புன்னகை – 9
வைத்தியநாதனும் காமாட்சியும் தங்களின் வீட்டினுள் நுழையும் பொழுதே அவ்வீட்டின் நிசப்தம் அவர்களை உலுக்கியது.
சில நிமிடங்கள் ஹாலிலேயே அமர்ந்திருக்க அவர்களின் பின்னால் அனய் அனுப்பிவைத்து இரு உதவியாளர்கள் வாசலிலேயே நின்றனர்.
காமாட்சிதான் அவர்களை பார்த்ததும் நிதர்சனம் உணர்ந்து சுதாரித்துக்கொண்டவர் வைத்தியநாதனையும் அழைத்து அவர்களை காண்பிக்க அவர் எழுந்து வாசலுக்கு சென்றார்.
“உள்ள வாங்க தம்பி ஏன் வெளிலையே நின்னுட்டீங்க?…” என அழைக்க,
“இருக்கட்டும் ஸார். திங்க்ஸ் பேக் பண்ண எத்தனை பேர் வரனும்னு சொன்னா நாங்க அழைச்சிட்டு வந்திடுவோம். பேக் பண்ணும் போது நாங்க உள்ள வரோம்…” என அதில் ஒருவன் சொல்ல,
“முதல்ல வாங்க. உள்ள வந்து பேசிக்கலாம்…”
வைத்தியநாதனின் அழைப்பை மறுக்கமுடியாமல் சூவை கழட்டிவிட்டு உள்ளே வந்தனர்.
அவர்களுக்கு டீ போட்டு எடுத்துவருமாறு வைத்தியநாதன் சொல்ல காமாட்சியும் உள்ளே சென்றவர் ப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து டீ போட ஆரம்பித்தார்.
என்னதான் முயன்றாலும் கண்ணை கரித்துக்கொண்டு வந்தது வீட்டின் வெறுமையில். அவர்களின் பிரிவு ஒரே நாளில் மேலும் இருபதுவருட முதுமை சேர்ந்துகொண்டது போல அப்படி ஒரு சோர்வும் கவலையும்.
பேத்தியின் நினைவில் உழன்று உருகிக்கொண்டிருந்தவரை பால் பொங்கிவரும் சப்தம் தரையிறக்கியது.
கசிந்திருந்த கண்களை துடைத்துவிட்டு டீயை ஊற்றி எடுத்துவந்தவர் அவர்களுக்கு கொடுத்துவிட்டு வைத்தியநாதன் அருகில் நின்றுகொண்டார். அவர்கள் டீ குடிக்கும் வரை யாரும் எதுவும் பேசவில்லை.
“ஓகே ஸார். டீ ரொம்ப நல்லா இருக்கு. தேங்க்ஸ்…” என புன்னகைக்க,
“அப்போ நீங்க கிளம்புங்க தம்பி…” என எழுந்து நின்று கை கூப்பினார் வைத்தியநாதன்.
“அதெப்படி ஸார் கிளம்ப முடியும்? உங்களை நாளைக்கு ஆதி ஸார் வீட்டுக்கு அழைச்சிட்டு வர சொல்லி சொல்லியிருக்காங்க. நாங்க அப்படியே போக முடியாதே…” அவர்கள் இருவரும் பிடிவாதமாய் எழுந்து நிற்க காமாட்சி வெறும் பார்வையாளராய் இருந்தார்.
அவருக்கு தெரியும் வைத்தியநாதனின் முடிவை யாராலும் மாற்ற இயலாது என்பது. அதனால் மௌனமாக அனைத்தையும் பார்த்து நின்றார்.
“உங்க ஆதி ஸார்ட்ட நான் பேசிப்பேன். நீங்க கிளம்புங்க தம்பி. நாங்க எங்கயும் வரதா இல்லை. இங்க இருந்து எந்த பொருளையும் நீங்க எடுத்துவைக்க போறதும் இல்லை…” என்றவர் வேகமாய் தொலைபேசியை எடுத்து ஆதிக்கு அழைத்தார்.
“சொல்லுங்கப்பா…” என அவன் பேசியதும்,
“ஆதி நீ அனுப்பிவச்ச பசங்களை கிளம்ப சொல்லு…” என்றவர் ரிசீவரை அவர்கள் பக்கம் நீட்டினார். கட்டளையிடும் விதமாய் இருந்தது அவரின் குரல் அனய்க்கு.
ரிசீவரை வாங்கிய ஒருவன் தயக்கமாய், “ஸார்…” என,
“ஓகே விசு நீங்க ரெண்டு பேரும் கிளம்பிடுங்க…” அனய் சொல்லிவிட ஒருவித குழப்பத்தோடே வைத்தியநாதனிடம் விடைபெற்று சென்றனர் அவர்கள் இருவரும்.
சில நிமிடம் அனய் அப்படியே அமர்ந்திருக்க நேத்ரா தான் அவனின் சோர்ந்த முகத்தை பார்த்து என்னவென அவனது கேட்டாள்.
“நேத்ரா நீ கொஞ்சம் மலரையும், குழந்தையையும் பார்த்துக்க. நான் வெளில போய்ட்டு வந்திடறேன்…” என சொல்லி கிளம்பியவன் நேராக வைத்தியநாதனின் வீட்டிற்கே வந்துவிட்டான்.
அவனின் வரவை அறிந்தது போல கதவை திறந்தே வைத்திருந்தனர். நேராக உள்ளே வந்தவன்,
“என்னதாம்ப்பா பிரச்சனை? அம்மாவையும் அப்பாவையும் நான் சமாளிச்சுக்கறேன். நீங்க இங்க தனியா இருக்க வேண்டாம் வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்…” வந்ததுமே நேரடியாக பேச,
“இதுவும் நம்ம வீடு தானேப்பா? இல்லைன்னுவியா நீ?…” காமாட்சி பேச,
“அம்மா நீங்களுமா?…” என ஆயாசமா பார்த்தான் அவரை.
“முதல்ல சாப்ட்டுட்டே பேசலாம் ஆதி…” என அவனை இழுத்துக்கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு செல்ல அங்கே இவனுக்கும் சேர்த்தே உணவு தயாரிக்கப்பட்டிருந்தது.
காமாட்சியை கேள்வியாக பார்க்க,
“நீ எப்படியும் வருவன்னு தெரியும். அதுவும் இல்லாம நேத்ராபுள்ளையும் போன்ல நீ வேகமா வெளில கிளம்பியிருக்கிறதா சொல்லுச்சு. அதான் உனக்கும் சேர்த்து சமைச்சுட்டேன்…” என சொல்லியபடி அவனை அமரவைத்து அவனுக்கு பரிமாறினார்.
அனய்யின் கண்கள் கலங்கியது. இவர்களை நன்றாக வைத்துக்கொள்ள அவன் ஆசைகொள்ள அவர்களோ தங்களை விட்டு தள்ளி நிற்கவே விருப்பமாகின்றனரே?
“ஏன்ப்பா நான் நீங்க பெத்த பிள்ளையா இருந்திருந்தா இப்படி என்னை விட்டு விலகி இருந்திருக்க மாட்டீங்க தானே?…” தாளமாட்டாமல் கேட்டேவிட்டான்.
அவனின் கேள்வியில் முதலில் அதிர்ந்து பின் கூர்மையாக நிமிர்ந்து பார்த்த வைத்தியநாதன்,
“உன்னை என் பிள்ளையா மட்டுமில்லை அதுக்கும் மேல நினைக்கிறதால மட்டும் தான் ஆதி உன்னால் எங்கக்கிட்ட பேசவும், பழகவும் முடியுது. தயவு செய்து உன்னை அவனோட இணைச்சு பேசறதை இத்தோட நிறுத்திக்கோ…”
ஏதோ வேகத்தில் வாய்விட்டு தன் உள்ளக்கொதிப்பை அவர் ஒரு வார்த்தையில் கொட்டிவிட அதை கேட்ட காமாட்சி துணுக்குற்றார். வைத்தியநாதனை ஆராய்ச்சியாக பார்க்க அவரும் அதை கண்டு தலைகுனிந்துகொண்டார்.
ஒரு வேளை அவனை போல இவனும் பிரிந்துவிடுவானோ என எண்ணி அப்படி சொல்கிறாரோ என்று அவராகவே நினைத்து சமாதனம் செய்துகொண்டாலும் ஏனோ ஒரு மூலையில் இந்த சந்தேகம் கறையென படிந்துவிட்டது.
வைத்தியநாதனின் வார்த்தைக்கான அர்த்தம் உணர்ந்தவனுக்கோ முகம் நொடியில் இறுகிவிட்டது. கொதிப்படைந்த உணர்வுகளை காமாட்சியை கருத்தில்கொண்டு கட்டுப்படுத்தியவன் தன் கைகளை கட்டிக்கொண்டு வேறு திக்கில் பார்த்தான்.
“இங்க பாரு ஆதி. ஒரே வீட்ல இருந்தா தான் அன்புன்னும், சந்தோஷம்னும் இல்லை. இப்போ என்ன நாங்க வேற ஊர்லயா இருக்கோம்? நாங்க நினைச்ச நேரமெல்லாம் உன்னை வந்து பார்த்துப்போம் தானே?…”
“இந்த ட்ராபிக்ல நீங்க அங்க வரதுக்குள்ள ரெண்டுமணி நேரம் ஆகிடும். எதுக்கு நமக்குள்ள இந்த தூரம்? எனக்கு உங்களை கூட வச்சு பார்த்துக்கனும்னு தோணுதுப்பா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…”
“முதல்ல நாங்க சொல்றதை புரிஞ்சுக்கோ ஆதி. முதல்ல மலர் உன்னோட சேர்ந்து வாழனும். உன்னை நல்லா புரிஞ்சுக்கனும். உங்க குடும்பத்தோட அவ ஐக்கியமாகனும். அது நாங்க கூட இருந்தா நடக்காது…”
“அப்படியெல்லாம் இருக்காதும்மா. நீங்களா எதையாவது நினைக்காதீங்க…”
“இல்லை ஆதி. ஒரே வீட்ல நாங்க இருக்கிறப்போ அவ எங்களோட மட்டுமே ஒட்டுதல் காண்பிப்பா. அதுவே தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உனக்கும் மலருக்குமான இந்த இடைவெளியும் மன வருத்தங்களும் குறைஞ்சு நீங்க புருஷன் பொண்டாட்டியா வாழனும்னா நாங்க இன்னும் கொஞ்ச நாள் ஒதுங்கித்தான் இருக்கனும்…”
காமாட்சியின் பேச்சை கேட்டவனுக்கு ஒன்றுமட்டும் புரிந்துபோனது. இனி எத்தனை மன்றாடினாலும் அவர்களின் முடிவிலிருந்து மாறப்போவதில்லை என்று.
“உங்க பேத்திக்காக வேணும் வரலாமேம்மா? குழந்தை உங்களை மிஸ் பண்ணுவா…” கடைசியாக அவன் வருணியை நிறுத்தி கேட்க,
“அவ என்ன யாருமில்லாத வீட்லையா இருக்கா? அங்கயும் அவளை நல்லா பார்த்துக்கற தாத்தாவும் பாட்டியும் இருக்காங்க தானே?…”
“அப்பா?…” வைத்தியநாதன் சொல்லியதை நம்பமுடியா ஆச்சரியத்தோடு கேட்டான் அனய்.
“ஆமாம்ப்பா. உங்கம்மாவுக்கு வருணியை பிடிக்கும் தான். எங்க அதை வெளிக்காட்டிடுவோம்னு தான் எங்களை கூட்டிட்டு போக சொன்னாங்க. கண்டிப்பா அவங்களால குழந்தையை வெறுக்க முடியாது ஆதி. நீ வேணும்னா பாரு. இன்னும் ரெண்டே நாள்ல அவர் குழந்தையோட சேர்ந்திடுவார்…”
நம்பிக்கையாக சொன்னவரின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் வார்த்தைகள் இன்றி மௌனம் காத்தவனின் நெற்றியை வருடியவர் இட்லியை பிட்டு அவனிற்கு ஊட்ட ஆரம்பித்தார் காமாட்சி. அவரின் கரிசனையில் விழிகளில் நீர் நிறைந்தது அவனுக்கு.
“இப்போ என்னத்துக்கு கண்ணெல்லாம் கலங்குதாம்? நாங்க அந்த வீட்டுக்கு வரனும் அவ்வளோ தானே?…” காமாட்சி கேட்க வேகமாய் தலையசைத்து எதிர்பார்ப்புடன் அவரை பார்த்தான்.
“சீக்கிரம் மலர் குழந்தை உண்டாகட்டும். நானே பக்கத்துல இருந்து அவளுக்கு பக்குவம் பார்த்து அங்கயே தங்கிடறேன். சரிதானே?…”
காமாட்சி சொல்ல சற்றே இலகுவானான் அனய். ஆனாலும் உள்ளுக்குள் தனக்கும் மலருக்குமான உறவு இனி எப்படி இருக்கபோகிறதோ என நினைக்கும் பொழுதே ஒருவிதமான உணர்வு அவனை சட்டென்று தாக்கியது.
“அவ என்னைக்கு என்னை புரிஞ்சுக்க? என்னைக்கு என்னை லவ் பண்ண ஆரம்பிக்க? என்னைக்கு என்னோட வாழ ஆரம்பிக்க? என்னைக்கு நாங்க குழந்தையை உண்டாக்க? ஹ்ம்…” என ஏகப்பட்ட கேள்விகள் அவன் மூளையை சூடாக்க பெருமூச்சொன்றை வெளியிட்டான்.
பின் சிறிது நேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு அடிக்கடி வந்தே ஆகவேண்டும் என வற்புறுத்தி மீண்டும் மீண்டும் சொல்லிய பின்பே அங்கிருந்து கிளம்பினான்.
அதுவரை இருந்த நிறைவும் வெளிச்சமும் அகன்றார் போல வீடே இருளடைந்து போனது. அவனோடு பேசியபடி உண்டதால் இருவரின் வயிறும் மனமும் நிறைந்தது. அனய் மட்டும் வராவிட்டால் நிச்சயம் உண்டிருக்க போவதில்லை.
காமாட்சியும் வைத்தியநாதனும் மனதிற்குள் மலர் மற்றும் பேத்தியின் நினைவுகளோடு உறங்க ஆரம்பித்தனர். விழிகளை மூடிக்கொண்டாலும் அவர்களின் உள்ளம் விழித்தே இருந்தது.
———————————————————
இரவு நேர சாலை நெரிசலில் சிக்கி ஒருவழியாக தன் வீட்டை அடையும் பொழுதே மணி எட்டை விழுங்கி ஒன்பதை நெருங்கி இருந்தது.
பாலகிருஷ்ணன் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருக்க ஆண்டாள் சுமங்கலியோடு பேசியபடி வருணியையே ஓரவிழியால் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவரின் கவனம் முழுவதும் டீப்பாயின் மீது அமர்ந்திருந்த குழந்தையின் மீதே இருந்ததால் சுமங்கலியின் பேச்சில் கவனம் செலுத்தாமல் எங்கே குழந்தை விழுந்துவிடுவாளோ என பதை பதைத்தபடி பார்த்திருந்தார்.
அதை புரிந்த சுமங்கலி ஆண்டாளை தன்னை விட்டு நகரவிடாமல் அங்கேயே அமர்த்தி பேச்சை வளர்த்தார். நேத்ராவை மலரோடு அறையில் இருக்க செய்த சுமங்கலி தான் வருணியை டீப்பாயில் அமரவைத்து விளையாட சிறு பொம்மைகளை கொடுத்தார்.
அவரின் கணிப்பை பொய்யாக்காமல் ஆண்டாளும் உள்ளுக்குள் பதற அதை அவரின் முகமே காட்டிக்கொடுத்தது. லேசாக அசைந்து அசைந்து வருணி டீப்பாயின் விளிம்பிற்கு வந்து கீழே சாய சட்டென அவளை தூக்கிக்கொண்டார் ஆண்டாள்.
“ஏய் நேத்ரா, வா இங்கே…” என மகளை சப்தமிட்டு அழைக்க அதே நேரம் சரியாக அனய்யும் உள்ளே நுழைந்தான்.
அவனின் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. தன் தாயின் கையில் தன் மகள். பார்க்கும் பொழுதே அத்தனை பரவசமாய் இருந்தது அவனிற்கு. அங்கேயே நின்று நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்.
ஆண்டாளின் அதட்டலில் நேத்ராவும் மலரும் அடித்துப்பிடித்து வெளியே வந்தனர். ஆண்டாளின் கையில் இருந்த மகளை பார்த்ததும் மலரின் விழிகள் விரிந்தது.
“இது என்னங்கடா இது அதிசயமா இருக்கே?…” என நினைத்தாள் மலர்.
மனதிற்குள் சந்தோஷம் குமிழிட்டாலும் முகத்தை ஒன்றுமறியா பிள்ளைப்போல வைத்துக்கொண்டு வந்து நின்றாள் நேத்ரா. அவள் மனதிற்குள் “எரிமலை எப்படி வெடிக்கும்மம்ம்ம்ம்…” மொமென்ட்.
“சொல்லுங்கம்மா, கூப்பிட்டீங்க?…” என அப்பாவியாய் கேட்க,
“அப்படியே போட்டேனா பாரு. என்னத்தை இதுதான் குழந்தையை பார்த்துக்கற லட்சணமா? அனய் போகும் போது உன்கிட்ட தானே பார்த்துக்க சொல்லி சொல்லிட்டு போனான். குழந்தை என்ன செய்யறான்னு கவனிக்காம அப்படி என்ன உங்களுக்கு பேச்சு வேண்டிக்கிடக்கு?…” என பொரிந்தவர்,
“புள்ளை பெத்துக்கிட்டா மட்டும் போதாது. அதை கண்ணும் கருத்துமா ஈ, எறும்பு அண்டாம, அடிகிடி படாம நாம தான் பத்திரமா பார்த்துக்கனும். பேச ஆள் கிடைச்சா போதுமே உலகத்தையே மறந்திடறது…” என மலரை ஜாடையாக பேச,
“அடடா ஆண்டாள் தாக்கு தாக்குன்னு தாக்குறாங்களே? மெயின் விக்கெட்டே காலிடா குட்டிம்மா…” என உள்ளுக்குள் நேத்ரா தன் மருமகளை சில்லாகித்து வெளியில் பாவம் போல பார்த்தாள்.
மலர் பதில் வார்த்தை பேசாமல் அமைதியாக ஆண்டாளை நெருங்கி குழந்தையை வாங்க கை நீட்ட ஆண்டாளுக்கு கொடுக்கவே மனமில்லை. வருணியை தூக்கிய நிமிடம் பிஞ்சு குழந்தையின் மேனியின் தீண்டலில் மெய் சிலிர்த்து தான் நின்றார் ஆண்டாள்.
இப்பொழுது மலர் வந்து கேட்கவும் கொடுக்கவும் மனமில்லாமல் தன் தோள்களில் வாகாய் சாய்ந்துகொண்டு தன்னையே பார்த்து புன்னகைத்த வருணியை மெதுவாக பிரித்து மலரிடம் கொடுக்க குழந்தையோ ஆண்டாளை கட்டிக்கொண்டு,
“பாத்தீத்த… பாத்தீத்த….” என மலரிடம் மறுப்பை தெரிவிக்க அதில் ஆண்டாளுக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த வீராப்பும் கலைந்து காற்றோடு கரைந்து போனது. உருகியே போனார்.
எங்கே இதற்கும் ஆண்டாள் எதுவும் சொல்லிவிடுவாரோ என “வருணி…” என மலர் அதட்டல் போட்டு அவரிடமிருந்து தூக்கி செல்ல ஆண்டாளால் பொறுக்கமுடியவில்லை.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. அதான் குழந்தை வரலைன்னு தெரியுதுல. எப்படி தூக்கிட்டு போறா பாருங்க…” என ஆண்டாள் சொல்ல,
“அம்மா…” என்றபடி அனய் வர இவ்வளவு நேரம் இவன் இங்கேதான் நின்றுருந்தானோ? என ஆண்டாள் திருதிருத்தார்.
அவரின் செய்கையில் அனய்க்கு சிரிப்பு பொங்கியது ஆனாலும் அடக்கியவன், “அத்தை எல்லோரும் சாப்ட்டாச்சா?…” என,
“நாங்கலாம் சாப்ட்டோம். மலரும் நேத்ராவும் தான் இன்னும் சாப்பிடலை…” என சுமங்கலி சொல்ல,
“நேத்ரா வருணி சாப்பிட்டாளா? நீ ஊட்டிவிட்டயா?…” என,
“அவ இன்னும் சாப்பிடலை…” நேத்ரா வேண்டுமென்றே பொய் சொல்ல,
“இவ்வளோ நேரம் குழந்தைக்கு சாப்பாடு குடுக்காம நீ என்ன பண்ணிட்டு இருந்த? அவளிடம் அனய் காய,
“ஆமா நீ பெரிய லார்ட்லபக் தாஸ் பாரு. நீ சொன்னதும் நான் செஞ்சிட. ரொம்பத்தான் அக்கறை இருக்கிறவன் மாதிரி ஆடர் போடற? பெருசா பேச வந்துட்டான். இத்தனை நாள் நீ தான் பக்கத்துல இருந்து ஊட்டி விட்டியா?…”
“நேத்ரா…” என அனய் கத்த,
“சும்மா சவுண்டு விடாத. அவ பிறந்து இத்தனை வருஷத்துல அவளுக்குன்னு நீ என்ன பண்ணிட்ட? அப்பாக்காக நீயும், உன் பொண்டாட்டியும் அந்த சின்ன குழந்தையைஏங்க தானே விட்டீங்க. கேட்டா, மனசு மாறனுமாம்? இப்போ மட்டும் உன் பொண்டாட்டி மனசு மாறிடுச்சா என்ன?…”
நேத்ரா சொன்னதில் இருந்த உண்மை அனய்க்கு அப்படி ஒரு வலியை கொடுத்தது. அமைதியாக நின்றவனை தோளில் அடித்தவள்,
“போ போய் முதல்ல ஃப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்…” என சொல்ல,
“எனக்கு சாப்பாடு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க…” கோபமாக நகர,