ஹாலுக்கு சென்றமர்ந்ததும் அனய்யும் ரிஷியும் அடுத்த ஷூட்டிங் பற்றியும் சுவிசர்லாந்தில் நடந்ததை பற்றியும் பேசிக்கொண்டிருக்க ஆண்டாள் வேகமாய் சென்று பூஜையறையிலிருந்து முல்லைப்பூவை எடுத்து வந்து நேத்ராவிடம் தர மலரின் முகம் இருண்டது.
இதை எப்படி தவிர்ப்பது? அதற்காக பூ வைத்துக்கொள்ள முடியுமா என்ன? என புரியாமல் தவித்து நிற்க நேத்ராவோ அவளின் தவிப்பை உணர்ந்தும் கண்டுகொள்ளாத பாவனையோடு,
“நான் தான் வச்சிருக்கேனேம்மா. இது எதுக்கு?…” வேண்டுமென்றே கேட்க,
“ஆளுதான் வளர்ந்திருக்கிற. அறிவே இல்லை. இதுல நீ காலேஜை கட்டி மேய்க்கிற?…” என சொல்லியதும் தான் சுமங்கலியை கவனித்தார்.
அதில் கொஞ்சம் அதிர்ந்தவர் சுமங்கலியின் ஸ்நேகபாவத்தில், “தப்பா நினைச்சுக்காதீங்க சம்பந்தி. நேத்ரா கொஞ்சம்…”
“அட இதுல என்ன இருக்குங்க சம்பந்தி. நான் எதுவும் நினைக்கலை. ஆனா ஒண்ணு. நேத்ராவை பத்தி உங்களுக்கு தான் இன்னும் சரியா தெரியலை…”
மாமியாரின் பாராட்டில் ஆண்டாளை பார்த்த நேத்ரா கண்சிமிட்ட அதில் சிரித்துவிட்டார் ஆண்டாள்.
“வீட்டுக்கு தெரிஞ்சவங்க வரப்போ வெறும் தலையோடா இருப்பா உன் ப்ரெண்ட்? பூவை வச்சுவிடு. நானும் ரெண்டு நாளா பார்க்கறேன். நீயும் அவளை கவனிக்கிறதே இல்லை. இனி நீ இருந்தாலும் இல்லைனாலும் அவ தினமும் பூ வச்சுக்கனும், இதை நான் சொல்லி சொல்லி செய்யனும்னு நினைக்கிறாளா என்ன?…”
ஆண்டாளின் அதட்டலில் வாடிய மலராய் ஆனது மலரின் முகம். அதை கண்ட அனய்க்கு கஷ்டமாக இருந்தது. அதை பார்த்த ரிஷி,
“அங்க சொன்னதும் இங்க ஸார்க்கு புகையுது போல?…” என அனய்யின் காதில் முணுமுணுத்த ரிஷி,
“கசப்பு மருந்துதான் நோயை குணமாக்கும். வலியில்லாமல் எந்த சிகிச்சையும் இல்லை அனய். அமைதியா நடக்கிறதை வேடிக்கை மட்டும் பாரு…” என சொல்ல அனய்யும் அதை ஆமோதித்து அமைதிகாத்தான்.
நேத்ரா தாயிடம் இருந்து முல்லைசரத்தை வாங்கிக்கொண்டு மலரை நெருங்க கண்கள் கலங்கியது அவளுக்கு. ஆண்டாளை எதிர்த்து பேச எந்த தைரியமும் இல்லை அவளுக்கு. அதில் பிடித்தமும் இல்லை.
அவரின் மீது கோபமும், மனவருத்தமும் இருந்தாலும் சிறுவயதிலிருந்தே தாயில்லாமல் வளர்ந்த அவளுக்கு படிக்கும் காலத்தில் தன்னை மகளை போல பார்த்துக்கொண்ட ஆண்டாளை ஒருநாளும் வெறுக்க முடியாது.
அதனால் அவரின் பேச்சை தட்டமுடியாமல் செய்வதறியாது நிற்க அவளின் கலங்கிய விழிகளை கண்ட ஆண்டாள்,
“வீட்டுக்கு மனுஷமக்க வரப்போ கொஞ்சம் சிரிச்ச முகமா இருக்க சொல்லு நேத்ரா…” என மீண்டும் ஒரு அதட்டல் போட கண்களில் வழியவிருந்த கண்ணீர் தன்னைப்போல நின்றது.
“நானும் சொல்ல மறந்துட்டேன்ம்மா…” என சொல்லிய நேத்ரா,
“ஹேய் அமேஸான் உன்னை பார்க்க உன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் வராங்க. காமாட்சி அம்மா தான் போன்ல சொன்னாங்க. பேர் கூட ரத்னா, திலீபன்னு சொன்னாங்க. உன்னோட வொர்க் பன்றாங்களாமே?…” என்றதும்,
“என்ன ரத்னாவா? திலீபனா? எப்போ?…” என ஆவலாய் கேட்க,
“அடேங்கப்பா? அமேஸான் உன் வாய்ஸ் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வெளில வருது. அவங்க ப்ரெண்ட்ஸ்னா அப்போ நான் யாருடி?…” என முறுக்கிக்கொள்ள,
“ப்ளீஸ் நேத்ரா கோச்சுக்காதே…” என தோழியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்க நேத்ரா மிஞ்ச மலர் கெஞ்ச என அவ்விடம் களைகட்ட இருவரையும் அனைவரும் சுவாரஸியமாய் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
“போன ஜென்மத்துல உங்கம்மா பாதாள பைரவியா பிறந்திருப்பாங்க போல. இப்போ கூட அதே போல அப்பப்போ அந்நியன் மாதிரி மாறிடறாங்க…”
மலர் சொல்லவும் எங்கே அதை ஆண்டாள் கேட்டுவிட்டாரோ என அவசரமாய் பார்க்க அவர் சுமங்கலியிடம் எதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் தாங்கள் கவனித்துவிட்டோமென்பதை போல ரிஷி கேலி சிரிப்பொன்றை உதிர்க்க அனய் மலரை முறைத்தான்.
“நான் என்ன அவ்வளோ சத்தமாவா பேசினேன்?…” என மலர் அப்பாவியாய் கேட்க,
“அடங்குடி. இப்போதானே குரலே வெளிவரலைன்னு சத்தமா பேசுன்னு சொல்லிட்டு இருந்தேன். அதுக்குன்னு இப்படியா சத்தமா பேசிவைப்ப? ஏன் ஆண்டாளுக்கு கேட்கலைன்னு தெரியலை. நல்லவேளை ஆவின்பால் இல்லை. அவர் காது பாம்புக்காது. ரொம்ப தெளிவா கேட்டிருக்கும்…”
ஆனால் ஆண்டாள் கவனித்து தான் விட்டார். அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை. அவருக்குமே மலர் சட்டென அப்படி சொல்லவும் சட்டென சிரிப்பு பொங்கியதென்னவோ உண்மை தான்.
ஆனால் சிரித்து காட்டிக்கொண்டால் மலர் தலைக்கேறிவிட்டால் என்ன செய்வது? கொஞ்சம் மாமியாராகவும் இருக்க நினைத்தார்.
“சரி சரி போதும். நாம இன்னைக்கு ஈவ்னிங் ஊருக்கு கிளம்பறோம். போய் எல்லாத்தையும் பேக் பண்ணிவை நேத்ரா…” என ரிஷி சொல்ல,
“என்ன ஊருக்கா? யாரை கேட்டு முடிவு செஞ்சீங்க? அதெல்லாம் வரமுடியாது…” என சொல்லி சுமங்கலியை பார்த்தவள் நாக்கை கடித்துக்கொண்டு அவரிடம் சிறு மன்னிப்பையும் கேட்டுவிட்டு,
“உங்களுக்கு ஷூட்டிங் இருக்குமே?…” என,
“இன்னும் த்ரீ டேய்ஸ் கழிச்சு தான் ஷூட்டிங். சோ ஊருக்கு போறோம். போயி ஆகனும்…” ரிஷி கட் அன்ட் ரைட்டாக கூற,
“அப்போ ஓகே. போய்ட்டு நானும் உங்களோடவே திரும்பி வரேன்…” எப்படி என்பது போல மாமியாரிடம் கேட்க அவரோ ரிஷியை கண் காண்பிக்க அதில் உதட்டை பிதுக்கியவள் ரிஷியை பார்க்க,
“அப்போ காலேஜை யார் பார்த்துப்பா? நீ காலேஜ் பிரின்ஸிபால். கொஞ்சமாச்சும் பொறுப்போட பேசு நேத்ரா…” ரிஷி சற்று அழுத்தமாக சொல்ல,
“இந்த பருப்பெல்லாம் என்கிட்டே வேகாது. நான் வருவேன்…”
“அபி ஸ்கூல்?…”
“பிரின்ஸிபாலே மெடிக்கல் லீப் போடறப்போ அவனுக்கு லீவ் கிடைக்காதா என்ன?…”
நேத்ரா நொடித்துக்கொள்ள ரிஷி ஆண்டாளைத்தான் பார்த்தான். அவனுக்கு தெரியும் இனி மாமியார் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என. வாய்க்குள் சிரிப்பை மென்றபடி நடக்கவிருப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
“ஒன்…” ரிஷி கவுன்ட் செய்ய ஆரம்பிக்க,
“பார்த்தா கூட அவன் என்னோட எங்க இருக்கான்?…” நேத்ரா தொடர ஆண்டாள் பார்த்தார்.
“டூ…” – ரிஷி.
“எப்போவும் உங்கப்பா கூடதான் இருக்கான்…” – நேத்ரா சொல்ல ஆண்டாள் எழுந்து வந்தார்.
“திரீ…” – ரிஷி.
“நான் என்னைக்கு அவனுக்கு தேவைப்பட்டிருக்கேன்?…” நேத்ரா அலுத்துக்கொள்ள,
“ரெடி ஸ்டார்ட்…” ரிஷி நினைத்த நிமிடம் நேத்ராவை வேகமாய் திருப்பிய ஆண்டாள்,
“ஏன் சொல்லமாட்ட? நீ காலேஜ்க்கு போறியேன்னு உனக்கு சிரமம் தரக்கூடாதுன்னு பார்த்து பார்த்து குழந்தையை கவனிச்சுக்கிறாங்கள்ள நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ…” என ஆண்டாள் பொங்கினார்.
“ஆத்தீ இவர் எப்போ ஸ்பாட்ல என்ட்ரி குடுத்தாரு? தொலைஞ்சேன்…”
நேத்ரா மாட்டிக்கொண்ட பாவனையில் திருதிருவென முழிக்க அனய்யும் ரிஷியும் அவளுக்கு பழிப்பு காட்டி சிரித்தனர் சத்தமில்லாமல்.
“இப்படி வாய்விட்டுட்டியே நேத்துக்குட்டி…” என தனக்குள் தலையிலடித்துக்கொண்டவள்,
“ம்மா ஒரு வேகத்துல பேசிட்டேன்மா. உங்களோட இருக்கனும்னு ஆசையில பேசிட்டேன். விடுங்களேன்…” என கெஞ்சலில் இறங்க,
“மாப்பிள்ளையே கிளம்புன்னு அத்தனை தடவை சொல்றாரு. நீ கூட கூட பேசிட்டு இருக்க? உன் மாமியார் இருக்காங்களேன்னு கொஞ்சமும் மரியாதை வேண்டாமா உனக்கு?…” என்றவர்,
“உன்னை போல பிள்ளையும் ஆக்கிடாதே. உன் புத்தி தெரிஞ்சு தான் மாப்பிள்ளை வீட்ல சம்பந்தி குழந்தையை பொறுப்பா பார்த்துக்கறாங்க. அவனும் சமத்தா ஸ்கூலுக்கு போய்ட்டு வரான். உன்னை போலவா ஊர்வம்பிழுத்துட்டு ஸ்கூலுக்கு போகாம மட்டம் அடிக்கிறான்?…”
ஆண்டாள் இன்னும் பொரிய அந்த கோவத்தில் பொத்தென ரிஷியின் அருகில் அமர்ந்தவள்,
“உங்ககிட்ட ரெண்டு நாள் தானே லீவ் கேட்டேன் மிஸ்டர் கட்டுமரம்? இப்படி காலைவாரிவிட்டு ஆண்டாள் அடுப்பில தூக்கி உக்கார்த்திவிட்டுட்டீங்க. சூடு தாங்கலை. என்னை திட்டறதுன்னா அம்மாவுக்கு அல்வா சாப்பிடற மாதிரி. பாருங்க கிண்டு கிண்டுன்னு கிண்டிட்டு இருக்காங்க…”
நேத்ரா சிணுங்க அதை கண்ட சுமங்கலி ,
“விடுங்க சம்பந்தி. சின்ன பொண்ணுதானே? அவளும் இங்க வந்து சேர்ந்தது போல தங்கி எத்தனை வருஷம் ஆச்சு. அதுக்கான சூழ்நிலை இங்க அமையவே இல்லை. அவளுக்கும் எத்தனை ஆசைகள் இருக்கும்? அதையெல்லாம் இவ்வளவு வருஷம் உங்க யார்க்கிட்டயும் காண்பிக்காம மறைச்சுதானே வச்சிருந்தா?…”
“இங்க உள்ள நிலையை புரிஞ்சுட்டு அவ உங்களுக்கு கஷ்டம் குடுக்க கூடாதுன்னு அமைதியா இருந்துட்டா. ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லையே. எல்லாமே நல்லபடியா முடிஞ்சதுல…”
சுமங்கலி சொன்னதும் அதில் இருந்த உண்மையை உணர்ந்து ஆண்டாள் நேத்ராவை பார்க்க அங்கே அனைவரும் அமைதியாகினர்.
“இப்போ எதுக்கு இப்படி எல்லோருமே சைலன்ட் ஆகிட்டீங்க? நடந்ததை இல்லைன்னு சொல்லமுடியுமா? உடனே முகத்தை தூக்கி வச்சுக்க வேண்டாம். இந்த நிமிஷம் எல்லாமே சரியாகிடுச்சு. அதை நினைச்சு சந்தோஷப்படுங்க…”
அனைவரிடமும் சொல்லிய சுமங்கலி ஆண்டாளை அழைத்து தனியே சென்று அவரின் கையை பிடித்துக்கொண்டவர்,
“இன்னும் உங்களுக்கு பயம் போகலையா சம்பந்தி? இல்லை எங்க மேல நம்பிக்கை இல்லையா?…” என கேட்க,
“ச்சே ச்சே. அதில்லை சம்பந்தி. ஆனாலும் பெத்த மனசு கேட்கமாட்டேங்குது. மாப்பிள்ளையோட போனா கொஞ்சம் தைரியமா இருப்பேன்…” தயக்கமாய் ஆண்டாள் கூற,
“நீங்க இப்பவும் தைரியமா இருக்கலாம். இதுக்கு மேலையும் நம்பிக்கை இல்லாம நீங்க பேசின நாங்க ஒன்னும் செய்யமுடியாது. நேத்ராவை நினைச்சு கவலைப்பட்டு உங்களை நம்பி வந்திருக்கும் பொண்ணுக்கிட்ட பாராமுகம் காட்டாம அன்பா நடந்துக்கோங்க…” என,
“அதெல்லாம் இல்லைங்க. கொஞ்சம் வருத்தம். அதான் சட்டுன்னு பேச மனசு இடம் கொடுக்கலை. ஆனாலும் அன்பா தானே இருக்கேன்…” ஆண்டாள் சொல்ல,
“இப்பவும் அன்பா தான் இருக்கீங்க. அதை நேரடியா காட்டலாமே?. உங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமியா அந்த பொண்ணை பாருங்க. அவளை சந்தோஷமா வச்சுக்கோங்க. அந்த மனசே நீங்க பெத்த பொண்ணுக்கு ஒரு குறையும் வரவிடாது…” என்ற சுமங்கலி,
“இன்னொரு விஷயம் சம்பந்தி. சொல்றேன்னு தவறா நினைக்க வேண்டாம். நீங்க நேத்ரா மனசை கஷ்டபடுத்தறது போல இனிமே பேசாதீங்க. அவ உங்களுக்கு பொண்ணா இருக்கலாம். ஆனா இப்போ அவ ஒரு குழந்தைக்கு தாய். ஒரு காலேஜோட பிரின்ஸிபால்…” என சொல்லி ஆண்டாளை பார்க்க,
“பரவாயில்லை. சொல்லுங்க…” என்றார் ஆண்டாள்.
“இப்போ உங்களுக்கும் ஒரு மருமக வந்துட்டா. என்னதான் அந்த பொண்ணு நேத்ரா ப்ரெண்டா இருந்தாலும், என் மகன் வித்தியாசமாய் நினைக்கலைனாலும் இப்போ நேத்ரா எங்க வீட்டு பொண்ணு. புதுசா வந்த பொண்ணு முன்னாடி என் மருமகபொண்ணை நீங்க இப்படி பேசறது எனக்கு வருத்தமா இருக்கு. அதுவும் நடு சபையில வச்சு…”
சுமங்கலி சொல்லிவிட ஆண்டாளுக்கு அது கோபம் தராமல் மாறாக சந்தோஷத்தையே தந்தது.
“மன்னிச்சிடுங்க சம்பந்தி. ஏதோ கோவத்துல வார்த்தையை விட்டுட்டேன். இனிமே பார்த்து பேசறேன்…” உடனே ஆண்டாளும் தழைந்து பேச,
“தவறா நினைச்சுட்டீங்களா? உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்குது தான். நீங்க கண்டிக்கலாம் தான். இதையே நீங்க தனியா கூப்பிட்டு சொல்லியிருந்தா நான் இதில் தலையிட்டிருக்கவே மாட்டேன்…”
“நான் எதுவும் நினைச்சுக்கலை சம்பந்தி. இதுல நீங்க சங்கடப்பட என்ன இருக்கு? எனக்கு சந்தோசம் தான் என் பொண்ணு மரியாதைக்காக நீங்க பார்க்கறீங்க. இப்போ என் மனசுல எந்தவிதமான பயமும் சந்தேகமும் இல்லை. நிம்மதியா என் பொண்ணை அனுப்பிவைப்பேன்…”
“ஒரு மருமகளை எப்படி பார்த்துக்கனும்னு உங்ககிட்ட இருந்து இந்த ரெண்டு நாளில் படிச்சுட்டேன் சம்பந்தி. நன்றி…” ஆண்டாளை சுமங்கலி அணைத்துக்கொள்ள அவரின் மனம் இதமாகியது.
ஆண்டாளிடம் மாட்டிவிட்டதற்காக ரிஷியை போட்டு தாளித்துக்கொண்டிருந்தாள் நேத்ரா.
“எல்லாம் விஷம் விஷம்…” என அவனை கிள்ளிவைக்க சிறிதுநேரம் விட்டு அவளின் இரு கைகளையும் அணைத்தார் போல சிறைபிடிக்க நேத்ரா முறைத்துப்பார்த்து,
“அமேஸான் லோன்லியா ஃபீல் பண்ணுவா…” என சொல்ல,
“கிழிஞ்சது. நீ இருந்த உன் அண்ணன் தான் லோன்லியா ஃபீல் பண்ணுவான். பரவாயில்லையா?…” என கேட்க அனய் சிரிப்போடு அவர்களை பார்த்தான்.
“இப்படி நீயே உன் ப்ரெண்டோட ஓட்டிட்டு சுத்துனா உன் ப்ரெண்ட் என்னைக்கு உன் அண்ணாவோட ஓட்டறது?…”
ரிஷி என்னவோ சாதாரணமாக சொல்லிவிட மலருக்கு முகம் சிவந்துபோனது அவனின் பேச்சில். அங்கிருந்து வருணியை தேடி சென்றுவிட அனய்யும் மலரின் பின்னால் எழுந்து சென்றுவிட்டான் முகம் கொள்ளா புன்னகையோடு.
“யோவ் கட்டுமரம் இப்படியா பளிச்சுன்னு சொல்லுவீங்க? பாருங்க ரெண்டும் வெட்கப்பட்டு போகுதுங்க. என் மானமே போச்சு. உங்களை எப்படியெல்லாம் அருமை பெருமையா பார்த்துக்கிட்டேன்?…” என புலம்ப,
“ஏய் தக்காளி, நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?…” என சொல்லியதை யோசித்துப்பார்த்து,
“அடிப்பாவி! நான் அந்த மீனிங்ல சொல்லலை. எதார்த்தமா சொன்னதை இப்படியெல்லாம் மீன் பண்ணிட்டா நான் என்ன பன்றது? நல்ல குடும்பம்டா…” என அங்கலாய்க்க கோபமாக அங்கிருந்து எழுந்தவளை இழுத்தவன் தன் மேல் அமர்த்தி,
“என்னடி தக்காளி, ரொம்ப ஓவரா பன்ற? உன்னை இங்க விட்டுட்டு அங்க போய் நான் என்ன செய்யவாம்? சொன்னா புரிஞ்சுக்கவே மாட்ட. மண்டையில மசாலே கிடையாது…” என சொல்லி அவளை உசுப்பேற்ற நேத்ரா அவனை முறைக்க,
“சரி சொல்லு. என்னோட ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து நீ என்ன செய்யபோற? நான் யாரையெல்லாம சைட்டடிக்கிறேன்னு கணக்கெடுக்கவா? …” என கேட்க அவனை நக்கலாய் பார்த்தவள்,
“யார்? நீங்க? சைட்டு? இதை நான் நம்பணுமாக்கும்? ஏய் நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயில்க்கு போறேன்றது போல எத்தனை தடவை சைட்டடிக்கிறேன்னு சொல்லி பல்ப் வாங்குவீங்க?. நீங்கலாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…” என கேலிசெய்து,
“நீங்க சும்மா பார்த்தா கூட உங்களோட பேசவே அங்க அத்தனை பேரும் பயப்படுவாங்களாம். இதுல நீங்க சைட் அடிக்கிறீங்களாக்கும்? பாவம் பொண்ணுங்க. அதுவும் அழகான பொண்ணுங்க. நீங்கதான் பார்த்து ரசிக்கலை. அதான் நானாச்சும் பார்க்கலாம். ரசிக்கலாம்னு நினைக்கேன்…”
“நீ ரசிக்க நினைக்கிறது எதைன்னு எனக்கு தெரியாதா? நீ அங்க வர நான் வேலையை விட்டு உன்னையே பார்க்க அதை பார்த்து எல்லோர் வாயிலும் நான் அவலாகனும். பொண்டாட்டி தாசன்னு எல்லோரும் என் பின்னால என்னை கேலிபேசனும். இதானே தக்காளி உன் டார்க்கெட்…”
“என்னது இன்னும் உங்களை யாரும் அப்படி பேசலையா? அந்த செல்வாவுக்கு போனை போடுங்க. கொஞ்சம் கூட பொறுப்புன்றதே அவனுக்கு கிடையாது. ஒரு வேலைகுடுத்தா அதை சரியா செய்யறது இல்லை. கால் காசு பெறாத வதந்தி. அதை பரப்பமுடியாத அவன் எதுக்கு இந்த பீல்ட்ல இருக்கான்…”
நேத்ரா பேச பேச அவளை அடக்கமுடியாமல் வரவேற்பறை என்றும் பாராது இழுத்து அணைத்துக்கொண்டவன்,
“தக்காளி முடியலைடி. உன்கிட்ட சிக்கிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே. ஆனாலும் இது எல்லாம் இல்லாம என்னால இருக்க முடியாது. எப்பவும் போல நான் சுத்தமா ப்ளாட் தான் உன்கிட்ட…” என சொல்ல சிறு வெட்கத்தோடு அவனின் தோள் வளைவில் முகம் புதைத்தாள்.
“ஊருக்கு போலாமா?…” என ரிஷி அதே மயக்கத்தோடே கேட்க,
“கட்டுமரம் எப்பவுமே என்னை பேசி பேசியே கவுத்திடற. உன் இழுப்புக்குத்தான் என்னை சுத்தவிடுற…” என செல்லமாக கடிந்துகொண்டவள் அவனின் சொல்படி தங்கள் கிளம்புவதற்கான ஆயத்தங்களை பார்க்க சென்றாள்.
செல்லும் தன்னவளை கரைகாணா காதலோடு பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரிஷி இதழ் விரியா புன்னகையோடு.
புன்னகை ஜீவிக்கும்…