பூர்ணா வின் ஒன்பது மாத தொடக்கத்தில் இருந்தே, அவளை காவல் காக்க தொடங்கி விட்டனர் வேலுவும், பெரியாத்தாவும். வயிறு இறங்கி, புசுபுசுவென மூச்சு விடுபவளை பார்த்தே வேலுக்கு நெஞ்சில் பயம் கவ்வும்.
எந்த உடல் உபாதையாக இருந்தாலும், மகளுக்கு என்றால் ஒதுக்கி தள்ளி வேலை செய்பவள். அன்று என்னவோ மகளை கூட கவனிக்காமல் வீட்டின் கூடத்தில் சுருண்டு கிடக்க, பதறி தான் போயினர் வீட்டவர்.
பூர்ணாக்கும் மனதில் லேசாக ஒரு பயம் பரவ தொடங்கியது. தலை பிரசவம், முன் பின் அறியாதது, மற்றவர் சொல்லும் போது கேட்டு கொள்வது தான். நேற்று நள்ளிரவை தாண்டிய பின் தூக்கும் பொட்டுக்கும் வரவில்லை. வலி என்றெல்லாம் இல்லை தான். ஆனால், ஏதோ ஒரு அசௌகரியம்.
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சமாளிக்க, கணவன் கண்டு கொண்டான். அதன் தொடர்ச்சி தான் வேலு, எல்லா வேலையையும் ஒதுக்கி விட்டு மனைவியை அடை காத்து கொண்டிருக்கிறான். மகள் பள்ளிக்கு சென்ற பின், லேசாக மூச்சு வாங்க தொடங்கியது பூர்ணாக்கு.
“வேணாம் அயித்த! வலி ஒன்னும் வரல. ஆஸ்பத்திரியிலாம் எனக்கு தோது படாது. எம்புட்டு வலின்னாலும் வீட்டிலேயே விட்டுட்டு, பிள்ளை பெக்க மட்டும் தான் ஆஸ்பத்திரி வருவேன். யாராச்சும் வந்தா தேவையில்லாம வார்த்தை விட, மனசு நோவும்”… என்று பூர்ணா உறுதியாக சொல்லி விட்டாள்.
நடு தர வயதில் பிள்ளை பெறுவது உலக அதிசயமாக ஊர் பேச, யாரையும் உடன் வைத்து கொள்ள மனம் ஒப்பவில்லை. யாராவது கூட குறையா பேசி விட்டால், பிள்ளை பெரும் பெண் மன அழுத்தம் எதற்கு….
பெரியாத்தாவுக்கு, தன் மகள் மீது தான் கோபம். இந்த நிலையிலும் உதவ வரவில்லை என்று. பெரியவர்கள் அற்று குடும்பத்தை சுமப்பவள் தான். அதற்காக ஒரே தம்பி பொண்டாட்டி , உடன் பிறந்த பெண் இல்லாத நிலையில், வயதான பெண்மணி தான் என்ன செய்ய இயலும். கொஞ்சமும் யோசிக்காமல், குழந்தை பிறந்த பின் வருகிறேன் என்று விட்டாளே! வேலுவின் குணம் அப்படி, அமைதியாக போகிறான். வேற யாரு என்றாலும் சண்டை வரும் அல்லது ஒரு வார்த்தையாகும் சொல்லி காட்டி விடுவார்.
மகன் தனியே நின்னு மருகும் போது மனம் வலித்தது அந்த தாய்க்கு. அப்புறம் எதற்கு சொந்தம் எல்லாம். உனக்காக உடன் நின்றவன், அவனின் இக்கட்டில் உடன் பிறந்தவள் நீ நிற்க வேண்டாமா? பூர்ணாவின் குணம் தெரியவில்லை, பாவம்! என்று தான் பெரியாத்தா எண்ணினார். தன் காலத்தில் உறவுகளை இழுத்து கட்டியாச்சு, இனி அவர்கள் பாடு!
மதியத்திற்கு மேல் விட்டு விட்டு வலி வர தொடங்கியது. ஒரு வாய் உணவு யாரும் உண்ண வில்லை, நிறை மாத கர்ப்பிணி நீர் ஆகாரம் கூட உண்ணாமல் தவிக்கும் போது, கூட நிக்கும் வீட்டவர்களுக்கு எப்படி உண்ண மனம் வரும்.
பூர்ணா ரொம்பவும் சோர்ந்து விட்டாள். வலி வரும் பிள்ளை பிறக்கும் என்று எண்ணியதற்கு மாறாக, வலி என்ற உணர்வு வரும் முன் பல உபாதைகள். தன் கட்டுப்பாடு இன்றி கால் வலி நீர் இறங்க, கட்டிய கணவனே என்றாலும் ரொம்ப சங்கடமாகி விட்டது.
யாரும் எதுவும் நினைக்க வில்லை தான். பெரியாத்தா தான் பின்னோடு வந்து துடைத்து விட்டார். கண் எல்லாம் கலங்கி விட்டது பூர்ணாக்கு. பிரசவத்தில் தான் தாய் எவ்வளவு அவசியம்.
“எதுக்குடி இப்ப கண் கலங்குது. உங்காத்தாவுக்கும் மூத்தவ, உன்னை தாங்க மாட்டேன். வயகி கூறு மாறி போச்சு, இல்லாட்டி உனக்கு நானே பிரசவம் பார்ப்பேன். மனச திடப்படுத்தி, தைரியமா நில்லு. ஏலே மகனே! வட்டில சோறு போடு, சாப்பிடு தெம்பா போன தான், தள்ளி குடுத்து வலி தாங்ககுவ!”என்று பெரியாத்தா தன்னை திட படுத்தி கொண்டு, தைரியம் சொல்ல, கொஞ்சம் நிமிர்ந்தனர் வேலு தம்பதிகள்.
அடுத்தடுத்து தொடர் வலி வர, மெளன கண்ணீர் மட்டுமே பூர்ணாவிடம். ஒரு மூன்று மணி நேரத்திற்கு பின் தான், கொஞ்சம் அசந்து கண் உறங்கினாள் பெண். பள்ளி விட்டு வந்த பவித்ராவும், சோர்வாக தெரியும் தாயை கண்டு, தொந்தரவு செய்யாமல் தள்ளி நிக்க.
முக வலியை மறைத்து, சிறு சிரிப்போடு கை நீட்டி மகளை அழைத்தாள். தாயின் சொல்லுக்கு அடங்கி அருகே வர, வயிற்றோடு சேர்த்து அணைத்து கொண்டவளுக்கு தன்னை மீறி கேவல் வந்து விட.
“சரியான பிள்ளை பித்து புடிச்சவ..” முனங்கி கொண்டார் மாமியார். என்னவோ தெரியவில்லை பூர்ணாக்கு, மறைமுகமாக தாயின் அருகாமையை தேடியவளுக்கு, மகளை கண்டதும் அடக்க முடியவில்லை.
“சாமி! அம்மா, ஒரு குட்டி பாப்பாவ கூட்டி வாரேன். யாருக்கு அந்த குட்டி பாப்பா?”
“பவித்ராக்கு” என்றால் மகள் கணிரென்று.
“ம்ம்.. அமா! பவி குட்டிக்கு துணைக்கு தான் அந்த பாப்பா. நீ தான் பாத்துக்கணும். உனக்கு துணைக்கு பாப்பா, பாப்பாக்கு துணை நீதான். நீ கேட்டில? நமக்கு வேற சொந்தமே இல்லையா? லீவுக்கு எங்கேயும் போகலன்னு. அம்மா, ஆஸ்பத்திரிக்கு போய் உன் கூடவே இருக்க போற, உனக்கு மட்டுமேயான சொந்தத்தை கூட்டி வாரேன். நாங்க எல்லாதாப்பவும், நீங்க உங்களுக்குள்ள துணை நிக்கணும். அம்மா! இல்லாத காலத்திலும் உமக்கு தாய் வீட்டு உறவு, அதுக்கும் நீதான் தாய் வீட்டு உறவு. எப்பவும் விட்டுடகூடாது, சரியா தங்கம்?”.. என்று கண்ணீரோடு தாய் பேச.
அந்த சின்ன சிட்டுக்கு என்ன புரிந்ததோ! தாய் அழுகையை பார்த்து, மகளுக்கும் அழுகை வர, “சரிம்மா” என்று தலையசைத்து அனைத்து கொள்ள. மகளின் உச்சந்தலையில் முத்தம் வைத்தவள், “ போலாம் வேலு! இனி தாங்காது. அக்கா தொட்டதும், வெளிய வர அவசரம் வந்துருச்சு போல! இடுப்பு கிடுக்கு பிடி போட்ட மாதிரி இருக்கு”… என்று அப்போதும் பிள்ளைகள் பெருமை பேசினாள் பூர்ணா.
வேலு தான் தவித்து, மருகி நின்றான். மகளை பார்த்து அழும் மனைவியை கண்டு, என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த வயதில் பிள்ளைக்கு என்ன புரியும். ஆனால், எதுவோ! மனைவி நிலையில்லாமல் தவிக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. அருகில் வந்து சேர்த்து அனைத்து கொண்டான். நான் உடன் இருக்கிறேன் என்று.
பவித்ராவை மணிமாறன் மனைவியிடம் விட்டு வர சொல்லி விட்டாள் பூர்ணா. இருவரும் அவளை அதிசியமாக பார்க்க .
“தலை பிரசவம் வேலு. எனக்கே ஒரு விவரமும் புரியலை. வலி கொள்ளுது, நான் பாட்டுக்கு ஐயோ! அம்மான்னு! கத்தி கூப்பாடு போட்டா. புள்ளை பயந்துக்கும், நாளைக்கு அதுக்கும் நல்லது நடக்கணும்ல! அதான்”…
மரண வலி என்பதை முழுதாக அனுபவித்தாள் பெண். வயதும் சென்று, உடல் உழைப்பால் இறுகிய உடம்பு, கொஞ்சமும் தளரமல் இருக்க. ரொம்பவும் கடின பட்டு போனாள் பெண். உள்ளூர் மருத்துவமனை தான், வெளியே என்றால் தெரிந்த ஆட்கள் இல்லை. பழகாத இடம் கஷ்டம் என்று பூர்ணாவின் தேர்வு தான்.
ரொம்பவும் முயற்சி செய்து முடியாமல், சோர்ந்து படுத்து அனத்தி கொண்டிருந்தாள் பூர்ணா. அது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம். பதறி போய் பார்த்து நின்ற வேலுவிடம்,
“வலி வந்தும், பிள்ளைக்கு தலை வரல. அந்த பொண்ணும் ரொம்ப சுனங்கி போச்சு. மதுரை பெரியாஸ்பித்திரிக்கு எழுதி தாரேன் கொண்டு போறீங்களா?…” டாக்டர் வேலுவிடம் வினவ.
அசந்து கிடந்த பூர்ணாவிற்கு, வெளியே கேட்கும் பேச்சு குரல் பகீரென்றது. மதுரைக்கா? என்று அதிர்ந்தவள். தம் பலத்தை எல்லாம் கூட்டி, தெய்வத்தை உடன் அழைத்து, நொடியில் மறைந்த தாய், தந்தை, அப்பத்தா, அத்தை என்று உறவுகளையெல்லாம் துணைக்கழைத்து, பல்லை அழுத்தி கடித்து கொண்டு பிள்ளையை வெளி தள்ள முயற்ச்சி செய்தாள்.
அடுத்த நொடி அவள் அலறல் கேட்க, பதறி போய் உள்ளே சென்றனர். “ஐயோ! தலை வெளியே வர மாதிரி இருக்கு” என்று நர்ஸ் அலற. நொடியில் பரபரப்பாகப் காணப்பட்டது வளாகம். பெரியாத்தா உடன் இருந்து கொண்டார் தெம்பு சொல்லும் விதமாக…..
அடுத்த பத்து நிமிடத்தில் பவித்ராவின் குட்டி தம்பி வெளி வந்து விட்டான்.
“ஐயா வேலு! நம்ம ஐயனாரு குலம் காத்து தந்துருச்சு சாமி! பாரு உம் மகனை”…. என்று பேரனை தூக்கி கொண்டு வந்து வேலுவிடம் காட்டினார் பெரியாத்தா.
கைகள் நடுங்க மகனை பார்த்தவன். “ ஆத்தா சம்மு?” என்று இழுக்க.
அடுத்த ஒரு மணி நேரம் சென்று தான் பிள்ளை பெற்ற வலி நீங்கி, சுயம் உணர்ந்து சுற்றி பார்த்தாள். சுக பிரசவம் என்பதால் மெது எட்டு வைத்து நடந்து தன் அறைக்கு வந்து விட்டவள்.
“ பிள்ளை எங்க வேலு?” என்று கேள்வி கேட்க.
“டாக்டர் கேட்டாங்கண்ணு, அம்மை தூக்கி போயிருக்கு சம்மு. உனக்கு இப்போ பரவாயில்லையா! ரொம்பவும் சிரமா பட்டையா சம்மு?”….. என்ற கணவனின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவனை முறைத்தவள்.
“நான் பார்த்து தான் உம் மகனவே உம் கண்ணுல காட்டுனாங்க. நான் தலை பிள்ளை எங்கன்னு கேட்டேன்” என்று ஒரு முறைப்பாடு சொல்ல.
“ நீயி போய் கூட்டி வர வேண்டாமா வேலு. நாம சொல்றா மாதிரி இருக்குமா! பிள்ளை பொறந்த உடனே போக வேண்டி தான! உமக்கு ஆசை இருக்குற மாதிரி தான, பிள்ளைக்கும் ஆசை இருக்கும்” என்று அந்த நிலையிலும் சடவு சொன்னாள்.
மாறன் உடன் தவ்வி கொண்டு வந்தாள் பவித்ரா. வெளியே நின்றே, அப்பத்தா கையில் இருக்கும் தம்பியை ஆசை ஆசையாக பார்த்தாள்.
பின் தாயை வந்து கட்டி கொண்டவள், “ அம்மா! தம்பி என்னை மாதிரியே இருக்கான்லமா! எம் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் சொல்லுவேன். என்னை மாதிரியே எந்தம்பின்னு. எம் முகம் வித்தியாசமா எல்லாம் இல்லை, எங்க வீட்டுல எல்லாருக்கும் அப்படி தான்னு. இது எங்க அடையாளம் அக்கா! தம்பின்னு! என்னம்மா?”என்று தாயை கேட்க.
“ஆமா தங்கம்! உந்தம்பி உன்னை மாதிரியே! உங்க தாத்தா, நியி அப்புறம் உந்தம்பி… உங்க குடும்ப அடையாளம் … போதுமா!” என்றாள் சிரித்து கொண்டே.
ஆமாம்! பிறந்த குட்டி பையனும். அவன் அக்காவை போல் ஒரு பக்க கன்னம் முழுவதும் மச்சம் வைத்து பிறந்திருக்க. அவ்வளவு சந்தோஷம் பவித்ராக்கு. அதை குறையாக எண்ணியவள், தற்போது பெருமையாக எண்ணி கொண்டாள் குழந்தை.
ஆம்! எங்கள் தாத்தா அப்படி. அது போல தான் நானும், எந்தம்பியும். இது எங்கள் அடையாளம் அன்றி குறை இல்லை.