புன்னகை – 1
சென்னை அண்ணாநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வாகன நெரிசல் அதிகமின்றி அங்குமிங்குமாக சிலபல மனிதர்கள் நடமாட்டத்துடன் சிறிதும் பரபரப்பின்றி மாலைவேளை சோம்பலாக நகர்ந்துகொண்டிருந்தது.
பார்த்தவுடன் தெரிந்துவிடும் அப்பர்-மிடில்க்ளாஸ்வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது என்பது. தனித்தனி வீடுகளும் அடுக்குமாடி குடியிருப்புக்களுமாய் கலந்து அதிக சலசலப்பின்றி அமைதியாக காணப்படும்.
மேகமூட்டம் வெளிச்சத்தை குறைத்து பிற்பகல் நேரத்தை இருள்போர்வைக்குள் இழுத்துக்கொண்டது போல கருமை படர்ந்துகிடந்தது. மழைமகள் தரைதொட தொடங்கியதும் மண்வாசம் அவ்விடத்தை ஆக்ரமிக்க ஆரம்பித்தது.
மேலும் வானம் இருட்டிக்கொண்டு வர மழைத்துளிகள் மென்மையாக சிதறத்தொடங்கிய நேரம் சரியாக வீட்டை அடைந்துவிட்டாள் மலர். மழைக்காலம் வேறு. சிலுசிலுவென்ற குளிர் காற்று உடலை ஊசியென துளைத்தது.
குளிரில் நடுங்கிக்கொண்டே கேட்டை திறந்து வீட்டின் முன் ஸ்கூட்டியை நிறுத்தவும் மழை சடசடவென பெருந்துளிகளாய் கொட்டவும் சரியாக இருந்தது. ஆனாலும் லேசாக நனைந்துதான் போயிருந்தாள் மலர்.
அதற்குள் கேட் திறக்கும் சத்தத்தில் எழுந்துவந்து மருமகளை பார்த்துவிட்ட காமாட்சி டவலை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்து க்ரில்கேட்டை திறந்து வெளியே வந்தவர்,
“மலரு ரொம்ப நனைஞ்சிட்டியாத்தா?…” என,
“என்ன அத்தை இது? உங்களை யார் வெளில வர சொன்னா? வாடைக்காத்து உங்களுக்கு ஒத்துக்காதுல. அதோட தலைல ஸ்கார்ப் கூட கட்டலை. உள்ளே வாங்க முதல்ல…” என மாமியாரை இழுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தவள் க்ரில்கேட்டுடன் உள்கதவையும் இழுத்து அடைத்தாள்.
வீட்டினுள் நுழையும் பொழுதே ஏலக்காய் டீயின் மணம் நாசியில் நுழைந்து சுவைநாளங்களை தூண்டியது. கூடவே சூடான எண்ணையில் கொதிக்கும் வெங்காய பக்கோடாவின் மணமும்.
குளிருக்கு தோதாக இப்பொழுதே அனைத்தையும் ஒருபிடி பிடித்துவிடும் எண்ணம்தான். ஆனாலும் கண்கள் வீட்டை சுற்றி அலைபாய்ந்தது.
“அவள் என்னை தேடி இந்நேரம் வந்திருக்கனுமே?…” என எண்ணியபடி தன்னுடைய அறைக்கு சென்றாள்.
“எங்க அத்தை இந்த குட்டிப்பொண்ணை இன்னும் காணோம்?. ரூம்ல கூட இல்லை…” ஹேண்ட்பேக்கில் இருந்த மொபைலை எடுத்து சார்ஜ் போட்டு வெளியில் வைத்துவிட்டு, மாத்திரைகள் அடங்கிய சிறு கவரை எடுத்துக்கொண்டு மாமியாரிடம் செல்ல,
“இம்புட்டு நேரம் ஒரே அனத்தல். அவரு தான் தோள்ல போட்டு தட்டிக்குடுத்துட்டு இருந்தாரு. பாப்பா இப்போதான் தூங்கவே ஆரம்பிச்சா. ஏற்கனவே நாலு நாளா ஜலதோஷம் அவளுக்கு. இப்போ இப்டி மழை வேற அடிச்சு கொட்டுது. திரும்பியும் காய்ச்சல்ல வச்சிடுமோன்னு கொஞ்சம் பயமாவே இருக்கு மலரு…”
பேசிக்கொண்டே டீயை ப்ளாஸ்கில் ஊற்றியவர் ரெடியாகிவிட்ட பக்கோடாவை எண்ணையிலிருந்து எடுத்துவிட்டு மீண்டும் போட ஆரம்பித்தார்.
அமைதியாக கேட்டுக்கொண்டு நின்ற மலரை பார்த்தவர் ஒரு பெருமூச்சை வெளியிட அடுத்து என்னவருமென்று அறியாதவளா மலர்?
“நான் டேப்லட்ஸ், ஐ ட்ராப்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் அத்தை. மாமாக்கிட்ட குடுத்துட்டு வரேன்…” என நழுவ பார்க்க,
“முதல்ல போய் துணியை மாத்து. சேலை கொஞ்சம் நனைஞ்சு தான் இருக்கு…” என்றவரிடம் தலையாட்டிவிட்டு வேகமாக சென்றாள்.
“ஹ்ம் என்னைக்குத்தான் இவ மனசு மாறப்போகுதோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்…” வழக்கமாக தோன்றும் எண்ணம் அப்பொழுதும் மேலெழும்ப தான் செய்தது காமாட்சிக்கு.
அறைக்குள் நுழைந்த மலர் லேசாக ஒரு குளியலை போட்டுவிட்டு சுடிதாருக்குள் நுழைந்தவள் தலையை அவிழ்த்து ஹேர்ட்ரையரில் உலர்த்தி பின் இறுக்கமாக பின்னலை போட்டுவிட்டு வெளியே சென்றாள்.
வேகமாக படியேறியவள் அந்த அறையின் முன்னால் ஒருநிமிடம் தயங்கி நின்றாள். பின் மெல்ல கதவை தட்டி ஒலியெழுப்ப,
“உள்ளே வாம்மா…” என்ற கம்பீரக்குரலில் கதவை திறந்து உள்ளே சென்றாள்.
அங்கே சாய்வு நாற்காலியில் வைத்தியநாதன் சாய்ந்திருக்க அவரின் மார்பில் மூன்று வயது முழுமையடையாத மழலையாய் செப்புவாய் லேசாக திறந்திருக்க அதன்வழியாக மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு வருணிகா உறங்கிக்கொண்டிருந்தாள்.
பார்வை மகளை வருடினாலும் கை அதன்பாட்டிற்கு வேலையில் இருந்தது. அங்கிருந்த மேஜையருகே சென்றவள் வாங்கிவந்திருந்த மாத்திரை மருந்துகளை அதனதன் டப்பாக்களில் போட்டுவிட்டு கவரை சுருட்டி கையில் வைத்துக்கொண்டவள் தயங்கி நிற்க,
“நானே கொஞ்சம் நேரம் கழிச்சு. கீழே தூக்கிட்டு வரேன்மா. நீ போ…”
அதன்பின் அங்கே நிற்க மலருக்கு வேண்டுதலா என்ன? ஏனோ சிறுவயதிலிருந்தே வைத்தியநாதன் என்றால் கொஞ்சம் உதறல் தான் மலருக்கு. அவர்மேல் எப்படி தனக்கு இத்தனை பயம்? என இன்றளவிற்கும் தெரியாது.
அவரின் பார்வையா? குரலா? அவரின் தோற்றமா? அனைத்தும் கொடுத்த தோரணையா? இன்றுவரை பிரித்தறியமுடியாத விஷயமாகவே இருந்துவருகிறது. ஆனாலும் அந்த தயக்கமும் பயமும் அவளை விட்டு விலகவே இல்லை.
முடிந்தவரை அவரின் கண்முன்னால் வரவே அஞ்சுபவள் அவரின் வீட்டிற்கே மருமகளாய் சென்றது தான் விதிவசம் என்பது.
ஆனாலும் அந்த பயம் இன்று வரை தான் எடுத்திருக்கும் முடிவில் இல்லாமல் போனது தான் அதிசயம். என் வாழ்க்கை என் உரிமை என பிடிவாதத்தின் மறு உருவமாய் வைத்தியநாதனின் மருமகளென நிரூப்பித்தாள் இந்த ஒரு விஷயத்தில் மட்டும்.
மலர் கீழே இறங்கி வரவும் காமாட்சி இரண்டு தட்டில் வெங்காய பக்கோடாவுடன் வந்து டீப்பாயில் வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தவர் தன் புடவை முந்தானையால் தனது வியர்வையை துடைத்துக்கொண்டார்.
‘மலரு, அங்க ப்ளாஸ்க்ல டீ ஊத்தி வச்சிருக்கேன். அப்படியே ரெண்டு கப்பையும் எடுத்தாருத்தா…” என்றவர் ஒரு தட்டை தனக்கு எடுத்துக்கொண்டார்.
டீயை எடுத்துவந்த மலர் அதை ஊற்றி அவருக்கு கொடுத்துவிட்டு தனக்கும் ஊற்றிக்கொண்டு அவருக்கு எதிரே சென்று காலை மடித்து சம்மணமிட்டு அமர்ந்தவள் தன் பக்கம் ஒரு தட்டை நகர்த்திக்கொண்டாள்.
“என்ன சொல்லுங்கத்தை உங்க கைமணமே தனிதான். செம காம்பினேஷன். அதுவும் இந்த மழைக்கு சும்மா அள்ளுது போங்க…” என சில்லாகித்துக்கொண்டே சாப்பிட காமாட்சிக்கு நிறைந்துபோனது மனது.
மீண்டும் அவளது கப்பில் டீயை ஊற்றியவர்,
“போதும் போதும். முதல்ல சாப்பிடு. காலேஜ்க்கு போனா சரியா சாப்பிடறதே இல்லை. இனியாச்சும் ஒழுங்கா சாப்ட்டு நேரத்துக்கு தூங்கி எழுந்திரு. வீட்ல நல்லா ஓய்வெடு. நாளைக்கு கொஞ்சம் வெயில் வந்தா உன் தலைக்கு நல்லெண்ணெய் வச்சுவிடனும். கண்ணெல்லாம் சூடாகி சிவந்துகிடக்கு…” என்றவர்,
“அப்டியே நாட்டுக்கோழிக்கும் சொல்லிவைக்கனும் உன் மாமாக்கிட்ட. இன்னைக்கே சொன்னாதான் விடியல்லையே போய் வாங்கி வருவாரு. அப்படியே…”
“ஐயோ அத்தை இப்போவே ஆரம்பிக்காதீங்க. இன்னும் பத்து நாள் வீட்லயே தானே இருக்க போறேன். நல்லா வச்சு செய்யலாம் என்னை…” என கேலியாக கூறியவள்,
“ஆமா எப்பவும் லேட்டா தானே டீ, டிபன் செய்வீங்க. இன்னைக்கு என்ன நாலுமணிக்கே ரெடி பண்ணிட்டீங்க?…” என்றபடி மீண்டும் கிட்சனுக்குள் சென்று பக்கோடாவை நிரப்பி வந்தாள் இருவருக்குமாக.
“இன்னைக்கு சீக்கிரமே வந்திருவேன்னு சொன்னியே மலரு, வானம் வேற மதியத்தில இருந்து இருட்டிட்டே இருந்ததா. அதான் வேகமா வெங்காயம் அரிஞ்சு பக்கோடாவுக்கு ரெடி பண்ணிட்டேன்…”
“போன்ல சொன்னேன்ல அத்தை. ரத்னாவோட பொண்ணுக்கு இன்னைக்கு பர்த்டேன்னு. ஈவ்னிங் பார்ட்டிக்கு போக முடியாதில்லையா. அதான் இப்போவே போய் கிப்ட் வாங்கி குடுத்துட்டு வந்தேன்…”
“மழை இல்லைனா மாமாவோட உன்னை அனுப்பி வச்சிருப்பேன். நீ தான் வேண்டாம்னு சொல்லிட்ட…”
“இல்லைங்கத்தை. முதல்ல பாப்பாவுக்கு சரியாகட்டும். உடம்பு சரியில்லாம இருக்கிறப்போ அவ்வளோ தூரம் நைட்ல நான் கூட்டிட்டு போய்ட்டு வந்தா அந்த அலைச்சல்ல இன்னும் முடியாம போயிடும். அதுவும் அங்க ஐஸ்க்ரீம், சாக்லேட்ன்னு இவ சாப்பிடுவா…”
மலர் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே வைத்தியநாதன் கீழிறங்கி வரும் அரவம கேட்க வேகமாக கால்களை கீழிறக்கி சரியாக அமர்ந்தவள் அமைதியாக டீயை பருக ஆரம்பித்தாள்.
“ம்மா…” என்ற மழலை குரலில் திரும்பியவள்,
“வருணிக்குட்டி எழுந்துட்டீங்களா?…” என்றபடி எழுந்து குழந்தையிடம் செல்ல வருணிகா பாய்ந்து தாயின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
“ம்ம்மழ்ழ்ழ,…. ஆன்னு… பாத்த்த்த்த்து….” என விழிகளை உருட்டி தாயிடம் கதை பேச தொடங்க இருவருமாக தங்கள் உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்க வைத்தியநாதன் அமைதியாக அதை கண்டும் காணாமல் பார்த்திருந்தார்.
அதற்குள் காமாட்சி எழுந்துசென்று பாலை காய்ச்சி அதில் பனங்கற்கண்டை தட்டி போட்டு கலந்து எடுத்துவந்து வைத்தியநாதனுக்கு கொடுத்தார். சிறிய தட்டில் கொஞ்சமாக பக்கோடாவும்.
வைத்தியநாதன் டீ, காபி என எந்தவித பழக்கமும் இல்லாதவர். சிறுவயதிலிருந்தே அதை ஒரு கெட்ட பழக்கமாகவே கருதி இன்றுவரை அதை கடைபிடித்தும் வருகிறார். உணவு பழக்கத்திலுமே அவருக்கு என்று சில கோட்பாடுகள்.
இதற்கு நேர்மார் அவர் மனைவி காமாட்சி. எப்பொழுதும் ப்ளாஸ்கில் காபி, இல்லை என்றால் டீ இருந்தே ஆகவேண்டும். எழுந்ததும், காலை சாப்பிட்டதும், மதியம் சாப்பிடுவதற்குள் இரண்டுமுறை மாலை ஆவதற்குள் இரண்டுமுறை என கொஞ்சம் கொஞ்சமாக அதை பருகியே காலத்தை ஓட்டிவிட்டார். டீ, காபி இல்லையென்றால் அவரது வேலை சீராக செல்லவே செல்லாது.
காமாட்சியின் மறு உருவமாக இப்பொழுது மலரும் அதையே பின்பற்ற ஆரம்பித்தாள். ஆனானப்பட்ட வைத்தியநாதனே அதை மாற்ற முயன்று வெற்றிகரமாக தோல்வியையே தழுவினார்.
உணவு பழக்கவழக்கத்தில் இன்றுவரை எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது காமாட்சிக்கு. ஆனாலும் இந்த நொடி வரை எந்தவித நோய் நொடிகளும் அண்டாமல் தன்னுடைய உடலை ஆரோக்யமாகவே வைத்திருக்கிறார்.
அதற்கு நேர்மாறாக இந்த நேரம் இதைத்தான் உண்ணவேண்டும், இதை உண்ணக்கூடாது, இவ்வளவு தான் உண்ணவேண்டும், எண்ணை பலகாரங்கள் அதிகம் கூடாது என்னும் பல கோட்பாடுகளுடைய வைத்தியநாதனுக்கு பிரஷர், சுகர், கண்பார்வை கோளாறு என அனைத்தும் உண்டு.
காமாட்சி கொடுத்த பாலை வாங்கிக்கொண்டவர் மணியை பார்க்க அது நாலேகால் என்றது. வேகமாக தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவர் குறிப்பிட்ட சேனலுக்கு தாவினார்.
“வாட் நெக்ஸ்ட்?…” என்னும் அழுத்தமான குரலில் உடல் தூக்கிப்போட வேகமாக் திரும்பி டிவியை பார்த்தாள் மலர்.
பலதரப்பட்ட சேனல்களின் மைக்குகள் வைக்கப்பட்டிருந்த மேடை மீது கால்மேல் கால் போட்டபடி அவன். அலட்சியமாகவும் திமிரோடும் அமர்ந்திருக்க அவன் மேல் கேமராக்களின் வெளிச்சம் விடாமல் ஒளிர்ந்தபடி அவனை உள்வாங்கி உள்ளுக்குள் நிரப்பிக்கொண்டிருந்தது.
அது ஒரு புதிய படத்திற்கு பூஜை போடுவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி.
“இந்த படம் தமிழ்ல உங்களுக்கு முதல் படம். இதை நீங்களே தயாரிச்சு நடிக்கிறக்கிறீங்க ஸார். உங்களின் முந்தைய படங்களை போல இதுவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்…” என,
“நன்றி…” என்றான் வசீகரப்புன்னகையுடன் அவன்.
“ஒரு தமிழனான நீங்க இதுவரை தெலுங்கு படம் மட்டுமே நடிச்சிருக்கீங்க. திடீர்ன்னு தமிழ்நாட்டுப்பக்கம் உங்க பார்வை திரும்பியிருக்கே? என்ன காரணம்?…” நக்கலாக ஒலித்த அந்த கேள்விக்கு கொஞ்சமும் முகம் மாறாமல்,
“யார் யாரோ என் நாட்டில் சம்பாதிச்சு சொத்து சேர்க்கும் போது நான் செய்யக்கூடாதா? நானும் கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொள்ளலாம்னு தான். இதுக்கு வேறென்ன காரணம் இருக்கப்போகுது?…” வேண்டுமென்றே அவன் கூறிய பதிலில் அனைவரும் திடுக்கிட்டு தான் போயினர்.
‘சார் உங்களுக்கும் நடிகை திவ்யவர்ஷினிக்கும் ப்ரேக்கப் ஆகிடுச்சுன்னு பேசறாங்களே, அது உண்மையா? அதுக்கு காரணம் உங்க லாஸ்ட் மூவி ஹீரோயின் தான்னு சொல்றாங்களே?…”
“ப்பா…. ப்பா…” என்றபடி வருணிகா மெல்ல மலரின் மடியைவிட்டிறங்கி டிவியை நோக்கி தளிர்நடையிட்டு குதூகலமாக புன்னகையோடு முன்னேறினாள்.
அவளது அப்பா என்னும் அழைப்பு மலரின் அடிமனதை உலுக்கிக்கொண்டிருந்தாலும் வைத்தியநாதன் முன் மகளை திருத்தமுடியாமல் அடக்கப்பட்ட கோபத்தோடு அமர்ந்திருந்தாள்.
தொலைகாட்சி திரையில் தெரிந்த அவனது பிம்பத்தை தொடமுடியாமல் வருணிகா உதடுகள் பிதுக்கி அழ ஆரம்பிக்க வேகமாக சென்று குழந்தையை தூக்கிக்கொண்டார் காமாட்சி.
அவருக்கு முகமே கசங்கிபோனது. இன்னும் எத்தனை நாளைக்கு தன் பேத்திக்கு இந்த நிலையோ என எண்ணியவர் மனம் மலரின் மனதை அறிந்தவராக அவளை திட்டுவதற்கு கூட மனமில்லாமல் சென்று மலரின் அருகில் அமர்ந்தார்.
இதை கவனித்துக்கொண்டிருந்த மலரின் கவனம் மகளை அன்றி வேறெங்கும் பார்வையை திருப்பவில்லை. காமாட்சியின் மடியில் இருந்து மலரின் மடிக்கு மாறிய வருணி தாயின் தாடையை பிடித்து டிவியை காண்பித்து,
“ம்மா… ப்பா… சிச்சு…” அங்கே சிரித்தமுகமாக அமர்ந்திருப்பவனை காண்பித்து தன் முகம் பார்த்து புன்னகைத்த மகளை நெஞ்சோடு அழுத்திக்கொண்டாள் மலர்.
கண்களை அழுந்த மூடிக்கொண்டவளின் செவியில் மீண்டும் அதே குரல்.
“ஏன்? அதுக்கான காரணத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே. உங்களுக்கு தெரிந்த பதிலை திரும்ப என்கிட்டே கேட்கிறீங்க? எனி அனதர் கொஸ்டின்?…”
அந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டம் அவர்களுக்குள் சலசலத்துக்கொண்டது. அவர்களுக்கு அவனை எப்படி அணுகுவது என்பது இன்றுவரை குழப்பமாகவே இருந்துவருகிறது.
தன்னை நோக்கிவரும் விமர்சனங்களும் கேள்விகளும் நேர்மையாக இருந்தாலே ஒழிய வேறெந்த வம்புகளுக்கும் வதந்திகளுக்கும் அவனது பதில் அவர்கள் பாணியில் தான்.
பதிலுக்கு பதில். திமிருக்கு திமிர். எகத்தாளத்திற்கு எகத்தாளம். துணிச்சல் மற்றவர்களைவிட மிகவும் அதிகம். யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவது.
எந்த இடத்திலும் பிடிகொடுக்காமல் கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கும் அவனிடம் வேண்டுமென்றே வம்பாக கேள்விகேட்டால் அவன் அவர்களையே மடக்கிவிடும் தில்லாலங்கடி. இப்பொழுதும் அதே தான் நடந்துகொண்டிருந்தது அந்த சந்திப்பில்.
“இவன்கிட்ட கேள்வி கேட்டா இவன் நம்மையே மடக்கறானே? உண்மையில் யார் யாரை கேள்விகேட்க வந்திருக்கோம்னே தெரியலை…” இப்படியாக தங்களுக்குள் புலம்பிக்கொண்டிருக்க சுட சுட வதந்திகளை கொடுப்பதில் பெயர்போன அந்த பத்திரிக்கையாளர்,
“உங்களுக்கும் நடிகை திவிஷாவிற்கும் இடையில் ஒரு இதுவாமே? அதனால தான் உங்களுடைய இந்த படத்திற்கு நடிகை திவிஷாவையே உங்க ஹீரோயினா புக் பண்ணியிருக்கீங்கன்னும் இந்த மூவி முடிந்ததும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னும் வேற பேசிக்கிறாங்க?. நிச்சயதார்த்தம் கூட ரகசியமா நடந்திடுச்சாமே?…”
அந்த கேள்விக்கு அவன் வெறும் புன்னகை மட்டுமே பதிலாக தர அதில் கேள்வி எழுப்பியவர் எரிச்சலாக,
“சிரிச்சா என்ன அர்த்தம் ஸார்? பதில் சொல்லுங்க. இல்லைனா இந்த செய்தியை நீங்க மறுத்து சொல்றீங்களா?…” எனவும்,
“நோ, நோ, டெஃபெநெட்டா நான் மறுக்கபோறது இல்லை. அதான் நீங்களே எல்லாத்தையும் கண்டுபிடிச்சு கரெக்டா சொல்றீங்களே? நான் ஏன் மறுப்பு சொல்லனும்? அப்டியே என் கல்யாணம் எங்கே, எப்போ, யார்கூட நடக்குதுன்னும் சொல்லிடுங்க…” என்றான் நக்கல் வழியும் குரலில்.
“பொறுப்பா பதில் சொல்லுங்க சார்…” கொஞ்சம் உஷ்ணமாகவே கேள்வியாளர் கூற,
“அதெப்படி? யார் யார்கூட சுத்தறாங்க, என்ன செய்யறாங்கன்னு அடுத்தவங்க அந்தரங்கத்தை மோப்பம் பிடிச்சு கிசுகிசுன்ற பேர்ல எழுதற நீங்க பொறுப்பானவங்கனா உங்களுக்கு இந்த பொறுப்போட தான் பதில் சொல்ல முடியும்…”
எந்தவித கோபமோ எரிச்சலோ இல்லாமல் அலட்டலின்றி அமர்த்தலாகவே அவன் பதில் கூறினான்.
“ஸார் நாங்க ப்ரெஸ். எந்த ஹீரோவும் எங்கக்கிட்ட இப்படி நடந்துக்கிட்டது இல்லை. நீங்க என்னன்னா இப்படி பேசறீங்க? எங்களை பகைச்சுக்காதீங்க ஸார்…”
“ஈஸிட்? நான் இப்படித்தான். கேள்விப்பட்டிருப்பீங்க தானே?…” சீண்டல் அவன் வார்த்தையில் தெறித்தது.
“எங்களை நீங்க ரொம்ப தவறா பேச நாங்க அனுமதிக்க முடியாது. உங்க மேல நாங்க வழக்கு தொடரவேண்டியதாகிடும். இப்போதான் நீங்க தமிழகத்தில் காலூன்ற போறீங்க. ஆந்திராவில் வேணும்னா நீங்க பெரிய ஸ்டாரா இருக்கலாம். பார்த்து பேசுங்க…” என இன்னொருவர் கூற,
“என்ன மிரட்டறீங்களா? என்ன முடியுமோ செய்ங்க. பார்த்துக்கலாம். நான் எதுக்கும் அஞ்சுபவன் இல்லை. உங்களுடைய கேள்வி எப்படி இருக்குதோ அதற்கு தகுந்தது போலதான் என்னுடைய பதிலும் இருக்கும்…”
“தீயில்லாமல் புகை கிளம்பாது ஸார்…” விடாமல் அவனை சீண்டப்பார்க்க,
“வதந்திகளுக்கு பதில் சொல்லிட்டே இருந்தா என்னுடைய வாழ்க்கையை நான் வாழமுடியாது. நான் இல்லைன்னு மறுப்பு சொன்னா மட்டும் நீங்க நம்பிடவா போறீங்க?…” அனைவரும் அமைதியாக இருக்க அவன் மேலும் தொடர்ந்தான்.
“எனக்கும் இன்னொரு நடிகைக்கும் திருப்பதியில கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஒரு ரூமர். அது அடங்கறதுக்குள்ள ப்ரேக்கப். நெக்ஸ்ட் லவ்ன்னு நீங்களே எனக்கு நூறுமுறை நிச்சயமும், கல்யாணமும் பண்ணிவச்சுட்டீங்க…” என்றவன்,
“ஒன்னொண்ணுக்கும் நான் பதில் சொல்லிட்டு இருக்கமுடியாதில்லையா? நீங்க என்னை என்ன சொல்றீங்க? என்ன பேசறீங்க? என்னை பத்தின வதந்தி என்ன வந்திருக்குன்னு நான் பார்த்துட்டே இருக்க முடியாது…”
அவன் பேசி முடிக்க அவ்விடமே நிசப்தமானது. யாரும் எந்த கேள்வியை எழுப்பவும் முன்வரவில்லை. அந்த சூழல் அவனிற்கு என்ன உணர்த்தியதோ அதுவரை முகத்தில் இருந்த அலட்சியத்தை, திமிரை கைவிட்டவன் எழுந்து நின்று,
“பர்ஸ்ட் அன் லாஸ்ட் ஒன்னு சொல்லிடறேன். எனக்கான லைப் இந்த சினிமா உலகத்தை தாண்டி எனக்காக காத்துக்கொண்டிருக்கு. அதை தேடிய என்னுடைய பயணம் விரைவில் நிறைவுறும்…”
“ஸார் அப்போ திவிஷா?. அவங்களோட உங்க லவ் உண்மையில்லையா?…” அப்போதும் விடாமல் அவனை வம்பிலுக்கு சிரித்துவிட்டான் அவன்.
நடிகை திவிஷாவை நெருங்கி நின்றவன் அவளை தன்னோடு அணைத்து,
“இவங்க என்னுடைய குட் ப்ரெண்ட் அன்ட் நாங்க லவ்வர்ஸ் இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்?…”
அவன் குறும்பு கொப்பளிக்க கண் சிமிட்டி கேட்டது தன்னிடமே நேராக கேட்பதை போல இருந்தது.
அவனின் உயிரோட்டமான அந்த பார்வை மலருக்கு மிளகாயை அரைத்து பூசியதை போல இருந்தது. வைத்தியநாதனை திரும்பி பார்க்க அவரோ எந்தவித சலனமும் இன்றி தொலைகாட்சியிலேயே கவனம் பதித்திருந்தார்.
“ஜொள்ளுப்பார்ட்டி. பல்லை பல்லை காட்டிட்டு எப்படி நிக்கிறான்? அவளோட உரசிக்கிட்டு. ..” அவனை மனதில் தாளித்து தள்ளிவிட்டாள் மலர்.
அப்பா அப்பா என்று பொக்கைவாய் திறந்து பூஞ்சிரிப்போடும் ஏக்கத்தோடும் அவனின் பிம்பத்தை வருடும் மகளின் முகத்தில் அவளின் விழிகள் நிலைகொண்டது.
இந்நிலைக்கு தன்னையும் தன் உயிருக்குயிரான மகளையும் நிறுத்திய அவனை நினைக்க நினைக்க உள்ளமெல்லாம் காந்தியது.
“உன்னை மன்னிக்கவேமாட்டேன்…” என்றைக்கும் போல இன்றும் சூளுரைத்துக்கொண்டாள் மலர்.
அவளின் உறைநிலையை கலைக்கவென தொலைபேசி கதற அதன் ஒலியில் இவள் மனம் சிதற ஆரம்பித்தது.
தான் எடுக்கும் வரை அது ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் என்பதை நன்கு அறிந்ததிருந்தும் சட்டமாக அதை வெறித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
ஏனோ இன்று அவளின் மனம் சமன்பட மறுத்தது. அழைப்பு நின்று இரண்டு மூன்று என அழைத்து ஓய்ந்து மீண்டும் நான்காம் முறை ஆரம்பித்தது.
காமாட்சியோ வருணிகாவை தூக்கிக்கொண்டு கிட்சனிற்குள் நுழைய வைத்தியநாதன் கதவை திறந்துகொண்டு வெளியில் சென்று நின்றார்.
எத்தனை நேரமானாலும் தன்னைத்தவிர அதை மற்ற இருவரும் எடுக்கபோவதில்லை என்பதை உணர்ந்தே இருந்தாள் மலர்.
சில நிமிட போராட்டங்களுக்கு பின் கடுகடுப்போடு அழைப்பை ஏற்றவள் வாயை திறக்கும் முன்,
“ஹேய் ரோஸ்ஃபட்…”
அழுத்தமான குரலில் காதலை குழைத்து கரகரப்போடு கேட்ட அந்த ஆழமான அழைப்பு உயிர்வரை தொட உருகி கரைத்திருப்பாள் மற்றொரு பெண்ணாக இருந்தால்.
இவள் மலராகிற்றே. அவனது அழைப்பில் கல்லை விட கடினமானாள்.
அவனது ஒற்றை வார்த்தையின் கொஞ்சலில் அவள் உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தாள்.
ஜீவிக்கும்…