அந்த மருத்துவமனை வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, சிறிதும் சலனமில்லாமல் அமர்ந்திருந்தாள் பூர்ணா. கிட்டத்தட்ட பத்து நாள் தள்ளி போயிருக்கு. அவள் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வைத்து கொள்ள வில்லை. பல முறை ஏமாந்த வலி என்பதால், மனதை அமைதியாக வைத்து கொண்டாள், எதுவென்றாலும் ஏற்று கொள்ளும் பக்குவத்தோடு.
மனைவிக்கு நேர் மாறாக அமர்ந்திருந்தான் வேலு. ஒரு நிலையில் இல்லை அவன், பெரிய எதிர்பார்ப்போடும், பல வேண்டுதலோடும் பரபரப்பாக இருந்தான். வீட்டிலே உறுதி செய்திருக்கலாம் தான். ஆனால், பெரியாத்தா சொல்லி விட்டார்.
“ சுண்ணாம்பு கட்டி மாதிரி இம்புட்டுன்னு இருக்கு. இதுல என்ன தெரியும்? ஒரு வேளை சரியா காட்டலைன்ன…! மகனே! நியி, உம் பொண்டாட்டிய கூட்டி போய், டாக்டர பார்த்து, படம் புடிச்சு பார்ப்பாங்க பாரு. அதை செஞ்சுட்டு வந்துடுங்க. அப்ப தான் நமக்கு நிம்மதி” என்று உறுதியாக சொல்ல.
வேலுக்கும் கொஞ்சம் பயமாகி போனது. எதற்கு வம்பு! நேரா டாக்டர பார்த்து பேசிட்டே வந்துடுவோம். பூர்ணாக்கும், அது தான் விருப்பம். ஏனெனில், அவளின் முன் அனுபவங்கள் எல்லாம் தோல்வி தான் என்பதால், எதையும் நேரில் பார்த்து அறிந்து கொள்ளவே விரும்பினாள்.
நாற்பது நாட்கள் என்று மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்ய. வேலுக்கு தாங்கவே முடியவில்லை அந்த கணத்தை. தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தெரியாமல் திண்டாடி விட்டான். எப்படி என்று வரையறுக்க தெரியாமல், சிறு விதை அளவு இருக்கும் தன் மற்றொரு மகவை ஸ்கேன் வழியாக பார்த்தான்.
பூர்ணாவுடனான தன் வாழ்வே அதிசயம் என்று எண்ண, அதற்கு சிகரம் வைப்பது போல். அவர்கள் இருவரின் அடையாளம் கொண்ட ஒரு மகவு வர இருக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியாமல் கண்கள் கலங்க மனைவியின் கை பிடித்து அமர்ந்திருந்தான்.
பெரியத்தா, மருமகள் கை பிடித்து அழுதே விட்டார். “ஆத்தா ராசாத்தி! சிதறி நிக்குற குடும்பத்தை நீ கட்டுவன்னு நம்பி தான் எம் மகனுக்கு உன்னை கட்டி வச்சேன். எம் நம்பிக்கையை காப்பாத்திபுட்ட”… என்றவர்
எம் மகன் ஒரு அப்பாவி. போட்டி, சூது, வஞ்சம்லாம் தெரியாது. சூட்டிகையா பிழைக்க தெரியாதவன். யாராவது அடிச்சாலும் அடி பெத்து தான் வருவான், திருப்பி அடிக்கிற மேல் புத்தி இல்லாத நல்லவன். நீயி தலையெடுத்து கை குடுத்து தூக்கி விட்டுட!” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
ஒவ்வொருவரும் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்த, பூர்ணா மட்டும் எவ்வுணர்வையும் வெளிப்படுத்தாது அமைதியாக இருந்தாள். மனதோடு அனுபவித்த பல நாள் வலியை, மனதோடு சமாதானம் செய்தாளோ என்னவோ…!
அசதி என்பது போல் உள்ளறை சென்று படுத்து கொள்ள. ஒருவரும் தொந்தரவு செய்ய வில்லை. மெதுவாக, மிக மெதுவாக தை கையை அடி வயிற்றில் கொண்டு சென்று லேசாக தடவி கொடுத்தாள். அசைவு என்று எதுவுமில்லை சாதரணமாக தான் இருந்தது. ஆனால், உள்ளே பிள்ளை உள்ளது என்ற உணர்வே அவளை சிலிர்க்க செய்தது.
இந்த ஒற்றை பிள்ளை சுமக்க அவள் பட்ட பாடு தான் எத்தனை, சொல்லி மாளாது. அந்தளவுக்கு உடல், மனரீதியான வலி, வேதனையை தாங்கி வாழ்ந்த நாட்கள் கொடுமையே. தாய்மை ஒரு வரமாமே, நிச்சயம் வரம் தான். எளிதாக தாய்மை அடைய முடியாதவர்களுக்கு தேடி கை பற்றும் வரம் தாய்மை.
கைகள் தன் போல் பிள்ளை வயிற்றை தடவ , நினைவு அதன் பெட்டகத்தை திறந்தது.
கணவன் கதிரவன் என்ன மாதிரியான முகம் கொண்டவன் என்று இதுவரையிலும் கணிக்க முடியவில்லை. அவனின் பேனா, புத்தகம், போன், உடை, செருப்பு என்றதில் மற்றொரு அங்கமாக தான் பூர்ணாவை சேர்த்தான். ஒரு வரியில் சொல்வதென்றால் இப்படி தான் சொல்ல வேண்டும்.
பல கல்யாண கனவுகளோடு அடியெடுத்து வைத்த பூர்ணாவும். கனவுகளை தவுடு பொடியாக்கும் கணவன் தான் கதிரவன் என்று கண்ட போது. புரட்சி எல்லாம் செய்ய வில்லை, என் கணவன் எப்படி தான் என்று எல்லா பெண்களை போல் புகுந்த வீட்டு சட்ட திட்டங்களுக்கு வளைந்து கொடுத்து செல்ல ஆரம்பித்தாள். கணவனின் நிழலாக நின்றாலும், அவன் செருப்பாக தான் பார்த்தான்.
ஒரு வருடம் வெளியே சொல்லாம் இழுத்து பிடித்தவள், மறுவருடம் நெருக்கிய உறவுகளில் சொல்ல. அவர்கள் சொன்ன ஒரே ஆறுதல் பிள்ளை பிறந்தால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை வார்த்தை தான். அப்போது பிடித்தது பித்து பூர்ணாக்கு.
திருமணம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் ஏன்? தனக்கு ஒரு பிள்ளை இல்லை என்ற பெரிய கேள்வி தோன்ற. அதன் வழியே செல்ல ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து ஏமாந்து விட, அக்கம் பக்கத்தில் புலம்ப ஆரம்பித்தாள். கிராமத்து பெண், நாசுக் என்றெல்லாம் தெரியாமல், தன் போல் அனைவரையும் உறவாக எண்ணி மனம் திறக்க. அனைவரும் ஆளுக்கொரு தங்கள் அனுபவ அறிவுரை சொல்ல தொடங்கினர்.
“பூர்ணா ஒவ்வொரு வெள்ளி கிழமையும் விரதம் இருந்து அம்மனுக்கு படையல் போடு” என்று பக்கத்து வீட்டு காவிதாக்கா சொல்ல.
அடுத்து என்ன! தினமும் ஒரு பூஜையும், விரதமும் தான்.
“கும்பகரையில ஒரு சாமி இருக்கு, நாப்பத்தி எட்டு நாள் விரதம் இருந்து மண் சோறு சாப்பிடணும். அதுவும் எப்படி, ரெண்டு கையையும் பின்னாடி கட்டி குனிச்சு, வணங்கி செய். அடுத்த மாசம் நீயி குளிக்க மாட்ட!”…. என்று தன் சின்ன மாமியார் சொல்ல.
அடுத்த ஒரு விரதம் தொடங்கியது. நல்ல படியாக விரதம் முடியவும்.வீட்டுக்கு துரமாகும் நாள் நெருங்கியது. அது நெருங்க நெருங்க பூர்ணா வயிற்றில் புளி கரைக்க தொடங்கியது. மறுநாள் காலை கும்பகரை செல்ல குளிக்க தொடங்கும் போதே நீரோடு சேர்ந்து வந்து விட்டது.
“ உம் மூஞ்சிக்கு தரித்திரம் தான் வந்து சேரும். எனக்குன்னு வந்து சேர்ந்திருக்க பாரு! புளி மட்டை மாதிரி உடம்பு இருந்த எங்க புள்ளை தங்கும்”… என்று கதிரவன் கத்தி விட்டு சென்றான்.
“மாசம், மாசம் பிரதோஷம் வா! அபிஷேக பொருள் எல்லாம் நீயி வாங்கி கொடு, கோவில் தான தர்ம வேலை செய். கௌரவம் பார்க்காம கோவில் பணி செய்,. கடவுள் மனசு இறங்குவார்” என்று பூ விக்கும் பாட்டி சொல்ல.
அடுத்து ஒரு புது நம்பிக்கை பூர்ணாக்கு. முழு நேரமும் கோவில் தான், எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்தாள். இதற்கு கணவனிடமிருந்து என்ன கிடைக்கும் என்று தெரிந்தாலும், பிள்ளை ஆசை விடவில்லை.
தொடர் ஏமாற்றம் தான் பூர்ணாக்கு. ஆனால், மனம் மட்டும் கடவுள் நம்பிக்கையை விடவில்லை.
“ நாக தோஷமா கூட இருக்கும். எதுக்கும் சோழவந்தான் பக்கம் போய் வாங்க. வெள்ளில நாகம் செஞ்சு தீயில போட்டா! தோஷம் போய்டும்” பெரிய அண்ணி சுமதி சொல்ல, அடுத்த ஒரு பயணம்.
இது எதிலும் கதிரவன் கலந்து கொள்ள மாட்டான். தம்பதியா போய் தான் பரிகாரம் செய்யணும் என்று எவ்வளவு எடுத்து சொன்னாலும், அவனிடம் மட்டும் எடுபடாது.
“நான் ஒன்னுக்கும் லாயக்கி இல்லான்னு ஊர் முழுக்க தண்டோரா போட சொல்றியா?” என்று கோபமாக கத்துவான். மேலும், வற்புறுத்தினால் அடி, உதை தான்.
அடுத்த ஒரு மாதத்தில் பத்து நாட்கள் தள்ளி போக, அவளின் நிலையை சொல்ல வார்த்தையே இல்லை. யாரிடமும் மறைக்கும் எண்ணம் இல்லாததால், அனைவரிடமும் பகிர்ந்து கொண்டாள். கணவனிடம் கூட சிறு கவனிப்பு தென்பட. அவ்வளவு மகிழ்ச்சி பெண்ணுக்கு. மூன்று நாத்துனார்கள் கவனிப்பு, கணவனின் அனுசரணை, தாயின் அரவணைப்பு என்று பிறந்த பலனை அனுபவித்த எண்ணம் தான் பூர்ணாக்கு. அக்கம்பக்கத்தில் கூட நல்ல உணவுகளை மாசமா இருக்கும் பெண் என்று கொண்டு வந்து தர, ராணி தோரணை தான்.
வாந்தி, மயக்கம் எதுவுமில்லை. வெறும் ஊருகாய்யா திங்குற பூர்ணா. நிச்சயம் பொம்பளை பிள்ளை தான்” என்று கவிதா சொல்ல. இனிய கற்பனை சூலும் பூர்ணாவை.
“அறுபது நாள் ஆகட்டும். அப்புறம் போய் டாக்டர பாருங்க. இப்பவே போன, ஸ்கேன் பார்க்கணும் அது இதுன்னு ஆயிரம் இருக்கு. இதெல்லாம் குழந்தையை பாதிக்கும். முழுசா ரெண்டு மாசமாகட்டும்” … என்று மாலதி சொல்ல விட.
இரண்டு மாதத்திற்கு பின் தான் மருத்துவமனைக்கே சென்றனர். பல்வேறு கனவுகளோடு செல்ல, “ லேட் பீரியட்ஸ்” என்று ஒற்றை வார்த்தையில், அவளை மொத்தமாக முடித்துவிட்டார்கள்.
சுற்றிலும் கர்ப்பிணி பெண்கள் சூழ்ந்து நிக்க, தான் கர்ப்பம் செத்தவளக நின்றதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.
உறவுகளின் விசாரிப்புக்கும் பதில் சொல்ல முடியாமல் போக. கதிரவனின் கோபத்திற்கும், ஏற்பட்ட அசிங்கதிற்கும் பூர்ணா தான் வடிகால். எங்கு அடி விழுகிறது என்று தெரியாமலே அவ்வளவு அடி. மொத்தமாக சுருண்டு விட்டாள் பெண்.
தங்களால் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆக முடியவில்லை என்ற அசிங்கம், அவமானம் ஆணுக்கு என்றால்; வலியும், வேதனையும் பெண்ணுக்கு அல்லவா. எல்லாம் சரியாக இருந்தும் பிள்ளை இல்லை என்றால்,கடவளாக தீர்வு சொல்லாமல் யாரிடம் போராட முடியும்.
ஆம்பிளை உடம்பு, ராசி இல்லை, ஜாதகம் சரியில்லை, நல்ல எண்ணம் இல்லை, முன்னோர் செய்த பாவம் என்ற உற்றார், உறவினர் பேச்சுகளை தாங்க முடியாமல் தனக்குள் முடங்க தொடங்கினாள்.
அவளின் நிலை கண்ட கவிதா தான், தனக்கு தெரிந்த ஜாதகம் பார்ப்போரிடம் அழைத்து சென்றது.
“ஏம்மா! உம் குடும்ப முன்னோர் குல தெய்வக் வழிபாடு செய்யல! சாமி குத்தம். யார மறந்தாலும் குலசாமிய மறக்கலாமா! மொத செய்ய வேண்டிய நேத்திகடன செய்ங்க. அடுத்த வருடம் கருப்பன் பிள்ளையா வந்துருவான்”..!
தாங்க முடியாத கஷ்டத்தில் மனித இனம் தேடுவது என்ன ஒரு நம்பிக்கையான வார்த்தை தான்.
தோற்றாலும் மீண்டும், மீண்டும் அடைக்கலம் தேடும் இடம் கடவுள் பாதம் தானே. சாமானிய மக்களுக்கு சாமியை விட்டால் துணை ஏது…!
திரும்பவும் கோவில், பரிகாரம், விரதம் என்று இறங்க. இந்த முறை யாரும் உடன் வர வில்லை. பூர்ணாக்கு பிள்ளைப்பேறு இல்லை என்றே முடிவு கட்டினர். உண்மை நட்புக்கு இலக்கணமாக கவிதா மட்டுமே பூர்ணாக்கு துணை.
“பூர்ணா, அங்க ஒரு சிவன் கோவில் இருக்கு. நாகம்மன் தான் ஸ்பெஷல். அங்கிருக்க புத்துல மஞ்சள் , குங்குமம் வச்சு, புத்து மண்ணை ஒரு கைப்பிடி அள்ளி, அங்க ஓடுற ஆத்து தண்ணில கரைச்சு வெறும் வயித்துல குடிச்சா! எப்பேர் பட்டவங்களுக்கும் புள்ளை பிறக்குமாம்!” என்று கவிதா சொல்ல.
“நெசமாத்தான் சொல்றியா காவிதாக்கா!” என்று பரபரப்பாக பூர்ணா கேட்க.
“ஆமா டி ! பூரி , நாளைக்கே போவோம்”
ஆனால், பலன் என்னவோ ஜிரோ தான். திரும்பவும் சோர்ந்து போனாள் பூர்ணா.
“பூரி! எந்தங்கச்சி சொன்ன! மேலகோட்டை பக்கம் ஒரு சாமியார் இருக்காங்களாம். சுடு பொங்கல வாய்ல மென்னு தருவாங்களாம். அப்படி வாங்கி திண்ண யாருக்கும் புள்ளை இல்லாம இருந்ததே இல்லையாம்!” என்று கவிதா சேதி சொல்ல.
பூர்ணா முகம் ஒரு பிடித்தமின்மையை காட்டியது.
“என்னாடி மூஞ்சியை சுருக்குற! அப்படிலாம் யாருக்கும் வாய்ப்பு கெடைக்காதாம். பிள்ளை இல்லாதவங்க வரிசையில நிக்க, சாமி ஆடிகிட்டே வாரவரு, சாமி உத்தரவு கொடுக்க சொல்றவங்களுக்கு மட்டும் தான் பொங்கல் கிடைக்குமாம்..!” என்று கவிதா நொடித்து கொள்ள.
மறுநாள் இருவரும் மேலகோட்டை நோக்கி செல்ல, அங்கும் அவளுக்கு வாய்க்க வில்லை. எத்தனையோ பேருக்கு கிடைச்ச எச்சி பொங்கல். பூர்ணாக்கு மட்டும் கிடைக்க வில்லை.
இந்த முறை கடவுளோடு பூர்ணா பயங்கர சண்டை. தனக்கு மட்டும் ஏன்? இவ்வளவு சோதனையும், வலியும். அவள் தோழி பெண்கள் எல்லாம், கல்யாணம் முடிந்த ஒரு வருடத்திலே பிள்ளையோடு நிக்க. தனக்கு மட்டும் கடவுள் உத்தரவு கொடுக்காதது ஏன்?
ஒரு மாதம் முழுக்க சாமி, கோவில் என்று எங்கும் செல்லாமல் இருப்பாள். சாமி மேல் கோபமாம். அடுத்து யாராவது ஏதாவது சொன்னால், அதையே பற்றி கொண்டு திரும்ப விரதம், பூஜை, பரிகாரம் என்று ஆரம்பித்து விடுவாள். இப்படி அடிக்கடி சாமி கூட சண்டை போடுவதும், திரும்ப சேர்வதுமாக நாள் சென்றது பூர்ணாக்கு.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை தான் பூர்ணாக்கு. யார் என்ன சொன்னாலும் உடனே செய்ய ஆரம்பித்தாள்.
“ தினமும் வெறும் வயித்துல வெந்தயம் சேரு; மலை வாழைப்பழம் படுக்க முன்ன சாப்பிடு பூர்ணா; மாவு பொருள் சேர்க்காத, காலி பிளவர், பிராய்லர் கோழி சேர்க்காத; உடம்பை குறை, தினமும் நட; அதி காலையில புருசன் கூட சேர்ந்தா புள்ளை கன்பார்ம்” என்று தலைகீழ் நின்னு பார்த்தாலும் ஒரு நாள் கூட தள்ளி போகவில்லை.
மற்ற பிள்ளைகளை ஏக்கத்தொடும், ஆசையும் பார்க்க. கதிரவன் அக்கா, தங்கைகள் தங்கள் வரவை குறைத்து கொண்டனர்.
கொஞ்சம், கொஞ்சமாக மன அழுத்தத்திற்கு உள்ளானால் பூர்ணா. கோபம், ஆற்றாமை, வெறுப்பு யார் மீது காட்டுவது என்று தெரியாமல் தன்னை தான் காயப்படுத்த ஆரம்பித்தாள்.
தினமும் பள்ளி, கோவில், பார்க் என்று சென்று. அங்கிருக்கும் சிறு பிள்ளைகளை ஆசையாக பார்ப்பதும், தன் பிள்ளை போல் கற்பனை செய்து கொண்டிவதுமாக இருந்தாள். துணை நிற்கும் கணவன் உடன் நிற்காமல் போக. தன் இயல்பு தொலைத்து, தனக்கு பிடித்தமான உலகை கற்பனை செய்து வாழ தொடங்கினாள்.
கதிரவனுக்கு மனைவியின் மாற்றம் கண்ணுக்கு தெரியவில்லை அல்லது கவனிக்க வில்லை. அவன் தேவைகள் சரியாக நடக்க, மற்றதை அவன் மறந்தான்.
பிள்ளை இல்லாமல் ஒரு பெண்; எந்தளவிற்கு சமூகத்தின் கேலி, கிண்டல், அவச்சொல்லுக்கு உள்ளாவாள், அது எந்தளவிற்கு அழுத்தம் தரும் என்பதை கதிரவன் மறந்தான்.
அடுத்தடுத்து மாதங்கள் கடக்க, பூர்ணா நிலையில் மாற்றம் இல்லை. எப்போதும் வீட்டு வேலையில் கட்சிதமாக இருப்பவள், அன்று சோர்ந்து தூங்க. அப்போது தான் கவனித்தான் கதிரவன்.
உடல் இளைத்து, கண்களை சுற்றி கருவளையம் தோன்றி, தள்ளாடும் உடலோடு நின்றாள். மன நோய் உடலில் வெளிப்பட தொடங்கியது போல.
அப்போதும், மனைவியின் பிரச்சனை உணராமல். கதிரவன் மனம் வேறொன்றை கணகிட்டது. அதன் படி,அவளை உற்று கவனிக்க. உடல் எழும்பாக இருந்ததால் முன் வயிறு தள்ளி தெரிந்தது.
மனைவியிடம், “ ஒரு கோவிலுக்கு போனும், உனக்கு நாள் வருமா! இந்த மாசம் எப்போ குளிச்ச” நாசுக்காக போட்டு வாங்கினான்.
யோசித்த பூர்ணா, “நினைவு இல்லங்க…!”
மனம் கொதிக்க தொடங்கியது கதிரவனுக்கு, “கடைசியாக எப்போ வீட்டுக்கு தூரம் ஆன?” வேட்டையாடும் புலியின் உறுமல்.
தெளிவாக யோசித்த பூர்ணா, “ இப்பலாம் நான் நாள் கணக்கு பாக்குறதே இல்லைங்க! எப்படியும் ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும்”
வெறி ஏறியது கதிரவனுக்கு. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக மனைவியை விட்டு தள்ளி நிற்கிறான் கதிரவன். அவள் ஏதோ ஒரு உலகத்தில் இருக்க, கதிரவனுக்கு தற்போது நாட்டம் குறைந்தது.
ஐம்பது தாண்டியாச்சு, தன்னிடம் தான் ஏதேனும் குறை இருக்குமோ! என்று கருதியவன். மருத்துவ பரிசோதனை மட்டும் பண்ணவே இல்லை. பூர்ணாவையும் அதற்கு அனுமதிக்க வில்லை. அவளுக்கு குறை இல்லையென்றால், ஆயுதம் தன்னை நோக்கி திரும்புமே!
கோவில், பூஜை, பரிகாரம் செய்ய அனுமதிப்பவன். மருத்துவரிடம் செல்ல மட்டும் தடை விதிப்பான். ஆண் என்பதன் கௌரவம் அடிவாங்குவதை விரும்பவில்லை போல.
மனைவியின் மனரீதியான பிரச்சனை என்னவென தெரியாமல். நாள் தள்ளி போனது, முன் வயிறு தள்ளி நிற்பது, சோர்வு, வாட்டம், எடை குறைந்தது என்று அவன் கணக்கீடு வேறாக நின்றது. அக்கா, தங்கைகளை கண்டவன் என்பதால் இது அது! தான் என்று உறுதியாக கணித்தான்.
“என்னங்க நான் கோவிலுக்கு போய்டு வாரேன்” என்ற மனைவிக்கு தலையசைத்து அனுப்பி வைத்தவன். அமைதியாக, தம் உடன் பிறப்புகளுக்கு விசயத்தை பகிர்ந்தான்.
கோவில் சென்று திரும்பும் போது, தான் ஒரு குடும்பத்தால் சூறையாட படுவோம் என்று தெரியாமல் மன அமைதி வேண்டி கடவுளை காண சென்றாள் சம்பூர்ணா.