“சம்பந்தி, நான் வந்து…”
“நீங்க ஒண்ணும் சொல்லவேண்டாம். நீங்க நினைக்கிறது போல ஒன்னும் நடக்காது. எங்களுக்காக யோசிச்சு நீங்க உங்க பையோனோட சந்தோஷத்தை அழிச்சிடவேண்டாம்…” சுமங்கலி சொன்னதும் அதிர்ந்தேபோனார் ஆண்டாள்.
“என் பையனோட சந்தோஷத்தை நானே அழிப்பேனா? என்ன வார்த்தை சொல்லிட்டீங்க சம்பந்தி?…” என்றவர்,
“முதல்ல வேணும்னா நான் மலரை வேண்டமனு சொல்லியிருக்கலாம். அதுக்கு ஒரு காரணம் உங்களோட பாரம்பரியமான குடும்பம், இன்னொரு காரணம் மலரோட இனம். அவங்க நம்ம வகையறா கிடையாது. அதுதான் முக்கிய காரணம்…”
நேத்ரா உணர்வில்லாது பார்த்தாள் தன் தாயை. அவளால் சத்தியமாக அவரை அப்படி நினைக்கமுடியவில்லை. மலரின் வீட்டிற்கு சென்று பேசும் வரைக்கும். ஆனால் பேசிய அன்று அம்மாவிற்குள்ளும் வேறுபாடு பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறதே என நினைக்கையில் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.
“மகளை பெரிய குடும்பத்தில் வாழ அனுப்பிட்டு மகனுக்கு இப்படிப்பட்ட பின்புலத்தை கொண்ட குடும்பத்தில் பெண்ணெடுக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. அவனுக்கும் ஒரு நல்ல இடத்தில் வரன்கள் வந்துட்டே இருந்தது. அப்படிப்பட்ட நேரத்துல தான் மலரை விரும்பறதா சொல்லி அவளை பெண் கேட்க சொன்னான்…”
“நான் அவனுடைய எதிர்காலத்தை நினைச்சு கனவு கண்டித்து இருக்கும் பொழுது அதை உதைக்கிறதை போல அவன் வந்து பேசினதும் என்னால தாங்க முடியலை சம்பந்தி. நான் மறுக்க அவன் பிடிவாதமாய் இருக்க அந்த கோபம் எல்லாம் மலர் மேலதான் திரும்பிச்சு…”
“இதை நடத்தவே விடக்கூடாதுன்னு தான் அன்னைக்கு மலர் வீட்ல போய் அவ்வளவு பேசிட்டு வந்தேன். அவங்களும் இதுக்கு விருப்பமில்லைன்னு சொல்லி அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. இனி என் பையனுடைய எதிர்காலம் நல்லபடியா அமையும்னு இறுமாந்து இருந்த எனக்கு சவுக்கடி குடுக்கிறதை போல அவன் என்னை விட்டு விலகிட்டான்…”
“நான் பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சுவச்சா மனசு மாறிடுவான்னு நினைச்சேன். என் நினைப்பில் மண்ணை போடுறது போல் அவன் மலரை மறக்கவே முடியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டான். எத்தனை முயற்சி செஞ்சும் அதுக்கப்றம் எங்களை பார்க்க வரலை…”
“தப்புப்பண்ணிட்டோமோன்னு கூட நான் நினைச்சதுண்டு தெரியுமா? ஆனாலும் என்னுடைய வீம்பு அதை ஒத்துக்க விடலை. அவன் நடிகனானதும் இன்னமும் எனக்கு அதிர்ச்சி தான். ஆனாலும் அப்போவாச்சும் அவன் மனசு மாறுவான் கல்யாணம் செஞ்சுப்பான்னு நினைக்க திரும்ப மலர் குடும்பத்தோட அவன் உறவாடறது தெரிஞ்சது…”
“அதுல அளவுக்கதிகமா கோபப்பட்டேன். அவனையே வேண்டாம்னு சொல்லிட்டு போனவ திரும்ப எதுக்கு அவனை பழக விடுறான்னு. ஒன்னு அவனை கல்யாணம் செஞ்சுக்கனும். இல்லைனா ஒரேடியா அவன் வாழ்க்கையை விட்டு விலகி இருக்கனும். ரெண்டும் இல்லாம இப்படி பிடிவாதமா இருக்கிறது எனக்கு எரிச்சலா இருந்தது…”
அவரின் பேச்சில் ஆச்சர்யமாக நேத்ராவும் சுமங்கலியும் பார்க்க,
“ஆமாம் சம்பந்தி, அப்பவே நான் மலரை ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன். மலரை மறந்து என் மகன் மனசு மாறுவான்னு இருந்தேன். அடுத்து அவன் எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்கனும்னு பாடுபட்டேன். அவன் பிடிவாதம் குறையவே இல்லைன்னதும் ஒருகட்டத்துல அவன் யாரை வேணும்னாலும் கல்யாணம் செஞ்சா போதும்னு இருந்தேன்…”
“ஆனா அவன் பிடிவாதத்துக்கு முன்னால தனிமரமா அவன் நிக்கிறதை பார்த்து யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் செய்யிறதுக்கு அவன் மலரையே கட்டிக்கிட்டா கூட தேவலைன்னு முடிவுக்கு வந்துட்டேன்…”
“இதை நீங்க அனய்க்கிட்டையோ மலர்க்கிட்டையோ சொல்லியிருக்கலாமே? பிரச்சனை இல்லாம சுமூகமா நீங்களே இந்த கல்யாணத்தை நல்லபடியா நடத்திகுடுத்திருக்கலாமே? பிள்ளைங்களுக்கும் அது சந்தோஷமா இருந்திருக்கும்…”
“செஞ்சிருக்கலாம் தான். ஆனா மலரை நான் பேசினது கொஞ்சமில்லை. என்னால என்னுடைய சுயகௌரவத்தை விட்டு இறங்கமுடியலை. ஏன் செய்யனும்? எதுக்கு சொல்லனும்? அதுக்கு என்னுடைய ஈகோ அதுக்கு இடம் கொடுக்கலை…”
“அதுவும் இல்லாம மலர் இன்னும் அவனை ஏத்துக்காம இருக்கிறது என்னுடைய கோபத்தை அதிகமாக்கிட்டே இருந்தது. அதான் அப்பப்போ போன் செஞ்சு அவ மாமனாரை திட்டுவேன். ரோஷப்பட்டு என் புள்ளயை கட்டிப்பான்னு…”
அவரைபார்த்து புன்னகைத்த சுமங்கலி நேத்ராவை பார்க்க அவள் ஆண்டாளை முறைத்துக்கொண்டே இருந்தாள். அதில் இன்னும் சுமங்கலியின் புன்னகை விரிந்தது.
“எல்லாம் சரி, அதான் நீங்க நினைச்சது போல உங்க பையனுக்கு கல்யாணம் நடந்துடுச்சு. இன்னும் எதுக்காக இந்த கோபமான பேச்சும், பார்வையும்?…” என கேட்டதும் கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தார் ஆண்டாள்.
“அவன் கல்யாணம் நடந்தது எனக்கு சந்தோஷம்னாலும் ஒரு தாயா நான் தோத்துட்டேன்னு நினைக்கிறன். இத்தனை வருஷ என்னுடைய தவிப்பும், நியாயமான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் பொய்யாகிடுச்சு. நான் கோபமா பேசினேன் தான். அதுக்குன்னு அவன் என்னை விலக்கி வைக்கலாமா?…”
“எத்தனை நாள் அவனை நினைச்சு நினைச்சு பரிதவிச்சிருப்பேன். அவன் தனியா இருக்கிறதை பார்த்து துடிச்சிருப்பேன். என்னை கொஞ்சமும் புரிஞ்சுக்கவே இல்லையே அவன். அது எல்லாம் சேர்ந்து தான் என்னை அப்படி பேசவைக்குது. என்னையறியாமல் நானே பேசிடறேன்…”
மனதில் உள்ள ஆதங்கம் அனைத்தையும் கொட்டிமுடித்தவர் தலைகுனிந்து அமர்ந்திருக்க,
“இப்போ எதுக்காக நீங்க இப்படி உட்கார்ந்திருக்கீங்க? உங்க பொண்ணை யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க நம்ம வீட்ல. சரியா? நீங்க அதை நினைச்சு கலங்க வேண்டாம். புரியுதா?…” என ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு சுமங்கலி கூற கண்கள் கலங்கிவிட்டார் ஆண்டாள்.
சுமங்கலியின் தோளில் ஆறுதலாய் தன் தலையை சாய்த்துக்கொண்ட நேத்ராவிற்கு உடனே தன்னவனிடம் பேசவேண்டும் என்ற உந்துதலில் மொபைலை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
ரிஷியின் மொபைலுக்கு அழைப்பு விடுக்க அது சென்று சென்று ஓய்ந்தது. மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டவள் வேகமாய் செல்வாவின் எண்ணிற்கு அழைத்தாள்.
“சொல்லுங்க மேம்…” என அவன் கேட்க,
“செல்வா பெரியசாமிக்கிட்ட போனை குடு…”
“மேம் ஸார்…” என அவன் தயங்க,
“மிஸ்டர் பெரியசாமிக்கிட்ட மொபைலை கொண்டுபோய் குடு…” அழுத்தமாய் சொல்ல மறுக்கமுடியாமல் கொண்டு சென்றான்.
“ஸார் உங்களுக்கு கால்…” என ரிஷியை அழைக்க அவன் செல்வாவை கடுமையாக முறைத்தான்.
“ஷூட் போய்ட்டிருக்கும் போது எந்த காலையும் அட்டன் செய்யக்கூடாதுன்னு உன்கிட்ட எத்தனை முறை சொல்றது செல்வா?…”
“இவர் போனை ஆப் பண்ண சொல்றாரு, இவர் மிசஸ் ஆப் பண்ணினா ஆபாயில் போட்ருவேன்னு மிரட்டுறாங்க. மத்தளத்துக்கு ரெண்டுபக்கம் இடி மாதிரி இவங்கள்ட்ட சிக்கிக்கிட்டு என்பாடு தான் திண்டாட்டமா இருக்கு…”
மனதிற்குள் எண்ணிக்கொண்டவன் இப்போ மொபைலை குடுக்கணுமா வேண்டாமா என யோசித்து நிற்க அதை வெடுக்கென பறித்த ரிஷி,
“கெட் லாஸ்ட்…” என்று இரைய அங்கிருந்து நகர்ந்தான் செல்வா.
“சொல்லு நேத்ரா…” ரிஷியின் குரல் கேட்டதும்,
“ரிஷி…” என்றாள் நேத்ரா கலங்கிய குரலில்.
எப்போதாவது உணர்சிவசப்பட்டிருக்கும் தருணங்களில் மட்டுமே அவள் அவனை ரிஷி என அழைப்பது.
அவனின் அரவணைப்புக்காக நேத்ரா ஏங்குவது புரிந்தது. இப்பொழுது அழைக்கவும் உருகிப்போனான்.
“ஹேய் தக்காளி, என்னாச்சுடா?…”
“எனக்கு உன்னை பார்க்கனும். எப்போ வருவ?…” சிணுங்கலுடன் கேட்க,
“இன்னும் டூ த்ரீ டேய்ஸ் மட்டும் தான்டா. வந்துடுவேன்…”
“அதுக்கும் மேல போச்சு…”
“போகாது போகாது. வந்திடுவேன்…” என புன்னகையோடு வாக்களித்தான்.
“போட்டோ பார்த்தேன். உனக்கு அந்த ச்பெக்ஸ் நல்லாவே இல்லை மிஸ்டர் கட்டுமரம். எனக்கு பிடிக்கலை…”
“உன் பழத்துக்கு வயசாகுதேடி தக்காளி…” அவளின் மனநிலையை மாற்ற இன்னும் பேசினான்.
அவள் அழைத்தது எதற்கு என்ன ஏதென்று அவளிடம் கேட்கவே இல்லை. இன்றைக்கு அனய்யின் திருமணம் என்று தெரியும். அங்கிருக்கும் சூழலில் ஏதோ ஒன்று நேத்ராவை பாதித்திருக்கிறது. அதை தன்னையன்றி அவள் யாரிடமும் பகிரமாட்டாள் என்றும் அவனுக்கு தெரியும்.
“சொல்லு தக்காளி, ரொம்ப மிஸ் பன்ற போல?…” காதலாய் அவன் கேட்க அவனின் பேச்சு இன்னும் சில நிமிடங்கள் தொடர்ந்தது.
ரிஷியின் புன்னகை முகத்தை தூரத்திலிருந்து பார்த்த செல்வாவிற்கு,
“மொபைல் கொண்டுபோனப்ப இந்த மனுஷன் காய்ஞ்சதென்ன? இப்போ குழையிறதென்ன?…” என எண்ணி பெருமூச்சொன்றை வெளியிட்டான்.
அவன் மட்டுமில்லாது படப்பிடிப்பில் இருந்தவர்களும் ரிஷியையே பார்த்தும் பார்க்காமலும் கவனித்து இருந்தனர். சில பெண்கள் கூட தங்களுக்குள்,
“இவருக்கு யார் பெரியசாமின்னு பேர் வச்சது? எவ்வளோ ஸ்மார்ட் ஸார்…” என அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
ஆம், சினிமா துறையில் ரிஷியின் பெயர் பெரியசாமி மட்டுமே. ஏற்கனவே அனய்யோடு சேர்ந்து இரு படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவன். அவனை பெரியசாமி என்றே அனைவரும் அறிவர்.
நேத்ராவிடம் பேசிவிட்டு அழைப்பை கட் செய்தவன் செல்வாவை பார்க்க அவன் ஒடி வந்து வாங்கிக்கொண்டான். மீண்டும் ரிஷியின் முகத்தில் இறுக்கம் ஒட்டிக்கொண்டது.
“ஹ்ம் சிங்கம் பேக். இவருக்கு ஆதி சாரே தேவலை…” என நினைத்துக்கொண்டான்.
———————————————–
அனய்யின் வீட்டில் மதிய உணவு நேரம் அமைதியாகவே கழிந்தது. மாலை வரை ஆண்டாளும் அமைதியாகவே இருந்தார். ஏனோ வருணி அவரையே சுற்றி சுற்றி வருவது போல தோன்ற அவருக்குள் இயல்பான பாசம் ஊற்றெடுப்பதை உணர்ந்து எங்கே தானும் இக்குழந்தையை ஏற்றுக்கொள்வோமோ என அஞ்சினார்.
காமாட்சியும் வைத்தியநாதனும் சொல்லிக்கொண்டு கிளம்ப தன்னுடைய பயத்தினால் வருநியையும் அழைத்துச்செல்ல சொல்ல அனய்யின் பெரும் கோபத்திற்கு ஆளானவர் அவனின் வார்த்தையில் ஸ்தம்பித்து நின்றார்.
“உன் பொண்ணாவே பொறந்திருக்கான்னா என்ன அர்த்தம் அனய்?…” என குரல் நடுங்க கேட்க,
“என் பொண்ணுன்னு சொல்றேன். திரும்ப திரும்ப கேட்கறீங்க?…” என்றவன்,
“என்னை உயிரா நேசிக்கிற நீங்க நான் நேசிக்கிற என் மனைவி குழந்தை மேல ஏன் வெறுப்பா இருக்கறீங்க? எனக்காக கூட அவங்களை நீங்க ஏத்துக்க முடியாதாம்மா?…”
மகனின் கேள்வியில் நிலைகுலைந்தார். அவர் தான் மனதளவில் ஏற்றுக்கொண்டாரே? அதை வெளிக்காட்டத்தான் அவராம் முடியவில்லை. தன் மகன் அவனுடைய ரத்தவாரிசோடு இருக்கவேண்டும் என்று தான் நினைத்தாரே தவிர வருணியை வெறுக்கவில்லை. வெறுக்கவும் முடியவில்லை.
அங்கிருந்து ஆண்டாள் நகர்ந்துவிட்டிருந்தார். ஏனோ அவருக்கு தன் மனநிலையை வெளிப்படுத்த விருப்பம் இல்லை. வறட்டுப்பிடிவாதம் அவரை பேச அனுமதிக்கவில்லை.
ஒரு பெரும் அமைதி சூழ சில நொடிகளில் தன்னை மீட்டவன் வைத்தியநாதனை பார்த்து,
“அப்பா நீங்க கிளம்புங்க…” என்றதும் மலர் துடித்துப்போனாள்.
“அவர்கள் சென்றாள் தானும் சென்றுவிடுவேன்…”என சொல்ல நினைக்கும் முன்,
“உங்களோட ரெண்டுபேர் கூட வருவாங்கப்பா. உங்க ட்ரெஸ், அப்பறம் தேவையான சில திங்க எல்லாம் பேக் பண்ண…” என்றதும் வைத்தியநாதன் பாலகிருஷ்ணனை பார்க்க அவரும் இதை எதிர்பார்த்ததை போல அமைதியாக இருந்தார்.
“நாங்க எதுக்குப்பா ஆதி? நாங்க அங்கயே இருந்துப்போம்….” காமாட்சி சொல்ல,
“மூச், எதுவும் பேசவேண்டாம்…” கிளம்புங்க. நாளைக்கு காலையில நீங்க வந்திடனும். அவங்க ரெண்டுபேரும் உங்களோடத்தான் இருப்பாங்க…”
“சேத்தன்…” என்றழைக்க வாசலில் நின்றிருந்தவன் வேகமாக உள்ளே வர,
“ஏற்பாடு செஞ்சாச்சா?…”
“எஸ் ஸார்…” என்றதும் வைத்தியநாதனை பேசவிடாமல் அனுப்பிவைத்தான் அனய். அனைத்தையும் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நேத்ரா,
“அமேஸானை மட்டுமில்லை ஆண்டாளையும், ஆவின்பாலையும் நீ ரொம்ப படுத்துறடா அண்ணா…” என புன்னகை முகமாக பார்த்திருந்தாள்.