“அடேங்கப்பா ஸார் ஃபீல் ஆகிட்டீங்களோ? போடா டேய், ஓவர் சீன போடாதே. உன் பொண்ணு சாப்பிட்டாச்சு. அவளுக்குத்தான் முதல்ல ஊட்டினேன். இப்போ சாப்பிட வருவியா?…” என கேட்க அப்போது தான் அனய்யின் முகம் மலர்ந்தது.
“பார்ரா தவுசண்ட் வாட்ஸ் பல்பை. ஹ்ம்…” என கேலி பேசியவள் அனய்யை நெருங்கி நின்று,
“டேய் அண்ணா ஆனாலும் உன் பொண்ணு ரொம்ப சமத்து தெரியுமா? சின்ன குழந்தை தான். ஆனாலும் என்னை படுத்தாம எவ்வளவு அழகா சாப்பிடுது தெரியுமா? இந்த கட்டுமரம் உன் பொண்ணுக்கிட்ட நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு…”
“என்ன?…” என புரியாமல் அனய் கேட்க,
“உலகத்துல கத்துக்க வேண்டிய விஷயம் எவ்வளவு இருக்கு? இதை விட்டுட்டு அவர் அங்க கேமராவை தூக்கிட்டு வீடியோக்ராபர் வேலை பார்த்துட்டு இருக்கார் வரட்டும். வச்சிக்கறேன்…”
நேத்ரா தன் வலது கையை மடக்கி காண்பிக்க தங்கையின் பேச்சில் மனம் விட்டு சிரித்தவன் அவளின் தலையில் கொட்டிவிட்டு மாடிக்கு சென்றான். மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்கொட்டாமல் பார்த்து ஆண்டாள் நிற்க,
“அப்பறம் அம்மா நம்ம வீட்டுக்கு எப்போ போறோம்? சொன்னீங்கன்னா நாங்க கிளம்பி அங்க ரெண்டு நாள் தங்கிட்டு ஊருக்கு கிளம்புவோம்ல…”
“நம்ம வீடா?…” மகள் கேட்க வருவது புரிந்தும் ஆண்டாள் எதிர் கேள்வி கேட்க,
“அதான்மா நேத்துவரைக்கும் நீங்க இருந்த வீடு. அதை சொன்னேன். போவோமா? எனக்கு அங்க போகனும்…” பிடிவாதம் போல நேத்ரா சொல்ல,
“இனிமே அங்க எதுக்கு போகனும்? இதுதான் இனி நம்ம வீடு. என் பையன் இருக்கிற வீடுதான் உன்னோட பொறந்த வீடு. இனி நாம இங்கதான் இருப்போம். நீ வந்து போறதும் இங்கதான்…” ஆண்டாள் கெத்தாய் கூறினார்.
நேத்ரா சுமங்கலியை பார்த்து கண்ணடிக்க அவர் பிரமாதம் என்பது போல கண்ணசைத்தார்.
“அப்போ அந்த வீட்டை என்னம்மா பன்றது?…”
“அதை அப்பறம் பார்த்துப்போம். நீ எதுக்கு தொனதொனக்கிற? என் பையன் வீட்ல இருக்கிறதுக்கு உன்கிட்ட இத்தனை பேச்சு வாங்கனுமா?…”
அவரின் சிடுசிடுப்பில் நேத்ராவிற்கு உற்சாகம் கொப்பளிக்க,
“அதுசரி, ரொம்பத்தான் பாசம். ஹைய்யோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்கலையே…” என தலையில் கை வைக்க சரியாக சுமங்கலியின் மொபைலுக்கு சிவராமன் அழைத்தார்.
அதை கண்டு சுமங்கலி நேத்ராவை பார்த்து முறைக்க அவளுக்கு புரிந்துபோனது.
“ஐயோ அத்தை சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் இந்த டயலாக் சொல்றப்போலாம் மாமா என்ட்ரி கொடுக்கனும்ன்றது விதி போல. அதான் எப்போ பார்த்தாலும் இப்படி ஆகிடுது…”
என சொல்லி தன் இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு கண்களால் இறைஞ்ச அவளின் பேச்சில் சிரித்தபடி அங்கிருந்து மொபைலை எடுத்துக்கொண்டு பேச நகர்ந்தார் சுமங்கலி.
“அதோ உன் அண்ணா வந்துட்டான். மூணுபேரும் நேரமா சாப்பிட்டு முடிங்க. நான் உங்கப்பா கூட தோட்டத்துல இருக்கேன்…” அதையும் ஒருவித முறைப்போடே சொல்லி செல்ல நேத்ராவிற்கு சிரிப்பாய் போனது.
“வாடா சாப்பிடலாம்…” என அனய்யை அழைக்க,
“நேத்ரா நீயும் மலரும் சாப்பிடுங்க. நான் காமாட்சி அம்மா வீட்ல சாப்ட்டிட்டு தான் வந்தேன்…” என சொல்ல அவனை முறைத்துவிட்டு,
“அமேஸான்…” என அழைக்க,
“வந்துட்டேன் நேத்ரா…” என்றபடி மலர் வர,
“வா சாப்பிடலாம்…” என்றதும் மலரும் அமைதியாக அவளோடு நடந்தாள்.
“வருணி…” என அனய் மலரிடம் கேட்க,
“தூங்கிட்டா…” ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்தாள் மலர்.
நேத்ரா தனக்கும் மலருக்கும் மட்டும் தட்டு வைத்து பரிமாறிக்கொள்ள அவர்களின் எதிரில் வந்தமர்ந்தான் அனய். அவனை உண்ணச்சொல்ல மலருக்கு மனமில்லை, என்றாலும் அவனை விட்டுவிட்டு தாங்கள் மட்டும் உண்பது அவளுக்கு ஏனோ உவப்பானதாக இல்லை.
அதையும் மீறி அவனின் குறுகுறு பார்வையில் நெளிந்தவள்,
“ஜொள்ளுப்பார்ட்டி…” என மனதில் பொருமியவள், இவன் சாப்பிட்டாலாவது தன் மேல் கவனம் செலுத்தாமல் இருப்பான் என நினைத்தவள் நேத்ராவின் முகம் பார்க்க,
“நீ சாப்பிடு அமேஸான். அவன் நல்லா கொட்டிக்கிட்டு தான் வந்திருக்கான். காமாட்சி அம்மா வீட்ல…” என சொல்லவும் காமாட்சியிடம் இப்பொழுதே பேசவேண்டும் என மலரின் உள்ளம் பரபரத்தது.
“மொபைல் இருந்தாலாவது அவர்களிடம் பேசலாம். தன்னுடைய மொபைல் அங்கே அல்லவா இருக்கிறது?…” என தவித்தவள் மனம் அடுத்த நிமிடம் முறுக்கிக்கொண்டது.
அவளுக்கு கோபம், அவர்கள் தன்னை மிரட்டியல்லவா பணிய வைத்தார்கள்? இங்கேயே தன்னை விட்டுவிட்டு அவர்கள் மட்டும் சென்றுவிட்டனரே. வீட்டிற்கு சென்று நேத்ராவிடம் மட்டும் பேசி, தன்னிடம் பேசவில்லையே என கோபம் கொண்டாள்.
அவளின் நினைவலைகளை துண்டிப்பதை போல நேத்ரா பேச ஆரம்பித்தாள். அவளின் பேச்சில் கொஞ்சம் இளகி வந்தாள் மலர். மலரின் முகத்தில் வந்துபோன ஏக்கம், தவிப்பு, கோபம், இறுக்கம் என மாறி மாறி காட்டிய பாவனைகளில் அவளை இன்னுமே உற்று நோக்கினான்.
மனைவியவளின் எண்ணங்களை படிக்கும் முயற்சியில் அவனின் தீவிரத்துடன் கூடிய ஆழ்ந்த பார்வை மலரை சங்கடத்திற்குள்ளாக்க அவள் சரியாக உண்ணாமல் உணவை கொறிக்க ஆரம்பித்தாள். அதை கண்ட நேத்ரா,
“டேய் அப்பாட்டக்கர் எங்களுக்கு வயிறு வலிக்கும்டா. இப்படி பார்க்கிற? கம்பெனி குடுக்கவாச்சும் எங்களோட சாப்பிடேன்…”
நேத்ரா சாதாரணம் போல சொன்னாலும் அவளின் பார்வை அவனை செய்தே ஆகவேண்டும் என அறிவுறுத்தியது.
தனக்கொரு தட்டை வைத்து கொஞ்சம் உணவை இட்டுக்கொண்டவன் சாப்பிட ஆரம்பித்தான். நேத்ரா அவனோடு பேசிக்கொண்டே இருக்க அவனின் கவனம் நேத்ராவின் புறம் சென்றதும் தான் மலரால் நிம்மதியாக சாப்பிட முடிந்தது.
“இவனுக்கு லைஃப்ல கொஞ்சம் கூட டீ-டிகாஷனே இல்லை அமேஸான். இவனை வச்சுகிட்டு நீ என்னன்னு காலம் தள்ள போறியோ?…” என கிண்டலாய் பேச,
“வாட்? அரைலூசு என்ன சொல்ற? புரியிற மாதிரி பேசவே மாட்டியா? என்னைக்கு திருந்தப்போறியோ?…” என அனய் விழிக்க அவனின் முகபாவனையில் மலருக்கும் லேசாக சிரிப்பு வந்தது.
முன்பும் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் இப்படித்தான் நேத்ரா வீட்டில் அவனை ஏதாவது சொல்லி திருதிருக்க செய்வாள்.
என்ன பேசி சென்றாள் என்றே புரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு தங்களிடம் அர்த்தம் கேட்க வரும் அனய்யின் அசட்டுத்தனங்கள் ஞாபகத்திற்குள் வந்தது.
“இவங்க மாறவே போறதில்லை…” என இருவரையும் மாறி மாறி பார்த்து மலர் புன்னகைக்க அதை கவனிக்காத அனய்,
“இப்போ என்னன்னு சொல்ல போறியா இல்லையா?…”
“தம்பி உனக்கு இப்போவே தெரிஞ்சுக்கனும்னா உன் வொய்ப்கிட்ட கேளு. எனக்கு தூக்கம் வருதுப்பா…” என்றபடி நேத்ரா கை கழுவ எழும்ப,
“நேத்ரா…” என கத்தி அழைக்க,
“என் காது கேட்காது…” என சொல்லிக்கொண்டவள் அலட்சியமாக வேண்டுமென்றே மெதுவாக நடந்து சென்றாள்.
அவளின் செய்கை மலருக்கு இன்னமும் சிரிப்பை கொடுத்தது. சிரித்தபடியே நேத்ராவை பார்த்துக்கொண்டே அனய்யின் புறம் திரும்ப,
“மேடம் சொல்லுவீங்களா? இல்லையா?…” என பவ்யமாக கேட்க,
“டெடிகேஷனை தான் அந்த லட்சணத்துல அப்படி சொல்லிட்டு போறா…” என சொல்லி எழுந்து செல்ல மலரின் புன்னகை முழுவதையும் சிந்தாமல் சிதறாமல் தனக்குள் பத்திரமாய் பாதுகாத்து வைத்தான்.
வீராத்தாய் வந்த பின் தான் அந்த இடத்தை விட்டே எழுந்து சென்றவன் நேத்ராவை தேட அவள் எப்பொழுதோ உறங்க சென்றிருந்தாள்.
“காலையில பார்த்துக்கறேன் அவளை. எனக்கா டெடிகேஷன் இல்லை…” என காலை தரையில் உதைத்தவன்,
“ஆமா எதுக்காக இதை சொல்லிட்டு போனா?…” என யோசிக்க அவனுக்கு பதில் தான் கிடைத்தபாடில்லை.
“அறுந்தவாலு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு, இன்னமும் வாய் மட்டும் குறையவே இல்லை. ரிஷி வரும் வரை இன்னும் இரண்டு நாள் இங்கே தானே இருப்பாள். பார்த்துப்போம்…”
சிரித்தபடி உறங்க சென்றவன் மீண்டும் கீழிறங்கி வந்து மலர் இருந்த அறையை எட்டிப்பார்க்க அங்கே படுக்கையின் நடுவில் குழந்தையும் இரண்டு புறமும் மலரும் நேத்ராவும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
சில நொடிகள் அங்கேயே நின்றவன் பின் தூங்க சென்றான். படுத்ததும் நிம்மதியான உறக்கம் அவனை சூழ ஆழ்ந்து போனான் உறக்கத்தில்.
அவனை பொறுத்தவரை மலரை தன் வாழ்க்கைக்குள் உலகம் அறிய பகிரங்கமாகவே கொண்டு வந்தாயிற்று. அது போதும் அவனுக்கு. அவனின் மனநிலை இப்போதைக்கு வேறெதையும் யோசிக்கும் நிலையில் இல்லை.
மறுநாள் வழக்கம் போல் கழிய அதற்கடுத்தநாள் வைத்தியநாதன் வீட்டிற்கு விருந்தென்று சென்றுவிட்டு வந்தனர். உடன் நேத்ராவும்.
அங்கே சென்றவள் தானாக எதையும் பேசவே இல்லை. அவளின் உணர்வுகள் புரிந்து காமாட்சி சமாதானமாக பேச அதை மலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
மலர் பேசவில்லை என்றாலும் நேத்ரா அவளுக்கும் சேர்த்து பேசினாள். அந்தளவில் அன்றைய பொழுது மிக நிறைவாகவே கழிந்தது. அவர்கள் மேல் கோபமாக இருந்தாலும் ஒருவித சந்தோஷம் ஆட்கொண்டது மலரை.
வீட்டில் நுழைந்ததிலிருந்து ஒவ்வொரு இடமாக சென்று நின்று நின்று பார்த்தாள். இனி இந்த வீடு எனக்கு விருந்தாட வரும் வீடு மட்டுமே என்ற உண்மை அவளின் முகத்திலறைந்தது.
வருணியை பிடிக்கவே முடியவில்லை. இங்குமங்கும் ஓடியபடி வீடுமுழுவதும் வளையவந்து கொண்டிருந்தாள் குழந்தை.
மாலை வரை இருந்துவிட்டே கிளம்பினார்கள் அவர்கள். சில பலகாரங்கள், துணிமணிகள், நகைகள் என மலருக்கு கொடுக்க அனய்யும் மறுக்காமல் பார்த்தான்.
அனய் மலர் இருவருக்கிடையிலும் பேச்சுவார்த்தை என்று பார்த்தால் சில சொற்பமான சொற்களே.
அதிலும் பேச்சை ஆரம்பித்து வைப்பதென்னவோ அனய் தான். ஆனால் ஒற்றை பதிலில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள் மலர். இல்லை என்றால் மௌனம் மட்டுமே பதிலாகும்.
மாலை வீடு வந்து சேர்ந்து இரவு வரை அமைதியாகவே சென்றது. இரவு உணவை முடித்துக்கொண்டு மலர் வழக்கம் போல அவ்வறையில் உறங்க செல்ல அவளின் பின்னோடு சென்றார் ஆண்டாள்.
அவரின் வரவின் காரணம் புரியாமல் பார்க்க அப்பொழுதும் வாய் திறக்காத அவளின் அமைதியில் கோபம் கொண்டவர்,
“பேசினா முத்தா உதிர்ந்திடும் இவளுக்கு. நியாயமா நான் தான் கோபப்படனும். இவ முகத்தை திருப்பிக்கிட்டு நிற்கிறா?…” என எண்ணியவர்,
“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி தனியாவே இருக்கிறதா உத்தேசம்? நானும் ரெண்டு நாளா பார்க்கிறேன். இங்க வந்து வந்து படுத்துக்கற? என் பைய்யோனோட என்னைக்குத்தான் சேர்ந்து வாழப்போற? இப்படி நீ ஒரு ரூம்லயும் அவன் ஒரு ரூம்லயும் இருக்கத்தான் கல்யாணம் செய்துக்கிட்டீங்களா?…”
அதிரடியாய் ஆரம்பித்த அவரின் பேச்சின் சாராம்சம் புரிய அதிர்ந்து பார்த்தவள் முகம் சிவந்து உடல் விறைக்க நின்றாள் மலர்.
“இத்தனை வருஷம் தான் என் புள்ள தனிமரமா குடும்பம்னு வாழாம தனியா நின்னு கஷ்டப்பட்டான். இன்னைக்கு அவனுக்கு அவன் இஷ்டப்படி அவன் விரும்பின பொண்ணே மனைவியா கிடைச்சும் அவனுக்கு சந்தோஷம் இல்லை. இன்னும் எத்தனை வருஷத்துக்கு என் மகனுக்கு இந்த தனிமையோ?…”
இனியும் இங்கே நின்றால் இன்னும் என்னவெல்லாம் பேசுவாரோ? என எண்ணியவள் உறங்கிக்கொண்டிருந்த வருணியை தூக்க,
“குழந்தை இங்கயே தூங்கட்டும்…” ஆண்டாள் சொல்ல,
“இல்லை வருணி தனியா தூங்கி பழக்கமில்லை…” மலர் சொல்ல,
“அப்போ நான் எதுக்கு இருக்கேன். என்னால பார்த்துக்க முடியாதா? நீ முதல்ல என் புள்ளயை பாரு. நான் குழந்தையை பார்த்துப்பேன்…” என சொல்லி சட்டென்று குழந்தையின் அருகில் சென்று படுத்துக்கொள்ள இன்னமும் அதிர்ந்தாள்.
“இவர் என் மகளை ஏற்றுக்கொண்டுவிட்டாரா?…” என்றபடி பார்த்து நிற்க,
“இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே நிற்க போற? முதல்ல லைட்டை ஆஃப் செஞ்சுட்டு கதவை லாக் பண்ணிட்டு நீ மேல போ…” என சொல்லி வருணியை நெருங்கி அணைத்தவாக்கில் படுத்துக்கொள்ள வருணியும் அவர் மேல் உறக்கத்திலேயே கையை போட்டு அணைத்துக்கொண்டாள்.
விளக்கை அணைக்க சென்றவளின் விழிகளில் இக்காட்சி விழ அதிசயமாய் பார்த்தாள் மலர். மீண்டும் தலையை தூக்கி மலரை ஆண்டாள் பார்க்க வேகமாய் லைட்டை அணைத்தவள் கதவை பூட்டிவிட்டு வெளி சென்று நின்றாள்.
வருணியை கால் முதல் தலை வரை வருடியவர் குழந்தையின் செய்கையில் குளிர்ந்துபோனார். நேத்ராவின் மகன் பேரன் என்றாலும் அவன் ரிஷியின் குடும்பத்தில் தான் அத்தனை ஒட்டுதல். தங்களிடம் அவ்வளவு நாசூக்கு பார்ப்பான் இந்த வயதிலேயே. இச்செய்கையில் ஆண்டாளிற்கு வருணியை அவ்வளவு பிடித்துப்போனது. நிம்மதியாக கண்களை மூடி உறங்க ஆரம்பித்தார் ஆண்டாள்.
வெளியே வந்த மலர் என்றைக்காவது இச்சூழலை எதிர்கொள்ள வேண்டியதாக தான் இருக்கும், ஆனால் இத்தனை விரைவில் வரும் என்று எதிர்பார்க்காததால் கொஞ்சம் தடுமாறி நின்றாள்.
அவளின் இதயத்தில் பலவித யோசனைகளை அங்குமிங்குமாய் பயணித்து ஒருநிலையில், ஒரு புள்ளியில் சென்று நிற்க தெளிந்த முகத்தோடு மாடிக்கு சென்றாள்.
இதை கவனித்துக்கொண்டிருந்த நேத்ரா, “ஹ்ம் ஆண்டாள் வரவர அதிரடியில பின்றாங்க. ஆவின்பால் ஏன் அடக்கியே வாசிக்கிறார்ன்னு இப்போ தான் தெரியுது…” என மகிழ்வாக நினைத்துக்கொண்டாள்.
கதவு திறக்கும் ஓசையில் வாட்ரோபில் எதையோ குடைந்துகொண்டு நின்ற அனய் திரும்பி பார்க்க அங்கே மலரை கண்டு இன்பமாய் இனிமையாய் அதிர்ந்தான்.
ஆனால் அவனின் இன்பமும் இனிமையும் இன்னும் சற்று நேரத்தில் கசந்துவிடும் என்றும், அவனின் சில முடிவுகளை மாற்றியமைக்க போகிறதென்றும் அவன் அறிந்திருக்கவில்லை.
அதற்கு மலரின் பேச்சுக்கள் காரணமாய் அமையவிருப்பதை மலரும் அறியவில்லை.
நிகழ்ந்துவிட்ட, நிகழவிருக்கும் அனர்த்தங்களுக்கு அர்த்தம் தேடி அவன்…
புன்னகை ஜீவிக்கும்…