புன்னகை – 13
திடீரென மூவரும் வாசலில் வந்து நிற்பதை பார்த்து அதிர்ந்துபோன வைத்தியநாதன் மலரின் அழுத முகத்தில் இன்னமும் அடிவயிறு கலங்கித்தான் நின்றார்.
வந்தவர்களை உள்ளே அழைக்க கூட நா எழவில்லை. வார்த்தைகளின்றி கல்லாய் சமைந்துதான் நின்றார். அவரின் பார்வை மலரை மட்டுமே பார்த்து நின்றது.
மாலை கிளம்பும் நேரம் கோபமாய் அழுதுகொண்டே தானே சென்றாள். ஒருவேளை போன வேகத்தில் அங்கு ஏதேனும் பிரச்சனையை செய்துவிட்டு அது பெரிதாகி இந்நேரம் வந்துநிற்கின்றார்களோ?
அவரின் மனம் வேறு எந்த காரணத்தையும் தேடவில்லை. மலர் சண்டையிட்டு திரும்பி வந்துவிட்டாள் என்றே தான் நினைத்தார். மழை வேறு சடசடவென பொழியத்துவங்கியது.
“அப்பா நாங்க உள்ள வரலாமா?…” அனய் அழுத்தமான குரலில் கேட்க அப்போதுதான் சுதாரித்தவராக கதவை திறந்தவர்,
“வாப்பா ஆதி. உள்ள வா…” என்றவர் மலரை பார்த்துக்கொண்டே இருக்க அனய்யின் பின்னால் மலர் வர மழையும் வேகமெடுத்து பெய்ய ஆரம்பித்தது.
கதவை மூடிவிட்டு திரும்பி வந்தவரிடம் உள்ளே வந்தவன் குழந்தையை உடனே தர பதறி போனார்.
குழந்தையை குடுத்துவிட்டு இதோ சென்றுவிடுவானோ என அவனின் கைபிடித்து திருப்பியவர்,
“எங்கப்பா கிளம்பிட்ட? என்ன ஆச்சு?…” அவரின் பதற்றம் குரலில் அப்பட்டமாய் தெரிய ஒரு நொடி யோசனையாய் புருவம் சுளித்தவன்,
“அப்பா பதறாதீங்க, ஒண்ணுமில்லை. நான் கிளம்பலை. குழந்தைக்கு கொஞ்சம் ஜுரம்…” என்றதும் தான் வருணியின் உடல் கொதித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.
“ஐயோ கடவுளே என்ன இப்படி நெருப்பாய் கொதிக்குதே?…” வருணியின் முகம் நிமிர்த்தி,
“குட்டிம்மா? தாத்தாவை பாருடா…” என எழுப்ப குழந்தையோ சிணுங்கியது.
அவரின் சத்தத்தில் , “த்தா….த்தா, பா….த்தீ….” என உறக்கத்திலேயே அரற்றியது.
வாடிய மலராய் துவண்டு சுருண்டிருந்த குழந்தையின் தீனமான குரலில் மலருக்கு அழுகை முட்டிக்கொண்டு வர அவளை தன் தோள்களில் சாய்த்து,
“ப்ச் இப்போ எதுக்காக நீயும் அழற? அதான் இங்க வந்தாச்சுல்ல. சரியாகிடும். நீ அழுகையை நிறுத்து…” என மலரிடம் அதட்டலாய் ஆறுதல் கூறியவனின் விழிகளும் கலங்கியது.
உறக்கம் கலைந்து எழுந்துவந்த காமாட்சி பதட்டமாய் ஓடிவந்தார்.
“என்னாச்சுப்பா? மழையோட இந்நேரம் வந்திருக்கீங்க? குழந்தைக்கு என்ன?…” என வேகமாய் அவரிடமிருந்து வாங்கியவர்,
“ஐயோ புள்ளைக்கு ஜுரம் கொதிக்குதே?…” தன் முந்தானையால் பேத்தியை மூடியவர்,
“வாங்க ஆஸ்பத்திரிக்கு போவோம்…” என பரபரக்க,
“அம்மா நாங்க போய்ட்டுதான் வந்தோம். முதல்ல பேபியை படுக்க வைப்போம். பிறகு உங்களுக்கு விஷயத்தை சொல்றேன்…” என சொல்லி,
“மலர்…” என பார்க்க அவளும் குழந்தையை எடுத்துச்சென்றவள் படுக்கவைத்து கம்பளியை போர்த்திவிட்டு அருகே அமர்ந்துகொண்டாள்.
மறுபுறம் காமாட்சியும் வந்தமர, வைத்தியநாதன் இரு ப்ளாஸ்டிக் சேர்களை தூக்கி அறைக்குள் வர அவரிடமிருந்து வாங்கிய அனய் அதை பிரித்துப்போட்டு அவரை ஒன்றில் அமரச்சொல்லியவன் தானும் அமர்ந்தான்.
“இங்க இருந்த சோபா எங்க போச்சு?…” என கேட்க,
“அது இன்னொரு ரூம்ல இருக்குப்பா. இங்க வேற வாங்கலாம்னு இருக்கோம்…” என சொல்லியதும்,
“இப்போ எதுக்கு வேற ஒண்ணு? சும்மாவே இருக்கமாட்டீங்களா?…” என கடிய அவனை பாவமாய் பார்த்தார்.
இதை மலரும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆதியின் கடிதலும், அதற்கு வைத்தியநாதனின் அமைதியும் அவளை ஆச்சர்யம் கொள்ள செய்தது.
ஒருநாள் ஒரு பொழுதிலும் சரவணன் இதுபோல வைத்தியநாதனிடம் சகஜமாய் பேசியதில்லை. அவர் கேட்கும் கேள்விக்கு எதிரில் நின்று பதில் சொல்லவே பயப்படுவான். எதுவும் கேட்கவேண்டுமானால் ஆயிரம் முறை யோசிப்பான்.
பெற்ற மகனிடம் அத்தனை கண்டிப்பு காட்டியவர் மகனை போன்றவனிடத்தில் குழந்தையாய் மாறி நிற்கும் விந்தையென்ன என புரியாமல் பார்த்தாள்.
“ஒரு சோபால என்ன வந்திடபோகுது. இருக்கட்டும்ப்பா…” என சொல்லி சோர்வாக பேத்தியை பார்த்தவர் மீண்டும் அவனை ஏறிட,
“ஹ்ம் ஈவ்னிங் இங்க இருந்து நேத்ராவும் மலரும் வீட்டுக்கு வந்துட்டாங்க இல்லையா. இங்க இருந்து கிளம்பறப்போ ரொம்ப அழுதுட்டான்னு நேத்ரா சொன்னா. அவ கிளம்பும் வரைக்கும் கூட நார்மலா விளையாடிட்டு தான் இருந்தா…”
“தூக்கம் வரவும் மலர் தூங்க வைக்க பேபிக்கு லேசா உடம்பு சுட ஆரம்பிச்சுடுச்சு. டாக்டர் வரவழைச்சு பார்த்தோம். அவரும் வந்து பார்த்துட்டு மெடிசின்ஸ் குடுத்துட்டு இன்ஜெக்ஷன் போட்டுதான் போனார்…”
“நேரம் ஆகியும் காய்ச்சல் குறையவே இல்லை. கொஞ்ச நேரத்துல தாத்தாட்டன்னு சொல்லி அழுகை. அனத்தல். அதான் கிளம்பி வரப்போ திரும்பவும் டாக்டர் வீட்டுக்கு போய் பார்த்துட்டு இங்க வந்துட்டோம்…”
அனய் சொல்லி முடிக்கும் வரை அவனது பார்வை குழந்தையையே வட்டமிட்டது. அவளின் அனத்தல் இல்லாத சீரான உறக்கம் நிம்மதியை தந்தது.
மெல்லிய குரலில் காமாட்சியிடம் மலரும் அதையே சொல்லிக்கொண்டிருக்க வருணியின் தலையை வருடியபடி அவர் கேட்டுக்கொண்டிருந்தார் காமாட்சி.
பேத்தியின் கள்ளமில்லா பாசத்தில் நெக்குருகி போனார் வைத்தியநாதன். ஆனாலும் இந்நிகழ்வால் ஆண்டாளின் கோபத்திற்கு ஆளாகியிருப்போமே என நினைத்து,
“ஆதி, அம்மா…” என,
“அவங்கதான் முதல்ல இங்க குழந்தையை உங்ககிட்ட கூட்டிட்டு போக சொன்னாங்க. ஈவ்னிங் பேபி அழ அழ ஏன் எடுத்துட்டு வந்தன்னு அவளை கூட பேசினாங்க. ஜுரம் ஜாஸ்தியாகவும் மலர் ரொம்ப அழுதா. அதான் ஹாஸ்பிட்டல் போலாம்னு போய்ட்டு வந்தோம். இங்க வந்துட்டோம்ல. சரியாகிடும்…”
இன்னமும் முகத்தில் கலக்கம் சுமந்திருந்த மனைவியை பார்த்தபடி சொல்லியவன் லேசாய் அவளிடம் முறுவலிக்க மறுக்காமல் சிறு தலையசைப்பை பதிலாய் கொடுத்தவள் மகளை வருடினாள்.
“பீவர் குறைச்சுடுச்சு…” மலர் அனய்யை பார்த்து சொல்ல அவளருகே வந்து வருணியை தொட்டுப்பார்த்து உறுதி செய்துகொண்டவன்,
“ஆமா, நல்லாவே குறைஞ்சிடுச்சுல. வியர்த்துடுச்சு…” என சொல்லி மீண்டும் சேரில் அமர அவனை முறைத்தாள்.
அதை புன்னகையோடு ஏற்றவன் ஆண்டாளுக்கு அழைத்து சொல்லிவிட்டு மீண்டும் எழுந்து ஃபேன் ஸ்விட்சை போட்டு வேகத்தை குறைத்துவைத்து,
“மலர், கம்பளியை எடுத்திட்டு பேபிக்கு காட்டன் பெட்ஷீட் போர்த்திவிடு…” என சொல்லி மீண்டும் அமர அதற்குள் காமாட்சி எழுந்துபோய் அனைவருக்கும் டீ வைத்து, உடன் பிஸ்கட்டும் எடுத்து வந்துவிட்டார்.
“எங்களுக்கு ஒரு போன் பண்ணியிருந்தா நாங்களே வந்துருப்போமே? இந்த குளிரோட அலைச்சல் தானே எல்லோருக்கும்…” என சொல்லி அவனுக்கொரு கப்பை கொடுத்துவிட்டு
“ப்ச் அப்பா, என்ன அலைச்சல்? நீங்க வரதா இருந்தா மட்டும் அலைச்சல் இல்லையாமா? விடுங்க…” என்றவன்,
“மலரைத்தான் ரொம்ப சமாளிக்க வேண்டியதாகிடுச்சு. அம்மா கூட இவளை விட்டுட்டு நீ மட்டும் குழந்தையை தூக்கிட்டு கிளம்புன்னு சொல்லியதும் தான் கொஞ்சம் கண்ட்ரோலா இருந்தா…”
“ஆனா அம்மா முன்னாடி மட்டும் தான். எங்க ஹவுஸ் அரஸ்ட் செஞ்சிடுவாங்களோன்னு. கார்ல ஏறினதும் அழுகை. வர வழியெல்லாம் நிறுத்தவே இல்லை…”
மலரை பார்த்துக்கொண்டே சன்னமான சிரிப்போடு சொல்ல திரும்பவும் முறைத்தாள்.
“இப்போதான் மலர் முகத்தை பார்க்கவே முடியுது…” மீண்டும் அவளை சீண்ட நன்றாய் முறைத்தவள் வைத்தியநாதன் முன்பு எதுவும் பதில் பேச முடியாமல்,
‘அப்போ ஏன் என்னை பார்க்கற?’ என கண்களாலேயே மிரட்ட,
‘அம்மாடியோ, ரொம்ப பயந்துட்டேன்’ என வாயசைத்து பாவனை காட்டி அனய்யும் அவளை கேலி செய்ய இவர்களை கண்டுகொள்ளாத காமாட்சி,
“இதுவரைக்கும் காய்ச்சல்னா வருணிட்ட இந்த மாதிரி அனத்தல் இருந்ததே இல்லை. கொஞ்சம் சோர்ந்து போய் சுருண்டு படுப்பா. ஆனா மருந்து குடிச்சதும் தூங்கிடுவா. திடீர்னு இப்படி பார்த்ததும் மலரு பயந்திருப்பா…”
“காய்ச்சல் இப்போ எப்படிம்மா இருக்கு?…” என பேத்தியின் காலடியில் வந்து அமர்ந்தவர் போர்வையை விலக்கி அவளின் கால்களை பிடித்து பார்க்க,
“சரியாகிடுச்சு மாமா. இப்போ நார்மல் டெம்பரேச்சர் வந்துடுச்சு…”
“திரும்ப எப்போ மருந்து குடுக்கனும் மலரு?…” காமாட்சி கேட்க,
“ஆறுமணி நேரத்துக்கு ஒருதடவை குடுக்க சொன்னாங்க. இன்னும் டைம் இருக்கு அத்தை…” என சொல்ல காமாட்சி மேலும் மேலும் கேள்விகளாக மலரை துளைத்துக்கொண்டிருந்தார்.
சிறிதுநேரம் அதை கவனித்துக்கொண்டிருந்தவர் திரும்ப அங்கே அனய்யின் கண்களில் லேசாக உறக்கம் வந்து செல்ல,
“சரி, களைப்பா இருப்பீங்க. நீங்க தூங்குங்க. காலையில பேசிப்போம்…”
காமாட்சியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரும் எழுந்துகொண்டவர் வருணியின் கால்களுக்கு மீண்டும் போர்வையை போர்த்திவிட்டு அனய்க்கு தலையசைத்துவிட்டு,
“காய்ச்சல் அதிகமானா கூப்பிடுமா…” மலரிடமும் சொல்லிவிட்டு சென்றார்.
அவர் பின்னோடு சென்ற காமாட்சி கதவை சாற்றிவிட்டு செல்ல அனய் வருணியின் அருகில் வந்து அவளை லேசாய் அணைத்தவாறு படுத்துக்கொண்டவன் சடுதியில் உறங்கியும்விட்டான்.
‘எப்படி படுத்ததும் தூங்கிட்டான்? அவ்வளவு டயர்டாவா இருந்தான்?’ என நினைத்தாள்.
வீட்டில் வருணிக்கு காய்ச்சல் என்றதும் அவன் தவித்த தவிப்பும் தைரியமாக தன்னை காட்டிக்கொண்டு தனக்களித்த ஆறுதலும் ஆண்டாள் கடிந்தபொழுதில் அரவணைத்த விதமும் மனதிற்கு இதம் சேர்த்தது.
‘இவன் வாய்தான் நீளம். மத்தபடி கொஞ்சம் நல்லவன் தான். என்ன ஒரு ப்ராப்ளம். இவன் ஓவர் சீன். இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டன்றது இவனுக்கே தெரியலை’ என அவனை மனத்திற்குள்ளேயே கலாய்த்துகொண்டிருந்தாள்.
“ப்பா…” என்றபடி மகள் அனய்யின் புறம் திரும்பி அவனின் கழுத்தை கட்டிக்கொள்ள அவனும் தன் கைவளைவில் குழந்தையை அணைக்க பார்க்கவே கவித்துவமாக இருந்தது.
தன் குஞ்சை தாய்ப்புறா தன் அரவணைப்பில் பொத்தி பாதுகாப்பதை போன்ற ஒரு தோற்றம் அழகான ஓவியம் போல் கண்களை நிறைத்தது.
புதுவிதமான உணர்வொன்று பாரபட்சமின்றி உடல் முழுவதும் ஒருவித சந்தோஷ சிலிர்ப்பை தர சுகமாய் அதை தாங்கியவள் சிறிது நேரம் அவனையும் மகளையும் மாறி மாறி பார்த்து அமர்ந்தவாக்கிலேயே கண்ணயர கதவு தட்டும் ஓசையில் எழுந்து போய் பார்க்க காமாட்சி நின்றிருந்தார்.
“அத்தை, இன்னும் தூங்கலையா நீங்க?…” என கேட்க,
“நல்லா கேட்ட போ. இந்தா இதுல ஆதிக்கு மாத்து உடுப்பு இருக்கு. இப்போ தூங்கறதுக்கு வேற மாத்திக்க சொல்லு. இதுல வெந்நீர் வச்சிருக்கேன். இதுல பால் சூடா இருக்கு. அப்பறம் பிஸ்கட் பாக்கெட். உங்களுக்கு ஒரு தண்ணீ பாட்டிலு…”
புது துணிகள் அடங்கிய இரண்டு மூன்று கவர்களையும், இரண்டு ப்ளாஸ்க், பிஸ்கட் பாக்கெட், நான்கு தம்ளர்கள் சகிதமாக கைகொள்ளாமல் நின்றவரை முறைத்தவள்,
“இப்ப எதுக்கு இதெல்லாம் எடுத்திட்டு வந்தீங்க?…” என,
“நல்லா கேட்ட போ…” மீண்டும் பாடிய ராகத்தை பாடியவர்,
“வந்த அவசரத்துல மாத்து துணி எதுவும் எடுத்துவந்திருக்க மாட்டீங்க. உனக்கு இங்க இருக்கு. இது ஆதிக்குன்னு எடுத்துவச்சது தானே. போனதடவை ஆதியே துணி எல்லாம் கொண்டுவந்துட்டதால இதை குடுக்கமுடியலை. இப்போ உபயோகமாகுமில்ல…”
“என்னையாச்சும் கூப்பிட்டிருக்கலாம்ல…” என இடுப்பில் கைவைத்து முறைத்தவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவர்,
“இன்னும் இங்கனயே நின்னு வழக்கடிச்சிட்டு இருக்கிறவ எங்கையில இருந்து வாங்கி வைக்கனும்னு தோணுதா? என்ன புள்ளையோ போ. வாய் மட்டும் வண்ணாரப்பேட்டை தாண்டும்…”
அவளை சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே லைட்லேம்ப் பக்கத்தில் அனைத்தையும் பரப்பியவர்,
“குழந்தைக்கு அடுத்து மருந்து ஊத்தமுன்னாடி ரெண்டு பிஸ்கெட்டை நனைச்சு ஊட்டிவிடு. வெறும் வயித்துல மருந்தை குடுத்துடாத. இல்லைனா என்னை கூப்பிடு…” என உத்தரவோடு தன் முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகியபடி அவரே கதவை அடைத்து சென்றார்.
காமாட்சியின் பேச்சில் இதுவரை இழுத்துப்பிடித்திருந்த அவர் மீதான வருத்தமெல்லாம் பனியாய் கரைந்துபோக உதட்டில் பூத்த புன்னகையோடு அனய்யை எழுப்ப திரும்ப அங்கே அவளை பார்த்தபடி விழித்திருந்தான்.
“இவ்வளோ நேரம் தூங்காம தூங்கறது போல நடிச்சிட்டு இருந்தீங்களா?…”
அவளின் கேள்வி சாதாரணம் போல தான் அவளின் வாயிலிருந்து புறப்பட்டது. ஆனால் அது அனய்யின் மனதை லேசாக தாக்கிச்சென்றதென்னவோ உண்மை.
“இவள் என்னுடைய அன்பையும், தவிப்பையும் நடிப்பென்று சொல்கிறாளா?” அவனால் தாங்கமுடியவில்லை.
முன்பு அவளோடு பேசும் நேரங்களில் எல்லாம்,
“உங்கள் நடிப்பை வேறெங்கினும் காட்டிக்கொள். என்னிடம் வைத்துக்கொள்ளாதே” என பட்டென பேசிவிடுபவள் இன்றும் தன்னை அப்படித்தான் பேசிவிட்டாள் என்று நினைத்து வருந்தினான்.
“எதை நடிப்புன்னு சொல்ற மலர்?. தெளிவா சொல்…” அவன் எழுந்து வந்து தன்னருகே நின்று கேட்க உண்மையில் மலருக்கு கோபம் தான் வந்தது.
“இவன் என்ன லூசா? சாதாரணமான கேலி பேச்சுக்கெல்லாம் முகத்தை தூக்கிவச்சிக்கிட்டு. இவனை வச்சிக்கிட்டு இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனுமோ?”
அவனையே பார்த்தபடி மனதில் நினைப்பதை போல தவறி வாய்விட்டே முணுமுணுக்க அது தெள்ளத்தெளிவாய் அவனின் செவி அடைந்து உள்ளம் குளிர்ந்தது.
ஆனாலும் பிடிவாதமாய் முகத்தை வைத்து அவளையே பார்க்க,
“நீங்க கண்டபடி கற்பனை பன்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது…” அவனிடமே சொல்லிவிட்டு காமாட்சி கொடுத்த கவரை ஆராய்ந்தவள் அதில் ஒன்றை அவனிடம் தந்து,
“போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க…” என அவனிடம் தர அதை பிடுங்கியவன் கோபம் போல பாத்ரூம் சென்று கதவை அடைத்துக்கொண்டான்.
உள்ளே சென்றவன் உடையை மாற்றிக்கொண்டே,
“சரியான மண்டை. கல்லுளிமங்கி. நான் நீ நினைக்கிற அர்த்தத்தில் சொல்லலைடான்னு ஒரு வார்த்தை சொல்லி என்னை சமாதானம் செய்யனும்னு நினைக்கிறாளா? அட்லீஸ்ட் எனக்காகவேணும் என்னை சமாதானம் செய்திருக்கலாமே?…”
அலுத்துக்கொண்டே உடையை மாற்றியவன் முகத்தை கழுவி துடைத்துவிட்டு கதவை திறக்க அது முடியாமல் போனது.
“மலர்,, மலர்…” என கதவை படபடவென தட்ட,
“அடடா எதுக்கு இதனை சத்தம்? ஏன் கத்துறீங்க?…” என பதிலுக்கு அவள் கத்தினாள்.
“டோர் ஓபன் ஆகலை மலர். லாக் ஆகிடுச்சா?…”
“அப்பப்பா இப்போ என்ன ரெண்டு நிமிஷம் பாத்ரூம்ல இருந்தா என்ன? இருங்க நானும் சேஞ்ச் பண்ணணும்ல…” என்றதும் அனய் அமைதியாய் நின்றான்.
சில நொடிகளில் கதவு திறக்கப்பட அங்கே சிகப்பில் கருப்பு பூக்கள் தெளித்த காட்டன் நைட்டியில் மலர் எழில்நிலவாக நின்றிருந்தாள்.
தலை பின்னல் முன்பக்கம் கிடக்க அவளின் நெற்றி முடிகள் களைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைபாய்ந்து இவனின் மனதை அலைகழித்தது.
அசையா அவனின் பார்வையில் தெரிந்த ஜாலங்கள் அவளையும் தொற்றியதோ? சில நொடி ஸ்தம்பித்து நின்றவள் வெளியே கேட்ட இடி சத்தத்தில் திட்டிக்கிட்டு,
“இதென்ன அவன் தான் வெறிக்க வெறிக்க பார்த்தான்னா நானுமா இப்படி அவனோட பார்வைக்கு கட்டுப்பட்டு பதிலுக்கு பார்த்தேன்?” தலையில் பலமாக தட்டிக்கொண்டவள் அவனின் தோளில் ஒரு தட்டு தட்டி,
“இப்போ எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க? ட்ரெஸ் சேஞ்ச் பண்ணியாச்சுல, போய் படுங்க…” வேண்டுமென்றே அவனிடம் இரைய,
“அது… அதுவந்து…. சொல்லிட்டு லாக் பண்ணியிருக்கலாம்ல. நான் கொஞ்சம் பதறிட்டேன்…”
சமாளிப்பாக ஏதோ சொல்லவேண்டுமென சொல்லியவன் அவனின் சொல்லுக்கு மாறாய் முகத்தில் அவள்மீதான அத்தனை ரசனையில் மின்னியது.
அதை கண்டுகொண்டவள், “என்ன வந்து வந்து? தம்பி ரீல் அந்துபோச்சு. போய் படுங்க…” என,
“நான் பயந்துட்டேன்னு சொல்றேன். உனக்கு கொஞ்சமும் மனசாட்சியே இல்லையா?…”
“இப்போ என்ன உங்களை அர்த்த ராத்திரியில ஆள் அரவமில்லாத நட்டநடு காட்டில இருக்கிற வீட்லையா அடச்சு வச்சாங்க? இந்த கதவுக்கு உள்ள நீங்க. வெளில நான். இதுக்கு நீங்க பயந்தீங்களாமாம். நான் நம்பனுமாக்கும்?…”
“ஓகே, நம்பலைனா போ…” தோளை குலுக்கிக்கொண்டு தலையசைப்போடு மறுபுறம் போய் படுக்க மலரும் படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து தூங்கிவிட்டானா என நோட்டம் பார்க்க அவனின் விழிகளில் கருமணிகள் அசையாமல், சீரான சுவாசத்தில் நல்ல உறக்கத்தில் அவன் இருக்க அவனை பார்த்தபடியே,
“படத்துக்குத்தான் பத்துபேரை அடிச்சு புரட்டி எடுப்பீங்க. இங்க ஒத்த கதவை உடைச்சு வெளிவர முடியலை. இதுல கதவை பூட்டிட்டாங்கன்னு ஸ்கூல் பிள்ளை போல கம்ப்ளைன்ட் வேற. பயந்துட்டாங்களாம்…” மலர் சொல்லி சிரிக்க,
“ஏய், என்ன சொன்ன?…” என நொடியில் திடுதிப்பென அனய் தலையை உயர்த்தி அவள் முகத்தின் முன்னால் வந்துவிட பதறியேபோனாள் மலர்.
பதட்டத்தில் பெட்ஷீட்டை தலைவரை போர்த்திக்கொண்டவள் மூச்சு ஏறுக்குமாறாய் ஏறி இறங்கியது. உண்மையில் பயந்துதான் போனாள் மலர்.
“பயந்தேன் பயந்தேன்னு சொல்லி என்னை பயம் காட்டிட்டானே? ராட்சஷன்…”
பின் மெல்ல எழுந்தமர்ந்தவள் அவன் புறம் திரும்பாமலேயே படபடப்பு குறைய அங்கிருந்த தண்ணீரரை எடுத்து பருக ஆரம்பித்தாள்.
அவள் படுக்கும் வரை பார்த்திருந்தவன் மகளை தன்னோடு நெருக்கி அணைத்து இன்னொரு கரத்தால் மலரின் தலையை வருடிவிட ஆரம்பித்தான்.
முதல் இரண்டு மூன்று முறை தட்டி தட்டி விட்டவள் அவனும் நிறுத்தாமல் வருட வருட ஒருகட்டத்திற்கு மேல் தடுக்க தோன்றாமல் உறங்க ஆரம்பித்தாள்.
மெதுவாய் தலையை உயர்த்திப்பார்த்தவனின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு படர்ந்திருந்தது.
“என்னை நீ உன்னை அறியாமலேயே உணர ஆரம்பிச்சுட்ட ரோஸ்பட். நீயும் நானும் ஒண்ணு சேர இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை. அனய் நீ காதல் மன்னன்டா…”
தனக்குத்தானே பெருமிதப்பட்டுக்கொண்டவன் தானும் நெஞ்சமெல்லாம் நிரம்பி வழியும் சந்தோஷத்தோடு கண்ணயர்ந்தான்.
மீண்டும் குழந்தைக்கு அடுத்த டோஸ் சிரப் குடுப்பதற்காக வருணியை எழுப்பி அவளுக்கு காமாட்சி கூறியதை போல பால் பிஸ்கட் கொடுத்துவிட்டு சிரப் எடுக்க மலரும் எழுந்துகொண்டாள்.
“என்னை எழுப்பியிருக்கலாம்ல…” என அவனிடம் மெல்லமாய் கடிந்து வருணியை தூக்கி மடியில் வைத்துக்கொள்ள மீண்டும் லேசாய் உடலில் அனல் ஏற துவங்கி இருந்தது.
கவலையாய் அவனை பார்க்க அவன், “உடனே வா காய்ச்சல் குறையும்? கொஞ்சம் கொஞ்சமா தானே குறையும். இதுக்கு முன்ன பேபிக்கு பீவரே வந்ததில்லை பாரு. சும்மா கவலைப்பட்டுக்கிட்டு…”
மலரை அதட்டியவன் சிரப்பை அவளிடம் தர அவள் வருணிக்கு புகட்டி வெந்நீரை குடிக்க குடுக்க குழந்தையும் மறுக்காமல் குடித்தவள் மீண்டும் படுத்துக்கொண்டது.
அனய் அருகில் வந்து படுத்ததும் அவனிடம் ஒண்டியவள் ஏதேதோ பேச ஆரம்பிக்க அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் சலிக்காமல் பதிலளித்தான். சில நிமிடங்கள் இப்படியே தொடர மலருக்கோ உறக்கம் விழிகளை சுழற்றியது.
அவள் தூங்க, சிறிது நேரத்தில் அப்பாவும் பெண்ணும் கூட மலரோடு சேர்ந்துகொண்டனர் உறக்கத்தில்.
அடுத்த நாள் வருணிக்கு ஜுரம் நன்றாக குறைந்திருந்தது. மறுநாள் வீட்டையே சுற்றி சுற்றி விளையாடியவள் தாத்தா பாட்டியை விட்டு எங்கும் நகரவில்லை. அடுத்த இரண்டு நாட்களும் அவளுக்கு கொண்டாட்டமாகவே கழிந்தது.
பேத்தியை தரையிறக்காமல் தலையில் வைத்து தாங்கினார்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ரசித்து அவரோடு கழித்து களித்தனர்.
ஆண்டாள் மட்டும் அவ்வப்போது போன் செய்து அனய்யிடம் வருணியின் நலன் பற்றி விசாரித்துக்கொள்வார். பாலகிருஷ்ணன் ஆண்டாளிடம் கேட்டுக்கொள்வார். அவ்வளவே.
இருவருக்குமே நேரடியாக வந்து வருணியை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்களுக்கு வைத்தியநாதனின் வீடு வர விருப்பமில்லை என்பது தான் உண்மை.
இங்கே வரட்டும் பார்த்துக்கொள்வோம் என பாலகிருஷ்ணன் எளிதாக கடந்துவிட்டாலும் ஆண்டாள் அப்படி இல்லை. வருணியை பார்க்கவேண்டும் என்ற ஆவல் பெரிதாய் தான் இருந்தது.
நான் வைத்தியநாதனின் வீட்டிற்கு செல்வதா? என்ற கேள்வியே அவரின் ஆசைக்கு தடைவிதித்தது. அவர்களை இங்கே கிளம்பி வர சொல்லவும் யோசனையாக இருந்தது.
அனய்யிடம் தானே வருணியோடு ஒன்றிரண்டு நாட்கள் இருந்து வருமாறு சொல்லி தானே கிளம்பி இங்கே வந்துவிட சொல்லி அவன் மறுத்துவிட்டால் என்ன செய்வது? அல்லது தன்னைப்பற்றி ஏதேனும் நினைத்துக்கொண்டால் என்ன செய்வது என மௌனம் காத்தார்.
மூன்றாவது நாளும் அவர்கள் வருவதை போல தெரியாமல் போக நேத்ராவிடம் புலம்பித்தள்ளிவிட்டார். அவளுக்கோ இவருக்கு சமாதானம் சொல்வதற்குள் போதும் போதுமென்றானது.
ஒருவழியாக அன்று மாலை அவர்கள் வந்துவிட அப்போதுதான் நிம்மதியானார் ஆண்டாள். வருணியை பார்த்து பார்த்து கவனித்தவர் இனி வைத்தியநாதன் காமாட்சியின் நினைவும், அதனால் வரும் ஏக்கமும் அறவே குழந்தைக்கு வந்திடக்கூடாதென சிறுபிள்ளை போல் நினைத்துக்கொண்டார்.
நாட்கள் கைக்குள் சிக்காத காற்றென விரைய அனய்க்கு ஷூட்டிங் ஆரம்பிக்க ரிஷியும் வந்துவிட்டான்.
வருணியை ஆண்டாள் பார்த்துக்கொள்ள எந்தவித சஞ்சலமும் இன்றி வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் மலர்.
ஓரளவிற்கு அவ்வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே நிதர்சனம் உணர்ந்து தன்னை பொருத்திக்கொண்டவள் சில முடியாத விஷயங்களுக்கு முயன்று பொருந்திபோனாள்.
இப்பொழுது எல்லாம் அனய்யின் மனைவி என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதில் எந்தவித தயக்கமும் அவளுக்கு இல்லை.
அந்தளவிற்கு அவர்களுக்குள் சின்ன சின்ன அக்கறைகளிலும், சீண்டல்களிலும் சிரிப்பிலும் ஒருவித தோழமை கண்ணுக்கு புலப்படாத அன்பெனும் இழையால் நெய்யப்பட்டிருந்தது.
தோழமை மட்டுமே அவனிடத்தில். அந்த விதத்தில் மலர் மிக தெளிவாகவே இருந்தாள்.
அவ்வப்போது கணவனாய் அவன் பார்வைகள் கொடுக்கும் தாக்கங்கள் கத்தி என தன்னை ஊடுருவி செல்ல சிறிது தடுமாறினாலும் எளிதாய் அதை கடந்து சென்று அதை அவனுக்குத்தான் பெரும் சோதனையாய் மாற்றிவிடுவாள்.
எந்தவித பிரச்சனைகளும் இனி இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை நெருங்கி வருபவள் விரைவில் தன்னிடம் முழுமையாய் தன்னை புரிந்து காதலை ஏற்றுகொண்டுவிடுவாள் என அனய் கனவு காண
அவன் கண்ட கனவு பலிக்குமா? இல்லை அவனையே பழிக்குமா?
புன்னகை ஜீவிக்கும்…