புன்னகை – 11
மலரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவளை சீண்டினான் அனய்.
இதன் விளைவு எதுவாகவும் இருக்கட்டும். மலர் கோபத்தின் எல்லைக்கு சென்றாலும் பார்த்துக்கொள்ளலாம். அவளை உயிர்கொள்ளச்செய்ய தன்னால் முடியும் என்று நம்பினான்.
அவன் எதிர்பார்ப்பை பொய்க்க விடாமல் மலர் கோபத்தில் கொந்தளிக்கத்தான் செய்தாள்.
ஆண்டாள் சொல்லியதற்கிணங்கி ஏதோ வேகத்தில் முடிவெடுக்காமல் சிந்தித்து நிதானமாகவே அவனை எதிர்கொள்ள அந்த அறைக்கு வந்துவிட்டாலும் அவனின் பேச்சில், விலகலில் ஒருவித நிம்மதி கூட எழுந்தது தான்.
ஆனால் இப்போதைய அவனின் நெருக்கமும், அணைப்பும் அவளால் ஏற்கமுடியாத அளவிற்கு அவளுக்குள் பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது.
அவனின் வலிமையான கரங்களை தன்னிடமிருந்து பிரிக்க எத்தனை முயன்றும் முடியவில்லை அவளால். அதிலும் அவன் கூறியது கோபத்தின் உச்சிக்கே சென்று நின்றாள்.
“இப்போ நீங்க கையை எடுக்கலைனா நடக்கிறதே வேற…” என எச்சரிக்க,
“நடக்கிறது நடக்கட்டும் ரோஸ்ஃபட். எதுவானாலும் எனக்கு சந்தோஷம் தான்…” அனய் விடாமல் இன்னும் நெருங்க மூச்சு முட்டியது மலருக்கு.
“என்றைக்காக இருந்தாலும் இது நடக்க வேண்டியது தானே. நடக்கும் என்று தெரியும். நடக்கையில் வலிக்கிறதே…” தேம்பும் மனதை ஆறுதல் படுத்தமுடியாமல்,
‘அவனின் அணைப்பிற்கே இந்நிலை என்றால் நேற்று மட்டும் தான் வந்தபொழுதில் அவனும் அதை ஏற்று அனைத்தும் நடந்திருந்தால்?.’ நினைக்கையிலேயே விதிர்விதிர்த்து அருவருத்துப்போனாள்.
‘இனி நாளும் இப்படித்தான் கடக்கபோகிறதா?’ கண்களை மூடினாள்.
இவை அனைத்தையும் சகித்துக்கொள்ளும் மனப்பான்மையை தான் வளர்த்துக்கொள்ளவேண்டிய அவசியத்தில் நிற்பதை அறிந்து மனதை தயார் செய்தாள். அவனின் தொடுகையை அருகாமையை விழி மூடி கிரகிக்க ஆரம்பித்தாள். முடியவில்லை.
‘இனி அனைத்தும் இப்படித்தான். அவன் மனைவியை அவன் அணைக்கிறான். என்னை அல்ல. அவள் வேறு. நான் வேறு’
இப்படியாகத்தான் இருந்தது அவளின் எண்ணங்கள். தன்னையே தன்னிலிருந்து பிரித்தாள். அவன் தொடமுடியா தூரத்தில் தன் இதயத்தை பிடிவாதத்தின் வேலியில் வைராக்கியத்தின் பூட்டை கொண்டு சிறைபடுத்தினாள்.
அவனை விட்டு விலகமுடியாமல் அப்படியே அசையாமல் அவள் படுத்திருக்க அனய் தான் விலகி அவளை பார்க்க வேண்டியதாகிற்று.
எழுந்தமர்ந்தவன் தன் புறம் அவள் முகத்தை திருப்ப மறுக்காமல் அவனை ஏறிட்டாள். உயிரோட்டமில்லாத அந்த பார்வையில் இவன் சற்றும் கலங்கவும் இல்லை, பின்வாங்கவுமில்லை.
அவளின் அப்பார்வையை அவனின் முடிவிற்கு அடித்தளமாக்கினான். இனி அவள் எப்படி தன்னை அணுகினாலும் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள போவதில்லை என்று உறுதிகொண்டான்.
அந்த உறுதியை அசைத்துப்பார்க்கும் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தன்னால் தன் காதல் கொண்ட நெஞ்சத்தால் முறியடிக்க முடியும் என நினைத்தான்.
அவனின் எண்ணங்களுக்கு ஏற்ப அவனின் முகத்தில் தீவிரம் கூடிக்கொண்டே செல்ல மலர் புரியாமல் பார்த்தாள். அவளின் மாறுதலை கண்டவன் சிறு புன்னகையோடு,
“மேடம் கிஸ் வேணுமான்னு கேட்டேன். இன்னும் பதிலே சொல்லலையே? . உடனே குடுக்கலைன்னு கோபமா?…”
அவன் கேட்டதும் அத்தனை நேரம் மனனம் செய்திருந்த அனைத்தும் மலருக்கு மறந்துபோக கோபமே பிரதானமாய் முன்னின்றது. வேகமாய் கட்டிலை விட்டு இறங்கியவள்,
“வாய்க்கொழுப்பு ரொம்பத்தான் கூடிடுச்சு உனக்கு. யார்? நான் உன்கிட்ட முத்தம் கேட்டேனா? கேட்டேனா? இன்னொரு தடவை என்னை சீண்டனும்னு நினைச்ச?…” என விழிகளை உருட்டி மிரட்ட,
“நினைச்சா?…” என்று அவன் கண்ணடிக்க அவனின் அலும்பு தாங்காமல் அங்கிருந்த பூ ஜாடியை கையில் எடுத்துக்கொள்ள,
“வெய்ட் ரோஸ்ஃபட்…” என்றவன் அவளை நிறுத்திவிட்டு,
“பதினெட்டு வயசுக்கு கீழே இருக்கிறவங்க, ஹார்ட் பேஷண்ட்ஸ், பிரக்னேட் லேடீஸ் இந்த சண்டையை பார்க்காதீங்க…” என ராகமாய் சொல்லி முடிக்க ஜாடியை கீழே வைத்துவிட்டு தலையைனையை கொண்டு அவனை மொத்து மொத்தென மொத்தி எடுத்துவிட்டாள் மலர்.
கதவு தட்டப்படும் ஓசையில் நிறுத்தியவள் அவனையும் கதவையும் மாறி மாறி பார்க்க,
“மனுஷனை பொண்டாட்டிக்கிட்ட நிம்மதியா நாலு அடி கூட வாங்கவிடமாட்டிக்கிறாங்க. பேட் பீப்புள்ஸ்…” என்றபடி அவன் எழுந்து சென்று கதவை திறக்க ஆண்டாள் நின்றுகொண்டிருந்தார்.
அனய் மலரை திரும்பி பார்த்துவிட்டு அவரை கண்டு அசடு வழிய ஆண்டாள் அவனை முறைக்க அதில் மலருக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“என்னடா உன் மூஞ்சியே சரியில்லை…” என,
“ஒண்ணுமில்லையே. ஒண்ணுமே இல்லை…” என சொல்லி சிரிக்க,
“ம்ஹூம் என்னமோ செஞ்சிருக்க. உன் மூஞ்சியை பார்த்தா தெரியாதா? அப்புறம் பேசிக்கிறேன். குழந்தை தேடிட்டு இருக்கா. கீழே வாங்க ரெண்டு பேரும்…” என சொல்லி கீழே இறங்கிவிட்டார்.
கதவை சாற்றிவிட்டு அவன் வர மலர் இன்னும் நின்றுகொண்டே இருந்தாள்.
“இன்னும் எவ்வளோ நேரம் அந்த பில்லோவையே வச்சிட்டு இருப்ப? இன்னும் கோபம் குறையலையாக்கும்?…” அவன் சொன்னதும் தான் எதற்காக அடித்தோம் என்றே ஞாபகத்திற்கு வந்து முறைக்க ஆரம்பித்தாள்.
“முறைப்பெல்லாம ஓரமா அந்த கப்போர்ட்ல வச்சிட்டு போய் குளிச்சிட்டு வா. கீழே போவோம். நைட்ல மிச்ச அடியை வாங்கிக்கிறேன்…” என்று சொல்லி மீண்டும் கட்டிலில் சாய,
“உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? அவ்வளோ ஈஸியா சொல்றீங்க அடி அப்புறமா வங்கிக்கறேன்னு…” அவனை குத்திவிடும் நோக்கில் தான் கேட்டுவைத்தாள்.
“வெட்கமா? அட போங்க பாஸு. நாங்கலாம் பொண்டாட்டிக்கிட்ட எப்படி அடி வாங்கறதுன்னு ட்ரெயினிங்கே குடுப்போமாக்கும். யார்க்கிட்ட? என்ன நேத்து அடிக்க வரேன்னுட்டு வரவே இல்லையேன்னு கேட்கிற சங்கத்தை சேர்ந்தவங்க…”
“ரொம்ப பெருமை தான்…” நொடித்தாள் மலர்.
“இல்லையா பின்ன? நான் உன்கிட்ட வெளிப்படையா சொல்லிட்டேன். இன்னொன்னும் சொல்லனும் உன்கிட்ட…”
“இந்த கம்பெனி சீக்ரெட்டை வெளியில யார்க்கிட்டயும் சொல்லிடாதே…” என்று முடிக்க தலையணையை அவன் மீது வீசிவிட்டு மலர் எரிச்சலுடன் நகர்ந்தாள்.
அவளின் கோபத்தில் புன்னகைத்தவன் எழுந்து சென்று அவளை வழிமறித்து நின்று,
“கிஸ் கேட்டியே இன்னும் வாங்கிக்கவே இல்லை…” என குறும்பாய் சொல்ல,
“திரும்ப ஆரம்பிக்காதீங்க. நான் கீழே போகனும். உங்க விளையாட்டுக்கு நான் ஆள் இல்லை…” அவனை தள்ளிவிட்டு பாத்ரூம் நோக்கி திரும்ப அவளின் கையை பிடித்து இழுத்தவன் தன்னருகில் நிறுத்தி,
“உனக்கு வேண்டாம். ஆனா எனக்கு குடுக்கனுமே…” என சொல்லி அவளின் பிறை நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு விலகினான்.
அவனின் செயலில் உள்ளுக்குள் கொந்தளித்தவள் இகழ்ச்சியான பார்வையோடு,
“இப்படி கட்டிபிடிச்சு, முத்தம் கொடுக்கிறதால என்ன ஆகிடும்? என் மனசு மாறிடுமா என்ன? நான் அவ்வளவு சீப் இல்லை. பகல் கனவு காணாதீங்க. உங்க எதிர்பார்ப்பு என்னைக்கும் நிறைவேறாது…” திமிராய் சொல்ல,
“நான் கொடுக்கிற முத்தம் உன் மனசை தட்டி எழுப்பும்னு நான் நினைச்சிருந்தா ஆறு வருஷம் முன்னையே நான் உனக்கு குடுத்த முதல் முத்தத்திலே உன் மனசு மாறி இருக்கனுமே? அதுவும் இதழ் முத்தமா நான் கொடுத்த முத்தத்தையே புறக்கணிச்சவ தானே நீ?…” அனய் சொல்ல மலரின் முகம் கறுத்துவிட்டது.
அன்றைய இவனின் செயல் அதன் பின்னான அவசர நிகழ்வுகள் அனைத்தும் அவள் கண்முன் படமாய் விரிய உடன் சரவணனின் நினைவுகளும். முயன்று அதை அடிமனதினுள் அமிழ்த்தியவள் வெறுப்பாய் அனய்யை பார்த்தாள்.
“இப்போ சொல்லு மலர். நீ அவ்வளோ பலகீனமானவளா இருப்பன்னா நான் நினைப்பேன்? ஆனாலும் உன்னை மாற்ற முடியும்ன்ற என் நம்பிக்கை என்னைக்குமே பொய்த்துபோகாது…”
“சும்மா உளறாம வழியை விடுங்க நீங்க…” அவனை அலட்சியம் செய்து அங்கிருந்து செல்ல முயல,
“உன் விஷயத்துல இனியும் பொறுமையா என்னால் இருக்கவே முடியாது. இப்போ நான் செஞ்சதை அன்னைக்கே செஞ்சிருக்கனும். உன்னுடைய வாழ்க்கையையும் சேர்த்து நான் பாழட்டிச்சுட்டேன். இந்த ஆறு வருஷம் நாம பிரிஞ்சிருந்திருக்க வேண்டாம். உன்னை கட்டிக்கிட்டு என்னை புரியவச்சிருந்திருப்பேன்…”
“ஆனா உன் பிடிவாதத்தால தான்டி இத்தனையும் இத்தனையும் நடந்துபோச்சு. ஆனாலும் நீ இதை விடாம பிடிச்சுட்டு தொங்கிட்டு தானே இருக்க. இனியும் பழைய அனய்யா நான் இருக்க மாட்டேன். எனக்கு உன்னோட வாழனும். இழந்த அத்தனை வருஷத்துக்கும், மாசத்துக்கும், வாரங்களுக்கும், நாட்களுக்கும் ஏன் ஒவ்வொரு நொடி இழப்புக்கும் சேர்த்து வச்சு வாழனும்…”
அவனின் கண்களில் அத்தனை கோபம் மிகுந்திருந்தது. நேற்றைய இரவில் தன்னிலை இழந்து அவன் பிதற்றியதை போல அப்பொழுதும் அவளை உலுக்கிக்கொண்டே பிதற்றினான்.
ஆம். மலரை பொறுத்தவரை அனய்யின் பேச்சுக்கள் அனைத்தும் பிதற்றல்கள் தான். அதை வெறும் பிதற்றல்களாகவே எண்ணி அலட்சியப்படுத்தினாள். அவளின் அலட்சியம் கொடுத்த பாவனை முகத்தில் தெரிய வேகமாய் உதறிவிட்டு பாத்ரூமில் நுழைந்துகொண்டான்.
அவன் சென்றதும் தான் நிம்மதியானவள்,
“இவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. ஒண்ணு காதல் காதல்ன்னு டயலாக் விடறான். இல்லைனா இப்படி உளறிக்கொட்டி என் டென்ஷனை ஏத்திவிடறான். ச்சே…” என புலம்பினாள்.
அதற்குள் அனய் குளித்து முடித்து வந்திருக்க அமைதியாய் சென்று தானும் குளித்து கிளம்பி வர அதுவரை அனய் அந்த அறையிலேயே தான் இருந்தான் அவளுக்காக. இருவரும் சேர்ந்து செல்ல விளையாடிக்கொண்டிருந்த வருணி,
“ப்பா…” என வேகமாய் படி ஏறி வர,
“பேபி…” என்று சொல்லியபடி கீழே சென்று அவளை தூக்கி கொண்டான்.
“சாப்ட்டியாடா குட்டிம்மா?…” என கேட்க அழகாய் தலையசைத்தது குழந்தை.
“அதெல்லாம் சாப்பிட்டா. எல்லோருமே சாப்ட்டாச்சு. நீயும் உன் பொண்டாட்டியும் போய் சாப்பிடுங்க…” என சொல்லி குழந்தையை ஆண்டாள் வாங்கிக்கொள்ள,
“ப்பாத்த… பாத்தீ ப்ப்பாத்த…” என அனய்யின் கழுத்தை கட்டிக்கொள்ள,
“தாத்தா கார்டன்ல இருக்காங்க. வா நாம போவோம்…” என்றதும் வேகமாய் அவனை விட்டிறங்கி,
“த்தாத்தா…” என்று ஓட ஆரம்பித்தாள்.
“பாத்து பார்த்து…” என்ற அனய்யிடம்,
“நாங்க பார்த்துக்கறோம். போய் மாப்பிள்ளையை பார். டைனிங் ஹால்ல தான் இருக்காங்க…”
“ஓஹ் வந்துட்டாரா?…” என பேசிக்கொண்டே பின்னால் பார்க்க,
“அவ எங்க இங்க நின்னா? கீழே வந்ததும் என்னை பார்த்ததால நேரா அங்க போய்ட்டா. நீயும் போய் சாப்பிடு…” என சொல்லி ஆண்டாள் வருணியை தேடி சென்றார்.
“இருவரையும் எப்படித்தான் சமாளிக்க?…” என்ற ஆயாசம் தோன்றியது அனய்க்கு.
மலர் ஆண்டாளை பார்ப்பதை தவிர்த்து கீழே இறங்கியதும் நேத்ராவின் குரல் கேட்டு வேகமாய் டைனிங் ஹால் செல்ல அங்கே ரிஷி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். சட்டென பின்வாங்கியவள் அங்கிருந்து திரும்ப,
“என்ன மலர் நாங்க இருந்தா சாப்பிட வரமாட்டியோ?…” என ரிஷி கேட்க,
பதறியபடி, “ஐயோ ஸார், அப்படியெல்லாம் இல்லை. உங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமேன்னு…” வெகுவாய் தயக்கத்தோடு வந்தது மலரின் குரல்.
“உண்மையிலேயே நீ வனமலர் தானா? இவ்வளோ சைலண்ட்டா நீ?…” என,
“ஏன் ஏன்? இதுல உங்களுக்கென்ன சந்தேகம்?…” என்றபடி அங்கு வந்தான் அனய்.
“இப்போ நீ எதுக்கு இப்படி பதறுற?…” என ரிஷி அவனை பிடிக்க நேத்ரா சிரித்தாள்.
“இல்லை மலர் எப்போதுமே அமைதி தானே? சாஃப்ட் நேச்சர் அவளோடது…”
என சொல்லி சற்று முன் வாங்கிய அடியை மனதில் நினைத்து மலரை பார்க்க, அவள் முறைக்க, அனய் தலையை உலுக்க அதை கண்டுகொண்ட ரிஷி,
“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?…” என நமுட்டு சிரிப்பு சிரிக்க மலர் தான் சங்கடமாய் நெளிந்தபடி நின்றாள்.
கல்லூரியில் படிக்கும் பொழுதில் ரிஷியிடம் நேரடியாக பேசாவிட்டாலும் அவளை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள் தான் நேத்ராவிடமே.
ஆனால் ரிஷியிடம் துடுக்குத்தனமாக பேச கொஞ்சம் யோசிக்கவே செய்வாள் வனமலர். இப்பொழுதும் வார்த்தைகள் தந்தியடிக்க அவளை இழுத்து தன் அண்ணனின் பக்கத்தில் அமர்த்திய நேத்ரா ஒரு தட்டை வைத்து பரிமாற தானே வைத்துக்கொள்வதாக கூறி மலர் சாப்பிட ஆரம்பித்தாள்.
அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த ரிஷி கை கழுவிவிட்டு மீண்டும் அங்கே வந்தமர்ந்தவன் மலர், அனய்யிடம் பேச ஆரம்பித்தான். அவனின் பேச்சில் அவ்வப்போது மலரும் பங்குகொள்ள சற்று இலகுவாய் கடந்தது அந்த நிமிடங்கள் மலருக்கு.
சிறிது நேரத்தில் வருணிக்கு தண்ணீர் எடுக்க வந்த ஆண்டாள் மலரின் தட்டை பார்த்துவிட்டு உள்ளே சென்று ஒரு கிண்ணத்தை எடுத்துவந்தவர்,
“நேத்ரா இதை வைக்க சொல்லி சொன்னேன்ல. என்ன பண்ணிட்டு இருக்க?…” நேத்ராவை கடிந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட ரிஷி என்னவென புருவம் உயர்த்த,
“ஹ்ம், பூண்டு சட்னி. மலருக்கு இந்த சட்னின்னா ரொம்ப இஷ்டம். அம்மா அவளுக்குன்னு முன்ன ஸ்பெஷலா செஞ்சு தருவாங்க. இன்னமும் அதை மறக்காம ஞாபகம் வச்சு செஞ்சிருக்காங்க…”
நேத்ரா மலரை பார்த்துக்கொண்டே சொல்ல மலருக்கு ஆண்டாளின் அன்பில் கண்ணை கரித்துக்கொண்டு தான் வந்தது. முன்பு தன்னிடம் எப்படி எத்தனை அன்போடு இருந்தவர் அவர்? நினைக்கையில் மனம் கனத்துப்போனது.
இப்பொழுதும் கவனித்துகொள்கிறார் தான். ஆனாலும் பாராமுகம் காட்டுகிறார் தானே? இடையில் நடந்த கசப்பான நிகழ்வுகளும், ஆண்டாள் பேசிய பேச்சும் மலரால் மறக்கமுடியவில்லை.
தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட முள் போல் உறுத்திக்கொண்டு வலிகொடுக்க அவர் பேசினாலும் தன்னால் மட்டும் அனைத்தையும் மறந்துவிட்டு இயல்பாய் பேசிவிடமுடியும் என தோன்றவில்லை மலருக்கு.
“இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப? ஊட்டி விடனுமா?…” அனய் அவளிடம் வசீகரப்புன்னகையோடு கேட்க,
“வாயை மூடிட்டு சாப்பிடுங்க…” மலர் பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்ப கப்பென்று வாயை மூடினான் அனய்.
“அட நிறுத்துங்கப்பா. முதல்ல சாப்பிட்டு எழுந்து வாங்க. நேத்ரா நீ மலருக்கு பார்த்து கவனி…” என சொல்லி ரிஷி எழுந்து செல்ல மலரோ பிடிவாதமாய் வேண்டாம் என்றாள்.
“சும்மா ஏதாவது பண்ணாத அமேஸான். டென்ஷன் ஆகிடுவேன். ஒழுங்கா சாப்பிடறியா இல்லை அம்மாவை கூப்பிடவா?…” என மிரட்ட சூடான இட்லியோடு பூண்டு சட்னியை தோய்த்து வாயில் திணித்தவள்,
“இப்போ வரை உங்கம்மாவோட கைமணம் மாறவே இல்லை நேத்ரா…” என மலர் சொல்லியபடி மேலும் இரண்டு இட்லிகளை காலி செய்ததும் தான் அங்கிருந்து எழுந்தாள்.