்னை முன்னிட்டு விழா தொடங்க, அவ்வளவு பெருமை. ஏதோ ஒரு பெரிய மனித தோரணை. தான் அம்மா, அப்பா செல்லம் என்பதில் அவ்வளவு கர்வம். வேலு எல்லா காரியங்களிலும் மனைவியை முன் நிறுத்த, தவிர்த்து விட்டாள் பூர்ணா.
“வீட்டுக்கு பெரிய மனுசி, மூத்த தலைமுறை சாமியகெனக்கா இருக்கும் போது, நான் தலை தாங்க முடியுமா! போடா கிறுக்கு பயலே! அயித்தைய முன்ன நிப்பாட்டு” என்று ஒரு அரட்டல் போட, மனைவி சொல்லை தட்டாமல் செய்தான் வேலு.
வாடிக்கையாளர்களை முன்னமே கவர்ந்ததில், முதல் நாளே வியாபாரம் சுடு புடித்தது. ஓரளவு எதிர்பார்த்த வியாபாரமே நடக்க, வேலுக்கு பரம திருப்தி தான். பூர்ணா சொல் கேட்டு இறங்கினாலும், கொஞ்சம் பயம், தயக்கம் எல்லாம் இருந்தது தான். பின்புலம் இல்லாமல் இறங்கும் தொழில் சரிந்து விட கூடாதல்லவா!
பூர்ணா சொல்லி விட்டாள், “ சொந்த தொழில்ன்னா நாலும் இருக்க தான் செய்யும் வேலு. முதல் நாள் வருமானத்தை வச்சு எடை போடாத. வருசம் செல்லும் நிமிந்து நிக்க! கூறு கெட்ட தனமா யோசிக்காம எதையும் சாமாளிப்போம்ன்னு நினைவே! வலி பார்த்து பயந்த பொம்பள பிள்ளை பெருவாள!” என்று மனைவியின் ஒரு சொல்லில் திடம் பெற்றான்.
விடிகாலையிலே காய்கறி லோடு ஏற்றி மதுரை செல்பவன், அப்படியே கடைக்கும் சென்று. முன்மாலை பொழுதில் வீடு திரும்பி, மனைவியின் காட்டு வேலைக்கு உதவுவான். பூர்ணாக்கும் வீடு, தோட்டம், கணவன், பிள்ளை என்று சக்கரமாக தான் ஓடினாள்.
அதற்காக ஒதுங்கியே இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. முன் போல ஒட்டியே திரியாமல், அவரவர் வேலை என்று சென்றாலும், தங்களுக்காகவும் நேரம் ஒதுக்க பழகி கொண்டார்கள். அப்படி ஒதுக்கும் நேரத்தில் மற்ற விசயங்களை விடுத்து, தங்களின் நிகழ்வுகளையே மீட்டேடுத்து, நேரத்தை சுகமாக மாற்றி கொண்டார்கள்.
தற்போது எல்லாம் வேலுவின் சேட்டை அதிகம் தான். மனைவி கோபப்பட்டாலும், சண்டை போட்டாலும், சடவு சொன்னாலும் துளியும் கண்டு கொள்ளாமல், கணவனாக தன் அச்சாரத்தை பூர்ணா மனதில் பதிக்க தொடங்கினான்.
இயல்பு போல் சிறு தீண்டல், சீண்டல், கை பிடித்து கொள்வது, ரசனையான பார்வை, மனம் திறந்து பாராட்டுவது, சிறு அணைப்பு, நெற்றி முத்தம் என்று முன்னேறி கொண்டான். நொடி குறையாமல் தனக்கான தேடலை ஒற்றை பார்வையில் மனைவிக்கு வெளிப்படுத்துவான்.
“அட! என்னடா இது! நம்ம வேலுவ! மக்கான் மாதிரி இருப்பான்; எப்ப இருந்து மைனர் மாதிரி ஆனான். அவனுக்குள் இப்படி எல்லாம் தோணுமா!எம்புட்டு தான் துரத்துறது, விரட்டுறது, முறைத்தாலும், அடித்தாலும் தன்னையே சுற்றி வரும் ஒருவனை எவ்வளவு நாள் தான் வெறுப்பே இல்லாமல் ஒதுக்கி விரட்ட முடியும். ஒரு கட்டத்தில் அவள் அமைதியாக, அவன் செயல்கள் அவளை உள் இழுத்தது”.
மகளேதிரே பேசுவது தானே குற்றம், பார்வையால் தொடருபவனை என்ன செய்து தடுக்க. கணவனின் ரசனையான பார்வை, அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்த தடுமாறி போனாள். சாதாரண பேச்சு வார்த்தை தான், “ இந்த சேலை நல்ல இருக்கு, கறி குழம்பு அம்சமா இருக்கு, சூப்பர் சம்மு! வீடு சுத்தமா இருக்கு, உன் கை ராசி கடை நல்லா ஓடுது, சம்மு சொன்ன சரிதான், நீ முடிவெடு சம்மு உம் யோசனை தான் சரியா இருக்கும்” என்று நடைமுறை வார்த்தை தான். ஆனால், அவன் முகம் காட்டும் ஜாலம், கண் காட்டும் பரவசம், சின்ன சிரிப்பில் சொல்லும் குறிப்பு என்று அவன் தேவையை தெளிவாக பேசி விட்டு செல்லும் பாவனைக்கு, பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் பாவை.
நீ என்னவும் பண்ணி கொள், என்னை ஒன்றும் பாதிக்க வில்லை என்று வெளியில் காட்டி கொண்டாலும், அவளின் முக செம்மை வெளிப்படுத்தி விடும் அவள் நிலையை. கணவனின் வாயில் இருந்து தினமும் வரும் “அழகாக இருக்க” என்ற சொல்லை அசட்டை பண்ணி, கவனிக்காமல் , கண்டு கொள்ளாமல், முறைத்து, அதட்டி, ஒதுக்கி, ஒதுங்கி, ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்து, கவனித்து, ரசித்து, உணர்ந்து, எதிர்வினையாற்றி விடும் பெண் மனம். கணவர்கள் தான் எவ்வளவு சாதுர்யமானவர்கள் மனைவியை கவர்வதில்.
கவர்ந்து விட்டான் வேலு, மனைவி சம்பூர்ணாவை. மனதளவில் வென்றவர்கள் உடலளவில் வீழ்வது தான் தாம்பத்தியம், இல்லறம். வீழ்வதற்கு துணிந்து விட்டான் வேலு. மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்தல் தான் என்ன? பார்ப்போமே வாழ்வின் மறு பக்கத்தை. தன்னோடு தன் மனைவியும் வெற்றி பெறுவாளே!
தாம்பத்தியம் சுகம் தான்! நிச்சயம் சுகம் தான்! உணர்ந்து, உணர்த்தி, ஆழ்ந்து வாழ்வை அனுபவிக்கும் மிச்சம். அதை ஒருவராக தன் தேவையை மட்டும் முன் நிறுத்தி நடத்தி கொள்ள வேலுக்கு துளி விருப்பமும் கிடையாது. தன் துணையின் வேதனையில், தனக்கென்ன இன்பம் கிட்டும். கை கோர்த்த இருவரும், கை பிடித்தே கரை சேர வேண்டும்.
தான் நெருங்கினால் மனைவி ஒன்றும் சொல்ல போவதில்லை தான். ஆனால், தன் உணர்வுகளை மறைத்து, உடலை மரக்கட்டையாக்கி, வெறும் சதை பிண்டமாக மாறி நிற்கும் மனைவியா வேண்டும். தன் உணர்ச்சிகளை கொட்டவா இடம் தேடினான் கணவன். பகிர்ந்துணர்வு இல்லாத இல்லறம் எவ்வாறு முற்று பெறும்.
முதலில் வேலு தன்னை மனைவியிடம் நிலைப்படுத்தி, மெல்ல மெல்ல உணரச் செய்தான். தன் தொடுகையை, தன் வாசத்தை, கள்ள பார்வையை, உடல் வெம்மையை என்று மெது மெதுவாக அடியெடுத்து மனம் நுழைந்தான். வாய் வெந்து போகும் அளவிற்கு சுடு கண்ட பூனைகள் தான் இருவரும். வேலு துணிந்து நிற்க, பயந்து ஒதுங்கி நிற்கும் பூர்ணாவை தான் அமைதியாக உள் இழுத்தான்.
பெரியாத்தாவுக்கு பரம சந்தோஷம் மகனின் மாற்றத்தில். வாழ்ந்து அனுபவித்தவர் எளிதாக கண்டு கொண்டார். இதை தானே அவர் எண்ணியதும். எந்த வயதிலும் துணை இழப்பது வேதனையே! விதியாக அமைந்து விட்டால் சொல்வதற்கில்லை. ஆனால், நன்றாக வாழ வேண்டிய இருவரும், நல் வாழ்க்கையை எதிர்பார்த்த இருவரும் தோத்து போய் நின்றால். எவ்வளவோ பேருக்கு அமையாமல் போக, பெரியவராக தம் மக்களுக்கு அமைத்து கொடுத்தார். அவர் காலத்தில் விழிப்புணர்வு இல்லையே! தனிமையின் கொடுமை அறிந்தவர், முன் நின்று சேர்த்து வைத்து விட்டார். காலம் கை கொடுக்க, வாழ்வு துணை செய்தது.
அவசரப்படாமல் தங்களின் அடுத்த கட்டத்திற்கு மனைவியை நகர்த்தினான். எங்கு? அது ஒரு மகப்பேறு மருத்துவமனை. புரிந்தும், புரியாமலும் பார்த்த மனைவியிடம் தெளிவாக சொன்னான். தங்களுக்கு அடுத்த குழந்தை வேண்டும் என்று.
“வெக்கத்தை கெடுத்து புட்ட போ! ஊர் சிரிக்க போது! வெறும் மருந்து மாத்திரை திண்டா மட்டும் தன்னாலே புள்ளை வந்துறுமோ!” என்ற பூர்ணா எகத்தாளமக கேட்க.
“பதினொரு வயசுல ஒத்த புள்ளை வச்சுருக்கேன். எனக்கு தெரியாதா, மருந்து மாத்திரைக்கு மட்டும் புள்ளை வராது. மத்தது” என்று சின்ன சிரிப்போடு வேலு இழுக்க.
“ நாசமா போச்சு” என்று முனங்கி கொண்டே முகம் திருப்பி நின்றாள் பூர்ணா.
சிரிப்பு மேலும் விரிய, மனைவி கை பிடித்து உள்ளே அழைத்து சென்றான் வேலு.
“அது என்ன சிரிப்பு? மல்லி பூ பூத்த மாதிரி. சட்டி சோறு பைய! எப்பவும் போல சிரிக்க வேண்டி தானே! கண்ணை சுருக்கி, உதட்டை மடக்கி! ஒரு சிரிப்பு. ஆள் மயக்கிபையன்” என்று வைதாள? கொஞ்சினாளா! அவளுக்கே தெரியவில்லை.
தங்களின் முறை வரும் வரை இருவரும் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர். பூர்ணா கண்கள் அங்கிருக்கும் மற்ற கர்ப்பிணி பெண்களையே ஊடுருவ தொடங்கியது. பெரிய வயிரோடு சிலரும், சற்று மேடிட்ட வயிரோடு சிலர் என்றால், ஒரு சிலரிடம் உடலில் மாறுதல் தெரியவில்லை. ஆனால், முகத்தில் ஒரு பூரிப்பு. தற்போது தான் தெரிந்திருக்கும் போல. கணவனின் கை பிடித்து பல கதைகள் பேசி கொண்டிருந்தார்கள். என்னாவாக இருக்கும்? நிச்சயம் பிறக்கும் குழந்தை பற்றிய கனவாக தான் இருக்கும். தன் போல் மனதில் ஒரு ஏக்கம் பூர்ணாக்கு. கடவுள் தன்னை ஏன்? சபித்தார் என்று ஒரு ஆதங்கம். பொறாமை பட கூடாது, கண்ணு பட கூடாது என்று மனதிற்கு அறிவுறுத்தினாலும். கைகள் தன் போல் வயிற்றை தடவியது.
அதுவும், கால் இழுத்து, ஒரு பக்கம் சாய்ந்து, அசைந்து வரும் கர்ப்பிணி பெண்களை காணும் போது, பித்த வயிறு துடித்தது. வேலுவும் மனைவி முகத்தை அவதானித்த படி தான் இருந்தான். அவள் மனதில் இருக்கும் வலி, வேதனை அறிந்தவன் என்பதால் தானே இந்த முயற்சி. இதன் எதிர் பதம் எப்படி என்றாலும் இருக்கும். கடவுள் தங்கள் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டார். அதையே வேலுவும் நம்பி காத்திருந்தான்.
பூர்ணாவை பரிசோதித்த மருத்துவர், “நீர்க்கட்டி தான் என்றும், மாத்திரையிலே கரைக்க மருந்தும் கொடுத்து, நிச்சயமாக குழந்தை உண்டாகும் என்று நம்பிக்கையும் கொடுக்க”.
மகிழ்ந்து போனான் வேலு. பெரிதாக எதுவுமில்லையே, தீர்க்க முடியாத குறையாக இருந்தால் காலத்திற்கும் வலி அல்லவா! பூர்ணாவிற்கு தான் மனம் சுருங்கி போனது. ஆக! குறை தன்னிடம் தான் இருந்துள்ளது. சரி செய்து விட முடியும் என்றாலும் அங்கிருந்த நாட்களில் ஒரு முறை கூட நாள் தள்ளி போய் அல்லது குழந்தை தங்கி இல்லாமல் என்று எதுவும் கிடையாதே. எத்தனையோ கோவில், பரிகாரம், விரதம், பூஜை செய்தும் தங்கவில்லை. நடுத்தர வயதை கடக்கும் நிலையில் இருக்கும் போதா குழந்தை உண்டாக போது, நம்பிக்கையில்லை. ஏதேதோ சமாதானம் சொல்லி வெளியே வந்த போதும், தன்னால் ஒரு குழந்தையை சுமக்க இயலவில்லையே என்ற வலி மட்டும் ஆறாமல் நெஞ்சில் நின்றது.
மாத்திரை வாங்குவதற்காக வேலு சென்றிருக்க, அங்கிருந்த சேரில் அமர்ந்தாள் பெண். ஏதேதோ யோசனை, ஏக்கம், பரிதவிப்பு என்று நிலையில்லா நிலை. மீண்டும் ஒரு துவக்கம், அதில் மீண்டுமொரு ஏமாற்றத்தை ஏற்க முடியாது.
மருந்தோடு வந்த கணவனிடம், “இந்த மருந்து எல்லாம் வேண்டாம் வேலு. மாசம் மாசம் வலி தான் மிஞ்சும். நானும் நிறைய பார்த்துட்டேன், ஒத்த பிள்ளை போதும். இன்னொரு பிள்ளைக்கு எதுக்கு இந்த பாடு. ஒரு தடவை பைத்தியம் புடிச்சா மாதிரி அலஞ்சாச்சு திரும்ப ஆரம்பிக்க வேண்டாம். வாரிசுன்னு ஒன்னு நிக்கே போதும்லே! சம்மந்தம் பண்ற வயசுல புள்ளை பெத்து எதுக்கு? வீணா மன கசப்பு தான் மிஞ்சும் வேலு” என்று பூர்ணா தன் வேதனையை மறைத்து பேச.
இதையெல்லாம் கவனித்து படி அருகிலிருந்த பெண்மணி ஒருவர், “ ஏம்மா! வைத்தியம் பார்க்க புருசன் தயாரா நிக்கும் போது, நீ என்னம்மா வேண்டாம்ன்னு சொல்ற! எம்புட்டு பொம்பளைக புருசன் சப்போட் இல்லாம தனியா வாராங்க தெரியுமா! உம் புருசன் அனுசரணையா நிக்கும் போது உனக்கு என்ன தயக்கம். ரெண்டாவது புள்ளையா?” என்று கேட்க.
“ஆமாங்க! முதல்ல ஒரு பொண்ணு இருக்கு. பதினொரு வயசு ஆச்சு, இப்ப நாங்க வந்திருக்குறது ரெண்டாவது புள்ளைக்கு தான்” என்று பூர்ணா பதில் சொல்ல.
“ரெண்டாவது புள்ளைன்னு தான் மெத்தனமாக இருக்கீங்க. ஒத்த புள்ளை போதும்ன்னு நினைக்காதீங்க. நம்ம காலம் எம்புட்டுன்னு யாருக்கு தெரியும், நமக்கு அப்புறம் கூட பிறந்தவங்க தான் துணையா நிப்பாங்க. ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா, உறுதுணையாக, தாய் வீட்டு சொந்தமா எப்பவும் வர போறது கூட பொறந்த பொறப்பு தான். எம் மருமவளும் உன்னைய மாதிரிதான், நான் தான் சத்தம் போட்டு, இப்ப ரெண்டாவது பிள்ளைக்கு பாக்குறோம். வெசனபாடாமன பொண்ணு ஒன்னு, ஆண் ஒன்னா கைலா வச்சுக்கோ!” என்று பெரியவராக அறிவுரை சொல்ல.
சரி என்று கேட்டு கொண்டாலும், அமைதியாகவே வீடு வந்தாள் பூர்ணா. ஆனால், வேலு உறுதியாக தான் இருந்தான், கட்டாயம் அடுத்த குழந்தை வேண்டும் என்று. எதிர்பார்ப்போடு பார்த்த ஆத்தாவிடமும் நடந்தததை சொல்ல. அவருக்கும் நிம்மதி தான். முன்பு பூர்ணாக்கு திருமணமாகி ஆறு வருடம் சேர்ந்து வாழ்ந்தும் பிள்ளைப்பேறு இல்லாமல் போக, வெளியில் சொல்ல விட்டாலும் மனதில் குறை பெண்ணிற்கு தான் என்று எண்ணினார். தற்போது அப்படியல்ல சரி செய்ய கூடியது தான் என்று அறியவும் மனம் திருப்தி கொண்டது. தனி மரம் தோப்பாகாதே, தங்கள் குலம் ஒன்றாக நிற்காமல் தழையவே விரும்பினார் பெரியாத்தா.
பூர்ணாவும் வெளியே நம்பிக்கையின்றி பேசினாலும், மனதில் ஒரு சிறு எதிர்பார்ப்பு இருக்க தான் செய்தது. பிள்ளை சுமக்கும் போது வரும் பாடை அறிய ஆவல் வந்தது. வேலு – கணவன் – தாம்பத்தியம் என்ற நிலைப்பாட்டை கடந்து, மசக்கை சுகம் கேட்டது பெண் மனம். அவள் தவறாமல் மாத்திரை எடுத்து கொள்வதும், சத்தான ஆகாரத்தை சேர்த்து கொள்வதையும் பார்த்த பெறியாத்தா எப்பவும் போல, “நான் சொல்லால உம் பொண்டாட்டி சரியான புள்ளை ஆசை புடிச்சாவ வேலு, நீதான் மருகி நிக்குறவன்” என்றதொடு மட்டுமல்லாமல், அப்போதே மகளிடம் பேசி தானும், பேத்தியும் ஒரு வாரம் போல் ஊருக்கு வருவதாக அறிவித்தார்.
“மவ இருந்தா மத்தா யாரும் உம் பொண்டாட்டி கண்ணுக்கு தெரியாது. நான் எம் பேத்தியை கூட்டிக்கு உம் அக்கா வீட்டுக்கு போய் வாரேன்” என்று நாசுக்காக சொல்லி வெளியேறினார் பெரியாத்தா.
அப்பத்தாவுடன் செல்கிறேன் என்று அடம்பிடித்த மகளை தனியே அனுப்ப மனமில்லை தாய்க்கு. முன்பே சென்று பழக்கம் என்பதால் அத்தை வீட்டு சூழல், அவளை உற்சாகமாகவே கிளம்ப செய்தது. புது தொழில், தோட்டம் என்று வேலை நெட்டி முறிக்க, நகர கூட முடியாது பூர்ணா – வேலு தம்பதிகளால்.ஆனால், தான் அல்லாது வயது பிள்ளையை தனியே அனுப்ப பயம் பூர்ணாக்கு.
“ஒத்தையில பத்து வருசம் வளத்தவ நானு. எம்மா கூட அனுப்ப உமக்கு என்ன யோசனை? எம் பேத்திக்கு நான் யாராம்?” சுள்ளென்று மாமியார் கேட்ட பின் வாய் திறக்கவில்லை பூர்ணா.
மகள் தன்னை விட்டு தள்ளி போய் விடுவாளோ என்ற வலியில் பூர்ணா நிக்க. வேலு புது மாப்பிள்ளை தோரணையோடு சுற்றி வர, சந்தேகம் கிளம்பியது. அதற்கேற்ப மல்லிகை பூவும், அல்வாவும் சற்று அதிகப்படியாக காணப்பட சந்தேகம் உறுதியானது. வாயில் ஒரு புது பாட்டோடு, புது சட்டை அணிந்து அதற்கு தோதாக கரை வைத்த வேட்டி கட்டி தன்னையே சுற்றி வரும் கணவனை கண்டு ஏகத்திற்கு கடுப்பு கிளம்பியது.
முகத்தை தூக்கி கொண்டே படுக்கையறை செல்ல, பூ பழத்தோடு தயாரானான் வேலு. நடந்த ஏற்பாடுகளில் சிறிதும் சலனமில்லாமல் பூர்ணா சென்று அமர, ஏமாற்றம் கவ்விய முகத்தோடு மனைவியை பார்த்தான் கணவன்.
“ஒன்னுமே தோணலையா சம்மு” வருத்தமான குரல் தான்.
“மூனு வயசுல இருந்து பாக்குற மூஞ்சி தான், நேத்து தான் கல்யாணமாகி வளையல் போட்டு வந்தேனாக்கும், வெக்கம் கொட்டி கிடக்க” கடுப்பான பதில் வர,
பின் வாங்கினால் காலத்திற்கும் பிரம்மச்சாரி தான் என்று உணர்ந்த வேலு, “ ஏட்டி! விளக்கு அணைக்கவா?” ஆர்வமான குரல் வெளிவர.
“வெளக்கமாத்த கையில எடுக்கவா” சொல்றதை செய்வேன் என்னும் தெளிவான குரல்.
மொத்தமாக சோர்ந்து போனான் வேலு, “கடைசி வரைக்கும் உங்கூட போராட்டம் தானா! எம் ஆசை உமக்கு விளையாட்டா?” என்றான் விளையாட்டை கை விட்ட பாணியில்.
“எமக்கு கஷ்டம் வேலு. எம் வலி உமக்கு புரியலையா? நான் தாங்க மாட்டேன்” தலை குனிந்தவாறு தயக்கமாக பதில் வர,
“இனி! வெட்கத்தை உதுத்தாத்தான் கதையே ஆச்சு!” என்று அனைப்பை இறுக.
தவித்து போனாள் பெண். “ தன் வேலுவா இது! ஐயோ! விரட்டவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் மனம் கூப்பாடு போடுதே!”
ம்ம்கூம்! பூர்ணாவின் எதிர்ப்பு வேலுவிடம் செல்ல வில்லை. பலமான எதிர்ப்பாக இல்லாமல் போனதால் எளிதாக கையாண்டான் என்று தான் சொல்ல வேண்டும். அவளின் தயக்கம், பயம், போட்ட கட்டுப்பாட்டை தன்னை போல் பேச்சு கொடுத்தே உடைத்து, தன்னோடு இணைத்து, தன் மனைவி என்று உணர்த்தி தான் விட்டான்.
வேலுக்கு தான் ஆர்ப்பரிப்பு, கொண்டாட்டம் எல்லாம். பூர்ணா அமைதியாக உள் வாங்கினால் என்று தான் சொல்ல வேண்டும். ஆழ்கடலின் அமைதியா உணர்வுகளை பெண் உள்வாங்க, ஆண் தான் அலை கடலாக பொங்கியது.
காந்தம் ஒன்றை ஒன்று ஈர்க்குமாம். அது போல தான், ஆண் – பெண் ஈர்ப்பும். கணவன் – மனைவி என்ற பிணைப்பு காந்த விசை இல்லாமலே ஒன்றை ஒன்று பிணைக்கும்.