புன்னகை – 12
நேத்ரா தன்னுடைய உடமைகள், பொருட்கள் தன் மாமியாரினது என அனைத்தையும் ஊருக்கு கிளம்ப எடுத்துவைக்க மெதுவாய் உள்ளே வந்தார் ஆண்டாள்.
“என்னம்மா அங்கயே நின்னுட்டு இருக்கீங்க? உள்ள வாங்க…” என சிரித்தமுகமாக சொல்லி மீண்டும் வேலையில் கவனத்தை திருப்ப,
“ரொம்ப திட்டிட்டேன்ல நேத்ரா. மனசுல வச்சுக்காத…” ஆண்டாள் தயங்கி சொல்ல,
“என்ன என் மாமியார்க்கிட்ட வாங்கி கட்டியாச்சோ?…” நேத்ரா கண்ணடித்து கேட்க அதில் முறைத்தவர்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. எல்லோர் முன்னாலையும் உன்னை பேசிட்டேன்னு கொஞ்சம் வருத்தம் அதான் வந்தேன்…” என சொல்ல அவரை கண்டு கள்ளப்புன்னகை புரிந்தாள் நேத்ரா.
“நல்ல மருமக போ. உன் மாமியாரை நல்லாவே அறிஞ்சு வச்சிருக்க நீ. உன்னை பத்தி கொஞ்சம் கவலைப்பட்டேன். அது இப்போ இல்லை எனக்கு…”
ஆண்டாள் ஒருவித நிம்மதியோடு சொல்ல,
“நீங்க பயப்படறது அநாவசியம்னு நான் இப்போ இல்லை முன்னவே சொல்லியிருக்கேன்ம்மா. ஆனா அதை ஏத்துக்கற மனநிலைல நீங்க தான் இல்லை…”
“ஹ்ம் எதுவும் நம்ம கைல இல்லை தானே. விதிப்படி தான் நடக்கும் போல…” ஆண்டாள் பெருமூச்சு விட,
“ஆமாமா இல்லைனாலும் உங்க பையனை கட்டிவைக்க முடியுமா என்ன? என் அமேஸான் தான் அதுக்கு சரியான ஆள். நீங்களே இனி புரிஞ்சுப்பீங்க…” என்றவள்,
“ம்மா ப்ளீஸ் அவளை எதுவும் ஹர்ட் பண்ணிடறது போல பேசிடாதீங்க. அனய் இப்போதான் சந்தோஷமா இருக்கான். அவனோட இத்தனை வருஷ காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு. ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்கனும்…”
நேத்ரா ஆண்டாளின் கைபிடித்து கெஞ்சல் குரலில் கேட்க அவரால் எதுவும் பேசமுடியவில்லை.
அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்றோ, நிச்சயமாக தான் மலரை எதுவும் பேசிவிடமாட்டேன் என்றோ அவர் கூறவே இல்லை. பொய்யான ஒரு நம்பிக்கையை மகளுக்கு தர அவர் விரும்பவில்லை.
ஆம், ஆண்டாள் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டாலும் மலர் ஏற்கனவே மணமானவள் என்பதையும் இன்னொருவனுடன் வாழ்ந்தவள் என்பதையும் ஏற்கவே முடியவில்லை.
அந்நினைவு அவ்வப்போது மனதிற்குள் முரண்டிக்கொண்டே இருந்தது. அருமைபெருமையாய் வளர்த்த தன் மகனுக்கு இரண்டாம்தார வாழ்வா என்று எண்ணி குமைந்துகொண்டுதான் இருந்தார்.
இதில் மலரை குறை சொல்லியும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது அவருக்கு தெரிந்தாலும் சமாதானம் ஆக முடியவில்லை அவரால். முன்பே மலரின் மீதான பாசமும், தன் மகனின் மனைவி என்னும் பந்தமும் அவரை அவளை காயப்படுத்தாத அளவிற்கு கட்டுப்படுத்தியது.
ஆனாலும் அந்த பந்தமே அவளை கடித்துக்குதறிவிடவும் துடித்தது. தனக்குள் இருவேறு வகையான மனநிலையை கட்டுக்குள் நிறுத்த மிகவும் சிரமம் மேற்கொண்டார்.
மகனிற்காக அவனின் சந்தோஷத்திற்காக மலரை அரைமனதாய் ஏற்றுக்கொள்ள தான் நினைத்தார். ஆனாலும் முள்ளாய் உறுத்திக்கொண்டிருக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியாது போனது. முயன்ற அளவிற்கு தன்னை எப்படியும் மாற்றிக்கொள்ள முனைப்புக்காட்டித்தான் இருக்கிறார்.
மலரோடு ஒத்துப்போகமுடியவில்லை என்றாலும் அவள்மீதான முந்தைய நல்ல அபிமானம் அதட்டலோடு இருந்தாலும் அக்கறையாக நடக்கவைத்தது. ஆனாலும் அக்கரிசனத்தை காட்டிக்கொள்ளாமல் நடந்தார். எங்கே காட்டினால் தன் தலையிலேயே அமர்ந்துவிடுவாளோ என எண்ணி.
மலரின் அமைதியும் தன்னுடைய பேச்சிற்கு பணிந்து ஒதுங்கிப்போகும் குணமும் அவரை கொஞ்சம் இறுமாப்பாய் நினைக்கவைத்தது.
அவர் அறியவில்லை. அவர் மேல் கொண்ட பாசத்தினால் தான் பணிகிறாள் பயத்தினால் அல்ல என்பதை அவர் அறியவே இல்லை. அவரை மீறிய ஒரு செயல் என்றால் வருணிகாவிடம் தோன்றிய அன்பு தான்.
தன்னை தேடிவந்து தன்னோடு ஒட்டிக்கொள்ளும் குழந்தையை புறம்தள்ள அவரால் முடியவே இல்லை. எப்படி அவள் தன்னை வசியம்கொண்டுவிட்டாள் என இப்போது நினைத்தாலும் ஆச்சர்யம் தான்.
“ம்மா நான் பேசிட்டே இருக்கேன். பதில் சொல்லலை நீங்க. என்ன யோசனை?…” நேத்ரா கேட்க முகம் மாறியவர்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ வேலையை பார்…” பட்டென சொல்லிவிட்டு சென்றுவிட,
“ஹ்ம் ஆண்டாள் ரிட்டர்ன்ஸ்…” என்றபடி ட்ராலியில் மடித்ததை அடுக்கத்தொடங்க மலரும் வந்துவிட்டாள் வருணியோடு.
இருவரும் பேசியபடி அனைத்தையும் அடுக்கி முடிக்க மலரின் முகம் வாடியிருந்தது.
“இன்னும் ரெண்டுநாளாச்சும் இருந்து போலாம்ல நேத்ரா…”
“ம்ஹூம், அப்புறம் கட்டுமரத்துக்கு யார் பதில் சொல்ல?. சும்மா சொல்லிப்பார்க்கிற மனுஷனை என்னை கிட்நாப் செய்யவைக்காம விடமாட்ட போல?…”..”
“அதெல்லாம் ஸார் ஒன்னும் சொல்லமாட்டார். அதுவும் நான் வேணும்னா கேட்டுப்பார்க்கிறேன். நிச்சயம் ஒத்துக்குவாங்க பாரு…” மலர் விடாமல் சொல்ல,
“மத்த விஷயங்கள்ல எப்படியோ? என் விஷயத்துல எடுத்த முடிவு எடுத்தது தான். மாத்திக்கவே மாட்டாங்க உங்க ஸாரு…”
நேத்ரா சொல்லி புன்னகைக்க கொஞ்சமும் குறையாத ரிஷியின் மீதான காதல் அவள் முகத்தில் அதிக மினுமினுப்பை கூட்டி நேத்ராவை இன்னும் அழகாக்கியது.
இத்தகைய முழுமையான காதல் உணர்வு, கனவில் மிதக்கும் விழிகள், நாணத்தில் முகம் சிவந்த பொழுதுகள் என தனக்கு என்றுமே அமைந்ததில்லை என்பதை அதிர்வுடன் உணர்ந்தாள் அக்கணம்.
‘நானுமே சரவணா மாமாவை விரும்பித்தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். பாசத்திற்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்தாலும் ஏன் எனக்கு இதுபோல எல்லாம் தோணலை’ என்ற யோசனையில் இன்னும் மனம் இறுக மூழ்கவிருந்த நேரம்,
“என்ன சொன்னாலும் அவங்க என்னை விட்டுட்டு போகமாட்டவே மாட்டாங்க. குன்டுக்கட்டா தூக்கி கார்ல போட்டாலும் போட்டுடுவாங்க…” அலுப்பு போல சொன்னாலும் அவளின் முகத்தில் மிதமிஞ்சிய சந்தோஷம் நிரம்பி ததும்பியது.
நேத்ராவின் பேச்சில் மென்மையான மலர்,
“ஆமா கண்டிப்பா. இவ்வளோ அழகா இருக்க. உன்னை இங்க விட்டுட்டு ஸார்க்கு அங்க போய் தனியா இருக்க முடியுமா என்ன?…”என சொல்லி மலர் கண்ணடிக்க,
“அவ்வளோ தெரிஞ்ச நீ என்னை எதுக்கு இங்க இருக்க சொல்ற?…” நேத்ரா கேட்டதும் முறைத்த மலர்,
“உன்னையெல்லாம்…” என்றபடி நேத்ராவின் கழுத்தை நெரிப்பது போல கையை கொண்டுவந்தவள் அவளின் கன்னத்தை பலமாக கிள்ளிவைத்தாள்.
இருவரது விளையாட்டையும் கவனித்த வருணி கைதட்டி சிரிக்க அவளை அள்ளிக்கொண்ட நேத்ரா,
“குழந்தையை அம்மா பார்த்துப்பாங்க அமேஸான். நீ முதல்ல இங்க ஜெல் ஆகப்பாரு. இதுக்கு மேல எந்த அட்வைஸும் என்கிட்டே ஸ்டாக் இல்லைப்பா…”
அவளை முறைத்து பின் சிரித்த மலர், “பார்க்கலாம்…” என்றுவிட அர்த்தம் பொதிந்த பார்வையோடு பார்த்தாள் நேத்ரா.
“ரெண்டு பேரும் சேர்த்துட்டா வெளில என்ன நடக்குதுன்னு கூட கவனிக்கிறதே இல்லை. பேச்சுதான் போல?…” என்றபடி ரிஷி அறைக்குள் நுழைய வேகமாய் கட்டிலில் இருந்து இறங்கி நின்றாள் மலர்.
“பீ ரிலாக்ஸ் மலர். எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ்?…” என சொல்லி,
“உன்னோட ப்ரெண்ட்ஸ் ரெண்டுபேர் வந்திருக்காங்க. ஹால்ல வெய்ட் பன்றாங்க…” என சொல்லியதும் வேகமாய் அவர்களை பார்க்க சென்றாள் மலர்.
உடன் பணிபுரியும் ரத்னாவும் திலீபனும் தான் வந்திருந்தனர்.
“வா ரத்னா, வாங்க திலீபன்…” என அழைத்தவள் அனய்யை பார்வையால் தேட அவன் வாசலில் மொபைலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.
“இருங்க குடிக்க எடுத்துட்டு வரேன்…” என சொல்லி திரும்ப அங்கே வீராத்தாய் ஸ்நாக்ஸ், காபி எடுத்துக்கொண்டு வந்தார்.
அதை ஒரு நன்றி பார்வையோடு வாங்கி வந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு எதிரில் அமர்ந்தவள் அனய் வரவை பார்த்தபடி இருந்தாள்.
என்ன பேசுவது என தெரியாமல் ஒரு சங்கடமான சூழ்நிலையில் மலர் அமர்ந்திருக்க ரத்னா தான் பேச்சை துவங்கினாள்.
“எப்படி இருக்க மலர்? இப்போவாச்சும் உன் ஹஸ்பண்ட் கூட சேர்ந்தியே எங்களுக்கு அதுவே சந்தோஷம். இவ்வளவு நாளா ஸார் தான் உன் ஹஸ்பண்ட்னு எங்கக்கிட்ட மூச்சு விடலையே நீ. சரியான அழுத்தக்காரி…” என மலரின் கையைபிடித்து மகிழ்வுடன் கூற,
“ஆமாம் மலர். நீங்க ஏன் பிரிஞ்சு இருந்தீங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா இப்போ ஒண்ணா ஒரே குடும்பமா உங்களை பார்க்க அவ்வளோ சந்தோஷமா இருக்கு…” திலீபனும் அக்கறையாக பேசினான்.
அவர்களை ஆண்டாள் கடந்துசெல்ல அவரை பார்த்த ரத்னா,
“இவங்கதான் உன் மாமியாரா? நான் காமாட்சியம்மான்னு நினைச்சுட்டேன். அவங்க உன்னோட ரிலேஷன்னு இப்போ புரியுது…”
மலர் திருமணமானவள் என்பதும் குழந்தையோடு மாமனார் மாமியாரோடு இருக்கிறாள் என்பது வரை மட்டுமே அனைவருக்கும் தெரியும். அவள் கணவனை இழந்தவள் என்பது யாருக்கும் தெரியாது.
அந்தளவிற்கு மலரும் தன்னுடைய வாழ்க்கையை பற்றி யாரிடமும் அவள் பகிர்ந்துமில்லை. தெரிந்துகொள்ளும் அளவிற்கு நடந்துகொண்டதும் இல்லை.
மலர் தன் தோற்றத்தில் எந்தவித மாற்றத்தையுமோ, விதவை என்றோ காண்பித்து கொடுத்ததில்லை. அத்தனை நேர்த்தியாக உடையணிவாள். நெற்றியில் பொட்டில்லாமல் இருந்ததும் இல்லை.
வீடுவரை கொஞ்சம் நெருங்கி பழகும் ரத்னா கூட மலரின் கணவன் வெளிநாட்டில் எங்கோ வேலை செய்வதாகும் ஏதோ மனஸ்தாபத்தில் பிரிந்திருக்கின்றனர் என்றும் அவளாகவே யூகம் பண்ணிக்கொண்டாள்.
அதுவும் காமாட்சியின் அவ்வப்போதைய புலம்பல்களால் உண்டான யூகம் மட்டுமே.
மலர் பூ மட்டுமே வைத்துக்கொள்ளமாட்டாள். அதையும் அவர்களாக அவளுக்கு பூ பிடிக்காது என்றே முடிவு செய்துகொண்டனர். அதை மாற்ற மலரும் முயலவில்லை. அப்படியே இருந்துகொள்ளட்டும் என விட்டுவிட்டாள்.
இன்று அதை உண்மையாக்குவதை போன்ற நிகழ்வுகள் நடைபெற இப்போது மறுத்துக்கூறினாலும் தேவையில்லாத பேச்சுக்கள் எழும் என்று வாயை கப்பென மூடிக்கொண்டாள்.
தன்னால் ஏன் உண்மையை இப்பொழுது கூட சொல்ல தோன்றவில்லை என்ற எண்ணம் எழுந்து அவளை வாட்டியது.
சரவணன் மனக்கண்ணில் தோன்றி என்னைப்பற்றி சொல்லகூட உனக்கு இத்தனை தயக்கமா என்று குற்றப்பார்வை பார்ப்பதை போல இருந்தது.
“இல்லை, இல்லை…” என அலறவேண்டும் என தோன்ற விதிர்விதிர்த்து போனவளை போல மூச்சுக்கு திணறினாள்.
சரியாக அனய் வந்து அவளை காப்பாற்றுவதை போல அருகில் அமர்ந்துகொள்ள சட்டென ஒருவித ஆசுவாசம் அடைந்தது அவளின் நெஞ்சம். பிரித்தறியா உணர்வோடு ஒரு நொடி அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
“என்ன உன் ப்ரெண்ட்ஸ் என்ன சொல்றாங்க? ஏன் இத்தனை வருஷம் சொல்லலைன்னு கோபப்பட்டாங்களா என்ன?…” என சிரித்துக்கொண்டே கேட்டவன் அவளின் காதருகில் சென்று,
“ஏன் ரெஸ்ட்லெஸா இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலையா?…”
அனய் பேசியது என்னவோ எதிரில் இருந்தவர்களுக்கு ரகசியம் பேசுவதை போல தெரிந்தது. சிறு புன்னகையோடு அவர்களை கண்டுகொள்ளாமல் திலீபனும் ரத்னாவும் தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.
அனய்யின் வார்த்தையில் இருந்த அக்கறை அப்போதைய தவிப்பிற்கு பெரும் ஆறுதலாய் இருந்தது மலருக்கு. சொல்லொண்ணா இதம் அவளின் இதயமெங்கும் பரவ லேசான முறுவலோடு ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.
“ஆர் யூ சூர்…” மீண்டும் அவளின் முகத்தை ஆராய்ந்தபடி அனய் கேட்க மலர் முறைத்தாள்.
“இப்ப நம்பறேன் உனக்கு ஒண்ணுமில்லைன்னு…” என சொல்லி அவளிடம் இன்னும் பெரிதாய் ஒரு முறைப்பை பெற்றுக்கொண்டு வாய்விட்டே சிரித்தான்.
“நல்ல கதையா இருக்கு. உங்களை பார்க்க கெஸ்ட் வந்திருக்காங்க. அவங்களை விட்டுட்டு நீங்க ரெண்டு பெரும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்களா?…”
நேத்ரா சலசலத்துக்கொண்டே வர அவ்விடமே களைகட்டியது. உடன் ரிஷியும். அனய் சில பேச்சுக்கள் பேசினாலும் பெரும்பாலான பேச்சுக்களில் பார்வையாளனாக சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்தினான்.
நேரம் மதியத்தை நெருங்க அவர்களை சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என நேத்ரா உத்தரவாகவே கூறிவிட அவளை மறுத்து கிளம்ப அவர்களுக்கும் மனமில்லை.
ரத்னா ஏற்கனவே தன் கணவனிடம் சொல்லி வந்திருக்க திலீபனின் மனைவியோ தன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தாள். அவனும் அவளிடம் போனில் அழைத்து சொல்லிவிட,
“ஹ்ம் அண்ணாவுக்கு வொய்ப்ட்ட பர்மிஷன் கேட்காம எதுவும் நடக்காது போலவே?…” நேத்ரா திலீபனை கலாய்க்க அவளோடு சேர்ந்து மலரும் ஓட்டினாள்.
மலர் இத்தனை தூரம் கலகலப்பாக பேசுவாள் என்பதே அவர்களுக்கு ஆச்சர்யம் என்றால் இத்தனை நாட்கள் தங்களை நுணுக்கமாக கவனித்திருக்கிறாள் எனதும் இன்னும் அதிசயமாக தான் இருந்தது.
அவர்களை பொறுத்தவரை மலர் கோபக்காரி, அதிகமாக யாரோடும் ஒட்டிவிடமாட்டாள், பிடிக்கவில்லை என்றால் முகத்திலடித்ததை போல சொல்லிவிடுவாள் என்பது தான்.
இப்பொழுது அவளின் இந்த கலகலப்பான சுபாவமும் அருவி போன்ற பேச்சும் வியப்பில் ஆழ்த்த அது அவர்களின் கண்களிலும் வெளிப்பட்டது.
சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் கிளம்ப ரத்னாவிற்கு திலீபன் தான் வந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினான்.
ஆண்டாளை ஒரு தயக்கத்தோடு பார்த்தவாறே ரத்னா நிற்க அது திலீபனுக்கும் மற்றவர்களுக்கும் புரிந்தது. வந்ததிலிருந்து அவர்களும் கவனித்துக்கொண்டு தானே இருக்கிறார்கள் ஆண்டாளின் முகத்தை.
வாங்க என்று அழைத்ததோடு குடிக்க வீராத்தாயிடம் எடுத்துவர சொல்லிவிட்டு அவர்களிடம் பேசாமல் நகர்ந்துவிட அவரிடம் ஏனோ மற்றவர்கள் போல் பேசமுடியவில்லை. முக பாவனையே தள்ளி நிறுத்தியது அவரிடமிருந்து.
வந்த விஷயத்தை சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என எண்ணி யோசனையாக மலரை பார்க்க திலீபனோ மலரிடம் ரத்னாவை தனியாக பேச அனுப்பினால் ஏதோனும் தவறாக புரிந்துகொள்வார்களோ என நினைத்து அமைதிகாத்தான்.
ஏதோ பேச வருகிறார்கள் ஆண்டாளை கண்டதும் தயங்குகிறார்கள் என புரிந்துகொண்ட மலர்,
“எதுவானாலும் சொல்லுங்க. இங்கயே, எல்லோர் முன்னாடியுமே. நீங்க தயங்க வேண்டாம்…” என சொல்ல ஆண்டாளுக்கு கூட பிடித்திருந்தது இந்த பதில்.
மலருக்கு இனி அவர் அறியாமல் தன் வாழ்வில் ஒன்றும் நடக்கபோவதில்லை. அதையும் தாண்டி அவர் நேத்ராவின் தாய். அந்த ஒரு காரணமே ஆண்டாளை ஏற்றுகொள்ள வைத்தது.
“வந்து மலர் உங்க ஜாப் விஷயமா தான் பேசலாம்னு வந்தோம். உங்க லீவ் முடிஞ்சது. காலேஜ்க்கு…” என ஆண்டாளையும் மலரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே ரத்னா கூற மலர் விழித்தாள்.
“ஹைய்யோ போச்சு. இந்த பொண்ணு கொஞ்சம் தனியா சொல்லிருக்க கூடாது. இப்படி சொல்லிடுச்சே. சும்மாவே ஆண்டாள் அதிகாலை செய்திகள் வாசி வாசின்னு வாசிப்பாங்க…” நேத்ரா முணுமுணுக்க ரிஷி அவளை முறைத்தான்.
வனமலர் சென்னையில் மிக புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் அட்மினிஸ்ட்ரேஷன் செக்ஷனில் வேலை பார்க்கிறாள். ஆண்டாளுக்கும் அது தெரியும். அங்கே வேலை கிடைப்பது சாதாரண விஷயமில்லை என்பதும் கூட.
அவளுக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனி தன்னால் வேலைக்கு செல்ல முடியுமா? நினைக்கும் பொழுதே நெஞ்சை அடைத்தது. தனக்கு மிகவும் பிடித்தமான வேலை.
அனய்யை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் என்ன நினைப்பான்? தன்னை அனுப்புவானா? இல்லையா? என்ற யோசனைகளை எதுவும் இல்லை. ஆண்டாள் இதற்கு எதுவும் சொல்வாரோ என அவரைத்தான் நிமிர்ந்து பார்த்தாள்.
அவரின் முகத்தில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“நான் ரெண்டு நாள்ல சொல்றேன்னு சொல்லிடு ரத்னா…” சட்டென மலர் சொல்ல,
“நீ ரிசைன் பண்ணிடுவியா மலர்?…” கேட்க கூடாது என்று நினைத்தாலும் தன்னைமீறி வார்த்தைகள் வந்துவிட அவஸ்தையாக ஆண்டாளை பார்த்தாள் ரத்னா.
இவ்வளவு பெரிய நடிகரின் மனைவி மாத சம்பளத்திற்காக நிச்சயம் வேலைக்கு அனுப்பமாட்டார்கள் என்று ரத்னா நினைத்தாள். அதிலும் ஆண்டாளின் முகம் இதை கேட்டதும் தன்னை திட்டிவிடுவாரோ என்னும் அளவிற்கு தான் இருந்தது.
“என் மருமகளை நான் வேலைக்கு அனுப்புவதா?…” என கோபமாக கண்களை உருட்டி ஆத்திரத்தோடு தன்னை கேள்வி கேட்பதை போல தோன்ற வெடவெடத்துபோனாள்.
“இல்லை மலர், அது…” என மலரிடம் திரும்பி பேச,
“எதுக்கு ரிசைன் பண்ணனும்? வேலைக்கு போகிறதை எதுக்கு நிப்பாட்டனும்? குழந்தையை பார்த்துக்க தான் நாங்க இருக்கோமே? வீட்ல வெடுக்குன்னு எதுக்கு உட்கார்ந்துட்டு இருக்கனும்? கல்யாணம் குடும்பம்னு ஆகிட்டா பொண்ணுங்க சொந்தக்கால்ல நிக்ககூடாதுன்னு இருக்கா என்ன?…” என சாதாரணம் போல பேசியவர்,
“அவ கண்டிப்பா வேலைக்கு வருவா. முடிஞ்சா நாளைக்கே வருவா. நீங்க காலேஜ்ல சொல்லிடுங்க…” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிட அனைவரும் வாயை பிளந்துகொண்டு பார்த்தனர்.
“இந்த ஆண்டாளை ஜட்ஜ் பண்ணவே முடியறதில்லை. அப்பப்போ ஆப்போசிட் சைட்ல கோல் போடறாங்க…” என மண்டையை தட்டிக்கொண்டே பார்க்க,
“ஹேய் சூப்பர்ப்பா மலர். எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? எனக்கு உன்னோடதான்ப்பா செட் ஆகும். நீயும் வரலைன்னா ரொம்ப லோன்லியா பீல் பண்ணுவேன்னு நினைச்சு கவலையா இருந்தேன்…” என்றவள்,
“உன் மாமியார் பார்க்கத்தான் கொஞ்சம் டெரரா இருக்காங்க. ஆனா உண்மையில் அவங்க ரொம்ப ஸ்வீட். பலாப்பழம் போல…” என ஆண்டாளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க அனைவரின் முகத்திலும் விரிந்த புன்னகை.
பின் திலீபனும் ரத்னாவும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப ரிஷியும் அனய்யும் வெளியில் கிளம்பினர். சுமங்கலி உறங்க சென்றிட மலரும் நேத்ராவும் வருணியோடு மலரின் சில பொருட்களை எடுத்துவர கிளம்ப ஆண்டாள் தன்னறையில் அமர்ந்திருந்தார்.
வேலையை ரிசைன் பண்ணிடுவியா என கேட்டதும் தன்னிச்சையாகவே ஆண்டாளுக்கு கோபம் வந்துவிட்டது சக பெண்மணியாக. தானும் வேலைக்கு சென்றவர் தானே. மலர் மருமகள் என்பதை தாண்டி ஒரு பெண்ணாக மட்டுமே அந்த நிமிடம் தெரிந்தாள் அவரின் பார்வையில்.
அதனால் வேகமாக பேசியும்விட்டார். அதில் சுயநலமும் மிகுந்துதான் இருந்தது என்பதை அவர் மட்டுமே அறிவார்.
மலர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தன் கண்ணெதிரே நடமாடினால் இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் அவளை நிச்சயம் காயப்படுத்திவிடுவோம் என்பதில் தெளிவாகவே இருந்தார். அந்தளவிற்கு மனதினுள் கனன்றுகொண்டிருந்தது நெருப்பு.
விரைவில் தன்னால் இதையும் கடந்துபோக முடியும். மலரை முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியும், அதுவரை எந்தவிதமான கசப்புகளும் நேர்ந்து மீண்டும் அனய்யின் வாழ்வில் பிரச்சனை ஏற்பட விரும்பவில்லை.
அதை காரணம் வைத்து தன் மகனிற்கும் தங்களுக்கும் இடையே பிளவு ஏற்படுவதையோ, தங்களை விட்டு மீண்டும் அவன் பிரியும் நிலை எற்படுவைதையோ அவர் விரும்பவில்லை.
விதிப்படி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனியும் அதன் போக்கிலேயே தங்களின் வாழ்க்கையும் செல்லட்டும் என்று முடிவுகொண்டார் ஆண்டாள்.
மலரும் நேத்ராவும் வைத்தியநாதனின் வீட்டிற்கு செல்ல அவர்களின் திடீர் வரவில் திக்குமுக்காடிதான் போயினர் இருவரும். வயதான இரு பெரியவர்களுக்கும் சந்தோசம் கூத்தாடியது.
பேத்தியை அள்ளி கொஞ்சியவர்களை பார்க்க பார்க்க மலருக்குத்தான் கண்களை கரித்துக்கொண்டு வந்தது.
இவர்களாக இழுத்திவிட்டுக்கொண்டது என அப்போதும் வீம்பு பிடித்தாள்.
தன்னிடம் பேசியவர்களிடம் மறுக்காமல் ஓரிரு வார்த்தைகள் பேசியவள் தன் கோபத்தை முகத்தில் காட்டிக்கொண்டுதான் இருந்தாள். ஆனாலும் மாலை காமாட்சி செய்துகொடுத்த டீ டிபனை மறுக்காமல் ஒரு கை பார்த்துவிட்டாள்.
கிளம்பும் நேரம் அனய்க்கும் காமாட்சி கட்டித்தர அதை முறைத்துக்கொண்டே வாங்கியவள் காமாட்சியின் முகத்தில் தெரிந்த தவிப்பில் எங்கே அழுது கோபத்தில் ஏதாவது சொல்லிவிடுவோமோ என அஞ்சி அங்கிருந்து கண்ணீரோடு சொல்லிக்கொள்ளாமலே வெளியேறி காரில் சென்று அமர்ந்துகொண்டாள்.
அதை வேதனையோடு பார்த்தனர் காமாட்சியும் வைத்தியநாதனும்.
“விடுங்கம்மா. கண்டிப்பா அவ மனசு மாறும். அனய்யை புரிஞ்சுக்கற அன்னைக்கு நீங்க அவளுக்கு நல்லதுதான் செய்திருக்கீங்கன்னு கண்டிப்பா நம்புவா…”
நேத்ரா ஆறுதல் சொல்ல,
“மலரை பத்தி எங்களுக்கு தெரியாதா? பொறந்ததுல இருந்து பார்க்கறோம். அவ பார்த்தா என்ன அர்த்தம்னு நல்லாவே புரியும்மா. எங்களை நினைச்சு நீ வருத்தபடாதே. நீ கிளம்பு…”
சொல்லி வைத்தியநாதன் வருணியை அவளிடம் தர குழந்தையோ அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு செல்லமாட்டேன் என அடம்பிடித்தது.
அதை கண்ட காமாட்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வர பல்லை கடித்துக்கொண்டார். குழந்தையை பார்க்க நேத்ராவிற்கே பாவமாக இருந்தது. ஆனாலும் என்னசெய்வது என பார்த்தாள்.
அப்படி இப்படியென ஆயிரம் சமாதானங்களும் கதைகளும் சொல்லி வைத்தியநாதன் நேத்ராவிடம் தர மனமில்லாமல் சென்றது குழந்தை. எடுத்து தோளில் போட்டுக்கொண்ட நேத்ரா,
“இன்னொரு விஷயம்மா. நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்பறேன். என் ஹஸ்பண்ட் சுவிஸ்ல இருந்து வந்துட்டாங்க. நெக்ஸ்ட் ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்ன சின்ன கேப் கிடைச்சது. அதான்…”
“நல்லபடியா போய்ட்டுவாம்மா…” என காமாட்சி சொல்ல நேத்ராவும் இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
அன்றிரவே ரிஷி, நேத்ரா, சுமங்கலி என அனைவரும் கிளம்பிவிட வீடே வெறிச்சோடி காணப்பட்டது.
பதினோரு மணியளவில் வைத்தியநாதனின் வீட்டு காலிங் பெல் அடிக்க இந்த நேரத்தில் யார் என யோசனையோடு கதவை லேசாக திறந்து எட்டிப்பார்த்த வைத்தியநாதன் அதிர்ந்தேவிட்டார்.
வேகமாய் கதவை திறந்து வாசல் விளக்கை போட்டு க்ரில் கதவையும் நடுங்கும் கரங்களால் திறக்க அங்கே மலர் அலுதுசிவந்த விழிகளோடு கசங்கிய உடையோடு நின்றிருந்தாள்.
அவளுக்கு பின் அனய் தோளில் உறங்கிய குழந்தையோடு.
புன்னகை ஜீவிக்கும்…