புன்னகை – 10
மலரின் வருகையில் அனய் சற்று குழம்பி பின் முகமலர்வுடன் அவளை பார்த்தான். அவன் அழைப்பான் என்றெல்லாம் மலர் கதவருகிலே நிற்கவில்லை. கதவை சாற்றிவிட்டு உள்ளே நுழைய இன்னும் ஆச்சர்யமாக ஆனது அனய்க்கு.
“வாட் எ சப்ரைஸ் ரோஸ்ஃபட்?…” அவனின் மனநிலை உல்லாசத்திற்கு மாற முதன் முதலில் தனதறைக்கு வந்திருக்கும் மனதிற்கினியவளின் வருகை அவனின் அப்போதைய முடிவுகளை மறக்கடித்தது.
கத்தரிப்பூ வர்ண காட்டன் புடவையில் சிலை போல் நின்றவளின் அமரிக்கையான அழகு அவனின் மனதை அசைத்தது.
தனக்குத்தானே தன் ஆசைகளுக்கு வேலியிட்டுக்கொண்டு மலரின் மனம் மாறும் வரை அவளிடமிருந்து தள்ளியிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு வெளிவர துடித்தது அவனின் காதல் உணர்வுகள்.
மயக்கம் சொட்டும் விழிகளுடன் அவளருகில் வந்தவன் அவளின் பின்னால் பார்க்க தானியங்கி கதவு மூடியிருந்தது. இப்பொழுது இன்னும் அதிகமாய் பார்த்தான் இதழ்பிரியா புன்னகையோடு.
பாதாதிகேசம் பார்வையாலேயே வருடியவனின் மனதிற்குள் எதுவோ ஒன்று நெருடியது மலரின் தோற்றத்தில். எப்பொழுதும் இருக்கும் இறுக்கமான முகபாவனை தான் இப்பொழுதும் அவளிடம்.
திருமணத்தன்று தெரிந்த ஏதோ ஒன்று குறைகிறதே யோசித்து யோசித்து குழம்பியவன் மூளையில் மின்னலடிக்க இடைவரை பின்னலிட்டிருந்த கூந்தலில் ஒரு இணுக்கு பூ கூட இல்லை.
ஆம். கல்யாணம் நடந்த அன்றைக்கு கோவிலில் வைத்து நேத்ரா தான் மலருக்கு மல்லிகை சரத்தை சூடிவிட்டாள். அதை உணரும் நிலையில் மலர் இல்லை.
அதன் பின்னான அடுத்த இரண்டு நாட்களிலும் மலரின் தலையில் எந்த மலரும் அலங்கரிக்கவில்லை. அதை மலரே விரும்பவில்லை.
அதை கண்டுகொண்டவன் அமைதியாக சென்று கட்டிலில் அமர்ந்துவிட மலர் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள்.
“வந்து உட்கார் மலர். ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க?…”
அப்பொழுதும் அவள் மௌனமாகவே இருக்க ஒரு பெருமூச்சுடன் எழுந்து அவளருகில் வந்தவன்,
“ஏதாவது கேட்கனுமா? என்னன்னு கேளுமா?…” என்க இல்லை என தலையசைத்தாள்.
அப்பொழுதுதான் அவளை வேறு கோணத்தில் கூர்மையாக பார்த்தவன், “தானாக மலர் தன் அறைக்கு வர வாய்ப்பே இல்லை…” என்பதை உணர்ந்து,
“என்ன விஷயம் மலர்? எதுக்காக வந்த?…” கொஞ்சம் அழுத்தமாகவே கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“என்னால உங்க வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் இழக்க வேண்டாம். அதான் வந்தேன்…” என இயந்திரம் போல் இயம்ப சத்தியமாய் அனய்க்கு ஒன்றும் புரியவில்லை.
“வாட்? புரியிறது போல பேசறியா? என்ன சொல்ற?…”
“ஹ்ம், நீங்க சந்தோஷமா குடும்ப வாழ்க்கை வாழனுமாம். உங்க அம்மா தான் என்னை அனுப்பி வச்சாங்க. உங்களை சந்தோஷமா வச்சுக்க…” கடுகடுத்த குரலில் எரிச்சலாய் சொல்லிவிட அவளின் கன்னம் தீயென எரிந்தது.
கண்களில் இருந்து அன்னிச்சையாக கண்ணீர் வழிய அவன் அடித்ததை முழுமையாக உணரவே ஒரு நிமிடம் பிடித்தது வனமலருக்கு.
“ராஸ்கல் என்ன பேச்சு பேசற நீ? உன் வாயால இந்த வார்த்தையை நான் கேட்கிறதுக்கு பதில் உன்னை கொன்னா கூட தப்பில்லைடி…”
அவளை மீண்டும் மறு கன்னத்தில் அறையப்போனவன் கையை இழுத்து காற்றில் வீசினான். அங்குமிங்குமாய் ஒரு நிலையில் நில்லாமல் நடந்துகொண்டிருந்தான்.
என்ன முயன்றும் தன் கோபத்தை கட்டுக்குள் நிறுத்த அவனால் முடியவே இல்லை. தன்னை புரிந்துகொள்ளவே மாட்டாளோ என்னும் பரிதவிப்பு ஆற்றாமையாய் பொங்கி ததும்பியது.
“என்ன வார்த்தை பேசிட்டா?…” அவனின் இதயம் சத்தமில்லாமல் கதறி துடித்தது.
அசைவில்லாமல் கன்னத்தை ஒரு கையால் தாங்கியபடி நின்றிருந்தவளை காண காண ஆத்திரம் தலைக்கேற அவளருகே சென்றவன் அவளின் ஒரு கையை பிடித்து,
“இன்னும் ஏன்டி இங்கயே நிக்கிற? என்னை பேசி பேசியே சாகடிக்கவா? முதல்ல போ இங்கருந்து…” அவளை பிடித்து தள்ளினான்.
அவன் செய்கையில் முதலில் தள்ளாடி சற்று தள்ளிப்போய் நின்றாளே தவிர அங்கிருந்து செல்லவில்லை.
ஆண்டாள் முடிவாக சொல்லியே அனுப்பியிருந்தார். இனி அனய் ரூம் தான் உன்னுடையதும். அவனோடுதான் இனி நீ இருக்கவேண்டும் என்று. மலரின் காதுகளில் இப்பொழுதும் மாமியாரின் அதிகாரமான கட்டளை ரீங்காரமிட்டுக்கொண்டே தான் இருந்தது.
“நான் சொல்லிட்டே இருக்கேன், நீ நிக்கிற? இன்னும் என்ன நெஞ்சழுத்தம் உனக்கு? உன்னை உருகி உருகி காதலிச்சு உனக்காக காத்திருந்து கல்யாணமும் பண்ணினது இதை கேட்கவா? (Xanax) …” என தலையிலடித்துக்கொண்டவனின் குரல் கலங்கி ஒலித்தது.
“என்னுடைய சந்தோஷம் வெறும் படுக்கையோட முடியுறதா? நான் உன்னோட ஆரம்பிக்கிற தாம்பத்ய வாழ்க்கையல ரெண்டுபேரோட மனசும் முழுமையா காதலால நிரம்பி இருக்கனும்னு ஆசைப்பட்டேன்டி…”
“இனி நீயே மனசு மாறி வந்து நாம வாழ ஆரம்பிச்சாலும் என் மனசோட ஒரு மூலையில இன்னைக்கு நீ வந்து நின்ன இந்த கோலமும், சொன்ன வார்த்தைகளும் என்னை உயிரோட வதைச்சே என் நிம்மதியை, சந்தோஷத்தை சாகடிக்குமே?…”
“என்கிட்டே இருந்து நீ விலகி இருந்தாலும் உன் அருகாமை தரும் அந்த மன நிறைவுக்கு ஈடா இருக்குமா நீ மீன் பண்ணி இங்க வந்து சொன்ன அந்த சந்தோஷம்?…”
“ஒரே வீட்ல ரெண்டு நாளா என் எதிர்ல என்னோட மனைவியா என் கண்முன்னால நடமாடிட்டு, என்னை பார்க்கிறப்போ எப்போவாச்சும் உன்னையறியாம சினேகமா சின்னதா ஒரு சிரிப்பு சிரிப்ப பாரு அது கொடுக்கிற சந்தோஷத்தை மிஞ்சிய சந்தோஷமா இதுல கிடைச்சிடும்?…”
“உனக்கெங்க இதெல்லாம் புரிய போகுது என் மனசோட வலி?, இந்த நிமிஷம் நான் அனுபவிக்கிற இந்த வேதனை உன்னால புரிஞ்சுக்க முடியாது மலர். அதுக்கு காதலிக்கனும். என்னை மாதிரி என்னை விட நீ அதிகமா என்னை நேசிக்கனும். உன் காதலை முழுமையா பெற்ற அந்த நிமிஷம் நான் உன்னோட சேரனும்…”
“அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் வேணும்னாலும் நான் காத்துட்டு இருப்பேன். கண்டிப்பா உன்னை காதலிக்க வைப்பேன். இப்போ நீ கிளம்பு…” என்றான்.
அவனின் ரணங்கள் யாவும் அந்த நொடி மலரின் வார்த்தைகள் கொடுத்த கனம் தாளாமல் எரிமலையென வெடித்து சிதறியது. பொக்கிஷமாய், புனிதமாய் தான் காத்துவந்த பவித்திரமான காதலை ஒருநொடியில் கொன்று குவித்தாளே?
இவள் வந்து எடுத்துக்கொள் என்று சொன்னதும் அவளை அள்ளிக்கொள்ள தான் என்ன நீசனா? மனைவியாகவே இருந்தாலும் தன் உரிமையை கடமையாய் அல்லாது அவளின் காதலால் பெற நினைத்தான்.
இன்னும் இங்கேயே நின்றால் மீண்டும் வார்த்தை வளர்ந்துவிடும், தன்னை மீறி ஏதாவது பேசி அவளை காயப்படுத்திவிடக்கூடும் என அஞ்சி பாத்ரூமிற்குள் நுழைந்துகொண்டான்.
சில நிமிடங்கள் கழிய அவள் சென்றிருப்பாள் என நினைத்துக்கொண்டே முகத்தை தண்ணீரால் அலம்பிவிட்டு நீர்த்திவலைகள் சொட்ட சொட்ட வெளி வந்தவன் மலர் அங்கேயே நிற்க திகைத்துத்தான் போனான்.
அவனின் பேச்சுக்கள் எதற்குமே மலரிடமிருந்து பிரதிபலிப்பு வரவில்லை என்றாலும் அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அவள் உள்வாங்கிக்கொண்டுதான் இருந்தாள் தன்னையும் அறியாமல்.
அவளுள் எதுவோ ஒன்று நழுவத்துடிக்க அதை இழுத்துப்பிடித்தவள் இறுக்கியும் பிடித்து தனக்குள் மிரண்டுபோனாள். அதில் விழிகள் விரிய அதிர்ந்து நின்றவளின் கோலம் அவனை நெருங்க சொல்ல என்னானதோ என,
“மலர் நீ கிளம்பு…” மீண்டும் படித்த பாட்டையே பாடியவன் அங்கிருந்து அவளை அகற்றத்துடித்தான்.
அவளின் அருகாமை ஒன்று தன்னை கோபத்தின் எல்லைக்கு இட்டுச்செல்லும், இல்லை என்றால் தனக்குள் போட்டு வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் கரையுடைந்த வெள்ளமாய் அவளை ஆக்ரமிக்க ஆரம்பித்துவிடும்.
இவை இரண்டிலும் எதுவும் நடந்துவிட கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.
அவள் இன்னமும் பிடிவாதமாய் நிற்கவே பொறுமை இழந்தவன்,
“இன்னும் என்னதான்டி செய்யனும் உனக்கு? என் மனசுல இருக்கிற மொத்தத்தையும் கொட்ட இந்த ஒரு ராத்திரி பத்தாது. உன்னை பிரிஞ்சு நீ இன்னொருத்தனுக்கு சொந்தமானப்போ கூட இரும்பு மாதிரி இருந்தேன்டி. அப்படிப்பட்ட ஆம்பளை என்னையே அழ வச்சிடுச்சு உன் பேச்சு…”
“கிளம்புன்னு சொல்றேன்ல மலர்…” என அதட்ட அதில் தலையை உலுக்கிக்கொண்டு அதிர்வாக பார்த்தாள்.
அப்பார்வையில் தெரிந்த பரிதவிப்பு ஆறுதல் தேடும் குழந்தையாய் அவள் விழிகளின் கலக்கமும் அவனின் மனதை பிசைய அனைத்தையும் உடைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொண்டான்.
அவனின் ஒன்றை அணைப்பில் தன் மொத்த காதலையும் அவளுக்குள் கடத்திவிடும் வேகம் ஆர்ப்பரித்தது. ஆறுதலாய் அவளின் தலையை வருட அதில் மலரின் உடல் இரும்பென இறுகியது.
அந்த மாற்றத்தை உணர்ந்தவன் அவளிடமிருந்து விலகி,
“உன்னோட போராட எனக்கு சுத்தமா இப்போ தெம்பு இல்லைமா. என் உணர்வுகளோட விளையாடாதே. இவ்வளோ பேசறேனே கொஞ்சமாவது அதை உணர்ந்து பாரேன் மலர்?…” கிட்டத்தட்ட கெஞ்சலே விஞ்சி இருந்தது அவனது குரலில்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அத்தனை வெறுமை.
“இப்போ கூட என்னுடைய அணைப்புக்கு உன்கிட்ட இருந்து எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லை உன்கிட்ட. அப்படி என்ன பிடிவாதம் உனக்கு. அம்மாக்கிட்ட நான் பேசிப்பேன். நீ கிளம்பு…”
“நான் போகமாட்டேன்…” என சொல்லி வேகமாய் படுக்கையை நோக்கி சென்றவள் படுத்தும் கொண்டாள்.
“இவ்வளோ சொல்லியும் கேட்காம என்ன ஒரு திமிர் இவளுக்கு? இது சரிவராது…” என அவளை சென்று எழுப்பி நிறுத்தியவன்,
“என் பேச்சை கேளு மலர். என் பொறுமையை சோதிக்காதே…” என எச்சரிக்க,
“என்னால போக முடியாது. இனி நான் இந்த ரூம்ல தான் இருப்பேன். உன் அம்மாகிட்ட பேசினாலும் நான் இங்க தான் இருப்பேன். உன்னால ஆனதை பார்த்துக்க…” என்று சொல்லி,
“என்னால இப்படித்தான் இருக்க முடியும். நீங்க எப்போ என்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு ஆசைப்பட்டாலும் நான் இப்படித்தான் இருப்பேன். அத்தோட என்னுடைய உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாத்தையும் நானே கொன்னு பல வருஷம் ஆச்சு. செத்து மண்ணா போன உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்க யாராலையும் முடியாது…”
சலனமின்றி ஒவ்வொரு வார்த்தையையும் பிசிறில்லாமல் அவனின் முகத்தை பார்த்து தீர்க்கமாய் உரைக்க அது குறி தப்பாமல் அனய்யின் காதல் நெஞ்சை குத்திக்கிழித்தது.
“டேய் சரவணா…” என மேலே பார்த்து குரலுயர்த்தி வெறித்தனமாய் கத்த அக்கட்டிடமே ஆட்டம் கண்டதை போலொரு பிரம்மையை மலருக்கு கொடுத்தது அவனின் அலறல்.
அவனின் அறையை தாண்டி எத்தனை சத்தமும் வெளியே கேட்காதென்பதால் அசையாது நின்றாள்.
“சரவணா மாமா…” என அவளிதழ்கள் முணுமுணுக்க கண்கள் கலங்கிப்போயின அவன் நினைவினில் வனமலருக்கு.
அவளின் முணுமுணுப்பு தப்பாமல் ஸ்பஷ்டமாய் அனய்யின் காதுகளை சென்றடைய வேகமாய் மலரின் முகவாயை அழுத்தமாய் பற்றியவன்,
“அவன் பேரை சொல்லாதடி. இப்போ மட்டும் அவன் உயிரோட இருந்திருந்தா என் கையாலையே சில்லு சில்லா வெட்டி சின்னாபின்னமா சிதைச்சிருப்பேன் அந்த நாயை. சந்தோஷமா சுகமா செத்துப்போனவனுக்கு நரகம்னா என்னன்னு நான் காட்டியிருப்பேன்…”
ஆக்ரோஷமாய் அவன் கர்ஜித்ததில் நடுனடுங்கித்தான் போனாள். பயத்தில் முகம் வியர்வை சிந்த அவனை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தவள் கட்டில் தடுக்கி படுக்கையில் விழுந்தாள்.
“அவன் ஒரு…” என மேலும் என்ன திட்டியிருப்பானோ? உதட்டை மடித்து கடித்துக்கொண்டான். தலையை அழுந்த கோதியவன்,
“பரதேசி நாயை நல்ல வார்த்தையால திட்ட கூட மனசு வரமாட்டிக்கு. உன் முன்னால கெட்டவார்த்தை பேச முடியலை…”
கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் அவளையே கண்கள் சிவக்க உறுத்து விழித்தவன் சில நொடிகள் பார்த்திருந்துவிட்டு,
“இனிமே உன் வாய்ல இருந்து அவன் பேர் வரக்கூடாது. வந்தது நான் மனுஷனா இருக்கமாட்டேன்…” அவளை கை நீட்டி எச்சரித்துவிட்டு பால்கனி கதவை திறந்து வெளியே சென்றவன் பக்கத்து எக்ஸர்சைஸ் ரூமில் நுழைந்துகொண்டான்.
சில நொடிகள் சேரில் அமரவும், எழுந்து நடக்கவும், திவானில் படுக்கவும் என இருப்புகொள்ளாமல் தவித்தான்.
யோசனைகளை பலதும் மனதை கவ்வ இதற்கான விடிவும் மலரை இதிலிருந்து வெளிக்கொணர வழியும் எங்கே எங்கே என மனம் இரையை தேடி வட்டமிடும் கழுகாய் சுற்றி சுற்றி பறந்தது.
யோசித்து ஒரு வழியாய் முடிவுக்கு வந்தவன் முகத்தை அழுத்தமாய் பூத்துவாளையால் துடைத்துக்கொண்டான். ஒரு தெளிவிற்கு வந்துவிட்டிருந்தான்.
“உணர்வுகள் செத்துப்போச்சாமே? யார் விட்டா இவளை?…” ஒரு கையின் உள்ளங்கையை மறு கையால் குத்திக்கொண்டான்.
“என்னால மட்டும் தான் உனக்கு உன்னுடைய உணர்வுகளுக்கு உயிர் தர முடியும் மலர். அதை நீ புரிஞ்சுப்ப, சீக்கிரமே புரிஞ்சுப்ப. உன்னை விட்டு விலகி என்னுடைய காதலை உணர்த்தனும்னு முடிவில் இருந்த என்னோட முடிவை நீயே மாத்திட்ட. இனி நானே நினைச்சாலும் உன்னை அப்படியே விடமுடியாது…”
அதுவரை இருந்த அலைப்புறுதல்கள் தொலைய மெல்ல எழுந்து நடந்தவன் தன்னறைக்கு திரும்பினான்.
அனய் கோபமாய் அறையை விட்டு சென்றதும் திகைத்துப்போய் படுத்திருந்தவள் எழுந்தமர்ந்தாள். இன்னமும் மலரின் உடல் நடுங்கிகொண்டுதான் இருந்தது.
எத்தனை கோபம்? என்ன ஒரு ஆவேசம்? கண்களில் என்ன ஒரு கொலைவெறி? இவனுக்கு இத்தனை கோபப்பட தெரியும் என்பதே இன்றைக்குத்தான் பார்த்தாள்.
அவனை தெரிந்து இத்தனை வருடத்தில் தன் உதாசீனத்தில் கூட கோபம் கொண்டிராதவனிடம் இன்றைக்கு இப்படி ஆக்ரோஷத்தை எதிர்பார்க்கவில்லை.
தன் திருமணத்திற்கு முதல்நாள் கூட கோபம் கொண்டிருந்தான் தான். அதில் இந்த உட்சபட்ச கொலைவெறி இல்லவே இல்லையே.
“சரவணா மாமா…” என வாய்விட்டு சொல்லியவள்,
“இந்த பேர் அவனை இந்தளவிற்கு ஆத்திரம் கொள்ள வைக்கிறது என்றால் அப்படி என்ன நடந்துவிட்டது?…” முதன்முதலாக கொஞ்சம் அனய்யின் பக்கம் யோசிக்க ஆரம்பித்தாள்.
அவளின் இந்த யோசனை வைத்தியநாதனோடு ஒப்பிட்டு பார்த்திருந்தால் அப்பொழுதே என்னவென கண்டறிய முயன்றிருப்பாள். ஆனால் அனய்யின் பேச்சுக்கள் மட்டுமே அவளின் சிந்தையை ஆக்ரமிக்க அப்படியே உறங்கிப்போனாள்.
அங்கே நிர்மலமான முகத்தோடு மலர் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளருகே மண்டியிட்டு அமர்ந்தவன் அத்தனை நெருக்கத்தில் அவளை கண்கொட்டாமல் கண்டான்.
“சும்மா இருந்த என்னை இப்படி உசுப்பி விட்டுட்டியே ரோஸ்ஃபட். என் காதலோட ஆழத்தை இதுவரை நான் சொல்லி கண்டுக்காம போய்ட்ட. ஆனா இனி நீ அப்படி போக நான் விடமாட்டேன்…”
அவளை பார்த்து சொல்லிக்கொண்டே மறுபுறம் சென்று படுத்தவன் அவளை பார்த்துக்கொண்டே உறங்கிப்போனான் நிம்மதியாக.
நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேத்ராவை அந்த ஸ்பரிசம் அத்தனை தூக்கத்திலும் தட்டி எழுப்பியது. விழிகளை திறந்து பார்த்தவள் ஆச்சர்யத்தில் சிலிர்த்துப்போனாள்.
“ஹேய் கட்டுமரம்…” என அவனை பாய்ந்து கட்டிக்கொண்டவள்,
“எங்கைய்யா போன? உன்னை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்…” என்று சொல்லி அவனின் நெஞ்சில் ஆழப்புதைய அவளை வாகாய் கட்டிக்கொண்டான் ரிஷி.
“நானுமே ரொம்ப ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன். என்ன செய்ய. இப்போ என் கைக்குள்ளே இருக்கிற உன்னையும், இந்த அழகான நேரத்தையும் மிஸ் பண்ண கூடாதுன்னு நினைக்கிறன். தக்காளி என்ன நினைக்குது…”
அவளின் முகத்தை தன்னருகே கொண்டுவந்து கேட்க,
“கட்டுமரம் சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறதுக்கான காரணம் என்னவா இருக்கும்னு நினைக்குது…” அவனின் மீசையை இழுத்துப்பிடித்து சொல்ல,
“ஸ்ஸ் வலிக்குதுடி தக்காளி. உன்னை விட வேற என்ன காரணம் இருக்க போகுது?…” என சொல்லியவனின் காதலில் என்றைக்கும் போல் உயிர் உருகி கரைந்தாள் நேத்ரா.
“தக்காளி கொஞ்சம் வெய்ட் போட்டுட்ட போல?…” அவளை அளவிடுவதை போல இடையை ஆராய,
“ஆமாமா நீ இல்லாதப்போ உன்னையே நினைச்சு சாப்பிடாம இருந்து நான் வெய்ட் குறைஞ்சு அதுல உனக்கு என்னை அடையாளம் தெரியாம போய் நான் தான் உன் போண்டா டீன்னு நிரூபிக்க நான் திரும்பவும் தினமும் ஐஞ்சு வேளை ஃபுல் கட்டு கட்டனும். அதான் நான் அப்டியே மெயின்டெய்ன் பண்ணிட்டேன். அதுல கொஞ்சம் ஓவரா மெயின்டெய்ன் ஆகிடுச்சு போல. ப்ச்…”
நீட்டி முழக்கி சொல்லி உச்சுக்கொட்டியவளை கழுத்தோடு சேர்த்து இழுத்தவன்,
“ஹா ஹா ஹ ஹா ஹா. நல்லா மெயின்டைன் பண்ணின போ போண்டா டீ…” என சொல்லி சிரிக்க அவனை முறைத்தவள்,
“நான் தான் என்னை கலாய்ச்சுப்பேன். நீங்க அதை செய்யகூடாது. ஓவர் அட்வாண்டேஜ்ல என்னையே ஓவர்ட்டேக் பண்ண பார்க்கீன்களா?…”
“தப்புத்தான்ம்மா. பொண்டாட்டி. பொண்டாட்டி. போதுமா?…” எழுந்தமர்ந்து கன்னத்தில் போட்டுக்கொண்டவன்,
“உன் வாயை தெரிஞ்சும் நான் நான் வாகா வந்து சிக்குறேன் இல்லையா? நீ பேசுவ…”
“இதை சொல்லத்தான் அர்த்த ராத்திரில வந்தீங்களா?…” என முறுக்கிக்கொள்ள,
“உனக்கு தெரியாதா நான் ஏன் வந்தேன்னு?…” என சன்னமாய் சிரித்தவன் கைகளில் நெளிய ஆரம்பித்த நேத்ரா அவனின் கைகளுக்கு தடா விதித்து,
“நான் மிஸ்டர் பெருசை பார்க்கனும்…” என,
“எஸ் மேடம். வந்தேன்…” என தலையணையை சாய்த்து நிறுத்தி நன்றாக சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
அவனை நெருங்கி தோள்களில் சாய்ந்துகொண்டவள் அனய்யின் திருமணம் நடந்ததிலிருந்து இன்று ஆண்டாள் மலரை அதட்டியது வரை அனைத்தையும் ஒப்பிவிக்க அதை அமைதியாக கேட்டுக்கொண்டான் ரிஷி.
“உன் அம்மா மனசு என்னைக்கோ மாறிடுச்சு நேத்ரா. அவங்க வறட்டு கௌரவம் தான் தானே முன்வந்து இந்த கல்யாணத்தை நடத்தவிடாம தடுத்திருக்கு. ஆனா நடக்கவே கூடாதுன்னு அவங்க நினைக்கலை. தானா நடந்தது போலவும் இருக்கனும். அதே நேரம் அவங்களுக்கு கோபம் குறையாத மாதிரியும் காட்டிக்கனும்…” என சொல்ல,
“எல்லாத்தையும் விட அம்மா பேபியை ஏத்துக்கிட்டது தான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. குழந்தை அவ்வளவு அழகு தெரியுமா?…”
“ஹ்ம் நானும் பார்த்திருக்கேன்…” என சொல்ல அவனை முறைத்தாள்.
“நீயும் உன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பெரும் தான் கோபமா மலரோட பேசாம, பார்க்காம இருந்தீங்க. எனக்கொண்ணும் அதை போல எதுவுமில்லையே…”
“நாங்க எங்க பேசாம இருந்தோம்? அமேஸான் தான் எங்களோட கான்டேக்ட் எதுவும் வேண்டாம்னு விலகி போனா. அந்த கோபம் தான் எங்களுக்கு. அமேஸான பார்க்க முடியலைன்னு நாங்களும் இத்தனை வருஷம் நேர்ல பார்க்காம இருக்கோம் தெரியும்ல…”
“அதையும் மலர் உன் அம்மாவுக்காக தான் செஞ்சா. அதை புரிஞ்சுக்கோங்க…” என்றவன்,
நேர்ல இல்லைனாலும் போன்ல, சோஷியல் மீடியால எல்லாம் டச் ல தானே இருக்கீங்க?..” என நேத்ரா அமைதியானாள்.
“சரி விடு. ஆமா, என்ன உன் மத்த ப்ரெண்ட்ஸ் இன்னும் வரலை? ஆச்சர்யமா இருக்கு?…”
“அவங்களுக்கு இப்போ டைம் இல்லை. ஆனந்தும், கூழ்வண்டியும் இன்னும் பாரின்ல இருந்து வரலை. ரோஷிக்கு இது நாலாவது மாசம். நோ ட்ராவல். ஆனா அவங்களோட விஷ் சொல்ல சொன்னாங்க. பேச மாட்டாங்களாம் அமேஸான்ட்ட…”
“உங்க பாடு, செய்ங்க…” என்றவன்,
“தக்காளி…” என இறங்கு சரிந்து படுத்தவன் அவளையும் தன் மேல் சாய்த்துக்கொள்ள,
“அபி தேடவே இல்லையாம் என்னை. ப்ச். திலகா அத்தை சொன்னாங்க…” என உதடு பிதுக்க,
“முதல்ல உன்னை தேடுற என்னை பாரு. குட்டியை கவனிக்க அங்க தான் நிறைய பேர் இருக்காங்களே…”
“காரியத்திலயே கண்ணா இரு கட்டுமரம்…” என அவனின் ஆளுகைக்குள் தொலைந்தாள் நேத்ரா.
முகத்தில் வெளிச்சம் வரும் வரை மலர் இன்னும் அசந்து உறங்க அனய்யின் தூக்கம் கலைந்தது.
மெல்ல கண்விழித்து சோம்பல் முறித்தவன் அவள் இருக்கிறாளா இல்லையா என மலரை திரும்பி பார்க்க இன்னமும் படுத்த இடத்தில் இருந்து சற்று உள் தள்ளி படுத்திருந்தாள்.
புரண்டு படுத்து அவளையே சிறிது நேரம் பார்த்தவன் முகத்தில் குறும்பு தலைதூக்க மெல்ல அவளை நெருங்கி அவள்மேல் கையை போட்டு இடைவளைத்து தூங்குவது போல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தான்.
அவனின் தொடுகையில் முதலில் அசூஸையாக உணர்ந்தவள் மெல்ல உறக்கம் கலைந்து விழி திறக்க தன் மேல் பரமாய் கிடப்பது என்னவென குனிந்து இடையை பார்த்தாள்.
பார்த்தவள் அதிர்ந்துபோய் அவனின் கையை எடுத்துவிட முயல அவனோ இரும்பென பிடித்திருந்தான்.
“கையை எடுங்க…” என கோபமாகவே சொல்ல அதை அவன் கேட்டால் தானே? மலருக்கு கோபம் கொதித்துக்கொண்டு வந்தது.
“ப்ச் ரோஸ்ஃபட் இன்னும் எத்தனை கிஸ் தான் கேட்ப? நாளைக்கு தரேன்…” என அலுப்பாய் சொல்வது போல விழிதிறவாமல் கூற ஆடிப்போனாள்.
“என்ன நான் முத்தம் கேட்டேனா?…” அவனின் பேச்சில் அதிர்ந்து பின் சந்தேகமாய் பார்த்தாள் மலர்.
புன்னகை ஜீவிக்கும்…