இப்பொழுதெல்லாம் வேலுவை கையிலே பிடிக்க முடியவில்லை, அவ்வளவு உற்சாகம், சுறுசுறுப்பு. வாடாத புன்னகை முகத்தில் நிரந்தரமாகி விட்டது. சுற்றி இருக்கும் யாரும் கண்ணுக்கு தெரியவில்லை அல்லது யாரையும் கவனிக்க வில்லை. மனம் முழுக்க மனைவி தான்.
இருவருக்கு, கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருட பழக்கம். அப்போது தெரியாத நுணுக்கம் கூட இந்த ஒரு வாரத்தில் கண்டு கொண்டான். நல்ல தோழி, சிறந்த பெண், உழைப்பாளி, ரோசகாரி என்று வேலுவின் கணிப்பை தாண்டி, உண்மையில் அவள் ஒரு ஜீவநதி என்று உணர்ந்தான் வேலு.
வாழ்வின் அடிப்படை நன்மைகள் என்று அனைவருக்கும் கிடைக்கும் எதுவும் அவளுக்கு கிடைக்க வில்லை. “ அப்பா இல்லை, பணம் இல்லை, படிப்பு இல்லை, நல்ல உணவு இல்லை, ஆதரிக்க சொந்தமும் இல்லை, உடன் இருக்க கூட பொறந்த பொறப்பு இல்லை, தாயும் நோயாளி, இள வயதிலேயே கூலி வேலை, திருமணமும் சரியாக அமையவில்லை, சந்தோசத்தை அள்ளி கொடுக்கும் பிள்ளைப்பேறும் இல்லை, இள வயது விதவை” என்று வாழ்வின் இன்னல்களை மட்டுமே கடந்து வந்தவள். எல்லோர் வாழ்விலும் அடிப்படையில் நடக்கும் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என்று எதுவும் இவளுக்கு அசாத்தியம் தான்.
பூர்ணா கலகப்பான பெண்ணும் அல்ல, தோழி வட்டம் கூட கிடையாது, அழுது கரைந்தோ அல்லது கோபப்பட்டோ தன் உணர்வுகளை கொட்ட மாட்டாள், ரொம்ப அழுத்தமான பெண். தன் வாழ்வின் நிறைந்த துன்பங்களை தாண்டி மீண்டு வர எவ்வளவு வலிமை வேண்டும். எளிதாக உடைந்து விடாமல், உருகியும் போகாமல் நிலையாக தன்னை தான் தாங்கி நிற்க எவ்வளவு உறுதி வேண்டும். “படிப்பறிவு இல்லாதவளுக்கு எந்த புத்தகம் கற்று கொடுத்தது, சொந்தம் அறியாதவளுக்கு யார் துணை நின்றது, வறுமையிலே வாழ்ந்தவளுக்கு யார் வழிகாட்டியது”
“தனக்கு தான் மட்டுமே துணை” என்று அறியும் போது வரும் துணிச்சல். “தனக்கான சுயமரியாதையை தான் போராடித்தான் பெற வேண்டும்” எனும் போது வரும் தைரியம், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தன்னை சாய்காது மீடேரும் வைராக்கியம் எல்லாம் அனுபவ பாடம் தானே. இல்லாதவர்களுக்கு சமூகம் வலிக்க கற்று கொடுக்கும் போது, அதை ஏற்று புது வசந்தம் நோக்கி போவது யார்? பெண்கள் தான் எத்தனை திடமானவர்கள். வியந்து போனான் வேலு. தன் மனைவியின் பரிமாணத்தில் ரசிகனாகவே நின்று விட்டான்.
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதத்தில் தன்னை ஈர்க்கும், கவரும், கட்டி போடும் மனைவிக்கு தீவிர ரசிகன் தான் வேலு. எந்தளவிற்கு ரசிகன் என்றால், குறுகிய காலத்திலேயே பொண்டாட்டி தாசன் என்று பெயர் வங்குமளவுக்கு.
கொஞ்சமும் அலட்டி கொள்ள மாட்டான். ஆமாம்! அப்படித்தான்! மனைவி சொல்லே மந்திரம், என்னா அதுக்கு? பத்து வருசம் ஒத்தையில கிடந்தேன். இன்னைக்கு இவ தான் என்னை தாங்கி துணை நிக்குறா! அவள நான் தாங்குறேன். நாலு பெரியவங்க சொல்ல ஏன் நான் கேட்கணும், படுத்துகிட்ட துடைச்சு, கழுவி பாக்க பொறவா! அவ சொல்ல கேட்ட என்ன தப்பு என்று அசால்டாக சொல்லி செல்வான்.
மணிமாறன் கூட கேலி செய்வான், “ பங்கு! இளந்தாரி பயலுக கூட உங்கிட்ட தோத்தாங்க போ! மல்லு வேட்டி என்ன! புல்லட்டு என்ன! கார்கலரா சட்டை போட்டு சினிமா பாட்டா தானே உம் வாயில வருது! புது மாப்பி்ளை பவுசாக்கும்”
“எனக்கு அம்புட்டு ஒன்னும் வயசாகல மாற! உமக்கு மூணு புள்ளை, நான் ஒத்த பிள்ளை தான வச்சுருக்கேன்! இன்னும் ரெண்டு பிள்ளைக்கு காலம் கெடக்கே! அப்புறம் என்ன?” எகத்தாளமாகவே பதில் வரும்.
ஆனால், பூர்ணாவிடம் எந்த மாற்றமும் இல்லை. எப்பவும் போல தான் வீடு, தோட்டம் என்று வேலை நடந்தது. வெளியில் எதையும் காட்டி கொள்ளும் சுபாவம் இல்லாதவள் என்பதால் அமைதியாகவே இருந்தாள்.
மனைவியின் அமைதி எல்லாம் வேலுக்கு பொருட் இல்லை. அவனுக்கு தெரியும், தன்னோடு பொருந்தி கொண்டாள் என்று. வேலுவின் ஆர்பாட்டமெல்லாம் பூர்ணாக்கு சிறு பிள்ளை தனமாக தான் தெரிந்தது. கஷ்டத்தையும் மனதோடு வைத்து புழுங்குபவள், சந்தோசத்தையும் மனதோடே கொண்டாடி கொண்டாள். வேலுவை போல் அதிகப்படியான கவனிப்பும், அக்கறையும் வரவில்லை. ஏன்? தேவையில்லை என்று தான் நினைத்தாள். அன்பும், பாசமும் எப்போதும் இருப்பது, அதை எல்லோர் முன்பும் காட்ட மனம் விரும்பவில்லை.
வேலு மீதான பிணைப்பு வெளிப்படும் இடம் என்பது இரவு மட்டும் தான். அது மட்டுமே அவர்கள் இருவருக்கும் என்று அவள் ஒதுக்கும் நேரம். அதில் அவள் காட்டும் நெகிழ்வும், அவனின் தோதுக்கு உடன் பட்டு ஒன்றுவதே அவளின் காதல் வெளிப்பாடு. மற்ற படி, பகலில் முசுட்டு சம்மு தான்.
கணவனுக்கு அதில் சுணக்கம் தான். தன்னோடு தனியே எங்கும் வருவதில்லை. சினிமா, விசேஷம், கோவில், சும்மா வண்டியில் தனியே அழைத்து செல்வது என்று எதற்கும் உடன் பட மாட்டாள். வேலுவின் ஆசை, எதிர்பார்ப்பு தெரிந்தாலும் பூர்த்தி செய்ய முன் வர மாட்டாள்.
வயது பெண் இருக்கும் வீடு, தங்களின் சத்தமான சிரிப்பு கூட மகளை திரும்பி பார்க்க வைக்குமோ என்று அஞ்சியே பகலில் பார்வை கூட திருப்ப மாட்டாள். எதையும் ஆராயும் வயதில் நிற்கும் மகளுக்கு முன் காட்சி பொருள் ஆகிட கூடாதே!. அத்தோடு, தன்னையே சுற்றி வரும் மகள் தனிமையை உணர கூடாது என்பதும் தான்.
இதுவரை பூர்ணாவின் செயல்களும் அப்படித்தானே இருந்தது. மகள் வந்துவிட்டால் அவளின் தேவையை கவனித்து, அவள் பின்னே சுற்றி அவளோடு தான் பொழுது கழியும். கணவனுக்காக மகளை தள்ளி வைக்கும் செயலை செய்ய ஒரு நாளும் மனம் ஓப்பாது.
இருவருக்கும் வேலை அதிகம், பொழுது சாய தான் ஓய்வு கிட்டும். ஒரு நாள் அப்படித்தான் வேலு புது படம் ஒன்றிற்கு மனைவியோடு செல்ல திட்டம் போட, பூர்ணாக்கு தான் விருப்பமில்லை. மகளை தனியே விட்டு செல்ல, கணவனும் விடவில்லை.
“ஏட்டி! எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குலே! ராத்திரி தேவைக்கு மட்டுமா புருசன்! அதை தாண்டி நமக்குள்ள ஒன்னுமே இல்லையா! வெயில் தாள உங்கூட வண்டியில சுத்தனும், உம் மடியில படுத்து கதை பேசணும், கை கோர்த்து நடக்கணும்! எம்புட்ட கனவு இருக்கு தெரியுமா! ராத்திரி தவர பக்கத்தில பேச கூட வரமாட்ற! இன்னைக்கு சினிமாக்கு போறோம், வெளிய ஹோட்டல் தான் சாப்டுறோம். உம் பொழுது எங்கூட தான். மாற்றமில்லை!” என்று வேலு முடித்து விட.
கொஞ்சம் தடுமாற்றம் தான் பூர்ணாக்கு. தயக்கமும், சங்கடமும், சிறு குற்ற உணர்வுமாக மகளை பார்க்க.
சிரித்த முகத்துடன் தான் வழியனுப்பி வைத்தாள் மகள். வேலு கடை வேலையாக வெளியே செல்கிறோம் என்று சொல்லியதால், மகள் சாதரணமாக நின்றாள்.
முகம் செத்து போக நின்றது பூர்ணா தான். பல நாள் திட்டம் போட்டு நேரம் ஒதுக்கி வேலு கூட்டி செல்ல, கொஞ்சமும் மலர்ச்சி இல்லை மனைவி முகத்தில். சினிமா பார்க்கும் போதும், வகையான உணவுகளை விரும்புவாள் என்று வேலு வாங்கி கொடுக்கும் போதும். கணவனுக்காக கூட அவளால் சிரிக்க முடியவில்லை.
ஏதோ ஒரு உணர்வு அவளை ஆட்டி படைத்தது. மகளை விட்டு தாங்கள் மட்டும் சுற்றுவது, வகையாக உண்பது என்று எதுவும் பிடிக்க வில்லை. தான் கறி, மீன் என்று உண்ண மகள் அங்கு என்ன? சாப்பிடுவாள். வாங்கி கொண்டு போனாலும், உடன் வந்தது போல் ஆகதே. மூவரும் சேர்ந்தது தானே குடும்பம்! மகளை மட்டும் விட்டு தாங்கள் மட்டும் தான் என்றால் அது சுயநலம் தானே! கண்களில் நீர் பெருகியது.
ஒரு கட்டத்திற்கு மேல் வேலுக்கும் பொறுமை போனது, எத்தனை சமாதானம், சமாளிப்பு. முகத்தை தூக்கி கொண்டு எது பேசினாலும் பதிலே பேசாமல், உதட்டை பிதுக்கி அழுகும் நிலையில் நிற்பவளை என்ன செய்ய!
இந்த முறை நிஜமான கோபம் வேலுக்கு. வயது பிள்ளைகள் இருக்கும் வீட்டில் எல்லாம், தம்பதிகள் தங்களுக்கென்று நேரம் ஒதுக்குவதே இல்லையா? அவள் என்ன ரொம்ப அலட்டி கொள்கிறாள். தன் ஆத்தாவிடம் தானே விட்டு சென்றோம். பொய் சொல்லி தான் கூட்டி வந்தேன். வேற என்ன சொல்ல முடியும்! உன் அம்மாவோடு ஜாலியா ஊர் சுற்ற போறேன் என்றா சொல்ல முடியும்! கோபம் கணன்றது வேலுக்கு.
வீடு வந்த இருவர் முகத்திலும் சுரத்தில்லை என்பதை கண்டு புரிந்து போனது பெரியாத்தாவிற்கு. போகும் போதே சுணங்கி கொண்டு தானே போனாள்.
அன்றிரவு பவித்ரா தனியே தன் அறையிலே உறங்க போவதாக சொல்லி செல்ல. தலையில் கை வைத்து கொண்டான் வேலு. இன்னைக்கு என்னல்லாம் கூத்து பண்ண போறளோ!
அவன் நினைத்தது போலவே! இவ்வளவு நாள் தன்னோடு ஒட்டி கொண்டு திரிந்த மகள் தனியே தூங்குவதாக சொல்ல தாங்க முடியவில்லை. பொத்து கொண்டு அழுகை வந்தது. பிள்ளை அவளை பலவீன படுத்தியது.
“என்னாலே அகராதி! தனி அறை கேக்குற வயசா உனக்கு. கம்முன்னு உள்ளாரா வந்து அம்மாகூட தூங்க!” என்று ஒரு அதட்டல் போட.
அசௌகாரியமாக பார்த்தாள் மகள், “ அம்மா! நான் பீரியட் . எனக்கு கம்பார்ட்டா இல்லை. அப்பாக்கும், உனக்கும் நடுவுல உறங்க. நான் ஃப்ரீயா தூங்கனும், நைட் எத்தனை தடவை முழிச்சு, முழிச்சு பாக்குறது. உங்க ரெண்டு பேரை தாண்டி, அடிக்கடி பாத்ரும் போக முடியலை. சின்னதா அசைஞ்ச கூட அப்பா முழிச்சு என்னனு கேக்குறாங்க!” என்று மகள் குறைபட்டு கொள்ள.
பூர்ணாக்கு மகளின் பேச்சை ஒத்து கொள்ள மனம் வரவில்லை. இன்னும் தனியாக உறங்கும் வயது மகளுக்கு வரவில்லை என்பது தான் அவள் எண்ணம். பன்னிரெண்டு துவக்கம் சின்ன பெண் என்பதால் உடைகளில் கவனமில்லை. பெண் வளருகிறாள் போல, எது ஒன்றுக்கும் தந்தையை , தாயை நாடுபவள். தற்போது சுயமாக யோசித்து சொல்கிறாள். இந்த பெண் பிள்ளைகளுக்கு மட்டும் எதுவும் சொல்லி தர தேவையில்லை போல. அந்தந்த வயதில் அதன் பக்குவமும், முதிர்ச்சியும் தன் போல் தோன்றுகிறது.
மாத விலக்கு என்பதால் தந்தையோடு உறங்க விரும்பவில்லை. சரிதான்! பள்ளியில் இதெல்லாம் பேசுவார்களா என்ன? குழந்தைக்கான சிந்தனை மாறுகிறதோ! கொஞ்சம் பயம் தான். அவளின் முதிர்ச்சிக்கு சந்தோச படுவதா இல்லை குழந்தை தன்மை மாறுவதற்கு வருந்துவதா? தெரியவில்லை.
“சரிலே! நான் உங்கூட வந்து உறங்குதேன்!” என்று பூர்ணா கூற, தடுத்தார் பெரியாத்தா.
“ நான் ஒத்தையில தான கெடக்கேன். நான் உறங்குதென், என் பேத்திக்கு துணையா! பேச்சுக்கு எனக்கொரு ஆளு, தனியா இல்லாம நீங்களும் நிம்மதியாகுங்க!” என்று மாமியார் முடிக்க.
எளிதாக ஒத்து கொள்ள முடியவில்லை பூர்ணாக்கு. அவள் ஏதோ சொல்ல வர,
“நான் உம் மாமியார் சம்மு! எம் வார்த்தையை மீறாத! உம் பிடியிலே வைக்கிறது மட்டும் பிள்ளை பாசம் கிடையாது. பொட்ட பிள்ளை, இன்னொரு வீட்டுக்கு போறவ! உம் கைக்குள்ளே வைக்க நினைக்காத. உமக்கு முந்தி பத்து வருசம் வளத்தவ, எங்கிட்ட விடுறதுக்கு யோசனையா?” என்று ஆத்தா அழுத்தி கேட்க.
அமைதியாகி போனாள் பூர்ணா. மகளின் முகத்தை பார்க்க, எப்பவும் போல சிரித்த முகத்துடன் தான் இருந்தாள் பிள்ளை. ஏதோ ஒரு ஏமாற்றம் உள்ளுக்குள்!.
அடுத்தடுத்து எல்லோரும் உறங்க செல்ல. தங்கள் அறைக்கு வந்த பூர்ணாவை பார்த்த வேலு, “ உன்னைய மாதிரி தான் பவி பெரிய பொண்ணானா போது, எம் புள்ளை என்னை விட்டு ஒதுங்குமோன்னு பயந்தேன். அப்புறம் புரிஞ்சு போச்சு, நம்ம காலம் வேற, இப்ப காலம் வேறன்னு. நம்ம கண்ணோட்டத்தில பிள்ளைகளுக்கு உலகத்தை காட்ட முடியாது…, வழிகாட்ட தான் முடியும். அவங்களே எல்லாத்தையும் பார்த்து, தெரியத்தான் ஆசை படுறாங்க. அதிகமான அன்பு திகட்டி போய்டும் சம்மு. உம் பிள்ளை பாசம் மூச்சு முட்ட வைக்க கூடாது” என்று வேலு எடுத்து சொல்ல.
கரகரவென கண்களில் நீர் இறங்கியது பூர்ணாக்கு, “நான் தான் சரியில்லையா வேலு! புள்ளையை விட்டு நல்லது சாப்ட மனசு வரல. வேர்த்தாலும் என்னைய ஒட்டியே தூங்குறவ, தனியா படுக்குறேன்னு சொன்னதும் கஷ்டமா போச்சு! அவ தான் உலகம்ன்னு இருக்கேன்” என்ற விம்மி கொண்டே பேச,
“அந்தந்த வயசுல பக்குவம் வர தான் செய்யும் சம்மு. சுதந்தரதோடு கூடிய கட்டுப்பாடு தான் சரி. எல்லாத்துக்கும் பவிய இழுத்து பிடிக்காத!” என்ற வேலு எடுத்து சொன்னாலும். அதை கவனிக்காதது போல் அமைதியாக படுத்து கொண்டாள்.
மறுநாள் காலையிலே மகள் குளித்து நிக்க, ஆச்சரியமாக பார்த்தவள். அடுத்த நொடியே மகளை தள்ளி கொண்டு தனியே விசாரணை வைக்க,
“ அப்பத்தா தான்மா வீட்டுக்கு விலக்கான அப்பா கூட தூங்க கூடாது, குளிக்காமல் அடுப்படி போக கூடாது, எந்துணியை நானே துவைக்கணும் , சின்ன சின்ன சமையல் வேலை செய்யணும், வீட்டுல எல்லா பக்கமும் போக கூடாதுன்னு சொன்னாங்க” என்று மகள் புட்டு வைத்து விட,
முதல் முறை மாமியார் – மருமகள் சண்டை துவங்கியது. தாளவில்லை பூர்ணாக்கு, “சொந்த வீட்டிலே நடமாடும் உரிமை கூட இல்லையா! எம் பிள்ளை துணியை நான் துவைக்குறேன், எனக்கு எந்த சங்கடமும் கிடையாது. அவருக்கு பிடிக்கா விட்டால் ஒதுங்கி நிக்காலாமே! எங்களுக்கான பிணைப்பில் ஏன் தலையிட வேண்டும்”
பெரியாத்தா தெளிவாக சொல்லிவிட்டார், “ எனக்கு இது ஆவதுடி! எம் மகன் தினக்கி சாமி கும்டுறவன், இவ ஒன்னா முன்னா ஓலப்புரா. வயசுக்கு வந்தாச்சு இன்னமும் சின்ன புள்ளை இல்லை. அவ துணிய அவ துவச்சா என்ன? பொட்ட புள்ளை வீட்டு வேலை பழகின என்ன? நீ தான் முன்ன நின்னு சொல்லி கொடுக்கணும், காணாத கண்டது மாதிரி நீயும் ஆடுற!” என்று மாமியாரும் சாட.
வேலுவும் எடுத்து சொன்னான், “ ஏட்டி சம்மு! லேசான வீட்டு வேலைக்கு புள்ளை பழகட்டும்! இதுல தப்பென்ன இருக்கு”.
“நான் நிக்க எம் புள்ளை எதுக்கு வேலை செய்யணும். நான் பார்க்க விளக்கமாரும், அடி கரண்டியும் புடிச்சா தாங்க முடியல வேலு. தாயில்லா பிள்ளையா அது? நான் உசுரோட தானே இருக்கேன்”.. வாதத்தில் பின் வாங்காமல் பூர்ணா நிக்க.
“ம்ம் கூம்… காரியக்கார வீட்டுல தான் சூத்த கத்தரிக்காய் . ஊர் வியக்கானம் பேசுவா, பிள்ளைன்னு வந்துட்டா பித்து புடிச்சவ மாதிரி ஆடுவா! கூறு கெட்டவ!” என்று மாமியார் சாடினாலும் அவளுக்கு கொஞ்சமும் கவலை இல்லை.
பூர்ணாக்கு, மகளுக்கான வேலை அனைத்தையும் தானே செய்தால் தான் ஒரு திருப்தி. ஒவ்வொன்றையும் ஆசை ஆசையாக பார்த்து, பார்த்து செய்வாள். எத்தனையோ வருட ஏக்கம், கனவு, ஆசை. தன் பிள்ளை என்று மகளை பார்ப்பது தான் மன நிறைவு.
எல்லா விஷயத்திலும் நேர் மனதாக சிந்திப்பவள் பிள்ளை என்று வரும் போது ஏன் தான் தடுமாறி நிற்கிறாளோ! குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை ஆசை, ஏக்கம் இருக்கும் தான். அதற்காக, பிடிவாதமான வீம்பு பாசம் ஆகாது அல்லவா! என் பிள்ளை எனக்கு மட்டும் தான் என்பது தவறான கண்ணோட்டம் எப்படி புரிய வைக்க.
“ஏலே மகனே! அடுத்த பிள்ளைக்கு என்னனு பாருவே! கூருகெட்டவ அடுத்த ஒரு பிள்ளை வந்ததான் ஆச்சு. கிறுக்கு புடிச்சா மாதிரி புள்ளைன்னு திரியிற! நாளைக்கு உம் மவளுக்கு கல்யாணம் காட்சினா என்ன செய்வாளம்” என்று பரியாத்தா நொடித்து கொள்ள.
வேலு அருகே வந்த பூர்ணா, “ ஏலே வேலு! சின்னது தொட்டு பழக்கம் தான் . நீயி நல்லவன், சம்சாரி , மாமன் மகன் தானேன்னு துளி கூட உம் மேல ஆசை பட்டது இல்லை. ரெண்டு பேரும் நாட்டாத்துல நின்னப்ப கூட , தனித்தனியான நிக்கிறோம் ஒருத்தருக்கொருத்தார் துணைன்னு தான் நினைச்சேன், நம்ம கல்யாணம் நடந்தப்ப கூட வேலு பொண்டாட்டின்னு கழுத்த நெறைச்ச தாலி கொடியும், சம்சாரி வாழ்க்கையும், முதலாளி பவுசும் நினைக்கல உம் பிள்ளையா தான் நெனச்சேன் வேலு” என்று சொல்லும் போதே, குரல் கமர அழுகை வந்தது.
“ஏட்டி சம்மு விடுலே! பேச்சை விடு. நான் எதுவும் கேக்கல. உம் மக தான் பவித்ரா. நியி எப்படியும் புள்ளையா வள, நாங்க யாரும் தலையிட மாட்டோம்!” என்று பதறி போய் வேலு பேச.
இல்லை என்ற தலையாட்டால் தான் வந்தது. திருமணம் முடித்து மறுமாதமே பவித்ரா வந்து விட, பெரிதாக யோசனைகள் இல்லை.
“ஆனா எனக்கு இருந்துச்சு. ரொம்ப சந்தோசமா எதிர்பார்த்து ஒவ்வொரு மாசமும் ஏமாந்து, இனி நமக்கு குடுப்பணையே இல்லன்னு நினைக்கும் போது எம்புட்டு வலிக்கும் தெரியுமா! வெளிய தைரியமா நின்னாலும் உள்ளுக்குள்ள செத்து போனேன் வேலு. ஒன்னு, ரெண்டு இல்லை ஆறு வருசம் வாழ்ந்தும் பித்த வாந்தி கூட வரல. நான் பொண்ணு தான்னு என்னாலே உணர முடியாம போச்சு! ரொம்ப வலி வேலு. உம் புள்ளையா பார்த்து தான் மனசு ஆறுனேன்!” என்று வலியோடு பேசியளை, தவித்து போய் பார்த்தான் வேலு.
அப்படி என்ன பெருசா கேட்டான். கணவன் – மனைவியா தங்களுக்கான தனிப்பட்ட நேரம் தானே. மகள் மீது பாசம் வைப்பது தவறில்லை, கண்மூடி தனமான அன்பு வெறியாக மாறினால் ஆபத்து தானே. பூர்ணா காயத்தை கிளற வேண்டும் என்று அவன் நினைக்க வில்லையே.
ஆனால், பூர்ணா விடவில்லை, “ எனக்கு தத்துவம்லாம் பேச தெரியாது வேலு. நான் எதார்த்த வாதி. என் ஊர்ல நான் பார்த்த பழக்க வழக்கத்தை மாத்த தெரியாது. வீட்டுல வயசுக்கு வந்த புள்ளை இருக்கும் போது, புருசனோட ஜோடி போட்டு யாரு சுத்துவா!…. நாம, அப்படின்னா நீ, நான், புள்ளை தானே. பெத்த புள்ளைய தாண்டி நமக்குன்னு என்ன இருக்கு,அதுவும் முப்பத்தாறு வயசுல. நமக்கான காலம்லாம் முடிஞ்சு போச்சு வேலு, புள்ளைய சேவக்கி வைக்கணும், நகை எடுக்கணும், சொத்து சேர்க்கணும், படிக்க வைக்கணும், சம்மந்தம் பண்ணனும்” என்று மூச்சு வாங்க பேசியவள்.
“ மலடின்னு பேர் வாங்குன இடத்தில, இப்ப இவங்க பவித்ரா அம்மான்னு சொல்றாங்க பாரு. அவள நான் மடி தாங்களன்றதவே மறந்துட்டேன். உன்னைய எமக்கு புரியாம இல்லை வேலு. எனக்கு தான் மாற தெரியலை. கூறு கெட்ட சிறுக்கி நானு, வயசு புள்ளை வீட்டுல இருந்த புருசன் கிட்ட போறதே தப்புன்னு வளந்தவ வேற நான் எப்படி இருப்பேன்”
“படிக்காதவ, நாகரீகம் தெரியாது. புள்ளைய மட்டும் முன்னாடி வச்சு யோசிக்கிற சாதாரண தாய் தான் நான். பவித்ராவா கட்டி கொடுத்த பின்னாடி கொலுசு போட மாட்டேன், பேரன் பேத்தி வந்தா தலையை பின்னி போட மாட்டேன், தொங்குற தோடு கூட போட மாட்டேன். தாயும் மகளும் சரியாவ நிக்க. நான் பார்த்து பழகுணதும் இது தான். இம்புட்டு யோசிக்கிற நானு, எப்படி வேலு புள்ளைய தாண்டி வாரது”…. என்று வேலுவின் காதல் புரியாமல் பூர்ணா முடித்து விட்டாள்.
கிராமத்து நடுத்தர மக்கள், வீட்டின் பிள்ளைகளை வைத்து தான் எதிர்கால வாழ்க்கையே இருக்கும். தங்களுக்கான வாழ்வில் பெரும் பங்கு பிள்ளைக்கு தான் ஒடுக்குவர். அந்த சூழலில் வளர்ந்த பூர்ணாவும், கணவனான வேலுவின் மனதை அறிய விரும்பவில்லை. அறிந்தாலும், அது தங்களின் வயது, பிள்ளையின் வயதை கொண்டு தவறாகவே பட்டது.
வேலுவும் மனைவி மனநிலை புரிந்து கொண்டான். தங்கள் ஊரில் பெரும்பாலன மக்கள் அப்படித்தான். நடுத்தர வயதில் பிள்ளைகளே முதன்மை பெறுகின்றனர். பிள்ளைகளின் வாழ்க்கையே பெற்றவர்களின் கடமை, பொறுப்பாக நிற்கையில், தங்களுக்கென நேரம் ஒன்று கிடையாது. அதில் ஊரி நிற்கும் பூர்ணாவும் அப்படியே, இருந்தும் என்ன செய்ய வேலுக்கு பொறுப்பு மிக்க நடுத்தர வயதில் தானே காதல் வந்து தொலைத்தது.
தன்னையே நொந்து கொண்டான் வேலு. தனக்கான நேரம் ஒதுக்கு என்று சொன்னதற்கே அம்புட்டு பேச்சு! இதில் தான் காதல் என்று சொன்னால் அவ்வளவு தான் ஓட விட்டு அடிப்பாள்.
ஒரு பெரிய ஏமாற்ற பெரூச்சோடு மனைவி சொன்னது போலவே, மனைவி பிள்ளை என்ற கூட்டுக்குள் தன்னை சேர்த்து கொண்டான் நல்ல குடும்ப தலைவனாக. இருந்தும் மனதில் ஆசை இருக்க தான் செய்தது. தங்களது காதல் காலத்திற்கு!
தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்து கொண்டாலும் அடுத்தடுத்த மாதம் தோல்வி தான் பூர்ணாக்கு. அந்த தோல்வியை ஒருத்தருக்கொருத்தர் வெளிப்படுத்தி வேதனை படாமல், துணை நின்று சமாளிக்க கற்று கொண்டனர்.
முழுதாக எட்டு மாதம் காலத்திற்கு பின் தான், நான்கு நாட்கள் தள்ளி சென்றது பூர்ணாக்கு.