ஆரம்ப கட்ட கற்ப கால உபாதைகள் பூர்ணாவை படுத்தியது. கற்ப அறிகுறி என்று சொல்லும் எதுவும் தப்பாமல் அவளை தொடரத்தான் செய்தது. சோர்வையும், அவஸ்தையையும் சந்தோசமாக அனுபவிக்கும் வித்தியாசமான பெண்ணாக மாறி போனாள் பூர்ணா.
“பிள்ளை ரொம்ப சுறுசுறுப்பு போல வேலு! அக்கடான்னு, உக்கார கூட முடியலைலே!”என்று சந்தோசமாகவே சலித்து கொள்வாள்.
அதிகப்படியான சலுகை, உரிமையை எதிர்பார்க்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கணவன் மற்றும் மாமியாரின் அதிகப்படியான கவனிப்பை தள்ளி வைத்து, எப்பவும் போல தான் வீடு, தோட்டம் என்று இருந்து கொண்டாள். இதில் சடவு தான் மாமியாருக்கும், மருமகளுக்கும்.
“பிள்ளை சுமக்குற நினைப்பு இல்லாமா, இவ காடு மேடெல்லாம் ஓடி திரியிற. நியி ஒன்னையும் கண்டுக்காத மகனே! அவ போக்குக்கே விட்டா என்னாலே அர்த்தம்?” என்று மகனிடம் தான் ஒரு பாடு ஒப்பாரி வைப்பார்.
அதுவும் பவித்ரா விசயத்தில் இன்னும் முட்டி கொள்ளும் இருவருக்கும்.
“ குமரியை தூக்கி கொஞ்சாட்டி தான் என்னவாம்? வயசுக்கு வந்து வருசம் போக போது, மடியில தூக்கி இடுக்குனா! வேலை செய்ய உடம்பு வலையுமா இந்த சின்ன கழுத்தைக்கு..!” என்று காட்டு கத்து கத்தினாலும் ஒன்றும் காதில் ஏறாதது போல, தாய் – மகள் இருவரும் தங்கள் உலகில் மூழ்க.
“ பார்த்தியா மகனே! பொட்ட பிள்ளையை வீட்டு வேலைக்கு பழகுன்னு சொன்னா; நான் கெட்டவளாம்? மூஞ்சிய தூக்கி மோட்டு மேல வச்சுக்கிட்டா, நான் கூட்டி வந்த சிறுக்கி. நாளைக்கு மருமவன் வந்து கொமட்டுலே குத்துவான்! என்னா பிள்ளை வளத்து வச்சுறுக்கன்னு! அன்னைக்கு பக்குறேன் உம் பொண்டாட்டி பவுச”… என்று பெரியாத்தா சாட, புரிந்தாலும் வேலு பதில் பேச மாட்டான்.
நீண்ட வருடம் சென்று பூர்ணா பிள்ளை உண்டானதால், வேலுக்கு தான் பதற்றம், கவலை எல்லாம். மகள் இல்லாமல் இருக்கும் போது மட்டுமே, கணவனின் அன்பு, ஆதரவு, அனுசரணையை பூர்ணா நாடுவாள். மற்ற நேரங்களில் உதவியாக கூட அண்ட விடமாட்டாள்.
“அங்குட்டு தள்ளி போலே வேலு. விவரம் தெரிஞ்சா பிள்ளையை வச்சுக்கிட்டு, வயித்த தள்ளி நிக்கிறமேன்னு, நானே சங்கடபட்டு போறேன்! இதுல நீயும், உங்க ஆத்தவும் ஒரு பக்கம். முந்தா நேத்து பள்ளியொடம் விட்டு புள்ளை வருது, உங்காத்தா வட்டி நெறைக்க சீம்பாலை எங்கிட்ட தருது. கேட்டா! வயித்துல இருக்குற புள்ளைக்கு சீல் வடியுமாம்…! நான் எண்ணத்தை சொல்ல?” என்று சோர்வாக சொன்னவள்.
“இம்புட்டு வருசம் செண்டு வார புள்ளை எம்புட்டு முக்கியமோ! அதே போல தான் இம்புட்டு வருசம் வளத்த புள்ளையும். பவிய விட்டு நல்லது திங்க மனசு வருமா வேலு! நம்மையே சுத்தி வரும் அம்மா, ஏன் தள்ளி நிக்குதுன்னு? புள்ளைகிட்ட வேறுபாடு காட்ட கூடாதுல. வயசுக்கு வந்தாலும், எம் முந்தில ஒளியிற பிள்ளையை ஒதுக்க முடியுமா!…. நீயும் சேர்ந்துகிட்டு பேசுற, அது தான் வருத்தமே…” என்று பூர்ணா மனதாங்களாக பேச,
அமைதியாக பார்த்தவன், “ஏட்டி சம்மு! சீக்கு வந்த கோழி மாதிரி சுருண்டு போரையே, உம் பாட குறைக்க தான். பவித்ராவ எங்காத்தாட்ட விட சொன்னேன்” என்று வேலு புரியவைக்க முயன்றான்.
கர்ப்பகால உபாதைகளே பூர்ணாவை நிலைகுலைய வைக்க. இதில், பவித்ராவை கவனிக்கும் வேலை, அவளை பாடாய் படுத்தியது. பள்ளிக்கு செல்ல எழுப்பி, குளிக்க சொல்லி, உடை எடுத்து வைத்து, உணவு ஊட்டி, தலை பின்னி, பை தூக்கி வழியனுப்பிய பின் தான் ஓய்வாள். அத்தனை வேலை முடியும் முன்னே, பத்து தடவை சுருண்டு படுத்து, நாலு தடவை வாந்தி எடுத்து சுருங்கி கிடப்பவளை பார்த்து தான் வேலு, பவித்ராவை தன் தாயிடம் ஒப்படைக்க சொன்னான். அதற்கு தான், கணவன் மற்றும் மாமியாரிடம் முறிக்கு கொண்டாள் சம் பூர்ணா.
“ஏன் வேலு! நாளைக்கு புள்ளை பொறந்த அப்புறம், கை பிள்ளையை யாரு பார்ப்ப. நானா? உங்கம்மையா?” என்று பூர்ணா கேட்க.
“ என்னாலே! கூறு கெட்ட கேள்வி கேக்குறவ! கை பிள்ளை நீதான் பாக்கணும். நீதானே பெத்தவ…” என்று பதில் கொடுத்தான் கணவன்.
“அது முடியாது வேலு. நானே பிள்ளை பெத்த உடம்பு, ஆயிரம் வலி இருக்கும். நிமிசத்துக்கு துணி நனைச்சு, சினிங்கிட்டே இருக்குற பிள்ளையை நான் பார்க்க முடியுமா! எனக்கு கஷ்டம் தான வேலு….” என்று பூர்ணா இழுக்க.
“கஷ்டமா! என்னாலே பேச்சு இது. உம் பிள்ளையை கவனிக்க, உமக்கு கஷ்டமா”….. என்று சொல்லி கொண்டே வந்தவன், பட்டேன்று வாய் மூடி கொண்டான்.
அவனுக்கு புரிந்து விட்டது என்று கண்ட பூர்ணா, “இங்காரு வேலு! கை பிள்ளை மாதிரி தான் பவியும். கொஞ்ச நாளாக தான் எம் கைக்குள்ள நிக்குறா! திடீர்னு வெளக்கி வைக்க முடியுமா. தாய்க்கு என்னைக்கும் தலை பிள்ளை தான் உசத்தி” என்று பூர்ணா முடிவாக சொல்லி விட. அடுத்து என்ன!… வேலு வாய் திறப்பதே இல்லை.
முதல் ஐந்து மாதம் வரை யாரிடமும் சொல்ல வில்லை. வாணி நாத்துணார் வளையல் அடுக்கும் போது தான் ஊர், உறவுக்கே தெரியும். யாரிடமும் வாய் திறக்காமல் வைத்து விட்டார் பெரியாத்தா.
ஊரே திறந்த வாய் மூடாமல் இவர்கள் கதை தான். இந்த வயசுல குழந்தையா? சம்முக்கு குறை இல்லையா? நாள் செண்டு தங்குற புள்ளை சுகமா பொறக்குமா! என்று ஆயிரம் பேச்சுக்கள் ஓட. யாரையும் கண்டு கொள்ளாமல் தங்கள் குடும்பமே பிரதானம் என்று வாழ பழகி கொண்டார்கள் வேலு தம்பதிகள்.
பால் கறக்க மாடு இறக்கி விட்டு கொண்டிருந்த பூர்ணாவை பார்த்த, அவளின் சக சோட்டு பெண்கள்.
“ ஏட்டி சம்மு! இந்த வயசுல போய் பிள்ளைக்கு நிக்குறவ! உம் வயசு காறிக தான் நாங்க. சம்மந்தம் பண்ண போறோம்” என்று ஒருத்தி கேலி என்று குத்தல் பேச.
“பவித்ரா வயசுக்கு வந்தாச்சே ! அடுத்த பிள்ளைக்கு தாயும், மகளும் சேர்ந்து நிப்பீங்களா!” என்று மற்றொருத்தி நக்கல் பேச. பால் வாங்க வந்தோர் பக்கென்று சிரித்து விட.
எண்ணெய் போக கை கழுவி கொண்டவள்.
“ அதுனால என்ன தப்பு. நீங்க ஒவ்வொருத்தியும் முணு, நாலு பெத்து போட்டீங்க. எங்களுக்கு ரெண்டாவதே இப்பத்தான் நிக்குது” என்று சாதரணமாக சொன்னவள்.
“அது என்ன இந்த வயசிலே! முப்பத்தேழு வயசுல புள்ளை உண்டாக கூடாதாம்மா.. இந்த வயசுல நீங்க யாரும் உங்க புருசன் பக்கத்தில வாறதில்லையா..” என்று எகத்தாளமாக ஒரு கேள்வி கேட்க.
“ எதே..” என்று அரண்டு விட்டார்கள் அனைவரும். பால் பீச்சும் மணிமாறன் காதில் வாங்காதது போல் இருக்க, மற்ற அனைவருக்கும் தான் தர்ம சங்கடம்.
அத்தோடு விடாது, “ஏட்டி ராணி! பத்து நால உம் புருசன் களத்து மேடே கதின்னு இருக்கான்னு நீதானா சண்டை போட்டா. உம் வயசு என்ன?” என்று பூர்ணா ஒரு பிடி பிடிக்க.
“அண்ணன் – தம்பி முறை ஆள வச்சுக்கிட்டு. என்னாலே பேச்சு இது?” என்று சங்கடபட .
“கொழுந்தன் முறை எனக்கு. என்னைய மட்டும் பேசலாமா… உங்க சோழி கழுதை என்னவோ, அதா மட்டும் பாருங்க” என்று தெனவெட்டாகவே பதில் சொன்னாள் பூர்ணா.
“நாதியத்து நின்னவ! இன்னைக்கு புருசன், பிள்ளை , சொத்து சுகம் வந்ததும் தலை கீழ ஆடுறா” என்று முனங்கி கொண்டே கலைந்து செல்ல.
அதற்கும் பதில் சொல்ல வந்த பூர்ணாவை மணிமாறன் தான் தடுத்து விட்டான்.
“ விடு சம்மு! கீழ கிடக்குறவன் கீழயே கிடந்த ஐயோ! பாவம்ன்னு சொல்றவங்க. அவன் மேலேரும் போது, நமக்கு சமமாவா என்று புகைச்சல் தான் இருக்குமே தவிர மகிழ்ச்சி இருக்காது. அடுத்தவன் முன்னேற்றத்தை பார்த்து சந்தோச படுற ஆடகளா நாம!” என்று மாறன் கூற.
“அது என்னமோ நெசம் தாம்லே!” என்று ஒத்து கொண்டாள் பூர்ணா.
இரவு வேலை முடித்து, வீடு திரும்பிய வேலு. உறங்குவதற்காக தங்கள் அறைக்கு செல்ல போக, தடுத்து விட்டாள் மகள்.
“அப்பா! நீங்க தனியா தூங்ககுங்க. உங்களுக்கு உள்ள இடம் இல்லை” என்று மகள் அணை போட.
“ஏன் ஆயி! அப்பா மேல தான காலை போட்டு உறங்குவ?” என்று புரியாமல் மகளை பார்த்து கேட்டான் வேலு.
“ஆமா ப்பா… ஆனா, உங்களுக்கு இடம் இல்லை. இன்னும் கொஞ்ச நாள்ல தம்பி வந்துடுவான். அவனுக்கு இடம் வேணும்ல! இந்த கட்டில்ல எனக்கு, தம்பிக்கு, அம்மாக்கு தான் இடம் இருக்கும்” என்று மகள் காரணத்தை சரியாக எடுத்து சொல்ல.
“ அப்புறம் அப்பா எங்க உறங்குவேன். பவி அப்பா பாவம் தான, இடம் குடுங்க” என்று தயவாக கேட்க.
பெரிய மனுஷியாக யோசித்த மகள், “அப்ப சரி…. நான் எங்கம்மா கூட தூங்குற மாதிரி. நீங்க உங்கம்மா கூட தூங்குங்க”…. என்று மகள் ஒரு போடு போட.
வாயடைத்து போய் வேலு பார்த்த பார்வையில், வெடித்து சிரித்தாள் பூர்ணா.
இந்த கூத்தையெல்லாம் பார்த்த பெரியாத்தா தான்.
“ வாய மூடுடி! என்னா சிரிப்பு வேண்டி கிடக்கு. வேவஸ்தை இல்லாம பிள்ளை வளத்து வச்சுட்டு, சிரிப்பை பாரு. அடக்கி சிரி, எங்கேயாவது புடிச்சுக்கும். அப்புறம் புள்ளை பிறந்தா தான் எடுக்க முடியும்” என்று ஒரு அதட்டல் போட்டார்.
மகளின் வாய் பேச்சை தாய் ரசிக்க, சோகமான முகத்துடன் வேலு, பின் கட்டில் இருக்கும் கயிற்று கட்டிலுக்கு போனான்.
வேலு அசந்து கண் மூடும் நேரம், ஒரு பக்கமாக உடல் யாரலோ அழுத்த . அரண்டு போய் வேலு விழித்து பார்க்க. மனைவி தான்.
அவனால் நம்பவே முடியவில்லை. பூர்ணாவாக ஒரு நாளும் அவனை தேடியது இல்லை. அதையே அவன் வாய் வார்த்தையில் கேட்க.
“சம்மு! நெசம் தான? நீயா ஒரு நாளும் என்னை காண மாட்டியே!”
“நானா உன்னை தேடுற மாதிரி எனைக்கு தான் நடந்துறுக்க. எப்ப ராத்திரி வரும்ன்னு தேடுர பைய தான நீயி! நானே தள்ளி படுத்தாலும் கை அமுக்கவா, கால் அமுக்காவா இல்லைனா மே” என்று ஆரம்பிக்கும் போதே வாயை பொத்தியவன்.
“ விடு டி சம்மு! வெக்கம் வருது” என்று வேலு முகத்தை வேறு பக்கம் திருப்ப.
“இந்த மைனர் தான், ராத்திரி எம் முகத்தை தாண்டி கண்ணு பாயுதுன்னு கவிதை பாடுனது” என்று மேலும் வம்பு பேச.
“இன்னைக்கு என்னமோ ஆகி போச்சு, எம் பொண்டாட்டிக்கு” என்று அவளோடு சாரசமாட
அமைதியாக அவனை ஏற்க தொடங்கினாள் பெண். குழந்தை உண்டான பின் கணவன் அருகாமையை அதிகம் தேடியது மனது. மகள் உறங்கிய பின் தங்களின் துணைக்கு இனை தேடி கொண்டார்கள்.
பிள்ளை குட்டி பெற்ற நடுத்தர வயதில் தம்பதிகளின் தனிப்பட்ட நேரம் என்பது நள்ளிரவு தான் போலும்.